Thursday, September 8, 2022

காக்கும் கடவுள் கணபதி.

பிள்ளையார் சுழி. 

புதிதாக வந்த என் கைப்பேசியில் முதன் முதலாக எடுத்தவுடன் ஸ்ரீ விக்னேஷ்வரரைப் பற்றிதான் எழுத வேண்டுமென ஆசைப்பட்டேன்.  ஏனென்றால், நான்  பிறந்ததிலிருந்து எனக்கு  நிழலாக இருந்து, என் உயிரோடு கலந்து என் நினைவிலே எப்பொழுதும் நிறைந்து நிற்பவன் "அவன்"தான். எங்கள் வாழ்வில் எந்த செயலுக்கும் "அவன்" துணைதான் எங்களுக்கு சஞ்சலங்கள் இல்லாத  நிம்மதியை தருவது. ஆனால்,  அதற்குள் "அவன்" ஆணையில் அந்தக் கைபேசி வந்த விபரம் குறித்து எழுத வைத்து விட்டான். சரி..இப்படி ஏதோ எழுத ஆரம்பித்து விட்டோமே என அவ்வப்போது டிராப்டில் ஏதோ கிறுக்கி வைத்ததையும் பகிரலாம் என அதையும், பழைய போட்டோக்களையும் நான் பார்வையிட்ட போது "என்னை வைத்து ஏதோ எழுத நினைத்தாயே..! இதோ..!! உன் பழைய கைப்பேசியில் ஆர்வத்துடன் என்னை
எடுத்த புகைப்படத்தை வைத்து உன் ஆசைப்படி ஒரு பதிவாக்கி துவக்கி விடேன்." என்று "அவன்" புன்னகையுடன் மறுபடி ஆணையிட சரியென சம்மதித்தேன். எனக்கு அந்த கோவிலைப் பற்றிய  விபரங்கள் சரியான அளவில் கூறத் தெரியாது என்றாலும், கூகுளில் தேடிப்பிடித்து என்னாலான விபரங்கள் தந்துள்ளேன். அதன்படி பிறந்தது இந்தப்பதிவு. எல்லாம் "அவன்" செயல்தானே.... 🙏. 

எங்கள் மகன் இளையவன் ஊரிலிருநது
வந்திருந்த சமயம் தொற்று குறைந்திருந்தாலும், இரண்டு வருடங்களாக நாங்கள் படி தாண்டாத பத்தினியாகத்தான் வாழ்ந்து வந்தோம். நீண்ட வருடங்கள் கழித்து முதன் முதலில் அவனுடன் வெளியில் செல்லும் போது பிள்ளையார் கோவிலுக்குத்தான் செல்ல வேண்டுமென நான் விருப்பப்பட்டதால். அதன்படி பசவனகுடி தொட்ட கணபதியை  தரிசிக்கலாமென ஒரு நல்ல நாளில் காலையில் ஒரு ஒன்பது மணியளவில் வீட்டிலிருந்து  கிளம்பினோம். பன்னிரண்டு வரை கோவில் திறந்திருக்கும். பிறகு மாலை நான்கு மணிக்கு மேல்தான் தரிசனம் காண முடியும். ஒரே பெரிய பாறை போன்ற கல்லில் செதுக்கி அமைத்த பெரிய விநாயகர் சிலையுடன் உள்ள  கோவில்தான். இது நாங்கள் இங்கு வந்த பின் அடிக்கடி சென்ற கோவிலும் கூட. . முதலில் குடியிருநத பழைய வீட்டிலிருந்து 2 கி. மீ தொலைவு இருக்கும். சனி ஞாயறுகளில் நடந்தே சென்று விடுவோம். அனைத்திற்கும் அவனிடம் வேண்டிக் கொண்டு அங்கு சென்று சிதறுகாய் போட்டு விட்டு வருவோம். இந்த தொற்றினால் அந்தக் கோவிலுக்குச் சென்று இங்கு வந்த பின் மூன்று வருடங்களுக்கும் மேலாகி விட்டது. அதன் அருகில் பத்தடி தொலைவில் இருக்கும் படிகள் ஏறிச் மேலே சென்றால் புல்டெம்பிள் என்ற நந்திகேஷ்வரரின் தனிக் கோவில். நந்தியின் பின் அலங்காரத்துடன்  அழகான சிறிய சிவபெருமான். இருவரையும் மனதாற தரிசித்து விட்டு  அந்தப் பக்கம் படிகள் இறங்கினால்  அழகான கண்களுக்கு விருந்தாக பெரிய பூங்கா. அன்று இந்தக் கோவிலுக்கு எங்களால் செல்ல இயலவில்லை. வேறொரு வேலையும் அந்த நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில்  அவசியம் முடிக்க வேண்டியிருந்ததால், விநாயகரை மட்டும் வணங்கி விட்டு, இன்னொரு சமயம் அங்கு வரலாமென வந்து விட்டோம். 

பின்வரும் செய்தி... 
இது கூகுள் உதவி மூலமாக தினமலர் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட செய்தி. 
நன்றி கூகுள் மற்றும், 
நன்றி தினமலர் செய்திகளுக்கும். . 

பெங்களூர் பசவனகுடியில் நந்தி கோயிலுக்கு அருகே எழுந்தருளியுள்ளார் தொட்டகணபதி. தொட்ட என்றால் கன்னடத்தில் பெரிய என்று பொருள். ஒரே பாறையில் பெரிய அளவில் விநாயகரின் திருஉருவம் மேற்குநோக்கி செதுக்கப்பட்டுள்ளது. மூன்று நிலை ராஜகோபுரத்தோடு மிக அழகாக இந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. பெங்களூரில் புதிய வாகனங்கள் வாங்குவோர் முதலில் இந்த கணபதிக்கு பூஜை செய்த பிறகே வாகனத்தை ஓட்டுகின்றனர். இந்தப் பெரிய விநாயகர் விபத்தைத் தவிர்த்து சுபிட்சத்தை அளிப்பார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

இது புல்டெம்பிள் எனப்படும் பெரிய நந்திகேஷ்வரர் கோவில். 

பசவன குடியில், நந்திதேவருக்கு என தனியே ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் பெங்களூரை நிர்மாணித்த ராஜகேம்பே கவுடாவால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு யானைத் தந்தங்கள் போன்ற அமைப்பு, கோயில் செல்லும் நுழைவாயிலில் காணப்படுகிறது. வடக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலுக்கு ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. 46 மீட்டர் (135 அடி) உயரமுள்ள ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட நந்திதேவர் வடக்கு நோக்கி அருள் புரிகிறார்.

நந்திதேவரின் பின்னால் சிவ பெருமான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். தனது வாகனத்திற்குச் சிறப்பளிக்கும் வகையில் சிவபெருமான் இங்கு சிறுவடிவில் காட்சியளிப்பது நந்திக்கு கிடைத்த சிறப்பு. கோயிலுக்கு முன்பு உள்ள பழமைமிக்க அரச மரங்களின் பின்னால் நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நந்திதேவரை வணங்கு; தடை யாவும் விலகும் என்பது ஐதிகம்.

இக்கோவில்களின் புகைப்படங்கள் அங்கு சென்ற பொழுதெல்லாம் குழந்தைகள் தங்கள் கைப்பேசியில் எடுத்ததுதான். அவையனைத்ததையும் டெஸ்க் டாப்பில் ஏற்றி அடிக்கடி நாங்கள்  பார்ப்பதுண்டு. ஆனால் அதுவெல்லாம் இப்போது இருக்கிறதாவென தெரியவில்லை.. எல்லாம் அழிந்து விட்டதாக குழந்தைகள் கூறினார்கள். அதனால் இப்போது சென்ற போது நான்கைந்து  படங்கள மட்டும் நான் என் கைப்பேசியில் எடுத்தேன். கோவிலின் உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை. படத்தைப் பெரிதாக்கி பார்த்தால் அருள் பாலிக்கும் பெரிய பிள்ளையாரை மனங்குளிர காணலாம். 





இக்கோவில் இந்தியாவில்  உள்ள புகழ் பெற்ற விநாயகர் கோவில்களில் ஒன்றாக இருப்பதாக ஒரு செய்தி பட்டியலில் இடம் பெறுகிறது

தொட்ட கணபதியை மனதாற தரிசித்து விட்டு சிதறு காய்களும் போட்டு விட்டு மனத்திருப்தியுடன் வேறு வேலைகளையும் முடித்து விட்டு மாலை வீடு திரும்பினோம்.

இது எங்கள் வீட்டில் விநாயகர் வந்தமர்ந்த படங்கள். 





இத்துடன் இந்த வருடம் எங்கள் வீட்டில் வழிபட்ட விநாயகர் சதுர்த்தி பூஜை படத்தினையும் பகிர்ந்து கொள்கிறேன். இதில் முதலாவதாக  அமர்ந்திருக்கும் பிள்ளையார்  (கொழுக்கட்டை, அவர் வாகனம் சகிதம் இருப்பவர்) மகள் அவளின் குழந்தையின் (எங்கள் பேத்தி) விருப்பத்திற்காக செய்தது. நல்ல அம்சமாக வந்தது. பூஜைக்கென மண் சிலை வாங்கவில்லையே என்ற குறையை போக்கியது. 

வீட்டிலிருக்கும் படங்களையும், இருக்கும் விநாயகர் சிலைகளையுந்தான் இப்போதெல்லாம் பூஜையில் வைப்பது வழக்கமாகி விட்டது. திருமங்கலம் வரை பூஜைக்கென அன்றைய தினம் விநாயகர் மண் சிலைகளை வாங்குவது வழக்கமாக இருந்தது. இங்கு வந்த பின் அவ்வளவாக அதுபோல் வாங்குவதில்லை. 

இந்த வருடம் என்னால் இயன்ற நேவேதனங்களைத்தான் (கொழுக்கட்டைகள் , சர்க்கரைப் பொங்கல், வடை, மஹா நேவேத்தியத்துடன் என சிம்பிளாக) செய்தேன். மூன்று வகை கொழுக்கட்டைகளை சாஸ்திரத்திற்காக பதினொன்றுதான் செய்தேன். அதுவும் இருதினம் முன்பே எனக்கு பல்வலி துவங்கி விட்டதால், பல்லை கடித்துக் கொண்டுதான் செய்ய முடிந்தது. எப்போதும் இடம் பெறும் கலவன் சாதங்கள் எதுவும் செய்ய இயலவில்லை. அவருக்கென பச்சரிசி இட்லி கூட செய்யவில்லை. எப்போதும் போல் இட்லி அரிசியில் அரைத்த மாவாகையால் அந்த இட்லிகளை அவருக்கு நேவேதனத்திற்கு வைக்க முடியவில்லை. பிள்ளையார் பொறுத்துக் கொண்டு அனைவரையும் தன் நல்லருளால் காத்தருள்வார் என வேண்டிக் கொண்டேன்.

எப்போதும் போல் நீளமான பதிவு என்றாலும், பொறுமையாக படித்த உங்களனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

38 comments:

  1. பிள்ளையார் சுழி தலைப்புக்கு அடுத்து ஒரு அழகிய பிள்ளையார் படம் போட்டு இருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் பதிவுக்கு முதலில் வருகை தந்து தங்கள் கருத்துக்களை தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.

      /பிள்ளையார் சுழி தலைப்புக்கு அடுத்து ஒரு அழகிய பிள்ளையார் படம் போட்டு இருக்கலாமே?/

      ஆம்.. போட்டு இருக்கலாம். எனக்குள் தோணாததை தங்களுக்குள் தோண வைத்த அந்த விக்னேஷ்வரருக்கு நன்றி. போடவும் முயற்சிக்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இந்த பதிவு படிக்கையில் பிள்ளையார் கோயில் பிரசாதமான லட்டுவை சுவைத்து கொண்டு இருக்கிறேன் : மதியம் லஞ் காஞ்சி மடத்தில் இருந்து வாங்கி வந்த சாம்பார் சாதம் உபயம் : என் மனைவியின் தங்கை நீயூயார்க்கில் உள்ள புள்ளையார் கோவிலில் வாங்கி வந்து கொடுத்தது

    ReplyDelete
    Replies
    1. இதுவரை எந்தப் பிள்ளையார் கோவிலிலும் லட்டு பிரசாதம் பார்த்ததே இல்லை. பிள்ளையார் படங்களில் மாத்திரமே பார்த்திருக்கிறேன்

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இந்தப் பிள்ளையார் பதிவை படிக்கையில் அவரின் பிரசாதம் தங்களுக்கு கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியை தருகிறது. எல்லாம் அவன் செயல்
      தங்கள் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

      பிள்ளையாருக்கு நாம் எதை வேண்டுமானாலும் பிரசாதமாக படைக்கலாமே. நானும் பிள்ளையார் படங்களில் அவர் கையில் லட்டுடன் கூடிய படங்களை பார்த்துள்ளேன். தவிர அண்டத்தை உருவாக்கியவர் அண்டத்திற்குள் அண்டமாக இருப்பவர் என்ற அர்த்தத்தில்தானே இந்த கொழுக்கொட்டை பிரசாதம் அவரின் பிரத்தியோகமானது. .அது போலத்தான் இந்த உருண்டை வடிவிலான லட்டும். அங்கு அந்த மாதிரி தந்துள்ளனர் போலும்... தங்கள் கருத்துக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. முதல் பதிவில் விநாயகரை இடம்பெறச் செய்யவேண்டும் என்கிற ஆசை இறந்ததாகச் சொல்லி இருக்கிறீர்கள்.  அலைபேசி வாங்கிய விவரம் இடமேயப்பற்றாலும் ஒரு விநாயகர் பாடத்தை இணைத்திருக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. ஒன்றுக்கு இரண்டாக விநாயகர் படங்களின் முன்புதானே பிரசாதங்கள் அணிவகுத்திருக்கின்றன. ஓ..என்னைப் போலவே அந்தப் படத்தில் பிரசாதங்கள் மட்டும் உங்களைக் கவர்ந்துவிட்டதோ ஸ்ரீராம்?

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆம். தங்கள் யோசனையும் சரிதான். அன்றே செய்திருக்கலாம். பிள்ளையார் அதை என் அறிவுக்கு தோண வைக்கவில்லை. வருத்தமாக உள்ளது. நடப்பது என்றுமே அவன் செயல்தான். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்று பிரசாதங்கள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். பூரணங்களும், சர்க்கரைப் பொங்கலும் அருமையாக வந்திருந்தன. அன்றைய தினத்தில் மடியாக செய்யும் மேல் மாவு மிக்ஸியில் பொடிக்க இயலவில்லை. மழையினால் அடிக்கடிக் போகும் கரண்ட் தொந்தரவு வேறு. அதனால் உபயோகப்படுத்தாத அரிசி மாவு கடையில் வாங்கியதை உபயோகப்படுத்தினேன். அது அவ்வளவாக சூடாக இருக்கும் போது கொழுக்கட்டைகள் செய்ய ஒத்துழைக்கவில்லை. மாலை ஆறிய பிறகு நன்றாக வந்தன. அப்போது என்ன பிரேயோசனம்... எப்படியோ சிம்பிளாக சதுர்த்தியை கொண்டாட வைத்தான் இறைவன். அந்த மட்டுக்கும் சந்தோஷம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. அரிசியை நன்கு ஊற வைச்சுப் பொடிக்காமல் ஜலம் விட்டு அரைத்துக் கரைத்தே கிளறலாம் கமலா. மிக அருமையாக வரும் கொழுக்கட்டைகள். இந்த வருஷம் என்னால் செய்ய முடியாமல் போன மேல் மாவையும் பூரண வகைகளையும் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்தேன் என்று சொல்லி இருந்தேன் அல்லவா? அவள் செய்து விட்டு இப்படி மிருதுவான மாவு வரும்னு எனக்கு இன்று வரை தெரியாது என்றாள். கொழுக்கட்டையும் காலையிலேயே செய்திருந்தால் கூட இரவு வரை உடையாது/விரியாது. மிருதுவாகவும் இருக்கும். ஒரு நாள் கொஞ்சமாகப் பச்சரிசியை நனைத்துக் கொஞ்சமாகச் செய்து பாருங்கள்.

      Delete
    5. வணக்கம் சகோதரி

      உண்மைதான்.. அப்படியும் (முன்பு மிக்ஸி வாங்காத போது) செய்திருக்கிறேன். ஆனால் அதற்கும் இப்போது மிக்ஸி கரண்ட் வேண்டுமே... . முன்பாவது வீட்டில் கல்லுரல் இருந்தது. திருமங்கலத்திலிருந்து இங்கு வரும் போது அதை அங்கு விட்டு விட்டு வந்து விட்டோம். ஆனாலும் கல்லுரலில் அரைப்பது போல நைசாக மிக்ஸியில் வராது என்றுதான் அரிசியை ஊற வைத்து மாவாக்கி சலித்து எப்போதும் பயன்படுத்துவேன். அதற்கு இந்த தடவை பெய்த மழையில் நாங்கள் இருக்கும் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு. எப்போது போகும், எப்போது வருமென தெரியாது. எல்லாமே நான் ஒருத்தியாய் செய்யும் போது காலதாமதம் ஆகுமேயென கடை மாவை (அது நல்ல பிராண்ட்தான்) உபயோகப்படுத்தினேன். மாவு ஆறிய பிறகு கொழுகட்டைகள் விரியாது வந்தன. ஆனால் ருசி கம்மிதான்.

      முதல்நாளே மடியாக பூரணங்கள், மாவை ரெடி பண்ணி வைத்துக் கொள்ளும் பழக்கமும் முன்பு இருந்தது. எங்கள் அம்மாவும் எப்போதும் அப்படித்தான் செய்வார். ஆனால் அங்கு பெரிய வீடு நாங்கள் இருந்ததோ ஒரு ரூம் ஒன்றரை ரூமென்ற வாடகை வீடுகள். . இப்போது இங்கு அப்படி மாவை ஆற வைக்கும் போது இங்குள்ள குளிருக்கு, மழைக்கு பொடியாக கருப்பு கொசுக்கள் அந்த மாவுக்கு வந்து விடுகின்றன. நிறைய தொந்தரவுகள். அதனால் என்ன சௌகரியமோ அதற்கு தகுந்தாற்போல வாழ வேண்டியுள்ளது. தாங்கள் மீள் வருகை தந்து நல்லதொரு விபரங்களை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. தொட்ட கணபதி ஆலயம் பற்றி  கேள்விப்பட்டிருக்கின்றேன்.  நீங்கள் எடுத்த படங்களும் சிறப்பு.  வீட்டில் பிழையார் பூஜை படங்களும் அழகு.  கொழுக்கட்டை, நீங்களே பாவம், பல்வலியுடன் பதினொன்றுதான் செய்திருக்கிறீர்கள், எனவே நான் அவற்றை உங்களுக்கே விட்டுக்கொடுத்து விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தொட்ட கணபதி ஆலமம் நீங்கள் கேள்வி பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி. அங்கு எடுத்த படங்களளும், வீட்டின் பூஜை படங்களும் நன்றாக வந்திருப்பதாக கூறியமமைக்கும் மகிழ்ச்சி.

      /பல்வலியுடன் பதினொன்றுதான் செய்திருக்கிறீர்கள், எனவே நான் அவற்றை உங்களுக்கே விட்டுக்கொடுத்து விட்டேன்!

      அதனால் என்ன..! அதில் ஒன்றிரண்டாவது எடுத்துக் கொள்ளலாமே:))) ...அன்று காலை அந்த பொழுதுக்குள் அவ்வளதான் செய்ய முடிந்தது. எப்போதும் பூஜைக்காக பிரசாதங்கள் நிறைய செய்வேன்.மேலே நெ. தமிழருக்கு விளக்கமான பதில் தந்துள்ளேன். மீதியை மாலை செய்து அனைவரும் உண்டோம். ஆறிய மேல் மாவு நன்றாக வந்தது. தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. பிள்ளையார் பற்றிய தகவல்கள் சிறப்பு.

    படங்களில் நானும் தரிசனம் செய்து கொண்டேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பிள்ளையார் கோவில் பற்றிய தகவல்களை பதிவை ரசித்து படித்தது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

      படங்களில் பிள்ளையாரை தாங்களும் தரிசித்து கொண்டமைக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கோவில் பற்றிய தகவல்களை படித்து ரசித்து பதிவை சிற்பபித்தமைக்கு உங்களுக்கு என் மகிழ்வுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. பசவன்குடி பிள்ளையாரை சிறு வயதில் பார்த்தது இன்றும் நினைவுகளில்.
    தேங்காய் மாலை போடுவதை முதன் முதலில் இந்த கோவிலில் தான் பார்த்தேன். பல்வலியுடன் பிரசாதங்கள் செய்து வழிபட்டு விட்டீர்கள்.
    தொட்ட கணபதி அனைவரையும் காக்கட்டும்.

    மகள் செய்த பிள்ளையார் நல்ல அம்சமாக இருக்கிறார்.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஓ.. அப்படியா.. நீங்கள் சிறுவயதில் பார்த்துள்ளீர்களா? மகிழ்ச்சி. ஆமாம் பெரிதான உயரமான பிள்ளையார் என்பதால் தேங்காய்களில் மாலை கட்டிப் போடலாம். நாங்கள் போகும் மலர் அலங்காரம், வெண்ணெய் அலங்காரமெல்லாம் பார்த்து தரிசித்துள்ளோம். இந்தப் பிள்ளையார் தானாகவே உயரமாக வளருவதாக ஒரு செய்தியில் படித்தேன். சரிவர தெரியவில்லை.

      எங்கள் வீட்டு பிள்ளையார் படங்கள், பிரசாதங்கள் படங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. பல் வலி இன்னமும் குறையாமல்தான் அவதி படுகிறேன்.

      மகள் செய்த பிள்ளையாரை நன்றாக இருப்பதாக சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி. அவளிடமும் தங்கள் பாராட்டை கூறுகிறேன். தங்களின் அனைத்து கருத்துக்கும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. தொடர்ந்து இரண்டு நாளாக புல் டெம்பிள் ரோடு வழியாக பசவனகுடி-வாணி விலாஸ் ரோட்டில் நடந்து டிவிஜி ரோடு வழியாக வந்த வழியே வீடு திரும்பினேன் (னோம்) - 10000 ஸ்டெப்ஸ் நடக்கணும் என்று. நேற்று டிவிஜி ரோட்டில் ஒரு கடையில் சேவை வாங்கினேன். இன்று காதி க்ராஃப்டில் ஒரு டபிள் போர்வை வாங்கினேன். ஆனால் இந்தக் கோவில் எங்க இருக்கு என்று பார்க்கணும். நிச்சயம் அதைத் தாண்டித்தான் சென்றிருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /நேற்று டிவிஜி ரோட்டில் ஒரு கடையில் சேவை வாங்கினேன்/

      சேலையா? சேவையா?

      ஆம்.. டிவிஜி ரோடில் நாங்களும் முன்பு நிறைய கடைகளுக்கு சென்றுள்ளோம். குழந்தைகளுடன் அங்கு சென்றால் அந்த காந்தி பஜாரில் பல மணி நேரங்கள் பொழுது பறந்து விடும். மாலை வீட்டிலிருந்து கிளம்பினால் வந்து சேர இரவு 9, 10 மணியாகி விடும். சமயத்தில் இரவு டிபன் வித்யார்த்தி பவன் தோசையோடு முடிந்து விடும். பொதுவாக அந்த தோசைக்கு இரவில்தான் அங்கு கூட்டம் கூடும். அது ஒரு காலம்.. இப்போது நாங்கள் அங்கெல்லாம் செல்வதே அரிதாகி விட்டது.

      இந்தக் கோவில் புல்டெம்பில் ரோடில் பி. எம். எஸ். பொறியியல் கல்லூரி எதிரிலேயே உள்ளது. சாலையை ஒட்டினாரற்போல் இருப்பதால் சாலையிலிருந்தே கோவிலை தரிசிக்கலாம். இந்த தொட்ட கணபதி ரொம்ப பிரபலமாயிற்றே..!! அடுத்த முறை செல்லும் போது தரிசித்து விட்டு வாருங்கள்.

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. சேலை என்ற வார்த்தையை நாங்கள் உபயோகிப்பதில்லை. புடவை என்றுதான் சொல்லுவோம். இது 'சே வை' ஹா ஹா ஹா

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      ஹா ஹா ஹா ஆகா... அது உண்ணும் பொருளான சேவைதானா? நான்தான் ஒரு வார்த்தை ஒருவேளை தவறுதலாக வந்து விட்டதோ என நினைத்தேன். ஒரு லை, வை யில்தான் எத்தனை வித்தியாசம் வந்து விடுகிறது.... ஆனால், உணவு உடை இரண்டுமே வாழ்க்கைக்கு அத்தியாவசமாயிற்றே..! அந்த சேவை எந்த கடையில் கிடைக்கிறது? உடனே சாப்பிடுவதா? தீடீர் சேவையா? ஊற வைத்து பின் தாளித்து சாப்பிடுவதா? நன்றாக உள்ளதா? (ஹப்பா.. ஒரு வார்த்தை மாறுதலுக்கு எத்தனை கேள்விகள் பிறக்கின்றன..ஹா ஹா ஹா. ) தாங்கள் மீள் வருகை தந்து விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. பிள்ளையார் கொழுக்கட்டைகள் முதற்கொண்டு அனைத்துப் பிரசாதங்களையும் தரிசித்துக்கொண்டேன்..இல்லை இல்லை.. பிள்ளையாரை தரிசித்துக்கொண்டேன். நிறையபேர் ஏற்கனவே எடுத்துக்கோண்டுவிட்டார்களா? இனிப்பு உப்பு கொழுக்கட்டைகள் பத்து பத்துதான் செய்திருக்கிறீர்கள். வடையும் அப்படியே.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவின் வழி தாங்கள் பிள்ளாயார் படங்கள் அனைத்தையும் தரிசித்து கொண்டதற்கு மகிழ்வுடன் கூடிய நன்றி.

      நான் மேலே தங்களுக்கு குறிப்பிட்ட சிக்கல்களில் அனைத்துமே (வெல்லப்பூரணம், எள்ளுப் பொடி, உளுந்தில் செய்த காரப்பூரணம்) பதினொன்று மட்டும் செய்து நேவேத்தியம் செய்து வழிபட்டோம். மாலை மீதி உள்ளதை செய்து பங்கிட்டு கொண்டோம். அதை படங்கள் எடுக்கவில்லை. பிள்ளையார் பிரசாதங்களையும் தாங்கள் தரிசித்துக் கொண்டமைக்கும் மகிழ்ச்சி. :))) தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கமலாக்கா டொட்ட கணபதி புல் டெம்பிள் இரண்டும் சென்றிருக்கிறென் அந்த பூங்கா மிக அழகு அதற்கும் சென்று படங்கள் எலலம் எடுத்தவை இருக்கின்றன...ஆனால் எதில் இருக்கின்றன என்று பார்க்க வேண்டும் கேடான ட்ரைவிலா அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கிலா என்று பார்க்க வேண்டும். போட நினைத்துப் போடாமல்...ஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்கள் தொட்ட கணபதி, புல் டெம்பிள் நந்தி அனைத்தையும் ஏற்கனவே பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி. ஆம். அந்த பூங்கா மிகவும் அழகாக இருக்கும். நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை தேடி பகிருங்கள். நாங்களும் அங்கு சென்ற போதெல்லாம் விதவித கோணங்களில் படங்கள் எடுத்தோம். அது இப்போது எங்கே போச்சோ? இங்குள்ள தட்ப வெப்பநிலை காரணமாக இங்குள்ள எல்லா பூங்காக்களும் அழகியதாகத்தான் உள்ளது. ஒரு கோவிலை சார்ந்து ஒரு பூங்காவும் இங்கிருப்பதை அனைத்து இடங்களிலும் பார்த்துள்ளேன்.

      இப்போது அங்கு அடிக்கடிக் செல்ல இயலவில்லை. (வெகு தூரம் வந்து விட்டதால்) தாங்களும் எடுத்த படங்களை உங்கள் பதிவில் பகிருங்கள். ஏனென்றால் தாங்கள் எடுத்த புகைப்படங்கள் மிகவும் அழகியதாக இருக்கும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. மகள் செய்த் பிள்ளையார் மிக அழகு...பல் வலியோடு பூஜை...பிரசாதம் எல்லாம் சாப்பிட முடிந்ததஆ?

    பதிவு அருமை

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மகள் செய்த பிள்ளையார் நன்றாக இருப்பதாக சொன்னதற்கு மிக்க நன்றி.

      ஆமாம் எப்போதுமே இந்த மாதிரி வலிகளை இப்போதெல்லாம் வீட்டின் விஷேடங்களுடன் எனக்கு போனஸாக இறைவன் தந்து விடுவான். இது அவன் விருப்பம் என்ன செய்வது? நானும் எப்படியாவது விஷேடங்களை விடாமல் அவன் அருளால் செய்து விடுவேன். .எனக்கு இனிப்பே கூடாது என்று டாக்டர் எச்சரித்துள்ளார். ஆனால் நானும் பிரசாதம் எடுத்துக் கொண்டேன் குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டார்கள். எப்படியோ விநாயகர் சதுர்த்தி பூஜை கள் நல்லவிதமாக நடைபெற்றது. தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது என்ன கொடுமை? நான் போட்ட கருத்துரைகள் எங்கே போயிற்று? மெயில் பாக்சில் போய்ப் பார்க்கிறேன். தினம் இதே வேலையாப் போச்சு. வரவர பதிவுகளில் கருத்துப் போடவே மனம் வருவதில்லை. இப்படிக் காணாமல் போனால்! :( ஆனால் பின் தொடரும் கருத்துகளும் கமலாஹரிஹரனின் பதில்களும் மட்டும் கரெக்டா வருகின்றன. :(

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஏன் இந்த சோதனை? நீங்கள் போடும் கருத்துக்கள் மட்டும் அடிக்கடி இப்படியாகிறது. எபியிலும் நீங்கள் சொல்வதை அடிக்கடி படித்திருக்கிறேன். போட்ட கருத்துக்கள் போய் சேராமல் மாயமாகி விட்டால் மனதிற்கு வருத்தமாகத்தானே இருக்கும். என்னவோ சோதனையாகத்தான் உள்ளது. ஆனால், அதில் இங்குள்ள மற்ற கருத்துகளும் அதற்கான என் பதில்களும் வேறு வருகின்றனவா? ஆச்சரியம்தான். இப்படி தாங்கள் அல்லலுறுவதை கண்டு என் மனமும் சங்கடப்படுகிறது.

      இனி தாங்கள் அனைத்துப் பதிவுகளுக்கும் தாங்கள் தரும் கருத்துக்கள் பத்திரமாக அங்கு சென்று சேர வேண்டுமெனவும் அருள் மிகும் தொட்ட கணபதியை வேண்டிக் கொள்கிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. Geetha Sambasivam has left a new comment on the post "காக்கும் கடவுள் கணபதி. ":

    தொட்ட கணபதி எப்போ வந்தார் பசவங்குடிக்கு? ஏனெனில் நாங்க பசவங்குடி நந்தியை 2,3 முறை பார்த்திருக்கோம். அப்போல்லாம் பிள்ளையாரைப் பார்த்ததாக நினைவில் இல்லை. சமீபத்தில் தான் வந்தாரோ?// மெயில் பாக்சில் இருந்து தரதரனு இழுத்துக் கொண்டு வந்திருக்கேன். எத்தனை நாழிக்கு இருக்குமோ தெரியலை. :(

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /தொட்ட கணபதி எப்போ வந்தார் பசவங்குடிக்கு?/

      தெரியவில்லையே சகோதரி.. நாங்கள் இங்கு வந்து பதினைந்து வருடங்களாகிறது. அப்போ திலிருந்து இவரையும், இவருடனான பெரிய நந்தி, சிவனையும் தரிசித்து வருகிறோம். தாங்கள் பசவனகுடி நந்தியை மட்டும் தரிசித்தது எந்த வருடங்களில்..? அதற்குப்பின் இவர் அங்கு வந்திருக்கிறாரோ என்னவோ? விசாரிக்க வேண்டும்.

      /மெயில் பாக்சில் இருந்து தரதரனு இழுத்துக் கொண்டு வந்திருக்கேன். எத்தனை நாழிக்கு இருக்குமோ தெரியலை. :(/

      ஹா ஹா ஹா. சேர்ந்தாற் போல படித்ததும் நான் பிள்ளையாரைதான் என நினைத்து விட்டேன்.என் கற்பனையில் அப்படி எழுதி விட்டேன்.

      சும்மா விளையாட்டாக சொன்னேன் சகோதரி. தவறாக நினைக்காதீர்கள். இவ்வளவு கஸ்டங்களிலும் தாங்கள் என் பதிவுக்குள் தங்களது கருத்துக்களை அழைத்துக் கொண்டு வந்து சேர்த்ததற்கும், பதிவை படித்தது அழகான கருத்துக்களை தந்ததற்கும் என் அன்பான நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. Geetha Sambasivam has left a new comment on the post "காக்கும் கடவுள் கணபதி. ":

    உங்கள் மகள் செய்த பிள்ளையார் நன்றாக இருக்கிறது. பிள்ளையார் பூஜைப் படங்களும் அருமை. நாங்களும் ஶ்ரீரங்கம் வந்ததில் இருந்து களிமண் பிள்ளையார் பூஜைக்கு என வாங்குவது இல்லை. எனக்கு ரொம்ப ஆசை. வாங்காதது குறையும் கூட. வீட்டில் தொன்றுதொட்டுப் பூஜை செய்து வரும் ஐம்பொன் விநாயகர் இருப்பதால் அவரே போதும்னு நம்ம ரங்க்ஸோட தீர்ப்பு. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குச் சமம். :))))) என்ன செய்ய முடியும்?// இதையும் மெயில் பாக்சில் இருந்து கொண்டு வந்திருக்கேன். :(

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      பூஜைக்கு என் மகள் செய்த பிள்ளையார் நன்றாக உள்ளதென கூறியதற்கு மிகவும் மகிழ்ச்சி சகோதரி. என் மகளிடம் தங்கள் பாராட்டை கூறி விடுகிறேன்.

      பூஜை படங்களும், பொம்மைகளும் வீட்டில் உள்ளவைதான். நாங்களும் திருமங்கலத்தில் இருந்த வரை அன்றைய தினத்தில் களிமண் சிலையை வாங்கி பூஜித்து வந்தோம். அப்போது ஒரு வருடம் பிள்ளையார் களிமண் பொம்மை வாங்கி மனைப்பலகையில் வைத்து விட்டு பூஜைக்கான ஏற்பாடுகளை முடித்து விட்டு பார்க்கும் போது பிள்ளையார் தன் உருவத்திலிருந்து மாறுபட்டு விட்டார். மறுபடியும் வெறும் களிமண்ணாகவே மாற முயற்சித்து விட்டார். மனதிற்கு கஸ்டமாக போயிற்று. உடனே அந்நேரம் மறுபடி கடைவீதிக்குச் சென்று வேறு ஒன்றையும் வாங்க முடியாத சூழல். பிறகு வீட்டில் உள்ள கற்சிலை பிள்ளையாரை வைத்து பூஜிப்பது வழக்கமாகி விட்டது. அன்றிலிருந்து இந்த களிமண் சிலைகளை வாங்குவதில்லை. இங்கும் கலர் பிள்ளையார்கள்தான் விற்கிறார்கள். விலை ஆரம்பமே முன்னூறுக்கு மேல்.( இத்தனைக்கும் மிகச்சிறியதான சிலைகள்.) எல்லாமே அவன் செயல்.. அவன் விருப்பம் என விட்டு விட்டால் மனதுக்கு என்றும் அமைதி கிடைக்கிறது.

      தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. பெரிய பிள்ளையார் பற்றிய தகவல்கள் சிறப்பு.

    படங்களின் வழியாக நானும் தரிசனம் செய்து கொண்டேன் .. மகிழ்ச்சி..

    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் வந்து பதிவை ரசித்து படித்தமைக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றி.

      பதிவின் வழி தாங்களும் பெரிய பிள்ளையாரை தரிசித்து கொண்டமைக்கும் மிக்க மகிழ்ச்சி.

      தங்கள் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete