Monday, March 29, 2021

கதை பிறந்த கதை. .2.

 சுத்தம் என்ற இந்த வார்த்தைதான் எவ்வளவு சிறந்தது.  "சுத்தமாக அழுக்குப் போக குளித்து விட்டு வா" "சுத்தமாக கையலம்பி விட்டு சாப்பிடு" "சுத்தமாக வீட்டைப் பெருக்கித் துடைத்து விடு" என ஒவ்வொரு செயலுக்கு முன்பும் இந்த "சுத்தம்" என்ற வார்த்தையை  நாம் அன்றிலிருந்தே பயன்படுத்துகிறோம். 

நம் இளமைக் காலம் தொட்டே இந்த வார்த்தையில்தான் நாம் வளர்ந்தும் வந்துள்ளோம். (இதில் ஒரு சமயம் பிறர் பேசுவதை மற்றொருவர் சரியாக கவனிக்கவில்லையென்றாலும், இல்லை, நிஜமாகவே காது கேட்காத பேர்களிடம் பேசி அவர் அதற்கு தகுந்த பதிலேதும் கூறவில்லைையென்றாலும் இந்த "சுத்தத்தை" சற்று அழுத்தி" அட..!  சுத்தம்.. போ.... இவரிடமா இதைப்போய் பேசினோம்" என்ற அர்த்தத்தில் சொல்வது  உண்டு.   "ஆஹா" என்ற படத்தில், நடிகை ஸ்ரீ வித்யா  இப்படி சொல்லும்போது  அவர் முக பாவத்தை ரசித்திருக்கிறேன்.)

சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி. "அப்போ அசுத்தம் அதற்கு சாம்பார் (ஊத்துமா...) போடுமா? என்று அதற்கிணையாக வந்த புதுமொழியை கண்டுதான் இப்போது கொரோனா கோபத்தில் பொங்கி எழுந்துள்ளது.

சரி.. விஷயத்திற்கு வருகிறேன். முன்பு எப்போதோ படித்த கதைகளில் சிலதை மறக்கவே இயலாது என ஒரு தோசை புராணத்தை எழுதியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படியும் நினைவுக்கு வரவில்லையெனில் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறவர்கள் இந்த இடத்தை தொட்டால் உங்களை அங்கே அழைத்துச் செல்லும். 

அந்த வகையில் இதுவும்  எப்போதோ படித்த மறக்க முடியாத ஒரு சின்னக் கதை . அதை நான் நினைவுபடுத்தி என் கைப்பட நான் எழுதிய போது பெரிதான மாதிரி தோற்றமளிக்கிறது. 

கதை:-

அந்த வீட்டில் கணவனும் மனைவியும் ஒரு குழந்தையுடன் வாழ்கின்றார்கள்.  கூடவே அவள் தம்பியும் அந்த ஊரிலேயே வேலை என்பதால், கொஞ்ச மாதங்களாக அவர்களுடேனேயே வந்து தங்கி இருக்கிறான். மூவரும் ஒற்றுமையான குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். கணவனும், தம்பியும்  அலுவலக வேலை இல்லாத வார இறுதி நாட்களில்  கூட வெளியில் எங்கும் செல்லாமல், குழந்தையுடன் கொஞ்சியபடியும், ரேடியோவில் பாட்டுக்கள்  கேட்பதும், கதைகள் படிப்பதுமாக அந்நாட்களின் நேரம் முழுவதையும் கடத்துகின்றனர். மனைவிக்கும் அதைப்பார்க்கும் போது விடுமுறை நாட்களில் வீட்டிலிருக்கும் அவர்களைக்கண்டு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு கடை, கண்ணிக்கு  கூட அவர்கள் செல்லாமல் கூடமாட எந்த ஒத்தாசைக்கும் வராமல், சோம்பேறிதனமாக இருப்பதை கண்டு கொஞ்சம் எரிச்சலுமடைகிறாள். பொதுவாக அவள்தான் குடும்பத்தில் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவள். ((இது அந்த காலத்தில் நான்படித்த கதை. "எப்படி பெண்கள் மட்டும் வீட்டின் அத்தனை சுமைகளையும், தனி ஒருவளாக சுமக்கலாம்?  என யாரும் சண்டைக்கு வந்து விடாதீர்கள்.  இப்போதும் கூட இந்த மாதிரி பெண்கள் இருக்கிறார்கள்.  நான் கூட அந்த காலத்திலிருந்து இன்னமும்... ... வீட்டில்  நான்.....நானேதான்.... அத்தனை வேலைகளையும்.......தனியாக.... அடராமா.. ..! .அதற்குள் இப்படி ஒரு அவசரமா? சரி.. சரி.. உங்கள் கையிலுள்ள கல்லை  கீழேயே எறிந்து விட்டு கொஞ்சம் பொறுமை காத்து கதைக்குள் வாருங்கள்.:)))  ) 

இப்படியிருக்கும் போது ஒரு நாள் தம்பிக்கு ஒரு  கடிதம் (அந்த காலத்தில் எல்லாம்  கடிதந்தானே... ) வருகிறது. தம்பிக்கு வந்த கடிதத்தை அவன் அலுவலகம் விட்டு வந்தவுடன் அவன் கையில் தருகிறாள் அவள். காஃபி குடித்து முகம் கழுவி வந்தவன் கடிதத்தை பிரித்து படித்ததிலிருந்து ஒரு மாதிரி வித்தியாசமாக இருப்பதை தெரிந்த பின் என்னவென்று இவள் வினவ, "ஒன்றுமில்லை.. என் நண்பன் எழுதியது" என்று சமாளித்து விடுகிறான் . ஆனால் தொடர்ந்த நாட்களிலும் அவனின் வித்தியாசத்தை அடிக்கடி அவள் சந்திக்க நேருகிறது. 

அதற்கடுத்த நாள் அவள் கணவனுக்கும் ஒரு கடிதம் வர, அவன் வீட்டிலிருந்த நேரத்திலேயே அதை பெற்று படித்த பின், அவனும், இவள் பார்வைக்கு முன். வித்தியாசமாகிறான். மனைவியும் தன் கணவனிடம் கடிதம் குறித்து கேட்டதும், அவனும் அவள் தம்பி கூறிய பதிலைச் சொல்லி விலகிப் போகிறான் . 

மேலும் இரு தினங்கள் அவர்கள் அதே வித்தியாசத்தில் நகர மறுபடி அவ்வார இறுதி நாட்கள் வருகிறது. சனிக்கிழமை காலையிலிருந்தே தம்பியும், தன் கணவனும் தங்களை அழகாக்கி கொள்வதில் அன்று அதிக நேரத்தை செலவிடுவதை கவனிக்கிறாள்." மறுநாள் காலையிலேயே நான்  வெளியே செல்ல வேண்டிய வேலை ஒன்று இருக்கிறது.. மதியம் வெளியில்தான் சாப்பாடு தனக்காக அன்று ஒன்றும் செய்ய வேண்டாம்.. " எனத் தனிதனியே  வந்து அவளிடம் சொல்வதை ஆச்சரியமாக கேட்டுக் கொள்கிறாள் . 

வெளியில் எங்குமே செல்லாமல் சோம்பி கிடக்கும் அவர்கள் மறுநாள் காலையில் விடிந்ததும் விடியாததுமாக தங்களை நீண்ட நேரம் அழகுபடுத்திக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக வெளியில் புறப்பட்டு செல்வதை கண்டதும், தன் ஒரு வயது குழந்தையிடம்,  "அந்த கடிதந்தான் இவர்களின் ஒரு வாரத்திற்கான வித்தியாசமோ?" என கேள்வி கேட்கும் மனோபாவத்தில்  கூறி அதனிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறாள். அது தன் பாஷையில் தத்தக்காவென ஏதோ கூற இவளும் சிரித்தபடி  சிறிது நேரம் குழந்தையை கொஞ்சி விட்டு,, தன் வேலைகளை கவனிக்க வேண்டியிருந்ததால்  குழந்தைக்கு உணவு புகட்டி விட்டு தூங்கச் செய்கிறாள். பின் வேலைகளை மடமடவென செய்கிறாள். 

மாலையில் வீடு திரும்பிய கணவனும், தம்பியும் சோர்வாக இருப்பதை உணர்ந்தவளாய் அவர்கள் கையில் காஃபியுடன் சிறிது அன்றே செய்திருந்த பட்சணங்களை தந்து சாப்பிடுமாறு வறுப்புறுத்துகிறாள். அவர்கள் வேண்டாமென கூறி விட்டு உற்சாகமில்லாமல் அவரவர் அறைகளுக்கு சென்று ஒய்வடுக்க சென்று விடுகின்றனர். 

இரவு உணவும் விருப்பமில்லாமல் உண்ண ஆரம்பித்து அதே நிலையில் முடிவு பெற்று விடுகிறது. மறுநாள் காலையிலும் அலுவலகத்திற்கு கிளம்பும் இருவரும் உடையிலும் சரி.. உணவிலும் சரி, பிடிமானமில்லாமல் இருப்பதை கண்டதும், "என்னவாயிற்று உங்கள் இருவருக்கும்? நேற்றிலிருந்து ஏதோ பறி கொடுத்தவர்கள் போன்றே இருக்கிறீர்களே. ...என்ன காரணம்? அதுசரி.. உங்கள் அறைகளும் சரி, ஏன் வீடு மொத்தமும் இப்போது எவ்வளவு சுத்தமாக இருக்கிறது பார்த்தீர்களா?  அதை கவனிக்காது அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாது இப்படி உங்களை நீங்களே சோகத்தில் ஆழ்ந்தியிருந்தால் எப்படி?" என அவள் கொஞ்சம் கடுமையாக கூறியதும், அவர்கள் இருவரும் அப்போதுதான்   சுத்தமாக பளிச்சென்று இருக்கும் வீட்டை சுற்றிவரப்பார்த்து, ""அதற்கென்ன இப்போ... நேற்று முழுவதும் நாங்கள் வீட்டில் இல்லாத நேரத்தை பயனுள்ளதாகதான் செலவழித்திருக்கிறாய்.. இதற்கு நாங்கள் ஏதும் பரிசு தர வேண்டுமா? அதை எதிர்பார்க்கிறாயா ? என்று அவ்வளவு வெறுப்பிலும் பரிகாசங்கள் செய்தபடி  ஏதேதோ பேச ஆரம்பித்தனர். 

இவளும் தன் பங்குக்கு பேச்சை வளர்த்து வம்பிக்கிழுத்து அவர்கள் இருவரையும் ஒரளவுக்கு பழைய மாதிரி கலகலப்பாக்கினாள். 

"சரி... சரி. .  அலுவலகத்திற்கு செல்ல நேரமாகி விட்டது. நான் மதியத்திற்கு சாப்பாடு கட்டி வைத்து விட்டேன். டிபன் சாப்பிட்டு விட்டு  நீங்களும் உங்களை ரெடி பண்ணிக் கொண்டு கிளம்புங்கள். . ." என்று தம்பியையும், கணவரையும் பார்த்து  கூறியதும் அவர்கள்  கொஞ்சம் உற்சாக நிலைக்குச் மாறிச்  செல்வதை மனநிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 

ஆயிற்று.... அலுவலகம் கிளம்பும் முன் சொல்லிக் கொள்ள அவளருகில் வந்த தம்பி கண்கள் கலங்க நிற்பதை கண்டதும், "என்னடா? ஏதேனும் சொல்லனுமா? என்ன விஷயம்? என்றதும்,  அவன்" அக்கா.. நீ எனக்கு எவ்வளவு பார்த்து பார்த்து  பாசத்துடன் செய்கிறாய்? ஆனால், நான் உனக்கு விடுமுறை நாட்களில் கூட உதவி செய்யாமல், எவ்வளவு சோம்பேறியாக இருந்திருக்கிறேன். இந்த வீட்டை நாங்கள் இல்லாத போது நீ சுத்தப்படுத்தியிருப்பதாக நானும் உன்னவருடன்  சேர்ந்து கேலி செய்தேன். அது எவ்வளவு சிரமம் என்பதை என் அறையை நீ பளிச்சென்று சுத்தம் செய்து வைத்திருப்பதை பார்த்து தெரிந்து கொண்டேன். புத்தக அலமாரியில் ஒழுங்காக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதும், துணிகள் சிதறாமல் ஒழுங்காக மடித்து வைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்ததும் எனக்கு உன் வேலைகளின் சிரமம் புரிந்தது அக்கா... ! இனி விடுமுறை நாட்களில் என் உதவி கட்டாயம் உனக்கு உண்டு அக்கா....  வேறு எண்ணங்களில் இனி அநாவசியமாக மனதை  ஈடுபடுத்த  மாட்டேன்". என்றபடியே தன் கையில் மறைத்து வைத்திருந்த  கடிதத்தை கிழித்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்றவனை மலர்ந்த முகத்துடன் பார்த்து  அவனை சமாதானப்படுத்தி அனுப்பினாள். 

கொஞ்ச நேரம் கழித்து கிளம்பிய அவன் கணவனும் தயங்கியபடி அருகில் வந்து, " "என்னை மன்னித்து விடும்மா.. இத்தனை நாள் உன் வேலைகளைப் பற்றிய கவலையில்லாமல் இருந்து விட்டேன். குழந்தையையும் பார்த்துக் கொண்டு, எனக்கும், உன் தம்பிக்கும் வேண்டிய உணவை தயாரித்து எங்களை எவ்வளவு அக்கறையுடன் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறாய்.... அதை உணராமல், வீண் சஞ்சலத்திற்கு மனதில் இடம் கொடுத்து விட்டேன். உன்னைப் போல் ஒரு மனைவி கிடைக்க நான் உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும். இத்தனை நல்லவளான உனக்கு கெடுதல் செய்ய ஒரு நினைப்பு எப்படித்தான் எனக்குத் தோன்றியதோ ? அதற்கு பிராயச்சித்தமாக இனி வாராந்திர விடுமுறையில் என் உதவி உனக்கு உண்டு..." என்று  பரிவுடன்  கூறி அவள் கைகளைபற்றிக் கொண்டு  லேசாக கண் கலங்குவதை கண்ட அவளுக்கும் விழிகள் நிறைந்தது. 

அவனும் கைகளுக்குள் மறைவாக எடுத்து வந்த அந்த கடிதத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் ஏற்கனவே போட்டதை  அவள் கவனித்து கொண்டாள். 

அவர்கள் கிளம்பிச் சென்று கொஞ்ச நேரமானதும் ,,  தன்னிடமிருந்த  அதே போன்ற மற்றொரு கடிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தவளுக்கு தாங்க முடியாத சிரிப்பாக வந்தது. 

அன்புள்ளவருக்கு, 

ஒருமாதத்திற்கு முன் நீங்கள் உங்கள் வீட்டுக்கு கொஞ்சம் தொலைவிலுள்ள பாரதி பூங்காவிற்கு உங்கள்  குடும்பத்தினருடன் வந்த போது உங்களைப் பார்த்தேன். அன்றிலிருந்து உங்கள் நினைவாகவே உள்ளேன். எப்படியோ விசாரித்து உங்களைப்பற்றி விபரங்கள் அறிந்து கொண்டேன். நீங்கள் மட்டும்  வரும் ஞாயறன்று தனியாக காலை அல்லது மதியம் அங்கு வந்தால் நாம் சந்தித்து பேசலாம். மாலையில் வந்தால் என்னை சந்திக்க இயலாது. எனக்கு உங்களை மிகவும் பிடித்துள்ளது. நான் கருநீல கலரில் புடவையும் கருப்பு பிளவுஸும் அணிந்திருப்பேன். எனக்குப்பிடித்தமான  சிகப்பு ரோஜாவை கையில் வைத்திருப்பேன். இதுதான் என் அடையாளம். உங்களை  சந்திக்க காத்துக் கொண்டிருக்கிறேன். 

                                                     இப்படிக்கு 

                                                  உங்கள் அன்பு

                                                        மாதவி. 

வீட்டிலேயே சதாஅடைந்து கிடப்பவர்களை வெளியில் அனுப்பி வைப்பதற்காகவும், அன்றைய தினம் வீட்டை முழு மூச்சாக சுத்தபடுத்துவதற்காகவும், தானே இவ்வாறு கடிதம் எழுதி தம்பி பெயருகொன்றும், கணவன் பெயருக்கொன்றுமாக போஸ்ட செய்ததை எண்ணி எண்ணி சிரித்தாள். காலை, மதியம் என்ற நேரத்தையும் குறிப்பாக எழுதியிருந்த தன் சமார்த்தியத்தை மெச்சிக் கொண்டாள். 

அன்று முழுவதும் அந்த பார்க்கில் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் தினுசில் அந்தப் பெண்ணை ஒவ்வொரு திக்கிலும் தேடியலைந்ததை கற்பனையில் கண்டு ரசித்துக் கொண்டேதான் அவள் வீட்டை சுத்தப்படுத்தியதை இப்போது நினைத்தாலும், அவளுக்கு  சிரிப்பு பொங்கி வந்தது. அது போக  அந்த செயல் , தன் தம்பியிடமும் கணவனிடமும் இந்த மன மாற்றத்தை வேறு ஏற்படுத்தும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. மனமாற்றத்தில் அவர்கள் தங்கள் தவறுக்கு பிராயச்சித்தமாக  ஒருவருக்கும் தெரியாமல் கடிதங்களை கிழித்துப் போட்டதையும் தனித்தனியே தன்னிடம் வந்து ஏதேதோ பேசியதையும் கண்டதும் அடங்கி இருந்த சிரிப்பெல்லாம் இப்போது அடக்க மாட்டாமல் வெடித்தெழுந்தது. அவளுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையும், தன் அம்மா தன்னைப்பார்த்துதான், தன் செயல்களைப்  பார்த்துதான்  சிரித்து மகிழ்கிறாள் என நினைத்தபடி அதுவும் சேர்ந்து வாய் விட்டு நகைத்தது. 

கதை நிறைந்தது.. ... 

எப்போதோ படித்த நினைவிலிருந்து இந்தக்கதையை  சிறிது மாற்றி   எழுதி இருக்கிறேன் என நினைக்கிறேன். அவர்கள் (தம்பி, கணவர்) வெளியிலிருந்து சோர்வுற்று வந்தவுடனேயே கடிதம் எழுதியது அவள்தான் என்ற ரீதியில் கதை முடிந்து விடுமென நினைவு.  நான் கொஞ்சம் எனது கற்பனையை நீட்டி வேறு விதமாக மாற்றி முடித்திருக்கிறேன். எனக்கும் வீடு சுத்தம் செய்யும் போது இந்தக்கதை ஏனோ நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கும்.

அன்புடன் பொறுமையாக படித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

47 comments:

  1. விபரீத கதையாக இருக்கிறதே....

    இந்தக் கதையின் மூலம் தாங்கள் கூற வரும் கருத்து...

    பெண்களுக்கு இயற்கையிலேயே.... ஐயையோ.... இது வேற கதைனா.... ஆண்கள் இயற்கையிலேயே ஜொள்ளு பார்ட்டிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்தமைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /விபரீத கதையாக இருக்கிறதே.... /

      ஹா.ஹா.ஹா. நினைத்தேன். ஆனால் வித்தியாசமாக வும் இருந்தது. இதில் இந்தக்கதையை எழுதியவரின் கருத்து என்னவோ தெரியவில்லை. ஆனாலும் தன் குடும்பத்தை சந்தேகிக்காத நல்ல குணம் கதாநாயகியிடம் தெரிகிறது. "சந்தேக கோடு அது சந்தோஷ கேடு இல்லையா?" நம்பிக்கை... தன் குடும்பத்தில் உள்ளவர்கள் சலனபட்டாலும், சபலப்பட்டு தவறான பாதைக்கு என்றும் செல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கை தந்த பலந்தான் அவளை அக்கடிதம் எழுத தூண்டியுள்ளது என கதைப்படித்த நானும் நினைத்தேன். தங்களது நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இப்படீல்லாம் சொல்வதைவிட, சேவைக்கு அரைத்திருக்கேன். பிழியணும். கொழுக்கட்டை வெந்ததும் சொல்றேன் என்று சொன்னால் போதுமே..

    ஒவ்வொருவராக கழண்டுகொள்வார்களே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இப்படீல்லாம் சொல்வதைவிட, சேவைக்கு அரைத்திருக்கேன். பிழியணும். கொழுக்கட்டை வெந்ததும் சொல்றேன் என்று சொன்னால் போதுமே..

      ஒவ்வொருவராக கழண்டுகொள்வார்களே/

      அவர்கள்தான் வீட்டு வேலைகள் செய்வதில் அவ்வளவாக விருப்பமில்லாமல் இருப்பதாக அவள் கூறி விட்டாளே.. மேற் சொன்ன பதார்த்தங்களை அவள் செய்து தந்தால், அவர்களுக்கு சாப்பிட தோன்றுமே அல்லாது வீடு சுத்தம் செய்யும் வேலை எப்படி நடக்கும் என அவள் சிந்தித்திருக்கலாம். தவிரவும் வார நாட்களில் எல்லாம் அந்த வேலைகள்தானே மும்மரமாக நடந்து கொண்டுள்ளது. வார இறுதியில் சுத்தம் செய்யும் பணி மட்டும் இருந்தால் செளகரியமாக இருக்குமென யோசித்திருப்பாள். கதையை வித்தியாசமாக இப்படி யோசித்தவர் யாரோ தெரியவில்லை. இந்த வித்தியாசம் வருடக்கணக்காக என் நினைவிலிருந்ததை நானும் பகிர்ந்து விட்டேன். தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. சிறு கடிதமும் குணம் திருத்த உதவும்!  எவ்வளவு நல்லவர்கள் அவர்கள்!  ஒரு கடிதத்திலேயே சட்டென திருந்தி விட்டார்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /சிறு கடிதமும் குணம் திருத்த உதவும்! எவ்வளவு நல்லவர்கள் அவர்கள்/

      ஆம்.. ரொம்ப நல்லவர்கள். தாங்கள் தெரியாமல் செய்த தவறை உணர்ந்து உடனே மனந்திருந்திய அவர்களை நம்பிதான், அவர்களின் குணம் தெரிந்துதான் அவளும் இத்தகைய விபரீத பரீட்சையில் இறங்கினாள் போலும். வித்தியாசமான சிறுகதை என்றுதான் பகிர்ந்தேன். கதையைப் பற்றிய உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. ஆமாம் அவர்கள் இருவரும் அந்தப் பூங்காவில் ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென விழிக்கவில்லையா?  பேசிக்கொண்டு, ஒரே மாதிரி  வந்திருப்பதைக் கண்டு பிடிக்கவில்லையா?!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் சந்தேகம் உண்மைதான்.. அந்தக் கதையில் இருவரையும் சந்திக்க வெவ்வேறு இடங்களைத்தான் கடிதத்தில் எழுதியிருப்பாளோ. இல்லை, இரு வாசல்கள் இருக்கும் இடங்களாக இருக்கும் ஒரே பூங்காவில் வெவ்வேறு வாசல்களில் சந்திக்கப் போவதாக கூறியிருப்பாளோ...என்ற மாதிரிதான் நானும் யோசித்தேன். கதையின் கரு மட்டுமே நினைவில் அகலாமல் நின்றதே தவிர குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு அதன் வரிகள் எழுதும் போது சோதனையாக நினைவுக்கு வரவில்லை. நானும் எழுதி முடித்து வெளியிடும் போது கூட இது யாருக்காவது தோன்றுமென நினைத்தேன். தாங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள். பாராட்டுக்கள். எத்தனையோ மசாலா படங்களில் நாம் அந்தப்படத்தின் இயக்குனரின் தவறுகளை ஜீரணிப்பது போல, அவர்கள் இருவரும் ஒரே பூங்காவில் தேடினாலும் கூட ஒருவரையொருவர் பார்க்காமல் இருந்திருக்கிறார்கள் என நம்பி விடுவோம். ஹா.ஹா.ஹா. நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. ஹாஹஹ்ஹாஅஹ்ஹா. மிக ரசித்தேன் கமலா.
    இது போல நிலைமை
    இன்னும் சில இடங்களில் நீடிக்கிறது.
    நல்ல கதையாக இருக்கிறதே,.
    அதை நீங்கள் எடிட் செய்திருப்பதும்
    அருமை.

    குறும்பு பொங்க ,உலவும் சாமர்த்திய
    கதா நாயகி.
    அன்பு வாழ்த்துகள் அன்பு கமலா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நீங்கள் கதையை ரசித்துப் படித்தமைக்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

      /குறும்பு பொங்க ,உலவும் சாமர்த்திய
      கதா நாயகி./

      ஆமாம்.. தன் செயலைப்பற்றி கவலைப்படாமல், அதன் பின் வரும் இடைஞ்சல்களையும் பற்றி கவலையுறாது விளையாட்டுத்தனமாக அவள் செய்த அந்த காரியம் (அப்போது நான் படித்த காலகட்டத்தில்,) மிகவும் திகைப்பாக இருந்தது. இந்தக்கதையை (பிறந்த வீட்டிலிருக்கும் போது.. எந்த நாளிதழ் என்றும் நினைவில்லை. ) படித்து விட்டு நாங்கள் விமர்சித்தது நினைவுக்குள் இருக்கிறது. என்னவொரு தைரியமான பெண்.. ஒரு வீடு சுத்தம் செய்யும் வேலைக்கு அவர்கள் இடைஞ்சலாக இருக்கிறார்கள் என்பதற்காக இப்படி ஒரு வேலை செய்வாளா? என என்னவோ இது உண்மையிலேயே நடந்த மாதிரி பேசி, பேசி அதிசயத்திருக்கிறோம்.

      இந்தக் கதையின் கரு என் நினைவுகளில் அழியாது இருந்தது. அதை வைத்து முடிவில் ஒரு சிறு மாற்றம் செய்து விட்டதாக நினைக்கிறேன். எத்தனையோ நினைவுகள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய போதும் மறந்து விடுகிறது. சில அழிந்தும் அழியா நினைவுகளாக நினைவுகளில் தங்கி விடுகிறது. உங்கள் அன்பான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  6. சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி. "அப்போ அசுத்தம் அதற்கு சாம்பார் (ஊத்துமா...) போடுமா?

    ஹீஹீஹீ நல்ல கேள்விதானே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பழமொழிக்கு பொருத்தமாகத்தான் இப்படி புதுமொழிகளையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஹா.ஹா.ஹா

      பதிவை ரசித்து தந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. இப்படி எல்லாம் ஒரு கடிதத்தில் திருந்தினால் நல்லது தானே! ஆனால் எழுதினது அவள் தான் என்பதை மூலக்கதையில் கண்டு பிடித்துவிடுவதாய்ச் சொன்னீர்கள். அப்போ முடிவு என்னவாக இருந்திருக்கும்? தெரியலை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

      /இப்படி எல்லாம் ஒரு கடிதத்தில் திருந்தினால் நல்லது தானே/ ஆமாம். நல்லதுதான்.. மூலக்கதையிலும் அவளே கடிதம் எழுதியது படிக்கும் நமக்கு மட்டுந்தான் இறுதியில் தெரியும். இது ஒரு வித்தியாசமான கதையாய் இருந்ததினால் ஒரளவுக்கு நினைவில் தங்கியிருந்தது. முடிவு மட்டும் கொஞ்சம் அப்போதைக்கு மாறி விட்டதோ என நினைக்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. கதையை விட அதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் முன்னுரை சுவாரசியமாக இருக்கிறது. நல்ல கற்பனை வளம் இருக்கு உங்களுக்கு! ஶ்ரீராம் உங்களிடம் செவ்வாய்க்கிழமை கே.வா.போ.க.வுக்கு ஒண்ணுமே கேட்கலையா? நல்லா எழுதி இருக்கீங்க!

    ReplyDelete
    Replies
    1. //ஶ்ரீராம் உங்களிடம் செவ்வாய்க்கிழமை கே.வா.போ.க.வுக்கு ஒண்ணுமே கேட்கலையா? நல்லா எழுதி இருக்கீங்க!//

      கேட்காமல் இருப்பேனா?  முன்னரே சொல்லி இருக்கிறேன், அவ்வப்போது அனுப்புங்கள் என்று..   இப்பவும் கேட்கிறேன்..  அனுப்புங்க கமலா அக்கா.  ரெசிப்பியும் வந்து நாளாகுது!

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். நான் ஏதோ எழுதி வருகிறேன். உங்கள் மற்றும், பதிவுலகில் சிறப்பாக எழுதும் அனைவருக்கும் முன் நான் சாதரணமானவள். உங்களனைவரின் ஊக்கம் மிகுந்த கருத்துரைகள்தான் இன்று வரை என் எழுத்துக்களை சற்று ஒளி விடச்செய்கின்றன.

      சகோதரர் ஸ்ரீராம் அவர்களும் "உங்களுக்கு எப்போது செளகரியபடுகிறதோ அப்போது கதைகளும், திங்கள் பதிவுக்கு ரெசிபிகளும் நிறைய எழுதி அனுப்புங்கள்" என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டார். எனக்குத்தான் எழுத நேரங்கள் சரியாக அமையாமல் இருக்கிறது. இனி உங்கள் இருவரின் அன்புக்கு கட்டுப்பட்டு நேரத்தை அனுகூலமாக்கிக் கொண்டு கண்டிப்பாக எழுதி அனுப்புகிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்கள் இருவரின் உரையாடல்கள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் விருப்பப்படி இனி நானும் அடிக்கடி திங்களுக்கும், செவ்வாய் பதிவுகளுக்கும் எழுதி அனுப்ப கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். இப்போது அங்கு அனைவருமே திங்கள் பதிவுகளுக்கு விதவிதமாகவும் நன்றாகவும் ரெசிபிகளை எழுதுவதால். என் கதை எழுத்துகளை, மற்றும் திங்கள் ரெசிபிகளை அனுப்ப சற்று சங்கோஜமாக வேறு இருந்தது. அதனால்தான் தயக்கம்.. இனி உங்களின் ஊக்குவிப்பால் கண்டிப்பாக எழுதி அனுப்புகிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. எங்க வீட்டில் கடினமான வேலைகளை எல்லாம் எப்போதுமே ஆண்கள் செய்துவிடுவார்கள். ஒட்டடை அடிப்பது, மேலே ஏறி மின் விசிறியைத் துடைப்பது போன்றவை. மற்றவை தான் நான் செய்யறாப்போல் இருக்கும். இப்போல்லாம் இரண்டு பேராலும் முடியாததால் ஆள் வைத்துச் செய்கிறோம்.இப்போக்கொரோனா என்பதால் ஆளைக் கூப்பிடவும் பயம், தயக்கம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.  மின்விசிறி சுத்தம் செய்வதுபோன்ற வேலைகள் நானோ, மகனோ செய்து விடுவோம்.  சுத்தபப்டுத்தும்  வேலைகள் அவ்வப்போது யார் வேண்டுமானாலும் செய்வோம்!

      Delete
    2. வணக்கம் சகோதரி

      ஆமாம் இந்த கால கட்டத்தில் வெளியாட்களை வேலைக்கு அழைப்பதென்பது சிரமந்தான். எப்படி சமாளிக்கிறீர்களோ? இங்கு நான் புகுந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து நான்தான் எல்லாவற்றையும் செய்து வருகிறேன். அப்போது கூட்டுக் குடும்பம். வயதான மாமியாரால் ஒன்றும் செய்ய முடியாது. திருமணமான மறு வாரத்திலிருந்து சமையலும் நான்தான். குழந்தைகள் பிறந்து வளர, வளர அவர்களும் பள்ளி, கல்லூரி என படிப்புகளை கவனிக்கவே நேரம் சரியாக இருப்பதினால். நானேதான் எல்லாவற்றையும் செய்து வந்தேன். என் கணவருக்கும் இதுவெல்லாம் ஒத்து வராது. அது தவிர அவருக்கு அலுவல வேலைகளே அதிகம். எனக்கும் அப்படியே பழகி விட்டது. இப்போது மகன்கள் மின்விசிறி சுத்தம் செய்வது, வீடு சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ரகம். என்னவோ காலங்கள் ஓடிக் கொண்டேதான் உள்ளது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      வீட்டில் யாராவது ஒருவரே என பொறுப்பெடுத்துக் கொண்டு செய்தால், அதுவும் சிரமந்தான்... ஆனால், உங்கள் வீட்டில் ஒத்துழைப்புடன் அனைவரும் சேர்ந்து வேலை செய்வது நன்றுதான். அனைவருக்கும் வாழ்த்துகள். தங்கள் கருத்துக்களையும் வந்து சொன்னதற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கமலா அக்கா   "சு...த்தம்"  என்று சொல்வதில் ஸ்ரீவித்யாவை நினைவு கூர்ந்திருக்கிறார்.  எனக்கு எஸ் எஸ் சந்திரன் நினைவுக்கு வந்தார்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இல்ல! "ஆஹா!" திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. முன்னெல்லாம் ஏதேனும் ஒரு தொலைக்காட்சி சானலில் வரும். வரும்போதெல்லாம் பார்ப்பேன். ஶ்ரீவித்யாவின் நடிப்பு எப்போதுமே அபாரம்/அந்தக் கண்களே பேசும்!

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      ஓ.. உங்களுக்கு எஸ். எஸ் சந்திரன் நினைவுக்கு வந்தாரா.. . நீங்கள் சொன்னதும் அவர் அப்படிச் சொல்வது நினைவுக்கு வருகிறது. ஆனால், எந்த படமென்று நினைவுக்கு வரவில்லை. ஒரு நகைச்சுவை படத்தில் அனைவருக்கும் குங்குமம் இடுவதற்காக கையில் எப்போதும் குங்கும செப்புடனே இருப்பார். அதிலேயா? ஆ... இப்போது ஞாபகம் வந்து விட்டது. சகாதேவன் மகாதேவன் என்ற படமோ?

      வணக்கம் சகோதரி.

      எனக்கும் ஆஹா படம் ரொம்ப பிடிக்கும் நான்கைந்து முறை பார்த்துள்ளேன். அதில் நடித்தவர்கள் அனைவருமே நன்றாக நடித்திருப்பார்கள். கல்யாண காட்சிகள் கலகலப்புடன் நகைச்சுவையாக இருக்கும். ஸ்ரீ வித்யாவின் கண்களும் அழகு. உண்மைதான் பேசும் விழிகள்.

      உங்கள் கருத்திற்கும் நன்றி.

      Delete
  11. கோவலன்'களை கிறுக்கனாக்குவதற்கு மாதவி'யை தேர்ந்தெடுத்ததை இரசித்தேன்.

    கண்ணகி சுத்த'மானவள்தானே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      பெயரை யோசித்து மாதவி என எழுதும் போதே, பெயருக்கேற்றபடி யாராவது இதற்கு ஒரு கமெண்ட் தருவார்கள் என நினைத்தேன். அதன்படி நீங்கள் தந்து விட்டீர்கள். ஹா.ஹா.ஹா. இந்தக் கதையில் எல்லோருமே சுத்தமானவர்கள்தான். கற்பனையாகிய மாதவியையும் சேர்த்து சொல்கிறேன். தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை படித்து நல்லதொரு கருத்து தந்தமைக்கு மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள். நன்று என்ற பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. நல்ல கதை. விபரீதமாக ஆகாமல் போனதே. கடிதத்தில் சொன்ன மாதிரி யாரேனும் ஒரு பெண் தற்செயலாக அந்தப் பூங்காவிற்கு வந்திருந்தால், இருவருமே வழிந்திருக்கக் கூடும்! ஹாஹா....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கடிதத்தில் சொன்ன மாதிரி யாரேனும் ஒரு பெண் தற்செயலாக அந்தப் பூங்காவிற்கு வந்திருந்தால், இருவருமே வழிந்திருக்கக் கூடும்! /

      ஆகா.. மற்றொரு கதைக்கும் இது கருவாக வழி வகுக்கிறதே... இப்படியும் யோசித்து மற்றொன்று எழுதலாம்.. ஹா.ஹா.ஹா.

      கதையை படித்து நல்லதொரு கருத்துகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. வாழ்க வளமுடன்...
    கொஞ்சம் பொறுத்து வருகின்றேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வாழ்த்துகளுக்கு நன்றி. அவசரமேயில்லை.. நிதானமாக வாருங்கள். வந்து தரும் நல்ல கருத்துக்களை காண ஆவலாக உள்ளேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. //சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி. "அப்போ அசுத்தம் அதற்கு சாம்பார் (ஊத்துமா...) போடுமா?//

    நல்ல நகைச்சுவை.

    கூடமாட வேலை செய்வது சிலருக்கு தான் வரும்.
    எல்லோரும் உதவி செய்து விட மாட்டார்கள் எளிதாக.

    கதையில் அக்கா தான் கடிதம் எழுதி இருப்பாள் என்று ஊகித்தேன், ஆனால் இந்த மாதிரி பெண் எழுதினமாதிரி எழுதி இருப்பார் என்று நினைக்கவில்லை.

    நிறைய கதை, கவிதை எழுதுங்கள்.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நலமாக உள்ளீர்களா? உங்களைத்தான் இன்று காணவில்லையே என நினைத்தேன். உடனே வந்து விட்டீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

      கதையை படித்து, ரசித்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நன்றி.

      /கூடமாட வேலை செய்வது சிலருக்கு தான் வரும்.
      எல்லோரும் உதவி செய்து விட மாட்டார்கள் எளிதாக./

      சரியாக சொன்னீர்கள். அதற்கும் அதிருஷ்டம் செய்திருக்க வேண்டும். நம்மை நன்றாக பயன்படுத்திக் கொண்டு "நீ அப்படி என்ன செய்து விட்டாய்?" என கேட்கும் போதும் தாங்கிக் கொள்ளவும் தைரியம் வேண்டும். அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

      ஆஹா.. நீங்கள் கதையை ஊகித்து விட்டீர்களே.. பாராட்டுக்கள். எப்போதோ படித்த கதை.. நினைவுகளில் வருடலாக இருந்ததை எழுதி பகிர்ந்துள்ளேன். எழுதியவர் யாரென ஞாபகமில்லை. வலைத்தள உறவுகள் அனைவரும் வந்து இப்படி கருத்துக்கள் தர அவர் உதவி செய்திருக்கிறார் அல்லவா? அவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      உங்கள் ஊக்கம் மிகுந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. //நலமாக உள்ளீர்களா? உங்களைத்தான் இன்று காணவில்லையே என நினைத்தேன். உடனே வந்து விட்டீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.//

    நேற்று கொஞ்சம் உடல் நலம் இல்லை. விரைவில் தூங்க போய் விட்டேன்.

    உங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி. இன்று பரவாயில்லை.

    //அதற்கும் அதிருஷ்டம் செய்திருக்க வேண்டும். நம்மை நன்றாக பயன்படுத்திக் கொண்டு "நீ அப்படி என்ன செய்து விட்டாய்?" என கேட்கும் போதும் தாங்கிக் கொள்ளவும் தைரியம் வேண்டும். அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.//

    உண்மை.

    அப்படி ஆண்பிள்ளைகளை வளர்த்தது பெண்களதான்.
    என் பிள்ளை தண்ணீரை சாய்த்து குடிக்க மாட்டான், அவனுக்கு எல்லாம் கையில் வர வேண்டும்'' என்று சில அம்மா பெருமை பேசுவார்கள். மருமகள் ஏதாவது உதவிக்கு அழைத்து விட்டால் "எப்படி வேலை வாங்குகிறாள் என் மகனை" என்பார்கள்.
    அதனால் தனியாக வீட்டு வேலைகளை பார்ப்பது பெண்களின் தலை எழுத்தாக சில வீடுகளில் இருக்கிறது.

    நீங்கள் சொல்வது போல் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வது,
    நீ என்ன பெரிதாக செய்து விட்டாய் என்று மனசாட்சி இல்லாமல் பேசாமல் நாம் செய்யும் செயலை பாரட்டி கனிவுடன் பேசினால் மலை போல வேலை கூட கடுகாய் தெரியும் பெண்களுக்கு.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தற்சமயம் தங்கள் உடல் நலம் எவ்வாறு உள்ளது
      தாங்கள் தற்சமயம் உடல் நலமாகி இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

      /அப்படி ஆண்பிள்ளைகளை வளர்த்தது பெண்களதான்.என் பிள்ளை தண்ணீரை சாய்த்து குடிக்க மாட்டான், அவனுக்கு எல்லாம் கையில் வர வேண்டும்'' என்று சில அம்மா பெருமை பேசுவார்கள். மருமகள் ஏதாவது உதவிக்கு அழைத்து விட்டால் "எப்படி வேலை வாங்குகிறாள் என் மகனை" என்பார்கள்.அதனால் தனியாக வீட்டு வேலைகளை பார்ப்பது பெண்களின் தலை எழுத்தாக சில வீடுகளில் இருக்கிறது./

      உண்மைதான். பல பெண்கள் இப்படித்தான் வீட்டு வேலைகளோடு பிணைந்து விடுகிறார்கள் வெளி உலகம் அவ்வளவாக தெரியாமல் வீட்டுக்குள் நத்தையா ய் அவர்கள் உலகம் அமைந்து விடுகிறது.

      /நீ என்ன பெரிதாக செய்து விட்டாய் என்று மனசாட்சி இல்லாமல் பேசாமல் நாம் செய்யும் செயலை பாரட்டி கனிவுடன் பேசினால் மலை போல வேலை கூட கடுகாய் தெரியும் பெண்களுக்கு./

      சரியாக சொல்லியுள்ளீர்கள். ஒரு வார்த்தை "நீ நன்றாக செய்கிறாய் என்றால்தான் ஒரு தெம்பு வரும். அந்த பாராட்டி ் இன்னமும் செய்ய வேண்டும் என்ன எண்ணமும் வரும். அதை புரிந்து கொள்ளாமல் மட்டம் தட்டிக் கொண்டேயிருந்ததால் அந்தப் பெண்ணின் மனநிலைதான் பாதிக்கப்படும். நல்லதொரு கருத்துக்களை மீண்டும் வந்து உடனடியாக பரிமாறி கொண்டதற்கு நன்றி சகோதரி. நான்தான் தாமதமாக பதிலளிக்கிறேன். மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. இது நிச்சயமாக அந்தக்கால கதைதான். இந்தக்கால பெண்கள் கூகுளில் தேடி வீட்டை சுத்தம் செய்ய ஆளை பிடித்து விடுவார்கள். அல்லது அப்படியே கேட்டாலும் "ஏன் நான் மட்டும்தான் வீட்டில் இருக்கிறேனா? நீ இல்லையா?" என்று எதிர் கேள்வி கேட்பார்கள். நீங்கள் நினைவு கூர்ந்திருப்பது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இந்தக்கால பெண்கள் கூகுளில் தேடி வீட்டை சுத்தம் செய்ய ஆளை பிடித்து விடுவார்கள். அல்லது அப்படியே கேட்டாலும் "ஏன் நான் மட்டும்தான் வீட்டில் இருக்கிறேனா? நீ இல்லையா?" என்று எதிர் கேள்வி கேட்பார்கள். /

      ஹா.ஹா.ஹா. உண்மைதான்.. இந்த கால கதை யென்றால், இப்படியொரு அசம்பாவிதமான யுக்திகளை பிரயோகிக்க மாட்டார்கள். தங்களின் அருமையான கருத்துரைகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. நன்றாக -
    மிக நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்...

    இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை...
    வெல்லத்தில் எந்தப் பக்கம் இனிப்பு - என்பார்கள்.. அதைப் போலத் தான்!..

    கீதாக்கா சொல்லியிருப்பது போல
    ஸ்ரீவித்யா நினைவுக்கு வருகின்றார்..

    இன்னும் பல்வேறு கதைகள் எழுதிட
    அன்பின் நல்வாழ்த்துகளுடன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதை நன்றாக உள்ளதென கூறியமைக்கு நன்றிகள். அவள் முடிவில் தவறுகள் வராது என்பது அவளின் நம்பிக்கை. தங்கள் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. அந்தப் படம் - ஆஹா - எனக்கும் பிடிக்கும்.
    இன்னொன்று ஆனந்தம்..

    ஸ்ரீவித்யா நல்ல நடிகை..
    ஏதோ மாயையில் சிக்கி வாழ்வைத் தொலைத்து விட்டார்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      ஆமாம்.. சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும், புதிதாக பார்ப்பது போல் உற்சாகம் கொள்ள வைக்கும். அதில் இந்த "ஆஹா" வும் சேர்த்தி.

      ஸ்ரீவித்யா நல்ல நடிகைதான். முகபாவங்களை தன் விழிகளினால் வெளிக் கொணரும் திறமை பெற்றவர். அதைத்தான் பதிவில் அவர் சொல்லும் வார்த்தையை குறிப்பிட்டிருக்கிறேன்.

      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிக்கல்கள். ஆண்டவன் தந்தது. என்ன செய்வது? தங்கள் பணிச் சுமையிலும், மீண்டும் வந்து அருமையான கருத்துக்களை தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. ஆஆஆஆஆ சுத்தம் பற்றி நிறையவே சொல்லலாம், கமல் அங்கிள் கூட சுத்தத்துக்கு ஒரு பாட்டுப் பாடியிருக்கிறாரெல்லோ ஏதோ ஒரு படத்தில்.

    பழசாக இருப்பினும் சாயம் போயிருப்பினும், வெள்ளை அடிக்காமல் இருப்பினும் சமாளிக்கலாம் ஆனா இந்த சுத்தம் இல்லை எனில், சரியான கஸ்டம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன் . உங்கள் வேலைகள் மும்மரத்தில் இங்கும் வந்து பதிவை படித்து நல்லதொரு கருத்துக்களை தந்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். எனக்குத்தான் உடனே பதிலளிக்க தாமதமாகி விட்டது. வருந்துகிறேன். மன்னிக்கவும்.

      ஆமாம்... அவருடைய படத்தில் (நம்மவரா?) சுத்தம் என்பது நமக்கு.. என்ற அந்தப்பாடல் கேட்டிருக்கிறேன்.

      /பழசாக இருப்பினும் சாயம் போயிருப்பினும், வெள்ளை அடிக்காமல் இருப்பினும் சமாளிக்கலாம் ஆனா இந்த சுத்தம் இல்லை எனில், சரியான கஸ்டம்/

      உண்மைதான்... பார்ப்பதற்கு இரண்டுமே கண் குளிர இருக்க வேண்டும். ஆனாலும் வீடு சுத்தம் முதலில் முக்கியந்தான். அதனால்தான் தினமுமே பாடுபடுகிறோம். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  21. கதை படிச்சிட்டேன், ஆனா இதில் என் மனதை இடிக்கும் விசயம், அக்கடிதத்தைப் பார்த்ததும், அவர்கள் இருவருமே அழகாக ட்ரெஸ் பண்ணிக்கொண்டு போனார்கள் பின்பு சோகமாக திரும்பி வந்தனர், சாப்பிடவில்லை, கடிதத்தை மனைவிக்குச் சொல்லாமல் கணவர் ஒளித்தார்.... இதை எல்லாம் பார்க்கும் போது.. அக்கணவர் குணம் சரியில்லை எனத்தான் நான் நினைப்பேன், அதை அந்த மனைவி எப்படி அக்செப்ட் பண்ணினாவோ.. தம்பியை விட்டிடலாம், திருமணம் ஆகாதவர் எனில் ஓகே.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கதையை படித்து தங்கள் கருத்தை சொன்னதற்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். கதை படித்த எனக்கும் முதலில் அப்படித்தான் தோன்றியது. எப்படி இந்த மாதிரி கடிதத்தை எழுத அவள் துணிந்தாள் என்று... அப்புறம் அவளுக்கு தன் கணவனைப்பற்றிய நல்லபிப்ராயம் இருப்பதினால்தான் இப்படி எழுதியிருப்பாள் என நினைத்துக் கொண்டேன். தம்பியையும் எப்படி விட முடியும்.? அந்த காலத்தில் இது மாதிரி பிரச்சனைகளை சந்திக்க எவருமே விருப்பப்படி மாட்டார்களே!! எப்படியோ பிரச்சினையின்றி அவள் நம்பிக்கை காப்பாற்றி விட்டது. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete