Friday, June 22, 2018

போலி

கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த லதா ஆளுயர நிலை கண்ணாடி முன் நின்று தன் அழகை தானே ரசித்து கொண்டிருந்தாள். லைட் நீல நிறத்தைக் கொண்ட புடவையும், அதே நிறத்தில் பிளவுசும் அவளை அழகு தேவதையாக்கி கொண்டிருந்தன. இந்த நேரத்தில் மோகன் தன் அருகில் இருந்தால் தன்னை எப்படியெல்லாம் வர்ணிப்பான். அந்த நினைப்பு அவள் உள்ளத்தில் எழுந்ததுமே, அவளது அழகிய அதரங்களில் ஒரு புன்னகை நெழிந்தோடியது.

"லதா" என்ற குரலைக் கேட்டதும் இனிய கனவுகளில் உலாவி கொண்டிருந்தவள் "பொத்"தென்று கீழே விழுந்து விட்டதை போன்று உணர்ந்தாள்.

சட்டென்று திரும்பி பார்த்தவள் அங்கு தன் அம்மா அன்னபூரணி கையில் பால் டம்பளருடன் நிற்பதை கண்டதும் " என்ன அம்மா ?" என்றாள் சற்றே சிடுசிடுப்புடன்.

"லதா, உனக்கு பரீட்சை முடிய இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?" என்று கேட்டாள் அன்னபூரணி.

"மூன்று...." மொட்டையாக பதில் வந்தது
லதாவிடம் இருந்து. 

தன் அழகை பூரணமாக ரசித்து திருப்தி அடைவதற்குள் அம்மா குறுக்கிட்டு விட்டாளே என்ற எரிச்சல் அவளுக்கு.

"லதா, உனக்கு பரீட்சை முடிந்து விடுமுறை விட்டவுடன், உன் திருமணத்தை முடித்து விடவேண்டும், என்கிறார் உன் அப்பா. அதற்கேற்றாற்போல், வரன்கள் வேறு வந்து கொண்டிருக்கின்றன. 

நேற்று கூட ஒரு வரன் வந்திருக்கிறது... இதோ, பையனின் போட்டோவை அனுப்பி இருக்கிறார்கள். உனக்கு பிடித்து இருக்கிறதா என்று பார்..."

அன்னபூரணி நீட்டிய போட்டோவை வாங்காமல், ஜன்னல் அருகே போய் நின்றவள், வெளியே தெரியும் நீல நிற வானத்தையே சற்று நேரம் மெளனமாக வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். 

பிறகு, "எனக்கு இப்போது திருமணம் வேண்டாமம்மா... நான் இன்னும் மேலே படிக்க போகிறேன். இதை நீ தான் அப்பாவிடம் சொல்லி அப்பாவின் சம்மதத்தை வாங்கி தரவேண்டும்.." அவள் குரல் கெஞ்சியது.

"இதையெல்லாம், நீயே உன் அப்பாவிடம் சொல்லிக்கொள். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நாங்கள் பார்க்கும் பையனைத்தானே  நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும்.." என்ற அன்னபூரணியின் குரலில் சற்று கண்டிப்பு ஒலித்தது.

ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்த லதா திரும்பி, அன்னபூரணியை உற்று பார்த்தாள். பின் "நீங்களெல்லாம், உங்கள் பெற்றோர் பார்த்த பையனையே திருமணம் செய்து கொண்டு என்ன பயன் கண்டு விட்டீர்கள்?" என்று எகத்தாளமாக கேட்டாள்.

 அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அன்னபூரணி திணறிகொண்டிருந்த போதே, மேஜை மீதிருந்த புத்தகங்களை அள்ளி கொண்டு, "நான் கல்லூரிக்கு சென்று வருகிறேன்.." என்ற சொல்லையும் உதிர்த்து விட்டு சிட்டென பறந்தாள்.

திகைத்துபோய் நின்று கொண்டிருந்த அன்னபூரணிக்கு தன் மகள் கேட்ட கேள்வியும் சரியெனவே பட்டது. 

ஆம், அவள் செல்வநாயகத்தை திருமணம் செய்து கொள்ளும் போது  சற்று பயந்த சுபாவத்தில்தான் இருந்தாள். அதற்கேற்றாற்போல்  அவரும் எப்போதும் பணம் பணம் என்றே தன் பிஸினஸ் ஒன்றே குறியாக இருந்து  செல்வநாயகம் பெயருக்கேற்றாற்போல் செல்வத்தின் நாயகராகவே விளங்கினார். பணம் இருந்தது அவரிடம்.. ஆனால் எப்போதும் தன்மையாக பேசும் குணம் இருந்ததா?

மூர்க்க தனமாக மனைவியிடமும், மகளிடமும் சில வேளைகளில் சத்தம் போடுவார். ஒரே மகள் என்றதால் , அவளுக்கு சில சமயங்களில் , சுதந்திரம் தருவார். சில சமயங்களில், கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல்  பேசிவிடுவார். நிலையற்றது அவரது மனம். அதனால் அவரிடம் மனைவி மகள் வேலைக்காரர்கள் எல்லோருமே எப்படி பேசுவது என்பது தெரியாமல் நடுநடுங்குவார்கள். பாம்பா, பழுதா என அறிய முடியாத ஒரு குணம். 

அவர் அவ்வாறு என்னிடம் நடந்து கொள்வதால் தான் லதா அப்படி கேட்கிறாள். ஆனால் குடும்பத்தின் மீது அவருக்கு இருக்கும் அன்பையும், தன் மீதும், தன் ஒரே மகளான இவள் மீதும் அவருக்கு இருக்கும் பாசத்தையும், இவளுக்கு எப்படி புரிய வைத்து தன் வழிக்கு கொண்டு வருவது என்று நினைத்து கொண்டே அறையை விட்டு வெளியே வந்து மாடிப்படிகளில் இறங்கி சமையல் அறைக்குள் புகுந்தாள் அன்னபூரணி.

கல்லூரியிலிருந்து கலகலவென சிரித்து பேசியபடி வெளியேறி கொண்டிருந்த மாணவிகளின் கும்பலிலிருந்து  வெளிப்பட்ட  லதா தங்கள் வீட்டு கார் வந்திருக்கிறதா என்று சுற்று முற்று பார்த்தாள்.

"அம்மா! கார் அங்கே இருக்கு போவோமுங்களா?" குரல் வந்த திசையில் திரும்பினாள் லதா .

"அடடே!! சண்முகம், நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்? நான் உங்களைத்தான் தேடி  கொண்டிருக்கிறேன். அப்போதே வந்து விட்டீர்களா?" என்றாள் லதா .

"இல்லையம்மா, நான் இப்பொழுது தான் வந்தேன். காரை எடுக்கட்டுமா?" என்றார் டிரைவர் சண்முகம்.

"இல்லை சண்முகம், எனக்கு பிரைவேட் கிளாஸ் இருக்கிறது. அதனால் நீங்கள் காரை விட்டுவிட்டு வீட்டிக்கு போங்கள். கிளாஸ் முடிந்ததும் நானே காரை எடுத்துவருகிறேன்."

"வேண்டாம் அம்மா.. அய்யா சத்தம் போடுவார்.. நீங்க முடிச்சிட்டு வாங்க, நான் அதுவரைக்கும் கார்ல காத்துக்கிட்டு இருக்கேன்."

"வேண்டாம் டிரைவர், நீங்கள் புறபடுங்கள், எனக்கு கிளாஸ் முடிய வெகு நேரம் ஆகும். நீங்கள் அப்பாவின் ஆபீசுக்கு பெரிய காரை எடுத்துக்கொண்டு போக வேண்டாமா."

ஒரு மட்டும் போக மனமில்லாமல் அவ்விடத்தைவிட்டு நகர்ந்த டிரைவரை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்ட லதா , அவர் தலை மறைந்ததும் காரை ஸ்டார்ட் செய்தாள். 

கார் "பீச்"சை நோக்கி விரைந்தது. காரை ஓட்டி சென்ற லதாவின் மனம் மிகவும் சஞ்சலப் பட்டது. காலையில் தான் அவ்வாறு அம்மாவிடம் பேசியிருக்க கூடாதோ! பாவம்.. அம்மாவின் மனம் எவ்வளவு வருத்த பட்டிருக்கும்.

"மோகன் நாளைதானே என்னை சந்திப்பதாக கூறியிருக்கிறார். நாளை சந்திக்கும் போது அவரிடம் தனக்கு பையன் பார்ப்பதை கூறி அவரை சீக்கிரமாக பெண் கேட்க வரச்சொல்ல வேண்டும்." 

கார் கடற்கரையை அடைந்ததும் அதிலிருந்து இறங்கினாள் லதா . 

கடற்கரையில் அவ்வளவாக கூட்டமில்லை. காரை பூட்டி விட்டு கடலை நோக்கி நடந்தாள். கதிரவனின் கிரணங்கள் அவளது பொன்னிற உடலின் மீது பிரகாசித்து அவளது அழகை அதிகபடுத்தியது. 

அவளும் மோகனும், கடற்கரைக்கு வந்தால் ஒரு படகின் மறைவில் தான் அமருவார்கள். அந்த திசையை நோக்கி கண்களை செலுத்தியவள் அங்கு மோகன் இருப்பதை கண்டு ஒரு கணம் மகிழ்ச்சி அடைந்தாள்.

<மோகன்..> என்று அழைக்க நாவெடுத்தவள், அடக்கி கொண்டாள். அவன் அருகில் ஒருபெண் நெருக்கமாக மிக---மிக----நெருக்கமாக அமர்ந்திருப்பதை கண்டு, மெதுவாக அவர்கள் அறியாமல் கவனிக்காமல், அவர்கள் அமர்ந்திருந்த படகின் மறுபக்கத்தில் அமர்ந்துகொண்டு அவர்கள் உரையாடலை உன்னிப்பாக கேட்கத்தொடங்கினாள் லதா .

"நான்சொல்வதை நம்பு.. உண்மையாக நான் அந்த லதாவை நேசிக்கவேயில்லை " என்றான் மோகன்.

"அவளையே சுற்றிகொண்டிருந்து, விட்டு அவளை காதலிக்கவில்லை என்றால் எந்த குருடனும் நம்ப மாட்டான்.." என்றாள் அவள் கோபத்துடன். 

"ஸில்லி, உனக்கு எத்தனை தடவை சொல்வது... எப்படி சொல்வது என்றே எனக்கு புரியவில்லை, நானும் நீயும் வருடகணக்கில் நேசிப்பது அவளுக்கு தெரியாது... நான் அவளைத்தான் உயிருக்குயிராக காதலிப்பதாக, நம்பிக்கொண்டிருக்கிறாள், அந்த பைத்தியகாரப் பெண்... நான் அவளிடம் இருக்கும் பணத்தைத்தான் "லவ்" பண்ணுகிறேன். 

அவளும், நான் கேட்கும் போதெல்லாம், பணமும் நகையுமாக எப்படியாவது கொண்டு வந்து தந்து கொண்டிருக்கிறாள். நாம் இருவரும் இருக்கும் இந்த ஏழ்மை நிலைக்கு, அவள் தரும் பணம் மிகவும் உதவியாக இருக்கிறது. இன்னும் அவளிடம் இருந்து, ஒருபெரிய தொகையாக கறக்க ஒருதிட்டம் வைத்திருக்கிறேன்.. 

அந்தபணத்தை கறந்தவுடன் நாம் இந்த ஊரை விட்டு வேறு எங்காவது சென்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம்.." என்றான் மோகன்.

"உண்மையாகவா!!! அந்த பெண்ணை அப்படி ஏமாற்றுவது தப்பில்லையா??" அந்தபெண்ணின் குரலில் சற்று பயம் தொணித்தது...

"ஏய்! விட்டால், நீயே அவளிடம் சென்று சொல்லி விடுவாய் போலிருக்கிறதே... அவளை நானா ஏமாறச்சொன்னேன்??? அவளுடைய பணத்திமிர் அவளைஏமாறச்சொல்கிறது." அந்த கயவன் தன் காதலியை சமாதானபடுத்த ஏதேதோ சொல்லிக் கொண்டேயிருந்தான்...

லதாவின் தலையில் ஒருபெரிய பாராங்கல்லை தூக்கிப்போட்ட உணர்ச்சியுடன் சிறிதுநேரம் கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். 

கடல்அலைகளை போல அவள் மனமும் கொந்தளித்தது. மீண்டும் அவர்கள் அறியாமல் எப்படியோ காரை வந்தடைந்தாள்.  காரை திறந்து உள்ளே அமர்ந்தவள், இத்தனை நேரம் நெஞ்சில் குமுறி கொண்டிருந்த உணர்ச்சிகளை கண்களின் வழியே கொட்டித்தீர்த்தாள்.

தன்னை உயிருக்குயிராக அவன் காதலிப்பதாக சொன்னதல்லாம் வாயளவே.. <<தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, ஆபீஸில் ஒருவரிடம் கடன், பணமுடையில் என்னசெய்வதென்று தெரியவில்லை>> என்று அவன் உள்ளம் உருக பேசி தவித்த போது அவளும் இரக்கபட்டு, தன் அப்பா அம்மாவுக்கு தெரியாமல் பணமும் நகையுமாக அவன் கையில் தாரை வார்த்தெல்லாம் வீண்.

இந்த லட்சணத்தில் எனக்கு பணத்திமிராம்... வெறுப்புடன் பல்லை கடித்தவள், "நல்லவேளை, இப்பொழுதாவது இவன் குணத்தை பற்றி தெரிந்து கொள்ள கடவுள் ஒருநேரத்தை ஏற்படுத்தி கொடுத்தாரே," என்று நிம்மதி பெருமூச்சு விட்டவளாய் காரை கிளப்பினாள்...

தனிமையாக சிறிது நேரம் இருக்க வந்தவளுக்கு, அந்த தனிமையில் இனிமை  கிடைக்கவில்லை... உள்ளத்தின் வெப்பத்தை போக்க குளிர்காற்றை நாடி வந்தவளுக்கு, அந்த வெப்பம் பன்மடங்கு பெருகியதுதான் மிச்சம்...

காலையில் அம்மாவிடம் இதைப்பற்றி கூறலாமா என ஒரு நிமிடம் யோசித்தவள், "மோகனை நாளை சந்தித்து அவனிடம் அவன் தாய் தந்தையரை விட்டு பெண் கேட்டு வரச் சொன்ன பின் தன் தீர்க்கமான முடிவை சொன்னால், தன் பெற்றோர் வேறு வழியின்றி ஒத்து கொள்வார்கள்" என்ற நம்பிக்கையில் அம்மாவை கடிவது போல் பேசி விட்டு வந்து விட்டாள்.

இப்போது பீரோவில் இருக்கும் பணமும் கொஞ்சம் நகைகளும் காணவில்லையே என்ற பேச்சு வருவதற்குள் "அம்மாவிடம் எப்படியாவது உண்மையை விளக்கி கூறி அப்பாவின் காது வரைக்கும் போகாமல் எப்படி காப்பாறறுவது".. என்ற கவலை மிக தீவிரமாக அவளைப் பற்றிக் கொண்டது. மனசு அலை பாய எப்படியோ காரை ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். 

வீட்டை வந்தடைந்தவள், காரை வாசலில் நிறுத்தி விட்டு மாடிக்கு தன்னறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டவள், இயல்பாக இருப்பதை அம்மாவிடம் காட்டிக் கொள்வதற்காகவும், மனஅமைதிக்காகவும் ரேடியோவை திருப்பினாள்..

<<<ஆல்இண்டியரேடியோ... சென்னை வானொலி நிலையம்... திரைகானம்.. முதலில் பட்டாம்பூச்சி என்ற படத்தில்..
டி.எம் செளந்தரராஜன்... எஸ் ஜானகி...>>> அறிவிப்பாளரின் குரலை தொடர்ந்து பாடல் ஒலிபரப்பானது.

" எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி,
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி,"

பட்டென்று ரேடியோவை மூடினாள் லதா.

அப்போது காப்பி எடுத்து கொண்டு உள்ளே நுழைந்த அன்னபூரணியை கண்டதும் லதா வின் கண்கள் கலங்கின.

காலையில் அம்மாவை எடுத்தெறிந்து பேசியதிற்க்குத்தான் கடவுள் தண்டனை கொடுத்து விட்டாரோ!!! காப்பியை மேஜை மேல் வைத்து விட்டு "கிளாஸ், முடிந்ததா லதா, டிரைவர் வந்து சொன்னார்.." என்று கேட்டவாறே அங்கிருந்து நகரமுற்பட்ட அன்னபூரணியை தடுத்து நிறுத்தியது லதாவின் குரல்.

"அம்மா, என்னை மன்னித்துவிடு, காலையில் உன் மனம் புண்படும்படியாக பேசி விட்டேன் உங்கள் விருப்பப்படியே நேற்று பார்த்த அந்த பையனையே கல்யாணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் அப்பாவிடமும் நீயே சொல்லிவிடு."

அன்னபூரணி மகிழ்ச்சியுடன் மகளை நோக்கினாள்  "உண்மையாகவா சொல்கிறாய், லதா ? "ஆமாம்! அம்மா, உண்மையாகத்தான் சொல்லுகிறேன்."
மகளின் உறுதியான குரலில் தாய் மிகவும் சந்தோஷமடைந்தாள், 

அவளுக்கு தெரியுமா தன் மகள் காதல் என்பது ஒரு போலி வாழ்க்கை, பொழுதுபோக்கு என்பதை புரிந்துகொண்டு விட்டாள் என்று......

<<<பெற்றவர்கள் பார்ப்பதிலே பெருமை என்னவோ....  
அவர் மற்றவையும் பார்ப்பதினால் நன்மை அல்லவோ.......>>>> 

அந்த பாட்டு எங்கேயோ பாடிக் கொண்டிருந்தது..........
================================================================================
இதுவும் 1976- ல் எழுதியதுதான். அந்த காலகட்டத்தின் நடவடிக்கைகள் பாவனைகள் இவைகளை கருத்தில் கொண்டு எழுதியது. மேலும் கதைகள் என்ற ஒன்று எழுத வேண்டுமென ஆர்வத்துடன் மட்டுமே கவனம் செலுத்தி எழுதப்பட்டவை. இதில் குற்றம் குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
படிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். 

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். 

44 comments:

  1. நல்ல படிப்பினை.

    நீதி சொல்லும் கதை.

    லதா திருந்தி கதை சுபமாய் முடிந்ததற்கு மகிழ்ச்சி.

    ஆனால் காதலிப்பவர்கள் எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் இல்லை என்பதையும் சொல்லத்தான் வேண்டும்!

    பட்டாம்பூச்சி படத்தில் எஸ் பி பி வாணி ஜெயராமுடன் பாடிய நல்லதொரு பாடல் கூட உண்டு. "பட்டுப்பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு.."

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து வழங்கிய கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      /ஆனால் காதலிப்பவர்கள் எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் இல்லை என்பதையும் சொல்லத்தான் வேண்டும்/

      உண்மைதான்... அனைத்துமே ஏமாற்றங்களில் முடிவதில்லை.

      அப்போது அந்தப் படத்தில் அந்தப் பாடலும் தெரியும். ஆனால் கதைக்கு பொருத்தமாக இருக்கட்டுமே என்று இதை தேர்ந்தெடுத்திருக்கிறேன் போலும். இப்போது தாங்கள் சொன்ன பிறகுதான் அந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நல்ல வேளையாகத் தப்பித்தாள் இந்தப் பெண்.
    தவறி நடக்க இருந்தவளைக் கடவுளே காப்பாற்றினார்.

    அருமையான கதை. நிறைய வீடுகளில் நடக்கக்
    கூடிய விஷயமே.
    மனம் நிறை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      \தவறி நடக்க இருந்தவளைக் கடவுளே காப்பாற்றினார்.
      நிறைய வீடுகளில் நடக்கக்
      கூடிய விஷயமே. /

      உண்மைதான். நிறைய விடங்களில் இந்த மாதிரியும் நடந்து விடுகிறது. கடவுள்தான் நல்ல சமயத்தில் அவளைக் காப்பாற்றினார். கதையை ரசித்து படித்தமைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கதை நன்றாக இருக்கிறது.
    சில காதல் பணத்திற்கு , உண்மையான காதலும் உண்டுதான்.
    கவனம் தேவைதான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைககும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      \சில காதல் பணத்திற்கு , உண்மையான காதலும் உண்டுதான்.
      கவனம் தேவைதான்./

      உண்மை. எதிலும் கவனம் கண்டிப்பாக தேவைதான்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்து பகிர்வினுக்கும்,பாராட்டினுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கதையை அருமையாக கொண்டு செல்கிறீர்கள்...பாராட்டுக்கள்...மேலும் தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் ஊக்கமிகு பாராட்டுக்கள் என் எழுத்தை மேலும் செம்மையாக்கும்.மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. வானொளியின் பாடலை வைத்து இதை எழுதி வெகுகாலமாகி விட்டதோ... என்று நினைத்தேன். முடிவில் உண்மையாகி விட்டது. கதை ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /வானொளியின் பாடலை வைத்து இதை எழுதி வெகுகாலமாகி விட்டதோ... என்று நினைத்தேன். முடிவில் உண்மையாகி விட்டது/

      ஆம் 1976 ல் எழுதிய கதை .. அதனால்தான் அந்த பழைய பாட்டை உபயோகப்படுத்தினேன்.
      கதை அருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. நல்ல கதை! ஓரளவு மோகன் குணம் இப்படித் தான் இருக்கும் என யூகிக்க முடிந்தது. முடிவு சுபம் ஆனதில் மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /முடிவு சுபம் ஆனதில் மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதுங்கள்./

      கதையை படித்து தொடர்ந்து எழுதுங்கள் என ஊக்கமிகும் கருத்துரை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. மெதுவா வந்து ஒழுங்காப் படிச்சபின் கொமெண்ட் போடுறேன்ன்.. இது சைன் வைக்கிறேன்:) கீசாக்கா மறைக்கிறா படிக்க விடாமல் எழுத்து தெரியுதில்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீசாக்கா கொஞ்சம் அரக்கி நில்லுங்கோவன்:))

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்கன்னு மிகவும் லேட்டா வரவேற்கிறேன். மன்னிக்கவும். ஆனா அதுக்கப்புறம் சமாதானமாக திரும்பவும் வந்து கதையை படித்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக மிக நன்றிகள்.

      Delete
  9. உங்களுக்குப் படிக்க வரலைனா அதுக்கு நானா பொறுப்பு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் கடைசி பெஞ்சில் ஓரமா உட்கார்ந்திருக்கேன். நீங்க தான் மறைக்கறீங்க! :)))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா .. இப்போ நீங்க ஓரத்துக்குப் போன பின்பே:), மீ முழுக்கதையையும் படிச்சு முடிச்சேன்ன்:)

      Delete
    2. விளையாட்டு சண்டைகள் மூலம் சகோதரிகள் இருவரும் என் பதிவுக்கு மீள் வருகை தந்தமைக்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள். தங்கள் கமெண்ட்ஸ்கள் ரசிக்க வைக்கின்றன.

      Delete
    3. பாருங்க நான் லேட்டா வந்தா நீங்க ரெண்டு பேரும் மறைக்கறீங்க! மீ பாவம் நாலடியார் வேற....எம்பி எம்பி வாசிக்க வேண்டியாதா போச்சுப்பா....ஹூம்...அதாரு நான் எம்பும் போது வேண்டுமென்றே எம்புவது...இந்த பூசார் இப்படித்தான் சும்மா இல்லாம எப்ப பாரு துள்ளி துள்ளி...பாய்வது...ஹா ஹா ஹா பூஸார் கொஞ்சம் ஓரம் போங்கோ கீதாக்கா ரைட்டு....நீங்க லெஃப்டு...போங்க போங்க....

      கீதா

      Delete
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் மட்டும் என்னவாம்? ரொம்ப உயரமோ? எல்லாம் இந்தப் பூசார் பண்ற வேலை!

      Delete
  10. கதை ஓட்டம் சிறப்பாக இருக்கிறது. முடிவு கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது,காரணம் நீங்கள் எழுத ஆரம்பித்த
    புதிதில் எழுதியதால் அப்படி என்று நினைக்கிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்.
    //இதில் குற்றம் குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.//
    இதைப் போன்ற பெரிய வார்த்தைகள் ஏன்? நாம் எல்லோருமே அமேச்சூர்கள்தான்.

    மங்கையர் மலரில் ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதை போட்டி அறிவித்திருக்கிறார்கள். கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எழுத வருகிறது. All the best!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      /கதை ஓட்டம் சிறப்பாக இருக்கிறது. முடிவு கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது,காரணம் நீங்கள் எழுத ஆரம்பித்த
      புதிதில் எழுதியதால் அப்படி என்று நினைக்கிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்.
      //இதில் குற்றம் குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.//
      இதைப் போன்ற பெரிய வார்த்தைகள் ஏன்? நாம் எல்லோருமே அமேச்சூர்கள்தான்./

      தங்களுடைய அலசிய கருத்துரைகளுக்கு மன மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் கருத்துக்களில் எனக்கு ஒரு தெளிவு பிறக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் என்ற வார்த்தை ஒரு டானிக்காக இருக்கிறது. ஊக்கமிகு வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி.

      மங்கையர் மலரில் சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்ளச் சொல்லி எனக்கு வாழ்த்துகள் கூறியமைக்கும் இதய பூர்வமான நன்றிகள். சந்தர்ப்பம் அமைந்தால் முயற்சிக்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. அப்படி போடுங்க பானுக்கா...நானும் அந்த அமெச்சூர்களில் கூட லாஸ்ட் பெஞ்ச்தான்.....கமலா சகோ போட்டிக்கு எழுதுங்க!!! நீங்க எழுதும் விதம் நன்றாக இருக்கிறது...சகோ முயற்சி திருவினையாக்கும்....கலந்துக்கோங்க...

      கீதா

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. அனைவருக்கும் வணக்கம்.

    அனைவரின் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.இன்று என்னால் உடனே பதிலளிக்க இயலவில்லை. காலையிலிருந்து ஒரே தலை 👼🙃😇 சுத்தல்.
    எனவே நாளை பதிலிடுகிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டதோ? வெர்டிகோ இருந்தாலும் தலை சுத்தும். கவனமாக இருக்கவும்.

      Delete
    2. அன்பான விசாரிப்புகளுக்கு மிக்க நன்றி சகோதரி. டாக்டரிடம் போனால்தானே ரத்தம் இருக்கா.. ஸாரி.. (முன்பு ஒரு முறை போகும் போது ரத்த சதவீதம் குறைவு என பயமுறுத்தி விட்டார்கள்.) ரத்த அழுத்தம் குறைவா, அதிகமா என்று தெரியும். நான் எப்போதுமே ஆயுர்வேதந்தான். அந்த மருந்துகளைத்தான் உபயோகித்து வருகிறேன். அதிலேயே குணமாகும் ஆனா கொஞ்சம் லேட்டா.. நம்பிக்கைதான். தங்களின் அன்பான விசாரித்தலுக்கு நன்றி சகோ.

      Delete
  13. வணக்கம் !

    இலக்கியங்கள் எல்லாம் காலத்தின் கண்ணாடி என்று சொல்வார்கள் அதுபோலத்தான் அன்றைய காலத்தின் நிழலாகத் தங்கள் கதைக்களம் அமைந்திருக்கிறது நல்ல கதை இப்போதும் கதை எழுதுகிறீர்களா அப்படி எனில் நூலாக வெளியிடலாமே !

    தொடர்ந்து எழுதிட என் இனிய வாழ்த்துகள் வாழ்க நலம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் ஊக்கமிகு கருத்துகள், பாராட்டுக்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..

      /இப்போதும் கதை எழுதுகிறீர்களா அப்படி எனில் நூலாக வெளியிடலாமே !/

      எழுத வேண்டுமென்ற ஆர்வத்துடன் இன்னமும் எழுதுகிறேன் சகோதரரே. ஆனால் அதற்கெல்லாம் இன்னமும் தகுதி பெறவில்லை என நான் நினைக்கிறேன். நீங்களெல்லாம் பாராட்டும் போத் சந்தோஷமாக உள்ளது. அந்த சந்தோஷமே போதுமென்று நினைக்கறேன். மற்றபடி தங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி.தங்கள் வாக்கு பலித்து நேரம் என்ற ஒன்று இருந்தால் அமையட்டும்.

      தங்கள் வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. கதை படித்து முடித்து விட்டேன், இப்படி சிலரது உண்மைக் கதைகள் கேள்விப்பட்டதுண்டுதான், ஆனா லதாவால எப்படி தன் காதலன் தன்னை ஏமாற்றி நகை பணத்தைப் பறித்து இன்னொரு பெண்ணோடு செட்டில் ஆக முயற்சிக்கிறார் என்பதனை, சிம்பிளாக எடுத்துக்கொண்டு அன்று மாலையே, அம்மா எனக்கு நீ பார்த்த மாப்பிள்ளையையே திருமணம் செய் எனச் சொல்ல முடிந்தது என்பதைத்தான் நம்ப முடியவில்லை...

    அப்போ லதாவும் அந்த போயை உண்மையாகக் காதலிக்கவில்லை எனத்தானே அர்த்தம்.. உண்மையாக நேசித்திருந்தால், எப்படி சட்டென மாற முடிந்தது?..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

      மறுபடியும் சிரமம் பார்க்காமல் வந்து கதையை படித்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக மிக நன்றிகள்.

      /லதாவால எப்படி தன் காதலன் தன்னை ஏமாற்றி நகை பணத்தைப் பறித்து இன்னொரு பெண்ணோடு செட்டில் ஆக முயற்சிக்கிறார் என்பதனை, சிம்பிளாக எடுத்துக்கொண்டு அன்று மாலையே, அம்மா எனக்கு நீ பார்த்த மாப்பிள்ளையையே திருமணம் செய் எனச் சொல்ல முடிந்தது என்பதைத்தான் நம்ப முடியவில்லை.../

      கதையை பொறுமையாக படித்து நல்லதொரு கருத்தை தெரிவித்திருக்கிறீர்கள்.

      தான் செய்த தவறினால் தங்கள குடும்ப மானம் காற்றில் பறந்து போய் விடக் கூடாதே என்ற கவலையில் லதா மனம் மாறி விட்டதாக கூறியுள்ளேன்.
      இரண்டாவதாக மோகனின் வாய் மூலமாகவே அவன் குணம் தெரிந்து கொண்ட பின்னர் அவன் மேல் கொண்ட காதலை கை விட்டு விட்டு மனம் திருந்தியதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
      மேலும் மனம் திருந்தி திருமணமாகிற மாதிரி, வேறு எப்படியாவது கற்பனை வளர்த்து எழுதிப்போனால், சிறுகதை நாவலாகி போய் விடுமோ என்ற ஐயப்பாடும் ஒரு காரணம். மனம் திறந்த கருத்துக்கு மிக்க நன்றி .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. என்னாதூஊஊஊஊ 1976 இல் எழுதியதாஆஆஆஆ? அந்தக் காலத்திலேயே கதை எழுதினீங்களோ?..!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரி. அப்போ எழுதியதுதான். இரண்டு கதையை ஏற்கனவே என் தளத்தில் பதிந்திருக்கிறேன். இது மூன்றாவது. எனக்கு உங்கள் அனைவரிடமிருந்தும் வரும் கருத்துரைகள் மகிழ்வை தருகிறது. அது ஒன்றே போதும் எனக்கு. நன்றி சகோ.

      Delete
  16. தலைசுத்தல் எப்படி இருக்கிறது? கவனித்து கொள்ளுங்கள் உடல் நலத்தை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      என் உடல்நலம் குறித்து மீண்டும வந்து விசாரித்தமைக்கு மிகவம் நன்றி சகோதரி. என் மேல் தாங்கள் வைத்துள்ள அன்புக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன். இன்று மதியத்திலிருந்து குணமடைந்து விட்டேன். அதனால்தான் அனைவருக்கும் தாமதமாக பதிலிடுகிறேன். மிக்க நன்றி சகோதரி.

      Delete
    2. ஓ! கமலா சகோ தலை சுத்தலா! தற்போது எப்படி இருக்கிறீர்கள்? நலம்தானே! உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி.

      கீதா

      Delete
    3. தங்கள் வரவுக்கு முதலில் என் மகிழ்ச்சியை தெரிவிக்கிறேன். தங்கள் மகன் நலமுடன் ஊர் சென்று சேர்ந்து விட்டாரா? தங்கள அன்பான விசாரிப்புகளுக்கு நன்றி சகோதரி. நான் தற்சமயம் நலமாய் உள்ளேன். உங்கள் அனைவரின் அன்பான விசாரிப்புகள் என்னை நலமாக்கும். நன்றி சகோதரி.

      Delete
  17. 1976 ல் எழுதப்பட்டிருந்தாலும்
    இன்றைய பொழுதிலும் இப்படியான போலிகள் ஏராளம்..

    தற்போதைய கால கட்டத்தில் இன்னும் கூடுதலாக -
    கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொண்டு
    கணவனை விட்டு ஓடிப் போவது
    அல்லது ஒரேயடியாக போட்டுத் தள்ளுவது...

    ஆஸ்த்ரேலியாவின் மெல்போர்ன் நகரில்
    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு கணவனுக்கு பழச்சாற்றில் சயனைடு கொடுத்து கொன்றிருக்கிறாள் - இந்தியப்பெண் ஒருத்தி..

    இவளுக்கு 4 வயதில் மகன்..
    22 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட இவள் இப்போது உள்ளே!..

    அந்தக் குழந்தையின் கதி?...

    எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம் என்று
    இளையோர்களுக்கே தெரியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      இதைப் போல ஏராளமானவற்றை பத்திரிக்கைகளில் படித்திருந்தாலும், தங்களின் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. எப்படித்தான் மனம் வருகிறது. இந்த மாதிரி போலிகளை எப்படி கண்டறிவது?

      /எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம் என்று
      இளையோர்களுக்கே தெரியவில்லை/

      உண்மைதான். சமுதாயத்தில் இப்படிப்பட்டவர்கள், உலாவுவதால், கொஞ்சம் பயமாகத்தான் உள்ளது. எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. கருத்துகளுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. கதை நன்றாக உள்ளது சகோதரி. ஆமாம் அக்காலகட்டம் என்று நன்றாகவே தெரிகிறது. மோகம் போலியாக இருக்குமோ என்று கொஞ்சம் தோன்றியது. அப்படியே. நல்லகாலம் லதா தப்பித்தாள். முடிவு நல்லதாக முடிந்தது.

    உண்மையான அன்பும் காதலும் உண்டுதான் இப்படியும் உண்டுதான். தொடர்ந்து எழுதுங்கள் சகோ! அருமை!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      தாங்கள் இருவரும் என் பதிவுகளுக்கு வந்து நாளாகிறது என நினைத்துக் கொண்டேன். சகோதரரின் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைப்பெற்றதா? அதற்காக நீங்கள் இருவரும் மிகவும் அலைச்சலாக பிஸியாக இருந்திருப்பீர்கள். என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். சகோதரிக்கும் அவர் மகன் ஊருக்கு வந்திருந்த சமயம். மகனுடன் இன்னமும் சில நாட்கள் கழித்திருந்தால் சந்தோஸமாக இருந்திருக்கும். இத்தனை பணிகளுக்கு நடுவிலும் என் தளம் வந்து பதிவினைப் படித்து கருத்துக்கள் இட்டு என் நலத்தையும் விசாரித்ததற்கு நான் மிகவும் மகிழ்வடைகிறேன். நன்றிக்கடனும் பட்டிருக்கிறேன். கதை நன்றாக உள்ளது என்ற பாராட்டிற்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. தங்களின் உடல் நலம் சரியில்லை என்று அறிய நேர்ந்தது. இப்போது நலமா? உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி. வருத்திக் கொள்ள வேண்டாம். தளம் இங்குதான் இருக்கும்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஒன்றுமில்லை. இரண்டு நாட்களாக அதிக தலைசுத்தலாக இருந்தது. அந்த சமயத்தில் அனைவரின் கருத்துக்கும் உடன் பதிலளிக்க இயலவில்லையே என என் நலமின்மையை தெரிவித்தேன். தற்சமயம் பரவாயில்லை சகோதரரே. தங்கள அனைவரது விசாரிப்புகள் என் நலமின்மையை நலமாக்கும்.

      நான்கு வருடங்களாக என் நலத்திற்கு இந்த வலைத்தளம் ஆரம்பித்ததுதான் சிறந்த மருந்தாக இருந்திருக்கிறது. என் பதிவுகளுக்கு தங்கள் அனைவரின் அன்பான கருத்துக்கள் மிகுந்த உரமாக உள்ளது. அனைவருக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete