Sunday, September 29, 2024

இனிப்பும், கசப்பும்

 பாகல் உசிலி.

இறைவன் படைப்பில் அனைத்து காய்கறிகளும் பொதுவாக ஒவ்வொரு சக்திகளையும் கொண்டு உருப்பெற்றவை. ஆனால் இப்போது இன்றைய காலகட்டத்தில் நாம் எதை அதிகமாக எடுத்துக் கொண்டால் நல்லது, அல்லது எதை குறைத்தால், (முற்றிலுமாகவே) நல்லது என்ற விவாதத்தில் உள்ளோம். 

அந்தக் காலத்தில் மதிய உணவு என எடுத்துக் கொண்டால்,நல்ல சுவையான பல காய்கறிகளுடன் சாதம், பருப்பு, சாம்பார், ரசம், மோர் என அன்றாடம் நல்ல உணவைதான் சாப்பிட்டு வந்தோம். ஆனால், அந்த உணவிற்கேற்ற உடல் உழைப்பும் அப்போது இருந்தது. 

நாம் வெளியில் செல்வதானால் ,நம்  கால்களின் நடையைதான் நம்பினோம். "எப்படி இவ்வளவு தூரம் தீடிரென புறப்பட்டு வந்தாய்..?" என கேட்கும் உறவுகளுக்கு" பார்க்க வேண்டுமென நினைத்தேன். அதனால் நடராஜா சர்விஸில்தான் வந்தேன்.!" என்போம். 

நடை உடலுக்கு மிக, மிக நல்லது என இப்போது தரும் முக்கியத்துவத்தை அப்போது யாரும், யாருக்கும் கற்றுத் தந்ததில்லை. 

அப்போது அதிசயமாக ஒவ்வொரு ஊர்களிலும், உலவும் மிதி வண்டிகள் வந்து மனிதர்களின் கால்களுக்கு ஒரு பலத்தை தருகிறோம் என்ற ஆசையை விதைத்தது. அவ்வாறு மிதி வண்டிகள் வைத்திருப்பவர்கள் பெரும்  பணக்காரர்களுக்கு ஒப்பானவர்களாக மாறினர். 

காலம் மாற, மாற நமக்கு அடி பணியும் விலங்கினங்களை துன்புறுத்தி வெகு தூரத்தை கடக்க கூட பல வண்டிகள் வந்து உதவின. இந்த ஆசைகளில் சிக்கிய  இருசக்கர வண்டிகள் பிரபலமாகி தாங்களும் மண்ணில் இடம் பிடித்தபடி  ஆங்காங்கே பறக்க ஆரம்பித்தன. 

அதற்கு போட்டியாக பேருந்துகள் பல உருவாகி ஒவ்வொரு ஊர் விட்டு பல ஊர்களையும் சுலபமாக கடந்து காண்பித்தது. இதற்கிடையே பல சொகுசு வண்டிகளை சொந்தமாக வாங்கி தங்களின் சொந்த ப(ய)ணத்தில் மனிதர்கள் தம் கால்களுக்கு ஓய்வு தந்தனர். ஆக மொத்தம் மனிதர்கள் இறைவன் அளித்த தங்கள் கால்களை நம்பாமல், இப்படி சொகுசாக வாழவும் முடியும் என்ற ஆசை வளையத்தில் வசமாக மாட்டிக் கொண்டனர். 

பச்சை பசேலென்ற பசுமையான நிறைவுடன் வளர்ந்த தாவரங்கள் காய்கறிகள், மனிதர்களின் இந்த  பயண ஆசைகளுக்காக, தங்களின் ஜீவாதாரமான,  மண் வளத்தை நிராகரித்து, எப்படியும் தங்களாலும் வளரவும் முடியும் என நிரூபித்து காட்டின. 

அதற்கு காரணம் தாங்கள்தாம் என்ற குற்ற உணர்ச்சி ஏதுமற்ற மனிதர்கள் தங்கள் பயணங்களை வசதி மிக்கதாக செய்து கொண்டபடிக்கும், பொன்னான மண்வளத்தை கான்கீரிட் இருப்பிடங்களாகவும், அந்த இருப்பிடங்களின் வசதிக்காக மண் சாலைகளை ரசாயண கலவை சாலைகளாகவும் ஆக்கி, விளையும் தாவரங்களை அலட்சியபடுத்தி மகிழ்ந்தனர். 

தாவரங்கள் அப்போதும் தங்கள் கடமையை செய்ய அஞ்சவில்லை. மனிதர்கள்  வகுத்து தந்த மாற்றுப்பாதையில் தங்கள் விளைச்சலை நம்பியபடி வாழ்ந்து காட்டின. அதனால், அதனின் சத்துள்ள திடங்கள் முன்பு போலில்லை.. கணிசமாக குறைந்தனவென்ற புகாரையும் மௌனமாக ஏற்றுக் கொண்ட.ன. 

A முதல் Z வரை அதனிடம் இருந்த சக்திகள் இவர்களால் பொலிவிழந்து போனதற்காக அது முகம் சுளிக்கவில்லை.  நாளாவட்டத்தில் மக்கள்  தங்கள் வீட்டுக்கு நாலடி தள்ளி இருக்கும் கடைகளுக்கு கூட தங்கள் உடமையாகிய சொகுசு காரில் சென்று சாமான்களையும், காய்கறிகளையும் வாங்கவும் ஆரம்பித்தனர். 

நாடு விட்டு நாடு, ஊர், ஊராக செல்லும் வசதிகள் என வந்த விஞ்ஞான வளர்ச்சிகள்  நல்ல பயனுள்ள ஒரு  வாய்ப்பாக ஆக்கி காட்டினும், மக்களிடத்தில் பல நோய்களின் தாராளமயம் வேகமாக பரவியது. 

எந்த காய்கறியை சாப்பிட்டால், எந்த நோய் நம்மை அண்டாது விலகும் என்ற ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இடையில் வெற்றி பெற்ற அன்னிய மருந்துகளும், மாத்திரைகளும் தாங்கள் முன்னணி கண்ட திருப்தியில் திளைத்தன. 

இப்போது" இந்த மாத்திரைகளின் வண்டியில்தான் நம் வண்டி தினமும் ஓடிக் கொண்டிருக்கிறது.." என பெருமையாக காண்போரிடமெல்லாம் (நம் சுற்றங்களை, நட்புகள் ) சொல்லி அதை (மாத்திரை, மருந்தை) கௌரவபடுத்தவும் தொடங்கினோம். 

இப்போது ஏன் இந்த அலசல் என நீங்கள் நினைக்கலாம். இன்று இனிப்பு சக்தி என்ற ஒன்று உலகிலுள்ள அனைவரிடமும் அதீதமாக பரவியுள்ளது. அதை முற்றிலும் குணப்படுத்த மருந்தில்லையென்றாலும், கட்டுப்படுத்த பல மருந்துகள் உள்ளன. ஆனாலும் சிலது சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் போகும் அவஸ்தைகளும் அதில்  இருக்கின்றன. 

உணவுகளில் அறுசுவையில்,  இனிப்பு, புளிப்பு, உப்பு  இம்மூன்றையும் தினமும் அதிகமாக உட்கொள்வதை தவிர்த்து கசப்பு, துவர்ப்பு, காரம் (அளவுக்கதிகமான காரங்கள் இல்லாத காரம்  )  என்ற சுவைகளை  குறைவாகவேனும்  தினமும் உட்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என அந்த காலத்தில் நம் வீட்டு  பெரியவர்கள் கூறி வந்தனர். ஆனால், நம் நாவின் சொல்படி கேட்டு வளர்ந்த நமக்கு முதலில் கூறியவைதான் பிடித்தமான உணவாக இருந்தது.

அந்த கசப்பு சுவையுடன் கலந்த பாகல் அனேக பேருக்கு சிறு வயதில் அனைவருக்குமே  பிடிக்கவே  பிடிக்காது. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட வயது வரவேண்டுமென்றும் அப்போது சொல்வார்கள். 

பாகற்காயில் கசப்பு சுவை உள்ளதால், இனிப்பு (சுகர்) பேஷண்ட்ஸ் இரண்டொரு நாளைக்கு ஒரு  தடவை  உணவோடு இதை செய்து  சாப்பிடலாம். (அல்லது இதையை உணவாகவும் சாப்பிடலாம்.) அது போலவே துவர்ப்பான வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய் இவைகள் இந்த உபாதையை கட்டுக்குள் வைத்திருக்கும் எனவும் நம்புவோம். அதுவே ஒரு சிறந்த  மருந்தாகும். (உணவே மருந்து.) 

ஆனாலும், உணவில் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொண்டு, அரிசி, கோதுமை போன்றவற்றை கூடிய மட்டும் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக சிறுதானிய வகைகளை தேர்ந்தெடுத்து கொண்டால் நல்லதென்பது சிலர் வாதம். 

சிறுதானிய வகைகளையும், அளவோடு சாப்பிட்டு, காய்கறிகளையும் அளவோடு சாப்பிட்டால், இந்த நோயின் உபாதைகளிலிருந்து சிறிது மீளலாம் என்பது சிலர் வாதம். 

அந்தந்த நேரத்திற்கு சிறிதளவு மட்டும் உண்டு, கிடையாய் கிடைக்காமல் நடையாய் நடந்தால், நல்லதென்போரும் உண்டு. 

என்னவோ.. போங்கள்... ! ஆனால், இந்த இனிப்பு உபாதை  நம்மோடு இருக்கிறது என்பதை கண்டு பிடித்தது முதல் மன உளைச்சல்தான். நம்மோடு இருந்து சௌக்கியமாய் அது வாழ்ந்து விட்டுத்தான் "அதுவும் நம்முடன் போகும்.. " என்றால் அதுவும் மிகையாகாது. 

சரி.. சரி.. இந்த வம்பெல்லாம் இப்போது எதற்கு..? எங்கேயோ ஆரம்பித்து, தலைப்பை வேறு விதமாக போட்டு விட்டு அதன்படி சொல்ல வந்ததை சொல்லிச் செல்லாமல், சுற்றி வளைத்து மூக்கைத் தொடும் பாணியாக, வேண்டாததை பிதற்றாமல், வேண்டியதை மட்டும் சொல் என்கிறீர்களா?  அதுவும் சரிதான்..!! 

இப்போது அனைவரும் நம் உடம்புக்கு நல்லதென கூறும் இந்த பாகற்காய் உசிலி செய்முறையை பார்ப்போமா

நல்லதான பாகற்காய் இரண்டை வாங்கி, அலம்பி பின் அதை இது போல் சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.  


ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொண்டு அத்துடன் அரிந்த பாகலை போட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும். 


வழக்கமாக காய்கறி கலந்த பருப்பு  உசிலிக்கு போடுவதை போல துவரம். பருப்பு, கடலை பருப்பு பாதிக்கு பாதியாக எடுத்து கொண்டு அலம்பி ஊற வைக்கவும். 


அரை மணிக்கும் மேலாக ஊற வைத்த அந்த பருப்புடன் அதில் காரத்திற்கு  (அவரவர் விருப்பம்.) சிகப்பு வத்தல், ஏழு, இரண்டு பச்சை மிளகாய், தேவையான கல் உப்பு போட்டு கறிவேப்பிலை இரண்டு ஆரக்கு  பெருங்காயப்பொடி முதலியவற்றை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக  அரைத்துக் கொண்டு, அதை இட்லிதட்டில் இட்லி மாதிரி வேக வைத்துக் கொண்டு பின்  அதை கடாயில் சமையல் எண்ணெய் விட்டு உதிர்த்துக் கொண்டு, அத்துடன் இந்த வெந்த பாகற்காயை கலந்து சிறிது நேரம் வதக்கினால் சுவையான பாகல் உசிலி தயார். 

இதை மதிய உணவாக நினைத்து நிறைய தட்டில் போட்டுக் கொண்டு இத்துடன் ஒரு கரண்டி, அல்லது எண்ணி  நாலைந்து பருக்கை சாதத்தை இத்துடன் கலந்து சாப்பிடவும். இதுவும்  அவரவர் விருப்பம். ஹா ஹா ஹா. 

ஆக மொத்தம் அன்று நடந்த நடைகளாக பகல் பொழுதினில் நாம் செல்லவேண்டிய இடங்களுக்கென்று எங்கே சென்றாலும் வெய்யில், மழை பாராமல் நடந்தோம் . ஊரில் அருகில் உள்ள  ஒவ்வொரு கோவில்களை காலை, மாலை என்று நடந்து சென்று தரிசித்ததோடு, அங்கு உட், வெளி பிரகாரங்களை சுற்றி வருவதை ஒரு நடைப்பயிற்சியோடு கலந்த பக்தியாக்கி சந்தோசமும், திருப்தியும் அடைந்தோம். நடுவில் இவற்றை தொலைத்து விட்டு, இல்லாத நோய்களை சொந்தமாக்கி கொண்டு, அவைகளின் தீர்விற்கு மீண்டும் இவற்றுக்கெல்லாம் இப்போது முயற்சியும், பயிற்சியும் செய்கிறோம். எப்படியும் இதுவாவது "நடந்தால்" சரிதான்..! :))

நடை பாடல் ஒன்று. இது போல்  நடையை வலியுறுத்தி நடை பாடல்கள் பல உண்டு. நடக்கும் நடைகளை குதர்க்கம் சொல்லி கேலி காட்டினும், தன் எழுத்து நடையில் நடை பிசகு காணாத வண்ணம் எழுதிய அந்த  பாடலாசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.

இந்த வழக்கமான என் பிதற்றலுக்கும் அன்புடன் கருத்துரை தரும் அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

Wednesday, September 25, 2024

கனவு மெய்ப்பட வேண்டும்

தூக்கமும் விழிப்புமற்ற நிலை. இன்னும் சற்று நேரம் படுத்திரேன் என்று மனதை உடல் ஆணையிட்டது. பொதுவாக மனது சொல்வதை கேட்கும் உடல், இன்று அதிகாரமாக உரிமையோடு மனதிற்கு ஆணையிடுவதை அந்த மனது சிறிதும்  விரும்பவில்லையெனினும், உடலின் அந்த அசதி அதற்கும் சற்று இருந்ததால், அதுவும் மெளனமாக ஏதும் கூறாமல், தன் கண்களை மூடிக் கொண்டது.

இது என்ன அந்தகாரமான ஓரிடம்..! பிரகாசமான விளக்கின் ஒளிகள் தூரத்தே தெரிந்தாலும், இங்கு எதற்காக இப்படியான இருள் சூழ்ந்துள்ளது...?அந்த இருட்டிலும் ஏதேதோ வாசனைகள் கலந்து நாசியை துளைப்பதை உணர முடிகிறது. . எதற்காக இங்கு வந்திருக்கிறேன்..? எப்படி இந்த இடத்தை விட்டு மெள்ள நகர்ந்து அந்த ஒளி மிகுந்த இடத்திற்குச் செல்லப் போகிறேன்.?அதற்குள் இந்த இருட்டின் தடங்கள் என் கண்களுக்கு பழக்கமாகி விடுமா..? என பல விதத்தில் யோசனைகள் செய்த போதினில், எதிரே இரண்டு பிரமாண்டமான ஆண் உருவங்கள் தோன்றின. 

நல்ல பராக்கிரமசாலிகள் என அவர்களை பார்த்தவுடன் அந்த இருட்டிலும் தெரிந்தது. சிறிது நேரத்தில் அவர்களை மட்டும் ஒரு ஒளி சூழ்ந்தது. அதில் அவர்களை பார்க்கையில் பருத்த தோள்கள், வாட்ட சாட்டமான உடல்வாகு, பெரிய கண்கள், அந்த கண்களில் சிறிதும் கருணை இல்லாத பார்வைகள், கடைவாயின் இரு ஓரத்திலும் சற்றே நீண்டிருந்த இரு பற்கள்...என  கண்டவுடன் என் வயிற்றில் ஏதோ ஒரு அமிலங்களை சுரக்கச் செய்தன.. 

அவர்கள் என்னிடம் பேசும் போது  அந்த பற்கள் வேறு  கண்டிப்பாக பயமுறுத்துமென தோன்றியது. யார் இவர்கள்..? அரக்கர்களா? இல்லை அரக்கத்தனம் கொண்ட மானிடர்களா? என நினைக்கும் போதே அருகில் வந்து என் இரு கைகளையும் முரட்டுத்தனமான அழுத்தத்துடன் பிடித்தனர்.

"வா.! வா..! ஏன் இன்னமும் தாமதம்?இனிதான்  உனக்கு நடை பழக கற்றுக் கொள்ள வேண்டுமா?" கர்ண கடூரமான குரலில் ஓருவன் உறுமினான். மற்றொருவன் ஏளன புன்னகையுடன், "அதில் சந்தேகமென்ன..? இனி எல்லாமே முதலில் இருந்துதானே கற்க வேண்டும். இவளிடம் என்ன பேச்சு.? தரதரவென இழுத்துக் கொண்டு சென்று நம் மன்னரிடம் சேர்ப்பது மட்டுந்தான் நம் கடமை..!" என்றபடி இழுக்க முற்பட்டான்.

" ஆ.. என்னை விடுங்கள்.. விடுங்கள்.. கைகள் வலிக்கிறதே ..! ஐயோ என்னை காப்பாற்ற இங்கு யாருமே இல்லையா.. ?" என நான் பார்த்த பழைய தமிழ் சினிமா கதாநாயகிகள் போல நான் கத்த ஆரம்பிக்க, அவர்களின் பிடி இன்னமும்  இறுகியது. 

ஒரு வழியாக அவர்கள் இழுத்த இழுப்பிற்கு என் கால்கள் நகர்ந்து அந்த ஒளி நிரம்பிய பகுதியை வந்தடைந்தோம். அங்கு என்னைப் போலவும் ஆட்கள் பலர் செய்வதறியாமல் நின்று கொண்டிருக்க, அந்த பலசாலிகளைப் போல பலர் அவர்களை ஏதும் பேச விடாமல், அருகில் நின்றபடி மிரட்டிக் கொண்டிருந்தனர்.

என்னையும் அவர்களுடன் இணைந்துகொண்டு சென்று நிறுத்திய பின்  அதுவரை என் கைகளை அழுத்தமாக பிடித்திருந்தவர்கள் சற்றே பிடியை தளர விட்டனர். அதற்குள் அங்கு நடுவில் போடப்பட்டிருந்த இரு பெரிய சிம்மாசனங்களில் சற்று பெரியதாக இருந்த ஒன்றில், இந்த பராக்கிரமசாலிகளைப் விட இருமடங்கு பிரமாண்ட உருவமாக தோன்றிய ஒருவர் தலையில் பெரிய கிரீடத்தை சுமந்தவாறு வந்து அமர, இந்த பலசாலிகள் அனைவரும் ஏதோ மொழியில், அவரை கோரஸாக வரவேற்று அவரை சிரம் தாழ்த்தி மண்டியிட்டு வணங்கினர். செய்வதறியாது நின்று கொண்டிருந்த எங்களையும் கால்கள் மடக்கி குனிய வைத்து வணங்க வைத்தனர்.

சிறிது நேரத்தில் அங்கிருந்த மற்றொரு சிம்மாசனத்தில், வேறொருவரும் அதே மாதிரி ஆனால், சின்னதாக கிரீடம் அணிந்து வந்தமர அவருக்கும் அதே மரியாதை கலந்த வரவேற்பு கிடைத்தது. அவர் முன்னவர் போல பயமுறுத்தும் பயில்வான் போலில்லாமல் சற்று  பூலோக மனிதர்களைப் போலிருந்தார் . 

"வாரும் சித்ர குப்தரே ..! இன்று நீர் அரசவைக்கு வர  ஏன் இத்தனை தாமதம்.? எப்போதும் இவ்வாறு தாமதிக்க மாட்டீரே. .? என்று முன்னரே வந்தமர்ந்தவர் பின்னர் சற்று தாமதமாக வந்தமர்ந்தவரை பார்த்து சற்று அதிகார குரலில் ஆனால், கோபமான தொனியில் உறுமுவது போல கேட்க," மன்னிக்க வேண்டும் பிரபு. இன்று காலை ஆகாரமாக  உணவு உண்பதற்கு தோதாக ஏதும் பிடிபடாமல் இருக்கவே ஒரு வழியாக அதை செய்து முடித்து பசியாறி  விட்டு வர நேரம் கடந்து விட்டது. மன்னிக்கவும் பிரபு...!! என்று அவர் எழுந்து பணிவாக கூறிய பின் அவரை கைக் கூப்பி வணங்கி விட்டு அமர முதல் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவரின்  கோபம் சற்றே கலைந்ததற்கான அறிகுறி அவர் முகத்தில் தெரிந்தது. 

ஆகா....! இதுதான் நாம்  பூவுலகில் இருக்கும் போது அடிக்கடி கூறும் எம தர்ம ராஜா பட்டிணமா.. ? இவர்தான் அந்த யமதர்மராஜன் போலும்..! அதுதான் மன்னரிடம் இழுத்துக் கொண்டு சேர்ப்பிக்க வேண்டுமென என் கைகளை பிடித்து அழைத்து வந்தவர்கள் கூறினார்களா? 

அட..! அப்போது நான் உயிருடன் இல்லையா? பூவுலகிலிருந்து வாழ்ந்த வாழ்வை விட்டு இறந்து இங்கு விட்டேனா? அப்படியென்றால், இவர்கள் பேசுவது எல்லாம் நன்றாக  கேட்கிறதே ? எப்படி..? இங்கு வந்த பின்னும் ஐம்புலன்களும் வேலை செய்யுமா.. ? ஒரே குழப்பமாக நான் ஏதோ சிந்தித்து கொண்டிருக்க, "சித்ர குப்தா" என்ற அந்த சிம்மக்குரல் என்னை அதிர வைத்தது. 

அந்த அதிரடி குரலில் சுயநினைவு பெற்ற நான் (அட..! சுயநினைவு வேறு இருக்கிறதா உனக்கு..? அது அங்கு  இல்லையென்று ஆன பிறகுதானே இங்கு வந்தடைந்திருக்கிறாய்..!! என யாரோ கூக்குரலிடுவது காதில் கேட்டது. அது வேறு யாருமில்லை...! மிச்சம் மீதி இருக்கிற மனசாட்சி பட்சிதான் என்பதையும் சிறு பொழுதில் உணர்ந்து கொண்டேன்.) குழப்பதிலிருந்து வெளி வந்தேன். 

"சித்ர குப்தா.. இன்றைய நாளில் வந்திருக்கும் இவர்களது பூலோக பாப புண்ணிய  கணக்குகளை சீக்கிரமாக எடுத்து வாசி." என்று தர்மராஜன் பகிர்ந்ததும், சித்ர குப்தன் கைகாட்டிய திசைக்குச் சென்று ஒரு பலசாலி தூக்க மாட்டாமல் ஓர் அடுக்கு ஓலைச் சுவடிகளை கொண்டு வந்து வைத்தான். 

" என்ன இது.. சித்ர குப்தா..? வழக்கத்திற்கு மாறாக என்றைக்கும் இல்லாமல் இன்று இவ்வளவு ஓலைச்சுவடி கணக்குகளா ? பிரமிப்பாக உள்ளதே..? யமதர்ம ராஜன் குரலில் பயங்கர ஆச்சரியம் கலந்து ஒலித்தது. 

" ஆம்.. பிரபோ.. ! இன்று இங்கு வந்தவர்களின் பாப புண்ணிய கணக்குகள்தாம் இவை. இதில் பாதிக்கு மேல் இருப்பவை அதோ அந்த அம்மையாருடையது..!" என சித்ரகுப்தர் என்னை நோக்கி கை காட்டவும், யமதர்மரின் பார்வை என்னை விழுங்குவது போல் என்னை நோக்கி பாய்ந்தது. 

அவர் பார்வை ப(சு)ட்டதும் எனக்கு பயத்தினால் கால்களில் ஏற்பட்ட நடுக்கம் (அடாடா.. இங்கு வந்தும் கால்களில் அதே பிரச்சனையா..?) அதிகமாகி, நிற்க இயலாமல் தடுமாறவே பலகிரமசாலிகள் என் கைகளை அழுத்தமாக பிடிக்கத் துவங்கினர். 

எனக்கு முன்னால் இருப்பவர்களை விசாரித்து, கணக்கு வழக்கை முடித்தவுடன்தான் என்னிடம் விசாரணைக்கு வருவார்கள். அதற்குள் அங்கு  நடப்பதைப் பார்த்து அதற்கு தகுந்தாற்போல எப்படி நடந்து கொண்டால், எப்படியும் கிடைக்கும் தண்டனைகளை மனமொப்பி ("அந்த மனம் என்பதுதான் உன்னை விட்டு கொஞ்சங்கொஞ்சமாக விலகிப் போய் கொண்டிருக்கிறதே" என்று ஒரு பட்சி வேறு அடிக்கடி வந்து காதில் கூவி விட்டுப் போகிறது.) ஏற்றுக் கொள்ளலாம் நான் போட்ட கணக்கு மாறுபட்டு பிசகுகிறதே என்று நினைப்பதற்குள்.....! 

"ஏய் தூதர்களா..! முதலில் விசாரணைக்கு அந்த அம்மையாரை இங்கு என் முன்னர் அழைத்து வாருங்கள்.." என்ற யமதர்மரின் கட்டளைக்கு என்னை தள்ளிக்கொண்டு (கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு) சென்றார்கள் அந்த தூதர்கள். 

"சித்ர குப்தா..! இந்த அம்மையாரின் கணக்கை இப்போது எடுத்து வாசி"என்று யமதர்மர் சித்ரகுப்தரைப் பார்த்து கட்டளையிட்டதும்," பிரபோ..! இவரின் பாப கணக்கை விட புண்ணிய கணக்கு நிறைய உள்ளது. இதில் முதலில் எதை வாசிக்கட்டும்..? என சித்ர குப்தர் வினவியதும், எனக்கு உயிரே வந்தது போலிருந்தது. (அட..!! உயரே வந்த பின்னும் உனக்கு மீண்டும் உயிரே வேறு வந்து விடும் ஆசையா..? என்ன ஒரு அசாத்திய நம்பிக்கை உனக்கு.. ! என பட்சி காதில் கிண்டல் செய்து நகர்ந்தது.)

" அப்படியா..!! அப்போது இவரை தேவ லோகத்திற்கு அனுப்பாமல்,  இங்கு கொண்டு வந்ததின் காரணம்..?" யமதர்மர் சந்தேகமாய் வினவினார். 

" பிரபோ..!  முன்பு பூலோகவாசிகள் செய்யும் புண்ணியங்களுக்கு  தகுந்தபடி நேரடியாக தேவ லோகத்திற்கும்,செய்த  பாவங்களுக்கு தக்கபடி இங்கும் அவர்களை கொண்டு வந்து கொண்டிருந்தோம். இப்போது மாற்றி  இயற்றிய புது சட்டத்தை மறந்து விட்டீர்களா.? இங்கு முதலில் வந்த பின் அவர்கள் செய்த பாபங்களை அலசி ஆராய்ந்து, அதற்கேற்றபடி புண்ணிய கணக்கையும், கூட்டி,கழித்து பெருக்கி, வகுத்தப் பின்தான் உடனே வையகத்துக்கு அனுப்பவா... ,? இல்லை, தேவ லோகவாசியாக சிறிது காலம் இருக்கும்படி செய்து விட்டு,பின்பு  சுகவாசியான மானுடபிறப்பிற்கென பிறக்கும்படி செய்து அனுப்பவா..! என நீங்களும், பிரம்மதேவரும் சேர்ந்து  இயற்றிய அந்த சட்டத்தை மறந்து விட்டீர்களா.. ? 

சித்ர குப்தர விளக்கியதும் தெளிவடைந்தார் யம தர்மர். 

"சரி.. அப்படி இவரின் புண்ணியங்கள் நிறையவென்றால், அதை முதலில் சுருக்கமாக விவரியுங்கள்." என்றார்

என் சம்பந்தபட்ட ஓலைகளை சித்ர குப்தர அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, "சுருக்கமாக என்பதற்கு எதிர்பதந்தானே விவரிப்ப தென்பது..! இப்படி இரண்டையும் சொன்னால் அவர் என்ன பண்ணுவார்..?பாவம்..! என நான்  சித்ர குப்த்ருக்காக யோசிக்க, சித்ர குப்தர் என்னை ஒருதடவை திரும்பிப் பார்த்து முறைத்தார். "ஆகா..!என் யோசனை இப்போது எந்த கணக்கில் சேர்த்தியோ..! "என்ற எண்ணம் வந்ததும் "நான் இப்படியெல்லாம்  யோசிப்பதை நிறுத்தச் சொல்ல பறந்து வந்தது அந்த பட்சி." 

"பிரபோ..! இவர் பூவுலகில் நாம் பிறப்பெடுத்து தந்தது முதல், தம் பெற்றோர்களுக்கு அடங்கிய மகவாய், திருமணமாகி வாழ்ந்த காலத்தில் ஒரு நல்ல மனைவியாய், உற்றம், சுற்றம் மற்றும் அனைவர்க்கும் அன்பானவராய் நம் கணக்கின்படி இவருக்கென இவர் மூலம் ஜனிக்க வைத்த சிசுக்களுக்கு நல்ல தாயாகத்தான் வாழ்ந்திருக்கிறார். இவர் வாழ்ந்த இவ்வளவு வருடங்களில் அதிலெல்லாம் எந்தக் குறைகளையும் வைக்காமல் நல்ல விதமாக இவர் நிறைய புண்ணியங்கள் செய்திருக்கிறார். ஆனால், தினமும் உலகில் உள்ள ஜீவன்களுக்கு ஆதாரமாக நாம் படைத்து தந்த உணவு வகைகளில், அடிக்கடி "உபுமா" என்றொரு வஸ்தை கொண்டு குடும்பம், மற்றும் இவரை நாடி வரும் உறவுகள் அனைவரின் மனதை சில சமயங்களில் வருத்தும்படிக்கு செய்து தந்து பாப கணக்குகளில் இடம் பிடித்திருக்கிறார். "

" நிறுத்துங்கள் சித்ர குப்தா..! அது என்ன "உபுமா"? இதுவரை நாம் அறிமுகப்படுத்தியதில் கேட்காத மொழியாக உள்ளதே..? என யமதர்மர் குறுக்கிடவும்..., 

"மன்னிக்கவும் பிரபோ..அது" உபுமா"இல்லை." உப்புமா"  நான் இந்த ஒரு ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் போது ஓரெழுத்து தவறியுள்ளது. மற்றதில் எல்லாம் சரியாக உள்ளது.." என அவசரமாக சித்ர குப்தர மறுக்கவும், நான் வாய் விட்டு சிரித்து விட்டேன். ("அட..! இங்கு வந்த பின்னும் உன்னால் சிரிக்கக் கூட முடிகிறதே..! "முதல் தடவையாக பட்சி வந்து பாராட்டிச் சென்றது.) 

யமதர்மர், மற்றும் சித்ரகுப்தன பார்வைகள் என்னை தீயில் குளிப்பாட்டி தணிந்தன." என்ன சிரிப்பு..?" என்று கோபபடுவார்களோ அதற்கு என்ன தண்டனையோ ? என எதிர்பார்த்த அடுத்த விநாடி," "அம்மையே..! உன் அர்த்தமற்ற சிரிப்புக்கு உன்னை மன்னிக்கிறேன் "உப்புமா" என்றால் அது என்ன வகையான  பதார்த்தம் என்பதை விளக்கிக்கூறு...?" என்று யமதர்மராஜன் கேட்டதும், 

"அது வேறு ஒன்றுமில்லை பிரபோ..!  இந்த உப்புமாக்கள் செய்வதற்கென்று பூலோகத்தில் சில வஸ்துக்கள் இருக்கின்றன. அதில் இவர் அதை வைத்து பல விதமான இனிப்புக்கள், இந்த மாதிரி" உப்புமா*" ரகங்கள் என பலவற்றை  தன் பல சுற்றங்களுக்கு பிடிக்காமல் போனால் கூட செய்து தந்து வாழ்நாளில் தன் பாப கணக்கை கூட்டியுள்ளார். ஆனால், நான் கூட இவர் செய்ததை நினைவில் வைத்தபடி, மேலும் அதன் சுவையை நானும் சுவைத்துப் பார்க்க நினைத்து, பூலோகத்திலிருந்து அந்த பொருட்களை தருவித்து அதை செய்ய  ஓரிரு தினங்களாக முயற்சி செய்கிறேன். ஆனால், அது எனக்கு இந்த அம்மையார் செய்வது போல சரியாக வரவில்லை. மேலும், அதுதான்  இன்று காலை நான் அரசவைக்கு வர தாமதமான காரணம். அது குறித்து கூட உங்களிடம் தெரிவித்தேனே. ..!  என்று சித்ர குப்தர குறுக்கிட்டு விளக்கி கூறினார். 

.... அதுதான் காரணமா? சரி.. இவரது பாபங்களை இப்போதைக்கு ஒரு மூட்டையில் கட்டி வைத்து விட்டு, நாம் அதை பிறகு பரீசீலிக்கலாம். இப்போது அந்த பொருட்களை வைத்து அந்த "உப்புமாவை" இவர் செய்து இங்கு கொண்டு வர உத்தரவிடுகிறேன். நீங்கள் சொன்னதிலிருந்து எனக்கும் அதை உண்பதற்கு ஆசை வந்து விட்டது...!" என யமதர்மர் சொன்னதும், சித்ர குப்தர் "இவரை என் அரண்மனை உணவு கூடத்தில் கொண்டு விடுங்கள்" என என்னருகில் நின்றிருந்த அந்த பலசாலிகளுக்கு ஆணையிட்டார். 

"அட.. ராமா.. இங்கு வந்தும் இதே வேலையா?" என நான் சலித்துக் கொண்டாலும் அவர்கள் சொல்படி கேட்டாக வேண்டுமே..!! என்ன செய்வதென அவர்களுடன் அந்த உணவு கூடம் நோக்கி நடந்தேன்/ நடத்தப்பட்டேன் . சிறிது நேரத்தில் "உப்புமா" என் சொல் பேச்சு கேட்டு நடக்க, மறுபடியும் "என் தயாரிப்புடன்" யமதர்மராஜா முன்னர் ஆஜர்படுத்தப்பட்டேன். 

" அட..! அதற்குள் செய்து கொண்டு வந்தாகி விட்டதா? எங்கே கொண்டு வாரும் அந்த பதார்த்தத்தை..." அவரது ஆணையில் நான் செய்த "உப்புமா" அவருக்கு அருகில் சென்றமர்ந்தது. 

"ஆகா..  என்ன ருசி. என்ன ருசி. நம் தேவ லோகத்து அமிர்தம் கூட இந்த ருசியில் சேராது...! சித்ர குப்தா இங்கு வாரும். நீரும் சாப்பிட்டு பாரும்.." என்ற யமதர்மராஜாவின் மகிழ்ச்சியான வார்த்தைகளை கேட்ட நொடியில், அதற்காகவே காத்திருந்தது போல், சித்ரகுப்தரும் அவர் அருகில் சென்றமர்ந்து அந்த உப்பமாவை ருசிக்க ஆரம்பித்தார். இருவரின் கண்களிலும் அபரிமிதமான ஆனந்தம் தாண்டவமாடியது

பூலோக வாசியாக இருந்த போது, வருடந்தோறும் சித்ரகுப்தர் விரதம் அனுஷ்டிக்கும் போது நான் உப்பில்லா நோன்பு இருந்தது லேசாக நினைவுக்குள் வந்தது. இவரானால் இந்த "உப்பு"மாவை இத்தனை ருசியுடன் புகழ்கிறாரே என்று  நினைத்தேன். 

"சித்ர குப்தா..!  இவரது பாப கணக்குகளை ஏதும் ஆராய வேண்டாம். இவருக்கு இப்போது எந்த தண்டனையும் தரவேண்டாம். எனக்கு இந்த வஸ்துவை ருசிக்க ஆசை வரும் போது, இதை மட்டும் செய்து தரச் சொல். அதற்காக இவருக்கு வசதியான அறை ஒன்றை ஏற்பாடு தந்து அதில் தங்கச்செய். இதுதான் இவருக்கு இங்கு யாம் தரும் தண்டனை." என்று யமதர்ம ராஜன்  சொன்னவுடன்" உத்தரவு மஹாராஜா. அப்படியே ஆகட்டும் .." இவரை அழைத்துச் சென்று நல்லதொரு அறையை தங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்...! மேலும் இவருக்கு எந்த தொந்தரவும் வராமல் மரியாதையாக கவனித்து கொள்ளுங்கள்.." என்று அதே ஆணையை தம் பணியாளர்களிடம் தெரிவித்தார் சித்ரகுப்தர். 

எனக்கு அங்கு நடப்பது எல்லாமே விசித்திரமாக இருக்கவே ஸ்தம்பித்து நின்றிருந்தேன். அப்போது பளபளவென தங்ககவசங்கள், பட்டாடைகள் ஜொலிக்க இரு ஆடவர்கள், தங்க விமானத்தில் வந்து இறங்கினர். உடனே யமதர்மராஜா முதற் கொண்டு எழுந்து அவர்களை மரியாதையாக வணங்கி வரவேற்று புகழ் பாடி வந்த விஷயத்தை சொல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டனர். 

"யமனே.. நாங்கள் இந்த அம்மையாரை அழைத்துப் போவதற்கு விஷ்ணு உலகத்தில் இருந்து வந்திருக்கிறோம். இவருக்கான பாவங்கள் அனைத்தையும் இங்கு விமோசனம் செய்து விட்டு இவரை  எங்களுடன் அனுப்பி வைப்பாயாக..! இது எங்கள் பிரபுவின் உத்தரவு..!  என்றதும் யமதர்மர், சித்ர குப்தர முகங்களில் கவலை ரேகைகள் படர்ந்தன . 

"ஏன் இந்த முடிவு..? இவர் கொஞ்ச காலங்கள் இங்கிருந்து கழித்த பின் இவரது பாபங்களை புண்ணியமாக்கி நாங்களே அங்கு அனுப்பி வைக்கிறோம். இன்றுதான் இவரின் பாப கணக்கின் உட்பட்ட இவர் வழக்கமாக பூலோகத்தில் செய்த வஸ்து ஒன்றை இங்கு அடிக்கடி செய்யுமாறு பணித்திருக்கிறோம். அதற்குள்...! " யமதர்மரை முடிக்க விடவில்லை வந்தவர்கள். 

"அதற்குத்தான் இவரை அங்கும் அழைத்து வர உத்தரவிட்டிருக்கிறார் எங்கள் பிரபு. அவருக்கென்று ஒரிரு நாட்கள்  பூலோகத்தில் பூஜைகளை செய்யும் பொழுதில் இவர் படைத்ததை அவரால் நேரடியாக வந்து உண்ண இயலவில்லையாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த பதார்த்தத்தை எங்கள் பிரபுவுக்கும் உண்ண ஆசைதான். இவரின் கணக்கை ஆராய்ந்து நாங்கள் வந்து அழைத்துப் போவதற்குள் நீங்கள் இங்கே அழைத்து வந்து விட்டீர்கள்....!!" அவர்கள் பேச, பேச, கேட்டபடி நின்றிருந்த எனக்கு தலை சுழல்வது போலிருந்தது. 

" நாராயணா..  என்றோ ஒருநாள் நான் உனக்கு அவரச கதியில் செய்து நைவேத்தியமாக படைத்த உப்புமாவை ருசிக்க  உனக்கும் விருப்பமா? என்ன ஒரு புண்ணியமான செயலாக அது என்னை மாற்றியுள்ளது..! இந்த உப்புமாதான் என்னை ஈரேழு உலகத்திற்கும் அழைத்துச் செல்ல காத்திருக்கிறதா ? பகவானே இதோ வருகிறேன். உன் அழைப்புக்கு வராமல் நான் மறுப்பேனா....உன்னை சந்திக்க நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும். என்னப்பனே..! நாராயணா. நாராயணா. . " என நான் உணர்ச்சி வசப்பட்டு  மடமடவென உரக்கப் பேசியபடி, கூக்குரலிட யாருடைய பிடிமானமில்லாமல் தொப்பென கீழே விழுந்தேன். 

திடுமென சடாரென்று  கட்டிலில் அலுப்புடன் புரண்டதில்  சற்றே விழிப்பு வந்து எழுந்தமர அந்த சத்தம் கேட்டு" எழுந்து விட்டீர்களா? இன்று இரவு டிபனுக்கு ரவை உப்புமா செய்து விடுகிறீர்களா ? . குழந்தைகளுக்கும் நீங்கள் செய்யும் உப்புமா மிகவும் பிடிக்கிறது என்கிறார்கள். . விரும்பி சாப்பிடுகிறார்கள் "என்றபடி அறையின் வாசலில் இருந்து ஆணை வர "அடாடா..! எல்லாமே சிறிது நேர உறக்கத்தில் வந்த கனவா..? இந்த உப்புமா என்னை படுத்தும் பாடு இருக்கிறதே....!என்றபடி  எழுந்து முகம் அலம்பச் சென்றேன்.

வேறு ஒன்றுமில்லை...! "இந்த டிபன் வகைகளில், ரவை உப்புமா செய்யும்போது, சுலபமாக செய்யும்படி  இருக்கும் இந்த உப்புமாவைதான் இதுவரை என் வாழ்வில் எவ்வளவு தடவைகள் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், தினமும் புதிதாக செய்வது போல் உணர்கிறோம். காரணம்.... நிறைய பேருக்கு எனும் போதில் சட்டென செய்வது சுலபமாக உள்ளது. அனைவரும் "நான் நீயென"  காத்திராமல் ஒரே நேரத்தில் உண்ணும்படிக்கும் உள்ளது. நாளை இந்த டிபன் செய்து கொண்டிருக்கையில், யமன் வந்து கூப்பிட்டால் கூட இரு.. இரு.. இதை செய்து முடித்து விட்டு பிறகு வருகிறேன் எனக் கூறுவேனோ..! என்னவோ..! " என  நகைச்சுவையாக கூறினேன். அது தொடர்பான ஒரு நகைச்சுவை கற்பனை பதிவு  இது..!  

எப்போதும் போல் இதை படிப்பவர்களுக்கும், கருத்துகள் வழங்குபவர்களுக்கும்  என் பணிவான நன்றிகள். 🙏. 

Sunday, September 15, 2024

எதிர்பாராத தருணங்கள்.

சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். 

கடந்த நான்கைந்து நாட்களாக என்னால் வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. அதற்கு அனைவரும் மன்னிக்கவும். 

கடந்த புதனன்று எதிர்பாராதபடி எங்களுக்கு ஒரு கோவில் பயணமொன்று அமைந்து விட்டது. திங்கள் மாலை தீடிரென திட்டமிட்டபடி அப்பயணம் புதன் அன்று காலை கிடைத்தது. அது இறைவனின் அற்புத செயல்களில் ஒன்றாகும். அப்பயணம் தந்த அலைச்சல்களில, எனக்கு சிறிது உடல்நலக்குறைவு என்றால், எங்கள் பேத்திக்கு( மகளின் மகள்) வெள்ளி காலையில் இங்கு வந்த பின் நல்ல ஜுரம். பாவம்..! அந்த அலைச்சலில் அவளுக்கும் உடல்நலக் குறைவு வந்து விட்டது. எங்களிடம் கைவசம் இருந்த மருந்துகளை தந்தும், குணம் ஆகாததால், நேற்று மருத்துவரிடம் சென்று காண்பித்து வந்த பின் இன்றுதான் எழுந்து அமர்ந்திருக்கிறாள். அந்தக் கவலைகளிலும் என்னால் எப்போதும் வருவது போல் முறையாக வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. அனைவரும் மன்னிக்கவும். 

ஒரு சிறு குன்றிருக்கும் இடமெல்லாம் ஆட்சி செய்வதும், அருள் புரிவதும் குமரன் என்பது பழங்கூற்று. ஆயினும், அனேக மலைகளும் "அவன்" வாசஸ்தலங்கள்தாம்.அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில மலைகளும், அவன் தந்தைக்கும், மாமனுக்கும் பெயர் பெற்றவையாகும் என்பதும் யாவரும் அறிந்ததே..!  மலைகளின் அழகும், அதன் தரிசனங்களும் நம் மனதிற்கு மகிழ்வூட்டுபவை. ரசிக்க வைப்பவை. அப்படி ரசிக்க வைத்த ஓரிடத்திற்கு செல்லும் வாய்ப்பு தீடிரென சற்றும் எதிர்பாராமல் இறைவன் அருளால் கிடைத்தது. அதற்கு இறைவனுக்கு கோடானுகோடி நன்றிகள். 🙏. 



இந்த ஒரு மலை அல்ல.... 

இந்த இருமலைகளும் மட்டுமல்ல... 


ஏழு மலைகளும் ஒன்று சேர்ந்து கூடுமிடமாகிய... 


அந்த ஏழுமலையானின் தரிசனம் அவனருளால் கிடைத்தது. 


அந்த ஏழுமலைகளுக்கும் அதிபதியான ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் அன்பு கட்டளைக்கு கட்டுப்பட்டு அவனருளால்,அவன் பாதம் பணிந்து வணங்கி அவனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று சென்று வந்தோம். 

கடந்த புதன், வியாழனுமாகிய இரு தினங்களும் மனதை எவ்வித கவலைகளுமின்றி, நிச்சலமாக இனிமையாக இருக்க வைத்ததும் அவனருளே.. 

இது அவனே அழைத்த எதிர்பாராத பயணம் என்பதினாலும், அவனருள் இல்லையென்றால் எதுவும் நடக்க சாத்தியமில்லை என்ற சத்தியமான  உண்மையாலும், அன்று அவ்வளவு கூட்டத்திலும் பகல் முழுக்க காத்திருந்ததற்கும், பின் எங்களுக்கென்று  தந்த அந்த நேரமாகிய பொழுதினில் இரவு மூன்று மணி நேரம் இடிபட்டு, காத்திருந்ததற்கும் மெய்சிலிர்க்க வைக்கும் அருமையான தரிசனத்தை தந்தான். 

எனக்கு அவ்விடம் விட்டு அகன்று வர கிஞ்சித்தும் மனமில்லை. அவனுடனே கலந்து விடும் பேராசை பேய்கள்  மனத்துள் வந்து தாண்வமாடின. ஆயினும், "அவன்" என் பிறப்போடு இடட கடமைகளை  முடிக்காது உயிர் பிரிய இந்த உடலுக்கு விருப்ப (உரிமையுமில்லை) மில்லை என்பதினால், மறுநாள் வியாழன் மதியம் தன் மைத்துனர் காளஹஸ்தி நாதரையும் தரிசிக்க வைத்து இரவு பத்திரமாக வீடு திரும்பச் செய்தான். நாராயணா.... இப்பிறப்பில் மட்டுமல்லாது வரும் எப்பிறப்பிலும் உன்னை என்றும் மறவாத வரம் தா..! உன் கருணையே கருணையப்பா. கோவிந்தா..! கோவிந்தா..! 🙏. 🙏. 



எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இந்த அன்னமயயா படத்தில் நடிகர் நாகார்ஜுனா அவர்கள் அன்னமைய்யாவாகவே வாழ்ந்திருப்பார். அவரின் மனமுருகிய நடிப்பில் கண்களில் கண்ணீரையும், இறைவனை நெருங்கி அணுகும் நல்ல கருத்தையும் மனத்துள் தோற்றுவிக்கும் திரைப்படம் இது. எனக்கு மிக மிக (இப்படி எத்தனை மிகப் போட்டாலும் தகும்.) பிடித்தமான திரைப்படம். 

இந்த இறுதி காட்சியில் வரும்  அந்த பாக்கியம் நமக்கு கிடைக்க இன்னமும் எத்தனை ஜென்மங்கள் பிறந்திளைக்க வேண்டுமோ ? "விண்டவர் கண்டிலர்.. கண்டவர் விண்டிலர்."என்பது போல இறைவனை கண்ணால் (அகம், புறம்) காண்பதற்கு எத்தனை பிறவிகள்தோறும் எத்தனைமாயிரங்கள் புண்ணியங்கள் செய்ய வேண்டுமோ? இதே நினைப்புடன் நானும் இப்பூவுலகில் காத்திருக்கிறேன். அவனும் அதற்கான நம் நேரம் வரும் போது கண்டிப்பாக அதற்கு ஒரு வழி காட்டுவான். 🙏.

அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். இன்றைய நன்நாளில் இப்பதிவை எழுதி பகிரச்செய்த அந்த ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களுக்கு என் சிரம் தாழ்ந்த பணிவான நமஸ்காரங்களும், நன்றியும். 🙏.

இப்பதிவை படிக்கும், படித்து கருததிடும்  என் அன்பான நட்புக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

Friday, September 6, 2024

விநாயகர் அருள்.

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். 

சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். 


ஸ்ரீவிநாயகப் பெருமானே சரணமப்பா. சரணம்.
 🙏. 

1) கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்

உமாசுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.🙏. 

இதன் பொருள். 

யானை முகத்தை கொண்டவரும், பூத கணங்களால் வணங்கப்படுபவருமான, விளாம்பழம், நாவற்பழங்களின் மீது விருப்பமுடையவருமான, உமை பாலகனும், நமக்கு வரும் இன்னல்களை தீர்க்க வல்லவருமான நம் கணபதி நாதரின் திருவடிகளை வணங்குவோம்.🙏. 

2) மூஷிக-வாகன மோதக-ஹஸ்த

காமர-கர்ண விலம்பித-ஸூத்ரா |

வாமன-ரூப மஹேஸ்வர-புத்ர

விக்ன-விநாயக பாத நமஸ்தே ||🙏. 

இதன் பொருள்:

எலி வாகனத்துடன் கையில் வைத்திருக்கும் மோதகப் பிரியராகவும்,  பெரிய விசிறி போன்ற காதுகளுடனும், மற்றும் நீண்ட புனித நூலை அணிந்திருப்பவரும், வாமனரைப்போல உயரம் குறைவாக இருப்பவரும். மற்றும் ஸ்ரீ மகேஸ்வரரின் மகனுமாகியவரும், தனது பக்தர்களின் தடைகளை உணர்ந்து அதை  நீக்கும் வல்லமையுடையவருமான ஸ்ரீ விக்ன விநாயகரின் பாதங்களை வணங்கிக் கொள்வோம். ஸ்ரீ விக்ன விநாயகருக்கு அனேக கோடி நமஸ்காரம். 🙏. 

3) பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்துங்க கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா! 🙏. 

இதன் பொருள்.

நாம் அனைவரும் தெய்வமாக வழிபடும் (கோமாதா) பசுவின் பாலும், சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற தேனீக்களால் தேர்ந்தெடுப்பட்டு சேர்த்த நல்ல தேனும், சுவையான கரும்புகளின் கனிச்சாற்றைக் கொண்டு நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை காய்ச்சி எடுத்த பாகும், அதற்கு தோதாக அதனுடன் சேர்க்கப்படும் அரிசி, பருப்பு வகைகளும் கலந்து உனக்குப் பிடித்தமான பல இனிப்புகளை செய்து நான் உனக்குத் தருவேன்.

அழகெல்லாம் ஒரு சேர நிறைந்தவரும், மதிநுட்பம் மிகுந்த யானையின் முகத்தைக் கொண்ட எம்பெருமானே, நீ அதற்குப் பதிலாக மூவகையான சங்கத்தமிழ் எனும் அமிழ்தத்தை எனக்குப் பரிசாக தருவாயா? . 


பிரபல பாடகர் சீர்காழி அவர்களின் பக்திப் பாடல்களை மெய்யுருகி கேட்டால், நம் கண் முன் இறைவனே வந்து நிற்பது போல் உணர்வோம் . அந்த அளவிற்கு  அமைந்தது அவரின் குரல் வளம். 🙏 அது அவருக்கு அந்த ஆண்டவன் தந்த வரப்பிரசாதம். 🙏 இந்தப் பாடலும் இன்றைய நல்ல நாளில், நமக்கு பக்தி பரவசமூட்டும் என்பதில் ஐயமில்லை. நாம் அனைவரும் கேட்டு மகிழ்ந்து விநாயகபெருமான் நம் கண் முன் வருவதை உணர்ந்து  தரிசிப்போம் 🙏

விநாயகர் குறித்து என் அறிவுக்கு எட்டிய விதத்தில் தந்திருக்கும் இப்பதிவை ரசிக்கும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.

நன்றி கூகுளுக்கும். 

Thursday, September 5, 2024

காஃபியின் வழி முறைகள்.

 இந்த காஃபி குடிப்பது கெடுதல் என்ற பழக்கம் இப்போதுதான்  வந்ததா? இல்லை, காஃபி குடிப்பது என்ற வழக்கம் வந்த  ஆரம்பத்திலிருந்தே வந்ததா? என்றிலிருந்து வந்தது எனத் தெரியவிலலை. ஆனாலும் காஃபியில் இருக்கும் காஃபின் என்ற பொருள், நமது உடலை சுறுசுறுப்பாக வைக்கும், எண்ணங்களை தோற்றுவிக்கும் நமது மூளைக்கு நல்லதொரு செயல்பாட்டை தருமென்பது ஒரு கருத்து. 

காஃபின் என்றால் என்ன?

இது ஒரு இயற்கை தூண்டுதலாகக் கருதப்படுகிறது. இது உலகளவில் பரவலாக நுகரப்படும் பானங்களில் ஒன்றாகும். இது பொதுவாக தேயிலை, காபி மற்றும் கொக்கோ செடிகளில் காணப்படுகிறது. காஃபின் உட்கொள்வது உடலுக்கு சில வழிகளில் நன்மைகளைத் தருகிறது. சோர்வு ஏற்படும் போது காஃபின் எடுத்துக் கொள்வது சுறுசுறுப்பைத் தருகிறது. இது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், விழிப்புடன் இருக்க வைக்கவும் உதவுகிறது.

காஃபின் உட்கொண்ட பிறகு, அது குடலில் இருந்து இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது. அதன் பிறகு இது கல்லீரலுக்குச் செல்கிறது. கல்லீரலிலிருந்து இது பல்வேறு கலவைகளாக உடைந்து, பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. காஃபின் முக்கியமாக மூளை செயல்பாட்டில் வேலை செய்கிறது. அதாவது அடினோசினின் விளைவுகள், மூளையைத் தளர்த்தி சோர்வடையச் செய்யும் நரம்பியல் கடத்தியாக அமைகிறது. ஆனால் காஃபின் உட்கொள்ளல் அடினோசின் வேலை செய்வதைத் தடுத்து சோர்வு மற்றும் மந்தத்தன்மையைத் தவிர்க்க உதவுகிறது.

இதனால் பல தீமைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

பொதுவாக காஃபின் உட்கொள்வது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். காஃபின் ஒரு டையூரிடிக் அமிலமாக இருப்பதால், இவை உடலில் இருந்து அதிக சிறுநீர் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதே சமயம், சர்க்கரையுடன் கூடிய காபி மற்றொரு மோசமான கலவையாக அமைகிறது. இது கோடை வெப்பத்தில் நீரிழப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது.

மற்றும், கோடைக்காலங்களில் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் போது, அது தூக்க முறைகளை சீர்குலைத்து விடலாம். மேலும், கோடையில் அறையின் வெப்பநிலையும் அதிகமாக இருப்பதால் தூங்குவது கடினம். இந்த நேரத்தில், காஃபின் எடுத்துக் கொள்வது அது உடல் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும். இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இதனால், எரிச்சல் மற்றும் சோர்வு ஏற்படும்.

அதிகளவிலான காஃபின் உட்கொள்ளலால் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டும் அதிகரிக்கப்படும். குறிப்பாக, கோடையில் காஃபின் உட்கொள்வது இருதய அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் இதய பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இது உடல் அசௌகரியம் அல்லது பிற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது  

ன்றி கூகுள்.

காஃபி குடிப்பது கெடுதலா , நன்மையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். காஃபி போடுவதே ஒரு கலை என வாதிடுபவர்கள்தான் எனக்குத் தெரிந்த வரை நிறைய பேர்  (உறவுகள்) இருக்கிறார்கள். காஃபி பில்டரில் புது டிகாஷன் இறக்குவதிலிருந்து, பாலை காய்ச்சி, அதற்கு தகுந்த சர்க்கரை சேர்த்து, (அல்லது சர்க்கரை இல்லாமலோ) நல்ல சூட்டில் (கவனிக்கவும். நல்ல சூட்டில்..) கலந்து தருவதை ஒரு அசுவமேத யாகத்தை எவ்வித குறையுமின்றி, தான் பூரணமாக செய்து முடித்த அளவுக்கு திருப்தியடைபவர்கள் நிறைய பேர். சரி..! இவர்கள் எப்போதும் ஒரே மாதிரி இவ்விதம் செய்து அனைவருக்கும்.  (இங்கும் கவனிக்கவும்... தினமும் வீட்டிலிருக்கும் அனைவருக்கும், தவிர எப்போதாவது வெளியிலிருந்து வரும் விருந்தாளிகளுக்கும் இப்படி காலை, மாலை, இடையில் அவர்கள் காஃபி என கேட்கும் போது என்று அவர்களுக்கு கலந்து தரும் அளவுக்கு  பொறுமை உள்ளதா என்றால், அங்கு அதுதான் மிஸ்ஸிங்.)

சிலர் இந்த டிகாஷன் நன்றாக அமைந்தால்தான், காஃபி நன்றாக இருக்குமெனவும், சிலர் பாலின் தரம் சிறப்பாக இருந்தால்தான் காஃபி சுவையாக இருக்குமெனவும், வாதிடுவார்கள். மேலும், காஃபி பில்டரில் உள்ளிருக்கும் காஃபி பொடியில் கொதிக்கும் வென்னீர் மழை விடும் போது அதற்கு குடை வைப்பவர்களும் , குடையை ஒதுக்கி அது நன்றாக மழையில் நனையட்டுமென விடுபவர்களும் உண்டு. இதிலும், குடை தேவையா, இல்லை அவசியமில்லையா என்ற இருவகை கருத்துக்கள் வாதிடுபவர்களுக்குள் எழுவதுண்டு. 

சிலர் அந்தக்காஃபி பொடி சரியில்லை, இதில் காஃபித் தூளில் கலக்கும் சிக்கரி நிறைய வந்து விட்டது எனவும், காஃபி கொட்டையாக கடையில் வாங்கி வீட்டில் அரைத்து நாமே தேவையான அளவு சிக்கரி  கலந்து போட்டால்தான் நன்றாக இருக்குமெனவும், சிலர் சிக்கரி இல்லாமல் காஃபித்தூளை முறையான அளவில் கலந்து உபயோகித்தால் மட்டுமே காஃபியின்  சுவை நன்றாக இருக்குமெனவும், சிலர் பசும்பாலை விட எருமைப்பாலில்  காஃபி திக்காக நன்றாக வருமெனவும், சிலர் பசும்பால்தான் நல்லது எனவும், அவரவர் கருத்துகளை முன்னிறுத்தி, இறுதியில் அதைதான் ஸ்திரமான ஆணித்தரமான உறுதியும் ஆக்குவார்கள்.

காஃபி போடுவதையே விதவிதமாக பழக்கம் வைத்திருப்பவர்களும் உண்டு. சிலர் பில்டர் காஃபியை தவிர்த்து வேறு எந்த முறையிலும் போட முயல கூட  மாட்டார்கள். சிலர் ஒரு பாத்திரத்தில் காஃபித்தூளை போட்டு வென்னீர் கொதிக்க வைத்து அந்த காஃபி பொடியில் ஊற்றி நன்கு கலந்து அதில் சிறிது தண்ணீர் தெளித்த பின் கெட்டியான காடா துணி உதவி கொண்டு மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி காஃபி தயாரிப்பார்கள், அவர்களுக்கு இந்த பில்டர் தேவையேயில்லை. சிலர் இப்போது ஏராளமாக வந்திருக்கும் "தீடிர் காஃபி" பொடியில் காஃபி கலந்து குடித்து விட்டு, வீட்டுக்கு வருபவர்களுக்கும் தந்து விட்டு எதைப்பற்றியும் கவலைபடாமல் "அக்காடா" என்றிருப்பார்கள். சிலர் காஃபி குடிக்கிறீர்களா என வீட்டுக்கு  வந்தவர்களை ஒரு உபசாரத்திற்கு கூட கேட்க மாட்டார்கள். (கேட்டால்தானே இந்த வம்புபெல்லாம்.?:)) ) சிலர் அந்தப் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே ஏற்படுத்திக் கொள்ளாமல், அல்லது நடுவில் விட்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எங்கு சென்றாலும், எந்த பிரச்சனையுமில்லை. (அவர்களால் பிறருக்கும் பிரச்சனைகள் இல்லை.) 

சில பேர்கள் இப்படி திக்காக ஒரே சகதி மாதிரி சிலர் வீட்டில் தருகிறார்கள் எனவும், டிகாஷன் அதிகம் கலக்காமல் பால் நிறைய கலந்து கொடுப்பவர்களை காயத்தால் கால் வீங்கியவர் கால்களை போன்ற மாதிரி வெள்ளையாக அவர்கள் வீட்டில் காஃபி இருக்கிறது எனவும் கிண்டல் செய்வார்கள். 

 (ஆக மொத்தம் நாம் அருந்தும் ஒரு குவளை காஃபியில்தான் எத்தனை வேறுபாடான கருத்துக்கள்? இந்தக் காஃபி அளவுக்கு அதிகமாக அதாவது தினமும் ஓரிரு தடவைகளுக்கு மேலாக குடித்தால் சிலருக்கு தலைச்சுற்றல் வரலாம். சிலருக்கு பழக்கத்தினால் வராமலும்  இருக்கலாம். இது அவரவர் உடல் வாக்கைப் பொறுத்தது. ஆனால், எனக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணிகளில், இந்த காஃபி போடும் விபரங்களை பல விதங்களில் ஒரு குற்றப் பத்திரிக்கையாக என் முன்னே வைத்து பரிசீலனை செய்யும் போது நிஜமாகவே எனக்கு தலைச் சுற்றத்தான் செய்கிறது.:)) )

நாங்கள் பிறந்து வளர்ந்த  அந்தக்காலத்தில் காஃபியுடன் வேறு பல சத்துள்ள பானங்கள் என வரிசையாக வந்து விட்டாலும், பொருளாதார வசதி காரணமாக, எங்கள் அம்மா வீட்டில் எங்களுக்கு காஃபி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அது இத்தனை ஆண்டுகளாக தொடர்வதால், அதை முற்றிலும் நிறுத்தவும் இயலவில்லை. இன்று வரை ஒரு நாளைக்கு சில சமயம் காலை மட்டுமாவது ஒரு தடவையேனும் இந்தக் காஃபிக்கு அடிமையாகிறேன்.

திருமணமானவுடன், புகுந்த வீட்டில்,எல்லோரும் சேர்ந்திருக்கையில் (கூட்டுக் குடும்பம்) எனக்கு மட்டும் மூன்றாம், நான்காம் தடவையாக பில்டரில் விட்டு இறக்கிய காஃபி காலை, மாலை என முதல் தடவையாக கிடைத்தது. (முதல், இரண்டாவது எல்லாம்  பெரியவர்கள்தான் குடிக்க வேண்டும் என்ற தீர்மானம் அந்த வீட்டில் இருந்ததும், நான் அப்போது அவர்களை விட மிக,மிகச்சிறியவள் என்பதும் அந்தப் 19 ஆவது வயதில் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. :)) ) அப்போதாவது இந்த மேற்படி பானத்தை ஒரேடியாக வெறுத்து ஒதுக்கி கை கழுவி விட்டிருக்கலாம். (அந்த காஃபியே ஒரு கை கழுவும் தண்ணீராகத்தான் இருந்தது. ஹா ஹா ஹா.) விபரம் தெரிந்த நாளிலிருந்து அம்மா வீட்டில் நல்ல காஃபியை குடித்து விட்டு இங்கு மாறுபடும் போது நாக்கு வித்தியாசத்தை காட்டியது. ஆனால், ஒருவரின் மனது நோக ஒரு சொல் சொல்வதும், ஒரு உணவுப் பொருளை வேண்டாமென்று மறுக்கவும், ஒதுக்கவும் தெரியாத மனது என்னுடையது. இதுவரை அப்படியேதான் இருக்கிறேன். தொட்டில் பழக்கம் கட்டை வேகும் வரை மாறாதது என்பது உண்மைதானே..!

அது என்னவோ காஃபியைப்பற்றி கூறும் போது இந்தப்பாடலும் நினைவுக்குள் வந்து விடுகிறது. 

"காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி. அது கையில் கிடைத்த பின்னும் துடிக்கிது ஆவி." என்ற பாடலை மறக்க முடியுமா? 



(என்னவோ போங்கள்.. இந்த காஃபியைப்பற்றி இப்படி அலச வேண்டுமென ஒரு காஃபி அருந்தும் வேளையில் எனக்கு தோன்றியது பாருங்கள். இது அந்த காஃபிக்கு வந்த சோதனையா? இல்லை பெருமையா?தெரியவில்லை. ஆனால், காஃபி அருந்துபவர்களின் மனதில் வரும் கருத்துக்களுக்கும், இல்லை அருந்தாதவர்களின் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களுக்கும், இந்தப் பதிவு ஒரு பாலமாக இருக்கும்.:))  ) 

உங்கள் அன்பான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.அதற்கு நான் என்  கைப்பேசியிலேயே பதில் கருத்துக்கள் தருவதால் கொஞ்சம் தாமதமாகிறது. அதற்காக அனைவரும் மன்னிக்கவும் இருப்பினும் அன்புடன் உடனே வந்து கருத்துக்கள் பகிர்வோர்க்கு என் பணிவான நன்றிகள் . 🙏.