Friday, December 10, 2021

சாலையும், ஞானமும்.

 


1.) குடியிருப்பு  வசதிகளாக

குடியேற இருப்பிடங்கள்

குறைவற இருப்பினும், 

மக்கள் எவரும் 

பாதையாகவேனும்

பாவித்து பயணிக்காத 

சாலையின் வெறுமை

மனதிலும் வெறுப்பேற்றி

மடியாமல் நடை போடுகிறது.. ... 

###################################

2.) சாலை  வெறுமை  என்ற 

இந்த கண்ணாடியில்

மனதில் கலந்து விட்ட

வேதனைகளின் கனத்த  

பிம்பங்கள் ஏனோ 

பிரதி தினமும் இங்கு

பிழையின்றி பிரதிபலிக்கின்றன.... 

###################################

3.) கெளதம புத்தருக்கு  

போதி மரத்தடியில்

ஞானம் கற்பித்து 

தனக்கு இணையாக்கிய 

இறைவன் மனமிறங்கி

இந்த சாலை சூன்யத்தில்

சற்றே அஞ்ஞானமகற்றி 

அந்த ஞானமென்ற

சூட்சுமத்தை  நமக்கும் 

பட்சமாக கற்பித்தால்,

புத்தரின் பாதத்தில் 

அவரை விரும்பியபடி 

வீற்றிருக்கும் ஒரிரு

தூசி துகள்களில், 

ஒரு துகளுக்கு கண்டிப்பாக

நாமும் இணையாகலாம்.....

###################################

4.) மரங்கள் அடர்ந்திருந்த போது 

மக்களுக்கு நிழலாக, 

மண்ணிற்கு அரவணைப்பாக, 

மலர்களுக்கு பிறப்பிடமாக, 

மகிழ்வின் கீதமிசைத்து கொண்டு  

தன் மனதின் இனிமையோடு 

அதன் அவசர மடிவையும் 

அதி விரைவிலேயே 

சந்திக்காது இருந்திருக்கும். 

ஆனால், தனித்துவமான

வீடுகளின்  உதயத்திற்காக, 

விதி செய்யும் சதிக்காக, 

மட்டற்ற மரங்களை பலி தந்தும், 

மக்களின் வேண்டுதல்கள்

பரிபூரணமாகாத அதிருப்தியிலும்

பிற பட்டுப்போன  மரங்களும் 

பார்த்துப் பதறாத 

பரவச பார்வையிலும். 

பூத்துக் குலுங்கும் ஏனைய

மற்ற மரங்களும் மண்ணோடு

மண்ணாக இங்கு மடிந்து 

மக்கிப் போயிருக்கின்றன..... 

###################################

இதற்கு முன் இங்கு வந்த போது கட்டுமானங்கள் இல்லாத இந்த வெறும்  இடங்களில், சாலைகளில்  பறவைகளும், கால்நடைகளுமாக பறந்து / நடந்து  மகிழ்ந்திருந்ததை  ரசித்திருக்கிறேன். ஒரு வருட இடைவெளிக்குப் பின் நிறைய கட்டிடங்கள் இங்கு முளைத்திருந்த போதும், இந்த வெறிச்சென்ற சாலையை கண்டதும் என் கைப் பேசியில் படமெடுத்து விட்டேன். படத்தை எடுத்துப் பார்த்ததும் நாலு வரி எழுத வேண்டுமென என்னுள் உதயமான வார்த்தைகள் அந்த கட்டிடங்களின் சிமிண்ட் கற்களைப் போல சேர்ந்தெழுந்து வரிசையாக நின்று கொண்டன.  படம் குறித்த கவிதையை போலான (இந்த இடத்தில் சிறப்பான வார்த்தைகளுடன் சரளமாக கவிதைகளை புனையும் சகோதரர்கள் ஸ்ரீ ராம் அவர்களும், துரைசெல்வராஜ் அவர்களும் என் ஒழுங்கற்ற வார்த்தை கோர்வைகளுக்கு  மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.) வரிகள் உங்களுக்கும் ஏதோ  பிடித்திருக்குமென நினைக்கிறேன். படித்து கருத்திடும் நட்புறவுகளுக்கு என் பணிவான நன்றிகள்.. 🙏.

 இதை எழுதி வைத்து விட்டேனே தவிர  பல மாதங்களாக வெளியிடும் எண்ணமே வரவில்லை. ஆனால் எ. பியில் சென்ற வெள்ளியன்று  பகிர்ந்த  பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கர்ணன் படப்பாடல் என் மன நிலையை மாற்றி விட்டது.  

"என்னையே சரண் என்று நீ முழுமையாக நம்பி விட்டால், உன்னுடையது என இந்த உலகில் எதுவுமில்லை" என்ற கீதாசாரம் மிகுந்த அந்த பாடலில், மன்னரும் நானே மக்களும் நானே. . மரம் செடி கொடியும் நானே... சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்...துணிந்து நில் தர்மம் வாழ... என்ற வரிகளினாலும்,  காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க... என்று தன் கடமையைை செய்ய அர்ஜுனனுக்கு போதிக்கப்படும்  இறுதி வரிகளினாலும்  இந்தப் பதிவு  தைரியமாக இன்று அரங்கேறுகிறது. "இன்றிருப்பார் நாளையில்லை" என்ற ஞான விளக்கங்களும் பக்க வாத்தியங்களாக உடனிருந்து இதை அரங்கேற செய்துள்ளது. எல்லாம் அவன் செயல். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம். 🙏.

41 comments:

  1. அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

    வருட கடைசியில் ஒரிரு பதிவுகளையாவது என் வலைப்பக்கத்தில் சேர்க்க வேண்டும் என நான் ஆசைப்பட்டும், சென்ற வெள்ளியே இதை பதிவிட நினைத்தும் (எதுவும் நம் செயலில் இல்லை என்பதினால்) இயலாமல் போய் விட்டது.வந்த வாரத்தில் என் கைப்பேசியும் ஏதேதோ சில தொந்தரவுகள் தந்ததினால்,கடந்த வெள்ளியன்று வெளியிட நினைத்த இப்பதிவு தாமதமாகி வரும் நாளைய வெள்ளி முளைப்பதற்குள்,இறைவனின் விருப்பத்தில் உங்களின் பார்வையாகி இருக்கிறது. பார்வையிடும் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.🙏.

    என் கைப்பேசி உதவியின்மையினால், பார்வையிட்டு நீங்கள் தரும் கருத்துகளுக்கு பதில் அளிக்க சற்று தாமதமானாலும் அனைவரும் மன்னிக்கும்படியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. "இங்கு வந்தபோது"  

    எங்கு வந்தபோது?  எங்கிருந்து?  அதையும் சொல்லி இருக்கலாமே..  காடுகளை அழித்து கான்க்ரீட் காடுகளாக்கிக் கொண்டிருக்கிறோம்.  இயற்கையை பாழ்படுத்தும் அந்த அன்னையின் சீற்றம் பின்னர் நம்மை பாதிக்கும்.  ஆனால் பெருகிவரும் மக்கள் தொகையில் மனிதன் வசிப்பிடம் தேடி அலைகிறான்.  என்ன செய்ய..  இதுவும் விதியே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் உடனடியாக முதலில் வருகை தந்து பதிவை படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      எங்கள் மகனின் இல்லந்தான்.. ஜனவரியிலேயே இங்கு வந்ததுடன் நெட் வசதி பெறவில்லை.. மகளின் செல்லில் இருந்து நெட் கடன் வாங்கி பதிவுக்கு வருகிறேன் என ஒரு பதிவிட்டும் இருந்தேனே.. அப்போது பார்த்த காட்சிகள்தான் இது. இப்போது நிறைய மாற்றங்களுடன் பல பல வீடுகள் உதயமாகி விட்டன.

      /காடுகளை அழித்து கான்க்ரீட் காடுகளாக்கிக் கொண்டிருக்கிறோம்./

      ஆம் உண்மை. என்ன செய்வது? ஜனத்தொகை பெருகி விட்டது. கூட்டுக் குடும்பங்கள் அருகி விட்டது. அதன் விளைவுதான் இது.

      அருமையான கருத்துக்கள் தந்த தங்களுக்கு என் அன்பான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கவிதைகள் நான்குமே அற்புதம்.  மனதின் உணர்வுகளை படம்பிடித்துக் காட்டுகிறது.  கூடக்கூட அந்த பொருளை உள்வாங்கி கொண்டு நானும் யோசித்துக் கொண்டே வந்தேன்.  இவ்வளவு பெரிதாக நமக்கு எழுதத் தோன்றுவதில்லையே என்று யோசித்துக் கொண்டே கீழே வந்தால் என் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..    நீங்கள் வெகு நன்றாய் எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதைகள் நன்றாக உள்ளது என்ற தங்களின் பாராட்டுகளுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      இருப்பினும் தங்களைப் போல சுருக்கமாக சொல்லும் கலையில் நான் இன்னுமும் தேர்ச்சி பெறவில்லை. என்றே நினைக்கிறேன். உங்கள் கவிதைகள் ரத்தின சுருக்கத்துடன் அழகு. அதனால்தான் வியாழன்தோறும் நான் உங்கள் கவிதைகளைத்தான் முதலில் விரும்பி படிப்பேன்.கவிதைகள் இடம் பெறாத அன்று ஏமாற்றமும் அடைவேன்.

      தங்களின் பெருந்தன்மையினால் என்னை ஊக்குவித்து சொன்ன உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. சில மாற்றங்களை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. சில மாற்றங்கள் மனதில் அதிர்வை தருகின்றன. இது இரண்டாம் வகை. ஆனால் ஒன்று, மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது.

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் ஒன்றே மாறாதது.

      Jayakumar

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /சில மாற்றங்களை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது சில மாற்றங்கள் மனதில் அதிர்வை தருகின்றன.. / உண்மை. தீடிரென ஏற்படும் சில மாற்றங்களை, அதுதான் நிதர்சனம் எனப் புரிந்த போதும் எளிதில் ஜீரணிக்க இயலவில்லை.

      அழகாக சொல்லி உள்ளீர்கள். தங்களின் தெளிவான கருத்துக்களுக்கு என் அன்பான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் ஜெயக்குமார் சகோதரரே.

      உண்மைதான். "மாற்றம் ஒன்றே மாறாதது.." அழகாக தெளிவாக சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. பார்த்துவிட்டேன்... பிறகுதான் வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவுக்கு கருத்திட உங்களுக்கு சௌகரியபடும் போது எப்போது வேண்டுமானாலும் வாருங்கள்.ஆனால் விரைவிலேயே வந்து நல்ல கருத்துக்களை தந்துள்ளீர்கள். உங்களின் இந்த நல்ல செய்கைக்கு நான் தலை தாழ்த்தி வணங்கிக் கொள்கிறேன். என்னால்தான் உடனே வந்து உங்களனைவரின் கருத்துகளுக்கு பதில்கள் தர முடியவில்லை. எப்படியோ தாமதமாகிறது. உங்களனைவரின் அன்பு உள்ளங்களுக்கு எப்போதும் என் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. எங்கள் வளாகத்தில் மயில், செம்போத்துப் பறவைகள் அடிக்கடி வரும்.

    அந்த இடத்திலும் இப்போது ஒரு அடுக்குமாடி எழுகிறது.

    மரங்களை வெட்டினால் வம்பு என்று கிளைகளை வெட்டி முடிவில் மரத்தையே காணாமல்போக்கடித்துவிடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      வளாகத்திற்குள்ளேயே மயில் செம்போத்து பறவைகளா? ஓ.. அடிக்கடி அவைகளை கண்டு ரசிக்கலாம்.

      ஆமாம்.. இப்போது எங்கு பார்த்தாலும் அடுக்கு மாடி கட்டிடங்கள்தான் உருவாகி வருகின்றன.

      கிளைகளை வெட்டி வெட்டியே முடிவில் மரங்களை வெட்டி நாளடைவில் அதன் இருப்பிடங்கள் மக்களின் வாசஸ்தலம் ஆகி விடுகிறது. ஒன்றும் சொல்வதற்கில்லை. நாம் தற்சமயம் குடியிருக்கும் குடியிருப்புகள் எத்தனை மரங்களை வளர்த்துள்ளதோ எனவும் நினைக்க தோன்றுகிறது. உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கட்டிடங்கள் கட்டிக்கொண்டிருக்கும் இடங்கள் தவிர வெகு வெகு அபூர்வமாகவே, அதிலும் லாக்டவுன் சமயத்தில்தான் போக்குவரத்து இல்லாத சாலைகளைப் பார்த்திருக்கிறேன்.

    கவிதைகள் நன்று

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இங்கு ஒரு வருடம் கழித்து லாக்டவுன் முடியும் தறுவாயில் நான் வரும் போது கட்டிடங்கள் கட்டிக் கொண்டிருந்தார்கள். லாக்டவுன் காலத்திலும் அது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. இப்பவும் நான் பார்த்த இடத்தில் இன்னமும் நிறைய புது வீடுகள் கட்டியாகி விட்டது. மே மாதம் என் ஒரே அண்ணாவின் பிரிவு மனதை மிகவும் கஸ்டப்படுத்தியது. அப்போது லாகடவுனாகையால், என்னால் தி.லிக்கு செல்லக்கூட முடியவில்லை. பொதுவாக வருத்தங்கள் வரும் போது வேதாந்த எண்ணங்கள் மேலோங்குவது மனித இயல்பு. என்னவோ அன்று வெறிச்சென்ற சாலையை பார்த்ததும் மனதில் எனக்கு தோன்றியதை எழுதி வைத்து விட்டேன்.

      கவிதைகள் நன்றாக உள்ளது எனக் கூறியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. மரங்கள் மட்டுமா மடிகின்றன? பழைய காலத்தில் பார்த்துப் பார்த்துக் கட்டின பங்களாக்களும்தான்.

    இன்றைக்குக் கொண்டாடப்படும் இடங்கள், பொருட்கள் காலத்தால் மதிப்பில்லாமல் கடாசிவிடப்படுகின்றன, வெகு முதிர்ந்த நிலையில் இருப்பவர்களில் சிலரைப்போல. வருத்தம்தான் மிஞ்சும்...இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /மரங்கள் மட்டுமா மடிகின்றன? பழைய காலத்தில் பார்த்துப் பார்த்துக் கட்டின பங்களாக்களும்தான்./

      உண்மைதான்... தங்கள் முன்னோர்களின் சொத்து என்பதை விட அவர்களின் நினைவுகளை கூட அலட்சியப்படுத்தும் அவர்களுடைய உறவுகளின் உதாசீனங்கள் வருத்தத்துக்குரியதுதான். தங்களின் நல்ல கருத்து பரிமாற்றங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. கமலாக்கா கவிதைகள் நான்குமே அட்டகாசம். ரொம்ப நன்றாக என் மனதிலும் ஓடும் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்க்கிறீர்கள்.

    அதுவும் சமீபத்தில் ஊருக்குச் சென்று வந்த தாக்கமே இன்னும் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.

    எத்தனையோ பழமையான வீடுகளே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த வீடுகள் இப்போது அதில் குடியிருக்க ஆட்களின்றி ரியல் எஸ்டேட் கைகளில் சிக்கி அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறி மனிதனின் மனம் சுருங்குவதையும் பிரதிபலிக்கின்றது. இதை என் இப்போதைய தண்ணீர் பற்றிய பதிவில் எழுதியிருக்கிறேன் இனிதான் வரும் என்றாலும் இங்கும் உங்கள் வரிகளைக் கண்டதும் பதிந்துவிட்டேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /அதுவும் சமீபத்தில் ஊருக்குச் சென்று வந்த தாக்கமே இன்னும் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.

      எத்தனையோ பழமையான வீடுகளே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த வீடுகள் இப்போது அதில் குடியிருக்க ஆட்களின்றி ரியல் எஸ்டேட் கைகளில் சிக்கி அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறி மனிதனின் மனம் சுருங்குவதையும் பிரதிபலிக்கின்றது./

      உண்மைதான்.இப்போதெல்லாம் மனிதன் தன் நலன்களை மட்டுமே பார்த்து அதில் வரும் ஆனந்தம் என்ற சுவாசத்தை மட்டுமே சுவாசிக்க ஆசைப்படுகிறான். காலம் மாறி விட்டதா? இல்லை, காலங்கள் அவனை மாற்றி விட்டதா? இல்லை காலங்களை இவன் தனக்கு சாதகமாய் மாற்றிக் கொண்டு விட்டானா என கணிக்க முடியவில்லை. இதன் முடிவு முதியோர் இல்லங்கள் ஆங்காங்கே வலுக்கட்டாயமாக உருவாகி விட்டன என்பது மட்டும் புரிகிறது. மனது மிகவும் வலிக்கும் விஷயம் இது. உங்களின் அருமையான எழுத்திலும், உங்கள் எண்ணங்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். தங்களின் அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. இன்னும் சில வருது...ஆனால் பதிவில் எழுதியிருப்பதால் இங்கு குறைத்துக் கொள்கிறேன் கமலாக்கா.

    வரிகள் எல்லாமே நீங்கள் கவிதையாகக் கொடுத்திருப்பதை நான் பதிவில் வரிகளாக எழுதியிருக்கிறேன். இப்படியே அல்ல ஆனால் இதே பொருளுடன்.

    நீங்கள் மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் கமலாக்கா உங்கள் திறமை வியக்க வைக்கிறது. கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என்று கலக்கறீங்க!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்களும் இவ்விதம் உங்கள் பதிவில் எழுதியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. விரைவில் உங்கள் பதிவை படிக்க வேண்டும் போல் உள்ளது.

      நானெல்லாம் உங்கள் அளவுக்கு திறமைசாலி இல்லை சகோதரி. ஏதோ என் மனதிற்கு வந்ததை பிதற்றுகிறேன். அதையும் நன்றாக உள்ளதென நீங்களனைவரும் பாராட்டும் போது. என் மனம் உண்மையிலேயே சந்தோஷமடைகிறது. அதையும் சொல்லிக் கொள்ள பிரியப்படுகிறேன். உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் என் எழுதும் வேட்கையை அதிகப்படுத்துகிறது. உங்களுக்கு மிகவும் மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. உங்கள் மன ஓட்டங்களைக் கவிதையாக வடித்திருப்பது அழகாக இருக்கிறது. அர்த்தமுள்ள கவிதைகள். இயற்கையை முற்றிலும் அழிக்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கோம். ஆனாலும் அது நம்மையும் மீறிச் சில இடங்களில் பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. கடைசியில் அது தான் ஜெயிக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நலமாக உள்ளீர்களா? பதிவு அருமையென சொன்னதற்கு என் மனம் நிறைந்த நன்றிகள். உண்மைதான்.. இயற்கையை நாம் எவ்வளவு அழிக்க போராடினாலும், இயற்கைக்கு ஒரு நாளும் தோல்வி என்பதே இல்லை. அவை நின்று ஜெயிக்கும். நல்லதோர் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. இங்கேயும் மயில் அடிக்கடி வருகிறது. வரும். செம்போத்துக்கள் மதிய வேளையில் ஜன்னலில் அமர்ந்த வண்ணம் கூவிக் கொண்டிருக்கும். கோகி,கோகி என அழைப்பது போல் இருக்கும். நல்லவேளையாகப் பக்கத்தில் ஒரு தோப்பு இருப்பதால் அவற்றுக்குத் தங்க இடம் இருக்கிறது. அதுவானும் அழிக்காமல் காப்பாற்றப்பட வேண்டும். எனினும் அவற்றை எங்க வீட்டிலிருந்து படம் எடுக்க முடியாது. பறவைகளின் கானங்களைக் கேட்டு ரசிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கோகி,கோகி என அழைப்பது போல் இருக்கும். நல்லவேளையாகப் பக்கத்தில் ஒரு தோப்பு இருப்பதால் அவற்றுக்குத் தங்க இடம் இருக்கிறது. அதுவானும் அழிக்காமல் காப்பாற்றப்பட வேண்டும்./

      உங்களுக்கு என்னவொரு அழகான ரசனை..பறவையின் குரலிலும் பெயர் அர்த்தங்களை கண்டு பிடித்து ரசிக்கிறீர்கள். ஆமாம்.. அதன் தங்குமிடங்காகிய மரங்கள் அழிக்கப்படாமல் இருக்க வேண்டும். அதன் பின் இந்த பறவைகளுக்கும் புகலிடம் ஏது? பாவம் அவைகள். நம்மை நம்பிக் கொண்டு இருக்கின்றன.

      தங்கள் அருமையான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. கவிதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    முன்பு பார்த்த இடங்கள் இப்போது மாறி விடுவது உண்டு.

    //மக்கள் எவரும்

    பாதையாகவேனும்

    பாவித்து பயணிக்காத

    சாலையின் வெறுமை//

    மக்களின் வரத்து இல்லாமல், சாலையின் வெறுமை பார்க்க நன்றாக இருக்காது. இங்கு குளிர் இல்லா நாளில் தங்கள் செல்ல நாய்களை அழைத்துக் கொண்டு இரண்டு முதியவர்கள் என்னைப்பார்த்து கை அசைத்து விட்டு நடைபயிற்சி செய்து செல்வார்கள், குளிர் அதிகமானதும் அவர்களின் வரவு இல்லை. ஜன்னல் வழியே நான் பார்க்கிறேன் இப்போது அந்த வெறுமையான தடத்தை.

    மரங்கள் வெட்டபடும் போது அங்கு வாழ்ந்த பறவைகள் வேறு இடம் தேடி போய் விட்டால் அவைகளின் கீதங்கள் இல்லையென்றாலும் வெறுமை ஏற்படும்.


    ஒரு வருடம் ஆக போகிறது , நான் இங்கு வந்து மதுரைக்கு போனால் இப்போது எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. இரண்டு பக்கமும் காடாக இருந்த இடங்களில் பறவைகளின் இன்னிசை கேட்டுக் கொண்டே இருக்கும். வித வித பறவைகளை பார்க்கலாம்.

    அவை அழிக்கப்பட்டு வீடுகள் வந்து இருந்தால் பறவைகளின் ஒலி இல்லாமல் வெறுமை ஏற்படும்.

    நான் உணர்ந்த வெறுமைகளை கவி ஆக்க தெரியவில்லை எனக்கு, உங்களுக்கு கவிதை சட்டென்று வருகிறது.
    பாராட்டுக்கள். எழுத நினைத்த போது எழுதி வையுங்கள், பகிர முடிந்த நேரத்தில் பகிர்ந்து விடுங்கள்.


    உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன்.








    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையை ரசித்து பாராட்டியதற்கும் மிக்க நன்றிகள்.

      /இங்கு குளிர் இல்லா நாளில் தங்கள் செல்ல நாய்களை அழைத்துக் கொண்டு இரண்டு முதியவர்கள் என்னைப்பார்த்து கை அசைத்து விட்டு நடைபயிற்சி செய்து செல்வார்கள், குளிர் அதிகமானதும் அவர்களின் வரவு இல்லை. ஜன்னல் வழியே நான் பார்க்கிறேன் இப்போது அந்த வெறுமையான தடத்தை/

      ஆமாம். வயது முதிர்ந்தவர்களின் வழக்கமான நடைப்பயிற்சி,அவர்களின் அன்பான பார்வைகள் என நட்பாக அவர்களுடன் பழகி விட்ட பின் அவர்கள் அந்த நேரத்தில் வரவில்லையென்றால் நம் விழிகள் அவர்களை இயல்பாக தேடுமே..

      /ஒரு வருடம் ஆக போகிறது , நான் இங்கு வந்து மதுரைக்கு போனால் இப்போது எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. இரண்டு பக்கமும் காடாக இருந்த இடங்களில் பறவைகளின் இன்னிசை கேட்டுக் கொண்டே இருக்கும். வித வித பறவைகளை பார்க்கலாம்.

      அவை அழிக்கப்பட்டு வீடுகள் வந்து இருந்தால் பறவைகளின் ஒலி இல்லாமல் வெறுமை ஏற்படும்./

      உண்மைதான். நீங்கள் ஒரு பறவைகளின் நேசர். அங்கிருக்கும் போது எத்தனைப் பறவைகள் உங்களை நாடி வந்து உணவு, நீர் அருந்தி விட்டு. சென்றிருக்கிறது. நீங்களும் எங்களுடன் அவற்றை பகிர்ந்திருக்கிறீர்கள். அவைகள் எங்கிருந்தாலும் உங்களை நினைவாக தேடிக் கொண்டேயிருக்கும். என் பதிவினால் நீங்களும் அவற்றின் நினைவுகளில் ஆழ்ந்திருப்பீர்கள். நீங்கள் மதுரை செல்லும் போது உங்கள் அன்பான குரல் கேட்டு அந்த பறவைகள் உங்களைத் தேடி வந்து விடும்.

      உங்களின் அன்பான கருத்துகளுக்கும், பாராட்டுகளுக்கும்,மிக்க மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. கவிதை வரிகள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது சகோ தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதை நன்றாக உள்ளதென கூறியமைக்கு மிக்க நன்றிகள் சகோ. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துகள் கண்டு மகிழ்வடைந்தேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. கவி வரிகள் அனைத்தும் அருமை... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதை அருமையாக உள்ளதென கூறியமைக்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      உங்கள் ஊக்கம் நிறைந்த வார்த்தைகளுக்கும், வாழ்த்திற்கும் என் அன்பான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. சாலையின் வெறுமை மரங்களின் நிழலால் மாறும்போது மனிதர்களும் பறவைகளும் தானே வருவர்.

    புத்தர் ஆக "புத்தர்" (புதிய ஞானம் பெற்றவர்) ஆக வேண்டும். அது ஏ சி ரூமிலும் கிடைக்கலாம்.

    பிறப்பு என்பது இறப்பதற்கே, தோன்றுவது மறைவத்திற்கே என்று உணர்ந்தால் மரங்கள் மடிந்தமைக்கு துயரம் கொள்ளத் தோன்றாது.  (கடைசி கவிதை).

    எதுவும் நிரந்தர தோற்றம் உடையவை அல்ல. தோற்றங்கள் மாறுகின்றனவே அன்றி எதுவும் அழிவதில்லை. 

    உள்ளத்தில் பொங்கியதை உடனே வெளிப்படுத்தியது நன்று. 

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /சாலையின் வெறுமை மரங்களின் நிழலால் மாறும்போது மனிதர்களும் பறவைகளும் தானே வருவர்./

      உண்மை.. வெறுமைக்கு காரணமே மக்கள்தான். மீண்டும் மக்கள் மனம் மாறி நிழல் தரும் மரங்களை உண்டாக்கினால் மகிழ்ச்சியே..

      தங்கள் கருத்து உண்மைதான்.. ஞானம் என்பது எந்தப் பிறவியில் எப்படி கிடைக்க வேண்டும் என்பதை இறைவன்தான் நிர்ணயிக்க வேண்டும். அடுத்தப் பிறவியில் அதை வேண்டி மனிதன் நினைப்பதை "அவனும்" விரும்புவான்.

      /எதுவும் நிரந்தர தோற்றம் உடையவை அல்ல. தோற்றங்கள் மாறுகின்றனவே அன்றி எதுவும் அழிவதில்லை./

      உண்மைதான். அழிபவை அனைத்தும் "அவனுள்"தான் அடங்குகிறது. ஆக்கமும் அவனால்தான். அழித்தலும் அவன் செயல்தான். புறக்கண்களின் ஊடேதான் இந்த உலகத்தின் வேறுபாடுகள் நம்மை,நம் மனதை சலனபடுத்தி அலைக்கழிக்கிறது.

      கவிதைகளை ரசித்தமைக்கும், தங்களின் ஊக்கம் நிறைந்த கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. உங்களின் உணர்வுகளைக் கவிதைகளாக்கியது நன்று. சிறப்பாக இருக்கிறது. எனக்குக் கவிதைகள் என்பது எட்டாக் கனி. நீங்கள் சொல்லியிருப்பது போல் ஸ்ரீராம்ஜி மற்றும் துரை செல்வராஜு ஸாரும் மிக நன்றாக எழுதக் கூடியவர்கள். நீங்களும் அந்தப் பட்டியலில் இடம் பெறுகிறீர்கள்!

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நலமாக உள்ளீர்களா? கவிதைகள் சிறப்பாக இருக்கிறது என பாராட்டியமை கண்டு மனம் மகிழ்ந்தேன். எனினும் என் கவிதைகள் அத்தனை சிறப்பான தில்லை. ஏதோ மனதில் பட்டதை கோர்வையில்லாமல் எழுதுகிறோனோ என்றுதான் எப்போதும் எனக்குத் தோன்றும். சகோதரர்கள் ஸ்ரீராம், துரை செல்வராஜ் அவர்களுடன் என்னை ஒப்பிட்டு கூற நான் தகுதியில்லாதவள் என்றுதான் நினைக்கிறேன். அவர்களின் கவிதைகள் என்றுமே சிறப்பானவை. தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. வாழ்க நலம்..

    வெகு நாட்களுக்குப் பின் வருகின்றேன்.. குவைத்தில் இருந்து தாயகத்திற்குத் திரும்பி - சில நாட்கள் ஆகின்றன.. இன்னும் முழுமையாக இணையம் பெற வில்லை..

    அதிலும் கால சூழ்நிலை.. அவ்வப்போது தஞ்சையில் மழைத் தூறல்.. எல்லாம் சரியாக இன்னும் ஒரு வாரம் ஆகலாம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் காலநிலைகளை உணர்ந்து கொண்டேன். தாங்கள் நலமுடன் தாயகம் திரும்பி உங்கள் குடும்பத்தாருடன் மகிழ்வாக இருப்பதை கண்டு சந்தோஷமடைகிறேன். உடன் வலைத்தளம் வந்து இந்த பதிவுக்கு வந்து நல்லதொரு கருத்துரைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியும் அடைகிறேன். நான்தான் தாமதமாக பதில் தருகிறேன். மன்னிக்கவும். மிகவும் நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. இன்றைய காலகட்டத்தில் அருமையான பதிவு..

    மனக்குமுறலை அப்படியே கொட்டித் தீர்த்திருக்கின்றீர்கள்..

    நேற்று இருந்தார்..
    - எனும் திருக்குறளை இன்றைய
    இயற்கைக்கும் நினைவில் கொள்ள வேண்டியது தான்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்துப் படித்து தந்த நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

      /நேற்று இருந்தார்..
      - எனும் திருக்குறளை இன்றைய
      இயற்கைக்கும் நினைவில் கொள்ள வேண்டியது தான்../

      உண்மைதான்.. மரம்,செடி,கொடி களுக்கும், ஏன் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் இதே நிலைதான். மாற்ற முடியாத முடிவுகள். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. உங்களுடைய பதிவை முன்னரே படிக்க விட்டேன். ஆனாலும் அருமை என்று ஒரே வரியில் எழுதவும் விருப்பமில்லை, உங்களைப்போல் விரிவாக எழுதவும் தெரியவில்லை. அதனால் கருத்திடாமல் ஒத்திப்போட்டேன். நகர விரிவாக்கம் என்ற பெயரில் வெரிச்சிடும் சாலைகள் பற்றி நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் பதிவை படித்த பின் எப்படி வேண்டுமானாலும் கருத்துரைகள் தரலாமே...! நான் எப்போதுமே பதிவிலும் சரி, கருத்துரைகளிலும் சரி, கொஞ்சம் அதிகப்படியான நீளங்களாகத்தான் தருகிறேன்.:) உங்களைப் போல் ரத்தன சுருக்கமாக, ஆனால், கருத்தாழமாக எதையும் பதிவிட தெரியவில்லை. உங்கள் அன்பான கருத்துக்கும். பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ரொம்பவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete