Friday, August 15, 2025

நாங்களே எங்களைப் பற்றி...!

 முருகா.. முத்துக்குமரா.. வேலவா... 

இந்த வருடம் ஆடி மாதத்தில் மிகவும் விஷேடமாக இரண்டு கிருத்திகை நட்சத்திரம் வந்திருக்கிறது இரண்டிலுமே முருகப்பெருமானின் கோவில்களில் பக்தர்கள் அபிஷேகம், ஆராதனை, காவடிகள் எடுப்பதென பூஜைகள் செய்து, விரதமிருந்து  கொண்டாடி வருகின்றனர்.ஒரு சில பிரபல  கோவில்களில் மாதத்தின் முதலில் வந்த கிருத்திகையன்றும், சில பிரபல கோவில்களில் நாளையும் என பக்தர்கள் பக்தியுடன் முருகனை போற்றித் துதித்து  கொண்டாடுகின்றனர். 

மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரமே நம் முருகனுக்கு உகந்த நாள் என்றால், ஆடி மாதமும், தை மாதமும் வரும் கிருத்திகை மிகச்சிறந்தது என அனைவரும் அறிந்ததே..! தமிழ் வருட முதலில் வரும் ஆடி மாதத்தில் ஆடிக்கிருத்திகை தட்சிணாயண புண்யகாலத்தில் வருகிறதென்றால் மற்றொன்று தைக்கிருத்திகை உத்திராயண புண்யகாலத்தில் தை மாதத்தில் வருகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. 

சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் சரவண பொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின. இந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முருகப் பெருமானை வளர்த்தெடுத்ததால் சிவ பெருமான் இவர்கள் ஆறு பேரையும் சிறப்பிக்கும் விதமாக அவர்களை கார்த்திகை நட்சத்திரமாகவும், அன்றைய நாள் முருகனுக்குரிய விரதமாக போற்றப்படவும் வரமளித்தார். அதனால் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனை வேண்டிய விரதம் இருந்தால் கார்த்திகை பெண்களின் அருளாளும், முருகப் பெருமானின் அருளாளும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.



ஆறுமுகமும், அழகிய விழிகளும், நீண்ட புருவமும், நீறிடும் நெற்றியும், பன்னிரு கண்களும், பரந்த தோள்களும், பவளச் செவ்வாயும் பார்த்தால், பார்த்த உங்களின் பார்வையை அகற்றத் தோன்றாமல், இருக்கச் செய்யும் முருகப் பெருமானாகிய நான். ..! 
முருகன் என்றால் அழகன் என்ற மறு சொல்லும் எனக்குண்டு. அந்த அழகில் மயங்கி என்னை நாடி வரும் உங்களை நிலைத் தடுமாறி விடாமல் அணைத்துக் கொள்வதே என் தந்தை, தாய், நான் தோன்றிய நாள் தொட்டு எனக்கிட்ட கட்டளை. அதன்படி நான் நித்தமும் செயலாற்றி வருகிறேன். 


எங்கள் இறைவனின் கையிலிருக்கும் வீரம் மிகும் வேலும் மயிலாகிய நாங்களும் உங்களுக்கு என்றுமே துணையென  இருப்போம். வாருங்கள்..! அந்த கந்த வேளின், அவர் கையில் நிரந்திர வாசம் செய்யும் வேலோடு தரிசனம் பெறலாம். அதற்காகத்தான்,  இந்த வரவேற்புக்காகத்தான் கோவிலின் வாசலிலேயே நாங்கள் தினமும்  காத்திருக்கிறோம். 


இதோ..! கோவிலுக்கு முன்பாக முகஸ்துதி கூறி, வரவேற்ற என் தம்பியின் வாகனமான  மயில்களை கடந்து பல படிகள் ஏறி  வந்ததும் நான்தான் பஞ்சமுக கணபதி என்ற பெயருடன் இங்கே குடிக் கொண்டுள்ளேன். என் தம்பி கந்தனுக்கு நான் எப்போதுமே ஒரு பக்கபலம். அவனை நாடி, தேடி வரும் பக்தர்கள் என்னைத்தான் முதலில் வழிபட வேண்டுமென்பது அவன் விருப்பம். அவன் சொல்லுக்கு மறுப்பேதும் சொல்லாதபடிக்கு என்னை அவனது  அன்பினால் கட்டி வைத்திருக்கும் ஆசைமிகும் தம்பி அவன். அவனுக்காக இங்கு நான்தான் முதலில் அமர்ந்துள்ளேன். 


என்னை நீங்கள் மதித்தாலும் சரி, மிதித்தாலும் சரி, அதைக்குறித்து சற்றும் கவலைப்படாமல், சந்தோஷமாகவே உங்களை எங்களின் தெய்வமான முருகனிடம் கொண்டு சேர்த்து  அவனருளை நீங்கள் பெற உதவுவேன் அதற்கெனவே அமைக்கப்பட்ட நான் இப்பிறவியில் என்ன புண்ணியம் செய்திருக்கிறேனோ..! "எனக் கூறும் அழகான படிக்கட்டுகள் நாங்கள். 

ஆனால் ஒன்று "படியாக நான் மாற வேண்டும். மெய்யடியார்கள் திருப்பாதம் முத்தாட வேண்டும்." என்ற பாடலின்படி என்றும் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும்,இப்படி படிகளாக மட்டும் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்." 


உங்களுக்கு படியேற உதவிய நாங்கள் மலையில் குடிகொண்டிருக்கும் என்னப்பன் முருகனை சந்தித்து அவரை தரிசித்த மகிழ்வோடும், நிம்மதியுடனும், இறங்கி வரவும், (உங்களை இறக்கி விடவும்) என்றென்றும் உதவியாக இருக்கிறோம். 

எனக்கு காவலாக எப்போதும் என் நலனுக்காக என்னுடனே இருக்கும் என் அண்ணனுக்காக மலை மேலேயும் அவர் அமர்ந்து  கொண்டிருக்கும் சன்னதியின் விமானம் இது..! 


ஐயனும் அம்மையும் என்றுமே என்னருகில்தான். தந்தையின் துணையுடன், தாயின் அரவணைப்புடன் இங்கு எப்போதுமே என் ராஜ்ஜியம். 


கொடிய அசுரர்களை அழிக்க எனக்கு வேல்  வழங்கி, ஆசிர்வதித்த எங்கள் தாயின் ஆயுதமான சூலமும், அதனுடன் இணைந்து, தந்தையின் கையில் இணை பிரியாது அமர்ந்திருக்கும் உடுக்கையையும் கொண்டு, அனைவரின் கண்கள் கவரும் வண்ணம் சேர்ந்து செய்து அமைக்கப்பட்டதால், இது இந்த கோவிலையே அழகுறச் செய்து பெருமிதப்படுத்துகிறது. 


இது தந்தை, தாயின் அடையாளம். "வேலுண்டு வினையில்லை" என என்னை நீங்கள் குறிப்பிடுவது போல், "சூலமும், உடுக்கையும்" , அவர்களின் கையிலிருக்கும் வரப்பிரசாதங்கள். அவர்களை பக்திப் பா(பரவ)சத்தோடு வழிபடும் போது, உங்கள் முற்பிறவியின் சூழ்நிலைகளால்,  உங்களுக்கு வரும் துன்பங்களையும், துயரங்களையும் இந்த "உடுக்கை" அடித்து நொறுக்கி, விலக்கி வைக்கும். உங்கள் தீவினைகளை குறித்தந்த பயங்களை அந்த "சூலமும்" அச்சமின்றி போகுமாறு அகற்றி அப்புறபடுத்தும். அதைக் குறிப்பிட வேண்டியே அவர்கள் இந்த ஆயுதங்களை கையிலேந்தி உங்களை அன்போடு காத்து வருகிறார்கள். 


இது தந்தை, தாயின் இருப்பிடம்/ வசிப்பிடம். முதலில் மலையேறும் போதே கீழே அண்ணனை தரிசித்த கையோடு, பிறகு படியேறி அப்பா, அம்மாவை கண்டு மகிழ்ந்து பிறகு என்னைப் பார்க்க வருவதுதானே முறை. என்ன சொல்கிறீர்கள்.? 


இமயமலையைப்  போன்ற அமைப்போடு பக்தர்கள் உருவாக்கி தந்திருக்கும் இந்த இடத்தை காணும் போது எங்கள் தாய் தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். 
 

கொஞ்சம் என் இருப்பிடத்தை சுற்றியுள்ள இயற்கையையும் உங்கள் ரசனைப்படி ரசித்து விட்டும் வரலாம். 


இதோ..! மலை மேலேயும் என்னருகில் அண்ணன் கணேசன் ஆசையுடன் குடி கொண்டுள்ள இடம். அவரை காணாது அப்படியே என்னிடம் வருவதற்கு நானும் விரும்ப மாட்டேன். எனவே அவரை பிரியத்துடன் வணங்கி பின் அவர் ஆசைப்படி அவர் சன்னதியை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு மேலே வாருங்கள். 


"என் அண்ணன் இல்லாமல் நானா? எங்கும் எத்திசையிலும், எத்தனை விதமான வடிவங்களுடன் அவர் என்னைச் சுற்றிலும் தெரியுமா?" என்ற சந்தோஷமும் எப்போதும் எனக்குண்டு. 


எத்தனை விதமான வடிவங்களில் அவர். "பிடித்து வைப்பதெல்லாம் பிள்ளையார்" என்ற சொல்லுக்கு ஏற்றபடி அவர்  பக்தர்களின் கைவண்ணங்களினால் விதவிதமான வடிவெடுத்தபடி என்னருகில் அமர்ந்திருக்கிறார். 


எத்தனை முறை சுற்றி வந்தாலும், எந்த வடிவத்திலும் அவரைக்காண வரும் பக்தர்கள் சலித்துக் கொள்வதில்லை. என்பது நிஜம். என்னைச் சுற்றிலும் அவர்தான் ஆர்வத்தோடு, அங்கிங்கெனாதபடி ஆக்கிரமித்திருக்கிறார். 


சற்று மேலே அண்ணாந்து பார்த்தால், இதோ..! என் ஆறுபடை ஸ்தலங்கள் அழகாக வரையப்பட்ட  உருவங்களோடு ஒன்றிணைந்த  ஓவியங்கள்


ஆறுபடை ஓவியங்கள். 


ஆறுபடை ஓவியங்கள். 


ஆறுபடை ஓவியங்கள். 


மலை மேலேறி, கோவிலின் பல இடங்களை சுற்றியப் பின்னர் என் கருவறை தரிசனமும் உங்களுக்கு இல்லாமலா?  வள்ளி, தெய்வானையின் ஆசிகளோடு என் பரிபூரண ஆசிகளும் என்றும் உங்களுக்காக....!


இக்கோவிலை குறித்த தரிசன பகிர்வு முருகன் அருளால், இன்று என் பதிவில் வடிவுகொண்டு வந்தமை(வந்தமர்)ந்ததும் நிச்சயமாக ஒரு தெய்வ சங்கல்பந்தான்.  இப்பதிவின் மூலம் அனைவருக்கும் ஆடிக்கிருத்திகை முருகனின் தரிசனமும் பரிபூரணமாக கிடைத்திருக்குமெனவும் "அவனருளால்"நம்புகிறேன்.🙏. 

அண்ணனோடு என்றும் உறைபவா சரணம்.🙌. 
முருகா சரணம். 🙌
முக்கண் மைந்தா சரணம்.🙌
உமையவள் குமரா சரணம்.🙌
கார்த்திகை பாலா சரணம்.🙌
சரணம். சரணம். சரணமப்பா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏