Showing posts with label பேரூந்து. Show all posts
Showing posts with label பேரூந்து. Show all posts

Friday, August 3, 2018

பயணித்த காதல்....

சகோதரர் கில்லர்ஜி அவர்கள் ஆயிரம் அர்த்தங்கள் என்ற பதிவில், மாற்றுத் திறனாளிகளின் உன்னத குணங்களைப் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததும், அவர்களின் தன்னம்பிக்கை குறித்து நான் எழுதி வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் அதை உடனே பதிவிட்டு விட்டேன்.

நினைவூட்டியமைக்கு, 
நன்றி சகோதரரே..... 

பயணித்த காதல்..... 

நீ பயணித்த பேருந்தில்
நீண்ட நாட்களாக நானும் பயணித்ததில், 
            அமர்ந்து வர 
இருக்கைகள் இல்லாத காரணத்தால்,
இருவரும் பரிச்சியமானோம்!
பரிச்சியத்தின் வேர்களை
பார்வை  என்ற உரமிட்டு
"பார்த்து பார்த்து" பேணிய உன்
பாசத் தொல்லை பொறுக்காமல்,
மாறா என் உள்ளத்தை முற்றிலும்
மாற்றிக்  கொண்டு மறுத்தளிக்காது

பரிச்சியத்தின் பாசப்பிணைப்பை
மொழிகளில் அல்லாது வெறும்
விழி வழி பரிமாறிய என்னைப் பற்றிய
விபரங்கள் அறிய நீ அழைத்த
விலாசத்திற்கு ஓடி வந்தேன்... என்
விதி அங்கு தான் விளையாடியது.

பார்வையால் மட்டுமே பேசமுடிந்த என்
பரிதாபத்தை உணர்ந்த உன் 
பாசத்தில் சற்று விரிசல் விழுந்ததை 
பாவை நான் அன்று உணரவில்லை.

இதோ... இன்றும் உனக்காக
அதே பேருந்தில் பயணிக்கிறேன்
ஆனால் உன் வருகை தான் ஏனோ..  
அரிதிலும் அரிதாகி விட்டது.

இன்று அரிதாய் அமர கிடைத்த
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்ததும்
என் விழிகள் கண்டது உன் உருவை...
எங்கு போனாய்....என்னவனே.. என
கண்ணின் மொழியில் கேட்பதற்கு முன்
வழித்தடம் மாறிய வேறொரு பேருந்தில்
மற்றொரு மங்கையின் தோள் சாய்த்து
மயக்கத்தின் போதையில்  நீ மிதந்தாய்...

அவளின் இரு அதரங்கள் சப்தித்த
அசைவுகளில் அமிர்தமாய் இடை வரும்
ஒலி கற்றையின் ஓசையின் பால்... நீ
ஒடுங்கி கிடந்த கோலம் கண்டு
என் சப்தநாடியும் ஒடுங்கி போனது.

உன் உள்ளத்தின் உதாசீனத்தை
உணர்ந்த என் ஊமை விழிகள்
உணர்ச்சிகளை கட்டுபடுத்த இயலாது
உடைப்பெடுத்துக் கொண்டது.

மௌன மொழிகளின் மேன்மையை
உணராத, நீ... மன்னிக்கத் தகாதவன்.
பாசமொழிகளை பயன்படுத்தி நேசம்
பரிமாறி, வஞ்சித்த உன்னை அந்த
பாசமே என்றும் மன்னிக்காது.

இழிவான உன் செய்கையால்
இடிந்துபோன என் உள்ளத்தை
இயல்பான நிலைக்குக் கொண்டுவர
இறுகிய என் மனதில் பயணித்த வரிகள்..
                           
                                    இதோ....
"நீயோ.. மாற்றுத்திறனாளி !
அவனோ ஏமாற்றுவதில் திறனாளி !
தீயில் விழுந்தும் கருகாமலர் நீ !
திறமையுடன் திசை திரும்பும் 
தீயினும் கடுமையான தீ அ(ய)வன்..

இனி உன் வாழ்வு வசந்தமாகும்
வழியில் சந்தித்த அவன் வரவினால்.. 
விதி உனக்கு சாதகத்தை தந்ததன்றி,
பாதகத்தை ஈன்று தந்து பாரினில்,
பறைசாற்றிக் கொள்ளவில்லை...
மனதை மாற்றிக்கொள் ! மனம் மகிழ,
மகாராணியாக வாழ்வாய். "
                              இப்போது

மன தைரியம் கொடுத்த 
மாற்று வழி" தன்"னம்பிக்கையில்
நீ இல்லா பேருந்தில், உன்
நினைவுகளை மறக்கடித்து
நிம்மதியாக பயணிக்கிறேன்...