Friday, January 24, 2020

படைப்பின் ரகசியம்.




படைத்து விட்டான்", இறைவன்
பாரினில் வாழ்ந்து பார்! என்று..
விடை புரியா இப்புவியில் உன்
வினாக்களை நீ தொடுத்து,
தகுந்த விடைகளை நீயே
தக்க வைத்து கொள்! எனச் சுலபமாக
"படைத்து விட்டான்", இறைவன்
பாரினில் வாழ்ந்து பார்! என்று...

இருண்ட உலகத்தில் கருவோடு
இருந்தந்த சுகங்களும்,
இறுமாப்பு பெற்ற கனாக்களும்,
இருளை விட்டு வெளிவந்த பின்
இயன்றளவு இருப்பதும், இல்லை, 
இல்லாமல் போவதும் அந்த
இறைவனின் செயலால் தான்!

அன்னையின் அரவணைப்பில்,
அழுகையையும், அச்சத்தையும்
அமிழ்த்திவிட்டு ஆனந்தித்திருப்பதும்
அந்த ஆண்டவன் ஆணையால்தான்.

பின் வரும் காலங்களில்
பிறிதொரு பிசகில்லாமல்
அவன் இட்ட விதிப்படி
அவன் நட்ட மரங்கள் (மனிதர்கள்)
வாழ்வில் பயனுறுவதும், 
வாழ்வோடு பயணிப்பதும், 
வாழ்வை துவக்கியவனின் அருளால்தான்.

இருப்பினும் இறைவன் அமைந்திட்ட
இன்பம், துன்பம்,
ஏழ்மை, செழுமை,
ஏற்றம், இறக்கம்,
உயர்வு, தாழ்வு
ஜனனம், மரணம்,
இது போன்ற படிகளில்,
வழுக்கி விழுந்து எழுந்து புரண்டதில்
விழுப்புண்கள் ஏராளம்! ஏராளம்!
மனக் காயங்களும் தாராளம்! தாராளம்!
மனமிரங்கி மருந்திடும் மாற்றானுக்கும்
மனப்புண்ணுக்கு குறைவில்லை!

வேதனையை திரியாக்கி
வெறுப்பென்ற எண்ணெய் ஊற்றி
பற்றிலா தீப ஒளியில்,
பாழும் இவ்வுலகில் பயணித்து,
பரமனை முடிவில் சந்தித்து,
சோம்பலில்லாமல் தன் கதையை
சொல்லி வருந்திய போது,
சிந்திக்காமல் வாய்விட்டு
சிரிக்கலானான் அந்த சிற்பி.

"உன்னதமான இந்த உலகத்தில்
உயர்ந்த பிறவியாய் உன்னை
அனுப்பிய போதினிலே,
அவசரமாய் சொன்னதை,
அரை குறையாய் புரிந்து கொண்டு,
அனுதினமும் நீயும் நொந்து,
அருகிலிருந்தவரையும் நோகடித்த மனிதா!கேள்...

உன்னிடம் இல்லாத அந்த ஒன்று
அடுத்தவரிடம் இருப்பதும் உண்டு.
இல்லாத அதை தேடுவதை விடுத்து,
உன்னிடமிருக்கும் அந்த ஒன்றை விரும்பு!
வினாக்களை தொடுத்து உன்னை
விடைதேடச் சொன்னால், நீ அந்த
விடைகளையே வினாவாக்கி அதற்கு
விடை தேடி காலத்தை விடாது
வீணடித்திருக்கிறாய்!

மழையால் மரங்களுக்கும்,
மாந்தர்க்கும், மண்ணுக்கும் பயன்!
மழையால், மழைக்கென்ன பயன்?
ஒளியால் இருளுக்கும், இருளில்
இருக்கும் மனிதருக்கும் பயன்!
ஒளியால் ஒளிக்கென்ன பயன் ?

மனிதனுக்குள் மனிதனை தேடு!
மண்ணுக்கும், மற்ற மனிதனுக்கும்
மழையாகவும் ஒளியாகவும் இரு!
மனித நேயத்தில் நானிருக்கிறேன்!
மனிதாபிமானியாக நீ இரு!

அழிந்து விடும் பல செல்வங்களில்,
அழியாச் செல்வமாக இதை தருகிறேன் என
அருளிய இறைவன் அந்த
அழிந்து போன உடலற்ற உயிரை,
"படைத்து விட்டான்" மீண்டும்
பாரினில் வாழ்ந்து கொள்! என்று....
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இது எப்போதோ, எழுத்தை என் இன்னுயிராக கருதி, என் ஸ்வாசமே இதுதான் என்றுணர்ந்து  வாழ்ந்த போது,  எழுத்துக்கு கொஞ்சமும் நான் பழக்கமாகாமல்,  இல்லை, என்னிடம் எழுத்துக்கள் வசமாகாமல் தடுமாறிய போது
பித( இய) ற்றியதுதான்.... 

இருப்பினும் உள்ளச் சுழற்றலில் சுற்றிய வண்ணம் சுழன்று கொண்டிருந்த இப்போதைய  எண்ணங்கள்  மறுபடியும் அதை வெளி வர வைத்து விட்டது. 
க(அ) சட்டுக்கவி என்று இதை புறந்தள்ளாமல்,  பொறுமையாக படித்துப்பார்க்கும் நட்புறவுகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

Wednesday, January 1, 2020

புது வருட வாழ்த்துகள்...

வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும். உள்ளம் உயர்ந்தால் நீ உயர்வாய்..
என்றபடி "நான் போய் வரட்டுமா?" என்ற பழகிய குரல் கேட்க திரும்பி பார்த்தேன். 2019 மூட்டை முடிச்சுகளோடு நின்றிருந்தது. 

"அப்பாடா கிளம்பி விட்டாயா? நீ இந்த வருடம் கொஞ்சம் படாய்தான் படுத்தி விட்டாய்.. . இரு காலிலும் பாரபட்சமின்றி  அடிகள், கடுமையான ஜீரங்கள், என மாறி மாறி வரும் போது நெருங்கிய உறவுகளின் நிரந்தர பிரிவுகள், அதனால் மன சலனங்கள் என்றிருந்த வேளையில், கடைசி இந்த மாதத்தில் இருபது நாட்களாக வயிற்றில் வலி, வலி தந்த எரிச்சல், அதை கண்டு கொள்ளாமல் இருந்ததில் "நான் விட மாட்டேனே .! கண்டுப்பேனே," என்று அது செய்யும் அழிச்சாட்டியங்கள், அதைத்தவிர வீட்டிலிருக்கும் சின்னக் குழந்தைகளின் அவ்வப்போதைய முடியாமைகள்  அதைக்கண்டு  மன வேதனைகள்... .அப்பப்பா..! தாங்க முடியவில்லை..! போய் வருகிறாயா? நல்லது.. நீ போகும் வேளையாவது என் துன்பங்கள் அகலட்டும்...! " என்று  வாய் வரை வந்த வார்த்தைகளை அதன் முகம் லேசாக வாடியிருந்ததைப் பார்த்து  சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே விழுங்கினேன். 

கடந்த வருடமாகிய 2019 பிறந்து வளர்ந்து நம்மோடு உறவாடி மகிழ்ந்து, இல்லை நம்முடன் அதுவும் துன்புற்று "இதோ! விடை பெற்றுக் கொள்கிறேன். விடை தா.! எனும் போது  நம் கண்களிலும், ஒரிரு கண்ணீர் துளிகள் நம்மையறியாமல் பூத்திருந்ததை உணர முடிந்தது . . பழகிய நட்பின் பிரிவு கொஞ்சம் மனதை சலனபடுத்துமே அந்த மாதிரி அது பேசி விடை கேட்டதும் மனது லேசாக கனத்துப்போய் விட்டது . 

" நான் போனாலும் என்னுடன் இருக்கும் உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள  என் உறவாகிய 2020 வருகிறது. அதனுடனாவது நீங்கள் கஸ்டப்படாமல் சுகமாக இருங்கள்" என அது லேசாக முணுமுணுத்துக் கொண்டே விடை கேட்டது வேறு மனதை என்னவோ செய்தது.

 "ஏன் இப்படி சொல்கிறாய்?" என ஏதாவது சொல்லி சமாதானப்படுத்தி விடை தரலாம்..! என நினைக்கும் போது, " நான் முதலில் உங்களுக்காக உதயமாகும் போதும் இப்படித்தான் பட்டாசின் சத்தங்களோடு நள்ளிரவில் நான் பிறந்த நேரத்தை கொண்டாடி உங்களுடன் இரண்டற கலந்தேன். அப்போதும்  2018 கொஞ்சம் வருத்தத்துடன் விடை பெற்றது. இதெல்லாம் எங்களுக்கு சகஜந்தான்..! நீங்கள்தான் ஏதோ ஒரு குறைகளுடன் எங்களுடன் வாழ்ந்து வருட இறுதிக்குள் எங்களை வெறுத்து அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறீர்கள். " என்றது. 

" எப்படி என் மனதிலுள்ளதை அறிந்து கொண்டது இது? என்னும் வியப்பு மேலிட அதை பார்த்த போது, "உன் மனது சொல்ல நினைத்ததை நான் எப்படி தெரிந்து கொண்டேன் என பார்க்கிறாயா? நாங்கள் வரும் போதிலிருந்தே  உங்கள் மனதுடன் கலந்து வாழந்துதானே  செல்கிறோம்.! எங்களுக்கு உங்கள் மனம் புரியாதா? நீங்கள்தான் எங்களுடன் மனமொப்பி இருப்பதில்லை..!" என்றது சற்று கேலியாக.

உண்மை  சற்று நெஞ்சை சுட " "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை..! ஏதோ கஸ்டங்கள் வரும் போது அப்படி நினைக்கத் தோன்றுகிறது.!"என பொய்யான பேச்சை துவக்கியதும், "போதும்.! நான் மறுபடியும் இந்த மூட்டையை அவிழ்க்காமலே கிளம்புகிறேன். சற்று சிரித்த முகத்தோடு விடை மட்டும் கொடு..! என்றது. 

அப்போதுதான் எனக்கு நினைவே வந்தது." ஆமாம்..! இதென்ன மூட்டைகள்.. வரும் போது நீ எதையும் கொண்டு வரவில்லையே! . என்றேன் ஆச்சரியத்தோடு.. 

" ஆமாம். பிறந்து வரும் போது கைவீசி கொண்டே சந்தோஷமாக இருக்கலாம் என்று வரும் நாங்கள் போகும் போது, நீங்கள் தரும் பரிசாக உங்களுடைய வருத்தங்கள், சோகங்கள், கஸ்டங்கள், வேதனைகள், வசவுகள் என அத்தனையம் மூட்டைகள் கட்டிக் கொண்டு கிளம்புகிறோம். அப்படியும் உங்களுடன் கடந்து வந்த எங்களை நினைவாக வைத்து மறுபடியும் வசைபாடி, வரும் 2020க்கு சுமைகளாக இவைகளை தந்து விடுவீர்கள். சரி.. சரிி.. எனக்கு பேசிக்கொண்டிருக்க நேரமில்லை.. மகிழ்ச்சியுடன் இரு.. . இனியாவது உன் வினைகள் உனக்கு தரும்  மகிழ்ச்சி. துயரம்  இரண்டையும் சமமாக பார். எங்கள் மேல் கோபங்கள் வராது.  எங்களுடன் நீங்களும் ஒத்துழைத்துப் பாருங்கள்.. நான் சொல்வது உனக்குப்புரியும் . போய் வருகிறேன். 
உன்னுடைய மனப்பாங்குதான் உன் உயர்வையும் தீர்மானிக்கிறது.  என்றபடி 2019 விடை பெற்றுச் சென்றது.
அது கூறிச் சென்ற உண்மையை இப்போதைக்கு உணர்ந்தவளாய், 2020  வரவேற்று  வாழ்த்த தயாராகினேன். 

நட்புறவுகள் அனைவருக்கும்  இனிமையாக பிறந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  புத்தாண்டு அனைவருக்கும் நலமுடன் வளம் சேர்க்க இறைவனை மனமுருக பிரார்த்தனை செய்கிறேன்.
                                          நன்றி. 
                          🙏  🙏  வாழ்க வளமுடன். 🙏🙏