Showing posts with label மயில். Show all posts
Showing posts with label மயில். Show all posts

Thursday, April 22, 2021

கனவு 3.

 கனவு 3..... 

முருகா.. கந்தா,.. எல்லோரையும் நல்லபடியாக காப்பாற்று.. ..! இதை ஒன்றைதான் நான் தினமும் உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன்.அந்த பூங்காவின்  நீண்ட பெஞ்சில் நான் அமர்ந்து கண்மூடி தியானித்தபடி இருந்தேன்.  

சுற்றிலும் சூரியனின் ராஜ்ஜியமான இந்த பகல் நேரத்திலும், இந்த நட்சத்திரங்கள் எப்படி ஒளி வீசுகின்றன. ஒரு வேளை இது இரவுதானோ? ஆனாலும், இரவுக்கான ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லையே? இரவின் துணையை ஆரம்பத்திலிருந்தே எப்போதும் தன் வசப்படுத்தி கொண்ட மமதையில், இருளின் தைரியமான எக்களிப்பு குரல் எங்கும் கேட்கவில்லை. அதன் பயமுறுத்தலுக்கு பணிந்து பிறந்து வளர்ந்ததிலிருந்து அமைதி காக்கும் பறவையினங்கள் கூட பயமின்றி அங்குமிங்கும் சலசலத்தபடி பறந்து கொண்டிருக்கின்றன. போட்டியாக மனித நடமாட்டமும், இறக்கை இல்லாத குறையாக அங்குமிங்கும்  எப்போதும் போல் பறந்து கொண்டே உள்ளது. என்ன இது விசித்திரம்.? 

ஆண்டவா..கடம்பா... கதிர் வேலா... ஏன் இந்த குழப்பம்? உன்னை இன்று  நிம்மதியாக நினைத்துப் பார்த்து மனம் விட்டு மனதுக்குள் பேசி, அதுவும்  வண்ண மயில்கள் பல உலாவும் இந்த பூங்காவில், உந்தனுடன் தனி"மையில்" (அது( மயில்) உன் "அருகாமையில்" இல்லாமல்) உன்னுடன் பேசி மகிழலாம் என்று நானும், " நீ அன்றொரு நாள் என்னிடம் விரும்பிக்  கேட்ட உணவை செய்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். வந்து ருசி பார்த்து பசியாறி, என் அறிவு பசிக்கும் சிறிது விருந்தளிக்க வருவாயா?  மனம் சிந்தனை சொற்களை கொண்டு வண்ணம் குழைத்து தீட்ட  கண்களுக்குள் கந்தனின் வண்ண முகம் சித்திரமாக ஒளிவீச தொடங்கியது. 

ஹ்ம்ம்ம்..... ஹ்ம்ம்ம்  மயிலின் அகவல் ஓசை கண்ணின் கவனத்தை திசை திருப்பி விழித்துப் பார்த்தால், நிஜமாகவே வண்ணமயில் வேலவன் மயிலின் மேல் வீற்றிருந்தபடி  புன்னகைத்தான். (மயில் மட்டும் எப்போதும் போல் என்னை கோபத்துடன் முறைத்தது. "என் துணையின்றி, என் அருகாமை"(ம)யில்"  இல்லாத கந்தனை தனிமை"(ம)யில்" காண உனக்கு இவ்வளவு ஆசையா? பழைய சம்பவங்கள் உனக்கு மறந்து விட்டதா? இல்லை., உனக்கும், எனக்குமான நட்பை  என்னப்பன் கந்தன் கடைசிவரை காப்பாற்றுவார் என்ற அசட்டு நம்பிக்கையா? (அதன் கோபமான பார்வையில் வடிந்த வாசகங்களை படித்தேன். ) 

"என்ன இது...? உன் விருப்பப்படி வந்தவனை "வா" வென்று வாய் நிறைய அழைக்காது, என்னுடன் வந்த மயிலுடன் பார்வையில், பாடம் படித்தபடி இருக்கிறாய்? முருகனின் நமட்டுச் சிரிப்புடன் கேள்விக்கணை வந்து தாக்க என் கண்கள் அவசரமாக கந்தனின் கண்களை சந்தித்தன. 

" வேலவா... நான் நினைத்தவுடன் வந்து அருள்தரும் உன் கருணையே கருணை... . உன் எத்தனையோ வேலைகளை எனக்காக ஒதுக்கி விட்டு, நான் வேண்டி அழைத்தவுடன் வரும் உன் அன்புக்கு நான் எப்படி..... .? மேற்கொண்டு பேச முடியாமல், என்" நாத் தத்தளிக்க..  ... "நன்றாகத்தான் நடிக்கிறாய்".. என்று பார்வையில் பேசியபடி மயில் முகம் சுழித்து வெறுப்பை உமிழ்ந்தது. 

" இல்லை முருகா!! இன்று நீ நான் நினைத்தவுடன் உடனே எனக்காக வந்திருக்கிறாய்..! அந்த ஆச்சரியத்தில் சிறிது நேரம்  வாய் வார்த்தைகளை மேலெழும்ப விடவில்லை.. வேறு ஒன்றுமில்லை.. . ... என்னை மன்னித்துக் கொள்.." என்றவளாய் அவன் இரு பாதம் பற்றித் தொழ குனிந்தேன்.. 

"பார்த்து... பார்த்து... காலைப் பற்றுகிறேன் பேர்வழி என்று சிலர் காலை வாரி விட்டு விடுவார்கள். எங்கள் ஐயன் முதலில் கீழே இறங்கட்டும். " மயில் அனல் கக்கும் வார்த்தைகளால் தடுத்து நிறுத்தியது. 

" அப்படியே வாரி விட்டாலும் தாங்கிக் கொள்ள நீ இல்லையா?"  கந்தனின் சின்னச் சிரிப்போடு கொஞ்சம் எனக்கும்  சாதகமாக வந்த பதிலை கேட்டதும், மயிலின் முகம் மாறுவதை கண்டு, என் இதழிலும் நகைப்புச் சாயல் வந்ததை கவனித்த மயில்., "என்ன நகைப்பு...? நான்தான் அவரை என்றுமே தாங்கி நிற்கிறேன். என்னுயிரை தாங்கிக் கொள்ள எனக்குத் தெரியாதா? நீயும் ஒன்றும் அவருக்கு ஆமோதிக்க வேண்டாம்." எரிச்சலான பார்வையோடு முறைத்தது மயில். 

"சரி... சரி...உங்களுக்குள் பூசல் வேண்டாம். நான் வேறு வேலையாக இந்த பூலோகத்திற்கு வந்தேன். வரும் வழியில் இந்தப் பூங்காவில் தமிழ் உரையாடல்கள் ஓரிடத்தில் கேட்கவே அங்கு சில நொடிகள் தாமதித்த பின்" நீ வேறு அழைக்கிறாயே"... என உன்னைக்காண இங்கும் வந்தேன். ஆமாம்.. ஏதோ பதிவர் என்ற பெயரோடு நாலு வார்த்தைகள் எழுதி வந்தாயே....  என்னவாயிற்று உன் எழுத்துப்பணி.. ? முற்றுப்புள்ளி வைத்து விட்டாயா? "என்று வேலவன் மடமடவென கேட்டதும், மயிலின் முகத்தில், எனக்கு மட்டும்" ஏளன சாயல்" தெரிந்தது. 

" எங்கே....! இங்கே வெட்ட வெளியில் அமர்ந்து வெட்டி வேலையாக ஏதோ சிந்தித்து கொண்டிருந்தால், சேர்த்தெழுத வரும் சில  வாக்கியங்களும் மறந்துதான் போகும். பின்னர் "வண்ண மயில் வேலவனே, மயிலேறி வந்தெனது அறிவெனும் விளக்கை சிறிதாவது தூண்டி விடுபபா...."என்ற புலம்பல்கள் வேறு.. .. முதலில் அது இருக்கும் இடத்தில்  இயல்பாக இருந்தால் அல்லவா தூண்டி விடுவதற்கு. ... " என மயில் தன்னோடு, கந்தனையும் இணைத்து கூறவே, அதன் விஷமத்தனமான கோபம் கண்டு கந்தன் வாய் விட்டு சிரித்தான். 

"சரி... முருகா...! நான் நேராகவே விஷயத்திற்கு, இங்கு உன்னை வரும்படி வேண்டி அழைத்த விஷயத்திற்கு வருகிறேன். நான் அன்று உன் அண்ணன் கணபதிக்கு அவரின் பிறந்த நாளன்று அவருக்குப் பிடித்தமான நிவேதனங்கள் நிறைய செய்து பூஜித்த பின், அதை நிறைய படங்களும் எடுத்து   என் பதிவுலகத்திலும் பதித்து அது குறித்து விபரமாக எழுதி வைத்தேன்.  அங்கு அதைப்பார்த்து பாராட்டிய  சகோதர சகோதரிகள் எங்களை என்றேனும் சந்திக்கும் போது இந்த உணவுகளுடன் வர வேண்டும் என அன்புடன் கூறினார்கள்..... . 

அதன் பின் தொடர்ந்து  வந்த என் கனவுகளில் நீயும் வந்து, "என் அண்ணன் கணேசனுக்கு செய்து வைத்ததை போன்ற உணவுகளை எனக்கு மட்டும்  நீ எப்போதும் கண்களிலேயே காண்பிக்கவில்லையே? வெறும் பானகமும், பழங்களுடன், தேனும் திணைமாவும் இந்த முருகனுக்கு போதுமென்று நினைத்தாயா?" என்று கேட்கவும், இன்று அந்த நிவேதனங்களை அன்புடன் செய்து  உனக்கும், விரும்பி கேட்ட என்  பதிவுலக  நண்பர்களுக்குமாகவும், கொண்டு வந்திருக்கிறேன். அதனால்தான் உன்னை வறுபுறுத்தி இங்கு வரச்சொல்லி அழைத்தேன். நீ இதை அன்புடன் ஏற்றுக் கொண்டு என்  பதிவுலக  நண்பர்கள் இருக்குமிடத்திற்கும் என்னுடன் கூடவே  வர வேண்டும்."என்று பணிவுடன் கை கூப்பி  நான் விளக்கமாக கூறியதும், முருகன் இளமுறுவல் செய்தான். 

" ஓ... அதனால்தான் நான் வரும் போது ஓரிடத்தில் அத்தனை உரையாடல்களா? இப்போதெல்லாம்  பதிவுலக நட்புகள் உனக்கு ஒரளவு பெருகி விட்டது போலும். சரி.. சரி... என்னையும் அவ்வப்போது முன்பு மாதிரி நினைவின் ஓரத்தில் வைத்திரு.... மறந்து விடாதே... ! என்றான் சற்று  கேலியாக... 

 அதுவரையில் எங்கோ நடந்து சென்றபடி  இருந்த  மயில் பொறுமையாக வந்து கந்தனிடம் வந்து நின்று நாங்கள் பேசுவது அனைத்தையும் கேட்டதும்,  சிறிது பொறாமையுடன் முகம் சுழித்து நெளிவது தெரிந்தது. 

"ஐயனே... என்ன இது..! அபச்சாரமான வார்த்தைகள்.... உன்னை மறந்த பின் என் உடலிலும் உயிர் தங்குமா? தமிழுக்கு பிறப்பிடமான உன்னை  மறக்கும்  ஒரு பொழுதுதான் எனக்கு இந்தப் பிறவியில் உண்டாகியும் விடுமா? நினைக்கவே என் தேகம் நடுங்குகிறதே...! உன்னருளாலேதான் இந்த எழுத்துலகில் நான் பிறந்து தவழ்ந்து அடி எடுத்து நடக்க ஆரம்பித்திருக்கிறேன். அதை மறந்து விட்டாயா?  (இதை சுட்டினால் என்னப்பன் கந்தவேள் என்னுடன் உரையாடிய முதல் கனவு பதிவு வரும். மறக்காமல் இதையும் சுட்டி அங்கும் சென்று அனைவரையும்  படிக்க வேண்டிக் கொள்கிறேன்.🙏.)  தாயை சேய் மறப்பதா? முருகா.. ..நீ எப்போதும் என்னை ஒவ்வொரு நாளிலும்  சிறிதேனும் மறவாதிருக்க வேண்டும். அந்த வரத்தை எனக்கு இந்தப்பிறவியில் தந்தருள வேண்டும் "  நான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க பேசுவதை கண்ட கந்தன்   "சரி.....சரி... எனக்கும் நேரமாகி விட்டது. உன்னை மட்டுமல்ல...   உலகில் அனைவரையும் நானறிவேன்.. உங்களை எழுத வைப்பதும் பேச வைப்பதும், இயக்க வைப்பதும் அனைத்தும் நானேதான். நீ அவர்களை உங்கள்  ஏற்பாட்டின்படி சென்று சந்தித்து கொள். நான் வருகிறேன்... "  என்றபடி கிளம்பினான். 

வேலவா. .!    என்ன இது...? உன் துணையின்றி நான் எப்படி... .. ? எனக்கு பொதுவாகவே பேச்சறிவு குறைவு..... நீயும் என் அருகில் இருக்க வேண்டுமென்றுதானே உன்னிடம் வேண்டினேன். தவிரவும் உனக்காக  நான் கொண்டு வந்த உன்  அண்ணனுக்கு பிடித்தமான நிவேதனங்களை நீ உண்டு  ஏற்க வேண்டாமா?"  நான் அவசரமாக தடுக்கவும்  "எல்லாம் என் பார்வையில் விழுந்தாகி விட்டது. என் பார்வையாலேயே உங்களின் அன்பும், மற்ற அனைத்தும் ஏற்கப்பட்டு விடும் என உனக்குத் தெரியாதா?  என்று கூறியபடி மயிலேறி கொண்ட  முருகன், "வேண்டுமானால், என்னுடன் வா. . .! நான் வரும் போது கண்ட அந்த இடம் வந்ததும் உன்னை இறக்கி விட்டுச் செல்கிறேன்.... "என்றான். 

"ஆமாம்..ஆமாம்...வா...வா...என்ற மயிலும் அங்கு உன்னை "உதிர்த்து" விடுகிறேன்..."  (அந்த" உதிர்த்து" என்பதை எனக்கு மட்டும் சிறு குரலில் கூறியவாறே...) என்றது அதே விஷம பார்வையுடன். 

எனக்கு லேசாக பழைய நினைவுகள் நடுக்கத்தை வரவழைத்தது. 

எப்படியோ முருகனுடன் மயிலேறி குறிப்பிட்ட இடம் வந்ததும் அங்கு எவரையும் காணாமல் திகைத்தேன் .." இங்குதான் நிறைய மனிதர்கள் அமர்ந்திருக்க கண்டேன். இப்போது எவரையும் காணவில்லையே? விந்தையாக உள்ளதே....!" என்ற முருகன் மயிலை நோக்கி, "நீ சற்று, சுற்று முற்றும் பறந்து சென்று அவர்கள் எங்கேனும் உள்ளார்களா எனப் பார்த்து விட்டு வா.." என ஆஞ்கை பிறப்பித்ததும்,, மயில் கண வேகத்தில் காணாமல் போனது. 

"உனக்காக மறுபடியும் தாமதிக்கிறேன். உன் நண்பர்கள் இருக்குமிடத்தை மயில் வந்து சொன்னதும் நான் செல்ல வேண்டும்..நேரமாகிறது. . ." முருகன்  சிறிது தவிப்புடன் சொல்ல "சரி. வேலவா...! என் கைப்பேசியில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என கேட்டுக் கொள்ளலாமா?" என நான்  அவன் உத்தரவை கேட்டதும், "கைப்பேசியா? அப்படியென்றால்,  ....?என முருகன் வியக்கவும், "ஆம்.. முருகா..  இதன் மூலம்தான் ஒருவர்  மற்றவரின் நலன்களை விசாரித்து தெரிந்து கொள்வதும் அவர்களுடன் தொடர்பு கொண்டு இப்படி சந்திக்கவும், பேசி ஏற்பாடுகளும் செய்து கொள்கிறோம்.""என்று பணிவுடன் சொன்னதும் கந்தன் மீண்டும் வியப்பிலாழ்ந்தான். 

அந்நேரம் அவன் ஆச்சரியத்தை போக்கவென்றே மயில் வந்து இறங்கியது. "வெகு தூரத்தில் சில மனிதர்கள் பேசிக் கொண்டே கடந்து சென்றார்கள். இந்தப் பெண்மணியிடம்  அவர்கள் அன்றைய ஓர் தினத்தில் ஏதோ" குளிர் சாதன பெட்டியில் " தங்களுக்கு சில பிடித்தமான உணவு வகைகளை வைத்திருக்க சொன்னதாகவும், அவர்களுக்கு இவர் தற்சமயம் அதைத்தான் கொண்டு வந்து விட்டதாகவும்," எப்போதோ செய்து வைத்திருந்த அதை உண்டால் எங்கள் உடல் நலம் என்னாவது?" என்று கூறிக் கொண்டே, எனவே  அவர்கள் இவர் வருவதற்குள் இந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டுமென ஒருவடோரொருவர் பேசிக் கொண்டே சென்று விட்டார்கள். "என்று மயில் பெருமூச்சுடன் கூறி முடிக்கவும், முருகன்"குளிர் சாதன பெட்டியா.. ? அப்படியென்றால்., குளிர் சாதன பெட்டியென்றால்?" என மீண்டும் வியந்தான். 

" கந்தா.... செய்த அனைத்து உணவுகளையும் அன்றே எங்களால் சாப்பிடுவதற்கு முடியாதென்பதால், சிலவற்றை இந்த குளிர் சாதன பெட்டியில் வைத்து ஒரிரு நாட்களாக உண்போம். ஆனால்  இதையெல்லாம் நான் அதற்குள் வைப்பதில்லை. அன்று அவர்கள்  வேடிக்கைக்காக சொன்னது இத்தனை வீபரீதமான  அர்த்தமாக போகுமென்பதை நான் உணரவில்லை. இன்று அவர்களை சந்திக்க வரும் போது, அவர்களுக்கு ஒரு  தீடிர் எதிர்பாராத விருந்தாக, மனம் களிப்பாக இருக்கட்டுமென, புதிதாக இந்த உணவெல்லாம் செய்து கொண்டு  வந்துள்ளேன். ஆனால், அப்படி  செய்து கொண்டு வரப்போவதாகவும், நான் சொல்லவுமில்லை.  என் தவறுக்கு தகுந்த தண்டனைதான் எனக்கு கிடைத்துள்ளது.... " என்று நான் மேலும், மேலும் பேசி வருத்தப்படுவதை கண்ட முருகன்,  "சரி... சரி இப்போதென்ன...! மற்றொரு நாள் எல்லா ஏற்பாடுகளை, உங்களிடமிருக்கும் பேசும் உபகரணத்தின் மூலமாக விபரமாக பேசி செய்து கொண்டு  வந்து சந்தித்தால் போயிற்று... கவலைப்படாதே.... " இப்போது நான் புறப்படுகிறேன். .. . அடுத்த தடவையாவது  புத்திசாலிதனமாக நடந்து கொள்.... என்றபடி, திரும்பியவன் "வருகிறாயா? நீ வருத்தத்தில் இருப்பதால், தனியாக செல்ல வேண்டாம். உன்னிருப்பிடத்தில் விட்டு விடுகிறேன்....." என்று இரக்கத்துடன் முருகன் கூறவும், மயிலின் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லாததது எனக்கு  அத்தனை வருத்தத்திலும் கொஞ்சம் ஆச்சரியத்தையும் தந்தது. 

மயில் எங்களை தன் முதுகில் ஏற்றியபடி மின்னல் வேகத்தில் பறக்கத் துவங்கிய சற்று நேரத்தில்,  "எப்படி....? எப்படி. .? என் திட்டம் வெற்றியடைந்தது பார்த்தாயா? என் துணை இல்லாமல் என்னப்பனை சந்தித்து பேச வேண்டுமென நீ நினைத்ததற்கு தண்டனை எப்படி கிடைத்தது பார்த்தாயா? நீ கந்தனுடன் பேசி நீ தயாரித்து கொண்டு வந்திருந்த உணவுகளை சிலாகித்து கொண்டிருந்த அந்த கண நேர "தனிமையில்" இந்த மயில் உன் நட்புக்களை வேறு மனித உருவத்தில், அதுவும் உன் சொந்தமென கூறிக் கொண்டு சென்று சந்தித்து நீ கொண்டு வந்திருக்கும் உணவுகளைப் பற்றி கூறி அவர்களை எப்படி அவ்விடம் விட்டு புறப்பட வைத்தேன் பார்த்தாயா? இனி என் உதவியில்லாமல் கந்தனை தரிசிக்க விருப்பபடுவாயா? சொல்... "என்றபடி முகம் வளைத்து  கந்தன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த நேரம் எனக்கு மட்டும் கேட்கும்  குரலில்  மயில்  வன்மமாக கேட்கவும் திடுக்கிட்டேன் . 

" இது உன் வேலையா?  கண நேரத்தில் இப்படி செய்ய உன்னால் எப்படி முடிந்தது.? ஏன் இப்படி செய்தாய்? நானும் உன்னைப் போல், உன்  தெய்வம் கந்தனை மனதாற வழிபட்டு நேசிப்பவள்தானே...! நீ இப்படிச் செய்யலாமா? " என்று அழாத குறையாய் கூறி சமாதானபடுத்துவற்குள், கொஞ்சமும் அதற்கு செவி மடுக்காமல், " அதுதான்.. நான்... சரி.  சரி. . உன் இருப்பிடம் வந்தாகி விட்டது.  இறங்கிக் கொள்..." என்றபடி மயில் முதுகை சிறிது ஆட்டவும், (அதன் பாணிப்படி உதிர்க்கவும்) நான் மடமடவென்று  "ஆ"வென்றுஅலறியபடி கீழே வந்து விழுந்தேன். 

" அம்மா... என்ன இது? ஏன் கத்துகிறாய்? கனவா? " என   என் பெண் உலுக்கியதில், "ஆம். .. பதிவு கனவு மூன்று...." என்றேன். 

" இப்ப மணியும் மூன்று. ....தூங்கும் நேரத்தில் வரும் கனவிலும்  பதிவுலக நினைவா? கொஞ்சம் நேரம் நிம்மதியாக மறுபடி  படுத்து தூங்கு...!" என்ற அவளது குரலின் அன்புக்கு கட்டுப்பட்டு படுத்து, கனவையும், கந்தனையும் நினைத்தபடியிருக்க உறக்கம் மறுபடி சிறிது நேரத்தில் வராவிட்டாலும், விடியலின் அருகாமை பொழுதில் வந்து என்னை அணைத்துக் கொண்டது.  

இப்போதுள்ள சூழ்நிலைகளில் ஒருவரையும் சந்திக்க இயலாவிடினும், கனவிலும் உங்கள் அனைவரையும்  என்னால் சந்திக்க முடியாமைக்கு அனைவரும் மன்னிக்கவும். அதனால்தான் பதிவின் மூலம்  கனவையும் எடுத்துக் கொண்டு உங்களை சந்திக்க இங்கு வந்து விட்டேன். அன்புடன் வந்து கனவுடன் சேர்ந்து வந்த பதிவையும்  சந்தித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏🙏🙏🙏🙏. 

Thursday, April 17, 2014

நானும், தமிழ் கடவுளும்



நானும் , தமிழ் கடவுளும்

பறக்க  சிறகுகள்  வேண்டும்!

எப்படியும் ஒரு பதிவு போட ஆசை !  (உருப்படியாக)…


முன்னுரை: வணக்கம் எனதன்புள்ள, நட்புகளே ! இப்பதிவை மேலே கொடுத்துள்ள ஏதாவது ஒரு தலைப்பை சிகரமாக வைத்து கொண்டு வாசிக்க வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் …..
       தோன்றின் புகழோடு தோன்றுக !.. என்ற வள்ளுவர் வாக்குபடி வாழத்தான் ஆசை! ஆனால் என்ன செய்வது! தோன்றும் போதுதான் இந்த புகழ் கிடைக்கவில்லை, நடுவிலாவது, அது நம்மை எட்டிப்பார்த்தால், (மன்னிக்கவும்! நாம்தான் அதை எட்டிப் பார்க்க வேண்டும்.) நன்றாக இருக்குமே என்ற  நப்பாசை அடிக்கடி வந்து கொண்டேயிருந்தது.
                         எதையாவது சாதித்தால்தான் இது சாத்தியமாகும் என்று ஆசை காட்டி முனகி கொண்டிருந்த உள் மனசு ,”நீ என்னத்த சாதிக்க போறே? உனக்கு  திங்கறதையும், தூங்கறதையும் தவிர வேறு என்ன தெரியும்? “ என்று நக்கல் வேறு செய்து சந்தோஷபட்டு கொண்டிருந்தது.
                          “எனக்கு எழுத்தாளியாக வேண்டுமென்று ஆசை, ஏதோ! அதனால் சிறிது பேசபட்டாலும் போதும் ! என்றதும், கைக்கொட்டி சிறித்தது உள்மனசு. “நீயா ? எழுதப் போறியா? எதைப் பத்தி?போச்சு போ! உலகத்துலே எழுத்தாளர்களுக்கு”ன்னு இருக்கிற நல்ல பேரையும் கெடுக்க போறியா?நக்கல் சற்று பலமாக நான் ரோசத்துடன்,” நான் கற்றது கை மண் துகளளவு ! அதைக்கொண்டு ஏதாவது கிறுக்கறேன், என் கிறுக்கல்களும் கொஞ்சம் புகழ் பாதையிலே, சறுக்கி  விழாதான்”னு”பாக்கறேன் என்று அதுக்கு பதிலழித்து விட்டு எனக்கு தெரிந்த பாணியில் எழுத்துலகில் குதித்து விட்டேன்.
                         ஆக, எழுதியதை நான் மட்டும் எத்தனை தடவை பார்த்து ,பார்த்து  படித்துக்கொண்டேயிருப்பது? அவஸ்த்தையை எதிராளிகளும், படுவதை கண்டு ரசித்தால் அல்லவா !என் எழுத்தாள மனம் (எழுத்தாளர்கள் மன்னிக்க!) திருப்திக் கொள்ளும். என் வீட்டில் இருப்பவர்களிடம் நான் எழுதியதைப் படித்து பாருங்கள்!! என்று தொந்தரவு செய்ய ஆரம்பிக்க அவர்கள் அதை பொறுக்க முடியாமல் , இணையத்தில் உனக்கேற்ற ஒரிடம் கண்டு பிடித்து விட்டோம் அம்மா! அது ஒரு கடல்! முடிந்தால் நீ விரும்பும் நற்பெயருடன் , புகழோடு திரும்பி வா! வென ௯றி என்னை தமிழ்மணகடலில் பிடித்து தள்ளி விட்டார்கள்.
(கடலிலுள்ள  நண்பர்களும், நண்பிகளும், சகோதர, சகோதரிகளும் பொறுத்துக் கொள்ளவும். என் வீட்டில் உள்ளவர்களை சபித்து விட வேண்டாம்.)
                            சரி! நம்பணியை தொடங்குவோம்! என்று நான் அ,ஆ,,உடன் ஆரம்பிக்க இங்குள்ளவர்கள் காவியம் ,காப்பியம், என்ற ரீதியில் சிறகு விரித்து  பறக்க , நமக்கு சிறகு முளைப்பதற்கான  அறிகுறியே தெரியவில்லையே! இவர்களுடன் எப்படி பறந்து போட்டியிட்டு ஜெயித்து காட்ட போகிறோம் ! என்ற அச்ச உணர்வுடன்  தத்தளித்து கொண்டிருக்கிறேன். 
                              சரி! தோல்வியை ( மனமில்லாமல்) ஒத்துக்கொண்டு கரையேறி விடலாமென்றால், கரையில் என் வரவை ஆவலோடு எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கும் என் வாரிசுகள் “ என்னம்மா கண்ணு! “எங்களை கதை  படிக்க ரசனை இல்லாதவர்கள்! கலை ஆர்வமில்லை ! என கண்டபடி காது கிழிய பேசினாயே!  நீ போன கதை என்னாச்சு? என்று  நடிகன்  பாணியில் நக்கலடிக்க ஆரம்பித்து விடுவார்களேயென்ற பயத்தில்   முடிந்தவரை   இங்கையே  சுற்றி வரலாம். “அந்த கடவுள் அருளிலிருந்தால், சிறகுகள் முளைக்கட்டும்!  பறக்கலாம் !” என்ற முடிவுடன்  எப்படி சுற்றுவது என்ற நியதியை ௯ட அறியாது நான் இங்கு சுற்றும் காலத்தில், முருகனுக்கோர்முகில் இட்டேன்.
முருகனுக்கோர் முகில்


பார்த்தான் தமிழ் கடவுள்! பார்த்தனுக்கு உதவி செய்தவனின் அன்பு மருமகன்  அல்லவா ! “போனால் போகுது என்று , அவன் மேல் (எனக்கு அரை குறையாக தெரிந்த தமிழ் எழுத்துக்களை கொண்டு) ஒரு பாட்டெழுத அனுமதித்தான். அதை தன் தமிழில் வாசம் செய்யும் ஒரு அன்பரால் (தமிழ்வாசி) வெளிக்கொணர செய்தான். அதைக் கண்ட நான்கு நல்லுறவுகள், “உங்கள் வரவு நல்வரவாகுக “ என்று அன்புடன் ௯றிச் செல்ல என் விலாவை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். ( சிறகு முளைப்பதற்கான ஏதேனும் அறிகுறி தென்படுகிறதாவென்று ) 
                               இன்னமும் இல்லை !
            “ போதுமா ?  திருப்தியா? ஏதோ நாலு பேர் வந்து நல்லபடியாக உன்னை வாழ்த்தினார்களே! உன் எழுத்தாளிஆசை இந்த பிறவியில் தணிந்ததா ? என்று தமிழ் கடவுள் புன்னகையுடன் எனை பார்த்து கண்ணால் கேட்க “நான், ஆமாம் ! ஆனால் ,...எனக்கு பறக்க  சி ...ற..கு.என்று இழுப்பதற்குள், இரு! இரு! என்னைத் தேடி நாலு பேர் வந்திருக்கிறார்கள் . அவர்களை கவனித்து விட்டு அப்புறம் உன்னிடம் வருகிறேன் !...என்று கண்ணாலேயே பதிலழித்து விட்டு மாயமாகி போனான். 
                 சரி ! அவன் ஆசியுடன் ஏதோ ஆரம்பம் ஆகியிருக்கு! நமக்கு தெரிந்ததை சொல்லிக் கொண்டு சுற்றவேண்டியதுதான்! என்று சுற்றினாலும்,” நாம சுத்தறதை ஏன் யாருமே கண்டுக்க மாட்டேங்றாங்க? என்ற வினா வந்து இருக்கற கொஞ்ச மூளையையும் மழுங்க செய்தது. (அட! அது வேற உன்கிட்ட இன்னமும் இருக்கா ? உள் மனசு திடும்மென வந்து நையாண்டி செய்தது . அட!போப்பா! நீவேற! நானே வருத்தத்திலே இருக்கேன்! நான் ஏதோ ஒன்றிரண்டு எழுதினாலும் , அந்தகடவுள் புண்ணியத்திலே,“தனம்” கிடைத்த மாதிரி ஒரு நட்பு வந்து என் மனதில் “பால்” வார்த்து செல்ல, இன்னமும் நட்பு வட்டம் கிடைக்கவில்லையே! என நொந்து போயிருக்கேன். நீவேற! சமயம் தெரியாமல் ,....... என்று நான்  புலம்ப,  “கண்டு பிடி! நட்பை தேடி கண்டு பிடி! உன்னை சுத்தி  சுத்துறவங்களை நீ சுத்துனாத்தானே நீ சுத்துறதும், அவங்களுக்கும் தெரியும்! என்று உள்மனசு போதிக்க, அட! இது எனக்கு தெரியாம போச்சே! என்று நான் மற்ற பதிவுகளை படிக்க வந்தால் , நிறைய எழுத்துக்கள் அதைதான் ஊர்ஜிதபடுத்துகின்றன . (நன்றி! உள்மனசுக்கும்!  அதை வலியுறுத்தி எழுதிய பதிவர்களுக்கும் .... என்று நினைத்தவுடன் “ஹூம் “என்றது உள்மனசு ....சற்று செருக்குடன் .) 
                   திடங்கொண்டு போரடியதால், வந்த வலிகளை ஏற்றுக் கொண்டு, ஆக அதுவும் கடக்க, தீதும் நன்றும் பிறர் தாரா வாரா, என்பதை புரிந்து கொண்டு, மூடு பனியில் தடுமாறி ,கனவில் காணாமல் போனவர்களையும்கண்டு விட்டு, இன்னும் நிறைய இடங்களின் வாசம் உணர்ந்து, நிறையபூக்களை , ஸ்வாசித்த திருப்தியுடன் , சாதிப்பது அவசியம் என நான் உணர்ந்து சுற்றி வந்ததில் நாட்கள் நிறையவே நகர்ந்து விட்டது.
          சுற்றி சுற்றி உடல்சோர்வுடன் மனச்சோர்வும், அதிகரித்ததை தவிர வேறு ஒரு பலனும் இல்லையே! என்ன செய்வது ? என்று குழம்பி போயிருந்த ஒரு இரவு வேளையில்,இறைவா! என்று அரற்றியதில்,  தீடிரென்று அருகில் ஒரு குரல்ஆதரவாக ஒலித்தது! 
                         என்னவாயிற்று? உன் முயற்சி? வெற்றியா !
கண் கசக்கி பார்த்தால், அழகான மயில் வாகனத்தின், உதவியுடன் அருகில் வந்திறங்கிய அழகிய தமிழ் கடவுள் .!  “அதையேன் கேட்கிறாய் போ!” என்று உற்சாகமில்லாமல் சொன்ன என்னை புன்னகையுடன் பார்த்தவன் , “நீ சொன்னால்தானே கேட்க முடியும்” என்றான். 
                         நானும் “நீ மயிலேறி சுற்றியதை விட பன் மடங்கு நான் எப்படி பதிவுலகில் பதிவர்களின் எழுத்தை சுற்றி வந்தேனென்று” அலுப்புடன் விவரமாக விளக்க,“அப்படியென்றால் இனி உன்காட்டில் மழைதான் !” என்று  தட்டிவிட்டவனிடம் ,”மழையா? ஒரு சிறு தூரல் ௯ட இல்லை “என்றேன் . 
                       ஏன்? நீ அவர்களை பாராட்டி புகழ்ந்த  மாதிரி அவர்களும் பதிலுக்கு உன்னை புகழ் மழையில் நனைய வைத்திருப்பார்களே ! 
 “அதுதான் இல்லை! நான் அவர்கள் எழுத்தை பார்த்து திகைத்து போனதில், ஒரு வார்த்தை ௯ட பதில் எழுத தெரியாமல் சுற்றி சுற்றிப் பார்த்து விட்டு வந்து விட்டேன். 
                 தமிழ் கடவுள் லேசாக என்னை முறைத்தான் .
             

                         இதோ பார் ! நீ என் அண்ணனின் தும்பிக்கையை பற்றியபடி நீண்ட காலமாக ,இந்த எழுத்தாளி வரம் வேண்டி, ஒரு தூசியை விட சின்ன உருவங்களுடன் உருவமாகஉருண்டு கொண்டிருந்தாய் ! அவர் ஒரு நாள் லேசாக தும்பிக்கையை ஆட்ட அங்கிருந்து நழுவி என் காலில்வந்து ஒட்டிக் கொண்ட உன் கதைக்கு இரக்கப்பட்டு உனக்கு ஏதாவது நல்லது செய்யாலாமென்ற எண்ணத்தில் உனக்கு தெரிந்த தமிழில் என்னைப் பற்றி எழுதிக் கொள்ள அனுமதித்தேன் . மற்றபடி நீ அறிந்ததை வைத்து நீதான் முன்னுக்கு வந்து உன் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். என்னை இப்படி அடிக்கடி தொந்தரவு செய்ய ௯டாது.! 
   “ அது வந்து எனக்கு  நீ நிறைய விஷயங்கள்....இது விஷயமாக ,.க..ற்..று கொடுக்க”முடிப்பதற்குள் முந்திக்கொண்டான் அவன். 
   இதோ பார் ! இத்தனை வயது கடந்ததில் நீ ,அனுபவம் .அகராதி  அதிசயம் ,அரசியல் ,அற்புதம் ,ஆன்மீகம் இதைப் பற்றியெல்லாம்  அறிந்து கொண்டிருப்பாயல்லவா? 
           இல்லை! எனக்கு தெரிந்ததெல்லாம் அன்பு, அடக்கம், அவசரம்,அதிகாரம் , அறியாமை, ஆசைகள் என்று என் உள்மனசு எடுத்து கொடுத்த வார்த்தைகளை அவன் பாணியிலேயே சற்று வேகமாக நான் சொல்ல ,...............................

        தமிழ் கடவுளுக்கு முகம் சிவந்தது .

“என்னிடமே  கிண்டலா ! உன்னைச்சொல்லி குற்றமில்லை! என்னைப் பற்றி உன் “அழகான” தமிழில்  எழுத நான் உதவினேன் பார்! என்னைச் சொல்ல வேண்டும்!” வருகிறேன் !என்று புறப்பட யத்தனித்தவனிடம் ,....

     “அப்படி யென்றால் என் ஆசைகள் ,....

“முடிந்தால் ,உன்னை அடுத்த பிறவியில் ஆரம்பத்திலேயே அழகாக செதுக்குகிறேன் ”என்றபடி விருட்டென்று மாயமாய் மறைந்து விட்டான் .


       ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தவளை யாரோ, அனல் கக்கும் பார்வையுடன் பார்ப்பதை உள் உணர்வு உணர்த்த சற்று  திரும்பி பார்த்தால் அந்த அழகான மயில் என்னை நோக்கி முறைத்துக் கொண்டிருந்தது .ஓ.....தமிழ் கடவுள் என் மேலுள்ள கோபத்தில் தன் வாகனம் ஏறாமலேயே ,சென்று விட்டாரா ? அத்தனை வருத்தத்திலும், என் உதடுகளில் புன்னகையை கண்ட மயில் , “என்ன சிரிப்பு ?” என்று அதட்டியது . 
      
        ஒன்றுமில்லை!... என்றதும் , என் தலைவருடன் அவர் தன் அண்ணனைக் காண செல்லும் போது, அப்போதைய “மயிலு காலத்திலிருந்தே” ( நான்சொல்வது என்னையல்ல !) உன்னை நானும் பார்த்திருக்கிறேன் .கோபத்துடன் தடித்த குரலில் பேசியது மயில். 
       “புரிகிறது !” என்று நான் இழுத்தவுடன் , “இதெல்லாம் புரியும்! எது புரிய வேண்டுமோ அது புரியாது!”உள் மனசு சமயம் பார்த்து கெக்கலிக்க , ஏய் ! பேசமாலிரு!  எல்லாம் உன்னால் வந்த வினைதான்! என்று நான் கத்த உள் மனசு முகத்தை தொங்க விட்டு கொண்டு நகர்ந்தாலும் ,......
  “ என்னாலா ? நான் என்ன பண்ணினேன் உன்னை !.. என்றபடி மயில் துள்ளி குதித்தபடி கோபமாக ஓரடி முன்னால் வந்தது .
           இல்லை! இல்லை! நான் உன்னை சொல்லவில்லை ! நான் அவசரமாக மறுத்ததும் ,நின்ற மயில் , இதோ பார்! புத்தி உள்ளவன் பலசாலி! புத்திசாலிதனமாக பிழைத்துக் கொள் !நீ பதினாறிலிருந்து வேண்டுவதை என் தலைவரின் அருளினால் பெற்றிருக்கிறாய் ! தக்க வைத்து கொள்வது உன் கையில்தான் இருக்கிறது !புரிகிறதா?” உபேதேசித்த மயிலிடம்  ,புரிகிறது! ஆனால் என்னால் நன்கு படித்து பார்க்காமல் , எழுதபட்ட அந்த கருத்தை புரிந்து கொள்ளாமல், அந்த கருத்துக்கு பதிலுரை இடமுடியவில்லையே !நான் அங்கும் இங்கும் தேடி பதிலை உருவாக்குவதற்க்குள் அவர்கள் எங்கோ பயணித்து விடுகிறார்களே !அதனால்தான் தமிழுக்குடையவனிடமே , என் திறமையையும் வளர்த்து கொள்ளலாமென்று நினைத்தேன். நான் சுத்தி வந்த இடங்களிலும் இது பற்றி நிறைய விவாதங்களை பார்த்தேன். அது என்னவென்றால் ,...
   நிறுத்து! உன் கதை எனக்கெதற்கு ? நான்  இது வரையில் ஒருபோதும் என் தலைவரை பிரிந்தில்லை , இன்று உன்னால் அவர் என்னை௯ட மறந்து சென்று விட்டார் .” சோகத்துடன் பேசிய மயிலை ஆறுதல் படுத்துவதற்காக, “அடாடா !நீயும் என்னை மாதிரிதானா ?அவர் அருளில்லாமல்  உன்னால் தனியே செல்ல முடியவில்லை பார்த்தாயா?அதனால்தான் நானும் எப்போதும் அவரிடமே ஆலோஜனை கேட்கிறேன் .நீ உண்மையிலேயே இப்போதைய,“மயிலாக இருந்தும், காலொடிந்த சப்பாணியாக இருக்கிறாய் ,”பார்! என்று தமாசாக பேசி அதை கலகலக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் பேசிக் கொண்டே போக, சோகமாக இருந்த மயில் நிமிடத்தில் பொங்கி எழுந்தது.  
 

             “ என்னிடமும் கிண்டலா ! உன்னை என்ன செய்கிறேன் பார் ! சிறகை விரித்தும் சுழற்றியும் ஆட்டியபடி அது என்னை நோக்கி ஓடி வந்தது. 
           ஐயோ !கடவுளே ! இது என்ன சோதனை!பேச தெரியாமல் பேசி விட்டேனே ! பறக்க சிறகு வேண்டும் என்று விரும்பி வேண்ட, இன்று சிறகுகளே எமனாக வந்து வாய்த்து ஒரேடியாக பறக்கப் போகிறேனோ ! தமிழ் கடவுளே !என்னை காப்பாத்து ! 
                          டமாலென்று  கட்டிலிருந்து உருண்டு விழுந்தேன். ..கண் விழித்து பார்த்தால் ,மயிலும் ,தமிழ் கடவுளும் காணாமல் போயிருக்க, அது கனவென்று புரிந்தது.
                   பின்னே ! மற்ற இடுகைகளையும் படித்து பார்த்து அவர்களுக்கு தகுந்த பின்னூட்டம் இடவேண்டுமென்று நாயும், பேயும் உறங்கும் நேரத்திலும் விழித்திருந்து,பின் காலை கடமையாற்ற  துரிதமாக எழ வேண்டுமேயென தூங்கியும், தூங்காமலும் அதே நினைவுடன் படுத்தால் , இடைபட்ட நேரத்தில் அது சம்பந்தபட்ட கனவு தானே வரும். 
                       சரி! எப்படியோ, கனவுபலிக்க வேண்டும். (ஐய்யய்யோ !இந்த கனவல்ல! ) சிறகு விரித்து பறக்கும் கனவு! கனவு நனவாக கண்டிப்பாக ஒருநாள் கை கொடுப்பான் தமிழ் கடவுள் !
                  எனக்காக வருவான் வடிவேலன் !....
 “ எந்த வடிவேலன் ” ஒரு குரல் எக்களித்தது ....வேறுயார்? வழக்கபடி  அந்த  உள்மனசுதான் !.......

முடிவுரை: எப்படியோ நானும் ஒரு நீண்ட பதிவை எழுதியாச்சு! ஒரு விஷயத்தை சொந்தமாக நீளமாக எழுதினால் (அது நன்றாக இருந்தாலும் ,இல்லாவிட்டாலும் மனப்பாடம் செய்து எழுதாமல், கற்பனையுடன் எழுதியதற்கு ,மதிப்பெண் நன்கு விழும் என்பது படிக்கும் பருவத்தில் போதனை!இங்கு எப்படியோ ?) நன்றாக இருக்குமென்று தோன்றியதால், அதிகரித்து விட்டது.
              
                    பொறுமையுடன் “பார்த்து ”படித்தவர்களுக்கு என் மனப்பூர்வமான 
                            நன்றிகள்...