Showing posts with label எழுதுகோல். Show all posts
Showing posts with label எழுதுகோல். Show all posts

Saturday, December 14, 2019

நானும் எழுதுகோலும்...

             
          என்(னை) ஊன்று(ம்) கோலும் கூட.... 


பிறந்தவுடன் கண் திறந்தேன்! அரும் 
பிறவி இதுவென்று உணர்ந்தேன்!
தாயின் மாறாத அன்புடனே, 
தந்தையின் மாசற்ற அறிவையும் 
தடையின்றி சுவாசித்தேன்..!
அடைக்கலமும் இதுதானென்று
ஆத்ம திருப்தியுடன் 
அறிந்து கொண்டேன்..!

நிறங்களை நிமிடத்தில் 
கண்டு கொண்டேன்..!
நிதசர்சனங்கள் இவையெல்லாம் 
என உணர்ந்து கொண்டேன்..!
கானம் பலவும் காதுடன் கேட்டேன்!
காதிலும் தேன் பாயுமென 
புரிந்து கொண்டேன்!

பாடும் பறவைகளுடன் பறந்தேன்!
பக்குவமான மனம் அமைய பெற்றேன்!
பச்சைப் புல்வெளியைப் பார்த்தேன்!
பகைமையில்லா மனதுடன் 
பரவசமாகி போனேன்!
தெய்வங்களை தரிசித்தேன்!
தென்றலெனும் வாழ்வடைந்தேன்!

நீலவானம், இரவு வானத்தில் 
நீலமாணிக்கமாய் விண்மீன்கள்,
நீரின் அசைவுகள், அதில்
நீங்காது நீந்தும் மீன்கள்,
உதிக்கும் சூரியன், அதில்
உதயமாகும் பொழுது,
உயர்ந்த மலைகள், அதை
வருடும் அந்திச்செம்மை,
இரவின் இருள், அதன்
குரலாய் மெளனமான நிசப்தம்,
இருண்ட வானம், அதன்
வேராய் பெருமழை,
மரங்களுடன், மலர்கள், அதை
தழுவும் மதியின் அழகு,
மதிய வெயில், அதன் இறுதியாய்
மங்கிய மாலை வேளை,
அடர்ந்த காடு, அதை
அன்போடு குளிர்விக்கும் அருவி,
அழகிய சோலை, அதை
அலங்கரிப்பு செய்யும் மலர்கள்,

இவை அனைத்தும்,
அழகென்று உவகையுற்றேன்!
இயற்கை தந்த சீதனமென்றும்
தெரிந்து கொண்டேன்!   
அதிசயத்து, பலமுறை 
வியந்து நின்றேன்!
இது அற்புதமான உலகமென்றேன்! 
இன்னும் எத்தனையோ, 
படைப்பு கண்டேன்!
" படைத்தவனை"தவிர்த்து 
இப்படைப்பை உருவாக்க வேறு 
எவராலும் எளிதில்லை இது.. !
எனவும் புரிந்து கொண்டேன்!

அள்ளக் குறையாத
பல பல மொழிகள்
பயிலவும் நினைத்தேன்! 
ஆயினும் அருமையான தமிழ் மொழி பால்
ஆசையுடன், அளவிற்கடங்காத 
காதலும் கொண்டேன்!

காட்சிகளின் தாக்கங்கள்,
கனவிலும் வந்து களிநடனம் புரிய,
கண் விரட்டும் உறக்கத்தையும்,
களைந்தெறிந்து, கற்பனை உலகில் 
காலமெல்லாம் மிதந்திருந்தேன்!

கண்ணில் கண்டதை கவி பாடினேன்!
கதைகள் புனைந்து களிப்புற்றேன்!
காகிதத்தில் அதை பதித்து வைத்து,
கருத்துக்ளுக்கு காத்திருந்தேன்!
கசடுகள் நிறைந்த கவியென்றும்,
கட்டுக்கதைகள் இவையென்றும்,
கசப்புடன் காலம் சொல்லிச் செல்ல,
கனமான மனதுடன் உடல் நொந்தேன்!

இத்தனை பார்த்தும், ரசித்தும்,
இன்னும் ஏகமாய், ரசித்துப்
பார்க்க நினைத்தும், நான்
மறந்து போனது ஒன்றுதான்! மற்ற,
மனிதரின் மனதை ரசிக்கவில்லை!
மமதையில்லா உள்ளம் பெறவில்லை!
மகிழ்ச்சியில், மனமது நிறைந்திட, அவர்தம்
மனவியல் படிக்கத் தவறி விட்டேன்!

எது எப்படியாயினும், இன்று வரை,
என்னுடன் உறவாடும் எழுதுகோல், என்
உறவை பிரிய மனமின்றி, தன்
உயிரையும் எனக்கு தந்தபடி, "உன்
உற்றத் தோழனாய் நானிருக்க,
உவகையான,உள்ளத்துடன்,
உன் உதிரம் உலர்ந்து போகும் வரை.
உலகில்  நீ ரசித்ததை எல்லாம்
உண்மையுடன் உணர்த்தி விடு! அது
உன்னதமாகும் ஒரு நாளில்!!" என்றது!

அது அன்புடன் சொன்னதில்,
அகம் குளிர்ந்து, ஆசையாய்,
அதை அரவணைத்து, என் மனதின்
ஆறா தழும்பையும், ஆற வைக்க,"என்
ஆறாம் விரலாய் நீ இரு.. !!" 
என யாசித்தேன்.  

ஆறுதலாகவே அது"அவ்விதமே
ஆகட்டும்" என அனுகிரஹித்து"என்
ஆயுள் பரியந்தம்  உன்னுடன்
ஆதர்சமாக வாழ்வேன்" என்றது. 

இது மீள் பதிவு என்றாலும், சில திருத்தங்களுடன் ஏதோ ஒரு மனத்திருப்திக்காக மறுபடியும்.... 
படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .🙏.