Sunday, March 30, 2025

இட்லிகளின் ராஜ்ஜியம்.

இன்று உலக இட்லி தினமாம்.

(30.3. 25.) 

நம் அன்றாட பாரம்பரிய உணவில் இந்த இட்லி எப்போதும் சிறப்பு மிக்கவைதான்..! ஒரு காலத்தில் அதற்கென்று ஒரு பிரத்தியோகமான தனி மரியாதை இருந்தது. ஒருவருக்கு உடம்புக்கு முடியவில்லையென்றால்,அவரை  குணப்படுத்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, "டாக்டர் மருந்துடன் நோயாளி ஆகாரமாக என்ன சாப்பிடலாம்?" என்ற கேள்விக்கு அக்காலத்திய மருத்துவர்கள் முதலில் இட்லியைத்தான் நல்ல உணவாக பரிந்துரைப்பார்கள். (பிறகு காஃபி, கஞ்சி.) (ஆனால், இட்லியை கண்டாலே முகம் சுளித்து எரிச்சல் அடைபவர்கள் இப்போது நிறைய பேர்.) அதுபோல் இப்போது  மருத்துவர்களும், "என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம்.." எனக் கூறத் தொடங்கி விட்டனர். ஏனெனில் இட்லியை புறந்தள்ளி நிறைய வெரைட்டி உணவுகள் வீட்டிலேயே இப்போது முதலிடத்தை பெறத் துடித்து வெற்றி கண்டு விட்டதால், இட்லி அவர்களுக்காக  கொஞ்சம் பெருந்தன்மையுடன் நகர்ந்து வழி விட ஆரம்பித்து விட்டது. ஆயினும் இன்னமும், பல பெரியவர்களிலிருந்து சில குழந்தைகள் வரை இட்லியை விரும்பி சாப்பிடுவதையும், சில உணவகங்களில் பார்த்திருக்கிறேன்.

இந்த இட்லிக்கு ருசியாக அரைப்பதில் அந்த காலத்தில் கல்லுரலுக்கு பெரும் பங்கு இருந்ததது. அப்போதெல்லாம் சிலர் வீட்டில் தினமும் இட்லிக்கு அரைப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட மாலை நேரத்தில் கல்லுரலின் "கடமுடா சத்தம்" ஒவ்வொரு வீட்டிலும் முழங்கும். (எங்கள் பிறந்த வீட்டில் எங்கள் அம்மா காலையிலேயே இட்லிக்கென அரிசி அளந்து ஊற வைத்து விடுவார்.) வீட்டில் தினமும் காலை அக்கப்போர்கள் ஏதுமில்லாத, ஆனால், போரடிக்காத இட்லிதான். வாரத்தில் ஒருநாள் அது தோசையாகவோ, பருப்புகள் சேர்த்தரைத்து அடையாகவோ மாறினால், அது அதிசயம். ஏனெனில் இட்லி எளிதில் ஜீரணமாகும் ஒரு உணவு (வஸ்து.) என்பதால், அதுதான் அப்போதைய குழந்தைகள், பெரியவர்களென வீட்டிலிருக்கும் அனைவருக்கும் உகந்ததாக இருந்தது. . 

நாளடைவில், தினமும் இட்லிக்கு அரைத்து செய்வது அனைவருக்கும் பெரும் சோம்பலாக தோன்றியதால், வேறு ஏதாவதை காலை சிற்றுண்டியாக மாறுவதற்கு வாய்ப்புகளை தந்தனர். அதற்கு பிற தானியங்கள் சந்தோஷமாக சம்மதிக்க, அவற்றின் உதவியுடன் உப்புமாக்கள்,  தோசைகள், சப்பாத்தி, பூரியென அவைகள்  பூரிப்புடன் வலம் வந்தன. எனினும் காலை நேரத்தில் இட்லியின் சௌகரியம் பிடித்து போன பிறகு மற்ற உணவுகளை தயாரிக்கும் போது ஏற்படும்  சிரமங்கள் கண்டுணர்ந்ததில் வீட்டில் பெண்கள் அனைவருக்கும் சிறிது முகம் கோண செய்தது. 

பிறகு மாவரைக்கும் பெரிய, கனமான கிரைண்டர்( யந்திரம்) வந்தது. அது வீட்டுக்கு வீடு அவ்வளவாக பரவாத காலத்தில், ஒரு சிறு கைத் தொழிலாக பலருக்கும் வேலை வாய்ப்பைத் தந்தது. வீட்டின் ஒரு இடத்தில் நாலைந்து மெஷின்கள் வாங்கி போட்டுக் கொண்டு மாவரைத்து கொடுப்பதில் மக்கள் வீட்டிலிருந்தபடியே கொஞ்சம் வருமானமும் பார்த்தனர். 

காலை நம் வீட்டில் இட்லிக்கு தேவையான அரிசி, பருப்பு போன்றவற்றை ஊற வைத்து, மதியம் அங்கு கொண்டு தந்தால், அன்று மாலை/ இரவுக்குள் இட்லி மாவு வீட்டில் வந்து சேர்ந்து தயாராகி, மறுநாள் காலை உணவுக்கு அது இட்லியாக வரும் இந்த விந்தை அனைவருக்கும் பிடித்துப் போனதில் மறுபடியும் வெற்றிக் கரத்துடன் இட்லிகள் கொடி பிடிக்க ஆரம்பித்தன. 

பின்பு வீட்டுக்கான அளவுடன்  சின்னதாக, நவீனமான பல மாவரைக்கும் யந்திரங்கள் வந்த பின் அதில் வீட்டிலேயே கொஞ்சமாகவோ, இல்லை இரண்டு, மூன்று நாட்களுக்கெனவோ இட்லி மாவு தயார் செய்து குளிர் சாதன பெட்டியில் பாதுகாத்து, மக்கள் பயனுற ஆரம்பித்தனர். 

அதன் பின் வந்த காலகட்டத்தில், அவ்விதம் அதைச் செய்யவும் நேரமில்லாமல், நேரங்களுடன் போராடுகிறவர்கள், உடல் நிலைகள் முடியாதவர்கள் என பலரும்  பாக்கெட்டுகளில், தயாராகி வரும் மாவு வாங்கி அதில் இட்லி, தோசை என்ற பயன்களை கண்டனர். எப்படியும் இட்லிகளின் ராஜ்ஜியம் தரையிறங்கவில்லை. 

"பட்டனை தட்டினா இரண்டு இட்லியுடன், கெட்டி சட்னி வர வேண்டும்" என்ற அந்தகாலத்தில் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன் , அவர் மனைவி டி. ஏ மதுரம் அவர்கள் பாடிய நகைச்சுவை பாடல் இன்று பொய்த்துப் போகாமல், மெய்யாகி வருகிறது. இட்லி அரிசிக்கோ ,அதை அளவுடன் ஊற வைத்து பக்குவமாக அரைக்கும் மாவுக்கோ, என எதற்கும் கவலைபடாமல், பட்டனை தட்டினால் பறந்து வரும் இட்லிகள் வந்து விட்டன. (அது எப்படியிருக்குமோ என நான் இன்னமும் பரிசோதிக்கவில்லை.) சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் சுவையும், தரமும் புரிந்திருக்கும். இது மனித சோம்பலின் கடைசி படிக்கட்டை எட்டிய விஞ்ஞான யுக்தியின் முயற்சி என நினைக்கிறேன். விஞ்ஞான வளர்ச்சியை இப்படியெல்லாம் வருமென கற்பனையில் பாடி, பேசி நடித்த அவர்களின் (கலைவாணர், அவர் மனைவி) பேச்சுக்கள் உண்மையாகி விட்டது. 

அனைத்து உணவகங்களிலும், மற்ற உணவுகளோடு, இட்லி, சட்னி, சாம்பார், இட்லிமிளகாய்பொடி தடவிய நெய் இட்லி, நம் விருப்பப்படி சிறு துண்டுகள் செய்த லேசாக வறுத்த ப்ரைடு இட்லி, வெங்காயம், காய்கறிகளுடன் இணக்கமான காய்கறி மசாலா இட்லி, சாம்பாரில் தோய்ந்த மினி நடனமாடும் மினி இட்லிகள் என்ற பல விதங்களோடு இட்லிகள் இன்னமும் பவனி வந்து கொண்டுதான் உள்ளது. 

இட்லி ரவையுடன் உளுந்து மாவை அரைத்து சேர்த்து செய்யும் இட்லிகள் சிலசமயம் ருசியாக அமைவதில்லை. எப்போதும் போல் இட்லி அரிசியை ஊற விட்டு அரைத்துச் செய்யும், இட்லிகள் என்றுமே சோடை போனதுமில்லை. இன்றும் இட்லியின் சிறப்புக்காகவே பிரபலமான உணவகங்கள் உள்ளன. 

இன்னமும் இந்த இட்லிகளின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இட்லி தினம் என்ற ஒன்று  முடிந்து விடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்

எப்படியோ உலகில் வந்த நாள் முதல் நம்முடன் இணைபிரியாது அன்று தொட்டு, இன்று வரை இணைந்து வரும் பாரம்பரியமான இட்லிகள் என்றும் வாழ்க...! 

இந்தப்பதிவை ரசித்துப் படிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 

Wednesday, March 19, 2025

விதி வலியது.

அகோ வாரும் பிள்ளாய்..! அதாகப்பட்டது இந்த விதி ரொம்பவே பலமானது...!வலியது..! வலிமையானது..! உண்மைதானே..! 

அந்தக்காலத்தில் தேவர்கள், இறைவனார்கள், முதற்கொண்டு, செல்வ செழிப்புடன் சிறப்பாக கொடி கட்டி வாழ்ந்த அரசர்கள், பக்குவப்பட்ட மாந்தர்கள், மகான்கள் என அனைவரையுமே "விதி" என்பது தலைகீழாக புரட்டி எடுத்து விட்டு சந்தோஷமடைந்திருப்பதை எத்தனை புராணங்களில், பழங்கால கதைகளில் பார்த்துள்ளோம். "விதி வலியது. அதை வெல்ல இயலாது என்று கூறும் போது சமயங்களில், நம் மதியில்னால்தான் ஒரு செயல் நடந்தது/நடக்கிறது/ நடக்கப் போகிறது என சிலர் பெருமை கொள்கிறார்கள். ..! இது அசட்டுத்தனமல்லவா..! என எனக்கு எப்போதும் தோன்றும்." விதியை, மதியால் வெல்வதற்கு, அந்த விதியும் சற்று  வளைந்து தந்தால்தான் அது (அதாவது நாம் நினைத்த மாதிரி ஒரு செயல் நடப்பதென்பது...! ) நிறைவேறும். இது காலங்காலமாய் செயல்பட்டு வருவதல்லவா..? 

சரி இப்போது இந்த "விதி" புராணம் எதற்கென்றால், தினமும் ஒரு செயல் அது பாட்டுக்கு தேமேன்னு நடந்து கொண்டிருக்கும் போது, அது மாறுபட்டால், அதன் பெயர் "விதி"யின் செயல்தானே...! 

சென்ற புதனன்று காலை உணவு முடிந்ததும், மதிய சாப்பாட்டிற்கு சுத்தம் செய்து பாலக் கீரையை அரிந்து கொண்டிருந்த போது,  இயற்கை அழைப்பிற்கு கட்டுப்பட்டு குளியலறைக்கு சென்றவள், கால் அலம்பி வெளியேறும் போது, அந்த ஈர கால்களோடு, என்  (விதியின்) செயல்பாடும் உடன்பிறப்பாக வந்து சேர்ந்து கொள்ளுவோமென்று சற்றாவது அந்த "விதி" எச்சரித்திருக்க கூடாதா? (அதற்குதான் பேச தெரியாதே..! செயல்பாட்டில் மட்டும் தன் வேகத்தை காட்டி விட்டு சந்தோஷபட்டுக் கொள்ளும்.) விளைவு, படி தாண்டி கால் வைத்து, ஈரக்கால் வழுக்கியதில், கீழே கோணலும் மாணலுமாக விழுந்ததில் பல இடங்களில் நல்ல அடி எனக்கு மட்டுந்தான். (அப்போது குளியலறை  வாசலில் இருக்கும் மிதியடியில் கால் வைத்து நான் கால்களின் ஈரம் ஆற்றக்கூடாதா என உங்களுக்குத் தோன்றும். ஆனால், அந்த மிதியடியும் அப்போது விதியின் பக்கம் பலமாக சாய்ந்து அப்புறப்படுத்தபட்டிருந்தது...) எனக்கு காதில் விழாது என்ற சந்தோஷத்தோடு, அந்த "விதி" கைகொட்டி சிரித்திருக்கும் 

அத்தோடு "அப்போது வீட்டில் யாருமில்லை.. அனைவரும் அவரவர் வேலையாக வெளியில் சென்றுள்ளனர் என்ற தைரியமும் அதன் (விதியின்) கூடுதல் சந்தோஷம்." ஆங்காங்கே பட்ட அடிகள்... அடிகளுக்கு கிடைத்த வேதனை என்ற பரிசுகளோடு நான் எழவே சிறிது நேரம் பிடித்தது. மெள்ள தைரியத்தை வரவழைத்துக் கொண்டு (உனக்கு மட்டும்தான் தைரியமா? எனக்கும் சிறிதளவு இருக்கக் கூடாதா..? என்று கண்ணுக்கு மறைவாக இருக்கும் விதியுடன் பேசியபடி சிரமத்துடன் எழுந்தேன்.) அப்படியே சிறிது நேரம் சமையலை புறக்கணித்து அவர்களுடனே வெளியில் சென்றிருந்தாலும், விதி வெளியிலேயே ரோடில் வழக்கப்படி விழவைத்து, வேறென்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்குமோ. .? என அத்தனை வலியிலும் நினைத்துக் கொண்டேன். 

ஹாலுக்கு வந்தவுடன், உடனே கைவசம் இருக்கும் அயோடக்ஸ், நீலகிரி தைலம் என மருந்துகளை தேடி எடுத்து எனக்கு கிடைத்த வெகுமதிக்கு கூலியாக்கினேன். கால் மணி நேரம் வலிகளை,எங்கெங்கு என நிர்மாணித்து / தீர்மானித்து உபயோகிக்கும் போது,  "நல்லவேளை..! ரத்த காயங்களை தராமல், பிசகு, குளியலறை படியில் இடுப்பு, மூட்டு என அடிபட்ட கடுமையான வலியை மட்டும் தந்தமைக்கு, இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டேன்." 

மேலும், ஒரு கால் மணி நேரம் அமர்ந்திருத்து விட்டு பின், கைகளை சுத்தம் செய்து கொண்டு பாக்கி நறுக்காமல் இருந்த "பாலக்கை" பொடிதாக அரிந்து கடாயில் கொதிக்க வைத்து, ஏற்கனவே வெந்திருந்த பாசிப்பருப்புடன் கூட்டு செய்ய ஒரு தேங்காயையும் உடைத்து துருவி மிக்ஸியில் அரைத்து சேர்த்து கூட்டாக்கி விட்டு. குக்கரில் சாதத்தையும் வைத்து விட்டு நிமிர்ந்தால், நிமிரவோ, குனியவோ முடியாமல், பின் இடுப்பு வலி (முதுகு தண்டின் அடிபாக எலும்பு.) அதிகமாக தெரிந்தது. கூடவே, வலது கால் மூட்டு, வலது கால் பெருவிரலோடு சேர்ந்து கால் பாதம் என அனைத்து இடங்களும், சுளுக்கு வீக்கம், வலி என போட்டிப் போட்டுக் கொண்டு "விதி"தன் வெற்றியை கொண்டாட ஆரம்பித்தது. 

ஆகா..! வெளியில் சென்றிருந்தவர்கள் வந்தால், "கவனமாக இருக்க வேண்டாமா." என்ற திட்டு வேறு கிடைக்குமே என்ற படபடப்பில், நேரங்கள் நகர்ந்து அவர்கள் வரவும் ஆயிற்று. 

வெளியிலிருந்து வந்தவர்களிடம், விதியின் விளையாட்டை விவரித்தப்பின், வலிகளின் கோர முகங்களும் மூன்று நாட்களுக்கும் மேலாகவே கடுமையுடன் தொடர்ந்தன. நீ.கி,தைலம், அயோடக்ஸ் போன்ற தொடர்ந்த மருந்தோடு, வெந்நீர், ஐஸ்பாக்ஸ் ஒத்தடங்களோடு எனக்கு தினமும்  பெரும்பாலும் மன  ஆறுதலை தந்தது உங்கள் அனைவரின் பதிவுகள்தாம்...! அனைவரின் பதிவையும், படித்து கருத்திட்டு என் வலிகளை தாங்கினேன் என்றால்  அது மிகையல்ல..! நிஜமான உண்மை. 

எப்போதும் போல் ஐந்தாறு  நாட்கள் நொண்டியடி நடந்து என் கடமைகளை செய்து கொண்டேதான் இருக்கிறேன்.  பழைய வலி இல்லாத நாட்களை மீண்டும் எதிர்பார்த்தபடி...!  

வந்து விடும் அந்த வலியில்லாத நாட்கள்.. ஏனெனில், நம் உடலை, நம் உடலே சரி செய்து கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இறைவன் தந்த ஒரு வரம். அந்த வரம் என் வாழ்வின் இறுதி வரை தொடர வேண்டுமெனவும் இறைவனை அன்போடு பிரார்த்திக்கிறேன். 

பதிவின் முதல் வரிகள் எத்தனை உண்மையானதென இப்போது கூறுங்கள்

இப்போது சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவை படித்துப் பார்த்ததும், அவர்களுக்கு ஏற்பட்ட விதியின் உபத்திரவங்களை எண்ணி மனம் மிகவும் வருத்தப்பட்டது. தீடிரென எதிர்பாராமல் விளைந்த அவரின் கால் வலியும், வேதனையும் விரைவில் சரியாக வேண்டுமென இறைவனிடம்  பிரார்த்தனைகள் செய்து கொண்டேன். 

ஒருவரின் பிரார்த்தனைகள் கண்டிப்பாக  அவரின், மற்றும், மற்றையவர்களின் உடல், மன நலன்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கை (இன்று எ. பியிலும் கேள்வி பதிலில் இது இடம் பெற்றுள்ளதை படித்தேன்.) எனக்கு நிச்சயம் உண்டு. 

இன்றோடு எட்டு நாட்களும் கடந்து கொண்டிருக்கிறது. ஏனோ உங்களிடமும் இதை சொல்ல வேண்டுமென தோன்றியதால், இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதியதை இப்போது நிறைவு செய்து  இங்கு பகிர்கிறேன்.

படிக்கும் நட்புறவுகள் அனைவருக்கும் அன்பான நன்றிகள் .🙏