Showing posts with label இறைவா... Show all posts
Showing posts with label இறைவா... Show all posts

Thursday, December 1, 2016

ஏனோ இச்செயல் இறைவா...?

ஏனோ இச்செயல் இறைவா…?


காலமும் நேரமும் ஒன்றாக கனிந்தால் தான்
காரியமென்றும் கூடி சேர்ந்து வரும் என்பதை
கணிசமாய் மனமது களிப்பின்றி உணர்த்தினாலும் 
கனிய வைத்திட மனம் தினம் போராடுவதும் ஏனோ.?

சொல்லும் செயலும் செல்லும் வழியெங்கிலும்
வெல்லும்வீழும்!  அது அவன்” துணையுடன் மட்டுந்தான்
என்றெல்லாம் நன்கறிந்தும், “நான்னென்ற அகந்தை
என்றும் முள் பூவாய் மனதில் தினம் பூப்பதும் ஏனோ.?

நீர் குமிழியான நிலையற்ற வாழ்விதுவே என,
நிதமும் மனமே உணர்ந்தாலும், “நானில்லையேல்
எவரும்” இல்லையென்ற மமதை மனதினோரங்களில்
எக்களிப்பாய் தினம் தங்கி குடியேறுவதும் ஏனோ..?

போகும் போது பயனற்ற ஊசியின் முனையும்
போகும் வழிக்கு துணையாகவே உடன் வாராது என,
பட்டிணத்தார் உணர்த்திப் பகன்றதை பலகாலம் கேட்டும்  படித்தும் பகட்டை மனமும் தினம் விரும்பி ரசிப்பதும் ஏனோ.?

நாம் படைத்து விட்ட இந்த மாந்தர்களின் மனப்பக்குவம்
நல்ல பயனுள்ளதாகியதா என்றறியும் ஆவலினால் நீயும்”,
வாழ்வையே தினந்தினம் தேர்வுக் களமாக்கியும்நாங்கள்
வாழ்வியில் தேர்வில் எந்நாளும் தேறாததும் ஏனோ..?

இத்தனையும் தந்து விட்டு நீ மெளனத்தின் நிழலோடு
இருண்ட வாசம் செய்து மெளனமாகி போனதும் ஏனோ.?
விடை அறிய உன் முன்னை வினாக்களை தொடுத்து
விரைவோடு சமர்ப்பித்தும்விடை பகர நீயும் தாமதிப்பதும் ஏனோ.?

அத்தனையும்  புரிய வைத்து,  அன்பாய்  பயிற்றுவிக்க
பரந்தாமனாக   நீயும்,  பார்த்திபன்  நிலையில் நானும்
மீண்டுமொரு முறை கீதை பெற,  நிலைகொள்ளா இம்
மனம் தவிப்பதை  எப்படி .உனக்கு உணர்த்துவேன் இறைவா!