Showing posts with label பழமொழிகள். Show all posts
Showing posts with label பழமொழிகள். Show all posts

Friday, December 28, 2018

சொ(நொ)ந்த கதை


பழமொழிகள் பெரும்பான்மை நம் வாழ்வில் என்றுமே  உண்மையானதாக நடந்தேறி விடும். ஒன்றை அறியாமல் செய்யும்  போது  நாம் அறிந்த அதற்கு பொருத்தமான பழமொழிகளை சுட்டிக் காண்பிப்பதும் நம் வாடிக்கை.

அது மாதிரி "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி." .. "நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்." "ஆசைதான் அழிவுக்கு காரணம்". இதெல்லாம் நம் செய்கைக்கு மாறாக ஏதாவது நடக்கக் கண்டு நமக்குள் எழும் பழமொழிகள். இன்னும் இதைப் போல் நிறைய இருக்கும். அவையெல்லாம் சட்டென நினைவின் அப்பாலுக்கு சென்று விடுகிறது.

25ம் தேதி மாலையன்று கடைக்குச் சென்று வீட்டுக்கு தேவையான (பலசரக்கு) சாமான்களை வாங்கி கொண்டு வரலாமென நாங்கள் அனைவரும் குழந்தைகள் புடைசூழ கிளம்பினோம். இரவு சாப்பாட்டுக்கு அப்படியே கடை அருகில் ஒரு புது உணவகம் உள்ளது. (அது என்னவோ பழைய உணவகந்தான்.! நாங்கள் இன்னமும் அதனுள் நுழையவில்லை. அதனால் அது இன்னமும் புதுசு.) அங்கேயே ஏதாவது இட்லி, தோசை என முடித்து விடலாம் என தீர்மானத்தோடு புறப்பாடு.

நான் பொதுவாக இந்த மாதிரி விடுமுறை நாட்களில், அவர்கள் (இளைய தலைமுறைகள்) வெளி கிளம்ப முடிவெடுத்தால், அவர்களுக்கு ஏதாவது பிடித்த மாதிரி சாப்பிட்டு விட்டு போகட்டும்.! நமக்கு சாதம் போதுமென்று இருந்து விடுவேன். இல்லையெனில், சப்பாத்தி ஏதாவது வாங்கி வரச் சொல்லி அன்றைய தின இரவு கச்சேரியை இனிதாக முடித்து விடுவேன்.

ஆனால் அன்றைய தினம் ஆசை வென்றது. "திங்க" ஆசை... "வாரந்தோறும் எ. பிக்கு சென்று "திங்க"ப்பதிவை ஒழுங்காய் படித்து சுவைத்தால் மட்டும் போதாதா? அப்படியென்ன  "திங்க "ஆசை உனக்கு?" என என் மனசாட்சி ஒரு கிலோ அரிசியை இடி இடியென்று இடித்து மாவாக்கிக் கொண்டிருக்கிறது. ( இப்படி இடித்தால் போதாது.. அரிசியில்லாமலே உன்னை இடித்து வலியை உணரச் செய்ய வேண்டுமென்று இடையிடையே வசவு வேறு.) போகட்டும்..! எத்தனை இடிகள் கொடுத்தாலும், ஆசை நின்று ஜெயிக்கும் என்ற உண்மை அதற்கு தெரியாததா?

விஷயம் என்னவன்றால்,  கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வைத்தோம். அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று திரும்பிய மகன் பில்லை செட்டில் பண்ணி முடிக்க, நான் கடைக்குள் சென்ற கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்து விட்ட என் பேத்தியை தூக்கியபடி வெளியில் படி இறங்கினேன்.  விக்கிரமாதித்தியன்  சிம்மாசனபடிகள் மாதிரி, நான் கால் வைத்த இரண்டாவது படி என்னைப் புறக்கணித்து உதறி விட நானும் மிச்சமுள்ள படியை உதாசீனம் செய்தபடி கடைசி படியில் தஞ்சமடைந்தேன். நல்லவேளை..! குழந்தையை இறுக பிடித்தபடி கீழே  வந்து அமர்ந்து விட்டதால், அவளுடைய தூக்கந்தான் கலைந்ததே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனால் என் வலது காலை இரண்டாவது படி பதம் பார்த்து விட்டதில் கடும் வலி பாதத்தில் தோன்றி விட்டது. கூட்டம் கூடியதால் அவமானம் தாக்க வலியை பொருட்படுத்தாது எழுந்து அமர்ந்தேன். அந்த வேண்டுதல் இல்லா உருளல் கடையில் மேலும் ஒரு சாமனை கூடுதலாக வாங்க வைத்தது.  அதுதாங்க  வலி நிவாரணி..! இப்ப என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த "அயோடக்ஸ்" அதுவும் "ஐ (அ) யோ பாவமே" ன்னு "டக்"நடை போடாமல் "ஸ்" என்று வேகமாக என் கையில் வந்து விழுந்தது. அதனின் அன்றைய விதி கடையிலிருப்பது அதற்கு கடைசி நாளானது.

நான் எப்போதுமே  பாட்டி வைத்தியத்தில் நம்பிக்கை கொள்பவள். எனவே அதிக வலியென்று காட்டிக் கொண்டால், மருத்துவமனையை சந்திக்க நேருமென்ற பயத்தில்., பல்லை கடித்தபடி, காலை இழுத்தபடி கூட வந்த அனைவரிடமும் கண்ணிலும் வலியை காட்டாது, கொஞ்சம் நடந்து சென்று, அந்த புது உணவகத்தில் இரண்டு இட்லிகளை விழுங்கி வைத்து வீடு வந்து சேர்ந்தோம்.  அதான் "திங்க"ஆசை. அவஸ்த்தை படுகிறாய்...! இப்ப ஜென்ம சாபல்யம் ஆயிற்றா?" என மெளனத்தில் விளையாடும் மனசாட்சி நிறையவே குத்தி காண்பிக்க, கால் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேலையை காண்பிக்க தூக்கம் வெகுவாகவே தொலை தூரமானது. அப்போதுதான் வலியை மறக்க அந்த பால் பாக்கெட் கதையை கையில் எடுத்தாளவும் வேண்டியதாகி விட்டது. பதிவை வெளியிட்ட பின்னரும் கால் வலி அன்றைய இரவு தூக்கத்தை தொலைவிலேயே வைத்திருந்தது. மணி மூன்றுக்குப்பின் சற்று கண்ணயர்ந்தேன். (மறுநாள் நான் போட்ட அன்றைய பதிவுக்கு வந்த மறு மொழிகளுக்கு கூட உடனடியாக நன்றி தெரிவித்து என்னால் பதிலளிக்க முடியவில்லை. விரைவில் அளிக்கிறேன்.)

காலை எழுந்தவுடன் மூன்றெழுத்து, முன்னதாக நின்றபடி அழைக்க அப்பமாக இருந்த கால் இப்போது மேலும் இரண்டு நாள் மூன்றெழுத்துடன் பயணித்ததில், கஜேந்திரன் காலாக மாறியுள்ளது. மேற்கொண்டு எப்படியாகுமென விளக்க நான் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டுமோ? இல்லை, இந்த வருடத்திற்குள் உன்னை ஒரு வ(லி)ழியாக செய்கிறேன் என கங்கணம் கட்டிக் கொணடிருக்கிறதோ என்  விதி தெரியவில்லை...! ஒரு இரண்டு நாள் பொறுத்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். இப்போது புரிகிறதா? ஏன் பழமொழிகளின் தாக்கத்தை சுட்டி காட்டினேன் என..! எனவே நடக்க வேண்டியவைகள் நடந்துதான் தீரும். (ஆனால் என்னால்தான் வீட்டுக்குள்ளேயே  வலது கால் ஊன்றி நடக்க இயலவில்லை.) என்னவோ "பகிர்ந்து கொண்டால், மன பாரம் குறையும்" என்ற புதுமொழிப்படி  இந்தப்பதிவும் உருவாகி விட்டது.

பி. கு
"எப்படியெல்லாம் ஒரு பதிவை தேத்துறாங்க "என நீங்கள மனதில் நினைப்பதற்குள், உண்மையிலேயே இந்த வருட முடிவுக்குள், அதுவும் இந்த இறுதி மாதத்தில் ஒரு நாலு பதிவாவது போட வேண்டும் என நான் நினைத்ததுதான் இந்த பதிவுக்கான காரணம். (அப்போ அட ராமா. .! இன்னொரு கண்ராவி வேறே இருக்கா?) முணுமுணுப்பு கேட்கிறது.. பொறுத்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.!
           
                   வலையுலக பதிவர்களுக்கு
                   அழகுக்கு அழகு செய்வது                           
                 பொறுமையெனும் நற்குணமே..!