Showing posts with label அறுசுவை. Show all posts
Showing posts with label அறுசுவை. Show all posts

Monday, November 24, 2025

 வெந்தய கஞ்சி.

அன்றாடம் சமையலுக்கு பயன்படும் இந்த வெந்தயம், உடலுக்கு நலம் தரும் ஒரு அருமையான மருந்தின் வகையையும் சார்ந்தது. 

வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை அடங்கியுள்ளது. இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது.

நன்றி கூகுள். 


இந்த வெந்தயத்தை ஒரு கால் டம்ளர் அளவு எடுத்துக் கொண்டு, நன்கு அலம்பி விட்டு நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் நீரிலேயே சற்று நேரம் ஊற வைக்கவும். 



அத்துடன் கால் டம்ளர் பாசி பருப்பும், அதை அளவு பச்சரியும் எடுத்து கொண்டு இவ்விரண்டையும் நன்கு அலம்பிய பின், ஊற வைத்த வெந்தய கலவையையும் போட்டு குக்கரில் பா. பருப்புக்கும் அரிசிக்குமாக சேர்த்து ஒரு ஒன்றரை, அல்லது, இரண்டு டம்ளர் தண்ணீரையும் சேர்த்து வைத்து நன்கு நாலைந்து விசில் வரும் வரை வைக்கவும். 



குக்கர் விசில் விட்டு ஓ.கே என்று சொன்னவுடன் குக்கரில் வேக வைத்த இந்த மூன்றையும் எடுத்து நன்கு மசித்து எடுத்த படம் முதலாவது. இத்துடன் தேவையான அளவு நீர் சேர்த்து, மறுபடியும் குழைவாக இருக்க வேண்டி அடுப்பில் சிம்மில் வைத்து அடிப் பிடிக்காமல், பத்து நிமிடம் வரை கிளறவும். (படம் இரண்டாவது.) 
பிறகு அத்துடன் தேவையான வெல்லம் (சிலருக்கு வெல்லம் கொஞ்சம் அதிகமாக இருந்தால், பிடிககும். சிலர் குறைவாகவே சேர்த்து கொள்வார்கள். ஆயினும் அதிக வெல்லம் சேர்த்தால் அதன் பெயர் கஞ்சி என்பதிலிருந்து மாறி விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ) சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 


வெல்ல வாசனை போனதும். (வெல்லம் நன்கு கரைந்ததும் வெல்லத்தின் பச்சை வாசனை அகன்று விடும். அதுதான் வெல்ல வாசனை போகும் பக்குவம். ) (ஆனால், வெல்லத்தில் கற்கள் மற்றும் அசத்தங்கள் இருந்தால்,   (இதை நாம் பார்த்தவுடனே தெரிந்து விடும்.) வெல்லத்தை கொஞ்சமாக நீர் சேர்த்து சுட வைத்த பின் அது நன்றாக கரைந்ததும் வடிகட்டி அந்த வெந்தய அரிசி, பருப்பு கலவையில் கலந்தும் விடலாம். இதுதான் ஒரு  சிறந்த முறை. சமயத்தில் வெல்லம் நன்றாக இருந்தால், இந்த வடிகட்டலுக்கு தேவையிராது.) அந்த பச்சை வாசனை போனதும், இரண்டு டம்ளர் காய்ச்சிய பால் சேர்த்து  விடவும். 


பால் சேர்த்த பின் நன்கு ஒரு கொதி வந்ததும், ஏலக்காய் பொடி (தேவைபட்டால்)  சேர்க்கவும். ஆயினும் ஏலம் சேராத அந்த வெந்தய ருசி மாறாது  அப்படியே பருகலாம். 


பாலோடு சேர்ந்து கொதித்த இந்த கஞ்சியை சற்று சூடாகவே குடிக்கலாம். சூடு ஆறிய பின்னும் அருந்தலாம். அது இன்னமும்  சுவையாக இருக்கும். வெல்லம் வேண்டாம் என்பவர்கள் வெல்லத்தை தவிர்த்து வெறும் பால் மட்டும் சேர்த்து குடிக்கலாம். அவரவர் விருப்பம். 

இந்த கஞ்சி உடல் சூட்டிற்கு, வாய் புண், வயிற்றுப் புண் போன்றவைக்கும் மிக சிறந்தது. ஒரிரு நாட்கள் விட்டு விட்டு இவ்விதம் அருந்தி வந்தால், வாயில், அல்லது நாக்கில் உடல் சூட்டினால் உண்டாகும் இந்தப்புண்களின் நோவிலிருந்து விடுபடலாம். என் அனுபவத்தில் இது ஒரு கை கண்ட மருந்து.

இரு நாட்களுக்கு முன் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் பதிவில் பல பாயாசங்களின் பதிவை கண்டதும், நானும் இதை பல மாதங்களுக்கு முன்  படங்களுடன் தொகுத்து, எழுதி வைத்ததை ஒதுக்கி வைத்து விட்ட நினைவு வந்தது. உடனே தேடி எடுத்து பகிரலாமென பகிரகிறேன். கூடவே நீண்ட நாட்களாக பதிவுகளை போடாதினால், பதிவுகளை போடவும் மறந்துவிடுமென தோன்றியதால் இந்த உடனடி முடிவு. இதைப் படிப்பவர்களுக்கு, என் அன்பான நன்றிகள். 🙏. 

Saturday, January 11, 2025

பழகிய இனிப்பும், காரமும்.

 மணிக் கொழுக்கட்டை.


இது கடாயில் ந. எண்ணெய் சிறிது ஊற்றி அடுப்பில் காய வைத்த படம்.   


இது இரண்டு டம்ளர் அரிசி மாவு, அதற்கு தகுந்த உப்பு, கொஞ்சம் காரப்பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து கலந்து வைத்த கலவை.


இது  அடுப்பில் கடாயில் வைத்த அந்த ந. எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் கலந்து வைத்த அரிசி மாவு கலவையை விட்டு கை விடாமல் கிளறி அதை ஒரு வழியாக்கும் படம். 


இது அந்த கெட்டியான மாவு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்த படம். 


இந்த மாவு உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் போல் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். 


"நம் முன்னைய நிலை என்ன..?  என எண்ணி  கலங்கிய வண்ணம் இருந்தாலும்,   உ. ப. க. பாவாகிய நாங்கள் சி. வத்தல், ப. மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் இவைகளின் நட்பில் இணைந்து ஒரு கூட்டாகி இருக்கிறோம். 
 

அது போல் எங்களை முதலிலேயே முறையே படங்கள் எடுத்து  பிரசுரபடுத்தவில்லையென்றாலும், இப்போது சிம்மாசனத்தில் வந்து அமர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளோம் 


இது அந்த பருப்பு இட்லி மீண்டும் தன்னைச் சுடும் நெருப்பின் தணலால் மனம் உடைந்து உதிர்ந்து வரும் நிலை. 


அப்பாடா..! ஒரு மட்டும் இதெல்லாம் கலந்த கலவையாக நான் உருபெறுமாறு செய்து ஒரு பெயரையும் சூட்டி விட்டார்கள். 😀

இனி இனிப்பு கொழுக்கட்டை. 

நல்ல பெரிய தேங்காயாக( சற்று முதிர்ந்தது..அப்போதுதான் பூரணம் நன்றாக இருக்கும்.) ஒன்றை உடைத்து பொடிதாக துருவி வைத்துக்கொள்ளவும். 200 கிராம் பாசிப்பருப்பு, 100 கிராம் க. பருப்பு இரண்டையும் எடுத்துக்கொண்டு ( அடுப்பை பற்றவைத்துக்கொண்டு) வெறும் கடாயில் சற்று பொன்னிறமாக வறுத்து பின் நன்கு ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடித்துக் கொள்ளவும். அதே கடாயில் வெல்லத்தை உடைத்துப் போட்டு ( மண்டை வெல்லமாக இருந்தால் பெரிய சைசில் ஒரு உருண்டை அளவு போதும்! இந்தப் பக்குவத்திற்கு சரியாக இருக்கும். ) கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்ததும் அதை வடி கட்டிக்கொள்ளவும். பிறகு கடாயில் வடி கட்டிய வெல்லத்துடன் துருவிய தேங்காய் பூவை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டேயிருக்கவும். தேங்காய் பூவும் வெல்லமும் சேர்ந்து வரும் சமயம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பாசி பருப்பு பொடியை சிறிதுசிறிதாக அதனுடன் கலந்து கிண்டி கெட்டியாகும் தருணத்தில் ஏலப்பொடி சிறிதளவு சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு வேறு பாத்திரத்தில் ரெடியான வெல்லப் பூரணத்தை மாற்றிக் கொள்ளவும். பாசிப் பருப்புக்கு பதிலாக கடலைப் பருப்பை மட்டும் வறுத்து பொடி செய்தும் பூரணம் செய்யலாம். அல்லது பாதி பாதி அளவாக இரு பருப்பையும் எடுத்துக் கொண்டு தனித்தனியே வறுத்து பொடி செய்து போடலாம். இந்த கலவையும் ருசி நன்றாகவிருக்கும். நான் முக்கால்வாசி இந்த முறையில் செய்வேன். சில பேர் பருப்புகள் எதுவும் கலக்காமல் வெறும் தேங்காய் பூரணம் மட்டும் செய்வார்கள். போளிக்கு பூரணம் செய்வது போல் கடலைப் பருப்பை வறுத்து ஊற வைத்து அரைத்து தேங்காய் வெல்லப் பூரணத்துடன் கலந்தும் கொழுக்கட்டைகள் செய்யலாம். இப்படியான நாலு விதங்களில் நமக்கு எது சௌகரியபடுகிறதோ அவ்விதம் செய்து கொள்ளலாம். 

இத்தனை விதங்களில் உண்டான இனிப்பு பூரணத்தை ஆறியதும் இவ்விதமாக தனிதனியே தட்டில் உருட்டி வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை மேல்மாவையும் பூரணத்தையும் ஒருசேர தொட்டு செய்தால் கொழுக்கட்டைகள் ஒழுங்கான வடிவத்தில் வராது சிறிது அடம்பிடிக்கும்.

ஒரு கிலோ பச்சரிசி எடுத்து சுத்தப்படுத்தி மாவரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து மாவாக்கி அதை பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலேயே அரிசியை நன்கு கழுவி வடிகட்டிய பின் அரைமணி நேரம் ஈரத்துணியில் பரப்பி ஆற வைத்த பின்னர் மிக்ஸியிலேயே மாவாக்கி கொள்ளலாம். வீட்டில் விசேடங்களுக்கு ஸ்வாமி நேவேத்தியங்களுக்கு இப்படித்தான் நான் மாவு தயாரித்துக் கொள்வேன்.அல்லது தண்ணீரில் ஊற வைத்த ப. அரிசியை மிருதுவாக அரைத்து அந்த விழுதில் சற்றே நீர்க்க தண்ணீர் கலந்து கடாயில் கிண்டியும் தயாரித்துக் கொள்ளலாம். 

அவ்வாறு தயாரான மாவை ஒரு பங்குக்கு ஒன்றரை என்னும் அளவு விகிதத்தில் தண்ணீருடன் சிறிதளவு பொடிஉப்பையும் கலந்து கரைத்துக் கொள்ளவும். பின் அடி கனமான கடாய் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அந்த மாவு கரைசலை விட்டு கெட்டியாக கிண்டிக் கொள்ளலாம். 


இது வறுத்த, க. ப. பா. ப. 


இது பொடிதாக துருவிய  தேங்காய் துருவல்.
 

இது வறுத்தப்பருப்புக்களை மிக்ஸியில் பொடித்த மாவுகள்.  


இது வெல்லமும், தேங்காய் துருவலும் கலந்த ஆரம்ப கலவை. 
 

இது வெல்லம் கரைந்து, பருப்பு பொடி சேர்த்த கலவை. (இது முதல் படமாக இதற்கு கீழுள்ளதை பின்னுக்குத் தள்ளி  சற்றே முன்னுக்கு வந்து விட்டது. நல்ல அறிவாளி.) 


இது வெல்லம் தேங்காயுடன் கலந்த கலவை. 


இது கிளறி முடித்ததும் ஆற வைத்த பூரண கலவை.
 

இது ஆறியதும் உருட்டி வைத்த பூரண உருண்டைகள். 


இது அதற்கான மேலே சொன்னபடி தயாரித்த மேல் மாவு உருண்டைகள். 


இது மேல் மாவை வைத்து கப் செய்து பூரணத்தை தன்னுள் அடக்கியபடி ஆனால், முழுமையான பூரணத்துவத்தும் பெறாத  கொழுக்கட்டைகள். 


இது இட்லி தட்டில் வேக வைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்ட கொழுக்கட்டைகள். 


இது வெந்த பின் நாம் சாப்பிட போவதற்காக காத்திருக்கும்  இனிப்பு வெல்லப்பூரண கொழுக்கட்டைகள்

"என்ன...! இப்போது நீங்கள் சாப்பிட தயாரா..? என படங்கள் கேட்கின்றனவா... ? 

புத்தாண்டின் ஆரம்பமாக சென்ற வருட இறுதியில் சென்று வந்த பயணத்தில் ஒரு இறை பதிவு ஒன்றை எழுதி வெளியிட்டேன் அது அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அந்தப் பதிவின் மனசோர்வை களைவதற்காக அடுத்து இனிப்பாக ஒன்றும், அதற்கு ஜோடியாக காரத்துடன் ஒன்றுமாக ஒரு பதிவு எழுதுவோமேயென்று எல்லோரும்/எல்லோருக்கும்  அறிந்த, அனைவரும் அடிக்கடி செய்யும் இனிப்பு, காரங்களையே படங்களுடன் பதிவாக எழுதி  பகிர்ந்திருக்கிறேன். இவை நம்முடன் அடிக்கடி வந்து  பழகியவைதாம் என்பதால் பொறுத்து, மன்னித்துக் கொள்ளவும். 

பதிவை படித்து படங்களையும் ரசிக்கும் சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

Tuesday, November 12, 2024

விருப்பங்களில் விரும்புவது.

 குணுக்கு.

நேற்று எபியில் சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களின் தயாரிப்பான  தஞ்சாவூர் அடையை பார்த்தவுடன் எனக்கும் அடை சாப்பிடும் ஆவல் வந்து விட்டது.  அடையும் செய்து சாப்பிட்டு பல மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், எங்கள் வீட்டு சிறு குழந்தைகள் (பேரன், பேத்திகள்) அடையென்றால், அலர்ஜியாகி வேண்டாமென சொல்லி விடுவார்கள். ஏனோ அவர்களுக்கு இந்த அடை தோசை  பிடிப்பதில்லை. அப்படி பிடிக்க வைக்கவும் (வறுப்புறுத்தி) கற்றுத் தரவில்லை. சாதா மாவினால் செய்யும்  தோசையைதான் விரும்பி பிடித்து  சாப்பிடுவார்கள். நேற்று வீட்டிலும் இட்லி மாவு இல்லை. பின் அவர்களுக்கு என கோதுமை மாவு, ரவை சேர்த்து  கரைத்து விட்ட தோசையாக  வேறு செய்ய வேண்டும். அது வேண்டாமென இந்த குணுக்கைத் தேர்ந்தெடுத்தோம்.

இதுவும் அடை மாவு மாதிரிதான் தயார் செய்து கொள்ள  வேண்டும்.இது அனைவரும் அறிந்ததே..! 


ஒரே அளவில் நான்கு பருப்புக்களையும் (து. ப, பா. ப, க. ப, உ. ப,) ஒவ்வொரு டம்ளர் அளவு எடுத்துக் கொண்டு நன்றாக அலம்பி பின் பருப்புக்கள் மூழ்கும் வரை ஊற வைத்தேன். புழுங்கல் அரிசி ஒரு டம்ளர், அத்துடன் முக்கால் டம்ளர் பச்சரிசி இரண்டையும் எடுத்து அதையும் அலம்பி பின் மூழ்கும் அளவுக்கு நீரில் ஊற வைத்தேன். 

இரண்டும் நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஊறியதும், முதலில் அரிசி கலவையுடன், சி வத்தல்10 , பச்சை மிளகாய் 3, தேவையான கல் உப்பு, கறிவேப்பிலை நான்கைந்து ஆர்க்கு, ஒரு டீஸ்பூன் பெருங்காயம் பொடி என சேர்த்து மிக்ஸியில் சற்று, கரகரப்பாக அரைத்துக் கொண்டேன். பின்னர் பருப்பு கலவையை நன்றாக அதுவும் தோசைக்குப் போல தண்ணீர் நிறைய விட்டு நைசாக அரைப்பது போல இல்லாமல் சற்று கொரகொரப்பாக கெட்டியாக அரைத்துக் கொண்டேன். 


இத்துடன் தேங்காய் பூ துருவி சேர்க்கலாம். இல்லை பெரியதோ, சின்னதோ, வெங்காயம் பொடிதாக நறுக்கி சேர்க்கலாம். தேங்காய், வெங்காயம் இரண்டுமே இரு வேறு மாதிரியான சுவைகளை கண்டிப்பாகத் தரும். ஆனால், நான் இதை சேர்க்கவில்லை. பதிலாக கொத்தமல்லி தழைகள் வீட்டில் நிறைய இருந்தன. அதில் இரண்டு கைப்பிடி அளவிற்கு எடுத்து பொடிதாக நறுக்கிச் சேர்த்தேன். 


கடாயில் சமையல் எண்ணெய் விட்டு அடுப்பில் ஏற்றிய பின், பருப்புக்களின் நிஜமான சுவையுடன்  கூடிய அந்த கலவையை கொஞ்ச கொஞ்சமாக கிள்ளி சிறு சிறு உருண்டையாக எண்ணெயில் போட்டு எடுத்தேன். மாலை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டனர். இரவு மோர் சாதத்திற்கும் அவர்கள் விருப்பமாக அதை தொட்டுக் கொண்டு சாப்பிட்டனர்.( இரவில் எப்போதும் அவர்களுக்கு மோர் சாதந்தான் பிடிக்கும்.) 


அவர்களுக்கு பிடிக்காத அடையை செய்து "உடம்புக்கு நல்லது..! அத்தனையும் புரதம்..!  சாப்பிடு, சாப்பிடு..! " என கண்டிப்பதை விட, அவர்களுக்கு பிடித்ததை செய்து தரும் போது அவர்களும் அதே புரதத்தை விரும்பி சாப்பிடுவதை பார்க்கும் போது சந்தோஷம் வருகிறது. ஆனால் என்ன ஒன்று..! எண்ணெய்யில் பொரித்து தருவதுதான் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. சரி.. என்றோ ஒரு நாள்தானே இப்படி என சமாதானமடைய வேண்டியதுதான்...! இப்படியாக இந்த குணுக்கு நேற்று எங்கள் வீட்டில் எதிர்பாராமல் தோன்றியது. 


இன்று மீதமிருக்கும் மாவு அதன் துணையாக பல பொருட்களை சேர்த்துக் கொண்டபடி, நான் வேண்டாமென ஒதுக்கிய வெங்காயத்தின் மனம் நொந்து விட்டதால், அதையும் பேசி  சமாதானப்படுத்தி உடன் அழைத்துக் கொண்டு அடையாக மாறும் என நினைக்கறேன். மாற்றங்கள் நம்மை போல், இல்லை நம்மை விட அதற்கும் பிடிக்குமல்லவா? 

வேறு படங்கள் எதுவும் ஆரம்பிக்கும் போது எடுக்கத் தோன்றவில்லையாததால், எடுத்துள்ள படங்களுடன் சூட்டோடு சூடாக எழுதிய பதிவிது. நீங்களும் இந்த மாதிரி அனேக முறைகள் உங்கள் வீட்டில் செய்து ருசித்திருப்பினும், இந்த சூடான குணுக்கை எடுத்துக் கொள்ளுங்கள். 

நன்றி என் நட்புலக சகோதர சகோதரிகளுக்கு.🙏. 

Sunday, September 29, 2024

இனிப்பும், கசப்பும்

 பாகல் உசிலி.

இறைவன் படைப்பில் அனைத்து காய்கறிகளும் பொதுவாக ஒவ்வொரு சக்திகளையும் கொண்டு உருப்பெற்றவை. ஆனால் இப்போது இன்றைய காலகட்டத்தில் நாம் எதை அதிகமாக எடுத்துக் கொண்டால் நல்லது, அல்லது எதை குறைத்தால், (முற்றிலுமாகவே) நல்லது என்ற விவாதத்தில் உள்ளோம். 

அந்தக் காலத்தில் மதிய உணவு என எடுத்துக் கொண்டால்,நல்ல சுவையான பல காய்கறிகளுடன் சாதம், பருப்பு, சாம்பார், ரசம், மோர் என அன்றாடம் நல்ல உணவைதான் சாப்பிட்டு வந்தோம். ஆனால், அந்த உணவிற்கேற்ற உடல் உழைப்பும் அப்போது இருந்தது. 

நாம் வெளியில் செல்வதானால் ,நம்  கால்களின் நடையைதான் நம்பினோம். "எப்படி இவ்வளவு தூரம் தீடிரென புறப்பட்டு வந்தாய்..?" என கேட்கும் உறவுகளுக்கு" பார்க்க வேண்டுமென நினைத்தேன். அதனால் நடராஜா சர்விஸில்தான் வந்தேன்.!" என்போம். 

நடை உடலுக்கு மிக, மிக நல்லது என இப்போது தரும் முக்கியத்துவத்தை அப்போது யாரும், யாருக்கும் கற்றுத் தந்ததில்லை. 

அப்போது அதிசயமாக ஒவ்வொரு ஊர்களிலும், உலவும் மிதி வண்டிகள் வந்து மனிதர்களின் கால்களுக்கு ஒரு பலத்தை தருகிறோம் என்ற ஆசையை விதைத்தது. அவ்வாறு மிதி வண்டிகள் வைத்திருப்பவர்கள் பெரும்  பணக்காரர்களுக்கு ஒப்பானவர்களாக மாறினர். 

காலம் மாற, மாற நமக்கு அடி பணியும் விலங்கினங்களை துன்புறுத்தி வெகு தூரத்தை கடக்க கூட பல வண்டிகள் வந்து உதவின. இந்த ஆசைகளில் சிக்கிய  இருசக்கர வண்டிகள் பிரபலமாகி தாங்களும் மண்ணில் இடம் பிடித்தபடி  ஆங்காங்கே பறக்க ஆரம்பித்தன. 

அதற்கு போட்டியாக பேருந்துகள் பல உருவாகி ஒவ்வொரு ஊர் விட்டு பல ஊர்களையும் சுலபமாக கடந்து காண்பித்தது. இதற்கிடையே பல சொகுசு வண்டிகளை சொந்தமாக வாங்கி தங்களின் சொந்த ப(ய)ணத்தில் மனிதர்கள் தம் கால்களுக்கு ஓய்வு தந்தனர். ஆக மொத்தம் மனிதர்கள் இறைவன் அளித்த தங்கள் கால்களை நம்பாமல், இப்படி சொகுசாக வாழவும் முடியும் என்ற ஆசை வளையத்தில் வசமாக மாட்டிக் கொண்டனர். 

பச்சை பசேலென்ற பசுமையான நிறைவுடன் வளர்ந்த தாவரங்கள் காய்கறிகள், மனிதர்களின் இந்த  பயண ஆசைகளுக்காக, தங்களின் ஜீவாதாரமான,  மண் வளத்தை நிராகரித்து, எப்படியும் தங்களாலும் வளரவும் முடியும் என நிரூபித்து காட்டின. 

அதற்கு காரணம் தாங்கள்தாம் என்ற குற்ற உணர்ச்சி ஏதுமற்ற மனிதர்கள் தங்கள் பயணங்களை வசதி மிக்கதாக செய்து கொண்டபடிக்கும், பொன்னான மண்வளத்தை கான்கீரிட் இருப்பிடங்களாகவும், அந்த இருப்பிடங்களின் வசதிக்காக மண் சாலைகளை ரசாயண கலவை சாலைகளாகவும் ஆக்கி, விளையும் தாவரங்களை அலட்சியபடுத்தி மகிழ்ந்தனர். 

தாவரங்கள் அப்போதும் தங்கள் கடமையை செய்ய அஞ்சவில்லை. மனிதர்கள்  வகுத்து தந்த மாற்றுப்பாதையில் தங்கள் விளைச்சலை நம்பியபடி வாழ்ந்து காட்டின. அதனால், அதனின் சத்துள்ள திடங்கள் முன்பு போலில்லை.. கணிசமாக குறைந்தனவென்ற புகாரையும் மௌனமாக ஏற்றுக் கொண்ட.ன. 

A முதல் Z வரை அதனிடம் இருந்த சக்திகள் இவர்களால் பொலிவிழந்து போனதற்காக அது முகம் சுளிக்கவில்லை.  நாளாவட்டத்தில் மக்கள்  தங்கள் வீட்டுக்கு நாலடி தள்ளி இருக்கும் கடைகளுக்கு கூட தங்கள் உடமையாகிய சொகுசு காரில் சென்று சாமான்களையும், காய்கறிகளையும் வாங்கவும் ஆரம்பித்தனர். 

நாடு விட்டு நாடு, ஊர், ஊராக செல்லும் வசதிகள் என வந்த விஞ்ஞான வளர்ச்சிகள்  நல்ல பயனுள்ள ஒரு  வாய்ப்பாக ஆக்கி காட்டினும், மக்களிடத்தில் பல நோய்களின் தாராளமயம் வேகமாக பரவியது. 

எந்த காய்கறியை சாப்பிட்டால், எந்த நோய் நம்மை அண்டாது விலகும் என்ற ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இடையில் வெற்றி பெற்ற அன்னிய மருந்துகளும், மாத்திரைகளும் தாங்கள் முன்னணி கண்ட திருப்தியில் திளைத்தன. 

இப்போது" இந்த மாத்திரைகளின் வண்டியில்தான் நம் வண்டி தினமும் ஓடிக் கொண்டிருக்கிறது.." என பெருமையாக காண்போரிடமெல்லாம் (நம் சுற்றங்களை, நட்புகள் ) சொல்லி அதை (மாத்திரை, மருந்தை) கௌரவபடுத்தவும் தொடங்கினோம். 

இப்போது ஏன் இந்த அலசல் என நீங்கள் நினைக்கலாம். இன்று இனிப்பு சக்தி என்ற ஒன்று உலகிலுள்ள அனைவரிடமும் அதீதமாக பரவியுள்ளது. அதை முற்றிலும் குணப்படுத்த மருந்தில்லையென்றாலும், கட்டுப்படுத்த பல மருந்துகள் உள்ளன. ஆனாலும் சிலது சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் போகும் அவஸ்தைகளும் அதில்  இருக்கின்றன. 

உணவுகளில் அறுசுவையில்,  இனிப்பு, புளிப்பு, உப்பு  இம்மூன்றையும் தினமும் அதிகமாக உட்கொள்வதை தவிர்த்து கசப்பு, துவர்ப்பு, காரம் (அளவுக்கதிகமான காரங்கள் இல்லாத காரம்  )  என்ற சுவைகளை  குறைவாகவேனும்  தினமும் உட்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என அந்த காலத்தில் நம் வீட்டு  பெரியவர்கள் கூறி வந்தனர். ஆனால், நம் நாவின் சொல்படி கேட்டு வளர்ந்த நமக்கு முதலில் கூறியவைதான் பிடித்தமான உணவாக இருந்தது.

அந்த கசப்பு சுவையுடன் கலந்த பாகல் அனேக பேருக்கு சிறு வயதில் அனைவருக்குமே  பிடிக்கவே  பிடிக்காது. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட வயது வரவேண்டுமென்றும் அப்போது சொல்வார்கள். 

பாகற்காயில் கசப்பு சுவை உள்ளதால், இனிப்பு (சுகர்) பேஷண்ட்ஸ் இரண்டொரு நாளைக்கு ஒரு  தடவை  உணவோடு இதை செய்து  சாப்பிடலாம். (அல்லது இதையை உணவாகவும் சாப்பிடலாம்.) அது போலவே துவர்ப்பான வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய் இவைகள் இந்த உபாதையை கட்டுக்குள் வைத்திருக்கும் எனவும் நம்புவோம். அதுவே ஒரு சிறந்த  மருந்தாகும். (உணவே மருந்து.) 

ஆனாலும், உணவில் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொண்டு, அரிசி, கோதுமை போன்றவற்றை கூடிய மட்டும் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக சிறுதானிய வகைகளை தேர்ந்தெடுத்து கொண்டால் நல்லதென்பது சிலர் வாதம். 

சிறுதானிய வகைகளையும், அளவோடு சாப்பிட்டு, காய்கறிகளையும் அளவோடு சாப்பிட்டால், இந்த நோயின் உபாதைகளிலிருந்து சிறிது மீளலாம் என்பது சிலர் வாதம். 

அந்தந்த நேரத்திற்கு சிறிதளவு மட்டும் உண்டு, கிடையாய் கிடைக்காமல் நடையாய் நடந்தால், நல்லதென்போரும் உண்டு. 

என்னவோ.. போங்கள்... ! ஆனால், இந்த இனிப்பு உபாதை  நம்மோடு இருக்கிறது என்பதை கண்டு பிடித்தது முதல் மன உளைச்சல்தான். நம்மோடு இருந்து சௌக்கியமாய் அது வாழ்ந்து விட்டுத்தான் "அதுவும் நம்முடன் போகும்.. " என்றால் அதுவும் மிகையாகாது. 

சரி.. சரி.. இந்த வம்பெல்லாம் இப்போது எதற்கு..? எங்கேயோ ஆரம்பித்து, தலைப்பை வேறு விதமாக போட்டு விட்டு அதன்படி சொல்ல வந்ததை சொல்லிச் செல்லாமல், சுற்றி வளைத்து மூக்கைத் தொடும் பாணியாக, வேண்டாததை பிதற்றாமல், வேண்டியதை மட்டும் சொல் என்கிறீர்களா?  அதுவும் சரிதான்..!! 

இப்போது அனைவரும் நம் உடம்புக்கு நல்லதென கூறும் இந்த பாகற்காய் உசிலி செய்முறையை பார்ப்போமா

நல்லதான பாகற்காய் இரண்டை வாங்கி, அலம்பி பின் அதை இது போல் சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.  


ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொண்டு அத்துடன் அரிந்த பாகலை போட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக் கொள்ளவும். 


வழக்கமாக காய்கறி கலந்த பருப்பு  உசிலிக்கு போடுவதை போல துவரம். பருப்பு, கடலை பருப்பு பாதிக்கு பாதியாக எடுத்து கொண்டு அலம்பி ஊற வைக்கவும். 


அரை மணிக்கும் மேலாக ஊற வைத்த அந்த பருப்புடன் அதில் காரத்திற்கு  (அவரவர் விருப்பம்.) சிகப்பு வத்தல், ஏழு, இரண்டு பச்சை மிளகாய், தேவையான கல் உப்பு போட்டு கறிவேப்பிலை இரண்டு ஆரக்கு  பெருங்காயப்பொடி முதலியவற்றை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக  அரைத்துக் கொண்டு, அதை இட்லிதட்டில் இட்லி மாதிரி வேக வைத்துக் கொண்டு பின்  அதை கடாயில் சமையல் எண்ணெய் விட்டு உதிர்த்துக் கொண்டு, அத்துடன் இந்த வெந்த பாகற்காயை கலந்து சிறிது நேரம் வதக்கினால் சுவையான பாகல் உசிலி தயார். 

இதை மதிய உணவாக நினைத்து நிறைய தட்டில் போட்டுக் கொண்டு இத்துடன் ஒரு கரண்டி, அல்லது எண்ணி  நாலைந்து பருக்கை சாதத்தை இத்துடன் கலந்து சாப்பிடவும். இதுவும்  அவரவர் விருப்பம். ஹா ஹா ஹா. 

ஆக மொத்தம் அன்று நடந்த நடைகளாக பகல் பொழுதினில் நாம் செல்லவேண்டிய இடங்களுக்கென்று எங்கே சென்றாலும் வெய்யில், மழை பாராமல் நடந்தோம் . ஊரில் அருகில் உள்ள  ஒவ்வொரு கோவில்களை காலை, மாலை என்று நடந்து சென்று தரிசித்ததோடு, அங்கு உட், வெளி பிரகாரங்களை சுற்றி வருவதை ஒரு நடைப்பயிற்சியோடு கலந்த பக்தியாக்கி சந்தோசமும், திருப்தியும் அடைந்தோம். நடுவில் இவற்றை தொலைத்து விட்டு, இல்லாத நோய்களை சொந்தமாக்கி கொண்டு, அவைகளின் தீர்விற்கு மீண்டும் இவற்றுக்கெல்லாம் இப்போது முயற்சியும், பயிற்சியும் செய்கிறோம். எப்படியும் இதுவாவது "நடந்தால்" சரிதான்..! :))

நடை பாடல் ஒன்று. இது போல்  நடையை வலியுறுத்தி நடை பாடல்கள் பல உண்டு. நடக்கும் நடைகளை குதர்க்கம் சொல்லி கேலி காட்டினும், தன் எழுத்து நடையில் நடை பிசகு காணாத வண்ணம் எழுதிய அந்த  பாடலாசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.

இந்த வழக்கமான என் பிதற்றலுக்கும் அன்புடன் கருத்துரை தரும் அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

Monday, September 2, 2024

தேங்காய் வறுத்த பொடி.

உலக தேங்காய் தினம். 

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். இப்போதெல்லாம் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொன்றின் தினமாக அடையாளம் காட்டப்படுகிறது. 

இன்று உலக தேங்காய் தினமாம்.அதாவது 2.9.24 ஆகிய இன்று  தேங்காய்களின் சிறப்பை உணரும் தினமாக சிறப்பித்து குறிப்பிட்டுள்ளனர்.. 

மங்கலகரமான இந்த  தேங்காய்கள்  ஒரு வீட்டிற்கு அன்றாடம் எப்போதும் எப்படி இன்றியமையாதது போலவோ, அது போல், அது தரும் பயன்களும் நமக்கு எண்ணிலடங்காதது அல்லவா. ? வீட்டில் தேங்காய் இல்லாத சமையல் என்றுமே ருசிக்காது என்பதையும் நாமறிவோம். 

வீட்டின் எந்த ஒரு சுபமான  விஷேடங்களுக்கும் வெற்றிலை, பாக்கு பழங்களுடன் சபையில் வந்து முன்னிற்பது இந்த காய்கள்தானே..! இறைவனுக்கு நாம் தவறாது பல பழங்களுடன் தேங்காய்களை சமர்ப்பிப்பது என்பது காலங்காலமாய் நம்மிடையே இருந்து வரும் ஒரு சம்பிரதாய பழக்கந்தானே ..! . தவிரவும் நம் துயரங்கள் நீங்க இறைவனிடம் வேண்டிக் கொண்டு நம் துன்பங்கள் அனைத்தும் சிதறிப் போகும் வகையாக சிதறுகாயாக உடைக்கப் பயன்படுவதும் இதுதான் என்பதையும் அனைவரும் அறிவோம். . 

நம் சந்ததிகளை (பிள்ளைகளை) அன்புடன் கவனித்து வளர்த்து போற்றுவது போல இந்த தென்னை மரத்தையும் ஒரு பிள்ளையாக்கி "தென்னம்பிள்ளை" என அவைகளை செல்லத்துடன் அடைமொழியாக விளித்து நாம் ஒவ்வொரு வீட்டிலும் அன்புடன் வளர்க்கிறோம்

சில பெற்றோர்கள் சமயங்களில் தங்கள்  பிள்ளைகளின் மேல்  வரும்,கை,கோப,தாப உணர்ச்சியில், "இந்தப் பிள்ளையை பெற்று வளர்த்ததை விட ஒரு தென்னம் பிள்ளையை வளர்ந்திருந்தாலும் அது எனக்கு கடைசி வரை உபகாரமாக இருந்திருக்கும்" என மனம் வெறுத்து தென்னை மரத்தை  தம் பிள்ளைகளுக்கும் மேலாக உயர்த்திக் சொல்வார்கள். 

இங்கு (பெங்களூரில்) ஒரு திருமணம், கிருஹபிரவேசம் போன்ற சுப காரியங்களுக்கு பச்சை தென்னை ஓலையில் அழகாக பந்தல் பின்னி வாசலில் கட்டி கொண்டாடுகின்றனர். (இது மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபடுகிறது என்பது வேறு விஷயம்.) எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தாலும் இப்போது பழகி விட்டது. 

 இத்தனை சிறப்பு மிக்க தேங்காய் தினத்தை பார்த்ததும், தேங்காயை வைத்துச் செய்யப்படும் இந்த உணவு நினைவு வந்தது. இது ஏற்கனவே நான் திங்கள் பதிவாக எ. பியில் பகிர்ந்துள்ளேன். இருப்பினும் என் பதிவிலும் ஒரு அடையாளமாக இருக்கட்டுமென இடம் பெறுகிறது (நிறைய  பதிவுகள் நேரமின்மையால், பாதி எழுதியும், முடிக்காது பாதியுமாக இருக்கின்றன. அதனால் பழசையே (ஆனால், இங்கு இது புதியதுதான்.) மறுபடி திரும்பி பார்க்கிறேன். (இரண்டாவதாக பதிவுகளின் எண்ணிக்கையும் கூடுமென்ற சுயநல ஆசையும் ஒரு காரணம்.) இதை ஏற்கனவே அனைவரும் படித்திருந்தும், செய்முறைகளை அறிந்திருந்தும் இங்கு வந்த ஊக்கத்துடன் உற்சாகமும் அமையுமாறு கருத்துரை தரும் என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

இனி எ. பியில் பகிர்ந்த பதிவு. இதை அன்று என் செய்முறையாக எழுதி அனுப்பியதை, அன்புடன் எ. பியில் பகிர்ந்து எனக்கு ஊக்கமளித்த எ. பிக்கும், அதன் நிர்வாக ஆசிரிய பெருமக்களுக்கும் என் பணிவான நன்றிகள் எப்போதும்


இது ஊற வைத்து உலர்த்திய பச்சரிசி


அதை நல்ல நைசான மாவாக மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளுங்கள்


நான் ஒரு டம்ளருக்கு ஒரு மூடி தேங்காய் என்ற கணக்கில் எடுத்துக் கொண்டேன். கால்படிக்கு அரிசிக்கு ஒரு நல்ல திண்ணமான பெரிய தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தேங்காய் துருவல் கணிசமாக இருக்கும்


பொடியாக துருவிய தேங்காய் துருவல்


சலித்து வைத்த மாவையும் தேங்காய் துருவலையும் நன்கு கலந்து கொள்ளவும். 


ஒரு கடாயில் இந்த மாவைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து இரு பாகங்களாக வறுக்கவும். 


நன்றாக கை விடாமல் யார் மேலும் கோபம் இல்லாமல் (கோபம் வைத்தால் கவனம் சிதறி மாவு சரியான பக்குவத்திற்கு வறுபடாமல் போய் விடும்.) மனதில் பொறுமையுடன் வறுக்கவும்.
 

இறுதியில் இந்த கலருடன் மாவு மொறுமொறுவென தயாராகி விடும். 


  இதை நாங்கள் தேங்காய் வறுத்த மாவு என்போம் . முன்பு நான் பிறந்த வீடு (தி. லி) சென்று சென்னை திரும்பும் போதெல்லாம் தாய் வீட்டு சீதனமாக சாம்பார் பொடி, மற்ற இத்யாதி  பொடிகளுடன்  ஏனைய பட்சணங்களுடனும் இந்தப் பொடியும் கண்டிப்பாக இடம் பெறும். இது மாதக்கணக்கில் கெட்டுப் போகாது. 

சாயங்காலம் விடுமுறை நாட்களில் மாலை சிற்றுண்டியாக வெல்லத் தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து வெல்ல வாசனை போனதும் , வடிகட்டிய ஆறிய  வெல்ல நீருடன் இந்த மாவை கலந்து சாப்பிடுவோம். கூடவே காரமாக ஏதாவது ஸ்நாக்ஸ். இல்லை வீட்டில் போடும் பஜ்ஜி போண்டா.... வகைகள். 

அதுபோல் காலை பசிக்கும் போதும் டிபன் ஏதும் சரியாக அமையாத போதும்.. வழக்கமான  இட்லி, தோசை அல்லாத புளி அரிசி மாவு உப்புமாவோடும் இது ஜோடி சேர பிணக்கு கொள்வதேயில்லை. ஏதாவது பூஜை விரத நாட்களிலும், உப்பு மோருடன் கொஞ்சம்  மாவை கலந்து சாப்பிடுவோம். பூஜையெல்லாம் முடிந்து சாப்பிடும் வரை பசியை அடக்கி தாக்குப் பிடிக்கும். இல்லையெனில் பொழுது போகாமல் இருக்கும் போது, கொஞ்சம் மாவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வீட்டில் எல்லோரும் ஏதாவது அரட்டை அடித்தபடி, இல்லையென்றால் ஒரு ஸ்வாரஸ்யமான நாவலை படித்தபடி  கொஞ்ச கொஞ்சமாக ஸ்பூனினால் அள்ளி அப்படியே சாப்பிடுவோம். இப்போது இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கனவாகி விட்டது. ஸ்வீீட் எல்லாவற்றிகும் தடா... (நாவல் படிக்கலாம். ஆனால் எதையும் சாப்பிடாமல்...! இரண்டாவதாக அது உடனே பற்களில் மாட்டிக் கொண்டு நாவலின் சுவாரஸ்யமான கவனத்தை திசை திருப்பி விடுகிறது.) 

 2 மாதம் இங்கு  வந்திருந்த என் மகனின் மலரும் நினைவுகளுக்காக இதை கொஞ்சம் செய்தேன். இதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் இதை, இதன் செய்முறையை அறிந்திருக்கலாம் . இதைதான் திணை மாவு என்பார்களோ. ? அதையும் அறியேன்.  இதன் பெயர் உங்கள் அளவில் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.இது ப. ப. (பழைய பஞ்சாங்கம்) ஆனாலும், படங்களை ரசிப்பதற்கும், பகிர்வை படித்து ரசிப்பதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏. 

Thursday, July 28, 2022

சம்(மின்)சாரம்

 காலையிலிருந்தே இனம் புரியாத ஏதோ ஒரு கவலையில் எப்போதும் இருக்கும் மகிழ்ச்சி சற்று குறைந்துள்ளது போல் தோன்றியது பவானிக்கு.  இன்று  கணவரின் பிறந்த நாளுக்காக அவரது அலுவலக நட்புகள் மாலையில் விருந்தினர்களாக வருகை... . தடபுடலான உபசாரங்கள்.. முதல் நாள் இரவே  கணவனுடன் சேர்ந்தமர்ந்து வரும் விருந்தாளிகளுக்கென கலந்தாலோசித்த விதவிதமான உணவு பட்டியல்கள்...  சரியென்று அத்தனையும், அதற்கும் மேலாகவும் செய்ய உற்சாகமாக ஒப்புதல்  அளித்தப் பின்,.... இப்படி அதையெல்லாம் தவிர்த்து  பின்வாங்குவது சற்றேனும் முறையில்லையே என்று மனசாட்சியுடன் தர்ம போராட்டம்.... இப்படியாக காலை பத்து மணி முதற் கொண்டு மனதுக்குள்  இயலாமையால் எழுந்த கோப ஆறு வடிகால் ஏதுமின்றி பொங்கி, பொங்கி பெருகிக் கொண்டிருந்தது.

நேரம் தன் பாட்டுக்கு இறக்கையை விரித்த வானம்பாடியாக கொஞ்சமும் கவலையின்றி பறந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கதவை திறந்து வெளி வாசலில் சென்று நின்று "இதெல்லாம் மாலை கணவரின் அலுவல நண்பர்கள் விருந்துக்கு வரும் முன்பு முறையாக செய்து முடிக்க தன்னால் முடியுமா. .?" என சுற்றும் முற்றும் பார்த்தபடி யோசிக்கும் போதே மனதில் எழுந்த கவலை காரணமாக மறுபடி சீறிய கோப ஆறு தன் வெள்ள விபரீதத்தை பெருக்க செய்தது.

வாசல் கதவை சாத்தி விட்டு சமையலறை வந்தவள், ஒரு முடிவோடு சமயலறை மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அந்த பொருட்களை நகர்த்த கொஞ்சம் சிரமபட்டாலும், கடினத்தைப் பாராமல் இழுத்து வைத்துக் கொண்டாள். வேறு வழியில்லை... இப்போதைக்கு தன் மனதின் கோபங்களை, இயலாமைகளை தணித்துக் கொள்ள இதுவும்  ஒரு சிறந்த செயல்தான் என அவள் மனம் மறுபடி, மறுபடி வலியுறுத்தியது. 

மாலை.... அவசரமான ஒரு இயந்திரமாக தன் உடம்பை வருத்திக் கொண்டதின் பலனாக முதல் நாளிரவு பட்டியல் போட்ட உணவு வகைகள் மலர்ச்சியுடன் ஒன்று கூடி சமயலறை மேடையில் புன்னகைத்து கொண்டிருந்தன. சப்பாத்தி, பூரிி அதற்கேற்ற தன் ஜோடிகளுடன், சில கலவன் சாதங்கள், வடை, பஜ்ஜி  போன்ற பலகாரங்களும், மற்றும் அவற்றின் இணையாகிய பல சட்னிகள் யாவும் இனிப்பான போளி, மற்றும் விதவிதமான கொழுக்கட்டைகளுடன் விருந்துக்கு தாங்கள் தயாராகிய கதைகளை இணக்கமாக பேசியபடியிருந்தன.  மாலையானதும், கணவருடனும், மற்றும் அதற்குப் பின்னரும், ஒவ்வொருவராக வந்த நட்பு விருந்தாளிகள் முன்னறைக்  கூடத்தை தங்கள் பேச்சினால் கலகலப்பாக்கி கொண்டிருந்தனர். 

"என்ன பவானி... எல்லாம் தயாரா?" என்றபடி தங்கள் அறைக்குள் முகம் கழுவி தன்னை கொஞ்சம் தெம்பாக்கி கொண்டிருந்த  மனைவியை நெருங்கிய அவள் கணவனுக்கு அவள் முகத்தைப் பார்த்ததும் அவளின் அசாத்திய களைப்பு புரிந்தது. 

"என்னாச்சு.. முடியல்லையா?" ஆதரவாக கேட்டவனிடம், "ஒன்றுமில்லை.. வாருங்கள்.  எல்லோருக்கும் இலை போட்டு  பரிமாறுகிறேன்..." என்றபடி ஒரு மலர்ச்சிப் புன்னகை கூட தராது அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் பவானி. 

"எப்போதும் விதவிதமாக சமைக்கும் எண்ணங்களில் ஆர்வமாக கலகலப்பாக இருக்கும் அவள் இன்று உற்சாகமில்லாமல் இருப்பதேன்? . நேற்று என்னை கேட்காமலே கூட விதவிதமாக பாரம்பரிய பட்டியல்களை சிலவற்றை அவளே தேர்ந்தெடுத்தாளே.... சிலவற்றிக்கு இது கடினமானது என நான் சொல்லியும், கேட்காமல், எனக்கு இது மிகவும் சுலபமென வாதிட்டு அதை செய்யவதற்கு ஒப்புக் கொண்டாளே ...  இன்று எதற்காக இந்த சோர்வு.. ஒரு வேளை என் வறுப்புறுத்தலில், யாருடைய துணையுமின்றி, எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட பொழுதுக்குள் செய்ய வேண்டியதாகி விட்டதே என்ற  சிறு கோபத்தில், எழுந்த இயல்பான வருத்தமாக இருக்குமோ...? " என்றெல்லாம்  மனதுக்குள் நினைத்தபடி நண்பர்களை உணவு உண்ணும் அறைக்கு அழைத்து வர தங்கள் அறையிலிருந்து அவனும் வெளியேறினான். 

அனைவரும் வானளாவ புகழ்ந்ததில், பவானிக்கு கொஞ்சம் சோர்வகன்று கூடுதலான முகக்களையும் வந்திருப்பதை புரிந்து கொண்டான் அவள் கணவன்." இதேப் போல் மற்றுமொரு சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமோ என அந்த நாட்களையும்  இப்போதே குறித்து வைத்தபடி.... " அவர்கள் அனைவரும் விடை பெற்றதும், திருப்தியான முகப்பாவத்துடன் கூடத்தில் அமர்ந்திருந்த பவானியின் அருகே  வந்தமர்ந்தான் அவள் கணவன். 

"பவானி... இன்று உன் கைப்பக்குவம்  போல் எங்கும் ருசித்ததில்லை என என் நண்பர்கள் அனைவரும் கூறியதை கேட்டாயல்லவா? நிஜமாகவே  நீ செய்யும் பக்குவங்களில் எப்போதையும் விட இன்று எல்லாமே மிக சரியாகவும், ருசியாகவும் அமைந்திருந்தது. அது எப்படியென கேட்க வேண்டுமென்று நானே நினைத்தேன்... அது சரி......  எல்லாமே நன்றாக, ருசியாக வந்திருக்க வேண்டுமேயென்ற கவலையில் உன் உடல்/ மனச்சோர்வு அகன்று, கிடைத்த பாராட்டுகளில் மகிழ்ச்சியெனும் போனஸை இப்போதாவது பெற்ற மாதிரி இருக்கிறதா? அவர்களது பாராட்டுக்கள் என்னையும் பெருமை கொள்ள வைக்கிறது. எனக்கும் இப்படியொரு சமையல் வித்தகியான சம்சாரம் என் வாழ்க்கைத் துணையாக கிடைத்த மகிழ்ச்சியில் தலைகால் புரியாத அளவுக்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன். வா.. இப்போதும் மணியாகவில்லை. காலையில்தான் நமக்கு நேரமில்லை. எனக்கு அலுவலகத்தில் உள்ள கெடுபிடியால் விடுமுறையும் எடுக்க இயலவில்லை. நல்ல திருப்தியான மனதுடன் சந்தோஷமாக அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம். வா.. புறப்படு "என்றான். 

"உண்மைதான்.... காலையில் நீங்கள் அலுவலம் சென்ற பின், என் மனதில் ஏற்பட்ட கோப வெள்ளத்தில் கரையேற முடியாமல் திண்டாடினேன். இன்றைய தினத்தில் பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை நம் ஏரியா முழுக்க கிடைக்காமலே போன அந்த  மின்சாரத்திற்காக நானும் அதற்கு நன்றி கூறி, இப்போது உங்களுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன். என்னைக்குமே" பழையது என்றுமே தங்கந்தான்"என்ற பழமொழிப்படி, நான் சென்று எனக்கு உதவிய அவைகளையெல்லாம் கழுவி சுத்தப்படுத்தி விட்டு, "உங்களை இனி தினமும் விடாமல் நான் அங்கிகரித்துக் கொள்ளப் போகிறேன் என சொல்லி, அவைகளையும்  மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்து விட்டு வருகிறேன்...." என்றபடி பழைய சுறுசுறுப்புடன் சமையல் அறைக்குள் புகுந்தாள் பவானி. 

பாதி புரிந்த பாவனையிலும், மீதி பாதியை யோசித்தபடியும் அமர்ந்திருந்தான் அவள் கணவன். 

கதை முடிந்தது. 

பி. கு... .." என்னடா இது... உங்களை சுருக்கச் சொன்னால், இப்படி ஒரேடியாகவா...? என்று வியக்கும் (வியப்பாரா?:)))   ) சகோதரர் நெல்லைத் தமிழரின் கருத்துக்காகவா இப்படி... ." (ஹா.ஹா.ஹா) என எண்ணாமல் இந்த சிறு கதை உங்களுக்கும் பிடித்ததாவென்று நீங்கள் அனைவரும் கருத்துரையில் கூறினால், நானும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பேன். மகிழ்ச்சி வெள்ளமாவதும், சிறு ஓடையாகி வடிந்து போவதும் உங்கள் அனைவரின் அன்பான தட்டச்சில்தான் உள்ளது. கருத்துச் சொல்லப் போகும் உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏. 

Wednesday, January 12, 2022

இட்லி புராணம்.

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.  

உலகம் எவ்வளவோ முன்னேறி விட்டாலும், நாம் உண்ணும் உணவுகள், நாட்டுக்கு நாடு, மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறுபட்டிருந்தாலும், நம்மை பொருத்த வரைக்கும் எது உடம்புக்கு கெடுதல் செய்யாதது எனப் பார்த்தால் அது இந்த இட்லிதான். நம் வீட்டில் மட்டுமல்ல.  அனைவரின் வீடுகளிலும், சின்ன குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், எளிதில் ஜீரணமாகும் உணவு. ஆனால்  இந்த உணவு நாகரீகம் தொட்டு இப்போது அனைவருக்கும் பிடிக்காத உணவாகப் போய் விட்டது. 


அந்த காலத்தில் பொதுவாக "இன்று உங்கள் வீட்டில் காலை என்ன உணவு"?  எனக் கேட்டால் இதன் பெயரைத்தான் சொல்வார்கள். பிறகு நாகரீகம் பரவ பரவ இட்லி தோசையானது. அதன் பின் சில வீடுகளில், "இட்லியா? பயங்கர போர்.. தோசை அல்லது, வேறு ஏதாவது சிற்றுண்டி செய்தால்தான் எங்கள் வீட்டில் பிடிக்கிறது. தினமும் இட்லியென்றால், அதாலேயே நான் அடி வாங்க வேண்டியதுதான்"  என அலுத்துக் கொள்ளுவார்கள். 



இந்தப் படம் மட்டும் பதிவுக்காக கூகுளில் எடுத்தது.  
நன்றி கூகுள். 

இட்லி பாத்திரத்தில் துணிகட்டி இட்லி வார்த்தால் அது எப்போதுமே நல்ல ருசியாக இருக்கும். அதுவும் கல்லுரலில் அரிசியையும் அதற்கேற்றவாறு  (அரிசி நாலுக்கு பருப்பு ஒன்று என்ற கணக்கில்)  உ. பருப்பையும் அரைத்தெடுத்து தேவையான உப்பு போட்டு கலந்து வைத்து, மறு நாள் காலை மாவு பொங்கி வந்ததும், விறகடுப்பில் அதற்கென்றிருக்கும் இட்லிி கொப்பரையில்/வாணலியில் துணி கட்டிய இட்லி தட்டுக்களில் வார்த்த  இட்லி  வாசனையாகவும், அவ்வளவு  மென்மையானதாகவும், இருக்கும் 

அத்தகைய இட்லி தட்டுகள் வார்க்குமிடத்தில் சிறு சிறு துவாரங்களுடன் இருக்கும். அந்த துவாரத்தில் துணியின் உதவியுடன் நீராவியில் வேகுவதால், இந்த இட்லி நோயாளிகளுக்கு கூட மருந்தாக இருந்து உதவும். உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு முக்கால்வாசி இந்த உணவுதான் அன்றைய காலத்தில் பரிந்துரைக்கப்படும். 

எங்கள் அம்மா காலத்தில் அவருடைய ஒரு விபரமறியாத உறவுச் சிறு பெண் ஒருவர்  தன் திருமணத்திற்கு  ( அந்த காலத்தில் பன்னிரண்டு, பதிமூன்று வயதிற்குள் திருமணமாகி விடுமே...!! ) பின் புகுந்த வீடு சென்றதும். அங்குள்ள நிர்பந்தத்திலும் , சமையலில் அவ்வளவாக  அனுபவமில்லாத காரணத்தாலும்,  இட்லி தட்டுக்களில் துணி கட்டாமல் இட்லி வார்த்து விட்டாராம். சிறிது நேரத்தில் இட்லி வெந்துள்ளதாவென கொப்பரையை திறந்து பார்த்த பின் அவருக்கு ஒரே அதிர்ச்சி. இட்லி தட்டுக்களில் ஊற்றிய மாவெல்லாம் காணாமல் போய், கூழாக வடிவெடுத்து இட்லி பாத்திரத்தில் கொதித்து கொண்டிருக்க ... பிறகு என்ன ....!! வழக்கப்படி அவரது தாய்க்கு அந்தப் பெண் மணமாகி சென்ற வீட்டில் அர்ச்சனைகள்... பாவம் அவர்....!! என எங்கள் அம்மா அச்சம்பவத்தை சொல்லிச் சொல்லி வருத்தப்படுவார். 

அதன் பிறகு காலங்கள் வளர வளர, இந்த இட்லியை துணிகட்டி வார்ப்பது, பிறகு அதை சுத்தப்படுத்துவதுதான் இட்லி என்ற உணவை ரசிக்க வைக்கவில்லையோ என இட்லி வார்க்கும் தட்டில் புதுமைகள் வந்தன.  துவாரங்கள் இல்லாத தட்டுக்களில் சிறிது ந. எண்ணெய் தடவி அப்படியே அதில் மாவை ஊற்றி அடுக்கடுக்காக அடுக்கி ஒரே சமயத்தில் இருபது முப்பது இட்லிகளுக்கும் மேலாக வார்க்கும் தட்டுக்கள் விற்பனைக்கு வந்தது. அது மக்களை ஈர்க்கவே மறுபடி இட்லி அனைவருக்கும் பிடித்தமானதாக உலா வந்தது. 

அப்படியும் இந்த மாதிரி இட்லி தட்டுக்கள் வந்தும், என் குழந்தைகள் காலத்தில் ஒரே மாதிரி அளவுள்ள எவர்சில்வர் கிண்ணங்களிலோ , சின்ன டம்ளார்களிலோ எண்ணெய் தடவி விதவிதமான வடிவங்களில் அவர்களுக்கு இட்லி செய்து தந்திருக்கிறேன். அவர்களும் வழக்கத்துக்கு மாறாக இருக்கக் கண்டு அதை விரும்பி சாப்பிட்டுள்ளனர். 


இது எங்கள் வீட்டில் குழந்தைகளுக்காக வாங்கிய குட்டித் தட்டுகள்.
 
பிறகு நாளாவட்டத்தில்,அந்த இட்லிகளும்  பிற மேல்நாட்டு உணவுகளால், ஒதுக்கப்பட ஆரம்பிக்கவே, குழந்தைகளை கவரும் விதத்தில் சின்னச்சின்ன இட்லி தட்டுக்கள் என பார்க்கவே விதவிதமாக  அளவுகளில் அழகாக இட்லி தட்டுக்கள் வந்தன. வேறு வழியில்லாமல் அவர்களது குழந்தைகளுக்காக மீண்டும் இட்லிகள் தனது பயணத்தை தொடர்ந்தன.  சில உணவகங்களில் கூட இந்த இட்லிகள் பிரசித்தமாகியது.  ( நான் கூட சென்னையிலிருந்து சுற்றிச் சுற்றி இடம் பெயர்ந்து இங்கு வந்த பின் ஒரு தடவை மீண்டும் சென்னை சென்ற போது சாம்பாரில் மூழ்கி பவனி வந்த இந்த குட்டி இட்லிகளை விரும்பி ஒரு தடவை சாப்பிட்டுள்ளேன்.) ஆனாலும் இப்போது, மறுபடியும்  பல நாகரீகமான உணவுகள் மக்களை  ஆட்கொள்ள ஆரம்பித்து விட்டதால், குழந்தைகள் கூட எந்த வடிவத்தில் இட்லி என்றாலும் முகஞ்சுளிக்க ஆரம்பித்து விட்டனர்.

 ( இந்த இடத்தில் ஒன்று சொல்லப் பிரியப்படுகிறேன்.எங்கள் பிறந்த வீட்டில் தினமும் காலை ஆகாரம் இட்லிதான். சோம்பலில்லாமல் அம்மா, பாட்டி உடம்புக்கு நல்லதென இதை ஒரு கடமையாகவே செய்தார்கள். மாதத்திற்கு ஓரிரு முறை தோசை, அடை, உப்புமா வகைகள் என வந்தால் அதிசயந்தான். இப்படியே பிறந்ததிலிருந்து பத்தொன்பது வயது வரை தினமும் இட்லிகளை சாப்பிட்டிருப்பதால், நான் இன்றும் ஒரு இட்லி பிரியை.:))))  ) 


இது அந்த குட்டித் தட்டில் வார்த்து வேக வைக்க தயாரான இட்லிகள்

இதன் வடிவங்கள் எப்படி மாறினாலும் அதன்  சுவை ஒன்றுதானே. !!! 
இதற்கு அம்மியில் அரைத்த தேங்காய், பச்சை  மிளகாய் சட்னி, இல்லை, தக்காளி வெங்காய சட்னிகள், இல்லை கொத்தமல்லி சட்னி. இல்லை இஞ்சி துவையல் என அனைத்தும் பொருத்தமாக இட்லியுடன் இணைந்து அதை நன்றாக சுவைத்து சாப்பிடச் செய்யும்.  ( இந்த நாலுமே இருந்தாலும் தப்பில்லை என்போரும் உண்டு. அவர்கள் இந்த இட்லியை விருப்பமுடன் விரும்புபவர்கள்.) பிறகு சாம்பார்,.. அதுவும், சின்ன வெங்காயம் தக்காளி இவற்றுடன் மணக்கும் சாம்பார் வேண்டுமென்ற கோரிக்கைகள் பல வீடுகளில் உதயமாகி அதுவும் இட்லியுடன் கோலோச்சி வந்தது/வருகிறது.  ஆனால், இத்துடன் இட்லி மிளகாய் பொடி என்ற ஒன்று கண்டிப்பாக இதனுடன் இணைய வேண்டும். ஏனெனில் இது "இட்லி" என்ற அதன் முழுப்பெயரையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட பெருமையை உடையது. அதனால்  சிலருக்கு மற்றவைகளை சற்று வேண்டாமென ஒதுக்கினாலும் இதை (இ. மி. பொ) முதலிடத்தில் வைத்துக் கொள்ளப் பிடிக்கும்.  

"தப்பு..!  தப்பு!! இது தோசை மி. பொடி. அதன் பெயரை மாற்றி அந்த இட்லி அந்தப் பொடியை தன் பெயருடன் இணைத்து தனதாக்கி கொண்டு விட்டது" என்று தோசை "பொடி வைத்து" சொல்லலாம். ஏன்.. பேச்சோடு சண்டைக்கு, அதன் மேலும் கைகலப்புக்கு கூட வரலாம்... :)))) எது எப்படியோ...!! இந்தப் பொடியுடன் ந. எண்ணையை கலந்து இட்லியை அதில் புரட்டி ஊற வைத்து சாப்பிடுவதே  சாப்பாட்டின் ஒரு கலையென வாதிடுபவர்கள் கண்டிப்பாக உண்டு.
 

இது அன்றைய தினம் இந்த குட்டி இட்லிக்காக அவசரமாக தயார் செய்த இ.மி.பொ. 

முறையே ஒரு கரண்டி இரு கரண்டியென க. ப, உ. பவுடன் "கொஞ்சம் சீக்கிரம்" என படபடக்கும் கடுகுடனும் அவசரமாக ரெடியாகிறது. 


"நான் இல்லாமலா? இட்லி என்ற பெயர் எங்களுடன் இணைவது இருக்கட்டும்....!! அடுத்து நான் இல்லாமல் இதற்கு இ. மி. பொ என்ற முழுப்பெயரும் கிடைத்து விடுமா என்ன?" சற்றே ஆணவச் சி(வ)ரிப்புடன் கேட்கும் மிளகாய்கள். 


"எப்போதுமே முதலில் நான்தான்" என்ற அதே சி(வ)ரிப்புடன் மிக்ஸி என்ற ராட்டினத்தில் ஏறிய மிளகாய். கூடவே அது அழைத்ததும் பாரபட்சம் பார்க்காமல் வெள்ளை மனதுடன் வந்து உடனமர்ந்த உப்பு." 


"இந்த எள் இல்லாவிடில்  என் ருசியை அவ்வளவாக நான் தரமாட்டேன் என்று சொல்லி இ. மி. பொடி சுவை தர மறுத்து விடும்." எனவே அந்த அவசரத்தில் எள்ளை ஊற வைத்து களைந்து அதையும் சேர்த்து விடலாம் என்ற என் நினைப்புடன் அதை நிறைவேற்றியதும், வந்து அதிகாரமாக அமர்ந்திருக்கும் எள். 


எல்லாமுமாக சேர்ந்து தயாராகி  "இட்லிகள் எங்கே. .? " என அதை பார்க்கும் தவிப்பில் இருக்கும் இ. மி. பொடி. 


குட்டி குட்டி இட்லிகளுடன் அதன் துணையாகிய இ. மி. பொடியும் சேர்ந்த களிப்பில் போதுமான எண்ணெய்யும்  கலந்த மினுமினுப்புடன்  பெருமிதமாக நாம் அட்சதை தூவ காத்திருக்கும் காலை உணவு.. 

இனி என்ன..!!! உங்களுக்கும் இந்த இட்லி பிடித்திருந்தால் தாராளமாக எடுத்து சாப்பிடலாம். 

இவ்வருட முதலில் காலை ஆகாரத்திற்கேற்ற இட்லி பதிவை அலசி ஆரம்பித்திருக்கிறேன். பதிவை ரசித்தவர்களுக்கும், ந. எண்ணெய் சேர்ந்த  இட்லி மிளகாய் பொடியுடன் இட்லிகளை எடுத்து பிடித்தோ/பிடிக்காமலோ சாப்பிட்டவர்களுக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள். 🙏.

அனைவருக்கும் அட்வான்ஸ் போகிப்பண்டிகை, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.