Showing posts with label இட்லி. Show all posts
Showing posts with label இட்லி. Show all posts

Wednesday, January 12, 2022

இட்லி புராணம்.

சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.  

உலகம் எவ்வளவோ முன்னேறி விட்டாலும், நாம் உண்ணும் உணவுகள், நாட்டுக்கு நாடு, மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறுபட்டிருந்தாலும், நம்மை பொருத்த வரைக்கும் எது உடம்புக்கு கெடுதல் செய்யாதது எனப் பார்த்தால் அது இந்த இட்லிதான். நம் வீட்டில் மட்டுமல்ல.  அனைவரின் வீடுகளிலும், சின்ன குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், எளிதில் ஜீரணமாகும் உணவு. ஆனால்  இந்த உணவு நாகரீகம் தொட்டு இப்போது அனைவருக்கும் பிடிக்காத உணவாகப் போய் விட்டது. 


அந்த காலத்தில் பொதுவாக "இன்று உங்கள் வீட்டில் காலை என்ன உணவு"?  எனக் கேட்டால் இதன் பெயரைத்தான் சொல்வார்கள். பிறகு நாகரீகம் பரவ பரவ இட்லி தோசையானது. அதன் பின் சில வீடுகளில், "இட்லியா? பயங்கர போர்.. தோசை அல்லது, வேறு ஏதாவது சிற்றுண்டி செய்தால்தான் எங்கள் வீட்டில் பிடிக்கிறது. தினமும் இட்லியென்றால், அதாலேயே நான் அடி வாங்க வேண்டியதுதான்"  என அலுத்துக் கொள்ளுவார்கள். 



இந்தப் படம் மட்டும் பதிவுக்காக கூகுளில் எடுத்தது.  
நன்றி கூகுள். 

இட்லி பாத்திரத்தில் துணிகட்டி இட்லி வார்த்தால் அது எப்போதுமே நல்ல ருசியாக இருக்கும். அதுவும் கல்லுரலில் அரிசியையும் அதற்கேற்றவாறு  (அரிசி நாலுக்கு பருப்பு ஒன்று என்ற கணக்கில்)  உ. பருப்பையும் அரைத்தெடுத்து தேவையான உப்பு போட்டு கலந்து வைத்து, மறு நாள் காலை மாவு பொங்கி வந்ததும், விறகடுப்பில் அதற்கென்றிருக்கும் இட்லிி கொப்பரையில்/வாணலியில் துணி கட்டிய இட்லி தட்டுக்களில் வார்த்த  இட்லி  வாசனையாகவும், அவ்வளவு  மென்மையானதாகவும், இருக்கும் 

அத்தகைய இட்லி தட்டுகள் வார்க்குமிடத்தில் சிறு சிறு துவாரங்களுடன் இருக்கும். அந்த துவாரத்தில் துணியின் உதவியுடன் நீராவியில் வேகுவதால், இந்த இட்லி நோயாளிகளுக்கு கூட மருந்தாக இருந்து உதவும். உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு முக்கால்வாசி இந்த உணவுதான் அன்றைய காலத்தில் பரிந்துரைக்கப்படும். 

எங்கள் அம்மா காலத்தில் அவருடைய ஒரு விபரமறியாத உறவுச் சிறு பெண் ஒருவர்  தன் திருமணத்திற்கு  ( அந்த காலத்தில் பன்னிரண்டு, பதிமூன்று வயதிற்குள் திருமணமாகி விடுமே...!! ) பின் புகுந்த வீடு சென்றதும். அங்குள்ள நிர்பந்தத்திலும் , சமையலில் அவ்வளவாக  அனுபவமில்லாத காரணத்தாலும்,  இட்லி தட்டுக்களில் துணி கட்டாமல் இட்லி வார்த்து விட்டாராம். சிறிது நேரத்தில் இட்லி வெந்துள்ளதாவென கொப்பரையை திறந்து பார்த்த பின் அவருக்கு ஒரே அதிர்ச்சி. இட்லி தட்டுக்களில் ஊற்றிய மாவெல்லாம் காணாமல் போய், கூழாக வடிவெடுத்து இட்லி பாத்திரத்தில் கொதித்து கொண்டிருக்க ... பிறகு என்ன ....!! வழக்கப்படி அவரது தாய்க்கு அந்தப் பெண் மணமாகி சென்ற வீட்டில் அர்ச்சனைகள்... பாவம் அவர்....!! என எங்கள் அம்மா அச்சம்பவத்தை சொல்லிச் சொல்லி வருத்தப்படுவார். 

அதன் பிறகு காலங்கள் வளர வளர, இந்த இட்லியை துணிகட்டி வார்ப்பது, பிறகு அதை சுத்தப்படுத்துவதுதான் இட்லி என்ற உணவை ரசிக்க வைக்கவில்லையோ என இட்லி வார்க்கும் தட்டில் புதுமைகள் வந்தன.  துவாரங்கள் இல்லாத தட்டுக்களில் சிறிது ந. எண்ணெய் தடவி அப்படியே அதில் மாவை ஊற்றி அடுக்கடுக்காக அடுக்கி ஒரே சமயத்தில் இருபது முப்பது இட்லிகளுக்கும் மேலாக வார்க்கும் தட்டுக்கள் விற்பனைக்கு வந்தது. அது மக்களை ஈர்க்கவே மறுபடி இட்லி அனைவருக்கும் பிடித்தமானதாக உலா வந்தது. 

அப்படியும் இந்த மாதிரி இட்லி தட்டுக்கள் வந்தும், என் குழந்தைகள் காலத்தில் ஒரே மாதிரி அளவுள்ள எவர்சில்வர் கிண்ணங்களிலோ , சின்ன டம்ளார்களிலோ எண்ணெய் தடவி விதவிதமான வடிவங்களில் அவர்களுக்கு இட்லி செய்து தந்திருக்கிறேன். அவர்களும் வழக்கத்துக்கு மாறாக இருக்கக் கண்டு அதை விரும்பி சாப்பிட்டுள்ளனர். 


இது எங்கள் வீட்டில் குழந்தைகளுக்காக வாங்கிய குட்டித் தட்டுகள்.
 
பிறகு நாளாவட்டத்தில்,அந்த இட்லிகளும்  பிற மேல்நாட்டு உணவுகளால், ஒதுக்கப்பட ஆரம்பிக்கவே, குழந்தைகளை கவரும் விதத்தில் சின்னச்சின்ன இட்லி தட்டுக்கள் என பார்க்கவே விதவிதமாக  அளவுகளில் அழகாக இட்லி தட்டுக்கள் வந்தன. வேறு வழியில்லாமல் அவர்களது குழந்தைகளுக்காக மீண்டும் இட்லிகள் தனது பயணத்தை தொடர்ந்தன.  சில உணவகங்களில் கூட இந்த இட்லிகள் பிரசித்தமாகியது.  ( நான் கூட சென்னையிலிருந்து சுற்றிச் சுற்றி இடம் பெயர்ந்து இங்கு வந்த பின் ஒரு தடவை மீண்டும் சென்னை சென்ற போது சாம்பாரில் மூழ்கி பவனி வந்த இந்த குட்டி இட்லிகளை விரும்பி ஒரு தடவை சாப்பிட்டுள்ளேன்.) ஆனாலும் இப்போது, மறுபடியும்  பல நாகரீகமான உணவுகள் மக்களை  ஆட்கொள்ள ஆரம்பித்து விட்டதால், குழந்தைகள் கூட எந்த வடிவத்தில் இட்லி என்றாலும் முகஞ்சுளிக்க ஆரம்பித்து விட்டனர்.

 ( இந்த இடத்தில் ஒன்று சொல்லப் பிரியப்படுகிறேன்.எங்கள் பிறந்த வீட்டில் தினமும் காலை ஆகாரம் இட்லிதான். சோம்பலில்லாமல் அம்மா, பாட்டி உடம்புக்கு நல்லதென இதை ஒரு கடமையாகவே செய்தார்கள். மாதத்திற்கு ஓரிரு முறை தோசை, அடை, உப்புமா வகைகள் என வந்தால் அதிசயந்தான். இப்படியே பிறந்ததிலிருந்து பத்தொன்பது வயது வரை தினமும் இட்லிகளை சாப்பிட்டிருப்பதால், நான் இன்றும் ஒரு இட்லி பிரியை.:))))  ) 


இது அந்த குட்டித் தட்டில் வார்த்து வேக வைக்க தயாரான இட்லிகள்

இதன் வடிவங்கள் எப்படி மாறினாலும் அதன்  சுவை ஒன்றுதானே. !!! 
இதற்கு அம்மியில் அரைத்த தேங்காய், பச்சை  மிளகாய் சட்னி, இல்லை, தக்காளி வெங்காய சட்னிகள், இல்லை கொத்தமல்லி சட்னி. இல்லை இஞ்சி துவையல் என அனைத்தும் பொருத்தமாக இட்லியுடன் இணைந்து அதை நன்றாக சுவைத்து சாப்பிடச் செய்யும்.  ( இந்த நாலுமே இருந்தாலும் தப்பில்லை என்போரும் உண்டு. அவர்கள் இந்த இட்லியை விருப்பமுடன் விரும்புபவர்கள்.) பிறகு சாம்பார்,.. அதுவும், சின்ன வெங்காயம் தக்காளி இவற்றுடன் மணக்கும் சாம்பார் வேண்டுமென்ற கோரிக்கைகள் பல வீடுகளில் உதயமாகி அதுவும் இட்லியுடன் கோலோச்சி வந்தது/வருகிறது.  ஆனால், இத்துடன் இட்லி மிளகாய் பொடி என்ற ஒன்று கண்டிப்பாக இதனுடன் இணைய வேண்டும். ஏனெனில் இது "இட்லி" என்ற அதன் முழுப்பெயரையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட பெருமையை உடையது. அதனால்  சிலருக்கு மற்றவைகளை சற்று வேண்டாமென ஒதுக்கினாலும் இதை (இ. மி. பொ) முதலிடத்தில் வைத்துக் கொள்ளப் பிடிக்கும்.  

"தப்பு..!  தப்பு!! இது தோசை மி. பொடி. அதன் பெயரை மாற்றி அந்த இட்லி அந்தப் பொடியை தன் பெயருடன் இணைத்து தனதாக்கி கொண்டு விட்டது" என்று தோசை "பொடி வைத்து" சொல்லலாம். ஏன்.. பேச்சோடு சண்டைக்கு, அதன் மேலும் கைகலப்புக்கு கூட வரலாம்... :)))) எது எப்படியோ...!! இந்தப் பொடியுடன் ந. எண்ணையை கலந்து இட்லியை அதில் புரட்டி ஊற வைத்து சாப்பிடுவதே  சாப்பாட்டின் ஒரு கலையென வாதிடுபவர்கள் கண்டிப்பாக உண்டு.
 

இது அன்றைய தினம் இந்த குட்டி இட்லிக்காக அவசரமாக தயார் செய்த இ.மி.பொ. 

முறையே ஒரு கரண்டி இரு கரண்டியென க. ப, உ. பவுடன் "கொஞ்சம் சீக்கிரம்" என படபடக்கும் கடுகுடனும் அவசரமாக ரெடியாகிறது. 


"நான் இல்லாமலா? இட்லி என்ற பெயர் எங்களுடன் இணைவது இருக்கட்டும்....!! அடுத்து நான் இல்லாமல் இதற்கு இ. மி. பொ என்ற முழுப்பெயரும் கிடைத்து விடுமா என்ன?" சற்றே ஆணவச் சி(வ)ரிப்புடன் கேட்கும் மிளகாய்கள். 


"எப்போதுமே முதலில் நான்தான்" என்ற அதே சி(வ)ரிப்புடன் மிக்ஸி என்ற ராட்டினத்தில் ஏறிய மிளகாய். கூடவே அது அழைத்ததும் பாரபட்சம் பார்க்காமல் வெள்ளை மனதுடன் வந்து உடனமர்ந்த உப்பு." 


"இந்த எள் இல்லாவிடில்  என் ருசியை அவ்வளவாக நான் தரமாட்டேன் என்று சொல்லி இ. மி. பொடி சுவை தர மறுத்து விடும்." எனவே அந்த அவசரத்தில் எள்ளை ஊற வைத்து களைந்து அதையும் சேர்த்து விடலாம் என்ற என் நினைப்புடன் அதை நிறைவேற்றியதும், வந்து அதிகாரமாக அமர்ந்திருக்கும் எள். 


எல்லாமுமாக சேர்ந்து தயாராகி  "இட்லிகள் எங்கே. .? " என அதை பார்க்கும் தவிப்பில் இருக்கும் இ. மி. பொடி. 


குட்டி குட்டி இட்லிகளுடன் அதன் துணையாகிய இ. மி. பொடியும் சேர்ந்த களிப்பில் போதுமான எண்ணெய்யும்  கலந்த மினுமினுப்புடன்  பெருமிதமாக நாம் அட்சதை தூவ காத்திருக்கும் காலை உணவு.. 

இனி என்ன..!!! உங்களுக்கும் இந்த இட்லி பிடித்திருந்தால் தாராளமாக எடுத்து சாப்பிடலாம். 

இவ்வருட முதலில் காலை ஆகாரத்திற்கேற்ற இட்லி பதிவை அலசி ஆரம்பித்திருக்கிறேன். பதிவை ரசித்தவர்களுக்கும், ந. எண்ணெய் சேர்ந்த  இட்லி மிளகாய் பொடியுடன் இட்லிகளை எடுத்து பிடித்தோ/பிடிக்காமலோ சாப்பிட்டவர்களுக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள். 🙏.

அனைவருக்கும் அட்வான்ஸ் போகிப்பண்டிகை, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். 

Friday, August 19, 2016

வடிவம்

  அன்றைய நாளிலிருந்து விதவிதமாக பல்வேறு சிற்றுண்டிகள் வந்தும், இந்த தோசை, இட்லியின் மகத்துவம் குறையவில்லை. இட்லி,,தோசை என்ற நாமகரணம் யார் வைத்து துவக்கினார்களோ தெரியவில்லை?  இந்தியாவின் சிறப்பான பாரம்பரியமான உணவாகிய அரிசியையும், உளுந்தையும், கொண்டு இந்த உணவை உண்டு பண்ணியவர்களை கண்டு வியப்படைய தோன்றுகிறது.  அதிலும் இந்தியாவில் அதிகம் விளையும் நெல்லை வேக வைத்து உமி நீக்கி அதில் உண்டாகும் அரிசியை புழுங்கல் அரிசியென பெயரிட்டு, அதன் மூலம் இந்த இட்லி,, தோசையை தயாரித்து காட்டினர்.



அந்த புழுங்கல் அரிசியையும், உளுத்தம் பருப்பையும், 4 க்கு 1 என்ற அளவில் எடுத்துக்கொண்டு, சுத்தப்படுத்தி, ஊற வைத்து ஆட்டுரலில் அரைத்தெடுத்த அந்த, ஒரே மாவை, இட்லிக்கென  தயாரிக்கப்பட்ட இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து இட்லி எனவும்,,வட்ட வடிவ இரும்பு கடாயில் சுற்றி விட எண்ணெய் யின் உதவியுடன் வட்டமாக மாவை எடுத்து தடவி வேக வைத்து தோசை எனவும், பெயரிட்ட புண்ணியாத்மாக்களை கண்டிப்பாக பாராட்டத்தான் வேண்டும். காலப் போக்கில் அரவை எந்திரங்கள் விதவிதமாய் பெருகி  ஆட்டுரல்களை மறக்கச்செய்து  விட்டன.  ஆனால் இட்லி,, தோசைகள் மறையவில்லை.  அன்றாடம் வீடுகளிலும்,  உணவகங்களிலும், திருமணம் முதலிய விசேட இடங்களிலும்,  வெளியில் செல்லும் பிரயாண நேரங்களிலும், இவைகளின் சிறப்புகள் குறையாமல்தான் இருந்தது..


  நாளாவட்டத்தில் ஒரே மாவில் தயாரித்து உண்பதை விட, விதவிதமான மாவுகளை கலந்து தோசைகள் தயாரிக்கும் பழக்கங்கள் வந்தது.. அரிசியுடன் உளுந்து மட்டுமில்லாமல், துவரம் பருப்பு,  கடலை பருப்பு முதலியவற்றையும் சேர்த்து சற்று கனமான தோசையாகச்செய்து அதற்கு அடை என்றும்  பெயர் வைத்தும் உண்டு மகிழ்ந்தோம். முழுகோதுமையை அரிசி உளுந்துடன் சேர்த்தரைத்து கலப்பது, வெறும் கோதுமை மாவை,  அல்லது மைதா மாவை அரிசிமாவுடன் கலப்பது, ரவையை அரிசி மாவு மட்டுடனோ, இல்லை, கோதுமைமாவு, அரிசி  மாவு முதலியவற்றுடனோ, கலப்பது என்ற ரீதியில் விதவித சுவையுடன் விதவித பெயர்களுடன் தோசைகள் உருவாகின. அதுபோல் இட்லியும், ரவை கலந்து ரவா இட்லி எனவும், அரிசியை கொஞ்சம் பொடியாக உடைத்துக் கொண்டு, அதனுடன் சுவைக்காக, உப்பு  காரம் என மிளகு,இஞ்சி, பச்சை மிளகாய்  தேங்காய் சேர்த்து காஞ்சிபுரம் இட்லி எனவும், உருமாறத் தொடங்கின.  காலம் செல்ல செல்ல இனி .வெங்காயம் என்ற ஒரு வஸ்துவின் துணையின்றி  இப்புவியில் தலைகாட்ட மாட்டோம் என பெற்ற புகழின் கர்வத்தில் இட்லி, தோசைகள் எடுத்த முடிவை, சுவைக்கு அடிமையான நம் நாக்குகள் ஆமோதிக்க, இட்லி , தோசைகள் ௬ட்டணியாக வெங்காயத்தை சேர்த்துக் கொண்டு நம் வாழ்வோடு இணைந்து கொண்டன.


   இப்படியாக இட்லி, தோசைகள் அமர்க்களமாக ஆட்சி செய்து வந்த போது, நம்  காலத்திலேயே இந்த முதலில் உருவான இட்லி, தோசைக்கு சற்றே எதிர்ப்பு கொடி துவங்கி விட்டது. ஆயினும் வீட்டில், இருக்கும் பெரியவர்களின் பேச்சுக்கு  கட்டுப்பட்டு அதை அங்கீகரித்து வந்தோம். உடமபுக்கு.ஒவ்வாமை என்ற பேச்சுக்கு இடமின்றி ஒத்து வருவது  இந்த சிற்றுண்டிதான்! என அன்பு கலந்த கண்டிப்புடன் அவர்கள் ௬றும் போது  மறுக்க இயலாமல், இட்லி, தோசையுடன் ஐக்கியமானோம்.ஆனால் இன்றைய தலைமுறைகள் இட்லி, என்றாலே அந்த இடத்திலேயே காணாமல் போகிறார்கள். தோசைகள் ஒரளவு அவர்களின் பிடித்தமானவை வரிசையில் சேர்ந்து கொள்கின்றன.தற்சமயம்  சோளம், ராகி, கம்பு என அனைத்து வகை மாவுகளும்  ௬டவே   வெங்காயத்திற்கு இணையாக தக்காளி,, காரட் என சில காய்கறிகளும், ௬ட்டணியில் இடம் பிடித்ததாலோ என்னவோ,  தோசையின் மகத்துவம் இன்னமும் குறையாது இருக்கிறது. அந்த வெங்காயத்திற்கே சிறிது போரடித்து நம்மை  விட்டு போகலாமென முடிவெடுத்தாலும், நாம் விடுவதாக இல்லை.! அந்தக் கால ஆட்டுரலில் அரைத்து   விறகடுப்பில் சுட்ட தோசைகள் ஐந்தாறு  மணி நேரத்துக்கு பின்பும், அதே ருசியுடன் நமக்காக காத்துக் கிடக்கும். ஆனால் இப்போது நவீனங்களில் நாம் தயாரிப்பது ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பதாக நமக்குநாமே சபதம்  எடுத்தபடி சாப்பிட்டு முடிக்க வேண்டும். இல்லையென்றால், சிரமம் நமக்குத்தான்!. அந்தளவுக்கு ரசாயன கால மாற்றங்கள் உணவுகளை மாற்றி விட்டாலும் இந்த தோசைகளுக்கு நாம் அடிமை ஆகி விட்டோம் என்றே சொல்ல வேண்டும்.


  தோசை புராணம் பாடியதும், என் அம்மா சொல்லி மகிழ்ந்த அந்த காலத்திய நினைவுகள் ஞாபகத்தில் வந்து விட்டன அவர்கள் காலத்தில், திருமணமானதும் கணவரின் நலனுக்காக தொடர்ந்து  ஐந்து வருடங்களில் வரும் தை வெள்ளி கிழமைகளில், சுமங்கலி பூஜை நோன்பு எடுத்துக்கொள்ள வேண்டும். பூ பழம், வெற்றிலை,பிரசாதமென அவரவர் வசதிக்கேற்றப்ப ஒவ்வொரு வருடங்களும், வெள்ளிக் கிழமைகளில் ஐந்து சுமங்கலிகளுக்கு கொடுத்து விரதத்தை முடிக்க வேண்டும்.அதேபோல்  ஐந்து வருடங்கள் தோசை நோன்பு  என்னும் விரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் தை வெள்ளிக் கிழமைகளில், பிரசாதமாக (பச்சரிசிதோசைதான்,..பச்சரிசி தோசைக்கு சற்று உளுந்து அதிகமாக போட்டு அரைக்க வேண்டும். புழுங்கல்அரிசி விரதத்தன்று சேர்ப்பதில்லை.) தோசைகளை அம்மனுக்கு சமர்பித்துவிட்டு ஐந்து சுமங்கலிக்கு ஐந்து தோசைகள் வீதம் வெற்றிலை பாக்குடன் வைத்துத்தர வேண்டும். ஒவ்வொரு வருடமும், தோசைகளின் அளவு ௬டி, கடைசி வருடம் தோசை சுடுவதிலேயே, காலை ஆரம்பித்து, பாதிநாள் முடிந்து விடும்... எவ்வளவு பொறுமையம்மா உனக்கு?!!! என ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.  தற்சமயம் இப்போதெல்லாம் சில வீடுகளில் வீட்டிலிருக்கும் ஓரிரு மனிதர்களுக்காக, மனைவியின் நலன் கருதி பொறுப்பு  கைமாறி விடுகிறது. அந்த" பொறுப்பின்' நலமின்மையும் அன்று அதிகமாக அச்சுறுத்தினால், உணவகங்களின் வெவ்வேறு சிற்றுண்டிகள் அன்றையதினம் உணவறையின் சாப்பிட்டு மேஜையை அணிவகுத்துக்கொண்டு விடும்.

  தோசைகைள பற்றி எழுதியதற்கு ஏதாவது ஒரு தோசையை அறிமுகபடுத்தாமல் செல்வது அழகாகுமா? ஆனால் இந்த வகை தோசையும் அனைவரும் அறிந்ததாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன் .

  நவதான்யங்கள் என்பது,  பயிறு,  கோதுமை,   கருப்பு உளுந்து,  காராமணி, , மொச்சை, எள்ளு,  கொள்ளு,  நெல்,  கொண்டைக்கடலை  முதலியவை.


நவதான்ய தோசை அல்லது அடை.:-


  புழுங்கல் அரிசி, பச்சரியும் சமமானஅளவு  (தலா ஒரு கப் என்ற அளவில் ) எடுத்துக்கொண்டு, பச்சைப்பயிறு,  முழு கோதுமை, கொண்டைக்கடலை, காராமணி,  துவரம் பருப்பு,  காணம்,  கருப்பு முழுஉளுந்து, பட்டாணி, கொஞ்சம் வாசனைக்கு எள்ளு, இவை அனைத்தையும்  கலந்து, நாலு கப்   வருமாறு   எடுத்துக்கொண்டு, அரிசிகளையும், பருப்பு வகைகளையும்   நன்கு  கழுவி சுத்தம் செய்து, அவற்றை ஆறு மணி நேரத்திற்குமேல் ஊற வைத்து,  பின்   அரிசியுடன், தேவையான  பச்சை மிளகாய்,  சிகப்பு மிளகாய், உப்பு, பெருங்காயம், சிறிது கறிவேப்பிலை, ஒரு மூடி தேங்காயும்  துருவி சேர்த்து ஒரளவு நைசாக அரைத்தெடுத்துக்கொண்டு, பின் பருப்பு வகைகளை ஒரளவு கரகரப்பாக அரைத்துக்கொண்டு,  இரண்டையும் நன்கு கலந்து கொண்டு ஒரிரு மணி நேரத்துக்குள், தோசையாக செய்து சாப்பிடலாம். பிரியமிருந்தால் பொடிதாக நறுக்கிய வெங்காயமும், கொத்தமல்லி தழைகளையும் கலந்து செய்தால் இன்னமும் சுவையாக இருக்கும் தோசைக்கு சுற்றி விட சமையல் எண்ணெய்யுடன், கொஞ்சம் தேங்காய் எண்ணையையும் கலந்து வைத்து சுட்டு எடுத்தால் தோசை இன்னமும் வாசனை தூக்கலாக இருக்கும். இந்த மாவையே சற்று புளிக்க வைத்து செய்யும் தோசையும் சற்று வித்தியாசமாக இருக்கும். இந்த தோசை அல்லது அடைக்கு, தேங்காய் சட்னியோ, இல்லை, காய்கறிகளை போட்டு செய்யும் அவியலோ, தொட்டுக்கொள்ள மிகப் பொருத்தமாக இருக்கும். இட்லி மிளகாய் பொடி, அல்லது வெறும் பொடி செய்த வெல்லமும், இதற்கு உடன்பாடுதான். அவரவர் மனதையும்,  விருப்பத்தையும் பொறுத்ததுதான் உணவின்  அணிவகுப்புகள் என்பது என்  கருத்து.

இந்த விதத்தில் செய்து பாருங்களேன்.. நன்றி!

பதிவில் போட்ட  படங்கள்  அனைத்துமே  கூகுளில்  சுட்டவைதான்.

படங்கள் நன்றி: கூகுள்