சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
உலகம் எவ்வளவோ முன்னேறி விட்டாலும், நாம் உண்ணும் உணவுகள், நாட்டுக்கு நாடு, மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறுபட்டிருந்தாலும், நம்மை பொருத்த வரைக்கும் எது உடம்புக்கு கெடுதல் செய்யாதது எனப் பார்த்தால் அது இந்த இட்லிதான். நம் வீட்டில் மட்டுமல்ல. அனைவரின் வீடுகளிலும், சின்ன குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், எளிதில் ஜீரணமாகும் உணவு. ஆனால் இந்த உணவு நாகரீகம் தொட்டு இப்போது அனைவருக்கும் பிடிக்காத உணவாகப் போய் விட்டது.
அந்த காலத்தில் பொதுவாக "இன்று உங்கள் வீட்டில் காலை என்ன உணவு"? எனக் கேட்டால் இதன் பெயரைத்தான் சொல்வார்கள். பிறகு நாகரீகம் பரவ பரவ இட்லி தோசையானது. அதன் பின் சில வீடுகளில், "இட்லியா? பயங்கர போர்.. தோசை அல்லது, வேறு ஏதாவது சிற்றுண்டி செய்தால்தான் எங்கள் வீட்டில் பிடிக்கிறது. தினமும் இட்லியென்றால், அதாலேயே நான் அடி வாங்க வேண்டியதுதான்" என அலுத்துக் கொள்ளுவார்கள்.
அத்தகைய இட்லி தட்டுகள் வார்க்குமிடத்தில் சிறு சிறு துவாரங்களுடன் இருக்கும். அந்த துவாரத்தில் துணியின் உதவியுடன் நீராவியில் வேகுவதால், இந்த இட்லி நோயாளிகளுக்கு கூட மருந்தாக இருந்து உதவும். உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு முக்கால்வாசி இந்த உணவுதான் அன்றைய காலத்தில் பரிந்துரைக்கப்படும்.
எங்கள் அம்மா காலத்தில் அவருடைய ஒரு விபரமறியாத உறவுச் சிறு பெண் ஒருவர் தன் திருமணத்திற்கு ( அந்த காலத்தில் பன்னிரண்டு, பதிமூன்று வயதிற்குள் திருமணமாகி விடுமே...!! ) பின் புகுந்த வீடு சென்றதும். அங்குள்ள நிர்பந்தத்திலும் , சமையலில் அவ்வளவாக அனுபவமில்லாத காரணத்தாலும், இட்லி தட்டுக்களில் துணி கட்டாமல் இட்லி வார்த்து விட்டாராம். சிறிது நேரத்தில் இட்லி வெந்துள்ளதாவென கொப்பரையை திறந்து பார்த்த பின் அவருக்கு ஒரே அதிர்ச்சி. இட்லி தட்டுக்களில் ஊற்றிய மாவெல்லாம் காணாமல் போய், கூழாக வடிவெடுத்து இட்லி பாத்திரத்தில் கொதித்து கொண்டிருக்க ... பிறகு என்ன ....!! வழக்கப்படி அவரது தாய்க்கு அந்தப் பெண் மணமாகி சென்ற வீட்டில் அர்ச்சனைகள்... பாவம் அவர்....!! என எங்கள் அம்மா அச்சம்பவத்தை சொல்லிச் சொல்லி வருத்தப்படுவார்.
அதன் பிறகு காலங்கள் வளர வளர, இந்த இட்லியை துணிகட்டி வார்ப்பது, பிறகு அதை சுத்தப்படுத்துவதுதான் இட்லி என்ற உணவை ரசிக்க வைக்கவில்லையோ என இட்லி வார்க்கும் தட்டில் புதுமைகள் வந்தன. துவாரங்கள் இல்லாத தட்டுக்களில் சிறிது ந. எண்ணெய் தடவி அப்படியே அதில் மாவை ஊற்றி அடுக்கடுக்காக அடுக்கி ஒரே சமயத்தில் இருபது முப்பது இட்லிகளுக்கும் மேலாக வார்க்கும் தட்டுக்கள் விற்பனைக்கு வந்தது. அது மக்களை ஈர்க்கவே மறுபடி இட்லி அனைவருக்கும் பிடித்தமானதாக உலா வந்தது.
அப்படியும் இந்த மாதிரி இட்லி தட்டுக்கள் வந்தும், என் குழந்தைகள் காலத்தில் ஒரே மாதிரி அளவுள்ள எவர்சில்வர் கிண்ணங்களிலோ , சின்ன டம்ளார்களிலோ எண்ணெய் தடவி விதவிதமான வடிவங்களில் அவர்களுக்கு இட்லி செய்து தந்திருக்கிறேன். அவர்களும் வழக்கத்துக்கு மாறாக இருக்கக் கண்டு அதை விரும்பி சாப்பிட்டுள்ளனர்.
பிறகு நாளாவட்டத்தில்,அந்த இட்லிகளும் பிற மேல்நாட்டு உணவுகளால், ஒதுக்கப்பட ஆரம்பிக்கவே, குழந்தைகளை கவரும் விதத்தில் சின்னச்சின்ன இட்லி தட்டுக்கள் என பார்க்கவே விதவிதமாக அளவுகளில் அழகாக இட்லி தட்டுக்கள் வந்தன. வேறு வழியில்லாமல் அவர்களது குழந்தைகளுக்காக மீண்டும் இட்லிகள் தனது பயணத்தை தொடர்ந்தன. சில உணவகங்களில் கூட இந்த இட்லிகள் பிரசித்தமாகியது. ( நான் கூட சென்னையிலிருந்து சுற்றிச் சுற்றி இடம் பெயர்ந்து இங்கு வந்த பின் ஒரு தடவை மீண்டும் சென்னை சென்ற போது சாம்பாரில் மூழ்கி பவனி வந்த இந்த குட்டி இட்லிகளை விரும்பி ஒரு தடவை சாப்பிட்டுள்ளேன்.) ஆனாலும் இப்போது, மறுபடியும் பல நாகரீகமான உணவுகள் மக்களை ஆட்கொள்ள ஆரம்பித்து விட்டதால், குழந்தைகள் கூட எந்த வடிவத்தில் இட்லி என்றாலும் முகஞ்சுளிக்க ஆரம்பித்து விட்டனர்.
( இந்த இடத்தில் ஒன்று சொல்லப் பிரியப்படுகிறேன்.எங்கள் பிறந்த வீட்டில் தினமும் காலை ஆகாரம் இட்லிதான். சோம்பலில்லாமல் அம்மா, பாட்டி உடம்புக்கு நல்லதென இதை ஒரு கடமையாகவே செய்தார்கள். மாதத்திற்கு ஓரிரு முறை தோசை, அடை, உப்புமா வகைகள் என வந்தால் அதிசயந்தான். இப்படியே பிறந்ததிலிருந்து பத்தொன்பது வயது வரை தினமும் இட்லிகளை சாப்பிட்டிருப்பதால், நான் இன்றும் ஒரு இட்லி பிரியை.:)))) )
இதன் வடிவங்கள் எப்படி மாறினாலும் அதன் சுவை ஒன்றுதானே. !!!
இதற்கு அம்மியில் அரைத்த தேங்காய், பச்சை மிளகாய் சட்னி, இல்லை, தக்காளி வெங்காய சட்னிகள், இல்லை கொத்தமல்லி சட்னி. இல்லை இஞ்சி துவையல் என அனைத்தும் பொருத்தமாக இட்லியுடன் இணைந்து அதை நன்றாக சுவைத்து சாப்பிடச் செய்யும். ( இந்த நாலுமே இருந்தாலும் தப்பில்லை என்போரும் உண்டு. அவர்கள் இந்த இட்லியை விருப்பமுடன் விரும்புபவர்கள்.) பிறகு சாம்பார்,.. அதுவும், சின்ன வெங்காயம் தக்காளி இவற்றுடன் மணக்கும் சாம்பார் வேண்டுமென்ற கோரிக்கைகள் பல வீடுகளில் உதயமாகி அதுவும் இட்லியுடன் கோலோச்சி வந்தது/வருகிறது. ஆனால், இத்துடன் இட்லி மிளகாய் பொடி என்ற ஒன்று கண்டிப்பாக இதனுடன் இணைய வேண்டும். ஏனெனில் இது "இட்லி" என்ற அதன் முழுப்பெயரையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட பெருமையை உடையது. அதனால் சிலருக்கு மற்றவைகளை சற்று வேண்டாமென ஒதுக்கினாலும் இதை (இ. மி. பொ) முதலிடத்தில் வைத்துக் கொள்ளப் பிடிக்கும்.
"தப்பு..! தப்பு!! இது தோசை மி. பொடி. அதன் பெயரை மாற்றி அந்த இட்லி அந்தப் பொடியை தன் பெயருடன் இணைத்து தனதாக்கி கொண்டு விட்டது" என்று தோசை "பொடி வைத்து" சொல்லலாம். ஏன்.. பேச்சோடு சண்டைக்கு, அதன் மேலும் கைகலப்புக்கு கூட வரலாம்... :)))) எது எப்படியோ...!! இந்தப் பொடியுடன் ந. எண்ணையை கலந்து இட்லியை அதில் புரட்டி ஊற வைத்து சாப்பிடுவதே சாப்பாட்டின் ஒரு கலையென வாதிடுபவர்கள் கண்டிப்பாக உண்டு.
முறையே ஒரு கரண்டி இரு கரண்டியென க. ப, உ. பவுடன் "கொஞ்சம் சீக்கிரம்" என படபடக்கும் கடுகுடனும் அவசரமாக ரெடியாகிறது.
இனி என்ன..!!! உங்களுக்கும் இந்த இட்லி பிடித்திருந்தால் தாராளமாக எடுத்து சாப்பிடலாம்.
இவ்வருட முதலில் காலை ஆகாரத்திற்கேற்ற இட்லி பதிவை அலசி ஆரம்பித்திருக்கிறேன். பதிவை ரசித்தவர்களுக்கும், ந. எண்ணெய் சேர்ந்த இட்லி மிளகாய் பொடியுடன் இட்லிகளை எடுத்து பிடித்தோ/பிடிக்காமலோ சாப்பிட்டவர்களுக்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள். 🙏.
அனைவருக்கும் அட்வான்ஸ் போகிப்பண்டிகை, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.





