Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Wednesday, May 1, 2019

நாம் வாங்கி வந்த வரம்.....சிறுகதை 2)


கதையினுள் உட்கதை

"கடவுள் எல்லா பிறவியையும் படைத்து அதற்குரிய திறமைகளையும் வகைபடுத்தி வைத்தான். அதன்படி அனைத்தும் தத்தம் திறன்படி வாழ்ந்து கொண்டிருக்கையில் நம்மினம் மட்டும் உருவத்தில் மாறுபட்டவையாக இருப்பதினால் எவ்வளவு திறமையுடன் ஓடி ஆடி திரிந்தாலும் மற்ற பிறவிகளின் காலுக்கடியில் மிதிபட்டும் அடிபட்டும் சீக்கரமாக முடிவை சந்தித்து கொண்டிருக்கின்றன..ஏன் இப்படி?" என்ற அந்த கவலையில் உண்ண பிடிக்காமல், உறக்கம் வராமல் தவித்தார் அவ்வினத்தின் தலைவர்.

ஒரு நாள் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர உலகில் உள்ள தன் மொத்த இனத்தையும் கூட்டமாக கூட்டி வைத்துக்கொண்டு அந்த தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

" நண்பர்களே! இன்று நம் கஷ்டங்கள் என்னவென்று உங்களுக்குக்கெல்லாம் புரியும் என நினைக்கிறன். நம்மையெல்லாம் படைத்த கடவுள்  நம்மை படைக்கும் போது, நமக்கு வேண்டும் போது அவரிடம் நமக்கு வேண்டிய வரத்தை  வாங்கிக் கொள்ளலாமென கூறியிருந்தார். அதன்படி அரக்கர்களும், மிருகங்களும், தேவர்களும், மனிதர்களும் அவரவர்களுக்கு வேண்டிய வரங்களை பெற்று வருகின்றனர். அதனால் நாமும் நமக்கு சாதகமாக சாகா வரத்தை பெற்று விட்டால் எக்காலத்திலும் நாம் சந்தோஷமாய் இருக்கலாம். உங்களுடைய கருத்து என்ன?"

இவ்வாறு தலைவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் இருந்து துணிச்சலான குரல் வந்தது. “நீங்கள் சொல்வது உண்மைதான் தலைவரே! அந்த மாதிரி ஒரு வரத்தை பெற்று விட்டால், நம்மை யாரும் அசைக்க முடியாது" என்ற தைரியமான குரலை பார்த்த தலைவர், ""அப்படியானால், நம்மில் யார் சென்று வரம் பெற்று வருவது என்று தீர்மானியுங்கள்"! என்றவுடன், அந்த துணிச்சல் குரலுக்குடையவரை தவிர்த்து மற்றவர்கள்  தங்களுக்கு வேறு வேலைகள் இருப்பதாக பட்டியலிட்டு ௯றி விலக ஆரம்பித்தனர். 

தலைவர் யோசித்தார்! முதலில் வந்த குரலுக்குரியவரையே பக்குவமாக பேசி கடவுளிடம் வரம் கேட்க அனுப்பி வைத்தாலொழிய இந்த பிரச்சனை தீராது என்பதை புரிந்து கொண்டவராய்....

இதோ பார்! நீதான் மிகவும் தைரியமாயிருக்கிறாய்! இந்த வேலைக்கு உன்னை விட்டால் வேறு யாரும் சரி வர மாட்டார்கள்! நீ இதை முடித்து வந்தால் நம் இனம் உன்னை என்றும் நன்றியுடன் போற்றிக் கொண்டிருக்கும்! என்றதும், "வெறும் நன்றிதானா?" என்று மறுபடியும்  அந்த குரல் மறுபடி எகத்தாளமாக கேட்க, "சரி நீ என்ன கேட்டாலும் தருகிறேன்" என்று பதிலுக்கு தலைவர் சொன்னதும், "நான் திரும்பி வந்ததும் உங்கள் இடத்தை தருவீர்களா?" என்று கேட்டதும் ஒரு நிமிடம் மெளனமானார் தலைவர்.

தன் இனங்களின் நன்மைக்காக தன் பதவியை தியாகம் செய்வது ஒரு சாதாரணசெயல்! இதனால் ஒன்றும் குடி முழுகி போய்விடாது! இந்த செயலினால் தன் பேரும் புகழும் பன்மடங்கு பெருகும் என்பதை புரிந்து கொண்டவராய், “சரி! நீ போய் சாதித்து வா! வந்தவுடன் மேடையின்றி, ௯ட்டமின்றி, தேர்வின்றி நீதான் நம்மினத்திற்கு தலைவன்! போதுமா?” என்று உறுதியளித்தார் தலைவர்.

"சரி!" என்று சந்தோசமாக கடவுளின் இருப்பிடத்திற்கு கிளம்பிய அந்த தைரியமான குரலுக்குரியவருடன் அவர் உற்ற நண்பனும் "நானும் வருவேன்" என ஒட்டிக் கொண்டு புறப்பட்ட, "சரி போனால் போகிறதென்று அவரையும் அழைத்துச் சென்ற அந்த தைரியவான் தன் முறை வந்ததும் கடவுளை சந்தித்தார்.

என்ன வேண்டும்? என்ற கடவளிடம், தங்கள் குறைகளை தைரியமாக எடுத்துரைத்தப்பின் வேண்டிய வரத்தை கேட்கும் முன் தைரியமான குரலின் நண்பன் முந்தி கொண்டபடி, “அண்ணே! அண்ணே! இதை மட்டும் நான் கேட்கிறேன் அண்ணே! என்று கெஞ்சி ௯த்தாட, அந்த தைரியவானும், "சரி! நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா? அதே மாதிரி கேட்பாயா? என்று அகங்காரத்துடன் கேட்ட பின் , "சரி! ஒழுங்காக கூறி வரத்தை பெற்றுக் கொண்டு வா! நான் வெளியில் காத்திருக்கிறேன்." என்றபடி வெளியில் வந்து அமர்ந்து கொண்டார். .

சற்று நேரம் கழித்து வெளியில் வந்த நண்பனிடம் "முடிந்ததா? கடவுள் வரம் தந்து விட்டாரா? நான் சொன்னபடி கேட்டாயா? எப்படிகேட்டாய்? ஒருமுறை சொல்! பார்க்கலாம்! என்ற குரலுக்குரியவரிடம் அவர் நண்பன் தான் கேட்ட வரத்தை சொன்னதை கேட்டதும் அவரின் குரலே எழும்பவில்லை!

அடபாவி! “நாங்கள் கடித்து அனைவரும் சாக வேண்டும்! முக்கியமாக மனிதர்கள்!” என்றல்லவா கேட்கச்சொன்னேன். “நீ நாங்கள் கடித்தவுடன் சாக வேண்டுமென” மொட்டையாக கேட்டு வரத்தையும் பெற்று வந்திருக்கிறாயே! பாவி! பாவி! என்று துரத்தி துரத்தி நண்பனை அடிக்க, “அங்கே என்ன சத்தம்?” என்றபடி கடவுள் எட்டி பார்க்க, “கடவுளே! என் நண்பனுக்கு மறதி அதிகம் அதனால் மாற்றிக் கேட்டு விட்டார். தயவு செய்து மன்னித்து வரத்தை நான் கேட்பது போல் தாருங்கள்!” என்று வரம் பெற வந்தவர்  பல முறை வேண்டியும் அதை ஏற்காத கடவுள், “அவ்வளவுதான்! கொடுத்த வரத்தை மாற்ற முடியாது! இனி உங்கள் விதிப்படிதான் நடக்கும் அந்த மனித இனத்துடன்தான் நீங்கள் காலங்காலமாய் வாழ்ந்து, சாவையும்,சந்திப்பீர்கள்!” என்று கடுமையாக ௯றி விட்டு மறைந்து விட்டார்.

வரம் கேட்டு வந்த தன் வாழ்க்கை இப்படி இருண்டு விட்டதே,!!! என்று நொந்தபடி நண்பனுடன் வந்த அந்த தைரியவான் தலைவரின் காலில் விழுந்து கதறியபடி “நாம் இப்போதாவது சுதந்திரமாக அலைந்து கொண்டிருந்தோம், சாகா வரம் கேட்கப்போய் அதிலும் மனிதர்களை கடித்து சாகடிக்கும் வரத்தை கேட்கப்போய் அவர்களை கடித்தவுடன் நாம் இறக்கும் வரத்தை பெற்று வந்திருக்கிறோம்! அது மட்டுமின்றி அவர்களுடனே காலங்காலமாய் வாழ்ந்து இறக்கும் வரமும் கிடைத்துள்ளது, நம்மினத்திற்கு நல்லது செய்கிறோம் என செருக்குடன் சென்ற நான் என் நிலை உணராமல், பேராசையுடன் செயலாற்றியதில் , நம்மினமே சாபம் அடையும்படி ஆகி விட்டது. என்னை மன்னித்து விடுங்கள். ” என்றபடி அரற்றி அழுத அந்த எறும்பினம் துக்கம் தாங்காமல் உயிரை விட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த எறும்பினம் தன் விதிப்படியே மனிதர்களுடன் வாழ்ந்தும் மறைந்தும் வருகிறது.




நன்றி கூகிள்.

Friday, December 12, 2014

இறைவா நீ எங்கும் இருக்கிறாய்…(பகுதி 2)

உன் வேளை சரியில்லையென, வேறுபட்ட மனதோடு சிலர்,

உள் அர்த்தத்தில் வெவ்வேறு விதமாய் சொல்லிச்சென்றனர்.!

நேரங்கள்தான்
 இவையென்று, காலநேரம் பார்க்காமல்,

நேர்த்தியாய் பலர், “நேர்ந்து கொள்ளவும் தூண்டிவிட்டனர்.!
தடுக்கி விழும் போதெல்லாம், தடுக்கி விடும் கோவில்களில்,

தனியாகவிருக்கும் உனை சிறப்பாக பூஜிக்க சில பரிந்துரைகள்,

தப்பாமல் தினம் வந்து, தயங்காமல் என் செவிகளிலே,

தளர்வில்லா பேச்சினிடையில், தவறாமல் வந்தடையும்.!
அத்தனையும் செவிமடுத்து, “நித்தம் நித்தம் உனை மறவாது,

பித்தனைப்போல் சுற்றிவந்து, பலவிதமாய் உன் உரு கண்டும்,

எத்தனைக்காலமாய், ஏங்கி நின்றேன்! உன் இருப்பிடமும் சொல்ல,

இத்தனைக்கும் ஓர்நாள், இன்றுவரை ஏன் எதிர்வந்து நிற்கவில்லை.?
ஆலயம் தொழுவதை அக்கறையோடு செய்து, அனுதினமும் உன்னை

அன்போடு வணங்கி, “அமைவதெல்லாம் உன் அருளால்தான் என

மனதளவில் நம்பி, எதுவும் நயந்து வேண்டாது நீ" தந்ததே போதுமென,

மனதாற இருந்த செயல் மற்றெவருக்கும் தெரியாதன்றோ.?

இவ்வளவும் அறிந்த நீ இடுக்கண் வரும் முன் களையாது,

இருந்தவிடமும் விட்டு நகராது, நான் இத்தனை நாள் கண்ட ஓர்

உருவில் என் எதிரிலும் வாராது, மற்றவர்களோடு மற்றவராய் மறுத்து

உதறுவதும் ஏனோ.? இவ்வுருவிலெல்லாம் நீ இல்லையென்றால்
இறைவா நீ எங்கிருக்கிறாய்….? இறைவா நீ எங்கிருக்கிறாய்….?

இருக்கும் இடத்தை, தெள்ளத்தெளிவாக உணர்த்தாயோ..? என

அரற்றிய குரலுக்கு பதிலாய், அசரீரியாய் மறுகுரல் என் மனதிலிருந்து

அரைகணத்தில் அருமையாகத்தானே விழித்தழைத்தது.!
௬டு விட்டு ௬டு பாயும் உன்னுயிர் ௬ட்டுக்குள்,

௬ர்ந்தே நீயும் பார்த்திருந்தால், என்னுயிரே, உன்னுயிராய்

இயக்கத்தின் அற்புதமாய், இசைந்திருக்கும் அதிசயத்தை,

இன்பமுடன் கண்டுகொண்டு இறைவனாக உணர்ந்திருப்பாய்.!
உன்னையும் அறிந்து கொள்ளாமல், உண்மைதனை புரியாமல்

உன்னுள் குடியிருக்கும் என்னையும் உணரந்து கொள்ளாமல்,

என்னைத்தேடி தினம், எனக்கு தினத்துக்கொன்றாய் பெயர் சூட்டி

என்னையும் துன்புறுத்தி, வாழ்வை எட்டிக்காயாய் திணறடித்தாய்.!
ஆத்மாவும் நானே.! உன்னிலிருக்கும் பரமாத்மாவும் நானே.!

ஆதியந்தம் தொட்டு, உன்னை அகலாதிருப்பவனும் நானே.!

பட்டுவிடும் மேனிக்குள், தொட்டுவிடும் தொலைவிலிருப்பவனை

பற்றிக்கொண்டு வாழாமல், தொலைத்து விட்டழும் தொட்டில்

குழந்தையாய், குமைந்து கொண்டும், குமுறிக்கொண்டும்,

குற்றமுள்ள மனிதனாய், ஏன் குவலயத்தில் வாழுகின்றாய்…? 
இனியேனும், அங்கு இங்கு என்று அலைந்து திரியாமல், உன்

இன்னுயிரை "நானென்று" உணர்ந்து கொண்டு, என்னுயிர்தான்,

அனைத்துயிரும் என்பதையும் புரிந்து கொண்டு, அன்புடனே  

அணைத்து விடு என்னையே.! அருள் பிறக்கும் உண்மையே.!”
ஓடி வந்த குரல் கேட்டு ஒரளவு தெளிவு பெற்றேன்.! நம்முள்

ஒளிந்து கொண்டிருப்பவனும் அவனென்று அறியப்பெற்றேன்.!

இனி விழைந்து தேடி அவனுருவத்தை என்னுள் தக்கவைக்கும்

இன்செயலை விரைந்து செயலாற்ற "அவன்துணை வேண்டினேன்.!

நானடைந்த இவ்வின்பமதை தாமறியச்சொல்லுகின்றேன்.!

தானடைந்தால் போதுமென்று தக்கணமும் எண்ணவில்லை.!
அறிந்தவர் அனைவருமே, தன்னுயிரை தலைவனாக்கி

அனைத்துயிரும்,“அவனே எனும் தத்துவத்தை தலையாக்கி,

அனைவருக்கும் உதவுவதே அவன் சேவை என்று மெய்யாக்கி,

அறிந்தவற்றை பிறர் அறியச்செய்து தலைசிறந்து வாழ்ந்திடுவோம்.

படங்கள்: நன்றி கூகுள்

இறைவா நீ எங்கிருக்கிறாய்….? (பகுதி 1)


இறைவா நீ எங்கிருக்கிறாய்….?

வேழ முகமாய், வேதங்களுக்கு முதல்வனாய்,

வேண்டும் போதெல்லலாம், உனைக் காண்கிறேன்.!

பன்னிருகை வேலனாய், பக்தர்களை ரட்சிப்பவனாய்,

பக்திப்பரவசத்தில் பயணிக்கையில், உனைக் காண்கிறேன்.!


பாம்பணையில் பள்ளிக்கொள்பவனாய், பரந்தாமனாய்,

பாதாதிகேசம் படிய பணிந்துவந்ததில், உனைக் காண்கிறேன்.! 

கைலாயத்தில் நடனம் செய்யும், நடராஜனாய் உந்தனையே,

கைக்௬ப்பித்தொழும் போதெல்லாம், உனைக் காண்கிறேன்.!

அன்னையாய் ஆதியாய், ஆதிபராசக்தியாய் ஆபத்பாந்தவியாய்,

அன்போடு அழைக்கும் நிமிடமெல்லாம், உனைக் காண்கிறேன்.!

சக்தியும், சிவனுமாய், சடுதியில் சங்கடங்கள் களையும்,

சகல தெய்வங்களாயும், சரணிப்பதில் உனைக் காண்கிறேன்.!

ஆண்டுகள் பலதும் கடந்தும், அவனன்றி எதுவும் இல்லையென,

ஆணித்தரமாய் பதிந்த மனதுடனே, அவனியிலே வாழுகிறேன்,

ஆனாலும், பாராமுகம் காட்டி மனம் பரிதவிக்க வைப்பதில்,

ஆனானபட்டவன் நீ என்பதை பரிதாபமின்றி புரிய வைக்கிறாய்.!

நஷ்டங்களும் கஷ்டங்களும் நகர்ந்தே வந்து வாழ்வதனை

நாமறியா போதினிலே, நலம் குலைக்க செய்ததினால்,

சுற்றமென சூழ்ந்தவர்கள், சுற்றிலும் நடந்ததும், நடப்பதும் 

சூழ்நிலைதான், ஊழ்வினைதான் எனச்சுட்டியும் உணராமல்,
இறைவனை முறைப்படி துதிக்கவில்லை.! “நீ எவரிடமும்

இன்முகமும் காட்டவில்லை.! இவ்விரண்டும் நீ செய்திருந்தால்,   

நஷ்டங்களும், கஷ்டங்களும் நாளும் உனை தேடிவந்து

நலமறிய நாடியிருக்காது, என நாச்சுழட்டி நவின்று சென்றனர்.!
இறைவனிடம் பாராமுகம், இனியேனும் காட்டாதே.!” எனச்சுற்றி

இருப்பவர்கள் பகரும் போது இயல்பை காட்டிலும்
 உனைத்

தேடும் உணர்வு, என்னுள் தேயாமல் அதிகமாய் வளர்கின்றது.!

தேடுதல் பணியில் இப்பாராமுகம்,! உனக்கா! எனக்கா! புரியவில்லை .!


Tuesday, July 22, 2014

முருகா! இவையொன்றாக நான் பிறந்திருந்தால்!!!


உன் ஒரு திரு முகத்தின்
இரு விழிகள், என்னைக் கொஞ்சம்
பார்த்தும், பாராமலுமிருக்க, மற்ற
இரு முகத்தின், இரு விழிகளின்,
ஓரப்பார்வை, என்னைச்சிறிது
தொட்டும், தொடாமலுமிருக்க, தொடர்ந்திருக்கும்,
மூன்று முகங்களின் முழுப்பார்வையும்,
முழு திக்கிலும், பரவி விரிந்திடவே,
முயற்சிக்கும் போதினிலும், முருகா!
முழுமதியான உன் முகத்தில்,
மெளனமாக உன் இதழ் சிந்தும்,
மெளனப் புன்முறுவல், என் வாய் பேசாத,
மெளனத்தை கலைத்து உன்னிடமிருந்து, மறு
மொழியொன்றையும், தினம் எதிர்பார்க்கின்றதே!
 பறவையாய் நான் பிறந்திருந்தால், என்
பறக்கும் திறனினால், பந்தென கிளம்பி,
உனைச்சுற்றும் சில பறவைகளோடு,
உளம் களிக்க உனைத் தொட்டு, என்
சிறகுகளால், உனை தினம் வருடி,
சிறகடித்து, வானில் வட்டமிடும் பிற
பறவைகளோடு, ஒரு பறவையாய், உன்னை
பலகாலம் சுற்றி வருவேன்.

 

 மலர்களாய், நான் மலர்ந்திருந்தால்,
மணம் வீசும் அச்சிறு பொழுதில், உன்
மார் மீதும், தோள் மீதும், மணம் மிகும்,
மலர் மாலைகளாக நான் மாறி,
மணந்திருக்க, மகிழ்ந்திருப்பேன்.
வாசமுள்ள மனதுடனே, உன்னருளினால்,
வாடாத மல்லியாய் என்றும், நான்
வாழும் வரை வசித்திருப்பேன்.

மேகமாய், நான் ஊர்ந்திருந்தால்,
மோகமுற்ற மனதுடனே, கடும்,
வேகமாய் அவ்விடம் விட்டு நகராது,
வேறிடம் ஒன்றிருப்பதையும் அறியாது,
ஏகமாய் உனை விரும்பும் விருப்பத்துடனே,
எத்திக்கும் பொழியும் மழை மேகமாகி,
தாவி உன் பூ முகம் அணைந்திடவே,
தங்கு தடையில்லா, நீர் தாரையாவேன்.

நிலவாய் நான் நீந்தியிருந்தால்,
நீக்கமுற நிறைந்திருக்கும், என்
தன்னொளியால், உந்தன் தங்கத்
தளிர் வதனம் கண்டு மனமுவந்து,
இரவின் பொழுதெல்லாம், உனை
இரசித்து, கரையாமல், கரைந்திடவும்,
இமையோன் மைந்தா! உன்னிடம் என்
இமை மூடா வரம் கேட்டுப் பெற்றிடவும்,
இயன்றவரை முயன்றிருப்பேன்

உமையவளின் அருமைந்தா!
உனைச்சுற்றிச் சூழ்ந்திருக்கும், மற்ற
மரங்களினிடையே, ஒரு மரமாக
மண்ணோடு நான் நின்றிருந்தால், என்
கிளைகள் ஆடும் அவ்வேளையில்,
கிளுகிளுக்கும் மணியோசை போல்,
காற்றுடன் காற்றாக நான் கலந்து, உன்
காதோடு தினம் உறவாடி, என்னை
காக்க! காக்க!, என்றே துதி பாடி, நின்
கழலடியை மறவாதிருக்க பண் பாடி, என்
மனதின், எண்ணமெல்லாம், இந்த
மால் மருகனை விட்டகலாது, ஒருநாளில்,
மண்ணின் மடியில் சாய்ந்தாலும்,
மமதையின்றி வீ்ழ்ந்திடும் வரத்தை,
கண் மூடி, மனம்கசிந்து நான் பெற்றிடவே,
கண்ணின் கருமணியாம், எந்தன்
கந்தனை வேண்டியபடி, நின்றபடியிருந்தாலும்,
காலமெல்லாம் களித்திருப்பேன்.

இவற்றிலொன்றிலும், நான் பிறவாமல்,
இந்த மண்ணுலகின் மாந்தரென்று,
பிறந்து விட்ட ஒரு காரணத்தால்,
பிறவியின் பயன் தொட்டு, உன்னைத்
தொடவும் நேரம்  பிறக்கவில்லை!
தொடரவும், வழி அமையவில்லை! என்னைத்
தொடர்ந்து வரும் பாபங்களினால்,
கடமையெனும் கயிறானது, இறுகவே
கட்டி விட்டது கண்களையும்,
கைகால்களையும்! தற்சமயம் நின் கருணை, அக்
கட்டவிழ்த்து போனதில், உந்தன்
காட்சி கிடைத்திட, என் கவலை அகன்றிட,
கந்தா! எனை நோக்கி இனியேனும், மனம்
களிப்புற கருணைக்கண் திறவாய்.!
   என் சிந்தனை என்றென்றும்,
உன்னிடம் சிரத்தையோடிருக்க,
கந்தனே, உன் சிந்தைதனில், நீ
எந்தனையும், சற்று நினைத்திருக்க,
வந்தனையோடு துதிக்கின்றேன்.! அவ்
வரம் வேண்டி தவிக்கின்றேன்.! என்
மரணம் என்னை தொடும் வரை, உன்னை
மறவாத வரம் தந்தருள வேண்டுகின்றேன்.! 
மறவாது அவ்வரத்தை, தந்திடுவாய் என,
மனமாற வணங்கிப் போற்றுகின்றேன்.!!!!
மனதாற துதித்து யாசிக்கின்றேன்.!!!!