Showing posts with label அறுசுவை.. Show all posts
Showing posts with label அறுசுவை.. Show all posts

Wednesday, May 10, 2023

வாழையும், சேனையும்.

பொங்கலுடன் எரிசேரி. 

நம் நாட்டில் சிறந்த முக்கனிகளில் இந்த வாழைப்பழமும் ஒன்று. பொதுவாக வாழை மரம்  சம்பந்தபட்ட அனைத்தும்  அதன் பயன்பாடுகளில அனைவருக்கும் உடம்பிற்கு பல நல்லதையும் செய்யும். ஒவ்வாதவர்களுக்கு சில உபாதைகளுக்கான பாதையையும் காட்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாயுதொந்தரவு உள்ளவர்களுக்கும், இனிப்பு தடை செய்யப்பட்டவர்களுக்கும் முறையே வாழைக்காய், பழம் முதலியவை சில தொந்தரவுகளைத் தரும். 

ஒவ்வொரு வீட்டின், அல்லது கோவிலின் அனேக விஷேட தினங்களில் இந்த வாழை மரந்தான் அனைவரையும் வரவேற்கும் நல்ல மனதுடன் வாசலில் கட்டப்பட்டு அதன் சிறப்பை பறைசாற்றிக் கொள்ளும் பெருமையை பெற்றது. 

வாழைப்பழம் கனிகளில் சிறந்தது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பது.  எக்காலத்திலும் தடங்கலின்றி கிடைப்பதால், இறைவனுக்கு படைக்கப்படும் நிவேதனங்களில் இக்கனி முதலிடம் பெறும் பாக்கியத்தை பெற்றது. 

வாழைக்காய் வகையில் கறி, கூட்டு, புளிச்ச கூட்டு, வறுவல் துவையல் பொடிமாஸ் எனப்படும் கறி போன்றவற்றிக்கு உறுதுணையாக இருக்கும். தவிரவும் வாழை இலையில் சாப்பிட்டு பழகியவர்கள் அதை விட சிறந்த தட்டுகளில் பரிமாறினாலும், இவையெல்லாம்  இதற்கிணையாக (வாழை இலைக்கு இணையாக) வருமா என்று கூறுவார்கள். அந்தளவிற்கு இலையில் சாப்பிடும் உணவு பதார்த்தங்கள் கூடுதல் சுவை பெறும். 

வாழைப்பூ அதன் இயல்பான துவர்ப்பு சுகர் அதிகம் உள்ளவர்களுக்கு ஒரு அருமருந்து. தாராளமாக  இதை மதிய  உணவுடன் கறி, கூட்டு, பருப்புசிலி, வடை, அடை என செய்து சாப்பிடலாம். இதுவும் சில சமயங்களில் அதனுடன் சேரும் பொருட்களால் வாயு தொந்தரவை சிலருக்கு ஏற்படுத்தும். (எதுவுமே, அமிர்தமேயானாலும், அளவுக்கு மிஞ்சினால் அது விஷந்தானே...! . 

வாழைத்தண்டிலும் அது போல் சிறந்த பலன்கள் உள்ளது. அதிலேயும் கறி, கூட்டு, உசிலி, அவியல் தோசை என அனேக விதமான உணவு வகைகள் செய்து சாப்பிட உடம்பிற்கு நல்லதைச் செய்யும் தன்மை கொண்டது. இப்படி வாழை மரத்தை நுனி முதல் அடி வரை நமக்கு பயனுள்ளதாக அமையுமாறு இறைவன் அதை தோற்றுவித்துள்ளான்

இன்று வாழைக்காயுடன், காய்கறிகளில் ஒன்றான சேனைக் கிழங்கையும் (அந்த காலத்தில் மன்னர் ஆட்சியில் பலம் கொண்ட ஒரு படை என்பது. சேனை, படைக்கு தலைமை தாங்குபவர் சேனாதிபதி என்ற பெயர்களைப் போலவே இதற்கு யார் முதலில் சேனைக்கிழங்கு என்ற பெயர் வைத்தார்களோ தெரியவில்லை..) சேர்த்து செய்யும் உணவாகிய எரிசேரி. ( இதற்கும் இந்தப் பெயரை யார் வைத்தார்களோ?) இது மலையாள கரையோரம் அன்றிலிருந்து இன்றுவரை உலா வந்த / வரும் சிறப்பு உணவுகளில் ஒன்று. . 

வாழைக்காயைப் போல இந்த சேனைக் கிழங்கிலும் பல நன்மைகள் உண்டு. இந்த இரண்டையும் சேர்த்து சமைக்கும் போது அது ஒரு ருசி. இதிலும் (சேனைக்கிழங்கிலும்) கறி, கூட்டு, சாம்பார், பிட்லை, வறுவல் என விதவிதமாக செய்யலாம். அவியலில் இவை இரண்டும் (வாழை, சேனை காய்கள்) எவ்வித மனவேறுபாடின்றி சேர்ந்து கொள்ளும். 

வாழைக்காய் எளிதில் வெந்து விடும். மாறாக சேனைக்கிழங்கு சில சமயம் அடம் பிடிக்கும். குக்கரில் வைத்தால் கூட அதன் மனது  சிலசமயம் கல் மனதாகவே இருக்கும். சில சமயம் வெறும் கடாயில் அரிந்து போட்டு வேக வைத்தாலும், வெந்து விடும். பொதுவாக கொஞ்சம் சிகப்பு கலர் கலந்து இருக்கும் சேனைகள் இந்த மாதிரி அடம் பிடிக்கும். அதனால் வெள்ளை மனதுடையவையாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். சமயத்தில் அது நன்றாகவே வெந்து எரிசேரியில் சேரும் போது  உருதெரியாமல் கலந்தும் விடும். 

இப்படி குழைந்து வெந்து விடும் சேனைக்கிழங்கு மசியல் செய்வதற்கு உகந்ததாக இருக்கும். இந்த சேனைக்கிழங்கு (இதை மட்டும் வைத்து செய்யும் சேனை மசியல்) மசியல் புளி விட்டும், இல்லை இறுதியில் எலுமிச்சைபழம் சேர்த்தும் பண்ணலாம். சாதத்துடன் கலந்து சாப்பிட அதன் ருசி நன்றாக இருக்கும். ஓரிரு சுட்ட அப்பளங்களை இதன் தொட்டுகையாக இருக்கடடும் என இது முழுமனதுடன் சம்மதித்து விடும். (இப்போது இங்கு சில சாமான் மால்களில் இந்தச் சேனைக் கிழங்கை தோல் நீக்கி  துண்டுகளாக்கி விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.) 


இது வேக வைத்த வாழைக்காய் துண்டங்கள். 


இது வேக வைத்த வாழைக்காய் துண்டங்களுடன் கடுகு மட்டும் தாளித்து கொட்டியுள்ளேன். 


இது குக்கரில் சமர்த்தாய் வெந்து காத்திருக்கும் சேனைக்கிழங்கு துண்டங்கள். 


இது வறுத்து அரைக்க காத்திருக்கும் மசாலா சாமான்கள். 

இது எரிசேரி. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்கள் பண்ணும் போது எடுத்தவை.  ஒன்றுக்கொன்று சம்பந்த மில்லாமல் குழப்புமோ என்னவோ? இது பண்ணும் போது தொடர்ச்சியாக எடுத்த நிறைய புகைப்படங்கள் பழைய கைப்பேசியிலிருந்து மாற்றும் போது காணமல் போய் விட்டது. 

முதலில் சேனைக் கிழங்கின் தன்மையை பொறுத்து அதை கொஞ்சம் பெரிதான துண்டங்களாக்கி குக்கரிலோ தனியாகவோ வேக வைத்துக் கொள்ளவும். பின் வாழைக்காயை அதே அளவு பெரிய துண்டுகளாக்கி தனியே வேக வைத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும். 

ஒரு கடாயில் அவரவர் காரத்திற்கு தகுந்த மாதிரி சிவப்பு மிளகாய், ஒரு ஸ்பூன்  தனியா, உ. ப, க. ப ஒவ்வொரு ஸ்பூன் இவற்றுடன் மிளகு ஒரு ஸ்பூன் என எடுத்து கடாயில் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். தேங்காய் அரை மூடி துருவிக் கொண்டு அதையும் கொஞ்சம் வாசனை வருமளவிற்கு வறுத்துக் கொண்டு நன்கு ஆறியதும், கொஞ்சம் கறிவேப்பிலையையும்  கடாயில் அதனுடன் சேர்த்து  வறுத்து உரலிலோ, மிக்ஸியிலோ போட்டு அரைத்து அந்த விழுதை வேக வைத்திருக்கும் காய்களுடன் சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு கொதிக்க விட்டு, (இதற்கு மேல் தேங்காய் அதிகம் சேர்த்தால் பாதகமில்லை என்பவர்கள் இரண்டு ஸ்பூன் தேங்காய்ப்பூவை நன்கு வறுத்து இறுதியில் அதனுடன்  சேர்த்துக் கொள்ளலாம்.) (அப்போது இந்த எரிசேரி நல்ல மணம் பெறும். ஹா ஹா. ) கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்து இறுதியில் ஒன்று சேர கொதித்து வருகையில், மூன்று பெரிய ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கிவிடலாம். இப்போது இதன் வாசனை கண்டிப்பாக உடனே நம்மை உணவருந்த அழைக்கும். 


இது மஞ்சள் தூள் சேர்த்த பொங்கலுடன் வறுத்த சாமான்களை சேர்த்த படம். 

மதியமோ, இல்லை, பசிக்கும் போதோ வெறும்  சாதம் மட்டும் வைத்தால், மீதமிருக்கும் இந்த எரிசேரி ஒரு கை கொடுக்கும் என்பதால், எப்போதும் எங்கள் வீட்டில் இந்த பொங்கலுக்கு உடன் துணையாக வரும் சட்னிகள், சாம்பார், உ. வடை முதலியவை மறுபேச்சின்றி  சத்தமின்றி ஒதுங்கிக் கொண்டன. (ஆனால், எப்போதும் அதன் துணையாக வருபவை அன்று பற்களை கடித்தபடி பழி வாங்கும் மன நிலையில் உள்ளதென்பதும் எனக்கு புரிந்தது. :))) 

பி. கு. இன்னமும் இவை இரண்டின் நன்மைகள் (அதுதான் காய்கள் இரண்டின் நன்மைகள் ஏ முதலான விட்டமின், உடலிலுள்ள குறைகளை போக்கி நிறைகளை அதிகரிக்கச் செய்வது..) பற்றிய குறிப்பை இதனுடன் இணைக்க சேகரித்தேன். ஆனால், ஆகா.. ஒன்றுமில்லாத இந்தப் பதிவு இவ்வளவு நீ.. ள.. மா.. என்று பதிவின் நீளம் கருதி ஒருவரும் பொறுமையுடன் படிக்க வில்லையென்றால் என்ன செய்வதென்று அது எதையும்  இணைக்கவில்லை

இப்படி எத்தனைதான் நன்மை குறித்த குறிப்புகள் இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும், பயன்படுத்தும் அவரவர் உடல் நிலைக்கேற்றபடிதான் அவைகளும் நம்முடன் ஒத்துழைக்கும் இல்லையா..? 

அறு(சு)வைப் பதிவை படிக்கப் போகும் அனைவருக்கும் அன்பான நன்றிகள். 🙏.

Thursday, November 24, 2022

இனிய அனுபவங்கள்.

 ரவா வெல்ல கேசரி புராணம்...


ஸ்ரீ விக்னேஸ்வரனே அனைவருக்கும் துணை

அருள் மிகும்  விநாயகர் இந்த தடவையும் என் பதிவில் இடம் பெற வந்து விட்டார். அதுவும் முன்னாடி பதிவிலேயே (கதைப் பதிவுக்கும், அதற்கடுத்த  முந்தைய பதிவுகளுக்கும்) தங்கள் விருப்பமாக கருத்துக்கள் சொன்ன  என் அன்பான சகோதர சகோதரிகளின் அன்பான வேண்டுகோளிற்கு இணங்கி வந்த அவருக்கு என் பக்தியுடன் கூடிய நமஸ்காரங்கள். 🙏. 

அவரை வரவழைத்த உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

இந்த பாம்பே ரவையை கேசரி செய்து சாப்பிட்டு எல்லோருக்கும், பழக்கந்தான்.. அதிலும் ஒரு ஆண், பெண் வாழ்க்கைப் பயணத்தில் அறிமுகமாகும் ஒரு நன்னாளில், இது இல்லாமல், இதன் அனுமதி இல்லாமல் அந்த காலத்தில் எந்த வித இனிப்பும் தலை காட்ட முடியுமா? போதாகுறைக்கு வாழைக்காய் பஜ்ஜியையும் இது துணைக்கு அழைத்துக் கொள்ளும். அதன் துணை இதற்கு ஒரு வாழ்க்கைத்துணை மாதிரி. பெயர் பொருத்தமும் பஜ்ஜி ஜொஜ்ஜி என இணையாகவும், பொருத்தமாகவும்  வைத்துக் கொண்டபடி அனைவரும் அவரவர் வாழ்க்கைத்துணை களை தேர்ந்தெடுக்கும் சமயங்களில் இதன் உலா அக்காலத்தில்  தொடரத்தான் செய்தது. ஆனால், காலங்கள் மாற மாற வேறு இனிப்புகள், காரங்கள் இதன் இடத்தைப்பிடித்து இவைகளின் அதிருப்தியை சம்பாதித்து கொண்டன. அதன் பின்னும் வந்த காலத்தில், ஒரு காப்பி, டீ, ஏதாவது பழ ஜூஸ், இல்லை வெறும் தண்ணீர் என்ற காலங்கள் மாறி, மேற்படி பையனும், பெண்ணும் உயர்தர உணவகத்தில் விலையுயர்ந்த ஒரு காஃபியை வாங்கி சிறிது சிறிதாக நீண்ட நேரம் அருந்தி, பெரிது பெரிதாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி அலசி ஆராய்ந்து, தங்கள் ஒப்புதல்களை பெரியவர்களுக்கு தரும் நாளை தீர்மானித்து, முடிவில் சேர்ந்தோ, அல்லது விலகியோ போகும் நவநாகரீக காலங்கள் என்று இப்போது வந்த பின் இந்த ரவை கேசரி வெட்கி தலைகுனிந்து இந்த சுபமான வைபவங்களுக்குள் கலந்து கொள்ளாமலே விலகி விட்டதோ என நான் நினைக்கிறேன். (தப்பித்தவறி இதற்கு இருந்த மதிப்பு இன்னமும் அநேக இடங்களில் நிலையாக இருந்தால், இதைப்பற்றி  இப்படி எழுதும் என்னை மன்னித்து விடுமெனவும் ஆணித்தரமாக நம்புகிறேன். :)))) ஏனென்றால் ரவா கேசரி எங்களுடைய பிடித்தமான உணவு. முன்பு நாங்கள் குழந்தைகளுடன் சேர்ந்திருந்த போது, சனி ஞாயறுகளில், மாலை ஏதாவது ஒரு காரமான ஸ்நாக்ஸாக வடை, பஜ்ஜி உ. கி. சேர்த்தோ , இல்லை உளுந்து போண்டா, குணுக்கு போன்றவற்றையோ செய்யும் போது இனிப்பான இது எங்களை மறக்காது அடிக்கடி இதுவும் வந்து உடன் சேர்ந்து கொள்ளும். ) 

எனக்கு தெரிந்து எனக்கும் சரி, என்னை சார்ந்த  என் இனிய சுற்றங்களுக்கும் இந்த ரவை கேசரி படலம் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தின் முதலாவதாக தொடர்ந்தது . சென்னையிலிருந்து  என் கணவர்  என்னை பெண் பார்க்க வரும் போது காலை நேரம். பத்து பதினொன்று என அந்த நேரத்தில் கேசரியும், பஜ்ஜியும் அத்தனை பேருக்கும் முன்னால் அமர்க்களமாக அணிவகுத்து நின்றன. இத்தனைக்கும் காலை சீக்கிரமாகவே எழுந்து காலை டிபனை (வழக்கப்படி இட்லிதான்) முடித்து விட்டு வீட்டிலிருந்த நாங்கள் அனைவரும்  காத்திருந்தோம். அவர்களும்  (அவர்கள் அக்கா வீட்டிலிருந்து) காலை டிபனை முடித்து விட்டு வந்திருந்தார்கள். பெண் பார்க்கும் வைபவங்கள் முடிந்த பின் பெரியவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் முடிந்ததும், உடனே மாலை நிச்சயதார்த்தம் என முடிவானது. ஏனென்றால் அப்போது சென்னையிலிருந்து அடிக்கடி வந்து போவது கொஞ்சம் கடினம். அவர் அலுவலகத்தில் அடிக்கடி விடுமுறையும் எடுக்க இயலாது என்பதினால், பெரியவர்கள் கலந்தாலோசித்து இந்த அவசர முடிவு. 

அன்றைய மாலைக்குள் எங்கள் அம்மா (அப்போதெல்லாம் யாரையும் உடனடியாக சமையலுக்கு அழைக்கும் வசதி கிடையாது) வடை பாயாசத்துடன் இனிப்பு வகைகளையும் செய்து சமையலையும்  (அதுவும் நவீன வசதிகள் ஏதுமற்ற சூழ்நிலைகளில் ) தடபுடலாக முடித்து நிச்சயதார்த்தத்திற்கு மனையிலும் அப்பாவுடன்  வந்தமர்ந்தார். அதற்குள் வாத்தியார் ஏற்பாடு, பிற வேலைகள் என அப்பாவும், அண்ணாவும் மன்னியும் பயங்கர பிஸி. வீட்டிலேயே நடைபெற்ற அந்த அவசர விழாவுக்கு அக்கம் பக்கம் உறவினர்கள், தெரிந்தவரகள் என நிறைய பேர்களை விழாவில் கலந்து கொள்ளவும் , சாப்பிடவும்,  அழைத்திருந்தோம் .மாப்பிள்ளை வீட்டை சார்ந்தவர்கள் பத்து பேர்களுக்கு மேல் வந்திருந்தனர். மனையில் வைக்க சீர்  பட்சணங்களும் (அதை முதல்நாளே நிச்சயதார்த்திற்கென அம்மா, பாட்டி செய்து வைத்து விட்டார்கள். "என்னம்மா இது  இன்னும் முதல்படியிலேயே கால் பதியவில்லை... அதற்குள் இரண்டாவது படி மேல் காலை வைக்க முயற்சி செய்கிறாயே" என நாங்கள் கேட்டும், அம்மாவுக்கு  என்னவொரு அசைக்க முடியாத நம்பிக்கை....!! "சுபமஸ்து எல்லாம் நல்லபடியாக நடந்து விடும்.. அப்படியில்லையென்றால், நமக்கு இதையெல்லாம் சாப்பிட வாய் இல்லையா என்ன?" என்று உறுதியுடன் பதிலளித்து விட்டு மாலாடு, ரவாலாடு, தேன்குழல், திரட்டுப்பால் என எல்லாம் வகையாக செய்து விட்டார்.)  தயார் நிலையில் இருந்தன. 

இத்தனை பேருக்கும் சமையல், வீட்டிலுள்ள எங்களுக்கு காலை டிபன், பின் இடையில் வந்தவர்களுக்கும் இனிப்பு காரத்துடன் டிபனும் (இட்லிகளும்) என பரபரப்புடன் அவர்கள் (எங்கள் அம்மாவும், பாட்டியும். ) விடாமல் செய்ததை என்னால் இன்னமும் மறக்க இயலாது. இப்போது உள்ளவர்களால் இப்படி தனியாக அத்தனையும் செய்யவே இயலாது. நல்லவேளை...! என் முதல் பெண் பார்க்கும் படலத்துடன் அத்தனையும் சுபமாக முடிந்தது. மேலும் நிறைய தடவைகள் இந்த பஜ்ஜி கேசரி சிரமங்களை என் பெற்றோருக்கு நான் தர வைக்கவில்லை அந்த இறைவன். 

திருமணமாகி எங்களுக்கு குழந்தைகள் பிறந்த காலத்திற்கு பின் என் புகுந்த வீட்டின் ஒரு சுற்றத்திற்காக  ஒரு இடத்தில் பெண் பார்க்கும் படலத்திற்கு சென்றிருந்தோம்பெண் வீட்டுக்காரர்கள்  ஏற்கனவே எனக்கு மிகவும்  அறிமுகமானவர்கள். (அக்கம்பக்கமாக ஒரு இடத்தில் முன்பு ஒரு சமயம் நாங்கள் குடியிருந்ததில் ஏற்பட்ட  நெருங்கிய நட்பு) நாங்கள் உறவு என கூட்டமாக அவர்கள் வீட்டுக்கு பெண் பார்க்கப் போனதோ கிட்டத்தட்ட பத்து பதினைந்து பேர். அத்தனை பேருக்கும் அவர்கள் சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜிகள், நெய் சொட்ட கேசரி என அமர வைத்து போதும் போதுமென தடுத்தும் அன்போடு விடாப்பிடியாக பறிமாறினார்கள். பிறகு நல்ல பெரிய டம்ளர்களில் காஃபி. மயங்கி கீழே விழாத குறையாக சாப்பிட்ட (சாப்பிட வைத்தார்கள்) பிறகு பெண் பார்க்கும் படலம் முடிந்தது. 

அந்தப் பெண்ணை நான் ஏற்கனவே பல தடவைகள் பார்த்து பேசியுள்ளேன். ஆனால், மாப்பிள்ளை உறவுகள்  அப்போதுதான் பார்க்கிறார்கள். இறுதியில் வீட்டுக்கு வந்ததும் அந்தப் பெண் வேண்டாமென மாப்பிள்ளை பையன்  சொன்னதும் எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. (அடாடா.. அவர்கள் வீட்டில் அன்று  தின்றதிற்காகவாவது ஒத்துக்கொள்ள கூடாதா? என்று என் மனதிற்குள் அந்தப்பையனிடம் பல முறை கேட்டு கேட்டு அலுத்து விட்டேன்.) என்னசெய்வது? "இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று" என்ற மாதிரி பிறக்கும் போதே இதையெல்லாம் முடிப் போட்டல்லவா இறைவன் அனுப்பி வைக்கிறான். 

பெண் வீட்டுகாரர்களுடன் அநநிகழ்வுக்குப் பின்னும் நான் பேசி பழகினேன். எனக்குத்தான்  சங்கடமாக இருக்கிறதென்று  வருத்தமாக அவர்களிடம்  சொல்லும் போதெல்லாம் அவர்கள்தான்" "இது எல்லாம் உலகில் சகஜந்தான்" என என்னை சமாதானபடுத்துவார்கள். அவர்களின் நல்ல மனதை எண்ணி நானும் அவர்களுடன் எப்போது பேசும் போதும் வியந்திருக்கிறேன். இன்று அந்தப் பையனுக்கும், பெண்ணிற்கும் வெவ்வேறு இடங்களில் திருமணமாகி நலமாக, வளமாகத்தான் இருக்கிறார்கள். இதைதான் "இறைவன் செயல்" என்கிறோம். 

அட......! இன்னமும் இவர் தலைப்புக்கு வரவில்லையே...!  என நீங்கள் எண்ணலாம். நான் இப்போது ஒரு தினம் இதைச் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் போட்டு செய்தேன். கடவுளுக்கும் நேவேத்தியமும் செய்யலாம். சர்க்கரை சேர்க்கக் கூடாத என்னைப் போன்றவர்களும் இது மாதிரி செய்தால் கொஞ்சம் (கொஞ்சந்தான்) சாப்பிடலாம் என்ற நினைப்பில் வெல்லம் சேர்த்து செய்தேன். 

இதைப் பகிர நினைக்கும் போது, இந்த கேசரி  சம்பந்தபட்ட நிறைய புகைப்படங்களை நான் எடுக்கவே இல்லையே என்ற நினைவு வந்தது. அதனால், என் மனதின் எண்ணங்களும் ரவையோடு சேர்ந்த வெல்லமாய் உடன் கலந்து  பதிவாக வந்து விட்டது. ரவையின் அளவுடன் கண்ணளவாக வெல்லம் கரைத்து வடிகட்டி சேர்த்து கிளறும் போது நெய்யும் சேர்த்து நன்றாக வந்த இந்த வெல்ல கேசரியை நீங்களும் கொஞ்சம் எடுத்து சுவைக்கலாமே.. மேலும் மு. ப. , ஏலப்பொடி போட்டவைகளை படங்கள் எடுக்கவேயில்லை.அதறகாக என்னை மன்னிக்கவும். ஆனாலும் சுவையாக வந்த கேசரிக்காக நீங்கள்  அனைவரும் இந்தப் பதிவையும் படிப்பீர்கள் என அன்புடன் நம்புகிறேன். உங்களனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 


   
வெல்ல கேசரியையும், என் சுவையான  அனுபவ எண்ணங்களையும் முறையே பார்த்து படித்து ரசித்தமைக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் அன்பான நன்றி... 🙏.. .

இது இப்போது எங்கள் வீட்டின் சின்னக் குழந்தைகளுக்காக கிளறிக் தந்த ரவா ஜீனி கேசரி. நான் வெல்ல கேசரி பதிவை எழுதி முடித்ததும் அதற்குப்போட்டியாக இதுவும் வந்து விட்டது.



குழந்தைகளுக்கு மு. ப. உடைத்து வறுத்துப் போட்டால் அது அவ்வளவாக அவர்களுக்கு பிடிக்கவில்லை. தனியே எடுத்து வைத்து விடுகின்றனர். அதனால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வறுத்து இறுதியில் ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இதையும் கேசரியுடன் கலக்க  வைத்திருக்கிறேன். 


பதிவை படித்து இரண்டு விதமான கேசரிகளை எடுத்துச் சுவைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. 🙏. . 

Friday, December 31, 2021

வேண்டுதலும், வாழ்த்துகளும்.

என் அன்பான  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருக்கும் நாளை உதயமாகும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் 2022ம் ஆண்டில் நம் இன்னல்கள் அகற்றி, எவ்வித தொந்தரவுகளற்ற வாழ்வை ஒவ்வொரு நாளும்  அந்த இறைவன் தந்திட வேண்டுமாய் பக்தியுடன் அவன் தாழ் பற்றி அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.  

பொதுவாக வாழ்க்கை என்பது இரு தண்டவாள கம்பிகளில் பயணிக்கும் ஒரு ரயில் வண்டியை போன்றது. இதில் அத்தண்டவாள கம்பிகளைப் போல  இந்த இன்பம், துன்பம் இரண்டும் நம் வாழ்வில்  சமமாக வரலாம். இல்லை, ஒன்று சற்று மேலோங்கி, மற்றது கீழிறங்கி நம் மனதை சலனப்படுத்தியோ / சந்தோஷபடுத்தியோ/சங்கடப்படுத்தியோ/காயப்படுத்தியோ மறைந்திருந்து வேடிக்கைப் பார்க்கலாம். எதுவாக இருப்பினும் நம் பயணத்தில் கவனம் செலுத்தி, நம் பயணத்தின் பொறுப்பாளரிடம் (கடவுள்)  முழு நம்பிக்கை வைத்து  பயணத்தை தொடர்தோமானால், சுமூகமாக இந்தப் பயணம் தன் திசை நோக்கி நகரும். 

நமக்கென்று நிர்ணயத்ததை "அவன்" இந்த பயணத்தில் கண்டிப்பாக தரத்தான் வேண்டும். நாமும் அதன் விதிகளின்படி எவ்வித மாற்றங்களுமின்றி அதை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது நாம்  ஒரு பிறவியாக இந்த உலகில் தோன்றும் முன்னே கண்களுக்கு தெரியாத எழுத்து வடிவிலிருக்கும் ஆரம்ப "விதி" களுக்கு முன் "அவனுக்கும்", நமக்குமாக எழுந்த ஒரு உடன்படிக்கை. இந்த ஒப்பந்தத்தை எவராலும் மீற முடியாது. ஆனால், ஒவ்வொருரின் மனதிலும்  பரமாத்மாவாக  ஜீவாத்மாவுடன்  அமர்ந்திருக்கும் "அவனிடம்" நம் நிறைகளை/குறைகளைச் சொல்லி சந்தோஷமோ/ வருத்தமோ அடையக் கூடிய உரிமையை மட்டும் "அவன்" பரிபூரமானமாக நமக்கு தந்துள்ளான்.அதன்படி யாவும் நலமாக, யாவரும் நலமாக இருக்க அந்த விதியின் துணையுடன், "அவன்" துணையும் நமக்கு  வேண்டுமென்ற  பிரார்த்தனையை மட்டும் தினமும்  வைத்துக் கொண்டேயிருக்கலாம். மற்றது "அவனருள்." "அவன்" விருப்பம்.  "அவன்" உரிமை.      

      சர்வம் கிருஷ்ணார்ப்பணம்... 

இது இன்ப, துன்பங்கள் கலந்த நம் வாழ்க்கை மாதிரி, இரு பொருட்கள் கலந்த, அனைவரும் அறிந்த ஒரு இனிப்புதான். அனைவரும் தத்தம் வீடுகளில் அடிக்கடிச்  செய்து உண்டு மகிழ்ந்த ஒரு பதார்த்தந்தான்.... ஆயினும், எப்போதோ நான் செய்த இந்த இனிப்பின் துணைபோடு, இப்போது வரும் வருடத்தை நாம் வரவேற்போமா? நன்றி. 🙏. 

மாலாடு.. 


உடைத்த கடலை அல்லது பொட்டுக்கடலை ஒரு கிண்ணம் (ஒன்றரை டம்ளர்) அளவு. 


ஜீனி  அதே டம்ளரில் முக்கால் அளவு. இதுவே போதும். ஆனால், இன்னமும் தித்திப்பாக வேண்டுமென்பவர்கள் ஒரு டம்ளர் நிறைய என்ற அளவோடு எடுத்துக் கொள்ளலாம். 


முதலில் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மிருதுவாக பொடி செய்து கொள்ளவும். அத்துடன் பொடி செய்த ஏலக்காய் தூளையும் சேர்த்து பொடித்து கொள்ள வேண்டும். 


பின் ஜீனியையும் அதேப் போல் மிருதுவாக பொடித்துக் கொள்ளவும். 


இது நெய்யில் வறுத்து சேர்க்க முந்திரி பருப்பு. மற்றும் உலர்ந்த திராட்சை உடைத்தது. 


முதலில் கடாயை அடுப்பிலேற்றி, தணிந்த அளவு அடுப்பை பற்ற வைத்து, அந்த சூட்டில் கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். 


பின்  அத்துடன் உலர்ந்த திராட்சையையும்  போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும். 


பின் அதே கடாயில் இரண்டு  குழி கரண்டி அளவு நெய்யை உருக வைத்து லேசாக புகை வரும்படி காய்ச்சிக் கொள்ளவும்.
 

பொடி செய்த உடைத்த கடலை, ஜீனியையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்துப் போட்டு கலந்து வைத்து கொள்ளவும். அத்துடன் உருக வைத்த  நெய்யையும் வறுத்து வைத்திருக்கும் முந்திிரி,  திராட்சையையும் கலந்து கை பொறுக்கும் அளவுக்கு சூடு இருக்கும் போதே எல்லாவற்றையும் கைகளால் கலந்து, உருண்டைகளாக பிடித்து வைக்கவும்


கை பொறுக்கும்  அளவிற்கு சூடு இருப்பதால் மாலாடு உருண்டை வடிவத்திற்கு அழகாக வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் உருண்டை சரியான அமைப்பில் வரவில்லை எனத் தோன்றினால், அதற்கு மேலும் நெய் தேவைப்படும் பட்சத்தில் ஓரிரு ஸ்பூன் நெய்யை சூடாக்கி சேர்த்துக் கொள்ளலாம். 


சற்று அழுத்தம் கொடுத்து பிடிக்கும் போது உடையாமல் சேர்ந்து வரும். 


பிடித்து வைத்த ஒரு மாலாடு உருண்டை. 


இது மொத்த மாவையும்  அதே சூடோடு பிடித்து வைக்கப்பட்ட பல மாலாடு உருண்டைகள். 


நீங்களும் இந்த புத்தாண்டில் இனிமை சேர்க்க இனிப்பு அளவோடு இருக்கும் இந்த மாலாடு என்ற இனிப்பை எடுத்துக் கொள்ளலாமே ...! அன்புடன் எடுத்து சாப்பிட்டு பார்த்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். . 🙏.. 

Friday, December 20, 2019

வெண்டைக்காய் கூட்டு...

வெண்டைக்காய் பிட்லை... 
இது ஒரு விதம்.... 

கொஞ்சம் , முத்தல் இல்லாத ரொம்பவே  இளசுமில்லாத  (கொஞ்சம்  லேசாக குழப்புகிறேனோ.! ரொம்ப இளசாக இருந்தால் கொதிக்கும் போது  உடைந்து கரைந்து உருவமில்லாது போய் விடும்.அதுதான் நடுவாந்திரமாக அமைந்தால், தன் சுயஉருவத்துடன்  சாப்பிடும் போது அதன் சுவையும் தனியே தெரியும்.) வெண்டைக்காய் அரைக்கிலோ வாங்கி சுத்தமாக அலம்பி, (சுத்தமாக அலம்புகிறேன் பேர்வழியென்று தண்ணீரை அதிகமாக செலவழித்து விட வேண்டாம்.. இப்போதெல்லாம் தண்ணீர் வெண்டையை விட மிகவும் காஸ்ட்லி. ) துணியால் துடைத்துக் கொண்டு பின் பருமனாகவும் இல்லாமல், ஒரேடியாக பொடியதாகவும் வராமல் பார்த்து அரிந்து கொள்ளவும். (  "அடாடா .!! என்ன ஒரு புகழ்ச்சி .! வெண்டைக்கே "எனக்கு இவ்வளவு பில்டப்பா" என்ற நாணம் சிறிது வந்திருக்கும்.) 

ஒரு குக்கரில் சாதமும், (பின்னே பிட்லை பண்ணும் போது, சாதம் வேண்டாமா?இதை சூடான சாதத்தில் நெய் விட்டோ, இல்லை ந. எண்ணெய் விட்டோ சேர்த்து சாப்பிட்டால் தானே இந்த பிட்லைக்கே ஒரு பெருமை.  உடைத்த அரிசி உப்புமா, இட்லி, தோசைக்கும் இது பொருந்தி வரும்.) அதன் மேல் தட்டில் துவரம்பருப்பு கால் டம்ளரும், க. பருப்பு ஒரு கரண்டியும் சேர்த்து வைத்து வேகுமாறு ரெடி பண்ணிக் கொள்ளவும். 

ஒரு வாணலியில் சிறிது வேர்க்கடலை போட்டு கொஞ்சம் வறுத்து எடுத்து கொண்ட பின், நான்கு பருப்பும் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு (து. ப, க. ப, பா. ப, உ. ப)  வெந்தயம் அரை ஸ்பூன், அவரவர்களுக்கு எவ்வளவு காரமோ அந்தளவிற்கு மி. வத்தலையும் எடுத்துக் கொள்ளவும். நான் ஒரு பத்து வத்தல் எடுத்திருப்பேன். (இது அவ்வளவாக காரமில்லாத நீட்டு வத்தல்.) 

 ஒரு ஏழெட்டு மிளகையும் நான் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இது அவரவர் விருப்பம். விருப்பமில்லாதவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டாம். மிளகு கபத்தை நீக்க வல்லது. ஜீரண சக்தியை கொடுப்பது. மருத்துவ குணம் வாய்ந்தவைதான் நம் அஞ்சறைப் பெட்டியில் (ஐந்து + அறை +பெட்டி) அமைதியாக அமர்ந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்.

அத்தனையும் சேர்த்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்தவுடன் அதே கடாயில், கறிவேப்பிலை பிரட்டி வைத்தவுடன் கொஞ்சம் துருவிய தேங்காய் லேசாக வறுத்து அதனுடன் சேர்த்து சற்று ஆற வைத்து கொள்ளவும். 

இடையில் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை  ஆய்ந்து சுத்தபடுத்தி நன்றாக அலம்பி வைத்துக் கொள்ளவும். 

அந்த கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, ஒரு ஸ்பூன் உ. ப போட்டு வெடித்ததும், நறுக்கிய வெண்டையை போட்டு கொஞ்சம் வதக்கிய பின்  கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தை அதில் விட்டு மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.  

அதற்குள் வறுத்த வேர் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வறுத்த சாமான்களை போட்டு ஒரளவு நைசாக அரைத்து புளிவாசனை போன வெண்டைக்காயுடன் கலந்து பின்னர் வாசம் வரும்வரை ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். 

பின்பு வேர்க்கடலை பொடியை சிறிது தண்ணீருடன் கலந்து அதில் விடவும். வெந்த பருப்பையும், நன்கு மசித்து விட்ட பின் மேலும் ஐந்து நிமிடம் எல்லாமாக கலந்து கொதித்ததும், அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுதையும் சேர்க்கவும். கடைசியில் பச்சையாகவே சிறிது பெருங்காய பொடி அல்லது கட்டிப் பெருங்காயம்  பொடித்துப் போட்டு, சிறிது சிம்மில் வைத்து நன்கு கொதித்த வாசனை வந்ததும், பச்சையாகவே ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பை அணைத்து விடவும். அந்த சூட்டில் தேங்காய் எண்ணெயின் வாசனை கலந்து கமகமக்கும்.


வறுத்த பருப்புகள். மி. வத்தலுடன் கறிவேப்பிலை சகிதமாக தட்டில் காத்திருக்கின்றன.


எண்ணெய்யில் கடுகுடன் வதங்கும் வெண்டைகாய்கள் தன்னுடன் இணையும், புளி ஜலத்திற்காக காத்திருக்கின்றன.


வென்னீரில், ஊற வைத்த புளி, புளிகரைசலாக மாற காத்திருக்கின்றன.


சுத்தப்படுத்தி, அரிந்து வைக்கப்பட்டிருக்கும் கொத்தமல்லி தழைகள் "நமது முறை எப்போதோ" என்ற சிந்தனையில் காத்திருக்கின்றன.


புளிஜலத்தில் மஞ்சள்தூள் உப்புடன் கொதித்த கொண்டிருக்கும் காய்கள் மேற்கொண்டு சொந்தம் கொண்டாட வரும்  அரைத்த மசாலா விழுதுக்காக காத்திருக்கின்றன.


வறுபட்ட வேதனையில் காத்திருக்கும் பருப்பு வகைகளுக்கு துணையாக நானும் வந்து விட்டேன் என்ற ஆறுதல் மொழிகள் பேசியபடி தேங்காய் துருவலும் காத்திருக்கின்றன.


வறுத்த வேர்கடலைகள் முன்னுரிமை பெற்ற சந்தோஷத்தில் மிக்ஸியில் காத்திருக்கின்றன.


முதலிலேயே "நீ குளித்து முடித்து புகழ் மாலை சூடி அலங்கரித்து வரும் முன்பிலிருந்தே நான் வெந்து, நொந்து அமர்ந்திருக்கிறேன் ." என்று வெண்டைகாய்களுடன் மானசீகமாக பேசியவாறு, சற்று கடுப்புடன் வெந்த பருப்புகள் காத்திருக்கின்றன.


" அதை இதை என சேர்த்து என்னை முழுமையாக்கி கொண்டிருக்கிறார்கள். இன்னமும் என்ன மீதமிருக்கிறதோ தெரியவில்லை.! என யோசித்தபடி கடாயில் கூட்டு தயாரிப்பான வெண்டை குழுமம் காத்திருக்கின்றன.


ஒரு வழியாக எல்லா பொருட்கள் சேர்ந்து ஒரு பெயர் கிடைத்த மகிழ்விலிருக்கும் "வெண்டைக்காய் கூட்டு/பிட்லை/" சந்தேகத்திற்கிடமின்றி நாம் சாப்பிட காத்திருக்கின்றன.

காத்திருப்பதில்தான் மகிழ்ச்சி வருகிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் ஏதோ ஒன்றிற்காக காத்திருக்கிறோம். வரும் அதனை எதிர்பார்த்தபடி அனைத்தும்  நன்மைகளாக நடகக வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு காத்திருக்கிறோம்.

இதனை இந்த முறையில், இல்லை, வேறு விதமான முறையிலும் அனைவரும் செய்து ருசித்திருப்பீர்கள். எனினும்  இந்த பக்குவம்  உங்களுகெல்லாம் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்ந்து விட்டு, வரும் கருத்துகளுக்காக நானும் காத்திருக்கிறேன்.  நன்றி... 🙏...