Showing posts with label மோர் சாத துணைகள்.. Show all posts
Showing posts with label மோர் சாத துணைகள்.. Show all posts

Saturday, April 11, 2020

துணைகள்.

கத்திரிக்கா...பச்சை கத்திரிக்கா...

இந்த கத்திரிக்காய் சில பேருக்கு உயிரை விட பிரதானமானது. அப்படி  உயிரைக்கூட சமயத்தில் துச்சமாக கருதி துணிச்சலாக இருப்பவர்களிடம்," நீ இன்று சாப்பிட வர தாமதாமாகும்னு சொன்னியா. .! அதனாலே இன்று செய்த கத்திரிக்காய் கறி தீடிரென வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு போட்டு தீர்ந்து விட்டது.. கொஞ்சந்தான் இருக்கு.. உனக்கு ரொம்ப பிடிக்குமென்று தெரியும். நாளை மறுபடி இதே மாதிரி செய்கிறேன். அப்போது வேண்டியதை போட்டுக்கோ" என்று வீட்டுக்குள் வந்து சாப்பாட்டறையில் அமர்ந்தவுடன் அவர்களின் அம்மாவோ, இல்லை வீட்டிலுள்ளவர்களோ பாசத்துடன் சொன்னாலும், மனம் கேட்காது வருத்தத்தில் தளர்வடைந்து விடும்.

நாளை வரை காத்திருக்க பொறுமை இல்லாமையா? இல்லை நாளை மறுபடியும் இந்த கத்திரிக்காய் சமையலில் இடம் பெறுமா என்ற சந்தேகமா? இரண்டில் ஏதோவொன்று  அவர்களின் மனவுறுதியை குலைத்து, தளர்வடைய செய்யும் வல்லமை கொண்டது இந்த கத்திரிக்காய்.

இந்தளவிற்கு இந்த கத்திரிக்காயின் பிரதாபங்களை நிறுத்தி என் செய்முறையை பார்ப்போமா?
அன்று நான் என்னிடமிருந்த நீளமான பச்சை கத்திரியையும், சதாரண வயலட் கத்திரியையும் சேர்த்து களமிறக்கினேன். இரண்டையும் நன்கு கழுவி வட்ட வட்ட துண்டுகளாக ஒரே மாதிரி நறுக்கிக் கொண்டேன். ஒரு பெரிய கோலி அளவு புளியை வென்னீரில் ஊற வைத்து கரைத்தெடுத்த நீரையும், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான உப்பும் கலந்து அதில் கத்திரிக்காய் துண்டுகளை ஊற வைத்தேன் .


கடந்த வியாழக்கிழமை எங்கள் ப்ளாக்கில் மோர்/தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள "எது பொருத்தம்" என்ற  விவாதம், இல்லையில்லை.. "எது சூப்பர் என்ற கருத்துக்கள்... ஆகா..! என்னப் பொருத்தம்.. நமக்குள் இந்தப் பொருத்தம்" என்று அழகிய பாட்டு பாடியப்படி ஓடிக் கொண்டிருப்பதை, கேட்டு மகிழ்ந்து  போனஸாக இருக்கட்டுமென இன்னொரு படமும் "இடையில் நானும்" என்றபடி கூடவே வந்து விட்டது. இவை இரண்டும் இரட்டை குழந்தைகளாம்... எங்களைப் பிரிக்கக்கூடாது என ஒரே சண்டை வேறு .! வேறு வழியின்றி இரண்டாகப் போட்டு விட்டேன்." (ஒரு படத்தையே எத்தனை முறை?" என முறைப்பவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமாய்...🙏. கூப்பி கேட்டுக் கொள்கிறேன். ஹா.ஹா.ஹா.)


மூன்று ஸ்பூன் கொத்தமல்லி விரைகள், ஒரு ஸ்பூன் தலா, க. ப, உ. ப, து. ப (மூன்று பருப்புகளையும் ) என ஒரே அளவு எடுத்துக் கொண்ட பின், வேண்டிய சிகப்பு, மிளகாய் அவரவர் காரத்திற்கு தகுந்தாற்போல்  எடுத்த அத்தனையும் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்தெடுத்துக் கொண்டேன். பின் அதை ஒரளவு கரகரப்பாக அரைத்து அந்த பொடியையும் அந்த புளி ஜலத்தில் ஊறிக் கொண்டிருக்கும் கத்திரிக்காயுடன் பிசறி ஊற வைத்தேன்.




ஒரு அரைமணி நேரம் அத்தனையும் சேர்ந்து ஊறியதும், கடாயில் கொஞ்சம் ந. எண்ணெய் ஊற்றி கடுகு, உ. ப தாளித்து கொண்டு அதில் இந்த கத்திரிக்காய்களை போட்டு அடுப்பை சிம்மில் வைத்தபடி காய்களை பிரட்டி கொடுத்தால், சிறிது நேரத்தில் பிரவுன் கலருக்கு மாறும். அப்போது பெருங்காய பொடி சேர்த்து இன்னமும எண்ணெய் விட்டு நன்றாக திருப்பி கொடுத்தபடி இருக்க சற்று மொறு, மொறு கத்திரிக்காய் கறி ரெடி.


இது எப்போதோ எழுதி, கொஞ்சம் முடிக்காமல் இருந்து விட்டேன்.  எ. பியில் அன்றைய தினம்  மோர் சாதப்பதிவை பார்த்ததும், கூடக்குறைய சேர்த்து / குறைத்து நேற்றைய  அதற்கு துணையாக என் பதிவில். வைத்து அலங்கரிக்க விரும்பினேன். அது  "நான் மட்டும் தனியாகவா ? அதுவும் இந்த "அமைதி நிலைமையில்"  என்னை மட்டும் போய்   ஆர்ப்பரிக்க சொல்கிறாயா?" என சற்று கோபத்துடன் படபடக்க,  சரி..! சரி..! கோபப்படாதே..! என அதை ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி விட்டு, அன்று  எங்கள் வீட்டில் இரவு "அதே வெறும் மோர் சாதத்திற்கு" தொட்டுக் கொள்ள  செய்த குடமிளகாய் கறியையும் உடன் அனுப்ப முடிவு செய்தேன்.


குடமிளகாய் 2, வெங்காயம், பெரிதாக 1 என் கணக்கில் எடுத்து கொஞ்சம் நீளவாக்கில் நறுக்கி, கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணேய் விட்டு கடுகு  உ. ப தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கியவுடன், குடமிளகாயையும், சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போட்டு கூடவே இரண்டு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவையும் அதன் மேல் பூ மாதிரி தெளித்து ஒன்று போல் கலந்த பின் கொஞ்சம் சமையல் எண்ணெய் தாராளமாக விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து கடாயை தட்டு போட்டு மூடி வைத்தேன். அவ்வப்போது திறந்து ஒரு பிரட்டலில் நன்கு வெந்து கறி மிகவும் அழகாக ஒன்று சேர்ந்து வந்தது.


சரி.. இரண்டையும் ஒன்று சேர்த்து வெற்றித் திலகமிட்டு "நல்லபடியாக போய் வாருங்கள்" என அனுப்பி வைக்கும் நேரத்தில், மழை. காற்று தன் என்ற நண்பர்களின் துணையோடு, நெட் என்ற பகைவன் (எனக்கு அவன் எப்போதும் நண்பனாயினும், அப்போதைக்கு என் பதிவை முழுமையாக்க ஒத்துழையாமல் தடை செய்தவன் பகைவன்தானே.. ! ஹா.ஹா.ஹா.  ) வந்து அனுப்ப தடை விதித்து  விட்டான். சரி..! போகட்டும் மறுநாள் கடமைகள் முடிந்த கையோடு அனுப்ப அமர்ந்தால், அதே நேரம்... அதே பகைவன்.... அதற்கும் மறுநாளாகிய  நேற்று மதியம் வாழைத்தண்டை ஏதாவது செய்து விட்டு  பதிவை முடித்து விடுவோம் என்று ஆரம்பித்த போது, "குடமிளகாயோடு உங்கள் வீட்டுக்கு நானுந்தானே வந்தேன்...! என்னை மட்டும் அவர்களோடு அனுப்ப உனக்கு என்ன  தயக்கம்?" என பரிதாபமாக கேட்டதில், அதை உருமாற்றி  வடிவமத்த "வாழைத்தண்டு குனுக்கையும்" அதன் முக மலர்ச்சி ஒத்துழைக்க ஒரு படமெடுத்து இவர்களுடன் இணைத்து விட்டேன்.


இப்படியாக எ. பியின் அல்லது  "எங்கள் குடும்பத்தின்" மோர் சாதத்திற்கு இணையாக கிளம்பி வந்திருக்கும் இவர்களை வாழ்த்தி பாராட்டுக்கள் தருவீர்கள் என நம்பிக்கையில், இன்று அதேநேரம் பகைவன் வருவதற்குள் என் பதிவுக்கு இவர்களை அனுப்பி விட்டேன். பாராட்டுக்கள் அளிக்கும் அனைவருக்கும் என்னுடையது மட்டுமின்றி இவர்கள் சார்பிலும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

இப்படி👌என்றா, இல்லை இப்படியா👍. இல்லை அதற்கும் ஒருபடி மேலாகவே இப்படியா👏. எவ்வாறாயினும்🙏 இப்படி ஆர்வம் மேலிட காத்திருக்கிறேன்.