Friday, December 16, 2022

இது எங்கள் வீட்டு கூட்டணி சமையல்.

இது எங்கள் வீட்டு சிம்பிள் சமையலாக உருவான ஒரு ரெசிபி. இது அனைவரும் அறிந்ததே....! மேலும் அனைவரும் அடிக்கடி செய்து உண்டு மகிழ்ந்ததே. ..! இது யாருக்கும் தெரியாதது இல்லை. எனினும், இந்த மூன்றையும் ஒருங்கே செய்யச் சொல்லி, எங்கள் வீட்டில் ஒருவர்  "நேயர் விருப்பமாக" கேட்டதினால், இந்த மூன்றும் இன்று உங்கள் அனைவரின் பார்வைக்கும் வெளிப்பட்டு விட்டது. அதோடு எங்களை நாங்களே அறிமுகப்படுத்திக் கொள்கிறோம் என்ற அட்டகாசம் வேறு அவைகளிக்கிடையே....!! .சரி...!! அவைகளே பேசட்டும் என நான் அனுமதித்தவுடன் அவைகளுக்குத்தான் என்ன ஒரு மகிழ்ச்சி...!!! அந்த மகிழ்ச்சியில் உங்களையும் பங்கேற்க அழைக்கிறேன்... வாருங்கள். 🙏. 


ஒரு எலுமிச்சை அளவு புளியை எடுத்து ஊற வைத்த படம். "நான்தான் அனைவருக்கும் முன்னோடி" என கண்டிப்பாகப் பெருமை அடித்துக் கொள்ளும். நீரில் மூழ்கியுள்ளதால் வாய் திறந்து பேச முடியாது மௌனம் சாதிக்கிறது. 
 

நான் இவர்கள் செய்யப் போகும் ஒரு தயாரிப்புக்காக, தயாராக்கி வைக்கப்பட்ட சின்ன வெங்காயம். "இப்போதெல்லாம் என்னை கையாள  இவர்கள் சிரமபடுவதே இல்லையாம். ஏனென்றால் இவர்களை முன்பு போல் நான் சிறிதும் கண்கலங்க வைப்பதே இல்லை. காரணத்தை எனக்கு விளக்கிக் கூற தெரியவில்லை. ஆனால் அதுதான் உண்மை...!! அதனால் அரைக் கிலோவிற்கு மேலாகவும்  கூட சுலபமாக தனியாக யார் உதவி இல்லாமல் சுத்தம் செய்து விடுவதாக பெருமை பேசுகின்றனர். " என்று மகிழ்ச்சியில் தன் வாய் திறந்து மலர்ந்தருளிய சின்ன வெங்காயம். 


நான் சேப்பங்கிழங்கு....!! மண்ணிலிருந்து வெளி வந்த நான் அதே மண் மீது வைத்திருக்கும் பற்றுடன் அந்த  வாசனையுடன் இருக்கும் என்னைப் பார்த்தவுடன இவர்களுக்கும் என் மேல் ஒரு பற்று வந்து விட்டதாம். "இன்று எங்கள் வீட்டில் நீயும்..!!! " என கையோடு அழைத்து வந்து என்னை முதலில் ஜில்லென்ற நீரில் குளித்து வாவென அன்போடு ஆணையிட்டு விட்டார்கள்.


ஒரு டம்ளரில் கால் அளவு கடலைப் பருப்பை அளந்து எடுத்தவர்கள்... , 


கூடவே அதனுடன் முக்கால் டம்ளர் துவரம் பருப்பையும் எடுத்துக் கொண்டு....., 


நாலு சிகப்பு மிளகாயுடன்.....,
 

ஒரு ஸ்பூன் அளவுக்கு கொஞ்சம் மிளகையும் எடுத்து......, 


எங்கள் அனைவரையும் ஒரு கடாயில், சிறிதளவு எண்ணெய் சேர்த்து வறுத்தெடுத்து வைத்து விட்டார்கள். எங்களுக்கு இதெல்லாம் பழக்கமாகையால் இவர்களின் வெறுப்புக்கு ஆளாகிவிடாமல், வறுத்தெடுப்பதற்கு 
சம்மதித்து விட்டோம். அதனால் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. நீங்கள் கவலைப்படாதீர்கள்.:))) 


என்னை வட்டமாக செதுக்கி எடுத்த சிற்பம் போல் அமைத்து விட்டதாக இவர்களுக்கு பெருமையோ பெருமை. . பொதுவாக நாங்கள் அனுபவத்தில் சிறந்தவர்கள். எங்களது இருப்பிடம் மிக உயரமானது. அவ்வளவு உயரத்தில் இருக்குமாறு எங்களை படைத்த அந்த ஆண்டவன் இவர்களை விட நல்ல பக்குவமடைந்த உள்ளத்தைத்தான் கண்டிப்பாக தந்திருப்பார். அதனால் என் முகம் சுளிக்காது இவர்கள் உளி போன்ற ஆயுதம்  கொண்டு  என்னை அடித்து துன்புறுத்தியும், நல்ல வட்ட வடிவத்துடன் ஒழுங்காகவே பிரகாசித்து இருக்கிறேன். 



வறுபட்ட எங்களுடன் நன்றியை பிரதிபலித்து காட்டும் (அதாங்க.... "உப்பிட்டவரை உள்ளளவும் நினை.. " என்ற வாக்குக்கு முழு சொந்தக்காராகிய உப்பு. .)  இவரையும் எங்களுடன் இணைத்து..... , 


வட்ட வடிவமாக சிற்பமாக பிரகாசித்தவரையும் எங்களுடன் சேர அனுமதி தந்து...... , 


ஒரு சிறப்பான பெயரை (பருப்புத்துவையல்) எங்களுக்கு நாமகரணம் செய்வித்து, மகிழச்  செய்து வைத்திருக்கிறார்கள். 


இது எங்கள் கூட்டணி.... பார்த்துக் கொண்டீர்களா.. ?  எங்களுடன் புதிதாக ஒரு கூட்டணியாக சேர, கண்ணீர் வர வைத்து துன்புறுத்தாத நல்ல மனதுடைய  இந்த வெங்காயத்தையும் ஒன்றிரண்டாக அரிந்து வைத்திருக்கிறார்கள். பின் ஒரு கடாயில், எண்ணெயுடன், எங்களைப் தீடிரென நாங்களே சற்றும் எதிர்பாராமல் போட்டு நாங்கள் அதனுள் விழுந்த அந்த சிறு கோபத்தில் முகம் சிஙந்ததும், எங்களை சமசரமாக்க மற்றொரு கூட்டணியாகிய, அந்த அன்பான வெங்காயத்தை சேர்த்து..... 



எங்கள் மனம் உருகி, மகிழும்படியாக கொஞ்சம் நெய்யையும் உருகும்படியாக விட்டு. 


மேலும் நாங்கள் நல்ல மணம் வீசுபடியாக "ஒரு ப. ம,  சிறிதளவு, மி. காரப் பொடி, மணம் வீசும் அந்த மல்லிப் பொடி, ,
 


உப்பார்" என அனைவரையும் சேர்த்து,  எங்கள் கோபம் தவிர்த்து நாங்கள் வாசம் மிகும்படியாக எங்கள் பெருமை கொள்ளச் செய்தார்கள். 


அனைவருக்கும் முன்னோடியான என்னை, அங்கு சிறிதளவு கோபமாக ஒன்றோடொன்றுபேசிக் கொண்டிருந்த வெங்காய கலவையை சமாதானபடுத்த சொன்னதும் நானும் என் அனுபவ அறிவினால் அவர்களுடன் கலந்து கொண்டு, அவர்களையும்  என்னுடன் கலக்கச் செய்து சமாதானபடுத்தினேன். 


அட...! என்ன ஒரு ஆச்சரியம்..!  கொஞ்ச நேரத்தில் அவைகளுடன் பேசி சமாதானம் ஆனதும் நாங்கள் அனைவருமே மணம் வீசும் "வெங்காய பச்சடி" என்ற பெயர் பெற்றும், வழக்கப்படி எங்களுக்கு இறுதியில் எப்போதும் கிடைக்கும்  அந்தப் "பெருங்காயத்திடம்"தப்பிக்க இயலாது சற்று வருத்தமடைந்திருந்தாலும், ஒரு அருமையான பெயர் பெற்ற சந்தோஷத்தில் அகமகிழ்ந்திருந்தோம். 


மண் வாசனையகற்றி, என்னை ஒரளவு மனது இளகச் சொன்ன இவர்களுக்காக பரிதாபப்பட்டு, கடினமாக இருந்த நான் நல்ல சூடுநீரில் அமிழ்ந்து  மனம் இளகியதும், என்ளை அழகுபடுத்தி, என் சுவை கூடும்படி, கலராக பலவித பொடிகளை  ( என்னுடன் கலந்தது மஞ்சள் தூள், காரப்பொடி, தனியா பொடி, உப்பார், பெருங்காயம் போன்ற பொடிகள் என இவர்கள் பேசிக் கொண்டார்கள்.)  சேர்த்தது மட்டுமின்றி,
   
இத்தனைப்பொடிகளோடும், கொஞ்சம் தாராளமாக என்னை எண்ணெய் குளியல் செய்ய வைத்து என்னை மேலும்  மினுமினுப்பாக்கினார்கள்.


இதோ..! எங்கள் கூட்டணி...! இப்போது நாங்கள் மூவரும், அவர்களின் விருப்பபடி ஒன்று சேர்ந்து  அன்னராஜாவுடன் அரசாட்சி செய்ய அமர்நதிருக்கிறோம். எங்கள் ஆட்சி எப்படியென்று பார்வையிட்டு பதில் அளியுங்ளேன். . பார்வையிடும் அனைவருக்கும் எங்கள் நன்றிகளையும் தெரிவிக்கிறோம். 🙏.

அப்பாடா.....! ஒரு வழியாக தத்தம் நிலைப்பற்றி அவர்களே கூறுவேன் என்று கூறி விளக்கியதை கேட்டடிருப்பீர்கள். இந்த மூன்றும் சேர்ந்த முக்கூட்டு ராஜ்ஜியம் அன்றொரு நாள் எங்கள் வீட்டில். ஒரளவு மனத்திருப்தியுடன் ருசிக்கும்படி  நன்றாகத்தான் இருந்தது. நீங்களும் இந்தமுக்கூட்டு சமையலை ரசித்து இருப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி

ஒரு மன மாறுதலுக்காக இந்தப்பதிவு. வழக்கப்படி ரம்பமாக இருந்தாலும், பொறுமையாக படித்தவர்களுக்கு என் அன்பான நன்றி. 🙏.