Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Thursday, October 31, 2024

இருள் களையும் விழா. .

 


                            தீப ஒளித்திருநாள்

அனைவருக்கும் என் அன்பான தீபாவளி பண்டிகையின் நல்வாழ்த்துகள். 

தீபாவளி என்றாலே பாரம்பரியமாக மக்கள் அனைவருக்கும் மனமகிழ்ச்சி தரும் ஒரு பண்டிகை. என்பது அனைவரும் அறிந்ததே. 

நம் இரண்டு இதிகாச புராணங்களிலும் கடவுள் தானே மனித அவதாரம்  எடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டவும்,  சத்திய வழியில் தவறாது செல்லவும்,  ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதை இவ்வுலகிற்கு புரிய வைத்தார். 

ஒரு சமயம் உலக மக்களை  தன் கொடூர செயல்களால் ஆட்டிப் படைத்து  வந்த நரகாசுரன் என்னும் அரக்கனை இந்த ஐப்பசி மாதம் சதுர்தசி/அமாவாசையன்று  தன் கணவரான கிருஷ்ணபரமாத்மாவின் துணையுடன் சத்தியமாமா அழித்ததாக புராண கதை சொல்கிறது. அந்த அசுரனும், இறக்கும் தறுவாயில் தான் இறந்த இந்த தினத்தை மக்கள் தன்னைப்பற்றி அவதூறுகள் பேசி கழிக்காமல், அதற்கு மாறாக புத்தாடைகள் உடுத்தி, தங்கள் உறவினர்களுடன் விருந்தோம்பல்கள்  செய்து, வீடெங்கும் மங்களகரமான தீபங்கள் ஏற்றி, இறைவனை வழிபட்டு வான வேடிக்கைகளுடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்வாக இருக்க வேண்டுமென்ற வரத்தை கேட்டு பெற்று பின் உயிர் துறந்தான். இந்த கதையின்படி  அன்றைய தினத்தை நாம் "நரகசதுர்தசி ஸ்னானம்" என்றும், "தீபாவளியெனவும்" வழிவழியாக அப்படியே கொண்டாடி வருகிறோம்.

ராமாயண காலத்தில், தந்தை சொல் தட்டாது கானக வாழ்வை தன் மனைவி சீதையுடன் பதினான்கு ஆண்டுகள் முடித்து விட்டு தன் நாடான அயோத்திக்கு திரும்பிய தங்கள் அரசனான ஸ்ரீராமபிரானை அந்நாட்டின் மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன்  வரவேற்று,  வீதியெங்கும், ஒவ்வொரு வீடெங்கும், மலர் தோரணங்கள் கட்டி அலங்கரித்து  லட்சகணக்கான தீபங்களை ஏற்றி, வானவேடிக்கைகளுடன்  குதூகலம் பொங்க தம் உற்றார் உறவினர்களுடன் மகிழ்ந்திருந்த நாளே "தீபாவளி" எனவும் ஒரு கதை உண்டு.  ஆக இறைவன் தான் மனித அவதாரம் எடுத்து வாழ்ந்த இரு புராணங்களிலும்  இருளை அகற்றும் ஒளியாக இந்த (தீபஒளி) தீபாவளி பண்டிகையை முக்கியத்துவம் பெறச் செய்து  நீதியை போதிக்கிறார் எனவும் கொள்ளலாம். 

தீபாவளி என்பதற்கு தீப ஒளி என்ற பொருள்தான்  முன்னிலை வகிக்கிறது. இறைவன் ஒளி வடிவானவன். அதனால்தான் நாம் தினமும் அவரவர் வீடுகளில் காலை, மாலை விளக்கேற்றி வழிபடுகிறோம்.

 " ஒளி வடிவாக உன்னுள்ளே இருக்கும் இருளை அகற்ற பரமாத்மாவாக நான் உன்னுடன் குடி இருக்கிறேன். ஜீவாத்மாவாகிய நீ என்னைத் இடைவிடாது தேடி, உன்னை தன்னுடன் இணைத்து வைத்திருக்கும் " ஆசை" என்ற மாயையினால் கட்டப்பட்டிருக்கும் அஞ்ஞான இருளை அகற்றி, அதை நீ வென்று விட்டால், பரிபூரண வெளிச்சமாக உன்னுள்ளே வீற்றிருக்கும் என்னைக் காணலாம். இப்பூலகில் உனக்கென உண்டாக்கி வழங்கப்பட்டிருக்கும் பிறவிக் கடலை கடப்பதற்கு இந்த வழிதான் உசிதம்.." என கீதையில் அதே ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனன் மூலமாக மக்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார். 

அதன்படி நடந்து "அவனை" பரிபூரணமாக உணர்ந்தவர்கள் மஹா ஞானிகளாக, தவசிரேஷ்டர்களாக, யோகிகளாக, வாழ்ந்தும், மறைந்தும்  நமக்கு வழி காட்டியிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.  ஆனாலும் , மாயையின் பிடியில் இன்னமும் சிக்குண்டு இந்த சம்சார சாகரத்தில் உழன்று வரும் சாதாரண மனிதர்களாகிய நாம் அகக்கண்களால் "அவனை" ஜோதிஸ்ரூபமாக காண இன்னமும் எத்தனைப் பிறவிகள் எடுக்க வேண்டுமோ? 

இன்றைய தினத்தில் இப்போதும் வட நாட்டினர்  தத்தம் வீடுகளில்   நிறைய தீபங்களை (அகல் விளக்குகள்) ஏற்றி, இறைவனை வழிபட்டு கொண்டாடுவார்கள். நம் தென்னிந்தியாவிலும் இந்தப் பழககம் முற்றிலும்  வந்து விட்டது என நினைக்கிறேன். வடக்கில் இமயத்தில் உதயமாகி என்றும் வற்றாது ஓடும் கங்கை நதியும், இந்த ஐப்பசி மாதத்தில் தென்னாட்டு வரை தவழ்ந்து வந்து இங்கிருக்கும் சகல நதிகளிலும் நீராடி கூடி களித்து தன் சாபமொன்றை போக்கி கொள்கிறாள். அதனால் தீபாவளியன்று  விடியல் பொழுதில் (நான்காவது சாமத்தில்) நீராடி முடிப்பவர்களை "கங்கா ஸ்னானம் ஆயிற்றா?" என ஒருவருக்கொருவர்  கேட்டு பண்டிகையின் உற்சாகத்தை கூட்டும் பேச்சு வழக்கு (மரபு முறை) இன்றும் நம்மிடையே உண்டு. 

மேலும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அமாவாசையன்று  மாலை முதல் வீட்டு வாசல் படியில் இருபக்கமும்  இரு அகல் விளக்கேற்ற தொடங்கி, கார்த்திகை  மாதம் வரும் திருவண்ணாமலையார் தீபம் வரையும், அதன் பின் கார்த்திகை மாதம் முழுவதும் வரையும் விளக்கேற்றும் பழக்கம் நம்  வீட்டு பெரியவர்கள்  மூலமாக நமக்கு எப்போதும் இருந்து வருகிறது. 

இவ்விதம் நம் மனதிலிருக்கும் தெய்வீக குணமாகிய, அனைவரிடமும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துவது, மனித நேயத்தோடு அனைவரையும் நேசிப்பது போன்ற நல்ல குணங்கங்களின் ஒளி கொண்டு, அவ்வப்போது  மனதில் தலை தூக்கும் கோபம், பழி வாங்கும் வன்மம், அசூயை, போன்ற அசுர குணமான இருளையகற்றி, வருடந்தோறும் வரும் இந்த தீபஒளி பாரம்பரிய பண்டிகையை போற்றி, நமது  இளைய தலைமுறைகளுக்கும் இதன் நோக்கத்தை, அவசியத்தை உணர வைத்து அனைவரும் இறைவனின் இன்னருள்களை பெற்று சிறப்பாக வாழ்ந்திட  வேண்டுமாய் இறைவன் அருள வேண்டுமென இந்த நன்னாளில் பிரார்த்தித்துக் கொள்வோம். 🙏. 

பி. குறிப்பு... இது எ. பிக்காக சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் அவசரமாக ஒரு தீபாவளிக்கு முன்தினம் ஏதாவது எழுதச் சொன்னதில் தீபாவளி கட்டுரை என்ற பெயருடன் உருவானது. மறுநாள் தீபாவளியன்று எ. பியிலும் வெளி வந்ததற்கு எ. பிக்கும், அதன் ஆசிரியர்கள்  அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். அப்போது அந்தப் பதிவுக்கு  கருத்துக்கள் அளித்தவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். இன்று என் வலைப் பதிவிலும் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென இது அதே அவசரத்துடன் (வேறு எதாவது எழுத  வீட்டின்்வேலைகள் இடம் தரவில்லையெனினும், என் சோம்பலும், ஒரு காரணம்.) வெளியாவது. 

மறக்க இயலாத தீபாவளி நினைவுகள்....! படித்த அன்றிலிருந்து  ஒவ்வொரு தீபாவளியன்றும் பிரபல எழுத்தாளர் கு. அழகிரி சாமி அவர்கள் எழுதிய "ராஜா வந்திருக்கிறார்" கதை நினைவுக்கு வர தப்புவதில்லை. நல்ல எழுத்து. அனேக மாற்றங்களினால் காலங்கள் எவ்வளவு  மாறினாலும் என்  மனதை விட்டு நீங்காத கதை. 

அனைவருக்கும் என் அன்பான நன்றிகளுடன் மனம் கனிந்த இனிய  தீபாவளி நல்வாழ்த்துகள். 

Saturday, September 17, 2022

பழி


வீடு திறந்திருந்தது. அதைப் பற்றி கவலையின்றி செல்வி யாரிடமோ கைப் பேசியில் அரட்டை அடித்து சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தாள்.

எல்லாம் "நானிருக்கும்"  தைரியந்தான் அவளது துணிச்சலுக்கு காரணம் என்பது எனக்கும் தெரியும். அதை பிரதீபும், செல்வியும் என் காதுபடவே கூறி என்னை சில சமயங்களில் உற்சாகப் படுத்துவார்கள். இதை குறித்து எனக்குள் ஒரு பெருமையும் என் முகத்தில் அடிக்கடி விகசிக்கும்.

நான் எட்டு வருடங்களாக இவர்களுடன் ஐக்கியமாகி இருக்கிறேன். பிரதீப் அலுவலகம் சென்றவுடன் செல்விக்கும், அவள் குழந்தைக்கும் நான்தான் முழுக்க முழுக்க துணை.

செல்வி என்னை நம்பி, என்னுள் இருக்கும் சமார்த்தியத்தை நம்பி, வீட்டையே என்னிடம் ஒப்படைத்த மாதிரி, இடைப்பட்ட நேரத்தில், அருகிலிருக்கும் கடைகளுக்கும் வேறுபல அவளுக்கு பிடித்தமான இடங்களுக்கும்  தைரியமாக போய் விட்டு வருவாள்.  குத்து மதிப்பாகச் சொன்னால் நான்தான் அவர்களையும், வீட்டையும் பாதுகாத்து வருபவன். 

இப்படியாக ஓடிய வாழ்வில் ஒரு நாள் இரவு. வழக்கம் போல் வராண்டாவில் என் இடத்தில் படுக்கை. மழை காலமாகையால், விட்டு விட்டு தூறலும், தீடீரென பெரு மழையுமாக பெய்து கொண்டிருந்தது. இரவில் குளிர் தாக்கும் என்பதால், என் மேல் போர்த்திக்் கொண்டிருக்கும் போர்வைக்குள் அடைக்கலமாகி, விழி மூடி தூக்கத்தை வரவழைக்க முயற்சி செய்தபடி இருந்தேன். 

குழந்தை மாலு லேசான சிணுங்கலுடன் அழ ஆரம்பித்து அப்புறம் நிறுத்தி  தூங்கி விட்டிருப்பாள் போலும்.. .!!!! சத்தத்தை காணோம். காற்றும், மின்னலும், சற்று லேசான மேக உறுமலும் என் உறக்கத்தை ஒரு வழியாக உண்டு இல்லை என பண்ணிக் கொண்டிருந்தன.

கண்கள் இப்படி அடிக்கும் மின்னல் வெளிச்சத்தில் கூசுகிறதே என்று நினைக்கும் பொழுதில், சடசடவென மழைத் தூறல் பெரிதாகி, காற்றையும் தன்னோடு உடனழைத்தபடி வாய் விட்டு நகைப்பது போன்ற சத்தத்துடன் பெரிதாக ஆரம்பித்தது.

 இருட்டு இரவுக்கு துணை போனாலும், அவ்வப்போது உமிழ்ந்து மறைந்து பின் கண் சிமிட்டி உதயமாகும் மின்சாரத்தை  ஏதோ கூறி  வைதபடியிருக்க, மழை, மின்னலை கைப் பிடித்த எக்களிப்புடன் காற்றுடன் சேர்ந்து கொண்டவாறு அதை ஒரு விழாவாக கொண்டாடி மகிழ்ந்தது..!

இந்த கேளிக்கை வைபவங்கள் இத்தனையும் மீறி ஆழ்ந்த உறக்கம் லேசாக என் கண்ணைத் தழுவ ஆரம்பித்த வேளையில், அத்தனை சத்தத்திலும்  வித்தியாசமாக  ஒரு சத்தம் எழ கண்ணையும், அறிவையும் திறந்து பார்த்து உணர்வதற்குள் ஒரு பாரம் என்னுடன் இணைந்தது மாதிரி ஒரு உணர்வு......!! "நானும் இனி உன்னுடன்தான்... !!" என்ற உரிமையுடன் வெறி கொண்ட மனதாக என் உடலுக்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு.. ..!! உடலை குலுக்கியது போன்ற ஒரு அவஸ்தையுடன்  போர்வை விலக்கி எழுந்து அமர்வதற்குள் என்னை அது முழுதாக ஆக்கிரமிப்பு செய்திருந்தது.

"என்னங்க.....இது எப்படியிருக்கு.... நல்லா இருக்கா? பாத்துட்டு சொல்லுங்க.!" என்றபடி பார்வதி தன் எதிரில் ஒரு வட்டமான கூடையை திறந்து காண்பித்ததும், அவன் அலறி விட்டான்.

"என்னடீது சே.. சே...  முதல்லே வெளியிலே கொண்டு விடு" ...!. என்று அவன் பயங்கரமான அறுவெருப்புடன்  கத்தவும். முகம்  சுருங்கியவள்,. ... 

"இல்லைங்க.! காலையிலே அப்பா வரும் போது நம்ம வீட்டுக்கு அருகே நாலஞ்சு குட்டிகளை பாத்ததும் அப்பாவுக்கு என் ஞாபகம் வரவே அதில் ஒன்னை இங்கே கொண்டு வந்தார். எனக்கு கல்யாணம் ஆறதுக்கு முந்தியே நம்ம டைகரை நாந்தான் வளர்த்து பாத்துகிட்டே ன். அது தீடிரென்று  உடம்பு முடியாது போனவுடனே ரொம்ப நாள் அது நினவாகவே இருந்தேன். அதை ஞாபகம் வச்சுகிட்டு அப்பா இந்த குட்டியை  எனக்காக கொண்டு வந்திருக்கார். " அவள் தயங்கி வண்ணம் சொன்னாள்.

" என்ன இழவோ போ.! இதெல்லாம் எனக்கு பிடிக்ககாதுன்னு உனக்கு தெரியுந்தானே... திருப்பி அனுப்ப வேண்டியதுதானே..!" அவன் கோபத்துடன் சீறவும்  அவள் மெளனமாய் தலை குனிந்தாள்.

" அம்மா  வீட்டுலே பொழுது போற மாதிரி இங்க போறதில்லைன்னு சொன்னதை ஞாபகம் வைத்து அப்பா ஆசையா வந்து தந்திருக்கிறார். எப்படி வேண்டாமென்று சொல்வது? கொஞ்ச நாளைக்கு நம்மோடு வளர்ந்தா, அப்புறம் நமக்கே பிடிச்சு போயிடும். அதுக்கும் எங்கே போறதுன்னு இடம் தெரியாமே நம்மோடு பழகிடும். இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லித்தான் தெரியனுங்கிறது இல்லே...!!! என்று அவள் மெல்ல இழுப்பதற்குள்.,  அவன் மேலும் கடுப்பானான்.

"என்ன.... .. உபதேசம் பண்ற உத்தேசமா? சமயம் கிடைக்கறப்ப இப்படியெல்லாம் வேறே சொல்லலாமுனு சொல்லிட்டு போனாரா உங்கப்பா.!  வார்த்தைகளின் உஷ்ணம் அவளை தகித்தது.

அவள் மடமடவென்று பெருக்கும் கண்ணீரை அடக்கியபடி," இல்லை.. இல்லை. அவரை எதுக்கு  இப்ப இழுக்குறீங்க? நான் யதேச்சையாகத்தான் சொன்னேன்." என்று முடிப்பதற்குள், "இவங்களை யார் இப்போ வரச் சொன்னாங்க? போகும் போது உன்னையும் கையோடு கூட்டிகிட்டு போகாமே, வளர்க்கிறது ஒன்னு, வாழறதுக்கு ஒன்னுன்னு என் உயிரை வாங்கிட்டு......சே.! கல்யாணம் பண்ணிகிட்டதே பெரிய தொந்தரவுப்பா.... கையிருக்கும் முகம் துடைத்த துண்டை சோபாவில் எறிந்து விட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான் அவன்.

பார்வதி பிரமை பிடித்தாற் போல் நின்று கொண்டிருந்தாள். வாய் விட்டு அழக் கூட தெம்பில்லாது மனசு சோர்ந்தது  கையிலிருந்த பிறந்தே இரண்டு நாட்களான அந்த ஜீவன் பரிதாபத்துடன் அவளை கண் திறந்து பார்த்து விட்டு மீண்டும்  சோம்பல் ஒன்றை விடுத்தபடி கண்ணை மூடிக் கொண்டது. அவள் அதன் முகத்தோடு முகம் வைத்தபடி கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தாள்.


நான் எப்போதும் போல் இல்லையென கொஞ்ச நாட்களாக சற்று புகார்களை என் எதிரிலேயே கூற ஆரம்பித்து விட்டாள் செல்வி. என் செயல்கள், சேவைகளில்  எந்த குறையும் இல்லையென்றாலும், அவர்களிடம் ஏனோ மனம் ஒட்ட மறுத்தது. செல்வியை பார்க்கும் போது என் விழிகளில் சமயத்தில் ஒரு வெப்பம் வருவதை உணர முடிந்தது. அதை அவள் கவனித்து விடுவாளோ என்ற பதற்றத்தில்் அவள் அருகாமையை தவிர்க்கப் பார்ப்பது அவளின் குற்றச்சாட்டுகளில் ஒன்று.

"பிரதீப். ! நீங்க இப்ப ஊருக்கு போய்தான் ஆக வேண்டுமா? செல்வி கொஞ்சலுடன் மறுபடியும் அந்த கேள்வியை கேட்டாள்.

" என்னம்மா..! எத்தனை தடவை சொல்றது.. பிஸினஸ் விஷயமா நான் இப்படி போயிட்டு வர வேண்டிதானே இருக்கு.. ஒரு வாரத்திலேயே திரும்பிடுவேன். .எப்பவும் இந்த மாதிரி நேரத்திலே தைரியமாய் இருப்பே..! இந்த தடவை ரொம்பவே பயப்படுறே.. ஏன் என்ன ஆச்சு உனக்கு? என்றவன் ஆறுதலாக அவள் கைப்பற்றிக் கொண்டான்.

"ஒன்னுமில்லை! இந்த தடவை ஏனோ கொஞ்சம் பயம் வருது" என செல்வி தடுமாறினாள்.

எப்பவும் போல நீ நார்மலா  இருக்கிற தைரியத்தாலே இத்தனை நாள் நான் கவலையில்லாமே  போயிட்டு வந்திருக்கிறேனே ! இப்ப மட்டும் ஏன் விசித்திரமா தயங்குறே! தைரியமா இரு! ஒரு வாரத்திலேயே வந்துடுவேன். நாள் பறந்து போயிடும்...." என்ற பிரதீப் பயணத்திற்கு ஆயுத்தங்கள் செய்ய ஆரம்பித்தான்.

"இப்படி ஏன் என்னை வெறுக்கிறீங்க? அதனாலே சாப்பாட்டை கூட சாப்பிடாம இருக்கனுமா? இன்னைக்கு நம்ம திருமண நாள்.. அதனால்தான் இந்ந ஸ்வீட் பண்ணினேன்.இதையாவது சாப்பிடுங்க.!" கிண்ணத்திலிருக்கும் பாயாசத்தை அவனருகே மெள்ள நகர்த்தியதும்,  அவன் அதே விட வேகத்தில் அதை எதிர்புறம் தள்ளினான்.

" நான் இப்போ ஸ்வீட் கேட்டேனா ? இல்லை உன்னை சாப்பாடு பறிமாறவும் நான் அழைத்தேனா ?  ஏன் இப்படி தொந்தரவு பண்றே? எனக்கு எது தேவையோ அதை நானே எடுத்து போட்டுக்கிறேன். அதை விட உன்னாலே  பண்ண முடியலைன்னா பேசாமே இரு.. நான் வெளியிலேயே சாப்பிட்டுகிறேன்.  இப்படி பண்ணி வைச்சதெல்லாம் சாப்பிட்டு பாக்கிற சாக்கிலே பேசி என்னோட அன்பு முழுமையா கிடைச்சிடும்னு மட்டும் எதிர்பார்க்காதே.. " அவன் வெறுப்புடன் வார்த்தைகளை உமிழ பார்வதி சட்டென்று ஏதும் பேசாமல் முகம் சுருங்கினாள்.

" நீங்க இப்படி இருக்க என்ன காரணம்"னு தெரியாமே நான் தினமும் வெந்து சாகிறேன். என்னை பிடிக்கலைன்னா கல்யாணம் பண்ணும் போதே நீங்க வேண்டாம்னு மறுத்திருக்கலாமே.!" மனசுக்குள் வந்த கேள்வியை எச்சிலுடன் விழுங்கியபடி "என்னை மன்னிச்சுடுங்க.. இனி நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்.. என்றபடி தன் அறைக்குள் புகுத்தவளுக்கு கண்ணீர் ஆறுதல் தர படுக்கையை சரணடைந்தாள்.

மாதங்கள் ஓட நாட்கள் துணை புரிந்தது. ஓடிக் களைத்த நாட்களில் ஓர் நாள் ஊரிலிருந்து அவளை காண வந்த தனது தந்தையின் வரவு கண்டு சற்று மகிழ்ந்தாள் பார்வதி. அவள் நிலை கண்டு தந்தைதான் பதறி விட்டார்.

"என்னம்மா.... இப்படி சோர்வாக இருக்கிறே? இந்தளவுக்கு உடம்பு சரியில்லையா? டாக்டர்கிட்ட போனியா? கேட்டா மாப்பிள்ளைக்கு ஆபீஸ் வேலை சரியா இருக்குனு சொல்றே. உன்னை கவனிக்க கூட அவருக்கு நேரமில்லையா ? என்று பாசத்துடன் படபடத்த அவரை கொஞ்சம் அமைதிப்படுத்தினாள் பார்வதி.

" இல்லேப்பா இந்த ஒரு வாரமா கொஞ்சம் முடியலே... வேறே ஒன்னும் இல்லேப்பா? லேசான காய்ச்சல்தான். சரியாயிடும். அப்பா . நான் கொஞ்ச நாள் உங்க கூட ஊருக்கு... நம்ம வீட்டுக்கு வந்திருக்க ஆசைப்படறேன். வரட்டுமாப்பா?

" என்னம்மா நீ.. நம்ம வீட்டுக்கு வர்றதக்கு அனுமதியெல்லாம் கேப்பியா? உங்க அம்மா இருந்திருநதா உனக்கு உடம்புக்கு  முடியில்லைன்னு சொன்னதுமே உன்னை கூட்டிகிட்டு போயிருப்பா.. இங்கே அத்தையாவது உனக்கு ஒத்தாசையாக இருக்கவும் அந்த கடவுள் துணை புரியல்லியேம்மா... இப்ப இந்த அப்பா மட்டுந்தானே இருக்காருன்னு அனுமதி கேக்கிறியாம்மா?"

"அதெல்லாம் இல்லைப்பா.! அவரை தனியா விட்டுட்டு எப்படி வர போறோம்னு எனக்குதாப்பா ரொம்ப கவலை ? இல்லைன்னா, நான் போகனுன்னு சொன்னா என்னை அவரே கொண்டு வந்து விட்டிருக்க மாட்டாரா? என்று, வறட்டுப் புன்னகையுடன் கூறினாலும், "நான் போறேன்னு சொன்னா அடுத்த நிமிஷம் என்னை கொண்டு வந்து அங்கே விடறதுலேதான் அவருக்குதான்  ரொம்ப சந்தோஷப்பா..." என்று மனசுக்குள் அழுகையுடன் கூறிக் கொண்டாள்.

என்னவோ நீ நல்லா இருக்கனும்மா.! அம்மா இல்லாத குறை தெரியாமே உன்னை வளர்த்து உங்கம்மா பிரியபட்ட மாதிரியே அவ அண்ணன் பையனுக்கே உன்னை கட்டி வச்சேன். அவ அண்ணனும் ஒன்னு விட்ட உறவாயிருந்தும் எங்ககிட்டே பேசி சத்தியம் வாங்கியபடிக்கு தன்னோட மகனை எனக்கு மருமகன்ஆக்கினாரு. இதையெல்லாம் பார்க்க உங்கம்மா கொடுத்து வைக்கல்லேயே.! பாவி அவதான் முந்திகிட்டான்னா, மாப்பிள்ளையின் அப்பாவும், தன் மகனை எனக்கு மருமகன் ஆக்கின சந்தோஷத்திலே  இப்படி போயிட்டாரே... இப்ப நான்தான்  உங்க ரெண்டு பேரையும் பாக்கற ஆவல்லே அங்கிட்டும், இங்கிட்டுமாய் அல்லாடிகிட்டு இருக்கேன்.

."சரிப்பா!! நடந்த கதை இப்ப எதுக்கு? நீங்கதான் அம்மாவுக்கும் மேலாயிருந்து என்னை வளர்த்து கல்யாணம் பண்ணி வைக்கல்லியா? எனக்கு அம்மா இல்லைன்னு வருத்தாமாயிருந்தாலும், உங்ககிட்டயே அம்மா பாசத்தையும் சேர்த்து அனுபவிச்சே வளர்ந்துட்டேப்பா... அம்மா இல்லாத குறையே எனக்கில்லைப்பா.. நீங்க மட்டும் எனக்குன்னு என்னைக்கும் இருந்தா போதும்." கண்ணீருடன் விழிகளை துடைத்துக் கொண்டவளை  வாஞ்சையுடன் பார்த்த தந்தை தன் விழிகளிலும்  வழிந்த கண்ணீரை அடக்கமாட்டாமல் உகுத்தார்.

மறுநாள் "தந்தையுடன் ஊருக்கு போகிறேன்" "என்றவளை தடையேதும் சொல்லாமல் அவன் அனுப்பியதை கண்டதும் பார்வதியின் மனம் இன்னமும் சோர்வடைந்தது. அதுதான் அவளின் கடைசி பிரிவாகவும் இருக்குமென யாருமே நினைத்துப் பார்க்கவில்லை
.

வாசலில்  யாரோ அழைப்பு மணியை அழுத்தி அழைக்கவும், விரைந்து சென்று கதவை திறந்த செல்வி உள்ளே வந்தவனைப்பார்த்து "நீயா?" என கத்தி அதிர்ந்தாள்.

"நானேதான்....! எப்படி இவன் வீடு தேடி வந்து விட்டான் எனப் பாக்கிறியா? அதுவும் உன் காவலர் இல்லாத சமயமாக பார்த்து வந்ததற்கு நீ கண்டிப்பாக என்னை பாராட்டனும்... ! என்றான் வந்தவன் கண்களை சிமிட்டியபடி...

" நீ எதுக்கு வீட்டைத் தேடிக் கொண்டு இங்கேயெல்லாம் வருகிறாய்? நான்தான் நீ கேட்ட பணத்தை அன்னைக்கே அவருக்கு தெரியாமே எப்படியோ புரட்டி கொடுத்திட்டேனே..! ஏன் இப்படி என் வாழ்க்கையை கெடுக்க மறுபடி, மறுபடி வந்து தொந்தரவு செய்றே..! கோபத்துடன் அடிக்குரலில் கூறினாள் செல்வி.

"பணமா? நீ கொடுத்ததெல்லாம் ஒரு கணக்கா? நான் கேட்டதை கொடுத்தியா.. ஏதோ அதில் நாலிலொரு பங்கை கொடுத்துட்டு நானும் தந்திட்டேன் என்று சொல்லிக் காட்டுறியே.. !என்றவன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு " ஆ... வீடு நல்லாத்தான் இருக்கு..!  பிடிச்சாலும், நல்லா வசதியானவனைத்தான் பிடிச்சிருக்கே .. ! அவனும் தன் மாஜி மாமனார் சொத்தை வளைச்சுப் போட்டு உன்னையும் அதில் ராணியாக வாழ வைக்கிறான்..! என்று எகத்தாளமாக கூறியபடி வாய் விட்டு சிரித்தான்.

" நீ இப்ப மரியாதையா வெளியே போகப் போறியா.. ! இல்லை..... கோபத்தில் குரல் நடுங்கியது செல்விக்கு.

"இல்லை... என்னப் பண்ணப்போறே? கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளப்போறியா? எங்கே தள்ளி விடு.... பார்க்கலாம்..! என்றபடி  அவளை நோக்கி தன் கழுத்தை முன்னுக்கு நீட்டியவனை கண்டதும் செல்வியின் முகம் கோபத்தில் கொதித்து சிவந்து கண்களில் கண்ணீரை வெளிப்படுத்தியது.

" அய்யோ...! நிறுத்து...!! இப்படி அழுது அழுதுதானே அன்னைக்கு என்னை காதலிச்சே.... ! அதுக்கப்புறம் என்னை கைவிடும் போதும், இதே அழுகைதான். உங்க உறவுலே உன்னையே ஒருத்தன் ரொம்ப வருடமா விரும்புறான்... அவனைத்தான் அப்பா, அம்மாவும்  கட்டிக்க சொல்றாங்கன்னு எத்தனை மாய்மாலமா பேசி, என்னை விட்டுட்டு, அதிக வசதியா இருக்கிற இவனை இரண்டாந்தாரம்"னு பாக்காம கல்யாணம் செஞ்சுகிட்டே.... ! அப்புறந்தானே தெரிஞ்சது..! அவனை நீயும் அவனிடம் இருந்த வசதியான அந்த பணத்துக்காக காதலிச்சதையும், அவன் உனக்காக வலுக்கட்டாயமாக தன் அப்பா கட்டி வைத்த மனைவியையே வெறுத்து ஒதுக்கி விட்டு அவள் அந்த வேதனையில் உள்ளம் உருகி இறந்ததும், உன்னை என்னவோ பெரிய மகாராணியா நினைச்சு உன்னோடு வாழ்ந்து வர்றததையும், அப்புறந்தானே தெரிஞ்சுகிட்டேன்..! "வந்தவன் அவளின் வாழ்க்கையை கேவலமாக பேசியபடி சோபாவில் அமர்ந்து கொண்டான்.

"இப்ப என்ன வேணும்"னு இப்படி தொந்தரவு  பண்றே?

"கண்டிப்பாக நீ வேண்டாம்.. "என்றவன் தான் அடித்த ஜோக்கை நினைத்து தானே பலமாக சிரித்தான்.

"எனக்கு பணமாக பத்து லட்சம் தந்து விடு...! உன் வாழ்க்கையை விட்டு  முழுதுமாக போய் விடுகிறேன்." என்று சிரித்தபடி கூறிய அவனைப் பார்த்து அதிர்ந்தாள் செல்வி.

"பத்தா? அவ்வளவுக்கு நான் எங்கே போவேன்? ஏற்கனவே அவருக்கு தெரியாமல், எப்படியோ என் நகைகளை வைத்து உனக்கு இரண்டு வரை கொடுத்து விட்டேன். தயவு செய்து என் நிலைமையை புரிஞ்சு பேசு." அவள் குரல் அழுகை கலந்ததால் கம்மியது.

அதுதான் சொன்னேனே..! அதெல்லாம் பணத்தோட கணக்கே இல்லைன்னு..!  நீ முழுசா பத்தை கொடுத்துட்டு, என் வாழ்க்கையிலும் விலகிப் போயிடு.. நானும் எங்கேயாவது போய் செட்டில் ஆயிடுவேன். இல்லாட்டி.. உன் கணவனோடேயே பேரம் பேச வேண்டியதிருக்கும்.. எப்படி வசதி?" அவனின் வன்ம சிரிப்பு அவளின் முகத்தில் அறைந்தது. 

அவள் முகம் பேயறைந்த மாதிரி சற்று வெளிறியது. 

அந்த அறைக்குள் நுழைய முடியாமல் ஏதோ என்னை தடுத்தது. அவர்களின் காரசாரமான பேச்சுக்கள் எனக்குள் சற்றே சந்தோஷத்தை  உண்டாக்கியதை என்னால் உணர முடிந்தது. 

" சரி . நான் இப்ப போயிட்டு  நாளை மறுநாள் வருகிறேன். அதற்குள் பணத்தை ரெடி பண்ணிடு....."அவன் கிளம்ப யத்தனித்தான்.

எப்படி? பாவி... பாவி... என் நிலைமை புரியாமே இப்படி சொல்றியே.. நாளைக்குள் எப்படி நீ கேட்கும் பணத்தை ரெடி பண்ண முடியும்...? அதற்குள் உனக்கு ஏதேனும் சாவு வரக்கூடாதா? மனதுக்குள் கடுமையாக அவள் திட்டிக் கொண்டாள். 

என்ன..? எனக்கு சாபம் கொடுக்கிறாயா? உன் சாபமெல்லாம் பலிக்காது. அப்படியே பலித்தாலும், அது உனக்கும் சேர்த்துதான் பலிக்கும். பார்க்கிறாயா.. ?"அவள் முக பாவத்தைக் கொண்டு கணித்து  அவளருகில் வந்து கிசுகிசுப்பான குரலில் அழுத்தமாக சொன்னவன் அவள் அவனின் பேச்சில் அதிர்ந்து நிற்கையில், அறை கதவை திறந்து வாசல் கடந்து வெளியேறினான். 

என் மனது முழுக்க ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம் சட்டென ஓடி ஓடி சந்தோஷிப்பதை புரிந்து கொண்டேன்." 

எங்கே போய் தொலைஞ்சே...! சமயத்தில நீ ரொம்ப என்னைை கண்டுக்காமல் காலை வாரி விடறே....! என சுள்ளென்று செல்வி கத்தியதும் ஒரு இன்பமாகத்தான் இருந்தது. அவனைப் பற்றி என்னிடம் முழுதாக சொல்ல முடியாத ஒரு இக்கட்டில் அவள் இப்படி கோபப்படுவதை பார்க்கும் போது என்னுள்ளும் அவளை துன்புறுத்தும்  வெறி வருவதை உணர்ந்து கொண்டபடி நான் அவள் அறையை விட்டு மெளனமாக வெளியேறினேன். 

மறுநாள் மாலை வரை அவளிடத்தில் எந்த கலகலப்புமின்றி, குழந்தையை கவனிப்பதை மட்டும் கடனாக செய்து வந்ததை  நானும் புரிந்து கொண்டேன்.  என்னுடன் அவளை விளையாட கூட அனுமதிக்காமல், தன்னுடனே வைத்துக் கொண்டிருந்ததும்
 எனக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. அன்று மாலைக்கு பின் எங்கோ குழந்தையுடன் சென்று விட்டு வந்தவளிடம் ஒரு இனம் புரியாத படபடப்பு இருந்தது. "வரட்டும்....நாளை.. நான் பார்த்துக் கொள்கிறேன்." என்று லேசாக ஒரு தடவை சத்தமாகவே  முணுமுணுத்துக் கொண்டதை நான் பார்த்ததும், இன்னும் படபடப்பாக வியர்வை துளிர்க்கும் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.  இரவு பிரதீப்புடன் ஃபோனில் பேசும் போதும் எப்போதும் போல், நிறைய நேரம் பேசாமல், "இன்னும் இரண்டு நாட்களில் வந்து விடுவீர்களா? ஒன்றும் பயமில்லை.. .!!! நான் தைரியமாகத்தான்
 இருக்கேன். .  !!! .சரி... சரி. ... எப்போ வேலை முடியுதோ..... அப்போ உங்க செளகரியப்படி புறப்பட்டு வாங்க.... ஒன்றும் பயமில்லை..." என்று குரல் உசத்திப் பேசியவள்  சீக்கிரம்  பேச்சை துண்டித்து விட்டு படுக்கச் சென்றாள். மறுநாள் விடியப் போகும் காலைப் பொழுதை  ஆவலுடன் நானும் எதிர்பார்த்தபடி கண் மூடினேன். 

மறுநாள் மதியத்திற்கு மேல் கதவு தட்டப்படும் ஒலியில் மாடியிலிருந்து விரைந்து வந்த செல்வி குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்த என்னை பொருட்படுத்தாது சென்று கதவை திறந்தாள். அங்கே அவனைக் கண்டதும் "உள்ளே வா" என்றபடி மாடிக்கு விரைந்த அவளை அவனே சற்று ஆச்சரியத்தோடு பார்ப்பதை என் விழிகள் கவனிக்க தயங்கவில்லை. 

"என்ன உபசாரம் பலமாக இருக்கிறது? கொடுக்க வேண்டியதை தந்து விட்டால் இப்படி வெளியேற எனக்கும் சௌகரியமாக இருக்குமே" வந்தவன் அதே நக்கலோடு ஆரம்பிக்க அவள் அதற்குத்தான் "வா என்றேனே.." என்றவள் ஒரு கண்ணசைவில் என்னை நோக்கினாள். 

"ஓ..  புரிகிறது.. புரிகிறது.. கொடுக்க இருப்பதை யாருக்கும் தெரியாமல்.... சரி... சரி. ..முறைக்காதே. .. இதோ வந்து விட்டேன்.."என்றபடி அவன் மாடிப்படியேறினான். 

எனக்குள் இன்னதென்று தெரியாத ஒரு வெப்பம் உடலெங்கும் பரவியது. 

மெதுவாக அவர்கள் அறியாதபடி நானும் மேலேறி அவர்கள் இருந்த அறை வாசலில் நின்று கொண்டேன். அறைக்கதவு தாழ்ப்பாள் இடாமல் வெறுமனே சார்த்தியிருக்க, அந்த சாத்திருந்த கதவை சுலபமாக திறந்து கொண்டு உள்ளே செல்ல முடியும் என்பதை புரிந்து கொண்டேன். 

"என்ன. . உள்ளே அழைத்து விட்டு ரகசியம் பேசவா வந்திருக்கிறேன். இல்லை. .. அப்போ அனுபவிக்காததையும் இப்ப சேர்த்துக் கொடுக்கச
போகிறாயா? ." என்றபடி அவன் விஷமத்தனமாக கேட்பது எனக்குள்ளும் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது. 

"ஆமாம். .  கொடுக்கத்தான் போகிறேன்.. இந்தா வாங்கிக் கொண்டு நிம்மதியாக போய்ச் சேர். ... ." என்ற அவளின் பதிலுக்கு அவன் விதிர்விதித்து, சற்றுப் படபடத்த குரலில்,  " ஏய்.... ஏய்.. என்னது இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறே.. .? எனவும் நான் மெள்ள கதவை திறக்கலானேன். 

அங்கே நான் கண்ட காட்சி என்னைத் திகைப்படைய செய்தது. கையில் துப்பாக்கியை வைத்தபடி நெருங்கி வரும் அவனை குறி பார்த்தபடி பயங்கர கோபத்திலிருந்த செல்வியின் முகம் எனக்கே சற்று பயத்தை உண்டாக்கியது. 

"ஏய். ... அட.. உனக்கு இப்படி சுடக் கூடத்  தெரியுமா? சுட்டுடாதே.. .. சுட்டுடாதே.   அப்படியே நீ  சுட்டாலும், சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வரவங்கிட்டேயிருந்து எப்படி தப்புவே. ...? போலீஸ் வந்து விசாரிச்சு, கொலை கேஸ்ன்னு வெளியிலே நியூஸ் வந்து, 
அப்புறம் உன் கணவன் வந்து விபரம் தெரிஞ்சு அவமானம் தாள முடியாம அவனும் ஒரு முழ கயித்தை நாடுவான். .. இதெல்லாம் உனக்குத் தேவையா. .. ?"  அவன் கையை உயர்த்திபடி பேசிக் கொண்டே ஒவ்வொரு இன்ச்சாக  மெள்ள  அவளை நோக்கி நகர்வதை
உணர்ந்தேன். 

" ஏய்... கிட்ட வராதே. . . நிஜமாகவே இப்பவே சுட்டுவேன். இது எந்த சத்தமும் கேட்காத லைசன்ஸ் பெற்ற துப்பாக்கி.... போயிடு.... என்னை விட்டு போயிடு.. இனி என் வாழ்க்கையோடு நீ தொடர்ந்து வந்தேன்னா உன் உயிர் உன் கிட்டே இருக்காது.... எனவே சத்தம் போடாம நீ இப்போ போயிட்டு.. இனி எப்பவும் இங்கு வரவே வராதே..." அவள் படபடவென வார்த்தைகளை முடித்ததும், அவன் கை எப்படியோ அவளை வளைத்துப்பிடித்து அவள் கையிலிருக்கும் துப்பாக்கியை பறித்துக் கொண்டது. 

அந்த கண நேர மாற்றத்தில் என் நெஞ்சும் அதிர்ந்து படப்படத்தது. 

"என்ன. . சத்தமே கேட்காத துப்பாக்கியா?நான் சுட்டாலும் இது சத்தம் போடாதா? இப்ப சுட்டு காண்பிக்கட்டுமா. .. .? இல்லை எனக்குதான்  சுடத்தெரியாதுன்"னு நினைச்சுகிட்டு இருக்கியா? ஆனாலும் உன் உயிர் எனக்கு தேவையில்லை.. நான் கேட்ட பணத்தை கொடுத்துடு. ...".  நானும் இப்படியே உன் உயிரை எடுக்காமலே போயிடுறேன்.. .." என்றபடி அவன் பல்லைக் கடித்தபடி கேலியாக கூறிச் சிரிக்கவும், 

அவள் சற்று பயம் கலந்த முரட்டுத்தனத்துடன் அவன் கையிலிருக்கும் ரிவால்வர் பிடுங்க முயற்சி செய்ததும் நான் அவர்கள் எதிர்பாராதபடிக்கு, அவர்கள் இருவர் நடுவிலும் பாய்ந்தேன். 

அந்த ஒரு நொடியில், அவர்களின் கை அழுத்தத்தில், அந்த சத்தம் இல்லாத துப்பாக்கியின்  குண்டு என் உடலைத் துளைத்ததும், நான்" ஆ, "வென்ற அலறலில் துள்ளி விழுந்ததை கண்ட செல்வி, ஆ..... .. அய்யோ...  .என்று சத்தமிட்டபடி கதறினாள். அவனும் ஒரு நிமிடம் தடுமாறியவன் மறுநிமிடமே  சுதாரித்தபடி கையிலிருப்பதை எறிந்தபடி வெளியே ஓடியதை நான் மெள்ள கீழே சாயும் போது என் கண்களால் காண முடிந்தது. 

"அய்யோ.. .. நீ எனக்காக உன் உயிரை இப்படி தியாகம் செய்து விட்டாயே. . இப்போ நான் என்ன செய்வேன்.. .. " செல்வி கதறுவதை உயிர் இன்னமும் பிரியாத மயக்கம் தழுவி கொண்டிருந்த என்னால்  கேட்க முடிந்தது. என்னை விட்டு  இத்தனை நாள் என்னுள்ளிருந்து மகிழ்ந்திருந்த  அந்த மற்றொரு உயிரும் காற்றாய் கலந்து பரந்து விரிந்ததையும் என், கண்களின் ஜீவன் குறையாமல் இருந்த அந்த வேளையில் புரிந்து கொள்ள முடிந்தது. 

"உன்னைப் போல் ஒரு அன்பான ஜீவனை நானும் என் வாழ்வில் நேசித்து வளர்த்து வந்தேன். என் கணவனின் பிடிவாதத்தால் என் தந்தை தந்த அதை என் தந்தையிடமே  தந்து விட்டேன். இவளின் காதல் மயக்கத்தில் இருந்த என் கணவன் அவளால் வளர்த்த உன்னை எப்படியோ ஏற்றுக் கொண்டதும் இப்போது எனக்கு சௌகரியமாக இருந்தது. நான் உனக்குள் இங்கு வந்த வேளையில், இவளின் முகத் திரைகள்  இவளின் பழைய செய்கைகளால் கிழிந்தது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். 

வாழும் போதும் சரி... வாழ்ந்த வாழ்விலும் சரி. .. அதன் பின் இறந்த பின்னும்  நிம்மதியின்றி சுற்றி வந்த நான் இவளை பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் அதுவாக வந்ததை கண்டு அந்த நேரத்திற்காக உன்னுடன் இணைந்து தங்கினேன். 

என் முன்னாள் கணவனிடம் இவளின் பழைய வாழ்வை காண்பித்து, நிரூபித்து சந்தோஷபட வேண்டி உனக்குள் காத்திருந்தேன். ஆனால், நானும் ஒரு பெண்தானே.. . "பெண் என்றால் பேயும் இரங்கும்" என்பார்கள். அதுவும் நான் சுபாவத்திலே நல்லவளாக வாழ்ந்து எனக்கு என் கணவன் தந்த மனவருத்தத்தில் மட்டுமே என் உயிரை பிரிந்தவள். அந்த நல்ல குணம் இப்போதும் என்னில் அப்படியே இருந்ததினால் இவள் துப்பாக்கியில் அடிபட்டு இறந்து விடுவாளோ என்பதை காண சகியாமல், சண்டையிடும் இவர்கள் இருவரின் நடுவில் பாய நினைத்தேன். 

அந்த என் நினைப்புடன் உன் நினைப்பும் இணைந்ததால், அது நடந்தே விட்டது. ஏனென்றால் நீயும் இந்த உலகில் மனிதர்களோடு இந்த மனிதர்களுக்காக நன்றியுடன் மட்டுமே வாழப் பிறந்தவன். அதனால் அநியாயமாக உன் உயிரும் இப்போது போகப் போகிறது. எப்போதும் விதியை மாற்ற இயலாது. என் உயிர் காற்றிலே கலந்து இறைவனோடு சங்கமிக்கும் நேரம் வந்து விட்டது. எனக்காக இத்தனை நாள் உன்னுடலில் இடம் தந்த உன்னை நான் வாழ்த்துகிறேன்.. .. வணங்குகிறேன்... என்னால்தான் உனக்கிந்த வேதனை என்றால், என்னை மன்னித்தும் விடு.... நான் வருகிறேன்... " என்றபடி ஒரு பெண்ணுருவம் என் காதோடு  பேசியபடி என் உடலை அன்புடன் தன் கை கொண்டு ஸ்பரிசித்த நேரம் அவள்  மெதுவாக காற்றோடு கலைய என் இறுதி மயக்கம் மிக அருகில் என்னோடு  நீடித்து வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

கதை நிறைவுற்றது.

ஒரு வித்தியாசத்திற்காக  இந்தக்கதை எழுத ஆரம்பித்து வருட கணக்கில் முடிக்காது பாதியிலேயே வைத்திருந்தேன். கதை ஆரம்பிக்கும் போது எடுத்த கதை கருவும் சற்றே மறந்தே விட்டது எனலாம். எப்படியோ ஒரு மட்டும் இன்னமும் கதையை நீட்டாமல் முடித்துள்ளேன். 

கதை சற்று பெரிதாக உள்ளதால் முதலில் இதை இரு பாகமாக வெளியிடலாம் எனவும் நினைத்தேன். ஆனால் அதன் ஸ்வாரஸ்யம் (அப்படியும்  ஒன்று கதையில் இருந்தால் ஹா ஹா ஹா. ) குன்றி விடுமோவென ஒரே பதிவாக வெளியிட்டு விட்டேன். பொறுமையுடன் படிக்கும் உங்கள் அனைவரின் ஊக்கமிகு கருத்துக்கள் மேலும் என்னை எழுத வைக்கும் (பயம் வேண்டாம்... இதே கதையை அல்ல... ஹா ஹா ஹா) என நினைக்கிறேன். கருத்துக்கள் அளிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 

Tuesday, June 28, 2022

பூக்களுக்கிடையே ஒரு கெண்டி.

ஜானகி படுத்திருந்தாள். முகத்தில் சோர்வு தெரிந்தாலும், என்ன ஒரு களையான முகம். அந்த கால ரவி வர்மா ஓவியப் பெண்களைப் போல்  இயற்கை வண்ணங்களால் வார்த்தெடுத்த அழகான முகம்.....! மனம் மட்டுமென்ன..! அதை விட அழகோவியமாக இறைவனே பார்த்து  பார்த்துக் கொடுத்திருக்கிறார். ரகு கண்களில் உண்டான லேசான நீர் துளிப்புடன் அவளையே பார்த்தபடி அருகில் அமர்ந்திருந்தான்.

சற்று நேரத்தில் கண் விழித்துப் தன்னையே பார்த்தபடி அவன் அமர்ந்திருப்பது கண்டதும் விழிகளாளேயே "என்ன"வென்று கேட்பது போல் புருவத்தை தூக்கினாள்.

அருகில் நெருங்கி அவள் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டவனுக்கு வார்த்தைகள் எழும்பவில்லை. தன் கைகளில் அவன் கண்களிலிருந்து சூடான இரு முத்துக்கள் விழுந்ததும், பதறிய அவளின் முக பாவம் ரகுவை இன்னமும் வசீகரித்தது.

" இதை எனக்காக இப்படியே நிறுத்தி விடு  ஜானகி..! என்னால் இதை ஜீரணிக்கவே முடியலே... நாளை விடியாமலே போகக்கூடாதான்னு வேண்டிக்கிறேன்."

மெதுவாக அவனிடமிருந்து கரங்களை விடுவித்தவள், மறுகணம் தன் ஒரு கரம் கொண்டு அவன் வாயை லேசாக மூடினாள்.

உலர்ந்திருந்த உதடுகளை நாவினால் தடவி ஈரமாக்கியபடி, மெல்ல எழுந்து அமர்ந்தவள், "ஏன்...!  இப்படி பேசனும்.. எல்லாம் என்னோட கனவுக்குதானே...! இதற்கு எத்தனை வருடம் காத்திருக்கிறேன். உங்க சம்மதந்தானே என் கனவோட முதல்படி. படிபடியாக ஏறி கனவு பலிக்கிற நேரத்துல இப்படி முடியாதுன்னு சொன்னா  எம்மனசு நொறுங்கி போயிடாதா?" வேகமாக சேர்ந்தாற் போல் பேசியதில் சற்று  மூச்சு வாங்க இளைப்பதை கண்டதும், ரகு பதறி எழுந்து போய் தண்ணீர் கொண்டு வந்து சற்றுக் குடிக்கச் செய்து  ஆசுவாசப் படுத்தினான்.

" சரி..! ஜானு..அதிகம்  பேசாதே.. நான் ஒண்ணும் சொல்லலை...உனக்காக  நான் சம்மதிக்கிறேன்.. " என்றவன் கண்களில் கண்ணீர் பெருக  அதை அவளிடம் மறைக்க முயற்சித்தான்.

"என்ன இது...! குழந்தை மாதிரி.. நா என்ன ஊர்ல உலகத்துல செய்யாததையா செய்றேன். இதுக்குப் போயி இப்படி வருத்தப்பட்டா எப்படி? "அவள் மறுபடி பேச ஆரம்பிக்கும் முன் அவளை அமர்த்தியவன்..
" நீ இப்ப எதுவும் பேசாதே ஜானு.. நான்தான் உன் இஷ்டத்துக்கு ஒத்துண்டாச்சே... மறுபடி இப்ப எதுக்கு அதைப் பத்தி பேச்சு.. வேணாம். .,! நீ கொஞ்ச நேரம் தூங்கு.. என்றபடி அவள் தோளை அணைத்து தன் மேல் சாய்த்துக் கொண்டவாறு அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

கணவனின் பாசம் கண்டு ஜானகியின் கண்களும் கலங்கியது. அவனறியாமல் கண்களை துடைத்தபடி அவன் பரிவுக்கு கட்டுப்பட்டு கண்களை மூடி தூங்க பிரயத்தனித்தாள்.

"மேகலா, மேகலா, இங்கே வா.! ஜானகியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தலை நிறைய பூச்சூடி அழகு தேவதையாய் நடந்து வந்த  மேகலா அவளருகே வந்தமர்ந்தாள்.

" மேகலா.! நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து தரனும். இத்தனை நாளா உன்கிட்டே  வாய் வார்த்தையா வெறும் உறுதி மொழிதான் கேட்டேன். இப்போ" என்றவளை இடைமறித்த மேகலா, "என்னக்கா,  நீங்க பெரிய வார்த்தையா கேக்கறீங்க.. நீங்க சொன்னது நான் மீறினாதானே இந்த மாதிரி சத்தியம் அது, இதெல்லாம் சொல்லனும். நீங்க சொல்றதை நான் தட்டியிருக்கேனா? ஜானகியின் மெலிந்த கைளை எடுத்து தன் மார்போடு அணைத்தவளாய் பரிவாக சொன்னாள்.

" இன்னைக்கு என்னுயிரை உங்கிட்டே  தந்திருக்கிறேன்... ஏன் தெரியுமா? அந்த உயிருக்கு ஆதரவா ஒரு உயிரை நீ சீக்கிரம் தரணும். அந்த செயலைத்தான் உங்ககிட்டே உறுதியா கேக்கிறேன். "

வெட்கத்தில்  சிவந்த முகத்துடன் மேகலா அவளுக்கு பதில் கூறும் முன் அந்த  அறைக்குள் நுழைந்தான் ரகு.

"மேகலா.! அவளுக்கு மருந்து தந்தியா? இனி நீ போ..! நான் அவளை பார்த்துக்கிறேன்.. என்றபடி, தன் கட்டிலில் அமரப் போனவனை ஜானகி தடுத்தாள்.

"என்னங்க.. ஒரு நிமிஷம்.. இங்கே வாங்க..! அழைப்புக்கு கட்டுண்டு வந்தவனை, "என்ன இது.!  இன்னைக்கு என்னவென்று உங்களுக்கு தெரியாதா? உங்க அறைக்கு போங்க. நா கொஞ்ச நேரத்துல மேகலாவை அனுப்பறேன்.  எனக்கு துணையாக இனி என் அத்தை இங்கே இருந்து பாத்துப்பாங்க.! " என்று முடியாமல் கூறி முடிக்கவும், ஜானகியின் அத்தை வந்து மேகலாவை, "வாம்மா" என்றபடி அழைத்துக் கொண்டு போனாள்.

ஒரு நிமிஷம் நடப்பதை பார்த்து திகைப்புடன் நின்றிருந்த ரகு, ஜானகி அருகே வந்தமர்ந்தபடி,  "என்ன ஜானு. .! உன் விருப்பத்துக்குதான் ஒத்துண்டேன். மறுபடியும் என்னை எல்லாத்துக்குமே ஒத்துக்க வைக்கிறே.... இது நியாயமா சொல்லு? என்றான் அழ மாட்டாத குறையாய்..

ஜானகி அவன் கைகளை எடுத்து தன் கைகளில் பிணைத்து கொண்டபடி வருடிக் கொடுத்தாள்." என் செல்ல ராஜா..!இதுக்குதானே நா என் உயிரை கையிலே வச்சிட்டு காத்திருக்கேன். நம்ப குழந்தையை ஒரு வாட்டி பாத்துட்டு, அதுக்கு நான் நினைச்ச மாதிரி ஆகாரம் கொடுக்காமே நான் போவேனா?  அப்படி போனாதான் என் ஆத்மா சாந்தியடையுமா என்ன?" மேற்கொண்டு அவளை பேச விடாமல், வாய் பொத்தி அவளை லேசாக தன்னுடன் அணைத்துக் கொண்டான் ரகு.

தன் திருமணத்திற்கு தன் தாய் தந்திருந்த வெள்ளி கெண்டியை அடிக்கடி எடுத்து வைத்துக் கொண்டு,"  என்னங்க இதில்தான் என் அம்மா எனக்கு பால் புகட்டி வந்திருக்கிறார்கள். நானும் என் குழந்தைக்கு இதில்தான் பால் புகட்டிப்பார்க்க வேண்டுமென்று ஆசை... என முகம் சிவக்க கூறும் போது, ரகுவின் சீண்டும் பார்வையை தாங்க முடியாமல் வெட்கத்தில் கைகளால் கண்மூடி மௌனித்த வேளைகள் எத்தனை எத்தனை.!

அவளுடைய ஆசைகள் அவனறியாததா? அவனின் இருபத்தைந்தாவது வயதில் அவனை நம்பி அவள் அவனுடன் சம்சார பந்தமெனும் கடலில் இறங்கிய போது அவளுக்கு வயது இருபது. நிறைய கனவுகளில்  சிறகடிக்கும் பறவையின் உற்சாக மனதோடுதான் அவனை கைப்பிடித்தாள்.

 நிறைய இடைவெளியில் , தன் கூடப்பிறந்த இரு தம்பிகளையும் தன் உடன்பிறப்பாக நினைத்து அன்புடனே, வளர்த்து,  தன் பெற்றோர்களின்  நம்பிக்கைக்கு பாத்திரமாகி, நல் மதிப்பெண்கள் பெற்று, தம்பிகளின் திருமணங்கள் வரை, உற்சாகமாக ஓடியாடி  வளைய வந்தவள்தான்.!

"இவ்வளவு பொறுப்பா பெரிய மனுஷியாட்டம்  புகுந்த வீட்டை கட்டிக்காத்து  நல்ல முறையிலே நிர்வகிச்சிண்டு வர்றியே... ஜானகி. அந்த ஆண்டவன் உன் விஷயத்திலே கண் திறக்க கூடாதா? உனக்குன்னு ஒரு குழந்தை தங்கி ஒரு குடும்பமா இருந்தாதானே ஒரு சந்தோஸம் நிலையா வரும். "  என்று உறவுகள் தன் தம்பிகளுக்கு பிறந்த குழந்தைகளை அவள் தூக்கி சீராட்டி கொஞ்சம் போது, புகழ்வது போல பேசி, குறையை சுட்டிக் காண்பித்த போது கூட மனம் சற்று வருத்தியதை அவள்  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

காலம் வேகமாக ஓடி மூச்சு வாங்கிய போது ஜானகியும் மூச்சு விடக் கூட சங்கடப்பட்டு  சோர்ந்திருந்தாள். அவளை பரிசோதித்த பின் குழந்தை பிறக்க இனி சாத்தியமில்லை என மருத்துவர்கள் கூறியதில் நொடித்துப் போன இதயம்..அது.. மறுபடியும் தேறவேயில்லை...!

ஆயிரம் மருத்துவங்கள், பலவித மருந்துகள் என எதுவும் பலனளிக்காமல், அவளை மிகவும் பலவீனபடுத்தியிருந்தன. கடைசியில் தன்னை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள தூரத்து உறவின் மூலம் வந்திருந்த மேகலாவை எப்படியோ சம்மதிக்க வைத்து, ரகுவிடமும் போராடி  பேசி அவன் அரைகுறை சம்மதத்தையும் பெற்று இருவருக்கும் மணமுடித்து வைத்து விட்டாள். இனி ரகுவின் குழந்தையை கொஞ்சாது தன்னுயிர் பிரியாது என்ற நம்பிக்கையில் தன்னை எதிர்கொள்ள காத்திருக்கும் மரணத்திற்கு சவால் விட்டபடி காத்திருந்தாள்.

கடந்த  ஐந்தாணடு காலமாக ரகுவுக்கும், மேகலாவுக்கும் இடையே அவ்வளவாக பேச்சே கிடையாது. "வெளியுலகத்திற்கு நீயும், நானும் கணவன் மனைவி.. ஆனால் அதை தாண்டி ஒரு பந்தமும் நம்மிடையே என்றுமே கிடையாது" . என ரகு சொல்லியபடி வாழ்ந்து வந்தான்.  அவன் என்றாவது மனது மாறுவான் . தன்னிடம் பழைய மாதிரி சுமூகமாக பேசவாவது செய்வான் என்ற நம்பிக்கையோடு பொறுமையாய் இருந்தாள் மேகலா.

அவனை விட்டு விலகிப் போகவும் முடியவில்லை...அப்படியே போனாலும்அவளைத் தாங்கி அரவணைத்துக்கொள்ள யாரிருக்கிறார்கள்.? பெற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக மறைந்து, வறுமையில் யாருமற்ற சூழலுடன் இருக்கையில், உறவில் அத்தை முறையான பார்வதி,  "ஜானகியை கவனமாக பார்த்துக் கொண்டால்,  உனக்கும் ஒரு பாதுகாப்பு கிடைக்கும்"என அழைத்து வந்து இங்கு தங்கச் செய்தாள். ஆரம்பத்தில் சற்று மனம் ஒட்டாமல்  தயங்கினாலும் ஜானகியின் அன்பும், அக்கறையும், அவளின் எந்த பேச்சையும் தட்டாத ஒரு நெருக்கத்தை உண்டாக்கின.

அதன் விளைவுதான் ரகுவை மணந்து கொள்ள அவள் சம்மதித்தாள். சட்டப்படி ஜானகி எடுத்த முயற்சி பலனளித்து விட்டாலும், ரகு திருமணமான அன்றே தன் உறுதியான முடிவை "ஜானகிக்காகத்தான் நான் உன்னை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி நீயும், நானும் என்றுமே யாரோதான்..! என்று மேகலாவிடம் கூறி விட்டான். ஜானகியின் மேல் அவன் வைத்திருக்கும் அன்பை இரண்டு வருடங்களாக அவள் பார்த்திருந்ததால், இதை மேகலாவும் ஆமோதித்தது புன்னகையால் ஏற்றுக்கொண்டாள்.

"அப்படிப்பட்ட உறவையும், இந்த ஐந்தாண்டு காலம்  மிகவுமே சின்னாபின்னபடுத்தி அழகு பார்க்கிறதே " என எண்ணும் போது, பொறுமையாயிருந்த மேகலாவின் கண்கள் ஆறாகப் பெருகின.  அதன் காரணம் அவள் மனசாட்சிபடி "நீ செய்தது சரிதான்" ! என கூறினாலும், ரகுவை வெறுப்படைய செய்து விட்டதே என நினைக்கும் போது சற்று உறுத்தலாக இருந்தது. அன்றைய நாளின் நினைவுகள் அவளிடமிருந்து சிறிதும் விடைபெற  மறுத்தது மட்டுமின்றி, "நான் என்றுமே உன்னுடன்தான் இருப்பேன்" என்று அழிச்சாட்டியம் செய்தபடி இருந்தது.

" மேகலா.! நீயும் என்னை ஏமாற்ற போகிறாயா? கண்களால் கேள்வி கேட்கும் ஜானகியை எதிர் கொள்ளவே மேகலாவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவளை பூப்போல அசைத்து, பணிவிடைகள் செய்யும் போதும், ஆகாரத்தை மெல்ல ஊட்டி விடும் போதும் பார்வையின் உரசல்களில் அந்த கேள்வி தொக்கி நிற்கும்.

ரகு வேலையிலிருந்து வரும் வரை ஜானகியை முழுதாக அருகிலிருந்து கவனித்துக் கொள்பவள் ரகு  வந்ததும் ரகுவின் கட்டளைக்கிணங்கி அங்கிருந்து அகன்று விடுவாள். இருவரையும் சேர்ந்து பார்த்தால், மறுபடி "குழந்தையை பற்றி பேச்செடுத்து ஜானகி தன்னை இன்னமும் பலவீனமாக்கிக் கொள்கிறாள்" என்ற எண்ணம் ரகுவை ரொம்பவே பாதித்தது. அதை புரிந்து கொண்டவளாய்  தான் நகர்ந்து விடுவது ரகுவுக்கு பிடிக்கிறது என்ற எண்ணமே மேகலாவுக்கும் திருப்தியளித்தது.

ஒருநாள் இருவரும் சேர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. ஜானகி காலையிலிருந்தே சற்று கூடுதலாக சோர்வாக இருப்பது கண்டு அவளை விட்டு தானும் நகராதிருந்தாள்.  அன்று மேகலாவுக்கும் காலையிலிருந்தே தலைவலியால், சோர்வாக இருந்த உடல் ஜானகிக்கு இரவு கஞ்சியை புகட்டி கொண்டிருந்த போது, சற்று வெளிக் காட்டி விட்டது. வாய் மூடி பாத்ரூம் சென்று வாந்தி எடுத்து விட்டு வந்தவளை சந்தோஷம் மிக்க கண்களால் விரிய பார்த்தாள் ஜானகி.

அந்தப் பார்வையின் பொருள் உணர்ந்து தன்னிலை உணர்த்துவதற்குள் ஹீனஸ்வரத்தில் "மேகலா நாள் தள்ளிப் போகிறதா? நல்ல செய்தியா? என சந்தோஷம் அடைந்தவளுக்கு முன் எதையும் சொல்ல முடியாமல் மெளனித்தவளை, ரகு முறைத்தான்.

" நான் நினைத்தது நடந்து விட்டது.. கடவுள் என் குறை அறிந்து என வாழ்க்கையில் ஒரு திருப்தி கொடுத்து விட்டார், இது போதும் எனக்கு.." என் வேண்டுதல் பலித்து விட்டது. என மெலிதாக புலம்பிய வண்ணம் இருந்த ஜானகிக்கு அன்று இரவு மிகவும் உடல் பலகீனமாக அடைய, இந்த சந்தோஷம் போதுமென்று மனநிலையில், அதே சிரித்த முகத்துடன் இந்த உலகை வெறுத்து விடை பெற்றாள்.

ஆயிற்று!  நடைபிணமாயிருந்த ரகு பழையபடியாக  மாத கணக்கில் ஆனது.
அன்று சாப்பாடு பறிமாறிய மேகலாவை "இப்போ உனக்கு திருப்தியா? என் உயிரை என்கிட்டே இருந்து பிரிக்க இப்படி எத்தனை நாளா யோசிச்சே? என்று கேட்கவும், மேகலா திகைத்தாள்.

" நானா? ஏன் இப்படி பேசறீங்க? அக்காவை நானும் என உயிராகத்தான் நினைச்சேன். அவங்க இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு எவ்வளவு வேதனையை தருது தெரியுமா?" கண்ணீர் பீறீட கேவினாள் மேகலா.

"அப்படியென்றால் அன்னைக்கு உண்மையை சொல்ல வேண்டியதுதானே.! "மெளனம் உண்மை.." என்ற மாதிரி அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாது ஏன் அமைதியா இருந்தே? " ஏன்னா உன் எண்ணத்தில் இருந்த ஆசைக்கு அதுவே ஒரு சாட்சி,.! சீ.. நீயெல்லாம் அவளை உயிரா நினைச்சியா? ஏன் பொய் மேலே பொய்யா....இப்படி.. " வார்த்தைகளை உமிழ கூட வெறுப்படைந்தவனாக முகம் சிவந்தான் ரகு.

" நீங்க நம்பலைன்னாலும் நான் சொல்றது உண்மை. அந்த நேரத்திலே நீங்க நினைக்கிற மாதிரி இல்லைன்"னு சொல்லவா? காலையிலிருந்து தலைவலி காரணத்தாலேயே வயிற்றை பிரட்டியதுன்னு சொல்லவான்னு நான் அந்த சமயத்திலே கொஞ்சம் தடுமாறினேன். இத்தனக்கும் அவங்க எத்தனையோ நாள் இந்த மாதிரி பேச்சை ஆரம்பிக்கும் போது, ஒருநாள் கூட நாம ரெண்டு பேரும் இன்னமும் வாழ்க்கையையே துவங்கலைன்னு  சொல்ல நினைச்சிருக்கேனா? இல்லை என்னையும் மீறி சொல்லியிருக்கேனா? ஏன் என்னை நம்பாமே இப்படி அபாண்டமான பேசறீங்க?"
மேகலாவின் வாய் வார்த்தைகளையும் மீறி சற்றே உணர்ச்சி வசப்பட்டதில் நடுங்கியது.

எப்படியோ போ,! அவளை கொன்னுட்டே. ! என்னையும், அவளையும்  பிரிச்சு பாவத்துக்கு இனி உன் முகத்துல முழிக்கிறதே பாவம். ! ஜானகி பேச்சை மதித்து உன்னை கல்யாணம் பண்ணினதுனாலே உன்னை எங்கேயோ போன்னும், சொல்ல முடியலே! ஆனா என் ஜென்மம் முழுக்க உன்கிட்டே பேசாமே இருக்க  என்னாலே முடியும். இனி நம் தெரிஞ்ச உறவுகளுக்குத்தான்  நீயும், நானும் ஜானகி பார்த்து கல்யாணம் செய்து வைத்த  தம்பதிகள். வீட்டுக்குள்ளே நீ யாரோ.! நான் யாரோ.. என்றவன் இன்று வரை அந்த நிலை மாறாது இருக்கிறான்.

மேகலாவுக்கு முதலில் ரணமாக மனது வலித்தது. நாளடைவில் ஜானகியின் அன்பை நினைத்து, அவளுடன் தனிமையில் இருக்கும் போது  "ரகு என்ன சொன்னாலும், ரகுவை என்றுமே உன் ஆயுள் பரியந்தம் புறக்கணித்து மட்டும் விடாதே!!" என்று தன்னிடம்  கண்டிப்பான அன்புடன் கேட்டுக்கொண்ட வார்த்தைகளுக்காகவும்  அவன் கோபங்கள்  தீர இன்னும் எத்தனை வருடங்களானாலும்  பொறுத்துக் கொள்ள தயாராக இருந்தாள்.

காலம்  ஒன்றுதான் யாரிடமும். எதுவும் சொல்லாமல்,  கேட்காமல். தன் வேலையை பார்த்தபடி  செல்லக் கூடியது. மேலும் சில வருடங்களை தன்னுள் விழுங்கிய திருப்தியில், அது ஒருவித அலட்சிய மனப்பான்மையுடன் நகர்ந்து கொண்டிருந்தது.

சமையலறை வாசலில் நிழலாடியது கண்டதும், காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த மேகலா தலைநிமிர்ந்து பார்த்தாள்.

அறையின் கதவை பிடித்தபடி நின்றிருந்தாள் ரகு.

ஏதாவது முக்கியமாக பேச வேண்டுமென்றால்தான் இப்படி எதிரில் வந்து நிற்பான் என்பதை உணர்ந்தவளாகையால், "என்ன?" என்பது போல அவனை பார்த்து கொண்டபடி இருக்கும் இடத்தை விட்டு ஓரடி முன் வந்து நின்றாள் மேகலா..

"நாளை காலை நாம் ஒரு விஷேடத்திற்குப் போகப் போகிறோம். ஜானகிக்கு நெருங்கிய உறவு. அவளின் மாமா மகனுக்கு  அறுபதாம் கல்யாணம். நம்மை கண்டிப்பாக வரச் சொல்லியிருக்கிறார்கள். அங்கு வந்து நம் விரிசல்கள் எதையும் காட்டாமல் நடந்து கொள்...!!" என்று அவள் விழி பார்க்காமல், ரகு சொன்ன போது  மேகலாவுக்கு கோபத்தை விட சிரிப்புதான் அதிகமாக வந்தது.

" என்றைக்கு இந்த விரிசல்களை வெளியில் காட்டி யார் வந்து "சரி செய்யவா?" என்று கேட்டிக்கிறார்கள். என்னறைக்கு உங்கள் மனம் மாறும்..! விரிசலென்று நீங்கள் நினைப்பது  வெறும் கீறல்தான்... அதுவும் நீங்களாகவே போட்டு கொண்டு ஆற விடாமல், பத்திரமாக ரணத்தை அழகு படுத்தி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்." என்று சொல்ல வேண்டும்  போலிருந்ததை அடக்கியபடி, "சரி" என்றாள்.

மறுநாள் அந்த விஷேடத்திற்கு தன்னை சாதாரணமாகவே அலங்கரித்து கொண்டவளுக்கு, தீடிரென" ரகு என்ன சொல்வானோ? "என்ற ஐயம் வந்தது. எனவே அவன் அறை வாசலுக்கு வந்தவள்,  "இது போறுமா? இல்லை.. ஏதேனும் பட்டுப் புடவை உடுத்திக் கொள்ள வேண்டுமா? என கேட்க வந்தவள் அவன் என்ன சொல்வானோ என்ற  நினைப்பில் பேசத் தயங்கி நின்றாள்.

அன்றைக்கென்னவோ அவள் நிலை உணர்ந்தவன் மாதிரி அவளை சற்று ஏறெடுத்துப் பார்த்தவன்," இது பழசாக தெரிகிறதே..! ஏதேனும் பட்டுப்புடவையாக கட்டிக் கொள்ளேன். "என்ற அவன் குரலில் இத்தனை வருடங்களாக இல்லாத ஒரு சிறு நெகிழ்ச்சி மேகலாவை வானத்திற்கு மேலாக பறக்க வைத்தது.

தன்னறைக்குள் புகுந்ததும் அவனின் கரிசனம் மிகுந்த சின்னப் பேச்சு அவளைச்சுற்றி தட்டாமாலை ஆட, திருமணமானதிலிருந்து அவனுடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு சந்தோஷத்தை அடைந்த திருப்தி எழுந்தது.  பரபரவென்று தன் திருமணத்திற்கு ஜானகி வாங்கித் தந்த புடவையை கட்டிக் கண்டதும், ஜானகியின் அன்பான அரவணைப்பு தன்னை சுற்றி வியாபிப்பதை உணர முடிந்தது. கண்கள் கலங்க  மேஜையிருந்த ஜானகியின்  போட்டோவை ஒரு நிமிடம் பார்த்தவள், "என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அக்கா"என்றபடி கீழே விழுந்து நமஸ்கரித்தாள். அப்போது அறை வாசலுக்கு வந்து அகன்ற ரகுவை அவள்  சற்றேனும் கவனிக்கவில்லை.

அறுபதாம் கல்யாணம் வைதீக முறைப்படி ஜாம் ஜாமென்று நடந்து கொண்டிருந்தது. ரகுவிற்கும்,  மேகலாவிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்த சந்தோஷத்திலே ரகுவிடமும் ஒரு முக மலர்ச்சி உண்டானதாக மேகலாவுக்கு தோன்றியது. தன்னுடைய இயல்பான சுபாவத்தில் அவளும் ஜானகியின் உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திக்  கொண்டு, கலகலப்பாக அவர்களுக்கு உதவியாக  அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தாள்.

அவ்வப்போது ரகுவின் பார்வையில் இவள் பார்வையும் படும் போது "இதுதான் இவனுடன் திருமணத்திற்கு பின் முதன்முதலாக சேர்ந்து வந்திருக்கும் விஷேசம்" என்ற எண்ணம் மேகலாவுக்கு வரவும் அவளின் உற்சாகமான முகம் இன்னமும் சற்று மலர்ந்து காணப்பட்டது.

"இவன் நம்ப ஜானகியின் புருஷன் ரகு தானே... !  பாவம் ஜானகி! இந்த சின்ன வயசுலே அவள் பட்ட கஸ்டமிருக்கே அப்பப்பா ... ஆனா  அவ ரொம்ப பொறுமைசாலி... அவ பொறுமைக்கு கடவுள் ரொம்பவும் அவளை பாடாபாடு படுத்திட்டான்.. !"

"ஆமாம்... அவனேதான்... !   அந்த கடவுள் மட்டுமா? அவ உயிரோடு இருக்கும் போதே இரண்டாம் கல்யாணம் பண்ணி கிட்டவன்தானே இவன்... ! இவன் ஒருத்தன் போதாதா அவ பொறுமையை சோதிக்கறதுக்கு...?"

" என்னமோ அவளே இவனை நிர்பந்த படுத்திதான் கல்யாணம் பண்ணி வைச்சதா கேள்விப் பட்டேனே? "

ஆமாமாம்...! அப்படித்தான் நானும் கேள்விப் பட்டேன். ஆனா அந்த  மாய்மால காரி இருக்காளே...!  அவ என்ன பொடி போட்டு மயக்கிட்டு ஜானகியை அப்படிச் சொல்ல வைத்தாளோ ? யாரு கண்டா?"

" இப்ப அவளும் வந்திருக்காளா? நா அவளை பார்த்ததே இல்லை...!

" அதோ..! நீலகலர்லே பட்டு புடவை கட்டிண்டு  ஏதோ ஜானகிக்கு உறவு மாதிரி வர்றவங்க எல்லோர்கிட்டேயும்  சகஜமா பேசிக்கிட்டிருக்காளே அவதான்..!" 

இவளுக்காவது ஏதாவது குழந்தை குட்டி பிறந்திருக்கா ? 

" எங்கே. .! அவளுக்கு செஞ்ச  துரோகத்துக்கு இவளுக்கு ஒரு குழந்தை பிறக்குமாக்கும்...! ஜானகியே குழந்தையா வந்து பிறக்கனும்னு கடவுள் ஆஞ்கையிட்டு சொன்னாகூட  ஜானகியே வேண்டாம்னு சொல்லிடுவா.. அந்த அளவுக்கு இவ மேலே அவளுக்கு கோபம் இருக்குமாக்கும்...!" 

ரகு அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாய் சடாரென எழுந்தான். வெறும் வம்பு பேசி அரட்டை அடிப்பதற்காக வந்த அந்த உறவுகள் யாரென்று தெரியவில்லை. தான் ஏதாவது பேசி அசம்பாவிதம் ஆகிவிடக் கூடாதென்பதற்காக அந்த இடத்தை விட்டு நகர்ந்தவனுக்கு அவர்களை பார்க்கவே பிடிக்கவில்லை. வேறு இடம் தேடி வந்து அமர்ந்தவனுக்கு உள்ளூர கோபம் அடங்கவில்லை.

ஜானகியை பற்றி புரிந்து கொள்ளாமல் என்னவெல்லாம் பேசுகிறார்கள்.?  அவள் இஸ்டமில்லாமலா நான் மேகலாவை திருமணம் செய்து கொண்டேன்? அவளா அவனுக்கு குழந்தையாக வந்து பிறப்பதை வேண்டாமென்று மறுக்கப் போகிறவள்.. ! சே..! நாக்கில் நரம்பில்லையென்றால், இப்படி பேச இவர்களுக்கு எப்படி மனசிலும், ஈரங்கள் இல்லாமல் போயிற்று? ஏதேதோ சிந்தனையில் கண்கள் மேகலாவை தேடின.

"ஏன்..! உன் மனதில் மட்டும் ஈரம் இருக்கிறதா?  நீ அவளை என்னவெல்லாம் பேசியிருப்பே..! அத்தனையும் தாங்கிக் கொண்டு நீ என்னைக்காவது மாறுவேன்னு அவ பொறுமையா இல்லையா?  பாவம் அவள்...! இனியும் நீ இப்படி நடந்துக்க கூடாது." 

உண்மைதான் ஜானகி... நான் செய்றது தப்புதான்....! 


ரகுவின்  அருகில் அமர்ந்திருந்த மற்ற இருவர் ஏதேச்சையாக அவர்களுடைய  குடும்பத்தைப் பற்றி பேசியது அவனுடைய கன்னத்தில்  அறைந்த மாதிரியிருந்தது.

இங்கும் தன்னருகில் அமர்ந்திருந்த யாரோ இருவர் தனக்காகவே பேசின மாதிரி தன் சிந்தனைக்கு தக்கபடி பேசியது தன் ஜானகியே வந்து பேசின மாதிரி இருந்தது ரகுவுக்கு. இப்போது அவன் கண்கள் தன்னையறியாமல் மேகலாவை விரைந்து தேடின.

"ஆமாம்.. இவள் எனக்கு என்ன குறை வைத்தாள்? என்னிடமும், ஜானகியிடமும் பாசமாக இருக்கதான் செய்தாள். நான்தான் இவள் அன்பை உதாசீனபடுத்தினேன். இதோ..! இன்று வரை ஜானகியை  துளியேனும் மறக்காது, காலையில் கூட அவளிடம் மானசீகமாக பேசி, ஆசிர்வாதம் வாங்கி அவளை அன்புடன் நன்றியோடு நேசித்துதானே  வருகிறாள். நான்தான் அவளை புரிந்து கொள்ளாமல் வார்த்தையால் கொன்றேன். அப்போதும் அவள் என்னை வெறுக்கவில்லை.  என்னிடம் அவளை ஒப்படைத்துக  சென்றதற்காக ஜானகியையும் ஒரு போதும் குறைச் சொன்னவளுமில்லை.. எல்லா தப்புமே என்னிடமிருந்துதான் ஆரம்பித்தன. "

" நான் "வா" வென்று அதிகாரமாக  அழைத்து வந்த இடத்திலும் எத்தனை முக மலர்ச்சியோடு எதைப் பற்றியும் நினைக்காமல், ஜானகியின் உறவுகளோடு பேசி பழகுகிறாள். இவளை நானே புரிந்து கொள்ளாமல் இருக்கும் போது, பொழுதைப் போக்க இங்கு வந்து வம்படிக்கும் கூட்டம் எப்படி புரிந்து கொள்வார்கள்.? "

சுற்றும், முற்றும் பார்த்து கூட்டத்தில் அவளைத் தேடினான் ரகு.

அதோ..! அந்த சிதறியிருக்கும் மலர்களை  கைகளால் அப்புறப்படுத்திக் கொண்டு மற்றொரு கையில் ஒரு அழகான கெண்டியை வைத்தபடி இருக்கும் மேகலாவைக் கண்டதும், ஜானகியின் வெள்ளி கெண்டியும் அதை சுற்றி படர்ந்திருந்த அவளது கனவுகளும் நினைவுக்கு வந்தன. கூடவே அவளது சுபாவத்தை கேலி செய்து பேசிய  அந்த இரு பெண்மனிகளின் பேச்சுக்களும் காதுகளில் ரீங்காரமிட்டன.

விடு விடுவென எழுந்தவன் மேகலாவின் அருகில் போய் நின்றபடி, "வா..!  மேகலா...! வீட்டிற்குப் போகலாம்...!" என்றான்.

  தீடிரென அங்கு அவனைக் கண்டதும் ஒருநிமிடம் திகைத்துப் போன மேகலா, "என்னங்க. .! நீங்க சாப்பிட்டாச்சா? நானும் இதோ இதை அவர்களிடம் தந்து விட்டு  சாப்பிட்டுட்டு வந்திடுறேன்.. "என்றபடி நகரப் போனவளின் கையை பிடித்தான் ரகு.

அவன் ஸ்பரிசம் தந்த ஆச்சரியத்தில் மறுபடி திகைத்துப் போனவளை "இல்லை...! வேண்டாம். . வா.! நாம் வீட்டுக்கு போகும் வழியிலேயே எங்காவது ஹோட்டலில் சாப்பிடலாம்...! " என்றவன் அந்த கெண்டியை அவளிடமிருந்து வாங்கி அவள்  திரட்டிய மலர்களின் நடுவில் வைத்தவன்  "உன்னை இது நாள் வரை சித்திரவதை படுத்தியதற்கு மன்னித்து விடு. .!  இப்போது இந்த பூக்களுக்கிடையே இருக்கும் அழகிய மணத்துடன் ஒளி வீசும்  கெண்டியாக நான் உன்னை பார்க்கிறேன்...!" என்றான்.

அவள் ஒரு விதமாக விசித்திரத்துடன் தன்னை பார்ப்பதை உணர்ந்தவன், "என்ன இப்படி பார்க்கிறாய்? இன்று என் மனதை மாற்றுவதற்காகவே ஜானகி நம் இருவரையும் இங்கு சேர்த்து அனுப்பி வைத்திருக்கிறாள் என நினைக்கிறேன். "வா..! இவர்களிடம் போய் வருகிறோம்" எனச் சொல்லிக் கொண்டு, வீட்டுக்குப் போனதும் உனக்கு விபரமாக என் மனமாற்றத்தின் காரணத்தை கூறுகிறேன்." என்றபடி அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றவனை, எதையும் புரிந்து கொள்ளும் ஆற்றலை இறைவன் அளித்திருந்தும், புரியாமல் எதை எதையோ பேசி பிறர் மனதை  துன்புறுத்தும் ஆறரறிவு  படைத்த ஜீவன்களை  போலில்லாமல், தனக்கு ஜீவனில்லாவிடினும், தன்னை நேசித்தவர்களுக்கு பயனாக எந்நாளும், எக்காலமும் உழைத்தபடி இருக்கும் அந்த அழகிய கெண்டி மனமுவந்து , மனம் நிறைந்து வாழ்த்தியது.


கதை நிறைந்தது
.

இது எ. பி யில் நான் எழுதி வெளி வந்த கதை. இதன் கதாநாயகனை, அவனின் மாறுபட்ட  சுபாவங்களுக்காக வாசகர்களுக்கு கொஞ்சம் பிடிக்காமல் போய் விட்டது. ஆனால் அவன் தன் முதல் மனைவி ஜானகி பேரில் வைத்திருந்த அளவுகடந்த அன்பு காரணமாகத்தான், (அதை ஒரு விதமான எல்லைகளுக்கும் அப்பால் உள்ள பாசம் என்றும் சொல்லலாம்.) அவளால் தனக்கென மறுபடியும் வாய்த்த மறு மனைவியான மேகலாவை  ஏறிட்டு நோக்க இயலாமல் செய்து விட்டதாக சித்தரித்திருக்கிறேன். அதை அவளுக்கிழைத்த துரோகம் என நாம் சுலபமாக கூறி விடலாம். ஆனால் அந்த மறு மனைவியே அதை புரிந்து உணர்ந்து கொண்டவளாய் நடந்து கொண்டாள் எனில், அவளுக்கு அந்த முதல் மனைவியான ஜானகியின் பாலிருக்கும் நன்றி உணர்ச்சியை  (இதையும் நமக்குப் பிடித்தமான இறைவனிடம் காட்டும் ஒரு பக்தி நிலை எனக் கொள்ளலாம்.) நமக்கும் வெளிப்படுத்தி காட்டியுள்ளதாக அவளின் கதா பாத்திரத்தை சித்தரித்துள்ளேன். இப்படி மாறுபட்ட கதா பாத்திரங்களின் ஓட்டத்தில் கதை  முடிவை நோக்கி நகர்கிறது. இதை எபியில் படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்த அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். இங்கும் ஒரு வித்தியாசமாக, இல்லை என் பதிவில் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென பகிர்ந்துள்ளேன். இங்கும் படித்து கருத்திடும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏 

Sunday, April 5, 2020

ப(பி)டித்த கதை.

ஸ்ரீ ராம ஜெயம்.

தெரிந்த புராணம்…
தெரியாத கதை!

ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை, நம்மில் பலருக்குத் தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை.

ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர்…அனந்தன்

ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் வித்யாப்பியாஸம் செய்துகொண்டிருந்தான். அப்போது அவனுக்கு உற்ற நண்பன் ஒருவனும் இருந்தான். அவன் பெயர் அனந்தன். பரம ஏழையான அவன், வசிஷ்டரின் ஆசிரமத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான்.

குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஸ்ரீராம- லட்சுமண சகோதரர்களுக்குத் தொண்டு செய்வதில், அனந்தன் பேரானந்தம் கொண்டான். குறிப்பாக, ஸ்ரீராமன்மீது அவன் வைத்த பற்றும் பாசமும் அளவுகடந்ததாக இருந்தது. பதிலுக்கு அனந்தனிடம் ஸ்ரீராமனும் பேரன்பு காட்டினான். இருவரும் சேர்ந்து ஆனந்தராமனாக குருகுலத்தில் விளங்கினர்.

ஸ்ரீராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல், எழுத்தாணியைக் கூராக்குதல், வில்லைத் துடைத்தல், அஸ்திரங்களை எடுத்து வைத்தல், உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளை பெருமகிழ்ச்சியோடு செய்து வந்தான் அனந்தன். 

ஸ்ரீராமனை ஒருநாள் காணவில்லை என்றாலும், அவன் மனம் ஏங்கித் தவிக்கும். ‘சுதாமனும் கண்ணனும் போல’ வசிஷ்டருடைய குருகுலத்தில் அனந்தனும் ஸ்ரீராமனும் நட்பு கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வனத்துக்குச் சென்று, தர்ப்பைப் புல் பறித்து வரவேண்டியது அனந்தனின் கடமை. அதுபோல் ஒருமுறை அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்தான். அந்த நேரத்தில் ஸ்ரீராமனின் குருகுலம் முடிந்து, குருவிடம் விடைபெற்று சகோதரர்களுடன் அயோத்திக்குச் சென்றுவிட்டான். வனத்தில் இருந்து திரும்பி வந்த அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான். 

உடனே ஸ்ரீராமனைக் காண அவன் மனம் துடித்தது. உடனே புறப்பட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீராமனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே அவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போதுதான் மகரிஷி விஸ்வாமித்திரருடன் ஸ்ரீராமனும் லட்சுமணனும் யாக சம்ரக்ஷணத்துக்காக வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். 

துக்கம் அனந்தனின் தொண்டையை அடைத்தது. ஒன்றும் அறியாத பாலகனான ஸ்ரீராமன் கானகம் செல்ல நேர்ந்ததை எண்ணிக் கலங்கினான். ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பிய தசரதனையும், அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரரையும் மனத்துக்குள் கடிந்துகொண்டான்.

பாவம் ஸ்ரீராமன்! காட்டில் அவன் என்ன செய்வான்? அவனுக்கு யார் சேவை செய்வார்கள்? நித்திய கர்மங்களுக்கு தர்ப்பை, சமித்து போன்றவற்றை யார் சேகரித்துத் தருவார்கள்? இப்படியெல்லாம் அவன் மனம் தவித்தது. எப்படியும் ஸ்ரீராமனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான் அனந்தன். 

தன் குரு வசிஷ்டரிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல், நேராகக் காட்டை நோக்கிச் சென்றான். அடர்ந்த காட்டில், ‘ராமா… ராமா…’ என்று கதறிக்கொண்டு, ஸ்ரீராமனைத் தேடி அலைந்தான். காட்டில் வழி தவறி, ஒரு இருண்ட பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்டான். அங்கே… பல நாட்கள் ஸ்ரீராமனைத் தேடியும், அவனைக் காணாமல் அனந்தனின் மனம் வாடியது. ஸ்ரீராமனைக் காணாமல் ஊர் திரும்பவும் அவனுக்கு விருப்பமில்லை. ‘ராமா… ராமா…’ என்று ஜபித்துக்கொண்டு, அன்ன ஆகாரமின்றி, அந்தக் காட்டிலேயே ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்தான். அவன் அமர்ந்த இடத்தில், அவனை மூடியவாறு புற்று வளர்ந்துவிட்டது. ஆனால், அவனது ‘ராம’ ஜபம் மட்டும் நிற்கவில்லை.

காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. இதற்கிடையில், ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நிகழ்ந்து முடிந்திருந்தன. விஸ்வாமித்திரரின் யாகத்தை முடித்துக் கொடுத்து, சீதையை மணம் முடித்து, தந்தை சொல் காக்கக் கானகம் சென்று, சீதையைப் பிரிந்து, அனுமனின் உதவியால் அவள் இருக்கும் இடம் அறிந்து, இலங்கை சென்று ராவண சம்ஹாரம் செய்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியிருந்தான் ஸ்ரீராமன். அவன் பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இத்தனை நடந்ததும், அது எதுவும் தெரியாமல் புற்றுக்குள் ‘ராமா… ராமா..’ என்று தவமியற்றிக்கொண்டிருந்தான் அனந்தன்.

ஸ்ரீராமனின் பட்டாபிஷேகத்தைக் காண பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களும், மன்னர்களும், மகரிஷிகளும் அயோத்திக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது காட்டு வழியே சென்று கொண்டிருந்த சில மகரிஷிகள் ‘ராம’ நாமத்தைப் பாடிக்கொண்டே சென்றனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு அனந்தன் தவமியற்றிக்கொண்டிருந்த புற்று இடிந்தது. அனந்தன் தவம் கலைந்து எழுந்தான். ‘ராமா… ராமா… எங்கிருக்கிறாய் என் ராமா?’ என்று கதறினான். 

காலச் சுழற்சியினால் தனக்கு வயதாகியிருப்பதைக்கூட அவன் அறியவில்லை. பல ஆண்டுகள் முடிந்துபோனதையும் அவன் உணரவில்லை.

இன்னும் குழந்தைபோல ஸ்ரீராமனைத் தேடினான். அப்போது மகரிஷிகள் கூட்டத்தில் ஒருவர், அவன் யாரென்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனுக்கு ஆறுதல் கூறினார். ஸ்ரீராமன் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதையும், அதற்காகவே எல்லோரும் அயோத்தி செல்வதையும் அனந்தனுக்குத் தெரிவித்தார். ராமனுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கேட்டு கண்ணீர் வடித்தான் அனந்தன். இருந்தாலும், ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போகும் செய்தி அறிந்து, அதைக் காண மகரிஷிகளுடன் அயோத்தி புறப்பட்டான்.

அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று பட்டாபிஷேக நாள். எங்கும் வேத கோஷமும், மங்கல இசையும் முழங்கிக்கொண்டிருந்தன. குல குரு வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முதலானோர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருந்தனர். மக்கள், மன்னர்களுடன், தேவர்களும் தேவ மாதர்களும் அங்கே வந்திருந்தனர்.

ஸ்ரீராமன் அதிகாலையிலேயே மங்கல நீராடி, ஆடை அணிகலன்கள் அணிந்து, தன் குலதெய்வமான சூரிய தேவனையும், தாயார் மூவரையும் வணங்கி, கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான். அப்போது எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும் வகையில் உரத்த குரலில், ”அடே ராமா! இத்தனை காலம் எங்கிருந்தாயடா? உன்னை எத்தனை காலமாய் தேடுகிறேனடா?” என்று குரல் கொடுத்தபடியே ராமனை நோக்கி ஓடி வந்தான் அனந்தன்.

 ராமனை இறுகத் தழுவிக் கொண்டான்.
கந்தல் உடையில், ஜடா முடியுடன் பரதேசிக் கோலத்தில் பாமரன் ஒருவன், ‘அடே ராமா’ என்று கூவி அழைத்தது கண்டு, அவையினர் அதிர்ச்சியுற்றனர். ‘எவனோ பைத்தியக்காரன் இவ்வாறு செய்கிறான்’ என்று கோபத்துடன் காவலர்கள் அவனைப் பிடித்திழுக்க விரைந்தபோது, ஸ்ரீராமன் அனந்தனை நெஞ்சாறத் தழுவி, அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, ”என்னை மன்னித்துவிடு அனந்தா!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.

”உன்னிடம் சொல்லிக்கொள்ளாமலே குருகுலத்தில் இருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம் அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன். என் தவற்றை மன்னித்துவிடு” என்று மீண்டும் சமாதானம் செய்தான். அதைக் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டனர். தன்னைப் போலவே தன் பிரபுவிடம் பக்தி செலுத்தும் மற்றொரு பக்தன் இருக்கிறான் என்றெண்ணிப் பூரித்த அனுமனின் கண்களிலும் நீர் சுரந்தது.

அப்போது வசிஷ்டர், ”ராமா… இவர் யார்?” என்று கேட்க, ”தெரியவில்லையா குருதேவா? இவன் என் பள்ளித் தோழன். தங்கள் குருகுலத்தில் சேவை செய்த சீடன் அனந்தன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப் ‘பிரபு’ என்றும் ‘மகாராஜா’ என்றும்தான் அழைக்கிறார்கள். என்னை ‘அடே ராமா’ என்று அழைக்க என் தந்தை தசரதன் இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன் மூலம் என் தந்தைக்கு நிகரானவன் ஆகிவிட்டான் இந்த அனந்தன்!” என்று கூறினான் ஸ்ரீராமன். வசிஷ்டரும் அனந்தனைக் கட்டித் தழுவி ஆசீர்வதித்தார். எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!

”இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து, இடையறாமல் என் நாமத்தை ஜபித்து, என்னைத் தேடிக் கண்டடைந்த இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறிய ஸ்ரீராமன் அனுமனை நோக்கி, ‘உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கௌரவம் தரலாம்?” என்று கேட்டான்.

”பிரபு! தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என்று கூறினீர்கள். தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு, இவரை அதில் அமர்த்தி மரியாதை செய்வது இவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை!” என்று கூறினான் அனுமன். எல்லோரும் அதை ஆமோதித்தனர்.

இத்தனை பெரிய மரியாதைக்குத் தான் தகுதியானவனா என்றெண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். அவன் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்து, பாத பூஜையும் செய்தான் ஸ்ரீராமன். அதன் பின்பே, ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் ஆரம்பமானது.

ராமாவதாரத்தில் பகவானின் அன்பினால் கட்டுண்டு ஆனந்தமடைந்த அனந்தனே, ஒருவேளை அதே பேரானந்தத்தை மீண்டும் அனுபவிக்க கிருஷ்ணாவதாரத்தில் குசேலனாக வந்தானோ என்று தோன்றுகிறது அல்லவா?!

🙏ஸ்ரீ ராம ! ஜெய ராம !
 ஜெயஜெய ராமா !🙏


இது வாட்சப்பில் எனக்கு வந்த கதை. இந்த கதை எனக்குப் புதிது. ஸ்ரீராம நவமி அன்று இரவு ஒரு 9 மணி வாக்கில் நான் படிக்க நேர்ந்தது. அன்று மாலை வரை என்ன எழுதுவது என நான் சற்று குழம்பிய நேரத்தில் இது வந்ததை கவனிக்க விடாமல், கொடிய கொரோனாவிற்காக பிரார்த்தனை செய்து என்னை எழுத வைத்தார் ஸ்ரீ ராமர். இல்லாவிடில் இதையும் என்னை பகிர வைத்திருப்பாரோ என்னவோ..!  எல்லாம் அவன் செயல் அல்லவா?. 🙏. இதைத்தவிர நம் கைகளினால் வேறெதும் பலனில்லை. 

இதை ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லை என்றால் இந்த மாதிரி வாட்சப்பில் வந்து படித்திருக்கலாம். இதை என் பதிவிலும்  பகிர ஆசை வந்து அன்புடன் பகிர்ந்தும் விட்டேன். இங்கு  இதைப் படிப்பவர்களுக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

Friday, October 25, 2019

பேய் வகைகள்....

நான்..

" ஆவி என்றால் பேய்தானேப்பா?" என்றான் என் மகன் விவேக்.

ஆமாம்..! அதற்கென்ன இப்போது? அர்த்த ராத்திரியில் இப்படி பிதற்றாமல் படுத்து தூங்கு..! என்றேன் சிறிது கண்டிப்பாக.

இல்லேப்பா.. ! சூடான காஃபி, டீ, ஏன் சமைக்கும் பொருட்களிலிருந்து பிரிந்து வெளிப்படும் புகையை "ஆவி பறக்குது" என்கிறோம். அது போல் உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அதையும் "ஆவி" பிரிந்து விட்டது என்கிறோம். அதனால்தான் அப்படி பிரிந்த "ஆவிகள்" புகை மாதிரி வடிவில் வந்து உலாத்துகிறதோ?  அதைத்தான் பேய்கள் என நாம் பெயர் வைத்து அழைக்கிறோம்.. இல்லையா? தன் கண்டு பிடிப்பில் அப்பா அசந்து சிக்கி விடுவார் என்ற நம்பிக்கையுடன் அவன் பேசினான்.

எனக்கும் லேசாக கண்ணெதிரே புகைகள் வருவது மாதிரி ஒரு நிமிடம் தோன்றியது.

"வேண்டாம் இந்த ஆராய்ச்சி..!  எப்போதும் இதைப்பற்றிய பேச்சா? இப்போது இரவு நடுநிசியை எட்டிப் பார்க்கிறது. பேசாமல் தூங்கு...! என்னை தொந்தரவு செய்யாதே..! என்றபடி திரும்பி அவனுக்கு முதுகை காட்டியபடி படுத்துக் கொண்டேன்.

இவன் இப்படித்தான்.. !  சிறு வயதில் ஏதோவொரு பயங்கரமான பேய் கதையை நண்பனின் உறவு யாரோ அருமையாக சொன்னார்கள் என என்னிடம் அதைவிட பயங்கரமாக வந்து சொன்னதோடு நிறுத்தாமல். மேலும், மேலும் என்னையும் அந்த மாதிரி கதைகளை சொல்லச் சொல்லி வறுப்புறுத்தினான்.

நானும் குழந்தை ஆசைப்படுகிறானே என்று எனக்குத் தெரிந்த பேய்களை யெல்லாம் உதவிக்கு அருகில் அமர்த்திக் கொண்டு, கற்பனை சாற்றையும் கதையெனும் கலவையோடு கலந்து வைத்துக் கொண்டு ஓரிரு தடவைகள் சொல்லியிருக்கிறேன்.

ஆனால், என் கதையே சிலசமயம் நான் தனியே இருக்கும் போது வந்து பயமுறுத்தி, எக்காளமிட்டு, முகத்தோடு முகம் வைத்து உரசிச் செல்வது போல் பிரமை கொடுத்து தோள் தட்டி ஆரவாரப்படுத்தி, தனியே வீட்டிலிருக்கவும் விடாமல், வீட்டிலிருந்து வெளிப்பட்டு வெளியுலக ஜனசந்தடியில் கலந்த பின் வெறுப்புடன் அடங்கிப் போகும். அது வேறு கதை...!

வளர வளர அவனுடன் பேயும் வளர்ந்தது. (அதாவது பேயைப்பற்றிய சிந்தனைகள்) அதற்கு நம்மைப்போல் கால் உண்டா? கால் இருந்தால், அது நடந்து வராமல் ஏன் பறந்து வருகிறது? இல்லை.. அது பறக்கும் போது நமக்கு இல்லாத அந்த சிறகை விரிக்குமா ?  பேய் வருதற்கு முன்பு ஏன் காற்று பயங்கரமாக அடிக்கிறது? காற்று பேயின் தூதனா? இல்லை விசுவாசியா? இல்லை, காற்றுக்கும் பேயைக் கண்டால் பயமா? அதுதான் அதற்கும் முன்னாடியாகவே ஓடி வந்து அச்சுறுத்தி ஒளிகிறதா?

 ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு பேய்கள் வரும் முன் அந்த வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகள், திரைச்சீலைகள் என அனைத்தும் ஏன் படபடக்கிறது? அவற்றுக்கெல்லாம் பேயின் அறிகுறி கண்ணுக்கு புலப்படுமா ? அப்புறம் ஏன் அதையெல்லாம் உயிரற்ற பொருட்கள் எனச் சொல்கிறார்கள்?

இதெல்லாம் அவனிடமிருந்து என்னை தினசரி  துளைத்த கேள்விக் கணைகள்.  பொதுவாக பிறப்பிலேயே" புதன்"  உச்சத்திலிருந்தால் அறிவாளி என்ற ஜோதிடத்தின் கூற்றையும் என்மகன் மெய்படுத்தினான். படிப்பிலும் நன்றாக கவனம் செலுத்தி பள்ளியில் முதன்மையானவனாக விளங்கியதால், அவனை கண்டிக்காது,  அவனின்  "புதனருளால்" வந்த "கேள்விகளுக்கும்" தக்கபடி எனக்குத் தெரிந்த பதில்களைக் கூறி, சிலசமயம் தெரியாத கேள்விக்கு கோபத்தை அடக்கி வாசித்து அவனின் ஆராய்ச்சித் துறையை வளர்த்து வருவதில் நானும் ஒரு பங்காகியும் அங்கம் வகித்தேன்.

இப்போது பள்ளி முடிக்கும் தறுவாயிலும், தொணதொணவென்ற அவனின் கேள்விகள் பழக்கமாக விட்டதெனினும், "இவன் இன்னமும் நன்றாக வளர்ந்து நல்லதொரு நிலைமையை எட்டிப்பார்த்து பிடிக்க வேண்டுமேயென்ற உண்மையான தந்தை பாசம்... வாட்டிப்பார்க்க சற்று கடுமை காட்டி  அவனிடமிருந்து வரும் கேள்விகளுக்கு இப்படி முகம் திருப்பிப் போகச் செய்தன." என் புறக்கணிப்புகள்.

கொஞ்சம் போல மறுபடியும் அவனை திரும்பி பார்த்ததில், அவன் விழித்துக் கொண்டு ஏதோ சிந்தித்து கொண்டிருப்பது புரிந்தது. "விவேக்..! இப்போ தூங்கப் போறியா இல்லையா?  என  மறுபடியும் சிறிது கண்டிப்பு காட்டியதும் அவன் மறுபக்கம் திரும்பி படுத்து தூங்க ஆரம்பித்தான். அவனுடைய கேள்விகளின் தாக்கத்தில், கதவையும் ஜன்னல்களையும் பார்த்தபடி இயல்புடன் வந்த தூக்கமும் வராமல், பேய்களின் வரவை எதிர்பார்த்தபடி  கழித்த எத்தனையோ நாட்களில்,  அன்றும் ஒரு நாளாக  ஐக்கியமாகி சேர்ந்து கொள்ள அன்றைய தூக்கத்தையும் தொலைத்தேன்.

விவேக்...

அம்மா இல்லாத என்னை அப்பா நல்லபடி அம்மாவுக்கும் அம்மாவாக இருந்து பார்த்துக் கொள்கிறார் என்பதை நானும் அறிவேன். நானும் ஏதேதோ அசட்டுத்தனமான கேள்விகள் கேட்டாலும் எல்லாவற்றும் பொறுமையாக பதில் சொன்னபடி என்னையும். என் தேவைகளையும் கவனித்தபடி, தானும் அலுவலகம் சென்று தன்னையும் பார்த்துக் கொண்டு அப்பா இஸ் கிரேட்.. என் படிப்பு பாதித்து விடக்கூடாதே என்பதுதான் அப்பாவின் மொத்தக் கவலை. ஆனால் எனக்கு படிப்பின் மீது அக்கறை எதுவும் குறைந்து விடவில்லை.

மதுரை அருகே ஒரு கிராமத்தில் என் சிறு வயது பிராயம் நடந்து கொண்டிருந்த போது அம்மாவுக்கு உடம்பு முடியாமல், இருந்தது. . ஏதேதோ சிகிச்சைக்கு பிறகு ஒருநாள் அம்மா என்னையும்  அப்பாவையும் விட்டுச் சென்று விட்டாள். அம்மாவின் உடலை அனைவரும் தூக்கிச் செல்வதை பார்த்து நான் "அம்மாவை எங்கேப்பா கூட்டிப் போகிறார்கள்? இன்னொரு டாக்டர் வீட்டுக்கா?" என அப்பாவிடம் கேட்ட போது, "அம்மா குணமாகி மறுபடியும்  ஒருநாள் வருவாடா..! அது வரைக்கும் உன்னையும், வீட்டையும் என்னைப் பாத்துக்கச் சொல்லிட்டு போயிருக்கா.." அவ வர்ற வரைக்கும், எனக்கு நீதான் அம்மா... உனக்கு நான்... " என்று வார்த்தைகள் அடைக்கும் குரலில் கூறிவிட்டு அவர் வாய் விட்டு தேம்பி அழுதது இன்று வரை என மனதில் நிழல் படமாக பதிந்த ஒன்று.

வயது ஏற ஏற அம்மா வர முடியாத தூரத்திற்கு சென்று விட்டாள் என்ற மட்டும்  புரிந்தது. பக்கத்து வீட்டிலிருக்கும் பாட்டி வேறு " உன் அம்மா எதையோ பார்த்து பயந்து விட்டாளாடா...! அதனால்தான் உடம்பு தேறாமல் அதுகூடவே அவளும் சென்று விட்டாள்." என்னும் போது "அது யார் பாட்டி? சொல்லு... சொல்லு..! " என்ற என் தொணதொணத்த  கேள்விக்கு" வேற யார்? பேய்தானாடா" என்று சொல்லிய பிறகே இந்த என் தேடல் தொடங்கியது.

மேலும் என் கேள்விகளுக்கு பயந்தோ என்னவோ அந்தப் பாட்டியும் சொல்லிக் கொள்ளாமல்,  "அம்மா மாதிரியே"  ஒரு நாள் சென்று விட்டாள். நானும் என் பள்ளி மாணவர்களுடன்  "அம்மாவை அழைத்துச் சென்றப் பேயைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை கண்ட உறவுகளின் பேச்சுக்கு கட்டுப்பட்டதால்,  அப்பாவும் நானும்  என் மனமாற்றத்திற்காக இங்கிருந்து போய் விடலாம்" என்ற அவர்களின் யோசனைகளின்  பேரில், அந்த இடத்தை விட்டு அப்பாவுக்கு வேலை மாற்றல் கேட்டுக் கொண்டு இந்த ஊருக்கு வந்து விட்டோம்.

இங்கு வந்த பின்னும் என் நண்பன் வீட்டில் கேட்ட பேய் கதைகள் அடி மனதில் ஆழமாக பதிந்தவை. எப்படியும் "நான் பயமின்றி அந்தப் பேய்களைப் பற்றி தெரிந்து கொண்டு என் அம்மாவை அதனிடமிருந்து எப்பாடுபட்டாவது, மீட்டு அழைத்து வர வேண்டுமென்ற எண்ணம் என் வாழ்க்கையின் லட்சியமாக  மனதில் பிடிவாதமாக அமர்ந்து விட்டது."

நாட்கள் செல்ல என் அம்மா  "மரணம்" என்ற இடத்திற்கு சென்று விட்டதையும், மரணித்தவர்கள் மீண்டும் வர இயலாது என்பதனையும் மெள்ள மெள்ள உணர்ந்து கொண்டேன். ஆனாலும் அம்மாவை மீட்டு வர வேண்டுமென்ற எண்ணம் மட்டும் மாறவேயில்லை. அதன் விளைவே அவ்வப்போது பேயின் வாழ்க்கை குறித்த ஆராய்ச்சி.

அப்பாவும், என் படிப்பு வாழ்வின் நலன் குறித்து சற்றே கண்டிக்க ஆரம்பித்து விட்டார். "சின்ன குழந்தையல்ல.. நீ..!  என் எதிர் காலத்தின் வாரிசாக கடவுளால் நியமிக்கப்பட்டவன். உனக்கென  ஒரு வாழ்வு, அதனைக்குறித்த தேடல் என வாழ்க்கை சக்கரத்தை விரிவாக்கி கொள்ள வேண்டுமேயன்றி, கடந்ததை, கடந்து கொண்டிருப்பதை "மனப்பேயின்" காலடியில் சமர்ப்பித்து, அப்பேயின் வலைக்குள் சிக்கி விடாதே... !" என்ற அறிவுரைகளை வழங்க ஆரம்பித்து விட்டார்.

என்றாலும். அம்மாவை நினைவு கூறும் சஞ்சலங்கள் பேய் ஆராய்ச்சியின் வடிவில் வடிகாலாக சிறு சிறு சமயங்களில் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கிறது.. அவ்வேளையில் அப்பாவிடம் இந்த மாதிரியான பேய்களின் சாராம்சத்தை பற்றி இரவு, பகல் பாராது பேச தூண்டுகிறது. அப்பா சொல்படி மாற்றங்கள் நடந்தால் நல்லதுதான்..!

நான்...

நான் நினைத்தபடி விவேக் பள்ளி இறுதியாண்டில் மாநிலத்திலேயே முதலானவனாக தேர்ச்சிப் பெற்று  கல்லூரி படிப்பை நல்லபடியாக முடித்து  வேலைக்கு அமர்ந்து கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான். அவனிடமிருந்த பழைய ஆராய்ச்சி குணமெல்லாம் பள்ளிப்படிப்பை முடிக்கும் சமயத்திலேயே அவனிடமிருந்து விலகியே விட்டது. அதற்கு காரணமாக இருந்த என் நண்பனுக்குதான், நான் நன்றி சொல்ல வேண்டும்.

"உன்னிடம் தனிமையில் பேசும் போதெல்லாம், பேய் பிசாசுகள் பற்றிப் பேசும் உன் மகன் மனதில் ஏதோ ஆழமான காயம் உள்ளது. அதனுடைய தாக்கந்தான் அவன் நண்பர்கள், படிப்பு, விளையாட்டு, உன்னுடனான நேரங்களை சந்தோஷமாக செலவில் என்று போக, மிச்ச நேரத்தை உன்னுடன் அதைப்பற்றி பேசி உன் மூலமாக சமாதானமடைந்து கொள்கிறான்.
ஒரு அதிர்ச்சி வைத்தியமாக இப்படிச் செய்து பாரேன். .! " என்று அவன் சொன்ன வைத்தியத்தை செய்துப் பார்த்த பின் விவேக்கிடம் சற்று மாறுதல் தெரிய ஆரம்பித்தது.

முன்பு போல் கேள்விகளை, சிந்தனைகளை குறைத்திருப்பது தோன்றியது. நல்ல மதிப் பெண்கள் எடுக்க தன்னை தயார்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடு பட்டு, மனம் ஒத்த கருத்துக்களுடன் முன்னேறி, இதோ இன்று நல்ல இளைஞனாக வளர்ந்திருக்கிறான். இவனுக்கு இப்படியே ஒரு திருமணத்தை முடித்து விட்டால் தந்தையாக, தாயுமாக இருந்து வளர்த்த என் கடமை செவ்வனே முடிந்து விடும்....

என்னுடைய மனதின் பூரிப்பில் கண்கள் நிறைந்தது. என் பர்சில் வைத்திருந்த மனைவியின் படத்தைப் பார்த்து, "என் கடமையை செய்யும் நல்ல நேரத்துக்கு நீயும், இதுவரை எனக்கு துணையாக  இருந்தது போன்று, இனியும் துணையாக இருந்து அவனை ஆசிர்வதித்து  அவன் வாழ்க்கையை சிறக்க வை....!" எனக் கூறிய போது கண்கள் இன்னமும் நிறைந்தன.

இவன் நினைப்பில் அன்னையின் பிரிவு தெரிய கூடாதென்றுதான் அவள் நினைவுகளை உண்டாக்கும் அவளது புகைப்படத்தைக் கூட மறைத்து வைத்து வாழப் பழகியிருந்தேன். அவனும் இதுநாள் வரை அம்மாவைப்பற்றி எதுவும் கேட்க வில்லை. அவள் இறந்து போன போது அவளைப் பற்றி கேட்டதுதான்...! அதன் பின் இந்த  விளையாட்டாக பேய் கதைகள் கேட்டு, கேட்டு அவன் சிந்தனையின் போக்கையே வேறு பாதையில் திருப்பி விட்டது. இனி அனைத்தும் நல்லவிதமாகத்தான் நடக்கும். ஊர் உறவுகளுடன் பேசி உறவிலேயே பெண் பார்க்க ஆரம்பிக்க வேண்டியதுதான்...  !
.
விவேக்...

நான் இப்போது  நல்ல  ஸ்திரமான வேலையிருக்கிறேன் என அப்பாவுக்கு பெருமை பிடிபடவில்லை. என்னைப்பற்றி நண்பர்களிடமும்  உறவுகளுடமும் சிறப்பாகத்தான் எப்போதும் பேசுகிறார். இப்படிப்பட்ட அப்பாவை, எனக்காக வாழும் அப்பாவை அன்றைய தினம் இழக்கப் பார்த்தேனே..! இனி காணும் கனவுகளில் கூட இதை மாதிரி ஒரு அசட்டுத்தனமான கனவு வராமல் இருக்க வேண்டும்.

பள்ளி இறுதியாண்டு நடந்து கொண்டிருக்கையில்  இப்படித்தான் ஒரு நாள் தேர்வுக்குத் தேவையானதை படித்து முடித்து படுதுறங்கப் போகும் நள்ளிரவு அப்பாவிடம்  இந்த பேய்கள் சம்பாஷணை நடத்தி விட்டு கண்ணயர்ந்த கொஞ்ச நேரத்தில், என் முன் வந்து அன்பாக ஏதேதோ பேசியபடியிருத்த  அப்பாவே தீடிரென ஒரு கொடுர பேயாக மாறி காட்சியளித்தார்.

அவர் முகம் படு விகாரமானதை நான் புரிந்து கொள்வதற்குள், "எப்ப பார்த்தாலும் பேய் பற்றியே பேசுகிறாயே..! பேய் எப்படியிருக்கும் என்று கேட்டாயே..! பார்த்துக் கொள். நான் ஒரு  பேயாக மாறிவிடுகிறேன். உனக்கு பேயின் கை வேண்டுமா? அல்லது காலா? இல்லை கண்களா? என்றவர் ஒவ்வொரு அங்கமாக அவர் உடலிலிருந்து பிய்த்து எடுத்துத் தந்தவர், இந்தா...! இதையும் வைத்துக் கொள். என கண்கள் இருந்த இடத்தில் ஒட்டையாக இருந்த தலையை திருக்கி ரத்தமும் சதையுமாக என்னிடம் தந்ததும், வாய் விட்டு அலறி விட்டேன். "அப்பா... அப்பா.. நீங்கள் அப்பாவாக மட்டும் எனக்கு எப்பவுமே இருந்தால் போதும். நீங்களாவது என்னுடன் எப்போதும் இருங்கள். அம்மாதான் பேயாக மாறி என்னை விட்டு போய் விட்டாள் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது கொண்டே இருக்கிறது. இப்படி நான் தினமும் பேயைப் பற்றி பேசிப்பேசி நீங்களும் பேயாக மாறி விட்டீர்களா? இனி உங்களிடம் இதைப்பற்றி பேசவே மாட்டேன்." என்று நான் வாய் விட்டு கத்தியதெல்லாம் தொண்டைக்குள் சிக்கி தடுமாறியபடி நெஞ்சையடைக்க, கண் விழித்ததும், அருகில் அப்பாவை காணாது, எதிரே மறுபடியும் ஒரு பேயுருவம்  கோரமாக கைகளை விரித்தபடி அருகில் வரவும், மீண்டும் அலறி, நான் படுக்கையில் விழுந்ததுதான் தெரியும்.

மறு நாள் அப்பா அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு அழைத்துப் போய் பூசாரியிடம் முகத்தில் நீர் தெளிக்க வைத்து, வீபூதி குங்குமமிட்டு "உங்கள் பையன்  எங்கோ பயந்திருக்கிறார். மூன்று தினங்கள் அம்மன் அபிஷேக நீர் தெளித்தால் சரியாகி விடும்." என்று அவர் பயமொன்றுமில்லை எனச் சொன்னதை நினைத்து  சந்தோஷமடைந்து கொண்டார்.

நானும் என் கனவை, கனவுக்கு பின் கண் விழித்ததும் பார்த்ததை எதுவுமே அப்பாவிடம் சொல்லவில்லை. அவரும் "எங்கு எப்படி பயந்தாய்..?  என்ற விபரம் கேட்கவில்லை. என்னைப்பார்த்ததும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென அவருக்கு  தோன்றியுள்ளது." ஏன்?"என நானும் கேட்கவில்லை. எனக்கும் அநாவசியமாக அவரை பயமுறுத்த விருப்பமில்லை. இப்படியாக அந்த சம்பவம் நடந்து முடிந்த பின் நான் படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த, இதோ...! இன்று முழு மனிதனாக வளர்ந்து நிற்கிறேன். அப்பாவும் என் திருமணதிற்கு சம்மதம் கேட்க. நானும் சரியென்றதில், பெண் பார்க்கும் படலங்கள் ஆரம்பித்துள்ளன.

 நான்..

நல்லபடியாக ஜாம்ஜாமென்று விவேக்கிற்கு திருமணம் செய்து விட்டேன்.  உறவிலேயே, அவனுக்கு ஒன்று விட்ட அத்தைப் பெண்.  இரு மனம் கூடி கலந்து பேசி திருமணத்திற்கு மனம்  ஒத்து என் மருகளாய் வந்தாள் என் தங்கை பெற்ற அன்பு மகளாம் காவேரி. .

அன்பும், அனுசரனையும், அவள் இரு கண்களாக இருக்கக்கண்டு என் மனம் உவகையடைந்தது. கிராமத்தில் படித்து வளர்ந்து வந்ததால் அந்த பண்பாடு விவேக்கை  இன்னமும் வளர வைக்கும் என்ற நம்பிக்கை மனதுள் வேரூன்றியது.

இருவரும்  ஊர் உறவு விருந்துக்கு என்று சென்று திரும்பி வந்து தேனிலவும் சென்று வந்து விட்டு விவேக் பழையபடி அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டான். நாட்கள் நல்லபடியாக மருமகளின் அன்பான கட்டுக்கோப்பில் நகர்ந்து கொண்டிருந்தன.

தனிமை சிறையும்,  தனிச்சூழலும், மனைவி பிரிந்ததிலிருந்து விவேக்கை அண்டி அரவணைத்து வாழ்ந்த காலங்களை நினைவு படுத்தினாலும், "இனி இதுதானே அவனுக்கும், நமக்குமான வாழ்க்கைச் சுழற்சி. " என்பதையும் அடிக்கடி  ஞாபகப்படுத்தி ஒரு விதமான வருத்தத்தை மனதில் தேக்க வைத்துச் சென்றதையும் தவிர்க்க முடியவில்லை.

ஒரு விடுமுறை நாளின் மகிழ்வான காலைப் பொழுது. "விவேக் எங்கேமமா?" எழுந்து பல் துலக்கி மருமகள் சூடாக கொண்டு வந்து தந்த காஃபியை பருகியபடி கேட்டேன்." ஏதோ நண்பரைப் பார்க்க வெளியில் சென்று விட்டு வரும் நேரந்தான் மாமா..! என்றாள்." ஏன் ஏதாச்சும் பேசனுமா?"என்றவளிடம்," இல்லேம்மா உன் கிட்டேத்தான் பேசனும்.  விவேக் எப்படிம்மா? உன்கிட்டே நல்லபடியாக அன்பாக பேசி பழகுறானா? இதை நான் கேட்க கூடாது. அந்த மகராசி இருந்திருந்தா அவ எல்லாத்தையும் பாத்துப்பா..! ஆனா அவ இடத்திலேயும், நானே இருந்து அவனை வளர்த்ததாலே நானே கூச்சத்தை விட்டு கேட்கிறேன்...! என்றேன் தயக்கமாக.

"அதுக்கென்ன மாமா..! ஒரு குறையும் இல்லை எனக்கு.. ஆனா பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கை மரம் ஏறித்தானே ஆகனும்." அப்படீன்னு எங்கம்மா அடிக்கடிச் சொல்வாங்க.. ..! என்று அவள் சொன்ன பதில் என்னை திடுக்கிடச் செய்த ஒரு நொடியில்...

"ஆமாம்மாம்..! பேய் பிசாசை மறந்துடலாம்னு நினைக்கிற நேரத்திலே அதுவே மீண்டும் வந்து உன்னை மறக்க மாட்டேன்னு ஒட்டிக்கிட்டா நான் எந்த மரத்திலே ஏறுவதாம்" என்றபடி வெளியில் சென்றிருந்த விவேக் வரவும், மருமகளின் கண்களில் அப்பியிருந்த வெட்கம் கீழே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அவள் அவசரமாக உள்ளே ஒடினாள்.

என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்ட திருப்தியில், நான் செய்தி தாளில் மூழ்கும் போது, அவளைத் தொடர்ந்து சென்ற  விவேக்கின் சிரிப்பொலி உள்ளேயிருந்து கேட்டது. கூடவே துணைக்கு மருமகளின் சிரிப்பொலியையும் உடனழைத்து கொண்டது. இனி கவலையில்லை..! விவேக்கிற்கு அவன் தாய் மீண்டும் கிடைத்து விட்டாள். நிறைந்த மனது செய்தித் தாள்களை புறந்தள்ள, செருப்பை மாட்டியபடி, "நான் கொஞ்சம் காலாற நடந்து வருகிறேன் விவேக்...!" என்றபடி வாசல் படியிறங்கினேன்.

"கொஞ்ச நாட்களாக நான் அமைதியாய் இருப்பதாகவும், எனக்கு நானே என்னுள்ளேயே  ஏதோ பேசிக் கொள்வதாகவும்" என் நண்பரிடம் என் மகன் புகார் தந்து, "இந்த மாதிரி அவரைப் பார்த்ததேயில்லை..! அவரை பழையபடி சந்தோஷமாக பார்க்க நான் என்ன செய்ய வேண்டுமென ஐடியா கேட்டதாக " என் நண்பர் சொல்லவும், "என் கையில் ஒரு பேரனோ, பேத்தியோ வளர வந்து விட்டால் எனக்கு ஏது அமைதி? என்று நீ சொல்ல வேண்டியதுதானே. !" என நான் சொல்லவும், "இதை உன்னிடம் கேட்டா நான் சொல்லுவேன். அவனுக்கான இந்த பதிலை அப்போதே தந்து விட்டேனே...! " என்றார் கடகடவென்ற சிரிப்புடன்.

அவர்  விடைபெற்று சென்றவுடன் மனது லேசாக கனத்தது." அவன் கேள்விக்கு மற்றொரு பதிலும்  இப்போது என்னுள் இருக்கிறது என்று கூற தயக்கமாக உள்ளது நண்பா...!  உன்னிடம் கூட கூற முடியவில்லை. என்னே தானே பேசத் தூண்டுகிறது..! பேசவும் வைக்கிறது.. அது வேறு ஒன்றுமில்லை..! அது தனிமைப் பேய்...!" என்றேன் சிறிது முணுமுணுப்பாக....!!!!

முடிந்தது....

நட்புறவுகள் அனைவருக்கும் என அன்பார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். 

Friday, June 28, 2019

மூன்றாம் அன்னை...

அனைவருக்கும் வணக்கம்.

கொஞ்ச நாட்களாகவே இந்த "படித்துறை பெரியவர்" சம்பந்தப்பட்ட கதைகள் விதவிதமான கோணத்தில் நம் நட்புறவுகள் அனைவரும் எழுதி வருகிறோம். அவரவர் தத்தம் பாணிகளில் சுவையான கதைகளை கண்களுக்கு முன் நிஜமானவையாக கொண்டு வந்து விட்டார்கள்.

 சமீபத்தில் கூட சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் இந்த படமின்றி, ஆனால் அந்த பெரியவரின் சோகங்களை கண் முன் கொண்டு வந்து மனதை நெகிழ வைத்து விட்டார்.

எனக்கு தெரிந்த முறையில் நானும் இந்த கதை எழுதி எங்கள் ப்ளாகிற்கு அனுப்பி அனைவரும் படித்து நல்லதொரு கருத்துகளை தந்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். எ. பிக்கு வந்து கருத்துக்கள் தந்தஅனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இதை மனமுவந்து வெளியிட்ட "எங்கள் பிளாக்" கிற்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சிகளையும் மனமார்ந்த நன்றிகளையும் அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

இன்றும் எ. பியில் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சென்றுவந்த பயணக் கட்டுரையில், கோமுகி ஆற்றை படம் பிடித்து போட்டதை பார்த்தவுடன், அந்த ஆற்றங்கரையும், படிகளையும் கண்டவுடன் இந்த "பெரியவர்"  நினைவு வந்தாக கருத்தில் குறிப்பிட்டுள்ளேன். ஏனோ சோகங்கள் மனதை அழுத்தும் போது இந்த கதைகள் நினைவுக்கு வருகின்றன. என் பதிவிலும் இடம் பெறட்டுமே என்ற ஒரு அழுத்தமான மனச்சலனத்தில் இங்கேயும் பகிர்கிறேன்.
மீண்டும் இங்கு வந்து படிப்பவர்களுக்கும் என் பணிவான  நன்றிகள்.

நன்றியுடன்
உங்கள் சகோதரி.



ஆற்றின் சலசலத்து ஓடும் நீரையே கண் கொட்டாது பார்த்தபடி இருந்தார் விச்சு. உலகத்தின் தாயும் தந்தையுமான ஈஸ்வரனின் பெயரை, பெற்றோர்கள் அன்பாக தன் பிள்ளைக்கு இட்ட பெயராகிய அழகான விஸ்வநாதனை சுருக்கி அவருக்கு கிடைத்த  மற்றொரு பெயர்.

அப்படி  அழைக்கும் போது ஒரு உரிமை வருவதாக ஊர், உறவு அனைவரும் அழுத்திச் சொல்லியே அந்தப் பெயர் மறு பேச்சின்றி ஸ்திரமாக நிலைத்துப் போனது.

வாய் தன்னிச்சையாக மந்திரங்களை ஜபித்தபடி இருந்தாலும், கண்களும் மனமும் தறி கெட்ட குதிரையாக அலை பாய்ந்தபடி இருந்தன.  இன்று என்னவாயிற்று எனக்கு? கேள்விகள் மனதில் பூக்க ஆரம்பித்தன.

மனதுக்குள் ஆயிரம் சிந்தனைகள் இருந்தாலும், கைகூப்பி, கண்மூடி யாருடைய செய்கைகளையும் கண் வழியே மனதில் இருத்தாது, ஓடும் ஆற்றின் சங்கேத  பாஷையான சலசல வென்ற வார்த்தைகளை மட்டும் உள்ளிருத்தியபடி, அந்த ஜீவனுக்குள் இறைவனின் நாமாவளிகளை உச்சரித்து உருவேற்றி இந்த உலகை சற்று மறந்திருப்பதே அவரின் தவமாகும்.

அந்த நேரம் அவரின் ஆத்மார்த்த தவம் செய்யும் நேரம். அதிகாலை எழுந்து காலை கடன்களை முடித்து இந்த ஆற்றங்கரை அழகை ரசித்தபடி, இங்கு வந்து விட்டால், ஒரு இரண்டு மணி நேரம் இவர் தனக்காகவே  ஒதுக்கப்பட்ட நேரமாகவே  கருதுவர்.

இந்த நேரத்திற்காக  அவர் அதிகாலை கண் விழித்ததும், செய்யும் வேலைகளை என்றுமே செய்ய தவறியதில்லை. தன் மனைவி  இருக்கும் போதே அவள் உடல் நிலைக்காக அடுக்களைக்குள் அவளை அதிகம் விடாமல், காலை  காப்பியிலிருந்து இரவு வரை பார்த்து பார்த்து  செய்தவர்.

அவ்வூரின்  உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று விட்டார் விஸ்வநாதன் . அந்த கால கட்டத்தில் அன்னைக்கு அன்னையாக அவர் மனைவி அவர் கெளரவத்திற்கு பங்கம் வராமல், தாங்கள் பெற்ற மூன்று ஆண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, வாலிப வயது வந்ததும் அவர்கள் காலில் நிற்கும் சமயத்தில், மூத்தவனுக்கும், இரண்டாவது பையனுக்கும் மணமுடித்து தன் கடமையை செய்து அவர் தோளோடு தோளாக நின்று துவளாமல்தான் இருந்தாள்.

திருமணமான மூன்று வருடங்களில் வேலை பார்க்கும் இடத்தில்  பதவி உயர்வு பெற்று இரண்டு மகன்களும் வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு வந்து செல்லும் போதும் மனம் தளராமல்" வாழ்க்கை வசதிகளை அவர்களாவது அனுபவிக்கட்டும்"  என்று மனதாற வாழ்த்தி அனுப்பியவள்தான்.

இவர் "அனைவரும் சேர்ந்திருந்த பழைய காலத்தை எண்ணி  குழந்தைகளை எப்படி விட்டு பார்க்காமல் இருப்பது" என்ற போதும் கூட  சமாதானமாக தேற்றியவள்தான்.  மூன்றாமவன் கல்லூரி முடித்து அங்கேயே ஒரு வேலை கிடைத்து அமர்ந்தவுடன் இவனாவது தங்களுடன் இருக்கட்டும் என்ற எண்ணத்திலோ என்னவோ.... சற்று  ஓய்ந்து சோர்ந்து போனாள்...

இத்தனை நாள் எனக்காகவும்,  குழந்தைகளுக்காகவும்  மாட்டாய் உழைத்து ஓடாய் தேய்ந்த அவளுக்கு நாம் செய்யக் கூடாதா என்ற நினைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக இவர் அவளின் பொறுப்பு புகளை ஏற்றுக் கொண்டார்.

அந்த சமயத்தில் மூன்றாவது பையனுக்கும் தக்க இடத்தில் பெண் கூடி வரவே, மனமொப்பிய திருமணத்திற்கு வெளிநாட்டிலிருந்து இரண்டு அண்ணன்கள், தத்தம் குடும்பத்துடன்  வந்திருந்து குடும்பத்தை கலகலப்பாக்கி, விடுமுறை முடிந்ததும், புறப்பட்டு சென்றனர்.

அப்போதும்  பெற்றோர்கள் இருவரும் சிறிது காலம் தம்முடன் வந்து தங்கலாமென பெரியவன் சொன்ன போது விஸ்வநாதன்  அவசரமாக மறுத்தார்.  புது மருமகளை தனியே விட்டு எப்படி வருவதென்று அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.  "சரி... உங்கள் செளகரியம். ... " என்றபடி பிள்ளைகள் செல்ல பழைய வாழ்க்கை திரும்பவும் திரும்பியது விஸ்வநாதனுக்கு.

மருமகள் வந்த புதிதில் சற்று  மனம் தயங்கினாலும்,  அவளின் சில இயலாமை நேரத்தில்  இவரின் உபசாரங்கள் தேவையாகி போனதில், காலப்போக்கில் இனிதாகவே  அவளும் அவற்றை ஏற்க தயாராகி விட்டதால் இவரின் சங்கோஜங்கள் மறைந்தே போயின. மாமியாரின் உடல் பலவீனமும்  சற்றே மோசமாக, அவரை கவனிக்கும் பணியில் இவரது  காலை கடமைகளும் அவளுக்கு பழக்கப்பட்டு விட்ட  ஒன்றாயின.....

காலம் "என்றுமே ஒரே மாதிரி திசையில் பயணப்பட எனக்கு விருப்பமில்லை"  என்பதை விஸ்வநாதனின் மனைவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு சுழன்று சென்று காண்பித்தது.  தன் அம்மாவின் அன்பிற்கு பிறகு அவளின் மொத்த அன்பையும் இவளிடமே பெற்று வந்த விஸ்வநாதன் அவளும் மறைந்தவுடன், ரொம்பவே தளர்ந்து போனார்.

பிள்ளைகள் வந்து துக்கத்தை சுமந்து, ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி, செல்லும் போது அப்பாவை ஒரு மாற்றத்திற்காக தங்களுடன் வந்து தங்கிச் செல்ல அழைத்த போதும், இவர் மறுத்து விட்டார். சட்டென்று  மனதின் பழைய நினைவுகளை உதறி வர விருப்பமில்லை எனக் கூறி தவிர்த்து விட்டார். பிள்ளைகளும்  மேற்கொண்டு வறுப்புறுத்த இயலாமல், இளையவனிடம் கவனமாக பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

நெருங்கிய உறவு பிரிந்ததென்றால் காலம் வேகமாக பறக்கும் என்பார்கள். அதன்படி அது காலில் சக்கரம் கட்டிய மாதிரி உருண்டோடிச் சென்றது.  வழக்கப்படி வருந்தும் தன் மனதை செப்பனிட்டபடி,    தன் கடமையை செய்யும் பணியில் விஸ்வநாதனின் நேரமும், பொழுதும் ஓடிக் கொண்டேயிருந்தது.

ஆற்றங்கரை தவம் முடிந்து வந்ததும் உடை மாற்றி உணவருந்தி பேரனோடு சிறிது பொழுதை கழித்த பின் தன்னறைக்குள் சென்று தாழிட்டு கொண்டால் மாலைதான் மறுபடி அவரை காண முடியும். மனைவியின் மறைவுக்குப் பின் தனது அறையில் அமர்ந்து அவர் தன் நாளில் பாதியை எவருடனும் அதிகம் பேசாமல், கழிப்பதை வீட்டிலுள்ள மகன், மருமகளுக்கு வித்தியாசமாக பட்டது. அது போக தன் அலமாரியின் சாவியை தன் பூணூலில்  எப்போதும் முடிந்திருக்கும் அவரை அவர் மகன் உட்பட வீட்டில் அனைவரும் கேலியாக பேசும் போதும் அதை ஒரு நாளும் ஒரு விஷயமாக பொருட்படுத்தியதில்லை....

அன்று மகன் வந்து வாசல் திண்ணையில் தன்னருகே  அமர்ந்ததும் ஏதோ பீடிகையாய் பேச வந்திருக்கிறான் என புரிந்து கொண்டார்.

"அப்பா... நா சொல்றதை நிதானமா கேளுங்க.. இந்த ஒரு மாசத்துல நா எத்தனையோ வாட்டி உங்ககிட்டே எடுத்து சொல்லியாச்சு... நீங்க பிடிவாதமா மறுத்துண்டே இருக்கேள்.. நல்லா யோசிச்சு பாருங்க.. பெரியண்ணா தினமும் ஃபோன் செஞ்சு அப்பா என்ன சொல்றார் ... உன்னோட முடிவு என்னன்னு கேட்டுண்டே இருக்கான்.. . எத்தனை நாள்தான் இந்த வேலையிலேயே கட்டிண்டு அழப் போறே. . உனக்கு  ரெண்டு குழந்தையாச்சு... புரிஞ்சுக்கோங்கிறான்...  நம் மன்னியின் அண்ணாவோட சொந்த கம்பெனிதாம்பா.. நான் பாத்து வைக்கிற அந்த கம்பெனியில நல்ல போஸ்ட்.. போகப்போக நல்ல உயர்வு வந்தா நீயும் இங்க வர்றதுக்கு சான்ஸ் இருக்குங்கிறான்.... எல்லாரும் சேர்ந்திருந்தால் நல்லாதானே இருக்கும்"னு சொல்றான். அவன் சொல்றதுலே என்னப்பா தப்பு? ..... அம்மாவும் நம்மை விட்டு போயாச்சு. இனி இந்த ஊர்ல என்னப்பா இருக்கு? சரி.. உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா இந்த வீட்டை விக்க வேண்டாம்... வாடகைக்கு விட்டுட்டாவது, நாம டெல்லிக்கு போயிட்டா, சீக்கிரம்  அந்த கம்பெனியில ஜாயின் பண்ணி குழந்தைகளும் ஸ்கூல் தேடி கரெக்டா இருக்கும்பா.. அவரும் எத்தனை  நாளைக்கு அண்ணா மன்னிக்காக யாரையும் வேலையிலே போடாம வெயிட் பண்ணிகிட்டிருப்பா சொல்லுங்கோ"... அவன் பேசிக் கொண்டே போனான்..

விஸ்வநாதன் ஏதும் பேசாது நிலம் பார்த்து யோசித்தவர் " அது எப்படிடா?  பழகின இடத்தை விட்டு திடீர்ன்னு எப்படிப்பா கிளம்புறது..... இந்த ஊரும், நீரும் நான் பிறந்ததிலிருந்து எனக்கு பழகிப் போச்சுடா.. அதனால்தான் உன் அண்ணன்கள் அழைச்சப்போ கூட என்னாலே சட்டுன்னு நகர முடியலே... இப்ப கூட நீ மட்டும் வேணா, இல்லையில்லை... நீங்க எல்லோரும் கிளம்புங்கோ....  நான்  எப்படியோ  இங்கேயே இருக்கேன்.. வர்றதை பத்தி அப்புறமா பாத்துக்கலாம்... "

அவரை மேற்கொண்டு பேச விடாது இடைமறித்தான் அவன்.

" அது எப்படிப்பா.. . அம்மா இருந்தாலாவது  பரவாயில்லை... உங்களை தனியே இங்கே விட்டுட்டு நாங்க மட்டும் எப்படி?" இத்தனை நாளா அதுக்காகத்தான் எங்கேயும் போகாமே இருந்தேன்...

" அதானே பாத்தேன். நாம நல்லபடியா முன்னுக்கு வர்றது அவருக்கு என்னிக்குமே பிடிக்காதே.. பெரியவா ரெண்டு பேர் மேலேயும் மட்டுந்தான் இவாளுக்கு அக்கறை... இல்லாம போனா அவாளை மாதிரி நம்மையும் எப்பவோ வெளி நாட்டுக்கு அனுப்பிச்சி அழகு பார்க்க மாட்டாளா?  எல்லாம் சுயநலம்... தங்களுக்காக நம்மளை இங்கே தக்க வைச்சுண்டவர்தானே உங்க அம்மா...அதே போல் இவரும்  இப்போதைக்கு ஏதேதோ பேசி சமாளிக்கிறார்".. . மருமகளின் வார்த்தைகள் சாட்டையால் மனதில் அடிக்க  சடாரென்று எழுந்து தன்னறைக்குள் புகுந்தார் விஸ்வநாதன் ...

" நான்தான் பேசிகிட்டு இருக்கேனே.. நீ எதுக்கு தேவையில்லாமே நடுவிலே வர்றே?" மகன் கடிந்து கொள்வதும், அதற்கு அவள்  "ஆமாம், நீங்க கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிண்டே இருப்பேள்.. உங்க அப்பா காதுலே வாங்கனாதானே..
தினமும் ஆத்தங்கரைக்கு போறதும், ஆத்துக்கு வந்ததும் ரூம்லே போய் அடைஞ்கிறதுந்தான் உங்க அப்பாவுக்கு தெரியும். அப்படி என்னதான் இருக்கோ அந்த அறையிலே.... இந்த ஒரு வீட்டை தவிர்த்து வேறு என்ன சொத்தா  இருக்கு நமக்கு? அதுவும் பங்குலே போயிடும்.... கொஞ்சம் முன்னேறி அவங்களை மாதிரி காசு சேர்த்து வச்சாதானே பிற்பாடு நமக்கு செளகரியமா இருக்குன்னு அவருக்கு புரியாதா? என்று கொஞ்சம் சத்தமாகவே முணமுணப்பதும் அவருக்கு கேட்டது.

மறுநாள் காலை வழக்கம் போல்  எழுந்து ஆற்றங்கரைைக்கு நீராட செல்லும் முன் பாலை காய்ச்சி, காப்பி குடிக்கலாம் என அடுக்களை சென்றவருக்கு சற்று அதிர்ச்சி...

காலை கடமைகளை அவருக்கு முன்னமேயே எழுந்து மருமகள் ஆற்றிக் கொண்டிருந்தாள். அவள் பார்வை "இன்னமும் எனக்கு உங்கள் மேல் கோபம் குறையவில்லை" என்றது. கொஞ்ச நாட்களாகவே இவரின் உபசாரங்களை அவள் புறக்கணித்து வந்தவள் இன்று காலை காப்பியிலேயே ஆரம்பித்த  மாதிரி தெரிந்தது.

"நீங்கள் எங்கள் பேச்சை கேட்பதில்லை.... நாங்கள் உங்கள் உதவிகளை மட்டும் ஏற்க வேண்டுமாக்கும்..." என்ற புறக்கணிப்பு கொடி அங்கு பறந்து கொண்டிருந்ததை உணர்ந்தார்.

ஒரு பேச்சும் இல்லாமல் தனக்கு முன் வைக்கப்பட்ட காப்பியை, உணவுப் பொருளை நாம் அவமதிக்க கூடாதென்ற எண்ணத்தில் விழுங்கி விட்டு, அகன்றார் விஸ்வநாதன்.

மகனைப் பற்றியோ, சற்றேறக்குறைய வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருக்கும் மருமகளின் நினைவோ "தாத்தா நானும் வருவேன் " என்று தினமும் அடம் பண்ணும் இரண்டரை  வயது பேரனின் பாசத்தையோ, "இந்த தாத்தா எப்பவுமே அப்படித்தான்...  நான் சிறு குழந்தையா இருக்கும் போது கூட என்னை கைப்பிடித்து அழைத்துப்போ....என அப்பா தினமும் சொல்லி அலுத்து விட்டு விட்டார். அப்போதே என்னை கூட்டிண்டு போகாதவர் இப்போ உன்னை மட்டும் எப்படி.? . என்ற அலட்சிய பாவம் கண்ணுக்குள் வார்த்தைகளாய் தெரிய, பள்ளிக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்த எட்டு வயது பேத்தியின் கோபப்பார்வையையோ, அவரை என்றுமே எதுவுமே செய்ததில்லை.

இன்றும் மெளனமாக  வழியில் எந்த காட்சிகளிலும் மனதில் பிடிபடாதவராய் நடந்தார்.

"விச்சு.. என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் போது விடியறதுக்குள்ளே....... காலங்கார்த்தாலே, சீக்கிரமே கிளம்பிட்டே?..
வழியில் தன்னை போன்றவர்களின் கேள்விகளுக்கு, எப்போதும் போல் அமைதியான புன்னகையுடன் பதில் கூறியவாறு ஆற்றங்கரையை தொட்டு விட்டார்.

மேல் துண்டை இடுப்பில் சுற்றிய வண்ணம் வேட்டி சட்டையை துவைத்து வைத்து விட்டு,  ஆற்று நீரின் சலசலப்பு பாஷையை உள் வாங்கியபடி ஆற்றின் படிககல்லின் மேல் அமர்ந்தார்.

அனைவருக்கும் அன்னையாகிய
தாமிரபரணி "எந்தவித கவலையையும் என்னிடம் கூறி விட்டு நிம்மதியாய் இரு" என்றபடி சிரித்தவாறு சொல்லிக்கொண்டே ஓடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது இவருக்கு.

"பெரியவனும், சின்னவனும் எப்படியோ நல்லபடியா  படிச்சு முன்னுக்கு வந்து இப்போ வாழ்க்கையிலே நல்லாயிருக்காங்க.... அவங்களுக்கும் தலா ரெண்டு பையன்களாகவே ஆண்டவன் கொடுத்திட்டான். அவங்க மேல் படிப்புக்குன்னு நீங்க உங்க அப்பா சொத்து பத்துக்கள் உங்களோடு சேமிப்புன்'னு, அவங்க கேக்கறப்பல்லாம் கொடுத்தீங்க  மூன்றாமவன் உங்களைப் போல்  படிப்பு முடிந்ததும் மேற்படிப்புக்கு ஆசைபடாமே நம்மளோடவே இங்கேயே தங்கிட்டான். இப்போ அவனுக்கும்  கல்யாணமாகி ஒரு பொண்ணும், பையனும் பிறந்தாச்சு... அதனாலே என் பேத்திக்கு எனனோட நகையெல்லாம், உங்க அம்மா வேறு நா கல்யாணமாகி வரச்சே எனக்கு போட்ட நகைகளையும் , இவனுக்கே கொடுக்கலாம்ன்'னு நினைக்கிறேன். உங்களுக்கு சம்மதந்தானே?" என மனைவி தன் கடைசி நாட்களில் முடியாமல் சொன்னது நினைவுக்கு வந்தது.

அவள் கையை அன்புடன் பிடித்துக் கொண்டவாறு, " இப்போது அதுக்கு என்ன அவசரம்... காலம் வரும் போது நீயே உன் பேத்தி பெரியவளானதும்,சந்தோஸமா கொடுக்கலாம்.. "என்று இவர் சமாதானமாக கூறியதும், அவள் ஒரு புன்னகையுடன் இவர் கையை லேசாக அழுத்தி விட்டு மெளனமானாள். அந்த அழுத்தத்தில் "என் விருப்பம் அதுதான்" என்ற தீர்க்கமான முடிவும் இருந்ததை புரிந்து கொண்டார்.

அவளின் கட்டளைப்படி, மனப்பூர்வமாக அவள் தரும் அவளது நகைகள் மட்டுமல்லாது, அவள் பேரில் இருக்கும் இந்த வீட்டையும், தங்கள் காலத்திற்கு பின் தன் மூன்றாம் மகன் மட்டும் அனுபவிக்க வேண்டுமென்று, கடிதம் எழுதி கையொப்பமிட்டு கொடுத்த  ஒரு வாரத்தில்  அவள் மறைந்ததை, அவளின் கடைசி ஆசையை நிறைவேற்ற, தன் மகன்கள் வெளி நாட்டிலிருந்து இம்முறை அம்மாவின் வருட நினைவு நாளுக்கு வரும் போது நிதானமாக பேசி அவர்களின் முழுச் சம்மதம் பெற்று எழுத்து பூர்வமாக  தன் மகனிடம்  தான் ஒப்படைக்க நினைத்ததை கூறும் முன் தப்பாக புரிந்து கொள்ளும் மருமகளை நினைக்கையில் சங்கடமாக இருந்தது விஸ்வநாதனுக்கு.

மூன்று மகன்களையும் பார்த்து, பார்த்து ஒன்று போல் வளர்த்து விட்ட தன் மனைவி  தன் சம்பாத்தியத்தில் சாமர்த்தியமாக குடும்பமும் நடத்தி, சேமித்ததை, குழந்தைகள் படிப்புக்கு செலவழித்த போதும் துணையாய் நின்று ஊக்கமும் அளித்தாள்.  அதே சமயம் கடைசி மகனின் படிப்பில் அவனின் விருப்பத்திற்கு மாறாக அவனை நிர்ப்பந்தப்படுத்தவும் இல்லை.

 "ஒருவரை கட்டாயப்படுத்தி செய்யும் செயல்களில் வீண் சிரமங்கள்தான் பலனாக கிடைக்கும்" என்பாள். அவன் விருப்பம் அவன் எந்த வேலைக்கு போக வேண்டுமென தீர்மானிக்கிறானோ அது படி நடக்கட்டும்.  யார் மீதும்  விருப்பமின்றி சுமைகளைை  ஏற்ற கூடாது என்பது அவளின் எண்ணம்...... வீட்டுக்கு   வந்த மருமகளால், அவளுக்கு எத்தனை உபகாரங்கள் செய்து மகளாக பாவித்தும், இதை புரிந்து கொள்ளும் பக்குவம் வரவில்லையே? ஏன்? வேறொரு இடத்திலிருந்து வந்ததினால் இவர்கள் பாசங்களை உணரும் சக்தி இல்லையோ?

இவ்வளவு பெரிய பொறுப்பை தன் மகனின் வருவாய் குறைவு என்ற ஒன்றின் காரணமாக,  அதனால் அவன் மேல் கொண்ட கழிவிரக்கத்தினால், தன் வசம் ஒப்படைத்து விட்டு போயிருக்கும் மனைவியுடன், மானசீகமாக தனிமையில் இருந்து பேசுவதை தவறாக நினைப்பதை எண்ணி வருந்தாமல் இருக்க அவரால் இயலவில்லை.

அம்மா தாமிரபரணி.... "அம்மாவின் மடி சாய்ந்து வேதனைகளை பகிர்ந்து கொள்வது போல், உன்னிடமும் என் அன்னையின் நினைவுகளை, மனைவியின் பிரிவுகளை சொல்லி, உன் ஓட்டத்தின் நடுவிலேயே உன்னையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறேன்.

அன்னைக்குப்பின் அன்னையாக வழி நடத்தியவளிடம் பேசாமல், மனதின் பாரங்களை யாரிடம் சொல்வது? இரண்டு அன்னைகளை வாழ்வில் தவற விட்டு விட்டேன். என் பாவங்களை போக்கி, என் மனதை உன் தூய்மையால் நிறைத்து, என் உடல் அழுக்கோடு, உள்ளத்து அழுக்கும் களைந்து, என் உணவாகி, உயிராகி கலந்த உன்னை எப்படி பிரிவேன்? இருவரை பிரிந்த பின், இப்போது உன்னையும் விட்டு பிரிந்திருக்கச் சொன்னால் எப்படி? அதை நீயும் நானும் எப்படி சகிக்க முடியும்?  என் உயிர் இருக்கும் போது  அந்த சம்பவம் நடந்து விடுமா? தாயே.. பதில் சொல்லு...

மனசின் விம்மலுடன் முகம் மூடிய கூப்பிய கரங்களில் கண்களிலிருந்து வழிந்த நீர் கை விரலிடுக்குகள் வழியாக வெளிப்பட்டு தாமிரவருணி நீருடன் கலந்து கொண்டது.

இப்போதும்  உன்னிடந்தான் என்னோட ஆற்றமைகளை சொல்ல முடியும். அம்மா தாமிரபரணி.... . அன்னையாக உன் தோள் சாய்ந்துதான் தினமும் என் சுமைகளை உன்னிடம் இறக்குகிறேன்.." மனதினில் மந்திரங்களுக்கு முன்பாக வார்த்தைகளை கோர்த்த மாலைகளாக தொடுத்து அன்னை தாமிரபரணிக்கு மனதுக்குள்ளாகவே சூட்டினார்.

அம்மாவிடம் சஞ்சலங்களை கூறிய பிறகு வருத்தம் வடிந்து, பறவையின் லேசான இறகை போல், மனசு நிம்மதியை சந்தித்த மாதிரி இருந்தது.

எழுந்து மெள்ள படி இறங்கி நீரை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டவர், ஒரு நமஸ்காரத்துடன் நீரில் அமிழ்ந்து தன்னை தூய்மை படுத்திக் கொள்ள துவங்கினார். காலை இன்னும் ஒர் அடி எடுத்து வைத்து நகர்ந்த போது சட்டென பள்ளமான இடத்திற்கு சென்று விட்டதை உணர்ந்தார். மேலெழும்ப விடாமல், இத்தனை நேரம் அமர்ந்திருந்த கால்கள் பிடிவாதம் பிடிக்க  இன்னமும் நீரின் அடியில் தன உடல் இழுத்துச்செல்வதை உணர முடிந்தது.
அந்த நேரத்திலும் தன் பூணூலில் இருந்த தன் அலமாரியின் சாவியை இன்று யதேச்சையாக கழற்றி தன் மனைவியின் புகைப்படம் இருக்கும் மேஜையின் மேல் அவளருகே வைத்து விடடு  வந்ததை  உறுதிப்படுத்திக்கொண்டார்.

ஐயோ..  இந்த விச்சு மாமா நேத்து மணல் எடுத்த இடத்தில் ஆழத்தில் மாட்டிக் கொண்டார் போலும்... ஆளேயே காணோமே....சீக்கிரம் யாராவது வந்து காப்பாத்துங்கோ.....

இவ்வளவு நாழி இங்கேதான் உட்கார்ந்திருந்தார்... இப்பத்தான் குளிக்க கீழே இறங்கினார்... சீக்கிரம் இங்கே வாங்கோ..வாங்கோ..

கூச்சல்கள்... யாராரோ அலறும் சத்தங்கள் லேசாக காதில் மோதி தேய்ந்தன.. மனசு லேசாக போன மாதிரி உடம்பும் காற்றில் மிதப்பது போல் தோன்றியது. நினைவு சறுக்கல்கள் நடுவே, தான் வேறு இடத்திற்கு செல்வதையும்  உணரமுடிந்தது.

நெஞ்சில் ஏற்பட்ட வலி நடுவே "விச்சு, நீ பிறந்ததிலிருந்து, அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என அனைவருக்கும் உன் கடமைகளை சரியா பண்ணிட்டே... இன்னமும் ஏன் வருத்தப்பட்டு மனசை வருத்திக்கிறே?. . எங் கூட வர்றியா?  உன் அம்மாக்கள்கிட்டே உன்னை பத்திரமா சேர்த்துடுறேன். நிம்மதியா இருக்கலாம். வர்றியா... மென்மையான குரல் ஒன்று காதருகே கேட்டது.

விச்சுவிற்கு தன் பயணம் சுகமாக இருப்பது போல் அவருக்கு தோன்றியது.

சற்று நேரத்தில் "விச்சு, என் கிட்டே வந்துட்டியா  கண்ணே"  அம்மாவின் குரல் மிக அருகிலேயே கேட்டது.

கரையில் ஒரே கூச்சலும், கும்பலுமாக இருந்தது.தாமிரபரணி தன் இயல்பு மாறாமல் எப்போதும் போல் சலசலவென்று சத்தமிட்டபடி ஓடிக்கொண்டிருந்தாள்.
========================================

இது என்னுடைய பதிவில்  நூற்றி எழுபத்தைந்தாவது வெளியீடு என நினைக்கிறேன். இன்னமும் இருபத்தைந்து எழுதினால்.. இருநூறுகளை சந்திக்கலாம். ஆனால் கணக்கு "அவனிடந்தான்" உள்ளது. அவன் கணக்கில், அவன் இந்த கணக்கை யெல்லாம்  பார்க்க மாட்டான் என்பதினால் வந்த கணக்கிற்கு மகிழ்ந்து கணக்கிட்டு காட்டி விட்டேன். 🙏😀

Wednesday, May 1, 2019

உழைப்பாளர் தினம் – சிறுகதை 1)

வலையுலக  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது
அனைத்து நாடுகளிலும் பல் வேறு இயக்கங்கள் தோன்றி தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைக்க பெரும்பாடுபட்டது

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது
இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போரட்டங்களை நடத்தியது. அத்தோடு மே 11886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

நன்றி விக்கிப்பீடியா.... 

இன்றும் ஓய்வில்லாமல் உழைக்கும் ஒரு இனத்தின் நிலை.. ஆனாலும் உழைப்புக்கு உதாரணமாய் சுட்டிக் காட்டப்படுபவர்கள்..  இது பழைய பதிவெனினும், இன்றைய தினத்திற்கானது. அதனால் மீண்டும் ஒருமுறை அனைவரின் பார்வைக்காகவும், சில திருத்தங்களுடன் பகிர்கிறேன். இதை "மீண்டும் ஒருமுறையா" என சோர்வில்லாமல் படிக்கும் அனைவருக்கும்  மிகுந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

உழைப்பின் கதை... 

"என்னங்க  இன்னைக்கு  பாட்டுக்கு உழைக்கப் போகலையாவாசலில் சோர்வாக அமர்ந்திருந்த கணவனைப் பார்த்து கேட்டாள் மனைவி. 

     உம்ம்ம்... போகணும். என்னவோ காலையிலேயே சோம்பலா இருக்கு! இன்றைக்கு என்னவோ உழைப்பாளர் தினமாம்! என்றவனை இடைமறித்த அவன் மனைவி அப்படியெல்லாம் நாம இருந்தா எப்படிநம்ப வயிற்றுப் பாட்டுக்கு எங்க போறதுதினமும் சுறுசுறுப்பா அங்கே இங்கே அலஞ்சா தானே நமக்கு வேண்டியது கிடைக்கும் என்று கனிவுடன் உபதேசித்தாள் மனைவி.

     "உம்ம்ம்... புரியுது அந்த காலத்திலேயே இருந்து நாம ஓடியாடி வேலை செஞ்சவங்கதானே! (பெருமூச்சுடன்) ம்ம்..இதோ கிளம்பறேன். நீ புள்ளைங்களை பாத்துக்கோ.! "என்றபடி கிளம்ப எத்தனித்தான் அவன்.

   " பாத்து போயிட்டு வாங்க! வழியிலே ஓரமாவே நடந்து போயிட்டு வாங்க! இப்ப நீங்க புறப்பட்டு போன தான் பொழுது போறதுக்குள்ள வீடு திரும்ப முடியும். வானம் வேற கறுத்து கிடக்கு! இந்த மழை வேற வந்துடாமே இருக்கனும்.!" என்று அவன் மேல் அக்கறையுடன் பேசினாள் அவள்.

    "மழையாஅது எங்கே இப்பெல்லாம் ஒழுங்கா பெய்யுதுஅந்த காலமெல்லாம் போயாச்சு! இப்பெல்லாம் முந்தி மாதிரி எதுவுமில்லை! இந்தோபார்..! ஏதோ புயல் வந்து ஊரெல்லாம் ஒரே மழைவரப் போகுதூன்னு என அன்னைக்கு  பேசிகிட்டாங்க.! இப்ப இரண்டு நாளா அதுவும் இல்லைன்னு வேறே சொல்றாங்க.! ஒன்னும் புரியலே போ.! 

நமக்கும் ஒரு இடத்திலேயும் ஒழுங்கா முந்தி மாதிரி உழைக்க முடியலே! நேத்திக்கு ௯ட ஒரு இடத்துலேஅரிசி பருப்புன்னு மூட்டை மூட்டையா சாமான்களைஏத்திகிட்டும்இறக்கிட்டும் இருந்தாங்க! சரி! நமக்கு ஏதாவது உழைப்புக்கு ஒரு வேலை இருக்குமான்னு போனேன். அங்கிருந்த எல்லாரும் விரட்ட மிதி படாத குறையாக ஓடி வந்துட்டேன். அதேமாதிரி அவங்கவங்க வீட்டிலேயும் அவங்களுக்கு பிடிச்ச வேலைகாரங்களை வச்சுகிட்டு சுத்தபத்தமா இருக்கனும்’னு விரும்புறாங்க! நம்ம தேவையை புரிஞ்கிட்டு  நம்ப உழைப்புக்கேத்த மாதிரி நாம செய்ற வேலையை எங்கே மதிக்கிறாங்க? என்றான் சலிப்புடன் அவன்.

   "புள்ளைங்களும் பாவம்! நேத்து அப்பா என்ன கொண்டு வந்திருக்காருனு ஆசையா கேட்டதுங்க! வீட்லே ஒரு குந்துமணி அரிசி ௯ட இல்லைன்னு நான் எப்படி சொல்ல முடியும்நேத்து சின்னவன் ரொம்ப பசிக்கிதுன்னு என் காலை சுத்தி சுத்தி வந்தான். உங்களையும் காணமா! அதனாலே அவனுக்கு ஏதாவது சாப்பாட்டுக்கு வழிபண்ணலாம்னு போயி அலைஞ்சதுதான் மிச்சம்...." என தன் அனுபவத்தை சோகத்துடன் ௯றினாள் அவள்.

  " அப்படியெல்லாம் சின்னபுள்ளைங்கள தனியா வீட்டுல விட்டுட்டு போவாதே.! உனக்கும் முந்தி மாதிரி இப்பெல்லாம் முடியலை! அப்படியிருக்கும் போது ஏன் வெளியில போற? நான் போய் என்னாலே ஆனதை வீட்டுக்கு கொண்டு வரேனில்லியா? "அவன் சற்று கோபமாக கேட்டான்.

   "இல்லே! நேத்து புள்ள ரொம்ப பசின்னு சொன்னதினாலே தான் போனேன். இல்லாட்டி நீங்க தினமும் சம்பாரிச்சு கொண்டு வர்றது நமக்கு வயித்துக்கும்பாடுக்கும் சரியாதானே போறது! மத்தபடி முந்தி மாதிரி நாளைக்குனு எங்கே வச்சுக்க முடியுது? ம்ம்... நீங்க இப்படி சிரமபடுறதை பாக்கும் போதுதான் எனக்கு மனசு தாங்கல!" என்று அவனை சமாதான படுத்தியவள், “ஆமாம் அப்பவே என்னமோ சொல்ல வந்தீங்களே?” என்று ஞாபகபடுத்தினாள்.

  " ஆமாம்! அதாவது இன்றைக்கு உழைப்பாளர் தினமாம்! நேத்திக்கு வேலைய தேட போகும் போது நாலுபேர் சொல்லிகிட்டிருந்தது காதிலே விழுந்திச்சு! அந்தகாலத்துலே, "உழைப்புக்குன்னா இவர்கள்தான்னு" நம்மளை சுட்டிக்காட்டி பேசிட்டு இன்னைக்கு அவங்களை அவங்களே பெருமைபடுத்திக்கிறாங்க! ஏன் நாமெல்லாம் உழைக்கிற வர்க்கம் இல்லையா? எப்படியோ போகட்டும்! இந்த மட்டுக்காவது, எங்கோ ஒரு இடத்துல, எப்பவாச்சுமாவது  உழைப்புக்கும், சுறுசுறுப்புக்கும் ஒரு உதாரணமா நம்மளை காட்டாறாங்களே!!


""இப்படி ஒரு தினத்தை வச்சு கொண்டாடுறாங்களே! அன்னிக்காவது நமக்கெல்லாம் ஒரு இனிப்பு, ஹும்.. ஹும்.. வேண்டாம்மா, ஒரு சின்னமிட்டாயாவது கொடுக்கலாம்ன்னு அவங்களுக்கு தோண்றதா? போகட்டும்! அவங்க நல்லா வாழ்ந்துட்டு போகட்டும்! நாமதான் அன்னியிலேருந்து இன்னைய வரைக்கும், உதைபட்டும் மிதிபட்டும் சாவறோம். ஒருநாள் வெளியிலே போயிட்டு வர்றதுக்குள்ளே அன்னைக்கு உசிரு நம்மகிட்டே இருக்குமான்னு தெரியலே! நம்ம பொழைப்பு அப்படி! படைச்சவன் அவங்களையும் நம்மளையும் அப்படி படைச்சிட்டான்! இரண்டாவது நாம் வாங்கி வந்த வரம் ( இதைச் சுட்டினால், இதன் இரண்டாவது கதையும்  இத்துடன் இணைக்கப்பட்டிருப்பதை காணலாம்.) அப்படி! சரி! நான் புறப்படறேன். நீ பத்திரமா இருந்துக்கோ!! "என்றபடி மனைவியிடம் விடைபெற்று வெளியில் வந்தவன் அருகிலிருக்கும் ஒரு  வீட்டின் கதவு  மூடியிருப்பினும், படிகளின் ஒரமாக உள்நுழைந்து தனக்கும், தன் குடும்பத்துக்கும் உணவு தேடுவதற்கான வேலையை கவனிக்க வேண்டி , உழைப்பாளியான அந்த கடமை தவறாத கணவனான அந்த எறும்பினம் அந்த வீட்டினுள் மெள்ள பயணித்தது.