Showing posts with label நகைச்சுவை.. Show all posts
Showing posts with label நகைச்சுவை.. Show all posts

Wednesday, May 11, 2022

இடுக்கண் வருங்கால்...

மழை விட்டும் தூவானம் விடவில்லை... .. 

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன். வாழ்வில்  நெருக்கமான உறவுகளின் இழப்பை ஒவ்வொரு தடவைகளிலும் சந்திக்கும் போதும் அந்தப் பாடலின் வலி மிகுந்த அர்த்தம் புரியும்.  ஆனால் இந்த தடவை (போன வருடம் நடுவிலிருந்தே) வரும் ஒவ்வொரு உபாதைக்கும் இலவசமாக ஒன்றிரண்டை கூடவே தந்தபடி உடல் நலன்கள் படுத்தும் பாட்டில், அந்தப்பாடலும் ஆனந்தமாக ஹம்மிங் செய்தபடி என்னுடனே வந்து பாடிக் கொண்டிருந்தது. 

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என தான் அநியாயமாக தவற விட்ட மார்கழியின்  குளிர் பனியை நினைவில் நிறுத்தியபடி, தை மாதத்தின் பொங்கலில் இருந்து ஆரம்பித்த ஜலதோஷம்  விடாமல் ஜுரத்தில் வந்து நின்றது. அத்துடன் சந்தோஷப்படாமல், கூடவே பல் வலியையும் துணைக்கு அழைத்தபடி மாறி மாறி ஆட்டம் போட்டு அனுபவித்தது. அப்போதுதான் வெளிநாட்டிலிருக்கும் அன்பு மகனின் தீடிர் வரவு. ஜூன் ஜூலையில் வரப்போவதாக சொன்ன( மகனும், மருமகளும் தீடிரென பத்து பதினைந்து நாட்களில் டக்கெட் புக் செய்து வந்து விட்டார்கள். எனக்கோ உடல் நிலை சரியாவேனா என ஒரேடியாக அடம் பிடிக்கிறது. என்னால் சரியானபடி இயல்பாக எல்லா வேலைகளையும் செய்தபடி அவர்களுக்கு வாய்க்கு ருசியாக சமைக்கவும் முடியவில்லை. சமைக்காமல் இருக்கவும் இயலவில்லை. ஜீரம் கண்ட பத்து நாட்களில் இருமலும், சளியுமாக இருந்த அந்த நேரத்தில்  எனக்கு சமைத்த பொருள் வாசனையும் தெரியவில்லை. நாவுக்கும் எவ்வித ருசியில்லை. ஆகா...... ஓ. மைகாட்.... இது தொற்றா என்ற பீதியில், இருந்த கொஞ்ச மன பலமும், உடல் பலமும்,.பயந்து ஓரங்கட்டியது. இருந்தும் விடாமல், எப்படியோ வீட்டு வேலைகளை பல்லைக் கடித்தபடி சமாளித்தபடி செய்து கொண்டிருக்க, வலது கடைவாய்யின் மேலிருக்கும் கடைவாய் பல்வலி மேலண்ணத்தில் ஒரு பெரிய கட்டியை உமிழ்நீர் கூட முழுங்க முடியாமல் உருவாக்கி டாக்டரிடம் அழைத்துச் சென்றது. (எதற்கும் மருவத்துவரிடம் போகாமல் பாட்டி வைத்தியங்கள் செய்து நாட்பட்ட காலப்போக்கிலாகவும் குணப்படுத்தி கொண்டிருந்த என்னை பயங்கர அந்த வலி கழுத்தைப் பிடித்து தள்ளிக் கொண்டு சென்றது எனக் கூட கூறலாம்.)) 

அவரானால் கண் எலும்பு, கன்னங்களில் எலும்பு பாதிக்கப்பட்டிருக்கிறதா என ஆராய, நன்றாக அழுத்திப் பார்த்ததில், வலி அதன் உச்சத்துக்கே போய் விட்டது. அவர் தான் கொடுக்கும் மூன்று வேளை பொழுதுக்கு ஐந்து நாட்களுக்கான ஆன்டி பயாடிக் மாத்திரைகளில் சரியாகி விடுமெனவும் , இருந்தும் இப்படியே வைத்திருக்க கூடாது கடைவாய் பற்களை அகற்ற வேண்டுமெனவும் அச்சுறுத்த எனக்குள் இருக்கும் (சமீபத்தில் கண்டுபிடித்திருக்கும்) இனிப்பின்  அளவை நாங்கள் சொன்னதும், அவரும் பிரமித்து விட்டார்.

(இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். சில மாதங்களுக்கு முன் கால் பாதம் மரத்தல், கால் வலி என தொடர்ந்து படுத்திக் கொண்டேயிருக்க, என் மன்னியும், மற்றும் உற்றார்களும், ஏன் நம் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களும் சுகர் டெஸ்டுக்கு பரிந்துரைத்தார்கள். அதன்படி எடுத்துப் பார்த்ததில்,  அதன் அளவு எக்கச்சக்கமாக இருக்கவே அன்றிலிருந்துதான் நான் எ.பியில் அனைவருக்கும் வணக்கம் கூறுகையில் "இன்னாள் இனிமை நிறைந்த நன்னாளாக இருக்க வேண்டுமென்ற" அந்த வாசகத்தையே விட்டு விட்டேன். "எவ்வித கலக்கங்களும் இல்லாத நன்னாளாக"என்ற வாசகம் என்னையறியாமல் அன்றிலிருந்து அங்கு தினமும், இடம் பெற்று விட்டது. இப்போதும் பெறுகிறது:) ) (அப்பாடா.... இதற்கும் யார் கேட்கிறார்களோ இல்லையோ ஒரு விளக்கம் தந்தாகி விட்டது.) 

இனிப்பின் அளவை கேட்டு பிரமித்த அந்த மருத்துவர் " இன்னுமா அதற்குரிய மருந்துக்கள் எடுக்கவில்லை" என கடுப்புடன் கேட்டவர், அதன்பின் உடனே இரத்த அழுத்த அளவையும் எடுத்துப் பார்த்து விட்டு எங்களையும் பிரமிப்பில் ஆழ்த்தி விட்டார். அப்புறமென்ன.... அவர் முகத்தில் நிறைய கடுப்புடன் முதலில் பல் உபத்திரவதிற்கு மட்டும் மருந்து மாத்திரைகளை எழுதி தர, அவரிடமிருந்து அனேக வலிகளுடன் விடைபெற்றோம். 

அந்த மாத்திரைகள் எனக்கு சில ஒவ்வாமையை தந்தோடு, ஒரு வாரத்தில் பின் விளைவாக பைல்ஸில் கொண்டு விட்டது. அப்புறம் மறுபடியும் வேறொரு வலிகளுடன் கூடிய அவஸ்த்தைதான்....மறுபடி நான் ஆயுர்வேதத்திற்கு வழக்கப்படி மாறினேன். (அதற்கான  மருந்துகளும் அவ்வப்போது இந்த அவஸ்தைகளுக்கு ஏற்கனவே பல முறை எடுத்து பழக்கம்தான்..... ) அந்த சமயத்தில் எங்கள் வீட்டில் அனைவரும், ஊரிலிருந்து வந்த மகன் உட்பட மைசூர் பிரயாணத்திற்கு முன்பே கார் புக் செய்து கிளம்பவும், எனக்கு இந்த பயணத்தில் மைசூர் போகிற வழியில் ஸ்ரீ ரங்கபட்டிணா சென்று ஸ்ரீ அரங்கநாதனை தரிசிக்க ஆவல் எனச் சொன்னேன்." சரி.. அதற்குள் உனக்கு உடம்பு குணமாகி விட்டால் கிளம்பலாம்" என்று அவர்கள் சொல்லவும் வலிகளோடு நாட்களை அவனை தரிசிக்கும் ஆவலில், ஆசையில் கடத்தியும், ரங்கநாதன் என்னை அவனைப் போலவே அனந்தசயனமாக்கி அழகு பார்த்ததோடு சரி.... என்னை கிஞ்சித்தும் நடமாடி அசைய விடாமல் வேறு "அவன் "ரசிக்க ஆரம்பித்து விட்டான். வேறுவழி...... என் மகள் எனக்கு துணையிருக்க அவர்கள் அனைவரும் அரங்கனை தரிசிக்க கிளம்பிச் சென்றார்கள். அரங்கனை தரிசித்து விட்டு அப்படியே மைசூர் பயணத்திற்கும் சென்று வந்தார்கள். அதன் பின் வந்த நாட்களில்தான்  உடல் நிலைகள் நடுவே நானும் அவ்வப்போது அனைவரின் பதிவுகளுக்கும், எ.பிக்கும் வந்து "இடுக்கண் வருங்கால்...." என்ற வரிக்கேற்ப உலா வந்தேன். (அப்பாடா...... இப்பவாவது ஒரு வழியாக தலைப்பிற்கு ஏற்ற வரிகளுக்கு கிட்டத்தில் வந்து விட்டேன். :)) 

அதன் பின் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக பச்சைக் கொடி காட்டி என்னுடன் சமாதானபடுத்திக் கொண்டதும், மகனுடனும், குடும்பத்துடனும் சில பயணங்கள்  அவசரமாக   (அதன் பிறகு மகன் தன் ஊருக்கு திரும்பி விடுவாரே) சென்றோம். அதைப்பற்றி அடுத்தப்  பதிவில் கூறுகிறேன். எப்படியோ நானும் என் அறுவை பதிவுக்கு இப்படியாகிலும் ஒரு வழி அமைக்க வேண்டுமே?

சரி... .அந்த இரண்டாவது தலைப்பிற்கு வருவோமா? இப்பவும்  ஒரு வாரமாக எனக்கு என்ன பிரச்சனையென்றால், அளவில்லா சுகருக்கு மருத்துவம் பெற ஒரு அலோபதி மருத்துவரிடம் சென்றால், அவர் மறுபடியும் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து அதிக இரத்த அழுத்தத்திற்கு முதலில் பத்து நாளைக்கு ஒரு மருந்தும், கால்வலிக்கு மருந்தும் தந்திருக்கிறார். அதுவே எனக்கு ஒவ்வாமை தராமல் இருக்க வேண்டும். மறுபடி அடுத்த வாரம் இனிப்பை பரிசோதனை செய்து அதற்கான மருந்துகள் தந்து அது எனக்கு ஒத்து வருகிறதா எனப் பார்த்து,...... ஒத்து வராவிட்டால் வேறு மருந்தை பரிந்துரை செய்வாராம்..... ஆண்டவா..... மழை விட்டும்....... தூவானக்கதையாக ஏன் இப்படி?  கடவுளே.. என்னை ஏன் இப்படி சோதனை செய்கிறாய்? எனும் போது என் மனதுள் மறுபடி அந்த பாடல் ஒலிக்கிறது. 

ரொம்ப நாட்களாக (மாதங்களாக) எதுவும் எழுதி யாரையும் அதைப் படிக்கும் அவஸ்தைகளுக்கு உள்ளாக்கவில்லயே  எனத் தோன்றியதின் விளைவாக இந்தப்பதிவு எழுதி விட்டேன். "இத்தனை நாட்கள் கழித்து ஒரு பதிவு எழுதினால் இப்படியா ஒரே ரம்பமாக" என நீங்கள் மனதினுள் லேசாக நினைப்பது கேட்கிறது. ஏதோ இங்கு வந்து என் அன்பான உறவுகளாகிய உங்களிடம் சொன்னால் எனக்கொரு மன ஆறுதல். சந்தோஷம்.  அவ்வளவே... 

ஆகா......பதிவை படித்தவுடன் யாரோ அந்தப் பாடலைப் பாடுவது போல், என் காதிலும் கேட்கிறதே.....ஹா ஹா ஹா .  

அட....அது நீங்கள்தானா?:))) 

Tuesday, November 30, 2021

விருந்தும், மருந்தும்.

 வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே.

அந்தக் காலத்தில் மருந்தும், விருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். .அதன் அர்த்தம் உண்மையில் உணர்ந்து சொல்லப் பட்டதுதான் போலும் . 

எதிர்பாராமலோ இல்லை, எதிர்பார்த்தோ, விருந்தாளிகள்  வீட்டிற்கு வந்து விட்டால்,((அது போல் எதிராளி அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் சரி..இதே நிலைமைதான். .. ) அன்று முழுவதும் உபசாரம் காலை, மதியம், இரவு என தடபுடலாக இருக்கும். தனக்கு தெரிந்த சமையல் ஐட்டங்களை எல்லாம் வந்த விருந்தாளிகளுக்கு செய்து கொடுத்து அவர்களிடம் பாராட்டுகளை  எப்படியாவது பெற்று விட வேண்மென்ற  அவா அன்று முழுவதும் ஓய்வில்லாமல் வீட்டிலிருப்பவர்களை உழைக்கச் செய்து விடும். 

வரும் மறுநாளுடன் இரண்டொரு நாட்களில் கொஞ்சம் நார்மலாகி, வெளியில் எங்காவது கோவில், குளம், பூங்கா, சினிமா என்ற பயணங்களுடன் மாறுதலுக்கு ஒரு பொழுது அவர்களுக்கு (கவனிக்கவும்.. வந்து சந்தோஷிக்கும்  விருந்தினர்களுக்கு அல்ல....)  பிடித்தமான உணவகங்களுக்கு அழைத்துச் செல்லல், அங்கு அவர்களுக்கு (இங்கும் விருந்தாளிகளுக்கு அல்ல....) பிடித்தமான உணவை வாங்கி தருவது என பொழுது முடிந்து விடும். 

மூன்றாவது, நான்காவது நாளில், இல்லை ஐந்தாவது நாளில், காலை எழுந்திருக்கும் போதே வந்த விருந்தினரை விட வீட்டிலிருப்பவர்களுக்கு ஒரு சோம்பல்,  இனம் புரியாத ஒரு கடுப்பு இவைகள் அன்றைய சூரிய உதயத்துடன் அவர்களுக்குள்ளும் உதயமாகி விடும். இரண்டொரு நாள் உபசாரத்தின் பலனாக அன்று சிம்பிளான உணவே போதுமென அவர்களே முடிவு செய்து விடுவார்கள். 

மறுநாள் வந்தவர்கள் பெட்டியை கட்டும் போது, "இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டு போகலாம்... அதற்குள் காலில் கஞ்சியை கொட்டிக் கொண்ட மாதிரி என்ன அவசரம்?  எப்போது வந்தாலும் இப்படித்தான் நீங்கள் அவசரப்பட்டு செல்கிறீர்கள்....அடுத்த முறை வரும் போது ஒரு வாரம் தங்குகிற மாதிரி வாருங்கள்.... இன்னும் நிறைய இடங்களுக்கு உங்களை சுற்றிப்பார்க்க அழைத்துப் போக வேண்டுமென நினைத்தோம் ...தெரியுமா? " என்ற உபசார வார்த்தைகளை  அள்ளி வீசுவார்கள். (அதுவும் அவர்கள் கிளம்புவதை உறுதி செய்து கொண்ட பின்தான்...:) )  ) வந்த விருந்தாளிகளுக்கும் தெரியும். இது வெறும் உதட்டளவில் இருந்து வரும்  வாய் வார்த்தைதான்... உள்ளத்திலிருந்து வரவில்லை என்பது.... அவர்களும் புன்னகையுடன்" அதற்கென்ன....! அடுத்த முறை வரும் போது தங்கி விட்டால் போச்சு....! நீங்களும்  எங்கள் வீட்டுக்கு எப்போது வந்தாலும் அரக்கப்பரக்கத்தான் கிளம்பி விடுகிறீர்கள். நிதானமாக தங்கிச் செல்லும்படி ஒரு முறையாவது வாருங்கள்." என்று அன்பொழுக மறுமொழி சொன்னாலும், உள்ளுக்குள்  எங்கே அந்த மாதிரி வந்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வும், எச்சரிக்கையாக எட்டிப் பார்த்தபடி இருக்கும். இவர்களுக்குள்ளும் அதே உணர்வு இருக்கையில் எப்படி அந்த மாதிரி செல்வார்கள். 

ஆக விருந்தோம்பல்கள் இந்த மாதிரியான எண்ணங்களுடன் நாட்களை கடத்தி விடும் என்பதை நிஜமாக என் அனுபவத்தின் மூலமாக நான் இங்கு சொல்லவில்லை. (நம்பாதவர்களும் நம்பித்தான் ஆக வேண்டும் என தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறேன்.... :) ) இது விருந்தோம்பல்கள் செய்தவர்கள், விருந்தோம்பலில் திளைத்தவர்கள் என ஒவ்வொருவரும் கதையாகவோ/ கற்பனையாகவோ, எழுதி/ சொல்லி, கேள்விபட்டதை மட்டுந்தான் சொல்கிறேன். 

முன்பு  இந்த விருந்தோம்பலை குறித்து  ஒரு கதை எப்போதோ சிறுவயதில் படித்தது நினைவுக்குள்  வருகிறது. 

ஒரு குடும்பம் தங்கள் வீட்டுக்கு வேறு உறவுகள் இரண்டொரு நாள் தங்கிச் செல்வதாக வரும் கடிதம் (அந்த காலத்தில் கடிதந்தானே. )  கண்டு, அவர்கள் வருவதையும், அவர்களுக்கு உபசாரங்கள் செய்வதை விரும்பாதவர்களாவும் , அவர்கள் கடிதம் போட்டதே வந்து சேராத மாதிரி காட்டிக் கொள்வதற்காவும் அவர்கள் வருவதற்குள் பக்கத்து ஊரிலிருக்கும் வேறு ஒரு உறவினர் வீட்டுக்கு  இரண்டு நாட்கள் தங்கி வரலாமென அவசரமாக கதவை பூட்டிக் கொண்டு கிளம்பிச் செல்வார்கள். ஆனால் அங்கு அவர்களும், அன்றுதான் இதைப்போல் எண்ணம் கொண்டவர்களாக அருகிலிருக்கும் ஊரில் உள்ள  வேறொரு சொந்த உறவின் வீட்டுக்கு கிளம்பி போயிருப்பதாகவும், வருவதற்கு இரண்டொரு நாள் ஆகுமென கூறிச் சென்றதாகவும், பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் சொல்வார்கள். அவர்கள் சென்று தங்க விருப்பம் கொண்ட அந்த உறவு  யாரென இவர்கள் விசாரிக்கும் போது, பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் தங்களுக்கு   தெரிந்த வரையில் ஊர், பெயர் எனச் சொன்னது  தாங்களாக இருக்கக் கண்டு அதிர்ச்சியடைவார்கள். வேறு வழியின்றி திரும்ப கிளம்பி தங்கள் வீட்டிற்கே சென்றால், அங்கு "இரு பக்க மேளமே" என எண்ணி அக்குடும்பத்தின் தலைவரும்  தலைவியும் பேசிக் கொள்வதென்று கதை  மிகவும் நகைச்சுவையாக இருக்கும். கதையின் பெயர் "விருந்து சாப்பாடு." என நினைக்கிறேன். யார் எழுதியது என்றெல்லாம் நினைவில்லை. எங்கள் அம்மா பள்ளி கோடை விடுமுறை நாட்களில், இது போன்ற நகைச்சுவை கதைகளை படித்து சொல்வார்கள். எழுத்தின் சுவாரஷ்யத்தில் நாங்களும் மறுபடி படிப்போம். அதனால் ஏதோ நினைவிலுள்ளது. 

அதே போல் சிறுவயதில் பாட்டியிடம் கேட்ட கதை ஒன்றும் நினைவில் உள்ளது. 

ஒரு புதிதாக திருமணமான மாப்பிள்ளை தன் மாமியார் வீட்டிற்கு மகிழ்ச்சியோடு விருந்தோம்பலுக்கு செல்வார். அவர் மனைவியும் தன்னையும், கணவரையும்,  விருந்துக்கு அழைக்க வந்த தன் தாய் தந்தையருடன் தங்கள் வீட்டுக்கு வரும்படி  வறுப்புறுத்தி கணவரை அழைத்து விட்டு, தன் தாய் தந்தையாருடன் தன் அம்மா வீட்டிற்கு ஒரு வாரம் முன்பாகவே சென்றுள்ளார். எனவே இந்த மாப்பிள்ளை அடுத்த வாரத்தில் ஒருநாள், தன் அம்மாவிடம் தான் ஒரு வாரத்திற்கும், மேலாக அங்கு சென்று தங்கி விட்டு வரும் போது தன் மனைவியையும் அழைத்து வரப் போகிறேன் எனச் சொன்னதும், தாயின் முகத்தில் தெரிந்த கவலை கண்டு, "என்னம்மா. . நான் அங்கு சென்று கொஞ்ச நாட்கள் போல தங்குவது உனக்கு பிடிக்கவில்லையா? எனக் கேட்டதும்,  "மகனே, நீ உன் மாமியார் வீட்டிற்கு சென்று வருவதில், எனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை. ஆனால் " விருந்தும், மருந்தும் மூன்று நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் "என்ற (மூத்தோர் சொல்வாக்கு) பழமொழி உனக்கு தெரியாதா? அதை நினைத்தேன் கவலை வந்தது" என்றாள் தாய். 

"அம்மா. அவர்கள் வீட்டில் அனைவரும் வருந்தி, வருந்தி அழைக்கிறார்கள். நம்மை விட அதிகப்படியாக வயல் வரப்பும், கன்றும், மாடுமாக இருக்கும் அவர்களை விட, நாம் கொஞ்சம் வசதி குறைந்தவர்கள்தான்.. ஆனாலும் அவர்கள் விரும்பிதானே இங்கு வந்து மணமுடித்தார்கள். எனவே அங்கு எனக்கென்றும் ராஜ உபசாரந்தான் நடக்கும். எனவே வீணாக கவலைப்படாதீர்கள்." என சமாதானபடுத்தியதும், அம்மா சொல்வாள். 

" மகனே, உன் நம்பிக்கைக்கு ரொம்ப சந்தோஷம். உனக்கு நல்ல உபசாரங்கள் செய்வார்கள் என நானும் நம்புகிறேன். நீ எனக்கு ஒரே பிள்ளை. உனக்கு கிடைக்கும், பெருமைகள் என்னை மிகவும் சந்தோஷபடுத்துவதைப் போன்று உன் அவமானங்கள் என்னை காயமும் படுத்தும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். சரி.. போய் விட்டு வா.... ஆனால், அங்கு உனக்கு இலையில் என்று வெறும் சோறும், பருப்பில்லாத குழம்பும், அலட்சியமாக வந்து  அமர்கிறதோ அன்று கிளம்பி வந்து விடு... அதற்கு மேல் அங்கிருந்தால்  உனக்கும்  சரி, எனக்கும் அங்கு மதிப்பில்லை.. " என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தாள். 

இவர் அங்கு கிளம்பி போனதிலிருந்து இரண்டொரு நாள் அந்த மாமியார் வீட்டில் உண்மையிலேயே ராஜ உபசாரந்தான். காலை விதவிதமான பலகாரங்களுடன், மதியம், இரவென தலைவாழை இலை போட்டு, சிறப்பான உணவுகள் பறிமாறியதுடன், வெள்ளி டம்ளரில் பாயாசமுமாக அமர்க்களமான உபசாரங்களுமாக திணறிப் போனார் நம் மாப்பிள்ளை. 

மனைவியின் அன்பிலும், மாமனார். மாமியாரின் மரியாதையிலும், மனைவியின் உடன் பிறந்தவர்களின்  அன்பான கேலி குறும்பு கலகலபேச்சுகளிலும் இவர் உலகத்தையே மறந்து விட்டார் என்று கூடச் சொல்லலாம்.( இதில் தன் அம்மாவின் நினைவு எங்கிருந்து வரும். அந்த நேரம் வானத்திலிருந்துதான் நீ உதித்தாய் என யாராவது சொன்னால் கூட ஆமென்று தலையாட்டி ஆமோதித்து விடுவார்.) 

மேலும் வந்த  இரு தினங்களில், இனிப்புகள், வடை பாயசத்தோடு என உணவுகள் தினுசு, தினுசாக இல்லையென்றாலும், வாய்க்கு ருசியாக பலவித காய்களோடும், கனிகளோடும் உபசாரமாக இருந்தது 

அந்த நாட்களும் மறுநாளுக்கு  நகர அன்று அதுவரை உணவருந்தும் வேளாவேளைக்கு மாமனாரோ, இல்லை, புடவை தலைப்பை இழுத்து போர்த்தியபடி மரியாதையுடன் வந்தழைக்கும் மாமியாரையோ தவிர்த்து அந்த ஐந்தாவது நாள், அவர்களின் கடைக்குட்டி பையன் வந்து மாப்பிள்ளை தங்கிருந்த அறையை தட்டி, "வாங்க.. தட்டு போட்டாச்சு. அப்பா சாப்பிட அழைக்கிறார்.. " என அழைத்ததும்தான் கொஞ்சம் அங்குள்ள இங்கிதம் புரிய ஆரம்பித்தது நம் மாப்பிள்ளைக்கு. 

அது வரை தலைவாழை இலையிருந்த இடத்தில் ஒரு தட்டும் டம்ளரில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. தட்டில், வெறும் சோறும், பருப்பில்லாத ஒரு புளிக்குழம்பும் ஆங்காங்கே காய்ந்தும், சில இடங்களில் காயாதபடிக்கு ஒரு சுட்ட அப்பளமும் வந்தமர்ந்தவுடன் தன் அன்னையின் நினைவு லேசாக வந்தது நம் மாப்பிள்ளைக்கு. 

அதுவரை அவர் முதலில் இலையில் கை வைத்து சாப்பிட ஆரம்பிப்பதற்காக பல தடவைகள் அவருக்காக காத்திருந்த மாமனார், "வாங்க மாப்பிள்ளை சாப்பிடுங்க.. என்றபடி, அன்று சாப்பிட்டு முடிந்தற்கான அறிகுறியுடன் எழுந்து கையலம்ப பின்பக்கம்  போனார். அருகிலிருந்த மனைவி," அப்பா, அம்மாவுக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கு. அதான் இன்னைக்கு சமையல் சரியில்லை. இவ்வளவுதான்....இன்னைக்கு அம்மாவால் பண்ண முடிஞ்சது.. " என்றபடி சொன்னாலும், "இது பண்ணியதே பெரிய விஷயம்" என்ற  அலட்சியம் வெளியில் கிளம்பி கொண்டிருந்த மாமியாரின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. 

" அதன் பின் அன்று மாலையே  வலுக்கட்டாயமாக, உடனடியாக தன்னுடன் தீடிரென கிளம்ப மறுத்து சில நாட்கள் கழித்து, தன் தந்தையுடன் வந்து சேருகிறேன்.. " என்ற தன் மனைவியை, மேலும் வறுப்புறுத்தாது அவள் விருப்பப்படி அவளை அங்கு விட்டு விட்டு தன் அம்மாவின் அறிவுரையை நினைத்து வியந்தபடிக்கு தன் ஊருக்கு அந்த அன்பான தாய்க்கு மகனாகிய அந்த மாப்பிள்ளை வந்து சேர்ந்தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ. .. ...? 

இந்தக் கதை ஒரு மனிதரின் மான அவமானங்களை குறிப்பிடுவதற்காக எவராலோ கற்பனை செய்யப்பட்டு செவி வழி  கதையாக சுற்றி வந்ததோ, அதுவும் தெரியாது. ஆனால், விருந்து என்பது செய்பவர்களுக்கும், சாப்பிடுவர்களுக்கும் பொதுவாக நீண்ட நாட்களுக்கு நிலைத்து  நின்று எடுபடாது என்பதை புரிய வைக்கிறது. 

அது சரி...! இதற்கும் மருந்துக்கும் என்ன சம்பந்தம் எனப் பார்த்தால், அந்த காலத்திலிருந்தே உடல் நிலை பாதிக்கும் போது, மூன்று வேளையோ, இல்லை அதிகப்படியாக மூன்று நாட்களுக்கோ மருந்தை கையாள சொல்லி, மருத்துவர்கள் தருவார்கள். அதற்குள் அந்த நோயும் அந்த மூன்று வேளை, இல்லை மூன்று நாட்கள் மருந்துக்கு கட்டுப்பட்டு, படிப்படியாக நம்மை விட்டு அகன்று விடும். விருந்தும் தினசரி ஒரேடியாக விதவிதமாக திகட்டும்படி சாப்பிட்டால், வயிறு ஒவ்வாமை வந்து விடும். அதனால், இந்த விருந்துக்கும், மருந்துக்கும் ஒரு முடிச்சு போட்டு அந்தக்கால பெரியவர்கள் இவ்வாறு கூறி வந்தனர். (அப்பாடா.. கடைசியில் பதிவின் தலைப்புக்கு  ஏற்றபடி ஒருவழியாக விளக்கம் தந்து விட்டேன் என நினைக்கிறேன். :) ) 

இதில் சில உபாதைகளுக்கு சிலருக்கு வாழ்நாள் முழுக்க மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிலரை நலம் விசாரிக்கும் போது," ஏதோ இந்த மருந்துகளின் துணையால்தான் நடமாடிக் கொண்டிருக்கிறேன். " என்பார்கள். சிலருக்கு ஒன்று மாற்றி ஒன்றாக ஏதேதோ உபாதைகள் வந்து படுத்திக் கொண்டேயிருக்கும். (சற்றேறக்குறைய என்னைப் போல என வைத்துக் கொள்ளுங்களேன். . ) எதற்கென்று மருத்துவரை அணுகி, எதற்கென்று மருந்து சாப்பிடுவது? அப்படியே போனாலும், நம் பாலாஜிக்கு  விவேக் (கடவுள் அல்ல... ஆனால், அவரும் அப்படித்தான் சொல்வார். :)) சொல்வது போல் "ஏதாவது ஒண்டிரண்டு உபாதைகள் எனச் சொன்னால் பரவாயில்லை. உன் வியாதிகளுக்கு ஒரே ஒரு மருந்துதான்  தீர்வு" எனச் சொல்லி விடுவார்களோ என கொஞ்சம் தயக்கமாக உள்ளது.... :) எப்படியோ எல்லோரும் நோய் நொடிகளின்றி நலமாக வாழ அவரவர்களுக்காவும், மற்றவர்களுக்காகவும் இடைவிடாது இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்.🙏.

ஏதோ எனக்குள் தோன்றிய சாதாரண எண்ணங்களை பகிர்ந்துள்ளேன்.  இப்போதுள்ள இந்த காலகட்டத்தில் மேற்சொன்ன கதைகளின்படி எதுவும் நடவாது. நகைச்சுவையாக எழுதி பகிர்ந்ததை நகைச்சுவைக்காக படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

Sunday, July 25, 2021

இனிப்பு போளி....

 பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..

ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், சரஸ்வதி பூஜை, தீபாவளி, போகி பண்டிகை என விஷேட தினங்களில் கண்டிப்பாக இந்த போளி  வடை, பாயாசத்தோடு இணைந்து  மதிய உணவோடு ஐக்கியமாகும். இப்போது அப்படியெல்லாம் பண்ணவும் இயலவில்லை. வடை, பாயாசமே சாப்பிட முடியாத அதிகப்படியான  உணவாக போய் விடுகிறது. மற்றும்  அன்றைய தினத்தில் செய்வதற்கு நேரமும் இருப்பதில்லை. இதைப் போல்  இடைப்பட்ட நாளில் ஆசைக்காக என்றைக்காவது இதை செய்து சாப்பிட வேண்டியுள்ளது. அப்படி ஒருநாள் தீடிரென தனித்து உதயமான போளி இது. 


முதலில் கடலைப் பருப்பை அரை டம்ளர் எடுத்து கொண்டு வெறும் கடாயில் சற்று  சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

 

வறுத்ததை ஒரு தடவை அலம்பிய பின் கொஞ்சம்  அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு ஊற விடவும். 


ஒரு 25 (நல்ல வேளை.. இந்த தடவை  கணக்கில் கோட்டை விடவில்லை. எண்ணி வைத்தது சரியாக உள்ளது.:) ) பாதாமை எடுத்துக் கொண்டு அதையும் அலம்பி அந்த கடலைப் பருப்புடன் சேர்ந்து ஊற விிடவும்


க. பருப்புடன் சேர்ந்து சமர்த்தாக "நாங்கள் ஊறிக் கொண்டிருக்கிறோம்". ..என எவ்வித பிணக்கும்  காட்டாது ஒத்துழைத்த பாதாம் பருப்புகள். 


ஒரு அரைமணிநேரம் ஊறிய பின் அதே தண்ணீருடன் இரண்டையும் ஒரு கனமான பாத்திரத்தில் போட்டு ஒரளவு வாசனை வரும் வரை  வேக வைத்துக் கொள்ளவும்..


இது போளி மாவு. "மைதா உடம்பிற்கு கெடுதலாயிற்றே... .பேசாமல், கோதுமை மாவை சிபாரிசு செய்து விடலாமா....?" என்ற நம் யோசனையை புரிந்து கொண்ட மாதிரி  சற்று சோகமாக இருந்தது. "ஒரு நாள்தான் என்னை சேர்த்துக் கொள்ளுங்களேன்.... நான் என்ன அவ்வளவு பொல்லாததுவா. ...?முன்பெல்லாம் என்னை வைத்து, தோசை, பரோட்டா என்றெல்லாம் செய்து என்னை மகிழ்விக்கவில்லையா...? என கெஞ்சும் குரலில்  நியாயமாக கேட்டதும் மைதா மாவு கொண்டு கலந்து வைக்கப்பட்ட போளி மாவு

    

மைதாவுடன் மஞ்சள்தூள்  உப்பு, ந.எண்ணெய் கலந்து  தேவையான தண்ணீர்விட்டு நல்ல தளர்வாக கலந்து வைத்ததும், மைதாவுக்கு உண்டான சந்தோஷத்தை சொல்லி மாளவில்லை. "எண்ணெய் மினுமினுப்புடன் நான்  எவ்வளவு அழகு பார்த்தாயாா?" என கலக்கும் போதே ஆயிரம் முறை கேட்டு விட்டது. 


"ஆன்லைன் வர்த்தகத்தில் தேங்காய்கள் வாங்குவதால், சின்னதான இந்த தேங்காய்தான்  எனக்கு அன்றைய தினம்  கிடைத்தது.....பெரிய தேங்காயாக வந்திருந்தால் தேங்காய்ப்பூ கணிசமாக கிடைக்கும். சமயத்தில் அதுவும் இளசாக வழுக்கையாகவும் அமைந்து விடும். எதுவுமே நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து தான் அமையும்.. . ஆனால்,...." மேற்கொண்டு என்னை விமர்சிக்க விடாமல்  தடை செய்தது ஒரு குரல்." சரி..  சரி.... ரொம்ப அலட்டிக்காதே...! இந்தளவிற்கு நான் கிடைத்ததே உன்னுடைய அதிர்ஷ்டம்தான்.  . என்னைத்தான் தேர்ந்தெடுத்து என் உடல் மனம் வலிக்கும் வரை உடைத்து விட்டாயே...! பின் என்ன  அங்கலாய்பபு...? " மூடியிருந்தாலும்  தேங்காய், அதன்  ப(சி)ல்லுகள்  இருந்த  தைரியத்தில் வாய்க்குள் முணுமுணுத்தன.) 


பின் என்ன.. .? தேங்காய் சொன்னது போல், மேற்கொண்டு அங்கலாய்காமல்,  உடைத்த தேங்காயிலிருந்து அதன் ப(சி)ல்லுகளை அகற்றி எடுத்தேன்.  (எப்போதும் நான்  தேங்காயை பொடிதாக துருவி விடுவேன். அன்று கொஞ்சம் பிற வேலைகள் அதிகம். அதனால் மிக்ஸியில் போட்டு விடலாம் என ப(சி) ல்லுகளாக எடுத்துக் கொண்டேன்.) " போதுமே உன் பெருமை....! எப்படியோ என்னிடமிருந்த சொத்துக்களை  அகற்றி என்னை வெறும் ஓடாக்கி விட்டாய்... என தேங்காய்  மறுபடியும் என்னை கோபத்துடன் முறைக்க,   நல்லவேளை. ..! அதிலிருந்து வெளிவந்த தேங்காய் ப(சி)ல்லுகள்  அந்த  முழு தேங்காயைப் போல், "என்னை அதிகம் பேசாதே.... ... அங்கலாய்காதே... ..." என்று கடுப்புடன் சொல்லாமல் என் சொல்லை  ஆமோதிக்கிற மாதிரி மெளனமாகவே பல்லிளித்து   கொண்டிருந்தன....." 


இந்த அளவு தேங்காய்க்கு இந்த அளவு வெல்லம் எடுத்துக் கொள்ளலாம்... . கூடவே க. ப. பருப்புகள் வேறு இருக்கிறதே..! வெல்லம் அதன் இனிப்பான குணத்தைப்போல மெளனத்துடன் எல்லாவற்றையும் கேட்டபடி அமர்ந்திருக்கிறது. 


முதலில் மிக்ஸி ஜாடியில், தேங்காய் சில்லுகளை பொடிதாக்கி துருவி எடுத்துக் கொண்ட பின் அதற்குள் ஊறி வெந்த  க. பருப்பு. பாதாம் பருப்புகளை, அதனுள் போட்டு அதையும் நைசாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொள்ளவும். 


ஒரு கடாயில், துருவிய தேங்காயையும், வெல்லத்தையும் போட்டு கொஞ்சமாக.... தண்ணீர் கலந்து..... (அந்த தேங்காய் உடைக்கும் போது கிடைத்த தேங்காய் தண்ணீரே போதும். .) வெல்லப் பூரணத்தை நன்றாக வதங்க  விடவும். 


வெல்லப் பூரணம் நன்றாக வெல்லம் சேர்ந்து வதங்கும் சமயத்தில் பொடித்து வைத்திருக்கும் பருப்பு  கலவைகளை அதனுடன் சேர்த்து கிளறிக் கொண்டேயிருக்கவும்.
 
 

தேங்காய், வெல்லம், பருப்புக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாங்கள் பூரணத்துவம்  பெற்று விட்டோம் என மகிழ்கிறது. தேங்காயும் தன் கோபம் தவிர்த்து மற்றவைகளுடன் சினேகமாக இணைந்து கொண்டது. 


இறுதியில் தன்னுடன் சேர்ந்த ஏலக்காய் பொடியின் வாசனையில்  அந்த வெல்லப்  பூரணம் மிகுந்த மகிழ்வையடைந்தது. 


"இந்த சந்தோஷத்துடனேயே  சற்று நேரம் பேசிக் கொண்டிருங்கள். நீங்கள் என் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், உங்களை  கலந்து  வைத்திருக்கும் மாவுடன்் சேர்த்து  "போளி" என்ற பெயரை உங்களுக்கு சூட்டி விடுகிறேன். .." என்றதும், ஒன்றுடன் ஒன்று கைகுலுக்கிபடி "காத்திருக்கிறோம்" என்றது  வெல்லப் பூரணம். 


கொஞ்ச நேரத்தில் என சொல் கேட்டு உருண்டைகளாக மாவும், பூரணமும் தட்டில் அமர்ந்தபடி " பிறந்த சொந்த கதை, இங்கு வந்த கதை" என அளவாளாவி .கொண்டிருக்கிறது. 



போளி தட்டிச் சுட  வாழை இலை மிகவும் நன்றாக இருக்கும். சுடும் போது தோசைக்கல்லில் எடுத்துப் போட அமைப்பாகவும் வரும். அந்த இலை வாசனையே ஒரு தனிச்சுவை. ஆனால் நினைத்தவுடன் வாழை இலைக்கு எங்கே போவது? .  அதனால்் நெய் வந்த அலுமினிய கவரை தேர்ந்தெடுத்து கொண்டேன். மைதா மாவு உருண்டையை ந. எண்ணொயை கைகளில் தொட்டுக் கொண்டு மாவை பரத்தி, 


அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடிக் கொண்டு சுற்றிலும் உள்ள மாவை , நல்ல வட்டமாக மூடிக்கொண்டு மாவோடு சேர்த்து வட்டமாக தட்டி, 


எடுத்து எண்ணெய் தடவிய தோசைக் கல்லில் போட்டு சிவக்க வெந்ததும், 


மறுபுறம் திருப்பி, போட்டு, சுற்றிலும் கொஞ்சம் நல்லெண்ணெய்  விட்டு மறு புறமும் வெந்ததும் எடுத்து, .


இப்படி தட்டில் அடுக்க வேண்டியதுதான். சூடாக சாப்பிடும் போதே போளியில் நெய் விட்டு சாப்பிடலாம். நான் தோசைக் கல்லில் எண்ணெய்க்கு பதிலாக நெய் விடுவதில்லை. சூடு ஆறியதும் உறைந்து விடும். அதனால் சுட்டெடுத்து பின் சூடாக சாப்பிடும் போது அவரவர் விருப்பப்படி நெய் விிட்டுக் கொள்ளலாம்.. என்பது என் கருத்து. 


"இப்போது எப்படி.... நான் அழகாக இருக்கிறேனா?" எனக் கேட்கும் போளிகள். 


நீங்களும் வேண்டியதை எடுத்துக் கொள்ளலாமே. .. .. .! போளி எப்படி உள்ளதென அன்புடன் கருத்துரைகளை தாருங்கள். நன்றி. 🙏. 

அன்புடன் வந்து தெரிந்த சாதாரண பக்குவமானலும், பதிவை படித்து, சுவையான போளிகளை எடுத்துக் கொண்ட அத்தனை சகோதர, சகோதரிகளுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள். 🙏. 

Monday, July 16, 2018

உடைத்த அரிசி கொழுக்கட்டைகள்.

தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ,  ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு  கட்டளை இடுகிறது. என் மனசு மட்டுமில்லை... வீட்டிலுள்ளவர்களின் மனங்களுந்தான். சரி . நமக்கு தெரிந்த சிற்றுண்டி செய்யலாம் என்றால் வீட்டில் அனைவரிடமிருந்தும் ஒவ்வொரு வகை பட்டியல் கிளம்பி விடும்.  பரோட்டாவிலிருந்து, சப்பாத்தி, பூரி, வந்து இட்லி, தோசைக்கு தாவி, உப்புமா "போம்மா ஒரே போர்" என்ற விமர்சனம்  செய்து அப்புறம் உன் விருப்பம் உனக்கு எது சுலபமோஅதைச்செய்.. என பச்சை கொடி காட்டியதும், நாம் எது கொஞ்சம் மெனக்கெடனுமோ, அதை தேர்ந்தெடுப்போம்.  அதுதான் நம் ராசி... அரிசி உடைத்து உப்புமா கொழுக்கட்டை செய்யலாமென்று ஆரம்பித்த போது, ஆளாக்கில் எடுத்த அரிசிகள் பேச ஆரம்பித்தன. (பயம் வேண்டாம்... ஒரு கற்பனைதான். இந்த பதிவுக்காக மட்டும் என்னுள் எழுந்தவை.. )  

ஒரு வித்தியாசத்திற்காக இன்று எங்களை பயன்படுத்தி செய்யப்படும் பதார்த்தத்தை நாங்களே சொல்லுகிறோமே.... என்றன ஒவ்வொரு அரிசியும். 
அவைகளின் வேண்டுகோளுக்கு நான் அரை மனதாக இணங்கினாலும்,  "நானும் நடுநடுவில் கொஞ்சம் எடுத்துக் கொடுக்கலாம் என்ற முடிவுடன் "சரி" என்றேன். 


நான்கு டம்ளர் பச்சரிசி  எடுத்துக் கொண்டு அலம்பி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின் ஒரு பெரிய தட்டில் அரிசியை எடுத்து போட்டு உலர வைக்கவும்.
என் நா வழக்கத்தை மாறாது சொல்ல ஆரம்பித்ததும், 

"அட..சே.." இந்த மனிதர்களே இப்படித்தான் சரி யென ஒரு சொல் கூறி விட்டு உடனே மாறி விடுவார்கள்.. படபடவென அரிசிகள் ஒன்றுக்கொன்று பேசி நொடித்துக்கொண்டன. 

உடனே நான் அவசரமாக "ஸாரி" என்றதும்


இது  ஊறிக்கொண்டிருக்கும் அரிசிகளாகிய நாங்கள்...என்று அரிசிகளும் அவசரமாய் ஆரம்பித்தன. 

நாங்களே எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு நாங்கள் உருவாகும் விதத்தை கூறுகிறோம் என்றதற்கு சரியென சொன்னீர்களே.. என ஊறும் அரிசிகள்"உர் "ரென கோபிக்க... 

"சரி, சரி" இனி நீங்களே துவங்கலாம் என சமாதானப்படுத்தி நான் அமைதியானேன். 


இதுவும் நாங்கள்தான் ..ஆனால் எங்களை ஒன்றிரண்டாக உடைத்து "உப்புமா" என்ற பெயர் சூட்டு விழாவுக்கு ஆஜர் ஆகச் சொல்லியதால், அவசரமாக மிக்ஸியில் புகுந்து சுற்றி  வந்ததில் சற்றே துகள்களாக மாறியிருக்கிறோம் .......சற்று களைப்பாக வேறு இருக்கிறோம். கொஞ்சம் நிதானிக்கிறோம்.... என்ற அவகாசத்தில்... 


ஒரு ப்ரெஷர்பேனில் கடுகு அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் , காய்ந்த  மிளகாய் ஒரு ஆறு கிள்ளி போட்டு  தாளிக்கவும். கடுகு வெடித்ததும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கொஞ்சம் பெருங்காயபொடி   போட்டு நான்கு பச்சைமிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து வதங்கி கொணடிருக்கையில், ஒரு சின்ன மூடி தேங்காய் துருவல் சேர்த்து சற்று பிரட்டியதும்  ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று என்ற கணக்கில் 12 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.  தண்ணீர் நன்றாக கொதித்ததும்........ என்று கோர்வையாக நான் மீண்டும் பழக்கதோஷத்தில் சொல்லிக் கொண்டே போகும் போது, 

அரிசிகள் சுயபுராணம் சொல்ல போவதாக சொன்னது நினைவு வந்து நிறுத்தி திரும்பி உடைத்து வைத்ததை பார்க்க, அனைத்து அரிசி குருணைகளும் என் மேலெழுந்த கோபத்தில், மெளன விரதத்தை  தாங்கள் கையாண்டு விட்டதாக அருகில் அஞ்சறைப் பெட்டியில் இருந்த கடுகு உ. ப,  வத்தல் போன்றவற்றிடம் கூறி மெளனமாகி விட்டதாக அவைகளும் ( இதுவும் ஒரு கற்பனையே..) பேச ஆரம்பித்தது... 

சரி.. "நானே கூறி முடித்து விடுகிறேன். "  என்று நான் ஆரம்பிக்க, 

"ஏன் நாங்களும் இதில் உண்டல்லவா? அரிசிகள் மெளன முடிவெடுத்தால், மிச்சத்தை நாங்கள் கூறி முடிக்க கூடாதா என்ன? "என உ. ப, வத்தல் கடுகு போன்றவை கோபத்தில் கடுப்பாக, அதிலும் கடுகு கொஞ்சம் கூட பொறுமையின்றி எண்ணெய்யில் போடாமலே மிகவும் கடுப்பாகி சிடுசிடுத்தது, 

நானும் வேறு வழியின்றி சிறு கடுகுதானே எனஅலட்சியபடுத்தாமல் கடுகுக்கு விட்டுக்கொடுத்து வாய் மூடிய மெளனியானேன். 

(கடுகு சிறுத்தாலும், காரம் குறைவதில்லையில்லையா...) 



அஞ்சரைப் பெட்டியில் நாங்கள் "வந்த கதை போன கதை" என அளவளாவி கொண்டிருந்த போது  எங்களை தனித்தனியே பிரித்தெடுத்து அழைத்து வந்து நெருப்பின் சூட்டுடன் விளையாடச் சொல்லி, பரிசாக தந்த " தாளிதங்கள்" என்ற மற்றுமொரு பெயரையும், வேறு வழியின்றி நாங்கள் சகித்துக் கொள்ளும் தருணத்தில், தேங்காய் துருவல் வேறு எங்களை எட்டி நோக்கி "நானும்" என்றபடி எங்களுடன் குதித்தது.


நாங்கள் சூட்டில் வறுபடுவது போறாதென்று  எங்களுடன் தேங்காய் பூவும் வறுபட்டு  தன் நிறத்தை "கலரிங்" செய்து பெருமைப்பட்டுக் கொண்டது.



அதன் பின் எங்களின் கோபச்சூடு கொஞ்சம்  தணிந்த நேரத்தில், எங்களுக்கு குளிப்பாட்டுவது போல், தண்ணீரை எங்களுடன் கலந்ததும், எளிதில் கோபம் களைந்து குளிர்வானோம். 



ஆனால்,  பெயர் சூட்டு விழாவுக்கு மணியாகிறதென்றும்,  அனைவரும் ஆசி கூறி பின் சாப்பிட காத்திருக்கிறார்கள் என்பதாலும், மறுபடியும் அவசரபடுத்தி தண்ணீருடன் எங்களை கொதிப்படைய செய்து, எங்களுடன் முதலிலிருந்தே உடைபட்ட மனதுடன் வருத்தத்துடன் வாடிய முகத்துடன், மெளனச் சாமியாராக அமர்ந்திருந்த அரிசி குறுமணிகளையும்  எங்களுடன் சேர்த்து கிளறியதும்  நாங்கள் உப்புமா என்ற நாமகரணம் பெற்று அனைவரின் ஆசி(சை) களுக்காகவும், ஆனந்தமாக ரெடியாகி காத்திருந்தோம்..





ஒன்று சேர்ந்த எங்களை ஒரு தட்டில் ஆற அமர வைத்து அழகு பார்த்ததும் நாங்கள் அகமகிழ்ந்து போனோம். பிறகுதான் தெரிந்தது.... மறுபடியும் எங்களை உருமாற்றி எங்கள் பெயருடன் மற்றுமொரு புனைப்பெயரையும் இணைத்து விடத்தான் இத்தனை பிரயத்தனம் என்று புரிந்து கொண்டோம். எத்தனை பெயர்தான் என அலுத்துக்கொள்ளக்கூட எங்களுக்கு  அவகாசமில்லை. சின்ன சின்ன பந்துகளாக மாறிய பின் மற்றொரு சூட்டில் அமர்ந்து வெளிவந்ததும், "உப்புமா கொழுக்கட்டை" என்ற புதுப் பெயருடன் பளபளவென்றிருந்த எங்களைக் கண்டு எங்களுக்கே பெருமையாக இருந்தது. "நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம்"  என்று கூடிப் பேசி மகிழ்ந்து கொண்டேயிருக்கையில்,  மொத்தமாக இருந்த நாங்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சட்டென பிரிபவர்களை மாதிரி கொஞ்ச நேரத்தில் காணமல் போய்க் கொண்டேயிருந்தோம். கூட்டமாக குழுமியிருந்த நாங்கள் எங்கே  எப்படி போகிறோம்... என்று ஒன்றும் புரியாத நிலையில், கடைசியில் ஒன்றிரண்டு மீதமானவர்களுடன் அளவளாவி ஐயத்தை போக்கியதில், 

"நாம் பிறந்த பயனை அடைந்து விட்டோம். நமக்கு முன்னால் பிறந்த மனிதர்களின் சித்து வேலைகளில் இதுவும் ஒன்று. கடவுள்களின் துணையுடன், அவர்களால் உருவாக்கப்பட்டு, அவர்களால் புதிது புதிதாக  பெயர்களை அவர்களின் விருப்பங்களுக்கேற்ப வைக்கப்பட்டு, அவர்களின் ஆத்ம பூஜைக்காக, அவர்களின் வாய் எனும் குகைக்குள் பயணித்து புண்ணியம் அடைவதே நமது பணியாக இறைவன் நம்மை  படைத்திருக்கிறார் என்ற தகவல்கள் புரிபட்டன . வேறு வழி... மீதமிருந்த நாங்களும் கடவுளின் கட்டளைப்படி கடைசி யாத்திரைக்கு பயணமாக, பக்குவமான மனதுடன் காத்திருக்க ஆரம்பித்தோம்.

"இதற்குத்தான் உங்களை அழகாக படமெடுத்த நானே சுலபமாகவும் உங்களை ஒரு உருவமாக உருவாக்கிய கதைகளை சொல்லி முடிக்கிறேன் என்றேன். கேட்டீர்களா? பிறந்ததிலிருந்து புரியாததையெல்லாம், புரிந்த மாதிரி நினைத்துக்கொண்டு, ஒன்றும் புரியாமலேயே நடித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு துணையாகத்தான் உங்களையும் ஆண்டவன் படைத்துள்ளான் என்பதை  உணர்ந்தும், உணராத மாதிரி வந்து சொல்லி உணர்ந்ததும் வீணில் மன வருத்தமடைய வேண்டுமா?" என நான் மெளனம் கலைந்து உபதேசம் செய்து கொண்டிருக்கையில், 

அங்கு மீதமிருந்த பல கொழுக்கட்டைகளும் ஆத்ம பூஜைக்காக குகை நோக்கி பயணப்பட்டு கொண்டிருந்தன.