Showing posts with label காஃபி தயாரிக்கும் முறைகள். அறுசுவை.. Show all posts
Showing posts with label காஃபி தயாரிக்கும் முறைகள். அறுசுவை.. Show all posts

Thursday, September 5, 2024

காஃபியின் வழி முறைகள்.

 இந்த காஃபி குடிப்பது கெடுதல் என்ற பழக்கம் இப்போதுதான்  வந்ததா? இல்லை, காஃபி குடிப்பது என்ற வழக்கம் வந்த  ஆரம்பத்திலிருந்தே வந்ததா? என்றிலிருந்து வந்தது எனத் தெரியவிலலை. ஆனாலும் காஃபியில் இருக்கும் காஃபின் என்ற பொருள், நமது உடலை சுறுசுறுப்பாக வைக்கும், எண்ணங்களை தோற்றுவிக்கும் நமது மூளைக்கு நல்லதொரு செயல்பாட்டை தருமென்பது ஒரு கருத்து. 

காஃபின் என்றால் என்ன?

இது ஒரு இயற்கை தூண்டுதலாகக் கருதப்படுகிறது. இது உலகளவில் பரவலாக நுகரப்படும் பானங்களில் ஒன்றாகும். இது பொதுவாக தேயிலை, காபி மற்றும் கொக்கோ செடிகளில் காணப்படுகிறது. காஃபின் உட்கொள்வது உடலுக்கு சில வழிகளில் நன்மைகளைத் தருகிறது. சோர்வு ஏற்படும் போது காஃபின் எடுத்துக் கொள்வது சுறுசுறுப்பைத் தருகிறது. இது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், விழிப்புடன் இருக்க வைக்கவும் உதவுகிறது.

காஃபின் உட்கொண்ட பிறகு, அது குடலில் இருந்து இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது. அதன் பிறகு இது கல்லீரலுக்குச் செல்கிறது. கல்லீரலிலிருந்து இது பல்வேறு கலவைகளாக உடைந்து, பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. காஃபின் முக்கியமாக மூளை செயல்பாட்டில் வேலை செய்கிறது. அதாவது அடினோசினின் விளைவுகள், மூளையைத் தளர்த்தி சோர்வடையச் செய்யும் நரம்பியல் கடத்தியாக அமைகிறது. ஆனால் காஃபின் உட்கொள்ளல் அடினோசின் வேலை செய்வதைத் தடுத்து சோர்வு மற்றும் மந்தத்தன்மையைத் தவிர்க்க உதவுகிறது.

இதனால் பல தீமைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

பொதுவாக காஃபின் உட்கொள்வது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். காஃபின் ஒரு டையூரிடிக் அமிலமாக இருப்பதால், இவை உடலில் இருந்து அதிக சிறுநீர் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதே சமயம், சர்க்கரையுடன் கூடிய காபி மற்றொரு மோசமான கலவையாக அமைகிறது. இது கோடை வெப்பத்தில் நீரிழப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது.

மற்றும், கோடைக்காலங்களில் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் போது, அது தூக்க முறைகளை சீர்குலைத்து விடலாம். மேலும், கோடையில் அறையின் வெப்பநிலையும் அதிகமாக இருப்பதால் தூங்குவது கடினம். இந்த நேரத்தில், காஃபின் எடுத்துக் கொள்வது அது உடல் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும். இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இதனால், எரிச்சல் மற்றும் சோர்வு ஏற்படும்.

அதிகளவிலான காஃபின் உட்கொள்ளலால் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டும் அதிகரிக்கப்படும். குறிப்பாக, கோடையில் காஃபின் உட்கொள்வது இருதய அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் இதய பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இது உடல் அசௌகரியம் அல்லது பிற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது  

ன்றி கூகுள்.

காஃபி குடிப்பது கெடுதலா , நன்மையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். காஃபி போடுவதே ஒரு கலை என வாதிடுபவர்கள்தான் எனக்குத் தெரிந்த வரை நிறைய பேர்  (உறவுகள்) இருக்கிறார்கள். காஃபி பில்டரில் புது டிகாஷன் இறக்குவதிலிருந்து, பாலை காய்ச்சி, அதற்கு தகுந்த சர்க்கரை சேர்த்து, (அல்லது சர்க்கரை இல்லாமலோ) நல்ல சூட்டில் (கவனிக்கவும். நல்ல சூட்டில்..) கலந்து தருவதை ஒரு அசுவமேத யாகத்தை எவ்வித குறையுமின்றி, தான் பூரணமாக செய்து முடித்த அளவுக்கு திருப்தியடைபவர்கள் நிறைய பேர். சரி..! இவர்கள் எப்போதும் ஒரே மாதிரி இவ்விதம் செய்து அனைவருக்கும்.  (இங்கும் கவனிக்கவும்... தினமும் வீட்டிலிருக்கும் அனைவருக்கும், தவிர எப்போதாவது வெளியிலிருந்து வரும் விருந்தாளிகளுக்கும் இப்படி காலை, மாலை, இடையில் அவர்கள் காஃபி என கேட்கும் போது என்று அவர்களுக்கு கலந்து தரும் அளவுக்கு  பொறுமை உள்ளதா என்றால், அங்கு அதுதான் மிஸ்ஸிங்.)

சிலர் இந்த டிகாஷன் நன்றாக அமைந்தால்தான், காஃபி நன்றாக இருக்குமெனவும், சிலர் பாலின் தரம் சிறப்பாக இருந்தால்தான் காஃபி சுவையாக இருக்குமெனவும், வாதிடுவார்கள். மேலும், காஃபி பில்டரில் உள்ளிருக்கும் காஃபி பொடியில் கொதிக்கும் வென்னீர் மழை விடும் போது அதற்கு குடை வைப்பவர்களும் , குடையை ஒதுக்கி அது நன்றாக மழையில் நனையட்டுமென விடுபவர்களும் உண்டு. இதிலும், குடை தேவையா, இல்லை அவசியமில்லையா என்ற இருவகை கருத்துக்கள் வாதிடுபவர்களுக்குள் எழுவதுண்டு. 

சிலர் அந்தக்காஃபி பொடி சரியில்லை, இதில் காஃபித் தூளில் கலக்கும் சிக்கரி நிறைய வந்து விட்டது எனவும், காஃபி கொட்டையாக கடையில் வாங்கி வீட்டில் அரைத்து நாமே தேவையான அளவு சிக்கரி  கலந்து போட்டால்தான் நன்றாக இருக்குமெனவும், சிலர் சிக்கரி இல்லாமல் காஃபித்தூளை முறையான அளவில் கலந்து உபயோகித்தால் மட்டுமே காஃபியின்  சுவை நன்றாக இருக்குமெனவும், சிலர் பசும்பாலை விட எருமைப்பாலில்  காஃபி திக்காக நன்றாக வருமெனவும், சிலர் பசும்பால்தான் நல்லது எனவும், அவரவர் கருத்துகளை முன்னிறுத்தி, இறுதியில் அதைதான் ஸ்திரமான ஆணித்தரமான உறுதியும் ஆக்குவார்கள்.

காஃபி போடுவதையே விதவிதமாக பழக்கம் வைத்திருப்பவர்களும் உண்டு. சிலர் பில்டர் காஃபியை தவிர்த்து வேறு எந்த முறையிலும் போட முயல கூட  மாட்டார்கள். சிலர் ஒரு பாத்திரத்தில் காஃபித்தூளை போட்டு வென்னீர் கொதிக்க வைத்து அந்த காஃபி பொடியில் ஊற்றி நன்கு கலந்து அதில் சிறிது தண்ணீர் தெளித்த பின் கெட்டியான காடா துணி உதவி கொண்டு மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி காஃபி தயாரிப்பார்கள், அவர்களுக்கு இந்த பில்டர் தேவையேயில்லை. சிலர் இப்போது ஏராளமாக வந்திருக்கும் "தீடிர் காஃபி" பொடியில் காஃபி கலந்து குடித்து விட்டு, வீட்டுக்கு வருபவர்களுக்கும் தந்து விட்டு எதைப்பற்றியும் கவலைபடாமல் "அக்காடா" என்றிருப்பார்கள். சிலர் காஃபி குடிக்கிறீர்களா என வீட்டுக்கு  வந்தவர்களை ஒரு உபசாரத்திற்கு கூட கேட்க மாட்டார்கள். (கேட்டால்தானே இந்த வம்புபெல்லாம்.?:)) ) சிலர் அந்தப் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே ஏற்படுத்திக் கொள்ளாமல், அல்லது நடுவில் விட்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எங்கு சென்றாலும், எந்த பிரச்சனையுமில்லை. (அவர்களால் பிறருக்கும் பிரச்சனைகள் இல்லை.) 

சில பேர்கள் இப்படி திக்காக ஒரே சகதி மாதிரி சிலர் வீட்டில் தருகிறார்கள் எனவும், டிகாஷன் அதிகம் கலக்காமல் பால் நிறைய கலந்து கொடுப்பவர்களை காயத்தால் கால் வீங்கியவர் கால்களை போன்ற மாதிரி வெள்ளையாக அவர்கள் வீட்டில் காஃபி இருக்கிறது எனவும் கிண்டல் செய்வார்கள். 

 (ஆக மொத்தம் நாம் அருந்தும் ஒரு குவளை காஃபியில்தான் எத்தனை வேறுபாடான கருத்துக்கள்? இந்தக் காஃபி அளவுக்கு அதிகமாக அதாவது தினமும் ஓரிரு தடவைகளுக்கு மேலாக குடித்தால் சிலருக்கு தலைச்சுற்றல் வரலாம். சிலருக்கு பழக்கத்தினால் வராமலும்  இருக்கலாம். இது அவரவர் உடல் வாக்கைப் பொறுத்தது. ஆனால், எனக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணிகளில், இந்த காஃபி போடும் விபரங்களை பல விதங்களில் ஒரு குற்றப் பத்திரிக்கையாக என் முன்னே வைத்து பரிசீலனை செய்யும் போது நிஜமாகவே எனக்கு தலைச் சுற்றத்தான் செய்கிறது.:)) )

நாங்கள் பிறந்து வளர்ந்த  அந்தக்காலத்தில் காஃபியுடன் வேறு பல சத்துள்ள பானங்கள் என வரிசையாக வந்து விட்டாலும், பொருளாதார வசதி காரணமாக, எங்கள் அம்மா வீட்டில் எங்களுக்கு காஃபி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அது இத்தனை ஆண்டுகளாக தொடர்வதால், அதை முற்றிலும் நிறுத்தவும் இயலவில்லை. இன்று வரை ஒரு நாளைக்கு சில சமயம் காலை மட்டுமாவது ஒரு தடவையேனும் இந்தக் காஃபிக்கு அடிமையாகிறேன்.

திருமணமானவுடன், புகுந்த வீட்டில்,எல்லோரும் சேர்ந்திருக்கையில் (கூட்டுக் குடும்பம்) எனக்கு மட்டும் மூன்றாம், நான்காம் தடவையாக பில்டரில் விட்டு இறக்கிய காஃபி காலை, மாலை என முதல் தடவையாக கிடைத்தது. (முதல், இரண்டாவது எல்லாம்  பெரியவர்கள்தான் குடிக்க வேண்டும் என்ற தீர்மானம் அந்த வீட்டில் இருந்ததும், நான் அப்போது அவர்களை விட மிக,மிகச்சிறியவள் என்பதும் அந்தப் 19 ஆவது வயதில் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. :)) ) அப்போதாவது இந்த மேற்படி பானத்தை ஒரேடியாக வெறுத்து ஒதுக்கி கை கழுவி விட்டிருக்கலாம். (அந்த காஃபியே ஒரு கை கழுவும் தண்ணீராகத்தான் இருந்தது. ஹா ஹா ஹா.) விபரம் தெரிந்த நாளிலிருந்து அம்மா வீட்டில் நல்ல காஃபியை குடித்து விட்டு இங்கு மாறுபடும் போது நாக்கு வித்தியாசத்தை காட்டியது. ஆனால், ஒருவரின் மனது நோக ஒரு சொல் சொல்வதும், ஒரு உணவுப் பொருளை வேண்டாமென்று மறுக்கவும், ஒதுக்கவும் தெரியாத மனது என்னுடையது. இதுவரை அப்படியேதான் இருக்கிறேன். தொட்டில் பழக்கம் கட்டை வேகும் வரை மாறாதது என்பது உண்மைதானே..!

அது என்னவோ காஃபியைப்பற்றி கூறும் போது இந்தப்பாடலும் நினைவுக்குள் வந்து விடுகிறது. 

"காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி. அது கையில் கிடைத்த பின்னும் துடிக்கிது ஆவி." என்ற பாடலை மறக்க முடியுமா? 



(என்னவோ போங்கள்.. இந்த காஃபியைப்பற்றி இப்படி அலச வேண்டுமென ஒரு காஃபி அருந்தும் வேளையில் எனக்கு தோன்றியது பாருங்கள். இது அந்த காஃபிக்கு வந்த சோதனையா? இல்லை பெருமையா?தெரியவில்லை. ஆனால், காஃபி அருந்துபவர்களின் மனதில் வரும் கருத்துக்களுக்கும், இல்லை அருந்தாதவர்களின் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களுக்கும், இந்தப் பதிவு ஒரு பாலமாக இருக்கும்.:))  ) 

உங்கள் அன்பான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.அதற்கு நான் என்  கைப்பேசியிலேயே பதில் கருத்துக்கள் தருவதால் கொஞ்சம் தாமதமாகிறது. அதற்காக அனைவரும் மன்னிக்கவும் இருப்பினும் அன்புடன் உடனே வந்து கருத்துக்கள் பகிர்வோர்க்கு என் பணிவான நன்றிகள் . 🙏.