Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Wednesday, October 12, 2022

சிவகாமியின் பந்தம்.

 சிவகாமி அமைதியாய் இருந்தாள்.

"என்ன காரணம் அக்கா..? முதல்லே நான் சொல்றதை மறுக்காமே ஒப்புக் கொண்ட நீ... . இப்போ அவளை பார்த்து விட்டு வந்த பிறகு இப்படி இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றியே....!!! " கணேசன் அவளை ஆயிரம் தடவை விழிகளாலும், பத்துக்கு மேற்பட்ட முறை வாயினாலும் கேட்டு விட்டான்.

சிவகாமி பதிலேதும் கூறவில்லை." இது சரிவரும்"னு எனக்கு தோணலைடா.. தம்பி.. உனக்கு"னு பிறந்தவளை கண்டிப்பா உனக்கு முன்னாடி அந்த ஆண்டவன் கொண்டு நிறுத்துவார். நான் உன் விருப்பங்களை என்றாவது தடை பண்ணியிருக்கேனா ? தயவு செய்து இப்ப ... இந்த விஷயத்திலே என்னை புரிஞ்சுக்கோ...!!! " இது அவனுடன் அவன் விரும்பிய பெண்ணை மறுப்பேதும் சொல்லாமல் சென்று பார்த்து விட்டு வந்த நாளில் அவள் கூறியது. இன்றைய வரைக்கும் அந்த பதில்தான் அவள் அழுத்தந்திருத்தமாக கூறிக் கொண்டிருக்கிறாள். அவள் கண்களிலும் இதேதான் அழியாமல் எழுதி ஒட்டியிருந்தது . 

இரு தினங்களில் அவன் அலுவலக வேலையாக வெளியூருக்கு கிளம்பும் போது" "தம்பி.. என்னை தப்பா புரிஞ்சுக்காதே. ..! தவறான பாதைகள் உன் வாழ்வில் வந்துட கூடாது. நான் நமக்கு தெரிஞ்ச உறவுகளில் சொல்லி சீக்கிரமா வேறு ஒரு பெண்ணைப் பார்க்கிறேன். உன்னை கல்யாண கோலத்திலே பார்க்க இந்த தாய் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கேன்டா ....! அதை மறந்துடாதே..! அக்காவின் கண்களில் நீர் கசிவை கண்டதும் கணேசன் மனம் பதறியது.... 

"அக்கா. .. உன்னைப்பத்தி தெரியாதா? எனனை அம்மாவுக்கும் மேலாக இருந்து வளர்த்திருக்கே....!!! உன் பேச்சில் என்னைக்குமே ஒரு அர்த்தம் இருக்கும்.. நான் உன்னைப் போல் எப்போதுமே திருமணமொன்றை செய்து கொள்ளாமல் கூட இருப்பேனே ஒழிய, அவளையே நினைத்துக் கொண்டு தப்பான முடிவுக்கெல்லாம் போக மாட்டேன். அதுவும் உன்னை நிர்க்கதியாக விட்டு விட்டு.. ..!! நீயிருக்கிற வரை நானும் உனக்காக இருப்பேன்... என்னை நம்பு..!!" என்றவனை உணர்ச்சி மிகுதியில் கண்ணில் கசிந்து தேங்கிய நீர் வடிய அவன் தோள் தொட்டு அணைத்துக் கொண்டாள் சிவகாமி. 

அவன் சென்ற மறுதினம் தனிமை உறுத்தவே சிவகாமிக்கு மனதின் இத்தனை நாள் பாரங்களின் சுமைகள் பெரிதாக தெரிந்தன அன்றிரவு உறக்கம் வராததால், தன் வாழ்வில் நடந்த பழைய சம்பவங்கள் வேறு நினைவுகளில் வந்து சிறிதளவு வந்த உறக்கத்தையும் விழுங்க முயற்சிக்க நிம்மதியான நித்திரையை இழந்து அவதியுற்றாள்..

குடும்பத்தின் பெரிய மகளாக பிறந்த சிவகாமி அத்தனை பொறுப்புகளையும் உணர்ந்தவளாக வளர்ந்திருந்தாள். தனக்குப்பின் இடைவெளிகள் மிகவும் உடைய இரு தங்கைகள், இறுதியில் ஒரு கடைக்குட்டியாக ஒரு தம்பி......!!!! தம்பி அம்மாவுக்கு பிறக்கும் போது அம்மா பிரசவத்திற்கு அம்மாவுக்கு கூடமாட உதவியாய் இருந்தவளே சிவகாமிதான். அவளின் பொறுப்புள்ள குணத்தை கண்டு பாராட்டாத உறவுகளே இல்லை. 

படித்து முடித்து நல்லதோர் பள்ளி ஆசிரியையாக அவள் பணியில் அமர்ந்ததை பார்த்ததும் அவள் அம்மாவுக்கு பெருமை பிடிபடவில்லை. சட்டென தன் மகளுக்கு ஒரு திருமணம் செய்வித்து அவள் வாழ்க்கையில் வரும் வசந்தங்களை பார்க்க எல்லா தாயைப் போன்று அவளும் ஆசைப் பட்டாள். 

தன் கணவனுக்கு அந்த எண்ணம் சிறிதும் இல்லையென தெரிந்து கொண்ட போது அவளின் கவலைகள் ஆரம்பமாகியது. உறவுகளிலும் அவளை மணம் முடிக்க வந்தவர்களையும் ஏதேதோ பேசி தடுத்தார் அவள் கணவர்.

அதன் காரணம் தெரியாமலும், அவரை எதிர்த்து பேச தெரியாமலும் திண்டாடிய அந்த தாய்க்கு. சிவகாமி தன்னுடன் பள்ளியில் வேலை பார்க்கும் நல்ல பண்பான குணமுள்ள நடராஜனை தான்்விரும்புவதாகவும், அப்பாவிடம் பேசி தங்கள் திருமணத்திற்கு அம்மா எப்படியாவது சம்மதம் வாங்கித்தர வேண்டுமென ஒருநாள் தனிமையிலிருக்கும் போது தன்னிடம் கூறியது வயிற்றில் பால் வார்த்தது போன்று இருந்தது. 

"ரொம்ப சந்தோஷமாக இருக்கு சிவகாமி.... நானே இதுபற்றி உன்கிட்டே பேசனும்'னு இருந்தேன். சாதரணமா ஒரு பொண்ணு தன் அம்மாகிட்ட இதுபோல தன் விருப்பத்தைப் பத்தி சொன்னா, உடனே கோபந்தான் படுவா...!!! ஆனா நான் சந்தோஷ படறேன்...!! ஏன்னா, உன் அப்பா ஏனோ உன்னை சீக்கிரம் திருமணம் செஞ்சு வைக்க விருப்பமே இல்லாதவர் மாதிரி நடந்துக்கிறார். என் பேச்சையும் ஏதேதோ சொல்லி தட்டிக் கழிக்கிறார். தம்பியும் இப்பதான் பள்ளியில் படிச்சுகிட்டிருக்கான். அவன் வளர்ந்து இவர் சுமையை எப்போதான் வாங்கிப்பான் என்பதை போன்று பேசுறார். நீயும் எதையும் கண்டுக்காமல் தினமும் வேலைக்கு செல்வதே கடமையென இருக்கே... உனக்கு அப்பறம் இரு தங்கைகளுக்கும், பண்ண வேண்டுமே ..!! எப்படியென என யோசிக்கிறாரோ என்னவோ தெரியல்ல...!! இல்லை உன் சம்பாத்தியத்தை அவர் இழக்க விரும்பல்லையோ என என் மனசு கிடந்து தவிக்குது...! நீ இன்னைக்கு சொன்ன விஷயத்தை அவர்கிட்டேயே எப்படியாவது நாளைக்கே வலியுறுத்தி சொல்லி சம்மதம் வாங்கி கல்யாணம் செஞ்சிடலாம். எல்லா பொண்களை போலவும், நீயும் நல்லா வாழ வேண்டும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லையம்மா. .." அம்மா தன் இயல்பு நிலை மாறி மனக் கலக்கங்களை இறக்கி வைத்த சோர்வில் அழ ஆரம்பித்தாள். 

" அம்மா... அப்பாவை பத்தியும், அவரோட பயங்களை பத்தியும் எனக்கு தெரியுமம்மா.. நான் இந்த குடும்பத்துக்கு மூத்த மகனா இருந்து எல்லா பொறுப்பையும் சுமப்பேன். ஏன்னா எனக்கும் அந்த ஆசை இருக்கு....என் கடமையிலிருந்து நான் தவறவே மாட்டேன். நான் சொன்ன அவரும் இதுக்கெல்லாம் தடை ஏதும் சொல்லாதவரம்மா... அவருக்கு அவர் அப்பா இவருடைய சின்ன வயசிலே தவறிப்போயிட்டதாலே அக்கா, தங்கைன்னு குடும்ப பொறுப்புக்கள் இருக்கு... அதனாலே நீ தைரியமா அப்பாகிட்டே பேசு... என் திருமணத்துக்கு பின்னும் நான் இதே மாதிரி நம்ம குடும்பத்தை காப்பாத்துவேன். தம்பியை படிக்க வச்சி, அவனை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன். என் பெரிய பையன் மாதிரி அவனை பாத்துக்குவேன். தங்கைகளுக்கும் படிப்பு முடிஞ்சதும், அவங்களுக்கு தகுந்த வாழ்க்கை வரும் போது நான் நிச்சயம் உங்க கூட இருப்பேன்ம்மா. அதைப்பற்றியும் அப்பாகிட்டே கூறி அவரை தைரியப்படுத்து.....!!! " சிவகாமி பேச. பேச அவள் தாய் இன்னமும் கண்ணீர் சிந்தினாள். 

எந்த நேரத்தில் அவள் அப்படிச் சொன்னாளோ, அவள் தந்தை அடுத்து வந்த சில மாதங்களில்,," நீயே குடும்பத்தை பார்த்துக்க....!!!!" என்பது போல், இவ்வுலக பந்தங்களை விட்டு விலகினார். அதற்குள் ஒருநாள் தன் மனைவி மூலமாக இவள் காதலிப்பதை தெரிந்து கொண்ட தந்தை உக்கிரமாக மறுத்ததோடு இல்லாமல், அதன் விபரம் தெரிந்து வீடு தேடி வந்து சுமூகமாக பேச வந்த நடராஜனை மிகவும் அவமானபடுத்தியும் அனுப்பினார். நடராஜனும் அவளிடம் ஏதும் கூறாமல் பள்ளி வேலையை விட்டு விலகியதை தந்தை மறைவு தந்த அதிர்ச்சியில் அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கண்ணெதிரே தன் உயிரை விட பெரிதான நான்கு ஜீவன்களின் நிராதரவான நிலை ஒன்றே அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. 

தந்தையின் மறைவுக்குப் பின் இவளின் பொறுப்புக்கள் கூடியதில், மனதின் நிம்மதிக்காக காதலை தியாகம் செய்து விட்டு,பள்ளியையும் மாற்றிக் கொண்டு இங்கு வந்து விட்டாள். தங்கைகளின் படிப்பு, உத்தியோகம், திருமணங்கள்,, தம்பியின் படிப்பு, என்ற வாழ்வின் சுழற்சியில்,, நடராஜனின் நினைவுகள் புதைந்து கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து போயின. . மிகுந்த மனவருத்தத்தில் இருந்த தாயும், தம்பியின் கைகளை பிடித்து இவளிடம் ஒப்படைத்து இவளின் நிலை குறித்து வருத்தபட்டவளாய் ஒருநாள் அவளும் இவளுக்கு இன்னமும் சிரமம் கொடுக்க வேண்டாமென மறைந்தாள். 

அம்மாவும் ஒரு நாள் தீடிரென மறைந்தப் பின் தம்பி மேல் வைத்திருந்த பாசம் இன்னமும் இறுகியது. அவன் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதிப்பதை கண்டதும் தன் உழைப்புக்கு பலன் தெரிந்தது. இதைக்காண இப்போது தாயும், தந்தையும் இல்லையே என்ற வருத்தம் தோன்றியதின் இடையே, "இதைக்காண முடியாதோ?" என்ற அச்சம் அப்பாவுக்கு ஏனோ எழுந்ததை குறித்து அம்மா உயிருடன் இருக்கும் போது அடிக்கடி அதைச் சொல்லி வருத்தப்பட்டதும், நினைவுக்கு வந்தது. இப்போது தம்பி தான் அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை விரும்புவதாக கூறியதும் தடையேதும் சொல்லாமல், அவனுடன் வந்து அந்தப் பெண்ணை சந்திக்க ஒத்துக் கொண்டாள். அந்த உணவகத்தில் காஃபி அருந்தி கொண்டே. அவளுடன் பேசிய போது, "இவள் தன் தம்பிற்கேற்ற நல்ல மனைவிதான்.." எனத் தோன்றியது. அவளிடம் மனம் விட்டு அதை சொல்லி விடலாம் என்று நினைத்த போது, அவள் தன் குடும்ப  புகைப்படத்தை தன் கை பேசியில் யதேச்சையாக காட்டியதும் மனம் மாறி போனாள். அங்கிருந்து கிளம்பும் இறுதி வரை சற்று இறுக்கமான மன நிலையில் இருந்தவள், வீடு வந்ததும் சொன்ன முதல் வார்த்தை "தம்பி... உனக்கு அந்தப் பெண் வேண்டாம்டா..... " என்பதுதான். 

நினைவுகள் தந்த  இறுக்கம் குறைந்து அவள் நித்திரையை தொட்ட போது மணி நான்கை தாண்டியிருந்தது. 

தொடர்ந்து வரும்.

கதைக்கு ஆதரவு தரும் நல்லுள்ளங்களுக்கு எப்போதும் என் நன்றி. 🙏. 

Tuesday, June 28, 2022

பூக்களுக்கிடையே ஒரு கெண்டி.

ஜானகி படுத்திருந்தாள். முகத்தில் சோர்வு தெரிந்தாலும், என்ன ஒரு களையான முகம். அந்த கால ரவி வர்மா ஓவியப் பெண்களைப் போல்  இயற்கை வண்ணங்களால் வார்த்தெடுத்த அழகான முகம்.....! மனம் மட்டுமென்ன..! அதை விட அழகோவியமாக இறைவனே பார்த்து  பார்த்துக் கொடுத்திருக்கிறார். ரகு கண்களில் உண்டான லேசான நீர் துளிப்புடன் அவளையே பார்த்தபடி அருகில் அமர்ந்திருந்தான்.

சற்று நேரத்தில் கண் விழித்துப் தன்னையே பார்த்தபடி அவன் அமர்ந்திருப்பது கண்டதும் விழிகளாளேயே "என்ன"வென்று கேட்பது போல் புருவத்தை தூக்கினாள்.

அருகில் நெருங்கி அவள் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டவனுக்கு வார்த்தைகள் எழும்பவில்லை. தன் கைகளில் அவன் கண்களிலிருந்து சூடான இரு முத்துக்கள் விழுந்ததும், பதறிய அவளின் முக பாவம் ரகுவை இன்னமும் வசீகரித்தது.

" இதை எனக்காக இப்படியே நிறுத்தி விடு  ஜானகி..! என்னால் இதை ஜீரணிக்கவே முடியலே... நாளை விடியாமலே போகக்கூடாதான்னு வேண்டிக்கிறேன்."

மெதுவாக அவனிடமிருந்து கரங்களை விடுவித்தவள், மறுகணம் தன் ஒரு கரம் கொண்டு அவன் வாயை லேசாக மூடினாள்.

உலர்ந்திருந்த உதடுகளை நாவினால் தடவி ஈரமாக்கியபடி, மெல்ல எழுந்து அமர்ந்தவள், "ஏன்...!  இப்படி பேசனும்.. எல்லாம் என்னோட கனவுக்குதானே...! இதற்கு எத்தனை வருடம் காத்திருக்கிறேன். உங்க சம்மதந்தானே என் கனவோட முதல்படி. படிபடியாக ஏறி கனவு பலிக்கிற நேரத்துல இப்படி முடியாதுன்னு சொன்னா  எம்மனசு நொறுங்கி போயிடாதா?" வேகமாக சேர்ந்தாற் போல் பேசியதில் சற்று  மூச்சு வாங்க இளைப்பதை கண்டதும், ரகு பதறி எழுந்து போய் தண்ணீர் கொண்டு வந்து சற்றுக் குடிக்கச் செய்து  ஆசுவாசப் படுத்தினான்.

" சரி..! ஜானு..அதிகம்  பேசாதே.. நான் ஒண்ணும் சொல்லலை...உனக்காக  நான் சம்மதிக்கிறேன்.. " என்றவன் கண்களில் கண்ணீர் பெருக  அதை அவளிடம் மறைக்க முயற்சித்தான்.

"என்ன இது...! குழந்தை மாதிரி.. நா என்ன ஊர்ல உலகத்துல செய்யாததையா செய்றேன். இதுக்குப் போயி இப்படி வருத்தப்பட்டா எப்படி? "அவள் மறுபடி பேச ஆரம்பிக்கும் முன் அவளை அமர்த்தியவன்..
" நீ இப்ப எதுவும் பேசாதே ஜானு.. நான்தான் உன் இஷ்டத்துக்கு ஒத்துண்டாச்சே... மறுபடி இப்ப எதுக்கு அதைப் பத்தி பேச்சு.. வேணாம். .,! நீ கொஞ்ச நேரம் தூங்கு.. என்றபடி அவள் தோளை அணைத்து தன் மேல் சாய்த்துக் கொண்டவாறு அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

கணவனின் பாசம் கண்டு ஜானகியின் கண்களும் கலங்கியது. அவனறியாமல் கண்களை துடைத்தபடி அவன் பரிவுக்கு கட்டுப்பட்டு கண்களை மூடி தூங்க பிரயத்தனித்தாள்.

"மேகலா, மேகலா, இங்கே வா.! ஜானகியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தலை நிறைய பூச்சூடி அழகு தேவதையாய் நடந்து வந்த  மேகலா அவளருகே வந்தமர்ந்தாள்.

" மேகலா.! நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து தரனும். இத்தனை நாளா உன்கிட்டே  வாய் வார்த்தையா வெறும் உறுதி மொழிதான் கேட்டேன். இப்போ" என்றவளை இடைமறித்த மேகலா, "என்னக்கா,  நீங்க பெரிய வார்த்தையா கேக்கறீங்க.. நீங்க சொன்னது நான் மீறினாதானே இந்த மாதிரி சத்தியம் அது, இதெல்லாம் சொல்லனும். நீங்க சொல்றதை நான் தட்டியிருக்கேனா? ஜானகியின் மெலிந்த கைளை எடுத்து தன் மார்போடு அணைத்தவளாய் பரிவாக சொன்னாள்.

" இன்னைக்கு என்னுயிரை உங்கிட்டே  தந்திருக்கிறேன்... ஏன் தெரியுமா? அந்த உயிருக்கு ஆதரவா ஒரு உயிரை நீ சீக்கிரம் தரணும். அந்த செயலைத்தான் உங்ககிட்டே உறுதியா கேக்கிறேன். "

வெட்கத்தில்  சிவந்த முகத்துடன் மேகலா அவளுக்கு பதில் கூறும் முன் அந்த  அறைக்குள் நுழைந்தான் ரகு.

"மேகலா.! அவளுக்கு மருந்து தந்தியா? இனி நீ போ..! நான் அவளை பார்த்துக்கிறேன்.. என்றபடி, தன் கட்டிலில் அமரப் போனவனை ஜானகி தடுத்தாள்.

"என்னங்க.. ஒரு நிமிஷம்.. இங்கே வாங்க..! அழைப்புக்கு கட்டுண்டு வந்தவனை, "என்ன இது.!  இன்னைக்கு என்னவென்று உங்களுக்கு தெரியாதா? உங்க அறைக்கு போங்க. நா கொஞ்ச நேரத்துல மேகலாவை அனுப்பறேன்.  எனக்கு துணையாக இனி என் அத்தை இங்கே இருந்து பாத்துப்பாங்க.! " என்று முடியாமல் கூறி முடிக்கவும், ஜானகியின் அத்தை வந்து மேகலாவை, "வாம்மா" என்றபடி அழைத்துக் கொண்டு போனாள்.

ஒரு நிமிஷம் நடப்பதை பார்த்து திகைப்புடன் நின்றிருந்த ரகு, ஜானகி அருகே வந்தமர்ந்தபடி,  "என்ன ஜானு. .! உன் விருப்பத்துக்குதான் ஒத்துண்டேன். மறுபடியும் என்னை எல்லாத்துக்குமே ஒத்துக்க வைக்கிறே.... இது நியாயமா சொல்லு? என்றான் அழ மாட்டாத குறையாய்..

ஜானகி அவன் கைகளை எடுத்து தன் கைகளில் பிணைத்து கொண்டபடி வருடிக் கொடுத்தாள்." என் செல்ல ராஜா..!இதுக்குதானே நா என் உயிரை கையிலே வச்சிட்டு காத்திருக்கேன். நம்ப குழந்தையை ஒரு வாட்டி பாத்துட்டு, அதுக்கு நான் நினைச்ச மாதிரி ஆகாரம் கொடுக்காமே நான் போவேனா?  அப்படி போனாதான் என் ஆத்மா சாந்தியடையுமா என்ன?" மேற்கொண்டு அவளை பேச விடாமல், வாய் பொத்தி அவளை லேசாக தன்னுடன் அணைத்துக் கொண்டான் ரகு.

தன் திருமணத்திற்கு தன் தாய் தந்திருந்த வெள்ளி கெண்டியை அடிக்கடி எடுத்து வைத்துக் கொண்டு,"  என்னங்க இதில்தான் என் அம்மா எனக்கு பால் புகட்டி வந்திருக்கிறார்கள். நானும் என் குழந்தைக்கு இதில்தான் பால் புகட்டிப்பார்க்க வேண்டுமென்று ஆசை... என முகம் சிவக்க கூறும் போது, ரகுவின் சீண்டும் பார்வையை தாங்க முடியாமல் வெட்கத்தில் கைகளால் கண்மூடி மௌனித்த வேளைகள் எத்தனை எத்தனை.!

அவளுடைய ஆசைகள் அவனறியாததா? அவனின் இருபத்தைந்தாவது வயதில் அவனை நம்பி அவள் அவனுடன் சம்சார பந்தமெனும் கடலில் இறங்கிய போது அவளுக்கு வயது இருபது. நிறைய கனவுகளில்  சிறகடிக்கும் பறவையின் உற்சாக மனதோடுதான் அவனை கைப்பிடித்தாள்.

 நிறைய இடைவெளியில் , தன் கூடப்பிறந்த இரு தம்பிகளையும் தன் உடன்பிறப்பாக நினைத்து அன்புடனே, வளர்த்து,  தன் பெற்றோர்களின்  நம்பிக்கைக்கு பாத்திரமாகி, நல் மதிப்பெண்கள் பெற்று, தம்பிகளின் திருமணங்கள் வரை, உற்சாகமாக ஓடியாடி  வளைய வந்தவள்தான்.!

"இவ்வளவு பொறுப்பா பெரிய மனுஷியாட்டம்  புகுந்த வீட்டை கட்டிக்காத்து  நல்ல முறையிலே நிர்வகிச்சிண்டு வர்றியே... ஜானகி. அந்த ஆண்டவன் உன் விஷயத்திலே கண் திறக்க கூடாதா? உனக்குன்னு ஒரு குழந்தை தங்கி ஒரு குடும்பமா இருந்தாதானே ஒரு சந்தோஸம் நிலையா வரும். "  என்று உறவுகள் தன் தம்பிகளுக்கு பிறந்த குழந்தைகளை அவள் தூக்கி சீராட்டி கொஞ்சம் போது, புகழ்வது போல பேசி, குறையை சுட்டிக் காண்பித்த போது கூட மனம் சற்று வருத்தியதை அவள்  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

காலம் வேகமாக ஓடி மூச்சு வாங்கிய போது ஜானகியும் மூச்சு விடக் கூட சங்கடப்பட்டு  சோர்ந்திருந்தாள். அவளை பரிசோதித்த பின் குழந்தை பிறக்க இனி சாத்தியமில்லை என மருத்துவர்கள் கூறியதில் நொடித்துப் போன இதயம்..அது.. மறுபடியும் தேறவேயில்லை...!

ஆயிரம் மருத்துவங்கள், பலவித மருந்துகள் என எதுவும் பலனளிக்காமல், அவளை மிகவும் பலவீனபடுத்தியிருந்தன. கடைசியில் தன்னை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள தூரத்து உறவின் மூலம் வந்திருந்த மேகலாவை எப்படியோ சம்மதிக்க வைத்து, ரகுவிடமும் போராடி  பேசி அவன் அரைகுறை சம்மதத்தையும் பெற்று இருவருக்கும் மணமுடித்து வைத்து விட்டாள். இனி ரகுவின் குழந்தையை கொஞ்சாது தன்னுயிர் பிரியாது என்ற நம்பிக்கையில் தன்னை எதிர்கொள்ள காத்திருக்கும் மரணத்திற்கு சவால் விட்டபடி காத்திருந்தாள்.

கடந்த  ஐந்தாணடு காலமாக ரகுவுக்கும், மேகலாவுக்கும் இடையே அவ்வளவாக பேச்சே கிடையாது. "வெளியுலகத்திற்கு நீயும், நானும் கணவன் மனைவி.. ஆனால் அதை தாண்டி ஒரு பந்தமும் நம்மிடையே என்றுமே கிடையாது" . என ரகு சொல்லியபடி வாழ்ந்து வந்தான்.  அவன் என்றாவது மனது மாறுவான் . தன்னிடம் பழைய மாதிரி சுமூகமாக பேசவாவது செய்வான் என்ற நம்பிக்கையோடு பொறுமையாய் இருந்தாள் மேகலா.

அவனை விட்டு விலகிப் போகவும் முடியவில்லை...அப்படியே போனாலும்அவளைத் தாங்கி அரவணைத்துக்கொள்ள யாரிருக்கிறார்கள்.? பெற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக மறைந்து, வறுமையில் யாருமற்ற சூழலுடன் இருக்கையில், உறவில் அத்தை முறையான பார்வதி,  "ஜானகியை கவனமாக பார்த்துக் கொண்டால்,  உனக்கும் ஒரு பாதுகாப்பு கிடைக்கும்"என அழைத்து வந்து இங்கு தங்கச் செய்தாள். ஆரம்பத்தில் சற்று மனம் ஒட்டாமல்  தயங்கினாலும் ஜானகியின் அன்பும், அக்கறையும், அவளின் எந்த பேச்சையும் தட்டாத ஒரு நெருக்கத்தை உண்டாக்கின.

அதன் விளைவுதான் ரகுவை மணந்து கொள்ள அவள் சம்மதித்தாள். சட்டப்படி ஜானகி எடுத்த முயற்சி பலனளித்து விட்டாலும், ரகு திருமணமான அன்றே தன் உறுதியான முடிவை "ஜானகிக்காகத்தான் நான் உன்னை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி நீயும், நானும் என்றுமே யாரோதான்..! என்று மேகலாவிடம் கூறி விட்டான். ஜானகியின் மேல் அவன் வைத்திருக்கும் அன்பை இரண்டு வருடங்களாக அவள் பார்த்திருந்ததால், இதை மேகலாவும் ஆமோதித்தது புன்னகையால் ஏற்றுக்கொண்டாள்.

"அப்படிப்பட்ட உறவையும், இந்த ஐந்தாண்டு காலம்  மிகவுமே சின்னாபின்னபடுத்தி அழகு பார்க்கிறதே " என எண்ணும் போது, பொறுமையாயிருந்த மேகலாவின் கண்கள் ஆறாகப் பெருகின.  அதன் காரணம் அவள் மனசாட்சிபடி "நீ செய்தது சரிதான்" ! என கூறினாலும், ரகுவை வெறுப்படைய செய்து விட்டதே என நினைக்கும் போது சற்று உறுத்தலாக இருந்தது. அன்றைய நாளின் நினைவுகள் அவளிடமிருந்து சிறிதும் விடைபெற  மறுத்தது மட்டுமின்றி, "நான் என்றுமே உன்னுடன்தான் இருப்பேன்" என்று அழிச்சாட்டியம் செய்தபடி இருந்தது.

" மேகலா.! நீயும் என்னை ஏமாற்ற போகிறாயா? கண்களால் கேள்வி கேட்கும் ஜானகியை எதிர் கொள்ளவே மேகலாவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவளை பூப்போல அசைத்து, பணிவிடைகள் செய்யும் போதும், ஆகாரத்தை மெல்ல ஊட்டி விடும் போதும் பார்வையின் உரசல்களில் அந்த கேள்வி தொக்கி நிற்கும்.

ரகு வேலையிலிருந்து வரும் வரை ஜானகியை முழுதாக அருகிலிருந்து கவனித்துக் கொள்பவள் ரகு  வந்ததும் ரகுவின் கட்டளைக்கிணங்கி அங்கிருந்து அகன்று விடுவாள். இருவரையும் சேர்ந்து பார்த்தால், மறுபடி "குழந்தையை பற்றி பேச்செடுத்து ஜானகி தன்னை இன்னமும் பலவீனமாக்கிக் கொள்கிறாள்" என்ற எண்ணம் ரகுவை ரொம்பவே பாதித்தது. அதை புரிந்து கொண்டவளாய்  தான் நகர்ந்து விடுவது ரகுவுக்கு பிடிக்கிறது என்ற எண்ணமே மேகலாவுக்கும் திருப்தியளித்தது.

ஒருநாள் இருவரும் சேர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. ஜானகி காலையிலிருந்தே சற்று கூடுதலாக சோர்வாக இருப்பது கண்டு அவளை விட்டு தானும் நகராதிருந்தாள்.  அன்று மேகலாவுக்கும் காலையிலிருந்தே தலைவலியால், சோர்வாக இருந்த உடல் ஜானகிக்கு இரவு கஞ்சியை புகட்டி கொண்டிருந்த போது, சற்று வெளிக் காட்டி விட்டது. வாய் மூடி பாத்ரூம் சென்று வாந்தி எடுத்து விட்டு வந்தவளை சந்தோஷம் மிக்க கண்களால் விரிய பார்த்தாள் ஜானகி.

அந்தப் பார்வையின் பொருள் உணர்ந்து தன்னிலை உணர்த்துவதற்குள் ஹீனஸ்வரத்தில் "மேகலா நாள் தள்ளிப் போகிறதா? நல்ல செய்தியா? என சந்தோஷம் அடைந்தவளுக்கு முன் எதையும் சொல்ல முடியாமல் மெளனித்தவளை, ரகு முறைத்தான்.

" நான் நினைத்தது நடந்து விட்டது.. கடவுள் என் குறை அறிந்து என வாழ்க்கையில் ஒரு திருப்தி கொடுத்து விட்டார், இது போதும் எனக்கு.." என் வேண்டுதல் பலித்து விட்டது. என மெலிதாக புலம்பிய வண்ணம் இருந்த ஜானகிக்கு அன்று இரவு மிகவும் உடல் பலகீனமாக அடைய, இந்த சந்தோஷம் போதுமென்று மனநிலையில், அதே சிரித்த முகத்துடன் இந்த உலகை வெறுத்து விடை பெற்றாள்.

ஆயிற்று!  நடைபிணமாயிருந்த ரகு பழையபடியாக  மாத கணக்கில் ஆனது.
அன்று சாப்பாடு பறிமாறிய மேகலாவை "இப்போ உனக்கு திருப்தியா? என் உயிரை என்கிட்டே இருந்து பிரிக்க இப்படி எத்தனை நாளா யோசிச்சே? என்று கேட்கவும், மேகலா திகைத்தாள்.

" நானா? ஏன் இப்படி பேசறீங்க? அக்காவை நானும் என உயிராகத்தான் நினைச்சேன். அவங்க இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு எவ்வளவு வேதனையை தருது தெரியுமா?" கண்ணீர் பீறீட கேவினாள் மேகலா.

"அப்படியென்றால் அன்னைக்கு உண்மையை சொல்ல வேண்டியதுதானே.! "மெளனம் உண்மை.." என்ற மாதிரி அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாது ஏன் அமைதியா இருந்தே? " ஏன்னா உன் எண்ணத்தில் இருந்த ஆசைக்கு அதுவே ஒரு சாட்சி,.! சீ.. நீயெல்லாம் அவளை உயிரா நினைச்சியா? ஏன் பொய் மேலே பொய்யா....இப்படி.. " வார்த்தைகளை உமிழ கூட வெறுப்படைந்தவனாக முகம் சிவந்தான் ரகு.

" நீங்க நம்பலைன்னாலும் நான் சொல்றது உண்மை. அந்த நேரத்திலே நீங்க நினைக்கிற மாதிரி இல்லைன்"னு சொல்லவா? காலையிலிருந்து தலைவலி காரணத்தாலேயே வயிற்றை பிரட்டியதுன்னு சொல்லவான்னு நான் அந்த சமயத்திலே கொஞ்சம் தடுமாறினேன். இத்தனக்கும் அவங்க எத்தனையோ நாள் இந்த மாதிரி பேச்சை ஆரம்பிக்கும் போது, ஒருநாள் கூட நாம ரெண்டு பேரும் இன்னமும் வாழ்க்கையையே துவங்கலைன்னு  சொல்ல நினைச்சிருக்கேனா? இல்லை என்னையும் மீறி சொல்லியிருக்கேனா? ஏன் என்னை நம்பாமே இப்படி அபாண்டமான பேசறீங்க?"
மேகலாவின் வாய் வார்த்தைகளையும் மீறி சற்றே உணர்ச்சி வசப்பட்டதில் நடுங்கியது.

எப்படியோ போ,! அவளை கொன்னுட்டே. ! என்னையும், அவளையும்  பிரிச்சு பாவத்துக்கு இனி உன் முகத்துல முழிக்கிறதே பாவம். ! ஜானகி பேச்சை மதித்து உன்னை கல்யாணம் பண்ணினதுனாலே உன்னை எங்கேயோ போன்னும், சொல்ல முடியலே! ஆனா என் ஜென்மம் முழுக்க உன்கிட்டே பேசாமே இருக்க  என்னாலே முடியும். இனி நம் தெரிஞ்ச உறவுகளுக்குத்தான்  நீயும், நானும் ஜானகி பார்த்து கல்யாணம் செய்து வைத்த  தம்பதிகள். வீட்டுக்குள்ளே நீ யாரோ.! நான் யாரோ.. என்றவன் இன்று வரை அந்த நிலை மாறாது இருக்கிறான்.

மேகலாவுக்கு முதலில் ரணமாக மனது வலித்தது. நாளடைவில் ஜானகியின் அன்பை நினைத்து, அவளுடன் தனிமையில் இருக்கும் போது  "ரகு என்ன சொன்னாலும், ரகுவை என்றுமே உன் ஆயுள் பரியந்தம் புறக்கணித்து மட்டும் விடாதே!!" என்று தன்னிடம்  கண்டிப்பான அன்புடன் கேட்டுக்கொண்ட வார்த்தைகளுக்காகவும்  அவன் கோபங்கள்  தீர இன்னும் எத்தனை வருடங்களானாலும்  பொறுத்துக் கொள்ள தயாராக இருந்தாள்.

காலம்  ஒன்றுதான் யாரிடமும். எதுவும் சொல்லாமல்,  கேட்காமல். தன் வேலையை பார்த்தபடி  செல்லக் கூடியது. மேலும் சில வருடங்களை தன்னுள் விழுங்கிய திருப்தியில், அது ஒருவித அலட்சிய மனப்பான்மையுடன் நகர்ந்து கொண்டிருந்தது.

சமையலறை வாசலில் நிழலாடியது கண்டதும், காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த மேகலா தலைநிமிர்ந்து பார்த்தாள்.

அறையின் கதவை பிடித்தபடி நின்றிருந்தாள் ரகு.

ஏதாவது முக்கியமாக பேச வேண்டுமென்றால்தான் இப்படி எதிரில் வந்து நிற்பான் என்பதை உணர்ந்தவளாகையால், "என்ன?" என்பது போல அவனை பார்த்து கொண்டபடி இருக்கும் இடத்தை விட்டு ஓரடி முன் வந்து நின்றாள் மேகலா..

"நாளை காலை நாம் ஒரு விஷேடத்திற்குப் போகப் போகிறோம். ஜானகிக்கு நெருங்கிய உறவு. அவளின் மாமா மகனுக்கு  அறுபதாம் கல்யாணம். நம்மை கண்டிப்பாக வரச் சொல்லியிருக்கிறார்கள். அங்கு வந்து நம் விரிசல்கள் எதையும் காட்டாமல் நடந்து கொள்...!!" என்று அவள் விழி பார்க்காமல், ரகு சொன்ன போது  மேகலாவுக்கு கோபத்தை விட சிரிப்புதான் அதிகமாக வந்தது.

" என்றைக்கு இந்த விரிசல்களை வெளியில் காட்டி யார் வந்து "சரி செய்யவா?" என்று கேட்டிக்கிறார்கள். என்னறைக்கு உங்கள் மனம் மாறும்..! விரிசலென்று நீங்கள் நினைப்பது  வெறும் கீறல்தான்... அதுவும் நீங்களாகவே போட்டு கொண்டு ஆற விடாமல், பத்திரமாக ரணத்தை அழகு படுத்தி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்." என்று சொல்ல வேண்டும்  போலிருந்ததை அடக்கியபடி, "சரி" என்றாள்.

மறுநாள் அந்த விஷேடத்திற்கு தன்னை சாதாரணமாகவே அலங்கரித்து கொண்டவளுக்கு, தீடிரென" ரகு என்ன சொல்வானோ? "என்ற ஐயம் வந்தது. எனவே அவன் அறை வாசலுக்கு வந்தவள்,  "இது போறுமா? இல்லை.. ஏதேனும் பட்டுப் புடவை உடுத்திக் கொள்ள வேண்டுமா? என கேட்க வந்தவள் அவன் என்ன சொல்வானோ என்ற  நினைப்பில் பேசத் தயங்கி நின்றாள்.

அன்றைக்கென்னவோ அவள் நிலை உணர்ந்தவன் மாதிரி அவளை சற்று ஏறெடுத்துப் பார்த்தவன்," இது பழசாக தெரிகிறதே..! ஏதேனும் பட்டுப்புடவையாக கட்டிக் கொள்ளேன். "என்ற அவன் குரலில் இத்தனை வருடங்களாக இல்லாத ஒரு சிறு நெகிழ்ச்சி மேகலாவை வானத்திற்கு மேலாக பறக்க வைத்தது.

தன்னறைக்குள் புகுந்ததும் அவனின் கரிசனம் மிகுந்த சின்னப் பேச்சு அவளைச்சுற்றி தட்டாமாலை ஆட, திருமணமானதிலிருந்து அவனுடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு சந்தோஷத்தை அடைந்த திருப்தி எழுந்தது.  பரபரவென்று தன் திருமணத்திற்கு ஜானகி வாங்கித் தந்த புடவையை கட்டிக் கண்டதும், ஜானகியின் அன்பான அரவணைப்பு தன்னை சுற்றி வியாபிப்பதை உணர முடிந்தது. கண்கள் கலங்க  மேஜையிருந்த ஜானகியின்  போட்டோவை ஒரு நிமிடம் பார்த்தவள், "என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அக்கா"என்றபடி கீழே விழுந்து நமஸ்கரித்தாள். அப்போது அறை வாசலுக்கு வந்து அகன்ற ரகுவை அவள்  சற்றேனும் கவனிக்கவில்லை.

அறுபதாம் கல்யாணம் வைதீக முறைப்படி ஜாம் ஜாமென்று நடந்து கொண்டிருந்தது. ரகுவிற்கும்,  மேகலாவிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்த சந்தோஷத்திலே ரகுவிடமும் ஒரு முக மலர்ச்சி உண்டானதாக மேகலாவுக்கு தோன்றியது. தன்னுடைய இயல்பான சுபாவத்தில் அவளும் ஜானகியின் உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திக்  கொண்டு, கலகலப்பாக அவர்களுக்கு உதவியாக  அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தாள்.

அவ்வப்போது ரகுவின் பார்வையில் இவள் பார்வையும் படும் போது "இதுதான் இவனுடன் திருமணத்திற்கு பின் முதன்முதலாக சேர்ந்து வந்திருக்கும் விஷேசம்" என்ற எண்ணம் மேகலாவுக்கு வரவும் அவளின் உற்சாகமான முகம் இன்னமும் சற்று மலர்ந்து காணப்பட்டது.

"இவன் நம்ப ஜானகியின் புருஷன் ரகு தானே... !  பாவம் ஜானகி! இந்த சின்ன வயசுலே அவள் பட்ட கஸ்டமிருக்கே அப்பப்பா ... ஆனா  அவ ரொம்ப பொறுமைசாலி... அவ பொறுமைக்கு கடவுள் ரொம்பவும் அவளை பாடாபாடு படுத்திட்டான்.. !"

"ஆமாம்... அவனேதான்... !   அந்த கடவுள் மட்டுமா? அவ உயிரோடு இருக்கும் போதே இரண்டாம் கல்யாணம் பண்ணி கிட்டவன்தானே இவன்... ! இவன் ஒருத்தன் போதாதா அவ பொறுமையை சோதிக்கறதுக்கு...?"

" என்னமோ அவளே இவனை நிர்பந்த படுத்திதான் கல்யாணம் பண்ணி வைச்சதா கேள்விப் பட்டேனே? "

ஆமாமாம்...! அப்படித்தான் நானும் கேள்விப் பட்டேன். ஆனா அந்த  மாய்மால காரி இருக்காளே...!  அவ என்ன பொடி போட்டு மயக்கிட்டு ஜானகியை அப்படிச் சொல்ல வைத்தாளோ ? யாரு கண்டா?"

" இப்ப அவளும் வந்திருக்காளா? நா அவளை பார்த்ததே இல்லை...!

" அதோ..! நீலகலர்லே பட்டு புடவை கட்டிண்டு  ஏதோ ஜானகிக்கு உறவு மாதிரி வர்றவங்க எல்லோர்கிட்டேயும்  சகஜமா பேசிக்கிட்டிருக்காளே அவதான்..!" 

இவளுக்காவது ஏதாவது குழந்தை குட்டி பிறந்திருக்கா ? 

" எங்கே. .! அவளுக்கு செஞ்ச  துரோகத்துக்கு இவளுக்கு ஒரு குழந்தை பிறக்குமாக்கும்...! ஜானகியே குழந்தையா வந்து பிறக்கனும்னு கடவுள் ஆஞ்கையிட்டு சொன்னாகூட  ஜானகியே வேண்டாம்னு சொல்லிடுவா.. அந்த அளவுக்கு இவ மேலே அவளுக்கு கோபம் இருக்குமாக்கும்...!" 

ரகு அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாய் சடாரென எழுந்தான். வெறும் வம்பு பேசி அரட்டை அடிப்பதற்காக வந்த அந்த உறவுகள் யாரென்று தெரியவில்லை. தான் ஏதாவது பேசி அசம்பாவிதம் ஆகிவிடக் கூடாதென்பதற்காக அந்த இடத்தை விட்டு நகர்ந்தவனுக்கு அவர்களை பார்க்கவே பிடிக்கவில்லை. வேறு இடம் தேடி வந்து அமர்ந்தவனுக்கு உள்ளூர கோபம் அடங்கவில்லை.

ஜானகியை பற்றி புரிந்து கொள்ளாமல் என்னவெல்லாம் பேசுகிறார்கள்.?  அவள் இஸ்டமில்லாமலா நான் மேகலாவை திருமணம் செய்து கொண்டேன்? அவளா அவனுக்கு குழந்தையாக வந்து பிறப்பதை வேண்டாமென்று மறுக்கப் போகிறவள்.. ! சே..! நாக்கில் நரம்பில்லையென்றால், இப்படி பேச இவர்களுக்கு எப்படி மனசிலும், ஈரங்கள் இல்லாமல் போயிற்று? ஏதேதோ சிந்தனையில் கண்கள் மேகலாவை தேடின.

"ஏன்..! உன் மனதில் மட்டும் ஈரம் இருக்கிறதா?  நீ அவளை என்னவெல்லாம் பேசியிருப்பே..! அத்தனையும் தாங்கிக் கொண்டு நீ என்னைக்காவது மாறுவேன்னு அவ பொறுமையா இல்லையா?  பாவம் அவள்...! இனியும் நீ இப்படி நடந்துக்க கூடாது." 

உண்மைதான் ஜானகி... நான் செய்றது தப்புதான்....! 


ரகுவின்  அருகில் அமர்ந்திருந்த மற்ற இருவர் ஏதேச்சையாக அவர்களுடைய  குடும்பத்தைப் பற்றி பேசியது அவனுடைய கன்னத்தில்  அறைந்த மாதிரியிருந்தது.

இங்கும் தன்னருகில் அமர்ந்திருந்த யாரோ இருவர் தனக்காகவே பேசின மாதிரி தன் சிந்தனைக்கு தக்கபடி பேசியது தன் ஜானகியே வந்து பேசின மாதிரி இருந்தது ரகுவுக்கு. இப்போது அவன் கண்கள் தன்னையறியாமல் மேகலாவை விரைந்து தேடின.

"ஆமாம்.. இவள் எனக்கு என்ன குறை வைத்தாள்? என்னிடமும், ஜானகியிடமும் பாசமாக இருக்கதான் செய்தாள். நான்தான் இவள் அன்பை உதாசீனபடுத்தினேன். இதோ..! இன்று வரை ஜானகியை  துளியேனும் மறக்காது, காலையில் கூட அவளிடம் மானசீகமாக பேசி, ஆசிர்வாதம் வாங்கி அவளை அன்புடன் நன்றியோடு நேசித்துதானே  வருகிறாள். நான்தான் அவளை புரிந்து கொள்ளாமல் வார்த்தையால் கொன்றேன். அப்போதும் அவள் என்னை வெறுக்கவில்லை.  என்னிடம் அவளை ஒப்படைத்துக  சென்றதற்காக ஜானகியையும் ஒரு போதும் குறைச் சொன்னவளுமில்லை.. எல்லா தப்புமே என்னிடமிருந்துதான் ஆரம்பித்தன. "

" நான் "வா" வென்று அதிகாரமாக  அழைத்து வந்த இடத்திலும் எத்தனை முக மலர்ச்சியோடு எதைப் பற்றியும் நினைக்காமல், ஜானகியின் உறவுகளோடு பேசி பழகுகிறாள். இவளை நானே புரிந்து கொள்ளாமல் இருக்கும் போது, பொழுதைப் போக்க இங்கு வந்து வம்படிக்கும் கூட்டம் எப்படி புரிந்து கொள்வார்கள்.? "

சுற்றும், முற்றும் பார்த்து கூட்டத்தில் அவளைத் தேடினான் ரகு.

அதோ..! அந்த சிதறியிருக்கும் மலர்களை  கைகளால் அப்புறப்படுத்திக் கொண்டு மற்றொரு கையில் ஒரு அழகான கெண்டியை வைத்தபடி இருக்கும் மேகலாவைக் கண்டதும், ஜானகியின் வெள்ளி கெண்டியும் அதை சுற்றி படர்ந்திருந்த அவளது கனவுகளும் நினைவுக்கு வந்தன. கூடவே அவளது சுபாவத்தை கேலி செய்து பேசிய  அந்த இரு பெண்மனிகளின் பேச்சுக்களும் காதுகளில் ரீங்காரமிட்டன.

விடு விடுவென எழுந்தவன் மேகலாவின் அருகில் போய் நின்றபடி, "வா..!  மேகலா...! வீட்டிற்குப் போகலாம்...!" என்றான்.

  தீடிரென அங்கு அவனைக் கண்டதும் ஒருநிமிடம் திகைத்துப் போன மேகலா, "என்னங்க. .! நீங்க சாப்பிட்டாச்சா? நானும் இதோ இதை அவர்களிடம் தந்து விட்டு  சாப்பிட்டுட்டு வந்திடுறேன்.. "என்றபடி நகரப் போனவளின் கையை பிடித்தான் ரகு.

அவன் ஸ்பரிசம் தந்த ஆச்சரியத்தில் மறுபடி திகைத்துப் போனவளை "இல்லை...! வேண்டாம். . வா.! நாம் வீட்டுக்கு போகும் வழியிலேயே எங்காவது ஹோட்டலில் சாப்பிடலாம்...! " என்றவன் அந்த கெண்டியை அவளிடமிருந்து வாங்கி அவள்  திரட்டிய மலர்களின் நடுவில் வைத்தவன்  "உன்னை இது நாள் வரை சித்திரவதை படுத்தியதற்கு மன்னித்து விடு. .!  இப்போது இந்த பூக்களுக்கிடையே இருக்கும் அழகிய மணத்துடன் ஒளி வீசும்  கெண்டியாக நான் உன்னை பார்க்கிறேன்...!" என்றான்.

அவள் ஒரு விதமாக விசித்திரத்துடன் தன்னை பார்ப்பதை உணர்ந்தவன், "என்ன இப்படி பார்க்கிறாய்? இன்று என் மனதை மாற்றுவதற்காகவே ஜானகி நம் இருவரையும் இங்கு சேர்த்து அனுப்பி வைத்திருக்கிறாள் என நினைக்கிறேன். "வா..! இவர்களிடம் போய் வருகிறோம்" எனச் சொல்லிக் கொண்டு, வீட்டுக்குப் போனதும் உனக்கு விபரமாக என் மனமாற்றத்தின் காரணத்தை கூறுகிறேன்." என்றபடி அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றவனை, எதையும் புரிந்து கொள்ளும் ஆற்றலை இறைவன் அளித்திருந்தும், புரியாமல் எதை எதையோ பேசி பிறர் மனதை  துன்புறுத்தும் ஆறரறிவு  படைத்த ஜீவன்களை  போலில்லாமல், தனக்கு ஜீவனில்லாவிடினும், தன்னை நேசித்தவர்களுக்கு பயனாக எந்நாளும், எக்காலமும் உழைத்தபடி இருக்கும் அந்த அழகிய கெண்டி மனமுவந்து , மனம் நிறைந்து வாழ்த்தியது.


கதை நிறைந்தது
.

இது எ. பி யில் நான் எழுதி வெளி வந்த கதை. இதன் கதாநாயகனை, அவனின் மாறுபட்ட  சுபாவங்களுக்காக வாசகர்களுக்கு கொஞ்சம் பிடிக்காமல் போய் விட்டது. ஆனால் அவன் தன் முதல் மனைவி ஜானகி பேரில் வைத்திருந்த அளவுகடந்த அன்பு காரணமாகத்தான், (அதை ஒரு விதமான எல்லைகளுக்கும் அப்பால் உள்ள பாசம் என்றும் சொல்லலாம்.) அவளால் தனக்கென மறுபடியும் வாய்த்த மறு மனைவியான மேகலாவை  ஏறிட்டு நோக்க இயலாமல் செய்து விட்டதாக சித்தரித்திருக்கிறேன். அதை அவளுக்கிழைத்த துரோகம் என நாம் சுலபமாக கூறி விடலாம். ஆனால் அந்த மறு மனைவியே அதை புரிந்து உணர்ந்து கொண்டவளாய் நடந்து கொண்டாள் எனில், அவளுக்கு அந்த முதல் மனைவியான ஜானகியின் பாலிருக்கும் நன்றி உணர்ச்சியை  (இதையும் நமக்குப் பிடித்தமான இறைவனிடம் காட்டும் ஒரு பக்தி நிலை எனக் கொள்ளலாம்.) நமக்கும் வெளிப்படுத்தி காட்டியுள்ளதாக அவளின் கதா பாத்திரத்தை சித்தரித்துள்ளேன். இப்படி மாறுபட்ட கதா பாத்திரங்களின் ஓட்டத்தில் கதை  முடிவை நோக்கி நகர்கிறது. இதை எபியில் படித்து நல்லதொரு கருத்துக்கள் தந்த அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். இங்கும் ஒரு வித்தியாசமாக, இல்லை என் பதிவில் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென பகிர்ந்துள்ளேன். இங்கும் படித்து கருத்திடும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏 

Wednesday, January 19, 2022

காலம் மாறிப் போச்சு.

 மறுபடியும் பிரவேசம். 

இது எப்போதோ எழுதப் பெற்று தனக்கு (கவிதை மாதிரி உள்ள அதற்கு... ) வர வேண்டிய ஆதரவு மதிப்பெண்களை இழந்த கவிதை. இப்போதும் பெரும்பான்மையாக இல்லாவிடினும், சிறிதளவாவது கிடைக்கும் (அதுதான் ஆதரவு....! ) என்ற நம்பிக்கையில், ஆசை மலர்களை மனதுக்குள் சூடியபடி கிளை பரப்பி மறுபடி துளிர்தெழுந்துள்ளது.  

சகோதரர் ஸ்ரீராம் ரெற்றோ கவிதை என எ.பியில் பகிர்ந்துள்ளதை பார்த்ததும், "நானும் பழையனவைதானே...!! என்னையும் மறு முறை ஒரு தடவை தூசு தட்டி வெளியிட்டால்தான் என்ன..? " என என்னிடம் அது முறையிட அதன் வார்த்தையை அரைமனதாக அங்கீகரித்து பதிவுக்குள்அனுப்பலாமா வேண்டாமா என தயங்கியபடி யோசித்தேன்.

 "இது அந்த மாதிரியா என்பதெல்லாம் எனக்கு தெரியாதே. .!!!! அது எங்கே...   நீ எங்கே.....!!!! நீயாக இப்படியொன்றை கற்பனை செய்து கொண்டால் எப்படி? மேலும், உன்னை நான்  அன்று உருவாக்கிய வரிகளில், வார்த்தைகளில் குற்றங்கள் குறைகள் இருக்கலாமே. .!!! " என முதலில் பிகு செய்தபடி  ரொம்பவே தயங்கினேன். "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை....! என்பது யாரும் அறியாததல்லவே.. ." என்ற அதன் ஆழமான  மறு பதிலில் அதன் பின் எழுந்த என் மறுபேச்சுகள் பயனின்றி போகவும் தைரியமாக அதுவே பதிவுக்குள் வந்தமர்ந்து விட்டது.:)))) 

இதோ அந்தக் கவிதை.. .

காலம் மாறிப் போச்சு... 

கடல் போன்ற வீடு...! அதில்

கணக்கற்ற நிறைய மனிதர்கள்...!

சுற்றங்களும், சுகங்களுமாக,

சுமை தாங்கும், உறவுகள்..!


அன்பும் , அரவணைப்புமாக ,

அரண் போன்ற மனங்கள்...!

தவழும் பேரன்களோடு, சேர்ந்து ,

தளர்வின்றி,தவழ்ந்தாடும் தாத்தாக்கள்...!


பாட்டும், கதையுமாக, பேத்திகளை,

பாசத்துடன் பார்த்துப் பார்த்து 

பாரபட்சங்கள் ஏதுமின்றி, 

பக்குவமாக்கும் ,பாட்டிகள்...!


விடியலில் உதிக்கும் விறகடுப்பு,

வீதி அசந்து உறங்கும் வரை,

அனல் கக்கும் அதிசயம்,

அண்டை அசலெங்கும் தொடரும்..!!!! 


உணவுகளுக்கும், பஞ்சமில்லை...!!

உடைகளுக்கும். வஞ்சமில்லை....!!

உறவுகளின், உணர்வுகளும்,

உரிமைகளும் , என்றுமே, 

அங்கு உடைந்ததில்லை....!!


நான்.. நீ...என்ற பேதமில்லை….!அங்கு

நாணயம் தவறிய பேச்சுக்களுமில்லை...!

மதிப்பும் , மரியாதையும் 

குறைந்ததில்லை...!!

மற்ற சண்டைகளும் என்றும் 

வந்ததில்லை..!!.

       

ஆனால் , இது அந்தக் காலம்....!

இன்று அந்த கடல்கள், கணிசமாக வற்றி,

கரையோரங்களும்,கவனிப்பின்றி,

கடுகளவாய் சிறுத்து விட்டது...!!


அடுப்பும், மரித்து விட்டது...!!மக்களின்,

உடுப்பும், மாறி விட்டது...!! மனிதரின்

சுயநலமெனும் போர்வைக்குள்,

சுற்றங்களின்  சுகங்களும்,

சுமைகளும், சிறிதளவும் சிரமமின்றி,

சுகமாக சுருண்டோடி கொண்டு விட்டன...!


௯டி வாழ்ந்தால் கோடி நன்மையென,

௯டி வாழ்ந்த குடும்பங்கள்,இன்று,

நான்.... நீ... என நாலும் ௯றிக்கொண்டு,

நான்காய் பிரிந்ததில், நன்றாகவிருந்த

நாகரீகங்கள் , தடு(தடம்)மாறி விட்டதில்,

நலம் குலைந்த நகர(நரக)மாயிற்று...!!

        

"என் வாழ்விலேயே இப்படி மாறிப் போன

 இந்த காலத்தின் கோலங்கள்..!!

உன் காலத்தில் எப்படி மாறுமோ?.." என்று

புலம்பிக்கொண்டிருந்த என் பாட்டியின்,

புலம்பல்கள் இன்றும், இன்னாளிலும்,

காதருகே, கால் கடுக்க நின்றபடி

காதுகளில் ஓதியபடிதான்  உள்ளது..!!! 


"விபரறிந்து பாட்டி... நீ..! அன்று

விசனத்துடன் சொன்ன வாக்கு ... .! 

விந்தை நிறைந்த இவ்வுலகில்

விரைவாய் அவ்வாறே மாறிப் போனதில்

வியப்பொன்றும் இல்லையம்மா...!!!" 


கடல் கடந்து சென்று வாழ்வதுதான், 

தன் கருமம் எனக்௯றி, 

காரியத்தை சாதித்தான் ஒரு பிள்ளை....!!


காசிருந்தும், கார்கள் பலவிருந்தும், 

எங்கள் கால் பதிக்க அங்கு  இடமில்லை, 

என்றான் மற்றொருவன்....!!


இல்லத்தில் இணைந்திருந்து 

இன்பமாக வாழ பழகியிரு ....! என்

இல்லத்தில் பிறகு உங்களை 

இணைத்துக் கொள்கிறேன் 

என்றான் ஒரு பிள்ளை....!! 


சிறிய பிரச்சனை எனக்கு...!! 

அது தீர்ந்து முடிந்ததும்

சில காலத்துக்குள் நீங்கள் 

என்னுடன்தான் …!! என்றான் 

இன்னொருவன்....!! 


இயந்திரமயமான இக்காலத்தில்,

இளமை விரட்டிய, எங்களுக்கு , 

இந்த இல்லம் என்ற ஒன்றிடம்

இல்லாமலிருந்தால், இன்னும் பல

இன்னல்களுடன் இணைந்திருப்போம்....!            


நான்கு பிள்ளைகள் பிறந்திருந்தும் ,

நான்கும் நாலுவிதமாய் போனதில் , 

இன்று முகமறியாத ,

உறவுகளுடன் வாழ்க்கையும்,

முதுமையுடன் அன்பாய்

முறியாமல் தொடர்கின்றது....!!


உன் சோகத்தை சுமக்க , பாட்டி...!அன்று

உன் பேத்தி நானிருந்தேன்....!!

என் வார்த்தை உரைக்க வகையாய், 

என் பேத்தி  இன்று

என் அருகிலேயே இல்லையே.....!!!! 


இந்த இல்லத்தின் உறவுகளுக்கும் 

இன்று இதே நிலமைகள்தான்...!!

இந்நிலை எந்நாளில் மாறுமோ? அந்த

இறைவனுக்கே வெளிச்சம்...!!! 


கடல் போன்ற வீடு....!!அதன்

காலங்கள் மாறிப் போச்சு...!!என, நீ. .

கடவுளிடம் புலம்புவது இப்போதும் என்

காதுகளில் ஒலிக்கிறது … பாட்டி!!!!  ஆம்!

காலம் மாறித்தான் போச்சு...! அது 

கணிசமாக மரித்தும் போச்சு....!!!!

***********************************************************************                       

கவிதை நன்றாக இருந்தால், (இல்லாவிட்டாலும்) இதற்கு ஆதரவு தர வேண்டுமாய் சகோதர சகோதரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இனி வரும் காலங்களும் ஏதாவது ஒரு வகையில் மாறிப் போக வாய்ப்பு உள்ளதால், இது மூன்றாம் முறையாக இங்கு வருவதற்கு சற்று அதிகமாகவே வெட்கப்படுமாம்:))))  எனவே படித்துப் பார்ப்பவர்களுக்கும், ஆதரவாக விமர்சிப்பவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

Friday, December 10, 2021

சாலையும், ஞானமும்.

 


1.) குடியிருப்பு  வசதிகளாக

குடியேற இருப்பிடங்கள்

குறைவற இருப்பினும், 

மக்கள் எவரும் 

பாதையாகவேனும்

பாவித்து பயணிக்காத 

சாலையின் வெறுமை

மனதிலும் வெறுப்பேற்றி

மடியாமல் நடை போடுகிறது.. ... 

###################################

2.) சாலை  வெறுமை  என்ற 

இந்த கண்ணாடியில்

மனதில் கலந்து விட்ட

வேதனைகளின் கனத்த  

பிம்பங்கள் ஏனோ 

பிரதி தினமும் இங்கு

பிழையின்றி பிரதிபலிக்கின்றன.... 

###################################

3.) கெளதம புத்தருக்கு  

போதி மரத்தடியில்

ஞானம் கற்பித்து 

தனக்கு இணையாக்கிய 

இறைவன் மனமிறங்கி

இந்த சாலை சூன்யத்தில்

சற்றே அஞ்ஞானமகற்றி 

அந்த ஞானமென்ற

சூட்சுமத்தை  நமக்கும் 

பட்சமாக கற்பித்தால்,

புத்தரின் பாதத்தில் 

அவரை விரும்பியபடி 

வீற்றிருக்கும் ஒரிரு

தூசி துகள்களில், 

ஒரு துகளுக்கு கண்டிப்பாக

நாமும் இணையாகலாம்.....

###################################

4.) மரங்கள் அடர்ந்திருந்த போது 

மக்களுக்கு நிழலாக, 

மண்ணிற்கு அரவணைப்பாக, 

மலர்களுக்கு பிறப்பிடமாக, 

மகிழ்வின் கீதமிசைத்து கொண்டு  

தன் மனதின் இனிமையோடு 

அதன் அவசர மடிவையும் 

அதி விரைவிலேயே 

சந்திக்காது இருந்திருக்கும். 

ஆனால், தனித்துவமான

வீடுகளின்  உதயத்திற்காக, 

விதி செய்யும் சதிக்காக, 

மட்டற்ற மரங்களை பலி தந்தும், 

மக்களின் வேண்டுதல்கள்

பரிபூரணமாகாத அதிருப்தியிலும்

பிற பட்டுப்போன  மரங்களும் 

பார்த்துப் பதறாத 

பரவச பார்வையிலும். 

பூத்துக் குலுங்கும் ஏனைய

மற்ற மரங்களும் மண்ணோடு

மண்ணாக இங்கு மடிந்து 

மக்கிப் போயிருக்கின்றன..... 

###################################

இதற்கு முன் இங்கு வந்த போது கட்டுமானங்கள் இல்லாத இந்த வெறும்  இடங்களில், சாலைகளில்  பறவைகளும், கால்நடைகளுமாக பறந்து / நடந்து  மகிழ்ந்திருந்ததை  ரசித்திருக்கிறேன். ஒரு வருட இடைவெளிக்குப் பின் நிறைய கட்டிடங்கள் இங்கு முளைத்திருந்த போதும், இந்த வெறிச்சென்ற சாலையை கண்டதும் என் கைப் பேசியில் படமெடுத்து விட்டேன். படத்தை எடுத்துப் பார்த்ததும் நாலு வரி எழுத வேண்டுமென என்னுள் உதயமான வார்த்தைகள் அந்த கட்டிடங்களின் சிமிண்ட் கற்களைப் போல சேர்ந்தெழுந்து வரிசையாக நின்று கொண்டன.  படம் குறித்த கவிதையை போலான (இந்த இடத்தில் சிறப்பான வார்த்தைகளுடன் சரளமாக கவிதைகளை புனையும் சகோதரர்கள் ஸ்ரீ ராம் அவர்களும், துரைசெல்வராஜ் அவர்களும் என் ஒழுங்கற்ற வார்த்தை கோர்வைகளுக்கு  மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.) வரிகள் உங்களுக்கும் ஏதோ  பிடித்திருக்குமென நினைக்கிறேன். படித்து கருத்திடும் நட்புறவுகளுக்கு என் பணிவான நன்றிகள்.. 🙏.

 இதை எழுதி வைத்து விட்டேனே தவிர  பல மாதங்களாக வெளியிடும் எண்ணமே வரவில்லை. ஆனால் எ. பியில் சென்ற வெள்ளியன்று  பகிர்ந்த  பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கர்ணன் படப்பாடல் என் மன நிலையை மாற்றி விட்டது.  

"என்னையே சரண் என்று நீ முழுமையாக நம்பி விட்டால், உன்னுடையது என இந்த உலகில் எதுவுமில்லை" என்ற கீதாசாரம் மிகுந்த அந்த பாடலில், மன்னரும் நானே மக்களும் நானே. . மரம் செடி கொடியும் நானே... சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்...துணிந்து நில் தர்மம் வாழ... என்ற வரிகளினாலும்,  காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க... என்று தன் கடமையைை செய்ய அர்ஜுனனுக்கு போதிக்கப்படும்  இறுதி வரிகளினாலும்  இந்தப் பதிவு  தைரியமாக இன்று அரங்கேறுகிறது. "இன்றிருப்பார் நாளையில்லை" என்ற ஞான விளக்கங்களும் பக்க வாத்தியங்களாக உடனிருந்து இதை அரங்கேற செய்துள்ளது. எல்லாம் அவன் செயல். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம். 🙏.

Friday, January 24, 2020

படைப்பின் ரகசியம்.




படைத்து விட்டான்", இறைவன்
பாரினில் வாழ்ந்து பார்! என்று..
விடை புரியா இப்புவியில் உன்
வினாக்களை நீ தொடுத்து,
தகுந்த விடைகளை நீயே
தக்க வைத்து கொள்! எனச் சுலபமாக
"படைத்து விட்டான்", இறைவன்
பாரினில் வாழ்ந்து பார்! என்று...

இருண்ட உலகத்தில் கருவோடு
இருந்தந்த சுகங்களும்,
இறுமாப்பு பெற்ற கனாக்களும்,
இருளை விட்டு வெளிவந்த பின்
இயன்றளவு இருப்பதும், இல்லை, 
இல்லாமல் போவதும் அந்த
இறைவனின் செயலால் தான்!

அன்னையின் அரவணைப்பில்,
அழுகையையும், அச்சத்தையும்
அமிழ்த்திவிட்டு ஆனந்தித்திருப்பதும்
அந்த ஆண்டவன் ஆணையால்தான்.

பின் வரும் காலங்களில்
பிறிதொரு பிசகில்லாமல்
அவன் இட்ட விதிப்படி
அவன் நட்ட மரங்கள் (மனிதர்கள்)
வாழ்வில் பயனுறுவதும், 
வாழ்வோடு பயணிப்பதும், 
வாழ்வை துவக்கியவனின் அருளால்தான்.

இருப்பினும் இறைவன் அமைந்திட்ட
இன்பம், துன்பம்,
ஏழ்மை, செழுமை,
ஏற்றம், இறக்கம்,
உயர்வு, தாழ்வு
ஜனனம், மரணம்,
இது போன்ற படிகளில்,
வழுக்கி விழுந்து எழுந்து புரண்டதில்
விழுப்புண்கள் ஏராளம்! ஏராளம்!
மனக் காயங்களும் தாராளம்! தாராளம்!
மனமிரங்கி மருந்திடும் மாற்றானுக்கும்
மனப்புண்ணுக்கு குறைவில்லை!

வேதனையை திரியாக்கி
வெறுப்பென்ற எண்ணெய் ஊற்றி
பற்றிலா தீப ஒளியில்,
பாழும் இவ்வுலகில் பயணித்து,
பரமனை முடிவில் சந்தித்து,
சோம்பலில்லாமல் தன் கதையை
சொல்லி வருந்திய போது,
சிந்திக்காமல் வாய்விட்டு
சிரிக்கலானான் அந்த சிற்பி.

"உன்னதமான இந்த உலகத்தில்
உயர்ந்த பிறவியாய் உன்னை
அனுப்பிய போதினிலே,
அவசரமாய் சொன்னதை,
அரை குறையாய் புரிந்து கொண்டு,
அனுதினமும் நீயும் நொந்து,
அருகிலிருந்தவரையும் நோகடித்த மனிதா!கேள்...

உன்னிடம் இல்லாத அந்த ஒன்று
அடுத்தவரிடம் இருப்பதும் உண்டு.
இல்லாத அதை தேடுவதை விடுத்து,
உன்னிடமிருக்கும் அந்த ஒன்றை விரும்பு!
வினாக்களை தொடுத்து உன்னை
விடைதேடச் சொன்னால், நீ அந்த
விடைகளையே வினாவாக்கி அதற்கு
விடை தேடி காலத்தை விடாது
வீணடித்திருக்கிறாய்!

மழையால் மரங்களுக்கும்,
மாந்தர்க்கும், மண்ணுக்கும் பயன்!
மழையால், மழைக்கென்ன பயன்?
ஒளியால் இருளுக்கும், இருளில்
இருக்கும் மனிதருக்கும் பயன்!
ஒளியால் ஒளிக்கென்ன பயன் ?

மனிதனுக்குள் மனிதனை தேடு!
மண்ணுக்கும், மற்ற மனிதனுக்கும்
மழையாகவும் ஒளியாகவும் இரு!
மனித நேயத்தில் நானிருக்கிறேன்!
மனிதாபிமானியாக நீ இரு!

அழிந்து விடும் பல செல்வங்களில்,
அழியாச் செல்வமாக இதை தருகிறேன் என
அருளிய இறைவன் அந்த
அழிந்து போன உடலற்ற உயிரை,
"படைத்து விட்டான்" மீண்டும்
பாரினில் வாழ்ந்து கொள்! என்று....
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இது எப்போதோ, எழுத்தை என் இன்னுயிராக கருதி, என் ஸ்வாசமே இதுதான் என்றுணர்ந்து  வாழ்ந்த போது,  எழுத்துக்கு கொஞ்சமும் நான் பழக்கமாகாமல்,  இல்லை, என்னிடம் எழுத்துக்கள் வசமாகாமல் தடுமாறிய போது
பித( இய) ற்றியதுதான்.... 

இருப்பினும் உள்ளச் சுழற்றலில் சுற்றிய வண்ணம் சுழன்று கொண்டிருந்த இப்போதைய  எண்ணங்கள்  மறுபடியும் அதை வெளி வர வைத்து விட்டது. 
க(அ) சட்டுக்கவி என்று இதை புறந்தள்ளாமல்,  பொறுமையாக படித்துப்பார்க்கும் நட்புறவுகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

Friday, August 3, 2018

பயணித்த காதல்....

சகோதரர் கில்லர்ஜி அவர்கள் ஆயிரம் அர்த்தங்கள் என்ற பதிவில், மாற்றுத் திறனாளிகளின் உன்னத குணங்களைப் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததும், அவர்களின் தன்னம்பிக்கை குறித்து நான் எழுதி வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் அதை உடனே பதிவிட்டு விட்டேன்.

நினைவூட்டியமைக்கு, 
நன்றி சகோதரரே..... 

பயணித்த காதல்..... 

நீ பயணித்த பேருந்தில்
நீண்ட நாட்களாக நானும் பயணித்ததில், 
            அமர்ந்து வர 
இருக்கைகள் இல்லாத காரணத்தால்,
இருவரும் பரிச்சியமானோம்!
பரிச்சியத்தின் வேர்களை
பார்வை  என்ற உரமிட்டு
"பார்த்து பார்த்து" பேணிய உன்
பாசத் தொல்லை பொறுக்காமல்,
மாறா என் உள்ளத்தை முற்றிலும்
மாற்றிக்  கொண்டு மறுத்தளிக்காது

பரிச்சியத்தின் பாசப்பிணைப்பை
மொழிகளில் அல்லாது வெறும்
விழி வழி பரிமாறிய என்னைப் பற்றிய
விபரங்கள் அறிய நீ அழைத்த
விலாசத்திற்கு ஓடி வந்தேன்... என்
விதி அங்கு தான் விளையாடியது.

பார்வையால் மட்டுமே பேசமுடிந்த என்
பரிதாபத்தை உணர்ந்த உன் 
பாசத்தில் சற்று விரிசல் விழுந்ததை 
பாவை நான் அன்று உணரவில்லை.

இதோ... இன்றும் உனக்காக
அதே பேருந்தில் பயணிக்கிறேன்
ஆனால் உன் வருகை தான் ஏனோ..  
அரிதிலும் அரிதாகி விட்டது.

இன்று அரிதாய் அமர கிடைத்த
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்ததும்
என் விழிகள் கண்டது உன் உருவை...
எங்கு போனாய்....என்னவனே.. என
கண்ணின் மொழியில் கேட்பதற்கு முன்
வழித்தடம் மாறிய வேறொரு பேருந்தில்
மற்றொரு மங்கையின் தோள் சாய்த்து
மயக்கத்தின் போதையில்  நீ மிதந்தாய்...

அவளின் இரு அதரங்கள் சப்தித்த
அசைவுகளில் அமிர்தமாய் இடை வரும்
ஒலி கற்றையின் ஓசையின் பால்... நீ
ஒடுங்கி கிடந்த கோலம் கண்டு
என் சப்தநாடியும் ஒடுங்கி போனது.

உன் உள்ளத்தின் உதாசீனத்தை
உணர்ந்த என் ஊமை விழிகள்
உணர்ச்சிகளை கட்டுபடுத்த இயலாது
உடைப்பெடுத்துக் கொண்டது.

மௌன மொழிகளின் மேன்மையை
உணராத, நீ... மன்னிக்கத் தகாதவன்.
பாசமொழிகளை பயன்படுத்தி நேசம்
பரிமாறி, வஞ்சித்த உன்னை அந்த
பாசமே என்றும் மன்னிக்காது.

இழிவான உன் செய்கையால்
இடிந்துபோன என் உள்ளத்தை
இயல்பான நிலைக்குக் கொண்டுவர
இறுகிய என் மனதில் பயணித்த வரிகள்..
                           
                                    இதோ....
"நீயோ.. மாற்றுத்திறனாளி !
அவனோ ஏமாற்றுவதில் திறனாளி !
தீயில் விழுந்தும் கருகாமலர் நீ !
திறமையுடன் திசை திரும்பும் 
தீயினும் கடுமையான தீ அ(ய)வன்..

இனி உன் வாழ்வு வசந்தமாகும்
வழியில் சந்தித்த அவன் வரவினால்.. 
விதி உனக்கு சாதகத்தை தந்ததன்றி,
பாதகத்தை ஈன்று தந்து பாரினில்,
பறைசாற்றிக் கொள்ளவில்லை...
மனதை மாற்றிக்கொள் ! மனம் மகிழ,
மகாராணியாக வாழ்வாய். "
                              இப்போது

மன தைரியம் கொடுத்த 
மாற்று வழி" தன்"னம்பிக்கையில்
நீ இல்லா பேருந்தில், உன்
நினைவுகளை மறக்கடித்து
நிம்மதியாக பயணிக்கிறேன்...

Saturday, July 21, 2018

புகைப்படங்கள் பகிர்வு.

மேக நாதன் .. 



மேகங்களில் ஒழிந்து மறைந்து
வேகமாக மாயமாகி போரிடுவதால்
மேக நாதன் என்னும் பெயர்
சந்தேகமின்றி நிலைத்து போனதோ..
அசுரகுல பிள்ளை எனினும்.
அவனின் நல்லமனம் உன்னிடமும்
அதிகமாக அருகி தங்கிப் போனதை
அவனி உள்ளளோர் நன்குணர்வர்.
சித்து பல கற்று தேர்ந்து நீ
இந்திரஜித்து  எனும் புகழ் பரப்பியும்
இங்கேயுன்  மேகம் கண்ட ஆசையினால்,
மாயவித்தையை மறுபடி காட்டிட
மாறி மாறி வந்தனையோ...





மெளனமாய் இருந்த மேக நண்பனை
மெளனம் கலைத்து பேசி பார்த்து
தோற்றுப்போனதில், அழகான
ஊஞ்சலில் அமர வைத்து 
ஆசையாய் ஆட்டியபடியே 
அழகு பார்த்து கோபம் தீர்த்த 
காற்றுத் தோழனின் அதீத கவனிப்பில் 
சற்று மனமுருகி கரைந்தே 
போனான் மேக நண்பன்  







வெளிச்சம் காட்டும் கண்ணாடியாம்
சூரியனை பாதரசம் துடைத்து நிமிடத்தில் 
மங்கிப் போகச் செய்தது மழை மேகம்




மேகக் குழந்தைகளைஅன்புடன்
தாலாட்டி சீராட்டியதால் வானம்
அன்னை என்ற அந்தஸ்தை 
அதிசுலபமாய்  பெற்றுக் கொண்டது





எங்களின் ஒவ்வொரு நிலையிலும்
எழிலான ஒவ்வொரு ண்ணங்ள்.
இவை இயற்கை எமக்களித்த  பரிசுகள்.
இப் பரிசினை, உங்கள் முன்னே 
பார்வையாக்கினோம்... உங்கள் 
படமெடுக்கும் அவாவை எங்கள் 
உள்ளம் உணர்த்தி போனதினால்..... 
தன்னிடம் இருப்பதை பகிரவும் ஒரு 
தயாள குணமும் வேண்டுமென்றோ... 
விரிந்து பரந்த இவ்வுள்ளம் எங்கள் 
வானத்தாயிடம் நிதமும் பெற்ற சீதனமாம்.



இது வான வீதியின் அழகில் மயங்கி நான் எடுத்தப் புகைப்படங்கள். சுமாராகத்தான் வந்திருக்கிறது... அதற்கேற்றவாறு ஜோடியாக கை கோர்த்து கொண்டு  வர்ணனைகள், இலக்கணக் கவிதை, புதுக்கவிதை, உரைநடைக்கவிதை என்ற எதிலும் சேராத ஒரு தத்து பித்து கவிதையாக உருவெடுத்து உங்கள் முன், (அதற்கு முன், என் முன்)  உருவெடுத்து நிற்கிறது. பொறுமையோடு சகித்து கொள்வோர்க்கு 
🙏

நன்றி.
=====*=====

Thursday, June 7, 2018

காத்திருப்பு....



குடங்கள் காத்திருந்தன!
குடிநீரை சுமந்து செல்வதற்காக!
தண்ணீர் வண்டியும் வந்த பாடில்லை!
தாகம் தீரவும் வழியில்லை!

பாதையின் தொலை தூரத்தில் 
பார்வையை பதிய வைத்து
அயற்சியை களைந்து தொய்வின்றி
அமர்ந்திருந்தார்கள்  அவர்கள்!

பகலில் பளு சுமந்து 
பழுதின்றி பணியாற்றி
குடிக்கும் குடிநீருக்காக
இரவில் கண்விழித்து
இன்னல் படுபவர்கள்.

ஒரு சாண் வயிற்றுக்காக,
எண் சாணையும் வருத்தி
ஆண் பெண் என்ற பாகுபாடின்றி
அனைத்து வர்க்கமும் பாடுபட்டால்,
அரைவயிறு சோறாவது,
அவ்வப்போது பகிர்ந்துண்ண முடியும் 
ஆதரவற்ற இவர்களால்!

எப்போதோ இணைத்த தெருக் குழாய்களில்
எப்பொழுதுமே குடிநீர் வரவின்றி, அதன்
சுவாசங்கள் முற்றிலும் நின்று போனதில் 
இவ்விடங்கள் தெருநாய்களின் வாசமானது 
இவர்களின் பெரும் துரதிர்ஷ்டம்!

தேர்தல் பல வந்தாலும் அடிப்படை
தேவைகளை பெறவில்லை இவர்கள்!
மாலையும் மங்கிச் சரிந்துவிட்டது...
மயங்கிச் சரிந்தது கண்ணும் மனமும்...

இருள் சூழ்ந்து இனி "நாளை" என பகல்,
இருளிடம் விடை பெற்றுச் சென்றது.
இனி இரவில் சிறிது கண் துயின்றால், 
இயலாமையை சற்று விரட்டி விட்டு
பகலவன் வருவதற்குள் பதறி எழுந்து
பணி செய்ய இயலும் இவர்களால்!

காத்திருப்போரின் பொறுமை 
சிதைந்து, முனங்கல்களும் 
சினங்களும் தடங்கலின்றி
வெளிவந்தன..முடிவில் வந்தது....

குறை தீர்க்கும் குடிநீர் அல்ல!
குமைந்த நெஞ்சங்களின்
வெறுப்பும் வேதனையும் ஏற்படுத்திய
வெதும்பல்களின் விளைவால் வந்தது
வழி பார்த்திருந்த இவர்களின் விழி நீர்!

இவர்களின் விழிநீரை சேகரித்து
வடித்திட்டு வீதிகளின் குழாய்களில்  
வாகாய் ஓட விட்டிருந்தாலும்,
அத்தனை தெருக்குழாயிலும்
அன்புடன் சிறிது நேரம்
ஆதரவாய் கொட்டியிருக்கும்.

இனி நாளை பார்த்துக் கொள்ளலாம் 
என்ற( அவ) நம்பிக்கையுடன்
களைப்புடன், கனத்த மனதுடன்,
கலைந்து போனார்கள் அவர்கள்.

குடங்கள் மட்டும் மறுபடியும் 
குறைவறவே காத்திருந்தன!
நாளை கண்டிப்பாக (வாரா) வரும்
குடிநீரை சுமப்பதற்காக !!!

Thursday, March 8, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 5)

இல்லம் களைக்கட்டி இருந்தது.  இல்லத்தில் படித்துக்கொண்டருந்த மாணவ மாணவியர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள தங்களை தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள்.குளிக்காமல் அடம் பிடித்துக்கொண்டிருந்த சின்னக் குழந்தைகளை சமாதானபடுத்தி குளிக்க வைத்து ஆடைகளை  அணியச் செய்து  விழாவுக்கு ரெடியாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் பார்வதியும் மற்றொருவரும். கைகள் சரிவர கடமையை செய்து கொண்டிருக்க மனம் தியாகுவையும், ராஜுவையும் சுற்றி வந்தது.

அன்று பார்வதி அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதும் கோகிலாவும் சற்று நெகிழ்ந்து போனாள்."இவ்வளவு பாசத்தை மனசுலே வச்சிகிட்டு , சொல்லாமே ஏன் இப்படி தவிச்சிருக்கே! நெஞ்சு நிறைய பாரத்தை வச்சிகிட்டு உன் ஒருத்தியாலேதான் சகஜமா இருக்கிற மாதிரி காமிச்சிட்டிருக்க முடியும் அத்தை " என்றவளாய் அவள் அருகில் வந்து தோள்களை அணைத்துக் கொண்டதும், பார்வதி இன்னமும் நொறுங்கி போனாளன்றே சொல்லவேண்டும். மனதின் பாரத்திற்கு கண்கள்தான் வடிகால் என்றே சொல்ல வேண்டும்..  அன்று அவளிடம் சொல்லி வருத்தப்பட்டதும்,  மனசு லேசானதை உணர்ந்தாள்.வயது காரணமாக தற்சமயம் ஏற்பட்டிருக்கும் தள்ளாமையை தவிர்த்து மனசளவில் எதற்கும் தைரியமாயிருக்கும் தான், தியாகுவை பார்த்ததிலிருந்து சற்றே நொறுங்கி தளர்ந்திருப்பதை ஒத்துக்கொண்டாள்.

விழா ஆரம்பிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாலும், விழாவுக்கு கோகிலாவும் வருவதாய் சொன்னதை நினைவு கூர்ந்ததாலும், மனதுக்குள் எழுந்த யோசனைகளை அகற்றிவிட்டு, தனக்களிப்பட்டிருக்கும் அடுத்தடுத்த வேலைகளைமும்மரமாக கவனிக்க ஆரம்பித்தாள் பார்வதி.

குழந்தைகளின்  கலை நிகழ்ச்சிிகள் முடிந்து ,  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை ஊக்குவித்து,. அனைத்து குழந்தைகளும் இனிப்பு வழங்கி, இல்லத்தை தொடங்குவதற்கு ஆதரவாக இருந்திருந்தவர்கள் ஒரிரு வார்த்தைகள் பேசியபின் , இல்லத்தை ஏற்று நடத்தும் கோகிலாவின்  குடும்ப நண்பருமான இல்லத்தின் நிர்வாகி, வந்திருந்தவர்களை வரவேற்று பேசி இல்லம் தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடந்த முன்னேற்றங்களை கூறி இல்லத்தற்காக சேவை செய்யும் அனைவருக்கும் நன்றி கூறி அதில் பணி புரியும் ஆசிரிய பெருமக்களையும், சிப்பந்திகளையும் பாராட்டி பேசினார். .பார்வதியின் சேவைகளை உயர்த்திப் பேசியவர்," என் குடும்ப நண்பரின் மனைவி கோகிலா, "என் அத்தை இவர், இவருக்காக இவ்வில்லத்தில் ஒரு வேலை கொடுங்கள்! " என்றதையும், அவர் வேலையில் சேர்ந்த நாள் முதற்க்கொண்டு இத்தனை வயதிலும் அவரது அயராத உழைப்பைக்கண்டு தான் வியந்து போனதையும் கூறி, அது மட்டுமல்ல! அவருக்கு மாத ஊதியமாக கொடுக்கும் பணத்தில் அவர் செலவுக்கு போக மிகுதியை சேர்த்து வைத்து இல்லத்திற்கே தானமாக கொடுக்கும் அவர் பண்பையும் குறிப்பிட்டு பேசியதும், கரவொலி எழுந்தது. விழாவுக்கு குடும்பத்துடன் வந்திருந்த கோகிலாவும் பெருமிதத்துடன், எழுந்து வந்து, பாராட்டுகளினால் சற்று சங்கோஜத்துடன் நின்றிருந்த பார்வதியை அணைத்துக்கொண்டாள்.

"பிறகு ஒரு விஷயம்!"  என அவர் மறுபடியும் ஆரம்பித்ததும், அனைவரும் அமைதியாகி அவரை நோக்கவும், "ஒருவாரம் முன்பு ஒருவர் நம் இல்லத்துக்கு வந்து கணிசமாக உதவித்தொகையை தந்ததோடு, நம் இல்லத்திலே ஒரு வேலையும் தரும்படி கேட்டுக்கொண்டுள்ளார். தாராள மனது கொண்ட அவர் செய்த உதவியை சொல்லி பிரகடனபடுத்தக் கூடாதென்றுதான்  சொன்னார். ஆனால் என் மனதில் கூற வேண்டுமென்று நினைத்ததால், சொல்லி விட்டேன்.. இவரை பிள்ளையாய் பெற்றெடுத்த அவரின் பெற்றோர்கள் என்ன தவம் செய்தார்களோ? இத்தனை சின்ன வயதில் அவருடைய சேவை உள்ளம் பாராட்டப்பட வேண்டிய  ஒன்று என நான் நினைக்கிறேன்.! அவரும் நம் பார்வதி அம்மா மாதிரி கோகிலாவுக்கு  உறவு என்று சொல்லி,, அவர்தான் அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தினார். இவ்விடம் அவரை அழைத்து அனைவருக்கும் அறிமுகப்படுத்த விழைகிறேன். தயவு செய்து அவர் மேடைக்கு வரவும்." என்றதும் கரவொலிக்கிடையே அமர்ந்திருந்த இடத்திலிருந்து மேடைக்கு வந்து வணங்கியவரை கண்டு பார்வதியின் முகத்தில் சிறு சலனம் தென்பட்டது

நீ  செஞ்சது  உனக்கே சரின்னு படறதா? உன் கடமையை செய்யாமல், எனக்காக இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தாய் ? என சற்று கோபமாக கேட்ட பார்வதி "இதற்கு நீயும் அவனுக்கு துணையாக இருந்திருக்கிறாய்? அன்று வந்த போது   என்கிட்டே  ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அத்தனையும் மறைக்கனும்னு எப்படி தோணுச்சு உனக்கு? என்று  கோகிலாவை பார்த்தும், சற்று வருத்தமும் கோபமும் கலந்த குரலில் கேட்டாள் பார்வதி.

"இந்த கேள்வியையே  எத்தனை நேரம் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள் பாட்டி? " என்றபடி அவள் அருகில் வந்தமர்ந்தான் தியாகு.

இல்லத்தில் அவனை மேடையில் பார்த்ததும் அதிர்ச்சிக்குள்ளாகிய பார்வதி விழா முடிந்து தன் இதர வேலைகளும்  நிறைவுற்றதும் கோகிலாவுடன் கூட சரிவர பேசாமல் வீடு வந்தடைந்தாள். பேரனை பார்த்ததும் ஒரு நிமிடம் தன்னையறியாமல் தன்னுள் மகிழ்ச்சி எழுந்த போதும்,  இன்னமும் தன்னை வறுப்புறுத்தும் நோக்கத்தில், அவன் எப்படியோ கோகியை சந்தித்து, அவள் ஆதரவையும் சம்பாதித்துக்கொண்டு அதே இல்லத்தில்  நற்பெயரும் பெற்றபடி...... இருக்கட்டும்!  இந்த கோகியும் தன்னிடம் ஒருவார்த்தை கூடச் சொல்லாமல் மறைத்திருக்கிறாளே!  என்றெல்லாம் எண்ணியபடி  இருந்தாள்.

மறு நாள் காலையிலேயே தன்னை சந்திக்க வந்திருந்த இருவரிடம்  வருத்தமும் கோபமுமாக கேள்விகளை கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

கோகிலாவும் வந்து அவளருகில் அமர்ந்தபடி , "அத்தை! உன்னை தேடி வந்த தியாகு நீ உன் உறுதியான முடிவை சொன்னதும் , என்னசெய்வதென்று தெரியாமல்  என் வீட்டுக்கு வந்து என்கிட்டே எல்லா விபரமும் கூறினான். அவனுடைய அன்பான பேச்சும்,  உன்மேலே வச்சிருக்கிற மரியாதையையும் பார்த்ததும்,  என் அண்ணா உனக்கு செஞ்ச துரோகத்தைக்கூட நான் கொஞ்ச நேரம் மறந்துட்டேன். இரண்டாவதா, அவனுக்கு கிடைச்சிருக்கிற தண்டனையை கேட்டதும் , "தான் ஆடாட்டாலும் , தன் சதை ஆடும்னு" சொல்வாங்காளே! அந்த மாதிரி எனக்குள்ளும் ஒரு பச்சாதாபம் உருவாயிடிச்சு! அதுக்கப்புறமா, தியாகு இல்லத்தில் என்னையும் அறிமுகப்படுத்தி விடுங்கள்! என்று சொன்னதும் என்னாலே தட்ட முடியலே! அதைப்பத்தி பேசலாம்னு அன்னைக்கு நான் வந்தப்போ, நீயும் அதை சொல்லி வருத்தப்பட்டதுனாலே தியாகு கூடவே ஒருநாள் இங்கு வந்து பேசாலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே இவன்......என்றவளை இடைமறித்தபடி தியாகு ," பாட்டி! இங்கிருப்பது உங்களுக்கு பிடிக்கல்லைன்னா, நான் போயிடுறேன். "என்றான் சற்று உடைந்த குரலில்.

மூவரும் சற்று நேரம் ஒன்றும் பேசாமல் அங்கு ஒரு கனத்த மெளனம் நிலவியது. ஒவவொருவருக்கும் தான்  செய்தது  தவறோவென மனதுக்குள் சுய பரிசோதனை செய்து கொள்வது போல் அமைதியாயிருந்தனர்.
சிறிது நேரத்திற்கு பின் தியாகுதான் மெளனத்தை உடைத்து பேச ஆரம்பித்தான்.

" பாட்டி! நான் உங்களை பார்த்ததில்லை!ஆனால் அப்பா உங்களைப்பற்றிச் சொல்லும் போது நானகவே என் மனசுக்குள் உங்களை ஒரு உருவத்தை கற்பனை செஞ்சு வளர்ந்து வந்தேன். உங்களை பாக்கனும், உங்களோடு பேசி உங்க அன்பு  நிழல்லே வாழனுன்னு,  மனசுலே ஆசையை வளர்த்துகிட்டேன். அதனாலே உங்களை எப்படியாவது என்னோடே அழைச்சிகிட்டு போகனுன்னு முடிவோட புறப்பட்டு வந்தேன். இங்க வந்து பாத்த போது நான் நினைச்ச மாதிரிதான் நீங்களும் இருந்தீங்க!  ஆனா, என்னோட முடிவுபடி உங்களை கூட்டிண்டு போற விசயத்துலே மட்டும் நான் தோத்துட்டேன். அதனாலதான் உங்களை பிரிய மனசில்லாமே, நீங்க வேலை பாக்கிற இல்லத்திலேயே உங்க பார்வையிலே படற மாதிரி இருக்கலாம்னு தோணிச்சு!  கோகிலா அத்தையும் இங்கே இருக்குறாங்கன்னு நா உங்களைபத்தி விசாரிக்கும் போதே தெரிஞ்சுகிட்டதாலே, அவங்களை போய் சந்தித்து பேசினேன்." அவங்க உதவியோடுதான் இல்ல நிர்வாகிகிட்டே வேலையில் சேரவும் சம்மதம் வாங்கினேன். என்கூட நீங்க வரதற்கு பிரியப்படாத போது, நான் உங்க கூட இருக்க நினைக்கிறது தப்பா பாட்டி?. நெகிழ்ச்சியுடன் அவன் கேட்டதும், பார்வதியின் கண்களும் குளமாயின.

"இல்லைப்பா! ஆனால் உங்கப்பா அங்கே எப்படி உன்னை விட்டுட்டு தனியா சிரமபடுவான். நீ அவனுக்கு ஆதரவா இருந்து பாத்துண்டாதானே நல்லாயிருக்கும்.". மகனின் மேல் உள்ள பாசம் பார்வதியை சுமூகமாக பேச வைத்தது.

"பாட்டி! அங்கே அப்பாவை கவனிச்சிக்க அம்மா இருக்காங்க!  அம்மாவின் சொந்தங்கள் அருகருகே இருக்காங்க! ஆனா இங்கே உங்களுக்குன்னு கோகி அத்தையை தவிர யார் இருக்காங்க? இப்போதிலிருந்து உங்களுக்காக  நானும் இருக்கேன். அப்போ அப்பா உன்னை விட்டுட்டு ஏதோ சுயநல புத்தியிலே போனதுனாலே நீங்க எவ்வளவு சிரமங்களை அனுபவிச்சு இருக்கீங்கன்னு கோகி அத்தை சொன்னாங்க! அந்த பாவத்துக்கு பிராயசித்தமா  நான் அப்பாவை விட்டு இருக்கிற வேதனையை கொஞ்ச நாள் அப்பாவும் அனுபவிக்கட்டுமே! அப்படி சோர்வா நின்ன நேரத்திலே கூட நீங்க மனசை தளர விடாமே இல்லத்துலே உங்க வயசுக்கும் மீறிய வேலை செஞ்சு.. உங்க உழைப்பையே  தானமாக்கி தந்து  அந்த புண்ணியந்தான் அப்பா உயிரை காப்பாத்தியிருக்குன்னு நான்நினைக்கிறேன்! .அன்னைக்கு இல்லத்தோட நிர்வாகி பெருமையா உங்களை பத்தி பேசுனப்போ, நான் சேர்த்து வச்ச பணத்தை கொடுத்து அவர்கிட்டே பெருமைபட்டம் வாங்கினது  கூட சின்ன செயலா ஆயிடுத்து.!  தனியொரு மனுஸியா நின்னு வாழ்ந்து காட்டின உங்களுக்கு இந்த வயசான காலத்துலே ஆறுதலுக்கு பிடிசிக்கறதுக்கு ஒரு கரம் வேண்டாமா? அந்த கரமா நான் உங்களோடு எப்பவும்  இருக்கேன். உங்க மனசு மாறி நீங்க எப்போ அப்பாவை பார்க்கப்போகலாம்னு சொல்றீங்களோ அது வரைக்கும் நான் அந்த பேச்சை எடுக்க மாட்டேன். சத்தியமா உங்களை விட்டுட்டு போகவும் மாட்டேன். உங்க கனவையெல்லாம் அப்பாவிற்கு பதிலா  நான் நிறைவேத்தி வைக்கிறேன்." தியாகு பேச பேச பார்வதியின் மனம் இளகியது. கண்களில் கண்ணீருடன் மெளனமாயிருந்தாள்.

கோகிலா,"என்ன அத்தை! தியாகு இவ்வளவு கெஞ்சுறான்! நீ பதிலேதும் சொல்லாமே அமைதியா இருக்கே! என்றதும்,  கண்களை துடைத்தபடி எழுந்து கொண்ட பார்வதி,"கோகி!  என்னோட மன உறுதி என் பேரனுக்கும் இருக்கு! ஆனா அவன் உறுதிக்கு முன்னாடி நான் தோத்துப்போயிட்டேன்.! எனக்கு இந்த வயசான காலத்துலே பக்க பலமா என் பேரனை துணைக்கு கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லி வரலாம்! வா! தியாகு! நீயும் வா ! கோவிலுக்குச் சென்று வரலாம் என்றபடி பாசத்துடன் அவன் கையைப் பற்றிக்கொண்டாள். இனி  தன் வாழ்வு சற்று ஆனந்தமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் உடல் வலு கொஞ்சம் கூடியதை உணர்ந்தாள் பார்வதி. மூவரும் நிறைந்த மனதுடன் ஆண்டவனை தரிசிக்க கிளம்பினார்கள்.
முற்றும். 

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதிகள்:1234

Tuesday, March 6, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 4)

சற்று ஆசுவாசபடுத்திக் கொண்டவள் விழி நீரை  துடைத்துக் கொண்டவள் அவன் கைகளை பிடித்து தன் நெஞ்சொடு அணைத்த வண்ணம், "தியாகு! என் செல்லமே! உன்னை என் கண்ணுலே காமிச்சு கொடுத்த அந்த ஆண்டவனுக்கு நா ரொம்ப கடமை பட்டிருக்கேன். எத்தனையோ கெடுதல்களிலும் அவன் சிலது நல்லது பண்ணியிருக்கான். அதுலே இதுவும் ஒண்ணு.  உன்னோட அப்பா என் பிள்ளையாய் பிறக்காமே,  நான் எடுத்து வளர்த்ததுக்கே அவன் இந்த துன்பத்துக்கு ஆளாகியிருக்கான். ஏன்னா என் நேரம் அப்படி ! நான் பிறந்து வந்த வேளை அப்படி! மத்தபடி உன்னை பார்த்ததிலே நான் ரொம்பவே சந்தோஸபடறேன். ஆனா அவ்வளவு சட்டுனு உதறிட்டு உன் கூட என்னாலே வர முடியாது! ஏன்னா இந்த குழந்தைகளோடு என் காலம் முடிஞ்சு போகனுமுன்னு நான் பிரார்த்தனை செய்துகிட்டே இங்கே வேலையிலே சேர்ந்து ரொம்ப வருடங்கள் ஆச்சு. எல்லாத்தையும் ஒரளவு மறந்து ஒரு தவ வாழ்க்கை மாதிரி வாழ்ந்துண்டு வர்றேன்.அவ்வளவு சுலபமா இதை உதறி எறிஞ்சிட்டு என்னாலே வெளியேற முடியாது. ராஜுவை நினைச்சா எனக்கு ரொம்பவே வருத்தமா இருக்கு! ஆனா என்னை விட பத்து மடங்கா கவனிக்க அவன் பிள்ளை இருக்கான். அந்த நிம்மதி இந்தப்பிறவியிலே எனக்கு போதும். அந்த நினைப்போடு  எஞ்சிய காலத்தை கழிச்சிடுவேன். நீ என் பிள்ளை மாதிரி இல்லாமே ரொம்ப தைரியமா இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி இருக்கே...! நீ நல்லா இருக்கனுப்பா!  பத்திரமா போயிட்டு வா! அப்பாவை நல்லபடியா கவனிச்சுக்கோ!" என்றவள் மேலும் அங்கிருந்தால், தன் உறுதி தளர்ந்துவிடுமோ என்ற ஐயத்தில் வரவேற்பு அறையை விட்டு அகன்று உள்ளே சென்று மறைந்தாள்.

அவள் பேச்சில் கட்டுண்டவன் மாதிரி் அமைதியாயிருந்த தியாகு மேற்கொண்டு செய்வதறியாமல் சற்று நேரம்  சிலையாய் நின்றிருந்தான்.

சில வார காலம்  நிமிடமாய் ஓடியது தெரியவில்லை. பார்வதிக்கு..... ! ஆனால் ஒவ்வொரு  நாளும்  சில மணி நேரமாவது தியாகுவின் முகமும் பேச்சுக்களும் அவள் முன் வந்து நின்று போயின. ராஜு தன்னுடன் இருக்கும் போது அவனுக்கு மணமுடித்து,  அவன் குழந்தையை எடுத்து வளர்த்து என்று எல்லோரையும் மாதிரி அவளும் கனவு கண்டாள். அதெல்லாம் பொய்த்துப் போய் விட்டது என மனசை தேற்றிக்கொண்டு வாழக்கற்றுக் கொள்ளும் போது எதிரில் வந்து நின்று" பாட்டி" என உரிமை கொண்டாடி, மனதை சலனப்படுத்துகிறான்.  அமைதியாக பேசி மனதை அலைக்கழிக்கிறான். இன்னமும் இவனை மறந்து பழையபடியாக எவ்வளவு நாட்களாகுமோ? என்ற எண்ணத்தில் பெருமூச்செறிந்தாள். இந்த கவலையில் கோகிலாவும் இத்தனை நாட்களாக தன்னை பார்க்க வராதது நினைவுக்கு வரவே "அவளுக்கு என்ன பிரச்சனையோ? " என்று எண்ணியபடி இல்லத்துக்கு கிளம்ப எத்தனித்தாள்.

அப்போது "அத்தை"! என்ற குரலோடு கோகிலா வீட்டினுள் நுழையவும்,  " வா கோகி! இப்பத்தான் உன்னை நினைச்சேன். உனக்கு நூறு வயது!" என்றபடி அன்போடு அவளை வரவேற்றாள் பார்வதி.

" வேண்டாம் அத்தை! உன் வாய் பேச்சு பலிச்சிட போறது.அப்புறம் கஸ்டப்படறது நானில்லையா? " என்று சிரிப்போடு சொன்னவள்" நீ அதுக்குள்ளே கிளம்பிட்டியா!  ரொம்ப. நாளாச்சா? அதான் இன்னைக்கு உன்னை பாத்துட்டு போகலாம்னு வந்தேன்." என்றவளிடம் ," சரி உக்காந்துக்கோ! நானும் உன்னை பாக்கனும்னு நினைச்சேன் .இல்லத்துலே ஆண்டு விழாவுக்கு ஏற்பாடு பண்ணிடிருக்காங்க! அதான் சீக்கரமா கிளம்பறேன். சரி! ஒரு அரை மணி தாமதமா  போனா தப்பில்லை!  நா சொல்லிக்கிறேன். என்று அவளருகில் அமர்ந்தவள்," கொஞ்சம் இரு என்று அடுக்களைக்குள் சென்று ஒரு கிண்ணத்தில் பாயாசத்தை கொண்டு வந்து தந்தாள். "என்னஅத்தை! இன்று இனிப்பெல்லாம் பலமாக இருக்கிறது." என்று அதை வாங்கிக்கொண்டாள் கோகிலா.

"இன்று அவன் பிறந்த நாள்! அவன் இங்கு இருக்கும் போது அவனுடைய பிறந்த நாளன்னைக்கு அவனுக்கு வேண்டியதை பார்த்துப் பாரத்து செஞ்சேன் .அன்று கட்டாயம் இந்த இனிப்பிருக்கும். அவன் என்னை விட்டு போனதிலிருந்து, கோவிலுக்கு செல்லும் போது அவனுக்காக வேண்டுவதோடு சரி!  இன்னைக்கு கோவிலுக்கு சென்ற போது அவன் பெயரில் அர்ச்சனை பண்ணினேன். வீட்டிலும் பாயசம் செஞ்சு விளக்கேற்றி சுவாமிக்கு படைத்து ..... என்னவோ போ! எனக்கு மனசே சரியில்லை! பத்து நாளைக்கு மேலா  உன்கிட்டே சொல்லனும்னு மனசுக்குள்ளே நினைச்சிகிட்டேயிருக்கேன்... .அவன் விபத்துலே கால்களை இழந்து என்னை, எனக்கிழைத்த தப்பை நினைச்சபடி,  தவிச்சிண்டு இருக்கானாம். அவன் பிள்ளை எப்படியோ நான் இங்கிருக்கிற விபரத்தை சேகரிச்சிண்டு வந்து "அப்பா இந்த மாதிரி உன்னை நினைச்சி வருத்தப்படுறார். என்னோடவந்துடுன்னு" வறுப்புறுத்தினான். நான் தான் எனக்கு அங்கெல்லாம் சரி வராதுன்னு திருப்பி அனுப்பிட்டேன். என்னை பார்க்க ரொம்ப ஆவலா இருக்கான்னு சொல்றான். நான் இங்கே இருபது வருஷமா ஆண்டவன்கிட்டே மனசுக்குளளே கதறிண்டிருக்கேன்.என் உயிர் பிரியருதுக்குள்ளே ஒரு தடவை அவனை கண்ணுலே காட்டுன்னு!  அது சரி! அதெல்லாம் எப்படி அனுமன் மாதிரி நெஞ்சை பிளந்து காட்ட எனக்கு சக்தி இருக்கா?  உறவெல்லாம் ஒவ்வொருத்தரா போன நிலையிலே இவன்தான் ரத்தமும் சதையுமான என் உடம்புலே உயிரா , சுவாசமா இருக்கான்னு எப்படி அவனுக்கு விளக்குவேன் அது புரிஞ்சிருந்தா அவன் என்னை விட்டு போவானா? எந்த ஒரு பிரச்சனையே வரட்டுமே! அப்படியே வந்தாலும், இந்த உறவை வெட்டிண்டு "அப்புறமா பாத்துக்கலாம்னு மனசை இறுக்கிண்டு, நாளை தள்ளிப் போட்டுகிட்டு இருந்திருப்பானா?  நான் இங்கே ஒருநாள் பட்ட வேதனையை அவன் நாளொன்றுக்கு ஒரு நிமிடமாவது பட்டிருப்பானா? ." மேற்கொண்டு பேச முடியாமல் கண்களில் இத்தனை நாளாக மனதை இரும்பாக்கி கண்களை வற்ற வைத்ததின் விளைவாய்  வெளியேற வழியின்றி தவித்துக் கொண்டிருந்த கண்ணீர் சுனை காத்திருந்த மாதிரி கொட்ட ஆரம்பித்தது.

இத்தனை நாட்களாக மனதில் இறுக்கிய சோகங்கள் கரைந்து போகும் வரை அவள் அழட்டும் என கோகிலா வாளாதிருந்தாள்.

(தொடரும்...)

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதிகள்:123