Showing posts with label எழுத்து. Show all posts
Showing posts with label எழுத்து. Show all posts

Thursday, May 10, 2018

கைபேசி.. ...

நினைவுகளின் சுவாரஸ்யங்களை பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
இதுவும் நினைவுகள் சார்ந்த பதிவின் ரகந்தான்.

அந்த காலத்தில் பொதுவாக  நட்பு மற்றும் உறவுகளுக்குள் தொடர்பென்பது கடிதங்கள் வாயிலாகத்தான். கார்டு, இன்லேன்ட் கவர்கள் இதற்கு பயன் பட்டது. கொஞ்சம் அதிகப்படியாக கதை அடிக்கும் பழக்க முள்ளவர்கள் வெள்ளைத் தாளில் எழுதி (இது அவரவர் விருப்பம். எத்தனை தாள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கவர் ஒட்டி அதற்கு தகுந்த ஸ்டாம்ப் ஓட்டுவதற்கு  வசதி படைத்தவர்கள் எவ்வளவு தாள் வேண்டுமானாலும் கதைகள் எழுதலாம்.) அனுப்புவார்கள். இப்படி போய் சேரும் கடிதங்கள் இரண்டொரு நாளில் தகவலை கொண்டு சேர்த்து விடும். ஒரு திருமணம், நல்லசெய்திகள் விழாக்கள் இவற்றை பகிர்ந்து கொள்ள பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே,  உறவுகள் வெகு தூரமாயின் ஒரு மாதத்திற்கு முன்பே தகவல் தெரிவித்து விருந்தோம்பும் பழக்கங்கள் இருந்தது. மற்றபடி உறவுகள் சந்தித்து கொண்டு அளவளாவி மகிழ்வது இந்த குறிப்பிட்ட சந்தர்பங்களில்தான். அங்கே சந்தோஷம்  அள்ள அள்ள குறையாத நதியாக பிரவாகம் எடுத்தபடி இருக்கும்.

இந்த கார்டு, கவர் போக விரைவில் தகவல் சென்று சேர வேண்டுமென்பதற்காக தந்தி முறையும் இருந்தது. ஆனால் இதை முக்கால்வாசி ஒருவர் தவறி விட்டாலோ, அல்லது, உடல் நலகுறைபாடு காரணமாக மிகவும் மோசமுற்ற நிலையில் ஒருவர் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் போதோ,  என்ற அவசரத்திற்கு மட்டுமே இதை பயன் படுத்தினர்.  நல்ல விஷயங்களை  பெரும்பாலும் இது தாங்கி வருவது அரிதுதான்.

இதை கூறியதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நாங்கள் வசித்தது சிறுஊர்தான். (பிறந்த வீடு ) கிராமமும் இல்லா, நகரமும் இல்லா ஒரு நடுத்தரம்.  ஒரு சமயம்  உறவின் இல்லத் திருமணத்திற்கு எங்கள் அப்பா சென்று விட்டு வந்து ஒருமாதம் சென்றிருக்கும்.  ஒருநாள் நடுநிசியில் தந்திச்செய்தி வந்து அக்கம் பக்கம் அனைவரும் நித்திரையில் எழுந்து வந்து என்னவோ ஏதோ வென்று விசாரிக்க வந்து விட்டனர். அந்தளவுக்கு தந்தி என்றால் அப்போது பயம். விஷயம் ஒன்றுமில்லை... திருமணத்திற்கு வந்திருந்த ஒரு உறவு எங்கள் வீட்டிலும் பெண் இருப்பதை தெரிந்து விசாரித்த பின்,  'எனக்கு தெரிந்த விடத்தில் ஒரு நல்ல பையன் வீட்டார் இருக்கிறார்கள். அவர்களை இந்த முகவரியில் அனுகவும்' என்ற சுபச் செய்தி தாங்கி வந்திருந்த செய்தி .. பகலில் மூடிய தாளில் செய்தி வந்தால் ஒரளவு பயத்தை வெளிக்காட்டாது படித்தபின் சந்தோஷமோ, சஞ்சலமோ  எந்த உணர்வுக்கும் தயாராகலாம். அது இரவில், அதுவும் நடுநிசியில்  பேயும், நாயும் பாய் போட்டு படுத்துறங்கும் வேளையில் வந்தால், நாங்கள் பதறாமல் என்ன செய்ய முடியும்? அந்த விஷயத்தை தலை போகிற அவசரத்தோடு, அர்த்த ராத்திரி வந்து சேரும்படியாகவா  அனுப்ப வேண்டும்  அந்த சம்பவம் அருகிலிருந்தவர்கள் வாய்க்கு அவலாக பத்து நாட்களுக்கு மென்று கொண்டிருந்தனர்.  அதன் பின் அந்த உறவின் பெயரை சொன்னாலே, ஓ.. அர்த்த ராத்திரியில் அலற அடித்தவரா? என்ற பட்டப் பெயர்தான் அவருக்கு.

ஆனால், இப்போதெல்லாம் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் காலம் மாறி விட்டதில், கடிதங்களின் தந்திகளின் தொடர்புகள் அறவே நின்று விட்டதோ என எண்ண வைக்கிறது. நல்லது, கெட்டது அனைத்திற்கும் தொலை பேசிதான். அதுவும் இந்த கைபேசியும், கையும் பிரிக்க முடியாத ஒட்டுதல் நட்பு ஆகி விட்டது. அது அழைத்து வரவழைத்த எங்கு சென்றலும்,((நல்லது, கெட்டது போன்ற விடங்களுக்கு தான்..) சம்பந்த பட்டவர்களுடன் அந்தந்த விஷயங்கள் குறித்து இரண்டொரு வார்த்தைகள் பேசுவது சரி,... அதன் பின் கையும், பேசியும் இணைபிரியாத நண்பர்களாகி, வேறு வேறு உறவுகளுடனோ, நட்புடனோ விவாதத்திற்கு ரெடியாகி விடுவார்கள்.

விஷேசங்களுக்காக வந்திருக்கும் குறிப்பிட்ட உறவுகளுடன் வேறு ஒரு உறவின் இல்ல விஷேடங்களுக்கு செல்லும் போது பேசிக் கொள்ளலாம் என்ற தைரியத்தையும் இந்த கைப்பேசி கற்றுக்கொடுக்கும். உயிர் இல்லாமல் கூட எப்படியோ வாழ்ந்து விடலாம் (அது எப்படி என்று கேள்வியெல்லாம் கேட்க கூடாது. உடல் தானம் என்றெல்லாம் இருக்கிறதே..)  உயிர் இல்லாவிடினும் உடல் இயங்கும்.
கைபேசி இல்லாவிடில் கைகள் இயங்காது
உயிர் போனா திருப்பி வாங்க முடியாது... கை பேசி போனா மறுபடி உடனே வாங்க லைன்னா  உயிரே போய் விடும். இதெல்லாம் கைபேசியின் புகழ் மாலைகள்... அஷ்டடோத்திரங்கள்.

இத்தனை புகழ் இதற்கு தேவையா எனக் கேட்போருக்கு, 'ஆமாம்' என்பதே என் கருத்து. ஏனெனில் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல்..'  .கணினியில் எலி பிடித்து  அதன் வாலாட்டி, கீ போர்ட் அடித்து, நம் நினைவு சிதறும் போது காலாட்டி, கண்மூடி யோசித்து பதிவெழுதி பதிலெழுதி அதை தேய்க்கடித்து  அதனை விட்டு டேப்லெட் தாவி, அதுவும் டேப்லெட் போட முயற்சிக்கும் போது கைபேசியுடன் இணைந்து, பதிவுகள் பல எழுதி பல மணி நேரங்கள் தினமும் பேசியுடன், பேசாமல் பயணிக்கிறேன். அதனை வைத்து கொண்டு அதன் மூலம் பிறருடன் பேசியோ,  அதனை கீழே வைத்து விட்டு அனைவருடன் பேசவோ இயலாத ஒரு நிலையில், கைபேசி எனது கை கணினியாகிப் போனது. பின் என் புகழ் மாலைகள் கைபேசிக்கு எப்படி தேவையில்லாமல் போகும்.... கைப்பேசி என் தொல்லை பொறுக்காது கையறு நிலைக்கு வரும் முன், முதலில் கை கொடுத்த கணினி சரியாக வேண்டும். பிரார்த்திக்கிறேன். ....




Thursday, September 11, 2014

நல்லதாய் நாலு எழுத்து, பா..ரா..ட்..டு, வா..ழ்..த்..து… என்பது மாதிரி…..! ஏதாவது, சொல்லுங்களேன்…!

டித்ல்… (இது “கற்பது” எனவும் பொருள்படும்) என்பது ஐந்து எழுத்து வார்த்தை..! எ….ழு…து….த…ல்.. என்பதும் ஐந்து எழுத்து வார்த்தை..! இதில் இந்த படிப்பதற்கும், கற்பதற்கும், நேரம், காலம், வயது, வரம்பு, என்று எந்த விதிமுறையும் கிடையாது. “கல்வி ஒரு பெருங்கடல்.!” “அள்ள அள்ள குறையாத செல்வம்..!” “திகட்டாத தித்திப்பு” என எத்தனையோ உவமானம் ௬றலாம்.! எனவே,“கற்றது என்றும் கைமண் அளவுதான்” என்ற கணக்கில், என்றுமே நம் காலம் உள்ள வரை கற்றுக் கொண்டே இருக்கலாம். அதற்கு அளவு கோலே கிடையாது…! படிக்க, படிக்க அனைத்துமே என்றுமே புதிதாய்தான் இருக்கும்..
      
        எழுதுவதும் அவ்விதந்தான்.! ஒவ்வொருவரும் தத்தம் திறமைக்கு ஏற்றவாறு எழுத்து ஆற்றைலையும், வயது வரம்பில்லாமல், பெருக்கிக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் உறவுகளுக்கிடையே, கடிதங்கள் எழுதும் முறை இத்தகைய ஆற்றலை பெரிதும் வளர்த்துக் கொடுத்தது.! பிறர் மனம் வருந்தாது,  அவசியமானதை மட்டும் எடுத்துணர்த்தி, உறவின் நலம் விசாரித்தல். வீட்டின் தேவைகள், விஷேடங்கள், மற்றும் பல நிகழ்வுகள், சுகங்கள், மனச்சுமைகள், சோகங்கள், என்று அனைத்தையுமே, ஒருவர், தொலைத்தூரத்தில் வசிக்கும் தமைசார்ந்த உறவுகளுக்கு எடுத்தியம்ப, இந்த கடிதங்கள் எழுதும் முறை பெரும் உதவியாக இருந்ததோடு மட்டுமின்றி எழுத்தாற்றலையும் வளர்த்து தந்தது..! (இன்று காலத்தின் முன்னேற்றம் காரணமாக கைபேசியில் ஒருமணி நேரத்திற்கும், மேலாக பேசி, பேசி, பேச்சுத் திறமையை,  வளர்க்கிறோம்.) (அல்லது வளர்ப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்..!)
             
        அது மட்டுமின்றி, கதைகள், கவிதைகள், காப்பியங்கள், காவியங்கள் என பன்முகம் கொண்டு எழுதுவோரின், திறமைகளுக்கு ஏற்ப எழுத்துலகம், வீறு நடை கொண்டு வளர்ந்து, இன்று வானுயர்ந்து நிற்கிறது. ப..டி..ப்..பு.. என்ற நான்கு எழுத்தின் வாயிலாக, க..ற்.ப..னை., சி..ந்..த..னை., (இவை எழுதுவதின் அஸ்திவாரம்.) இந்த நான்கு எழுத்துக்கள், “எழுதுதல்,” என்ற திறனை வளர்த்து விடுகின்றன..! இப்படி எழுதி உருவான தரமான நூல்கள், புத்தகங்கள், மீண்டும் “படித்தலுக்கு” உதவுகின்றன..! இந்த சக்கர சுழற்சியுடன், படித்தலும், எழுதுதலும், இருவளையங்களாக நம்மைச் சுற்றி காலங்காலமாய் சங்கிலியாய் பிணைந்துள்ளது..!
                
        இத்தனை விஷயங்களை, நான் யோசிப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு காரணம் உள்ளது. (“முத்தி விட்டதோ..?” என அவசரப்பட்டு நீங்கள் முத்திரை குத்துவதற்குள் காரணத்தை ௬றிவிடுகிறேன்..!) அதைச் சொல்லத்தான் இந்த பதிவு..! 
                    
        ஒரு குழந்தை பிறந்து, எழுந்து நடமாடி வளர்ந்து வாலிபத்தை அடைந்து, தன் வாழ்க்கையை பிடித்து கொண்டு சிறப்பாக வாழ்வதற்கு, காரணம், மாபெரும் அந்த பெரும்பங்கு, அந்த குழந்தையை ஈன்றெடுத்து, வளர்த்து ஆளாக்கிய, அந்தக் குழந்தையின் பெற்றோர்களையே சாரும்..! அது போல், புதியவர்கள் பதிவுலகில், எழுதும் திறமை வளர்ந்து முன்னேறி வருவதற்கு, பெரும்பங்கு அவர்களை ஊக்கப்படுத்தி, வளர்த்து விடும் மூத்த பதிவர்களையே (பெற்றோர்களின் அன்பை போல்…) சாரும்..! அது போல் என்னை வளர்த்து விட்ட அன்புள்ளங்களுக்கு நன்றி..! 
                  
        எதற்காக இந்த நன்றி நவின்றல்…? (கண்டிப்பாக இது முத்தின கேஸ்தான் என்ற முடிவுக்கு நீங்கள் வருவதற்குள் சொல்லி விடுகிறேன்..!) சொல்கிறேன்..!
           
        கிரிக்கெட்டில், தம் மனதுக்கு பிடித்த ஆட்டக்காரர் பேட்டிங்கில் முதலில் வந்து விட்டால், அவர் சதம் எடுப்பதற்குள், டி.வி முன் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்து ரசிக்கும், ஒரு கிரிக்கெட் ரசிகர் படும் அவஸ்தை அவருக்கும், அவரை படைத்த அந்த கடவுளுக்கும் தான் தெரியும்….!  ஒவ்வொரு ஓவருக்கும், ஒவ்வொரு பிரார்த்தனைகளுடன், அன்றைய வேலைகளை மறந்து (ஏன் தன்னையே மறந்து) அவர் அரைச்சதம் அடித்து முடித்தவுடன், ஒரே சந்தோசம்…! மேலும் முன்னேறி முழு சதத்தையும் தாண்ட ஆவல்…! பல எதிர்பார்ப்புகள்…! இப்படிபட்ட நேரத்தில் அந்த அரை சதத்தை (புதியவர் என்றால்,) ஆடியவர் எடுப்பதற்குள் அவரின் பிரயாசைகள், சிரமங்கள், அவருக்குத்தான் தெரியும்…! ஆனால் ஆட்டத்தில் அனாசயமாக முன்னேறிய பின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதங்கள் அவருக்கு புதிதல்ல…!  அது பழகிப்போன ஒன்று..! அவரின் ஆட்டத்தை பார்த்து ரசிக்கும் ரசிகருக்கும், “இவர் வந்தால் வெற்றிதான்! என்ற நம்பிக்கை…! “சதங்களின்றி இவர் களத்திலிருந்து செல்ல மாட்டார்” என்ற பரிபூரண எதிர்பார்ப்பு…! இப்படி ஒரு சூழல், கிரிக்கெட் உலகத்தில்…!
                  
        அப்பாடா…! இப்போது ஒரு வழியாக நான் என் விஷயத்துக்கு வருகிறேன். (இல்லையென்றால், முத்தியதை குணமாக்கும் சில வைத்திய நிலையங்கள் எனக்கு பரிந்துரைக்க படலாம்..! அதற்குள் விளக்கி விட்டு அகன்று விடுகிறேன்..!) (ஒரு சிலர் தரையில் ஏதோ தேடி எடுக்க முயற்சிப்பது தெரிகிறது..!) கொஞ்சம் இருங்க..! இருங்க…! உங்களுக்கே புரிந்திருக்கும் என நினைத்தேன்..! புரியவில்லையா..? நானும் அந்த “புதிய கிரிக்கெட் ஆட்டகாரர்” மாதிரி சிரமப்பட்டு, கஷ்டப்பட்டு ஒரு வழியாக இந்த பதிவுடன் “அரைச்சதம்” அடித்து விட்டேன். இன்னும் முழுச்சதத்திற்கு எத்தனை முயற்சிகளோ.! எத்தனை ஆட்டங்களோ..! எத்தனை நாட்களோ..! ஆனால் “அதுவும் பெற வேண்டும்,” என பிரார்த்திக்கும் பதிவுலக ரசிகர்களின் நல்ல உள்ளங்களுக்கு எனது அன்பான நன்றிகள்..!
   
        எனது நன்றி நவின்றலுக்கு ஒரு வழியாக அர்த்தம் விளங்கி விட்டதா..? இப்போது தலைப்பிற்கு ஏற்றால் போல், ஏதாவது சொல்லுவீர்கள் என்று நிச்சயமாக, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்…!  
       
                        நன்றிகள் கலந்த
                      கமலா ஹரிஹரனின்
 

Friday, May 2, 2014

எழுதுகோல்


          



பிறந்தவுடன் கண் திறந்தேன்!
பிறவி இதுவென்று உணர்ந்தேன்!
அன்புடன், அறிவையும் சுவாசித்தேன்!
அடைக்கலம் அதுவென்று அறிந்தேன்!
நிறங்களை நிமிடத்தில் கண்டு கொண்டேன்!
நிதசர்சனங்கள் இவையெல்லாம்!என்று சொன்னேன்!
கானம் பலவும் காதுடன் கேட்டேன்!
காதிலும் தேன் பாயுமென புரிந்து கொண்டேன்!
பாடும் பறவைகளுடன் பறந்தேன்!
பக்குவமான மனம் அமைய பெற்றேன்!
பச்சைப் புல்வெளியைப் பார்த்தேன்!
பகைமையில்லா மனதுடன் பரவசமாகி போனேன்!
தெய்வங்களை தரிசித்தேன்!
தென்றலெனும் வாழ்வடைந்தேன்!

நீலவானம், இரவில் சுடர்விடும் விண்மீன்கள்,
நீரின் அசைவுகள், அதில் நீந்தும் மீன்கள்,
உதிக்கும் சூரியன், அதன் புலரும் பொழுது,
உயர்ந்த மலைகள், அதை வருடும் அந்திச்செம்மை,
இரவின் இருள், அதன் குரலாய் நிசப்தம்,
இருண்ட வானம், அதன் வேராய் பெருமழை,
மரங்களுடன், மலர்கள், அதை தழுவும் மதியின் அழகு,
மதிய வெயில், அதன் இறுதியில் மாலை வேளை,
அடர்ந்த காடு, அதை குளிர்விக்கும் அருவி,
அழகிய சோலை, அதை மணக்கச் செய்யும் மலர்கள்,

இவை அனைத்தும், அழகென்று உவகையுற்றேன்!
இயற்கையின் சீதனமென்றும் தெரிந்து கொண்டேன்!     
அதிசயத்து, பலமுறை வியந்து நின்றேன்!
அற்புதமான உலகமென்றேன்! இன்னும்,
எத்தனையோ, படைப்பு கண்டேன்!
எளிதில்லை இது!!! என புரிந்து கொண்டேன்!
அள்ளக் குறையாத பல மொழிகள் பயின்றேன்!
ஆயினும் தமிழ் மேல் காதல் கொண்டேன்!

காட்சிகளின், எண்ணங்கள், தாக்கங்கள்,
கனவிலும் வந்து களிநடனம் புரிய,
கண் விரட்டும் உறக்கத்தையும்,
களைந்தெறிந்து, கற்பனையில் மிதந்திருந்தேன்!
கண்ணில் கண்டதை கவி பாடினேன்!
கதைகள் புனைந்து களிப்புற்றேன்!
காலத்தில் அதை பதித்து வைத்து,
கருத்துக்ளுக்கு காத்திருந்தேன்!
கசடுகள் நிறைந்த கவியென்றும்,
கட்டுக்கதைகள் இவையென்றும்,
கசப்புடன் காலம் சொல்லிச் செல்ல,
கனமான மனதுடன் உடல் நொந்தேன்!

இத்தனை பார்த்தும், ரசித்தும்,
இன்னும் ஏகமாய், ரசித்து பார்க்க நினைத்தும்,
மறந்து போனது ஒன்றுதான்! மற்ற,
மனிதரின் மனதை ரசிக்கவில்லை!
மமதையில்லா உள்ளம் பெறவில்லை!
மகிழ்ச்சியில், மனமது நிறைந்திட, அவர்தம்
மனவியல் படிக்கத் தவறி விட்டேன்!

எது எப்படியாயினும், இன்று வரை,
என்னுடன் உறவாடும் எழுதுகோல், என்
உறவை பிரிய மனமின்றி, தன்
உயிரையும் எனக்கு தந்தபடி, உன்
உற்றத் தோழன் நானிருக்க, உவகையான,
உள்ளத்துடன், உன் உதிரம் உலர்ந்து போகும் வரை.
உலகில், நீ ரசித்ததை, எல்லாம்
உண்மையுடன் உணர்த்தி விடு! அது
உன்னதமாகும் ஒரு நாளில்!!!! என்றது! அது
அன்புடன் சொன்னதில், அகம் குளிர்ந்து,

ஆசையாய், அதை அரவணைத்து, என்மன
ஆறா தழும்பையும், ஆற வைக்க, என்
ஆறாம் விரலாய் நீ இரு!!!! என யாசித்தேன்.......