Showing posts with label கூட்டுக் குடும்பம். பொது.. Show all posts
Showing posts with label கூட்டுக் குடும்பம். பொது.. Show all posts

Wednesday, January 19, 2022

காலம் மாறிப் போச்சு.

 மறுபடியும் பிரவேசம். 

இது எப்போதோ எழுதப் பெற்று தனக்கு (கவிதை மாதிரி உள்ள அதற்கு... ) வர வேண்டிய ஆதரவு மதிப்பெண்களை இழந்த கவிதை. இப்போதும் பெரும்பான்மையாக இல்லாவிடினும், சிறிதளவாவது கிடைக்கும் (அதுதான் ஆதரவு....! ) என்ற நம்பிக்கையில், ஆசை மலர்களை மனதுக்குள் சூடியபடி கிளை பரப்பி மறுபடி துளிர்தெழுந்துள்ளது.  

சகோதரர் ஸ்ரீராம் ரெற்றோ கவிதை என எ.பியில் பகிர்ந்துள்ளதை பார்த்ததும், "நானும் பழையனவைதானே...!! என்னையும் மறு முறை ஒரு தடவை தூசு தட்டி வெளியிட்டால்தான் என்ன..? " என என்னிடம் அது முறையிட அதன் வார்த்தையை அரைமனதாக அங்கீகரித்து பதிவுக்குள்அனுப்பலாமா வேண்டாமா என தயங்கியபடி யோசித்தேன்.

 "இது அந்த மாதிரியா என்பதெல்லாம் எனக்கு தெரியாதே. .!!!! அது எங்கே...   நீ எங்கே.....!!!! நீயாக இப்படியொன்றை கற்பனை செய்து கொண்டால் எப்படி? மேலும், உன்னை நான்  அன்று உருவாக்கிய வரிகளில், வார்த்தைகளில் குற்றங்கள் குறைகள் இருக்கலாமே. .!!! " என முதலில் பிகு செய்தபடி  ரொம்பவே தயங்கினேன். "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை....! என்பது யாரும் அறியாததல்லவே.. ." என்ற அதன் ஆழமான  மறு பதிலில் அதன் பின் எழுந்த என் மறுபேச்சுகள் பயனின்றி போகவும் தைரியமாக அதுவே பதிவுக்குள் வந்தமர்ந்து விட்டது.:)))) 

இதோ அந்தக் கவிதை.. .

காலம் மாறிப் போச்சு... 

கடல் போன்ற வீடு...! அதில்

கணக்கற்ற நிறைய மனிதர்கள்...!

சுற்றங்களும், சுகங்களுமாக,

சுமை தாங்கும், உறவுகள்..!


அன்பும் , அரவணைப்புமாக ,

அரண் போன்ற மனங்கள்...!

தவழும் பேரன்களோடு, சேர்ந்து ,

தளர்வின்றி,தவழ்ந்தாடும் தாத்தாக்கள்...!


பாட்டும், கதையுமாக, பேத்திகளை,

பாசத்துடன் பார்த்துப் பார்த்து 

பாரபட்சங்கள் ஏதுமின்றி, 

பக்குவமாக்கும் ,பாட்டிகள்...!


விடியலில் உதிக்கும் விறகடுப்பு,

வீதி அசந்து உறங்கும் வரை,

அனல் கக்கும் அதிசயம்,

அண்டை அசலெங்கும் தொடரும்..!!!! 


உணவுகளுக்கும், பஞ்சமில்லை...!!

உடைகளுக்கும். வஞ்சமில்லை....!!

உறவுகளின், உணர்வுகளும்,

உரிமைகளும் , என்றுமே, 

அங்கு உடைந்ததில்லை....!!


நான்.. நீ...என்ற பேதமில்லை….!அங்கு

நாணயம் தவறிய பேச்சுக்களுமில்லை...!

மதிப்பும் , மரியாதையும் 

குறைந்ததில்லை...!!

மற்ற சண்டைகளும் என்றும் 

வந்ததில்லை..!!.

       

ஆனால் , இது அந்தக் காலம்....!

இன்று அந்த கடல்கள், கணிசமாக வற்றி,

கரையோரங்களும்,கவனிப்பின்றி,

கடுகளவாய் சிறுத்து விட்டது...!!


அடுப்பும், மரித்து விட்டது...!!மக்களின்,

உடுப்பும், மாறி விட்டது...!! மனிதரின்

சுயநலமெனும் போர்வைக்குள்,

சுற்றங்களின்  சுகங்களும்,

சுமைகளும், சிறிதளவும் சிரமமின்றி,

சுகமாக சுருண்டோடி கொண்டு விட்டன...!


௯டி வாழ்ந்தால் கோடி நன்மையென,

௯டி வாழ்ந்த குடும்பங்கள்,இன்று,

நான்.... நீ... என நாலும் ௯றிக்கொண்டு,

நான்காய் பிரிந்ததில், நன்றாகவிருந்த

நாகரீகங்கள் , தடு(தடம்)மாறி விட்டதில்,

நலம் குலைந்த நகர(நரக)மாயிற்று...!!

        

"என் வாழ்விலேயே இப்படி மாறிப் போன

 இந்த காலத்தின் கோலங்கள்..!!

உன் காலத்தில் எப்படி மாறுமோ?.." என்று

புலம்பிக்கொண்டிருந்த என் பாட்டியின்,

புலம்பல்கள் இன்றும், இன்னாளிலும்,

காதருகே, கால் கடுக்க நின்றபடி

காதுகளில் ஓதியபடிதான்  உள்ளது..!!! 


"விபரறிந்து பாட்டி... நீ..! அன்று

விசனத்துடன் சொன்ன வாக்கு ... .! 

விந்தை நிறைந்த இவ்வுலகில்

விரைவாய் அவ்வாறே மாறிப் போனதில்

வியப்பொன்றும் இல்லையம்மா...!!!" 


கடல் கடந்து சென்று வாழ்வதுதான், 

தன் கருமம் எனக்௯றி, 

காரியத்தை சாதித்தான் ஒரு பிள்ளை....!!


காசிருந்தும், கார்கள் பலவிருந்தும், 

எங்கள் கால் பதிக்க அங்கு  இடமில்லை, 

என்றான் மற்றொருவன்....!!


இல்லத்தில் இணைந்திருந்து 

இன்பமாக வாழ பழகியிரு ....! என்

இல்லத்தில் பிறகு உங்களை 

இணைத்துக் கொள்கிறேன் 

என்றான் ஒரு பிள்ளை....!! 


சிறிய பிரச்சனை எனக்கு...!! 

அது தீர்ந்து முடிந்ததும்

சில காலத்துக்குள் நீங்கள் 

என்னுடன்தான் …!! என்றான் 

இன்னொருவன்....!! 


இயந்திரமயமான இக்காலத்தில்,

இளமை விரட்டிய, எங்களுக்கு , 

இந்த இல்லம் என்ற ஒன்றிடம்

இல்லாமலிருந்தால், இன்னும் பல

இன்னல்களுடன் இணைந்திருப்போம்....!            


நான்கு பிள்ளைகள் பிறந்திருந்தும் ,

நான்கும் நாலுவிதமாய் போனதில் , 

இன்று முகமறியாத ,

உறவுகளுடன் வாழ்க்கையும்,

முதுமையுடன் அன்பாய்

முறியாமல் தொடர்கின்றது....!!


உன் சோகத்தை சுமக்க , பாட்டி...!அன்று

உன் பேத்தி நானிருந்தேன்....!!

என் வார்த்தை உரைக்க வகையாய், 

என் பேத்தி  இன்று

என் அருகிலேயே இல்லையே.....!!!! 


இந்த இல்லத்தின் உறவுகளுக்கும் 

இன்று இதே நிலமைகள்தான்...!!

இந்நிலை எந்நாளில் மாறுமோ? அந்த

இறைவனுக்கே வெளிச்சம்...!!! 


கடல் போன்ற வீடு....!!அதன்

காலங்கள் மாறிப் போச்சு...!!என, நீ. .

கடவுளிடம் புலம்புவது இப்போதும் என்

காதுகளில் ஒலிக்கிறது … பாட்டி!!!!  ஆம்!

காலம் மாறித்தான் போச்சு...! அது 

கணிசமாக மரித்தும் போச்சு....!!!!

***********************************************************************                       

கவிதை நன்றாக இருந்தால், (இல்லாவிட்டாலும்) இதற்கு ஆதரவு தர வேண்டுமாய் சகோதர சகோதரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இனி வரும் காலங்களும் ஏதாவது ஒரு வகையில் மாறிப் போக வாய்ப்பு உள்ளதால், இது மூன்றாம் முறையாக இங்கு வருவதற்கு சற்று அதிகமாகவே வெட்கப்படுமாம்:))))  எனவே படித்துப் பார்ப்பவர்களுக்கும், ஆதரவாக விமர்சிப்பவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

Monday, September 23, 2019

பாட்டி சொல்லை தட்டாதே..

அந்த காலத்தில் கூட்டுக் குடும்பம்  என்பது ஒவ்வொரு வீட்டிலும் தப்பாமல்  இருந்தது. குடும்பமென்றால்  மூத்தவர்கள், அனுபவ அறிவு நிரம்பியவர்கள் என்று ஒரு நான்கு பேராவது அதில் இருந்தனர். அவர்கள் குடும்பத்தின் பொறுப்புகளைை சிரமேற் கொண்டு வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருந்து, வீட்டின்  அனைத்து   சுப நிகழ்ச்சிகளையும், பிறர் மெச்சும்படிக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின்படி நடத்தி குடும்பத்தினர்களை பெருமையுடன் கூடிய மகிழ்வு கொள்ளும்படி செய்வதோடு மட்டுமின்றி, 🙏

 ஒரு அவசர ஆத்திரத்திற்கு அவர்கள்தான் அந்த குடும்பத்து உறுப்பினர்களுக்கு நாடி பார்த்து சுகப்படுத்தும் வைத்தியராக, 🙏

விஷக்கடிகளுக்கு மந்திரிந்து வீபூதியிட்டு, விஷக் கடிகளை இறக்கி  நல்லபடியாக அதை குணப்படுத்துபவர்களாக, 🙏

ஏதேனும் சொத்து சம்பந்தபட்டதோ, இல்லை குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகளோ அதை சாமர்த்தியமாக பேசி தீர்த்து வைக்கும் சட்ட ஆலோசகராக, 🙏

ஒரு கோவில் குளத்திற்கு செல்ல ,பரிந்துரைத்தோ, இல்லை தாங்களும் முன்னின்று அழைத்துச் சென்று தெய்வீகமான  சிந்தனைகளைை வலியுறுத்தி, வளர்ப்பவர்களாக,🙏

 நல்லது கெட்டதுக்கு ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லும் ஜோசியராக, இத்தனைக்கும் மேலாக அந்த வீட்டு குடும்பத்தினரால், மரியாதையாக நடத்தப்படும் அத்தனையும் தெரிந்த பெரியவர்களாக மதிக்கப்பட்டு வந்தார்கள். 🙏

நாளடைவில், நாகரீகமும், சுயநலங்களும், பெருக பெருக, தனித்தனி வாழ்க்கை, அதில் வரும் சின்னச்சின்ன இன்பங்களுக்கு  மனிதர்கள் அடிமையாகி, கூட்டுக் குடும்பங்கள் நெரிசல்களில் சிக்கிய வாகனங்களாக உருமாறி நசுங்கிப் போய் விட்டது. 

பெரிய  விருஷமாக ஆலமரங்களாய் கிளை விட்டபடி சேர்ந்து பரவி கிடந்த கூட்டுக் குடும்பங்கள்  மலிந்து நாளடைவில் அவை வளைந்து, நெளிந்து இயற்கையாகவே எந்தவொரு புயலுக்கும் சவால் விட்டபடி காலுன்றி இருக்கும் நாணல் புற்களாக சமாளித்து வந்த போதிலும், அந்த சமாளிப்புகளையும், புதுப்புனலாக வந்த  நாகரீக மோகங்களும், சுயநல தாகங்களும் கூடவே இணைந்து கைகோர்த்தபடி கொண்டாடி, சிதறடித்து விட்டன. 

இந்த இடைவெளியில் பெரியவர்களின் அறிவுரைகள் அவசியமில்லாததாக ஆகிப்போயின. ஏட்டுப் படிப்பறிவு மட்டும் பெற்று, சிறப்பாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கைக் கல்விகள், அனுபவ பாடங்கள் நம் சுதந்திரத்தை பாதிப்பதாக நினைத்த தவறான முடிவுகளில், நாம் தனியாக ஒதுங்க, அவர்களின் ஆலோசனைகள் என்ற ஒரு "பாடப்பகுதியை" நாம்  எந்த கல்வி நிலையங்களிலும் பெறாமலே பட்டம் வாங்கி, பணம் நிறைத்தும் பயனற்று வாழ்கிறோம். ஆனால் அவர்களின் வாழ்க்கைப் பாடங்களை முறையாக பின் பற்றியிருந்தால், இன்று எத்தனையோ நன்மைகள் இனியதாக நம்மை தொடர்ந்திருக்கும். 

வாட்சப்பில் சுற்றுலாவாக வந்து என்னை கவர்ந்த இந்த வரிகள் "இனியேனும் இவற்றை பின்பற்றுங்கள்" என்பதாக வந்திருக்கும் வாசகங்கள் இவையனைத்தும், இனியேனும்  நம் சந்ததிகளுக்கு எப்போதும்  பிடித்திருந்தால் சரிதான்!!

இதோ அந்த வாசகங்கள்.
பாட்டி அடிக்கடி சொல்லுவாள்... 

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுமனே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

என்ன அழகான வரிகள்! இதை முதலில் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே! 

சொல்லலாம். அதற்கு முன் இவைகளை அழகாய் சொல்லும் திறனை நமக்கும், ஆசையாய் கேட்கும் அவகாசத்தை அவர்களுக்கும், உருவாக்கித் தரும் கால நேரங்களை இறைவனிடம் நாம் கண்டிப்பாக கேட்டுப் பெற வேண்டும் .. 🙏...