Showing posts with label இனிப்பு பருப்பு போளி. Show all posts
Showing posts with label இனிப்பு பருப்பு போளி. Show all posts

Sunday, July 25, 2021

இனிப்பு போளி....

 பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..

ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், சரஸ்வதி பூஜை, தீபாவளி, போகி பண்டிகை என விஷேட தினங்களில் கண்டிப்பாக இந்த போளி  வடை, பாயாசத்தோடு இணைந்து  மதிய உணவோடு ஐக்கியமாகும். இப்போது அப்படியெல்லாம் பண்ணவும் இயலவில்லை. வடை, பாயாசமே சாப்பிட முடியாத அதிகப்படியான  உணவாக போய் விடுகிறது. மற்றும்  அன்றைய தினத்தில் செய்வதற்கு நேரமும் இருப்பதில்லை. இதைப் போல்  இடைப்பட்ட நாளில் ஆசைக்காக என்றைக்காவது இதை செய்து சாப்பிட வேண்டியுள்ளது. அப்படி ஒருநாள் தீடிரென தனித்து உதயமான போளி இது. 


முதலில் கடலைப் பருப்பை அரை டம்ளர் எடுத்து கொண்டு வெறும் கடாயில் சற்று  சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

 

வறுத்ததை ஒரு தடவை அலம்பிய பின் கொஞ்சம்  அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு ஊற விடவும். 


ஒரு 25 (நல்ல வேளை.. இந்த தடவை  கணக்கில் கோட்டை விடவில்லை. எண்ணி வைத்தது சரியாக உள்ளது.:) ) பாதாமை எடுத்துக் கொண்டு அதையும் அலம்பி அந்த கடலைப் பருப்புடன் சேர்ந்து ஊற விிடவும்


க. பருப்புடன் சேர்ந்து சமர்த்தாக "நாங்கள் ஊறிக் கொண்டிருக்கிறோம்". ..என எவ்வித பிணக்கும்  காட்டாது ஒத்துழைத்த பாதாம் பருப்புகள். 


ஒரு அரைமணிநேரம் ஊறிய பின் அதே தண்ணீருடன் இரண்டையும் ஒரு கனமான பாத்திரத்தில் போட்டு ஒரளவு வாசனை வரும் வரை  வேக வைத்துக் கொள்ளவும்..


இது போளி மாவு. "மைதா உடம்பிற்கு கெடுதலாயிற்றே... .பேசாமல், கோதுமை மாவை சிபாரிசு செய்து விடலாமா....?" என்ற நம் யோசனையை புரிந்து கொண்ட மாதிரி  சற்று சோகமாக இருந்தது. "ஒரு நாள்தான் என்னை சேர்த்துக் கொள்ளுங்களேன்.... நான் என்ன அவ்வளவு பொல்லாததுவா. ...?முன்பெல்லாம் என்னை வைத்து, தோசை, பரோட்டா என்றெல்லாம் செய்து என்னை மகிழ்விக்கவில்லையா...? என கெஞ்சும் குரலில்  நியாயமாக கேட்டதும் மைதா மாவு கொண்டு கலந்து வைக்கப்பட்ட போளி மாவு

    

மைதாவுடன் மஞ்சள்தூள்  உப்பு, ந.எண்ணெய் கலந்து  தேவையான தண்ணீர்விட்டு நல்ல தளர்வாக கலந்து வைத்ததும், மைதாவுக்கு உண்டான சந்தோஷத்தை சொல்லி மாளவில்லை. "எண்ணெய் மினுமினுப்புடன் நான்  எவ்வளவு அழகு பார்த்தாயாா?" என கலக்கும் போதே ஆயிரம் முறை கேட்டு விட்டது. 


"ஆன்லைன் வர்த்தகத்தில் தேங்காய்கள் வாங்குவதால், சின்னதான இந்த தேங்காய்தான்  எனக்கு அன்றைய தினம்  கிடைத்தது.....பெரிய தேங்காயாக வந்திருந்தால் தேங்காய்ப்பூ கணிசமாக கிடைக்கும். சமயத்தில் அதுவும் இளசாக வழுக்கையாகவும் அமைந்து விடும். எதுவுமே நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து தான் அமையும்.. . ஆனால்,...." மேற்கொண்டு என்னை விமர்சிக்க விடாமல்  தடை செய்தது ஒரு குரல்." சரி..  சரி.... ரொம்ப அலட்டிக்காதே...! இந்தளவிற்கு நான் கிடைத்ததே உன்னுடைய அதிர்ஷ்டம்தான்.  . என்னைத்தான் தேர்ந்தெடுத்து என் உடல் மனம் வலிக்கும் வரை உடைத்து விட்டாயே...! பின் என்ன  அங்கலாய்பபு...? " மூடியிருந்தாலும்  தேங்காய், அதன்  ப(சி)ல்லுகள்  இருந்த  தைரியத்தில் வாய்க்குள் முணுமுணுத்தன.) 


பின் என்ன.. .? தேங்காய் சொன்னது போல், மேற்கொண்டு அங்கலாய்காமல்,  உடைத்த தேங்காயிலிருந்து அதன் ப(சி)ல்லுகளை அகற்றி எடுத்தேன்.  (எப்போதும் நான்  தேங்காயை பொடிதாக துருவி விடுவேன். அன்று கொஞ்சம் பிற வேலைகள் அதிகம். அதனால் மிக்ஸியில் போட்டு விடலாம் என ப(சி) ல்லுகளாக எடுத்துக் கொண்டேன்.) " போதுமே உன் பெருமை....! எப்படியோ என்னிடமிருந்த சொத்துக்களை  அகற்றி என்னை வெறும் ஓடாக்கி விட்டாய்... என தேங்காய்  மறுபடியும் என்னை கோபத்துடன் முறைக்க,   நல்லவேளை. ..! அதிலிருந்து வெளிவந்த தேங்காய் ப(சி)ல்லுகள்  அந்த  முழு தேங்காயைப் போல், "என்னை அதிகம் பேசாதே.... ... அங்கலாய்காதே... ..." என்று கடுப்புடன் சொல்லாமல் என் சொல்லை  ஆமோதிக்கிற மாதிரி மெளனமாகவே பல்லிளித்து   கொண்டிருந்தன....." 


இந்த அளவு தேங்காய்க்கு இந்த அளவு வெல்லம் எடுத்துக் கொள்ளலாம்... . கூடவே க. ப. பருப்புகள் வேறு இருக்கிறதே..! வெல்லம் அதன் இனிப்பான குணத்தைப்போல மெளனத்துடன் எல்லாவற்றையும் கேட்டபடி அமர்ந்திருக்கிறது. 


முதலில் மிக்ஸி ஜாடியில், தேங்காய் சில்லுகளை பொடிதாக்கி துருவி எடுத்துக் கொண்ட பின் அதற்குள் ஊறி வெந்த  க. பருப்பு. பாதாம் பருப்புகளை, அதனுள் போட்டு அதையும் நைசாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொள்ளவும். 


ஒரு கடாயில், துருவிய தேங்காயையும், வெல்லத்தையும் போட்டு கொஞ்சமாக.... தண்ணீர் கலந்து..... (அந்த தேங்காய் உடைக்கும் போது கிடைத்த தேங்காய் தண்ணீரே போதும். .) வெல்லப் பூரணத்தை நன்றாக வதங்க  விடவும். 


வெல்லப் பூரணம் நன்றாக வெல்லம் சேர்ந்து வதங்கும் சமயத்தில் பொடித்து வைத்திருக்கும் பருப்பு  கலவைகளை அதனுடன் சேர்த்து கிளறிக் கொண்டேயிருக்கவும்.
 
 

தேங்காய், வெல்லம், பருப்புக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாங்கள் பூரணத்துவம்  பெற்று விட்டோம் என மகிழ்கிறது. தேங்காயும் தன் கோபம் தவிர்த்து மற்றவைகளுடன் சினேகமாக இணைந்து கொண்டது. 


இறுதியில் தன்னுடன் சேர்ந்த ஏலக்காய் பொடியின் வாசனையில்  அந்த வெல்லப்  பூரணம் மிகுந்த மகிழ்வையடைந்தது. 


"இந்த சந்தோஷத்துடனேயே  சற்று நேரம் பேசிக் கொண்டிருங்கள். நீங்கள் என் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், உங்களை  கலந்து  வைத்திருக்கும் மாவுடன்் சேர்த்து  "போளி" என்ற பெயரை உங்களுக்கு சூட்டி விடுகிறேன். .." என்றதும், ஒன்றுடன் ஒன்று கைகுலுக்கிபடி "காத்திருக்கிறோம்" என்றது  வெல்லப் பூரணம். 


கொஞ்ச நேரத்தில் என சொல் கேட்டு உருண்டைகளாக மாவும், பூரணமும் தட்டில் அமர்ந்தபடி " பிறந்த சொந்த கதை, இங்கு வந்த கதை" என அளவாளாவி .கொண்டிருக்கிறது. 



போளி தட்டிச் சுட  வாழை இலை மிகவும் நன்றாக இருக்கும். சுடும் போது தோசைக்கல்லில் எடுத்துப் போட அமைப்பாகவும் வரும். அந்த இலை வாசனையே ஒரு தனிச்சுவை. ஆனால் நினைத்தவுடன் வாழை இலைக்கு எங்கே போவது? .  அதனால்் நெய் வந்த அலுமினிய கவரை தேர்ந்தெடுத்து கொண்டேன். மைதா மாவு உருண்டையை ந. எண்ணொயை கைகளில் தொட்டுக் கொண்டு மாவை பரத்தி, 


அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடிக் கொண்டு சுற்றிலும் உள்ள மாவை , நல்ல வட்டமாக மூடிக்கொண்டு மாவோடு சேர்த்து வட்டமாக தட்டி, 


எடுத்து எண்ணெய் தடவிய தோசைக் கல்லில் போட்டு சிவக்க வெந்ததும், 


மறுபுறம் திருப்பி, போட்டு, சுற்றிலும் கொஞ்சம் நல்லெண்ணெய்  விட்டு மறு புறமும் வெந்ததும் எடுத்து, .


இப்படி தட்டில் அடுக்க வேண்டியதுதான். சூடாக சாப்பிடும் போதே போளியில் நெய் விட்டு சாப்பிடலாம். நான் தோசைக் கல்லில் எண்ணெய்க்கு பதிலாக நெய் விடுவதில்லை. சூடு ஆறியதும் உறைந்து விடும். அதனால் சுட்டெடுத்து பின் சூடாக சாப்பிடும் போது அவரவர் விருப்பப்படி நெய் விிட்டுக் கொள்ளலாம்.. என்பது என் கருத்து. 


"இப்போது எப்படி.... நான் அழகாக இருக்கிறேனா?" எனக் கேட்கும் போளிகள். 


நீங்களும் வேண்டியதை எடுத்துக் கொள்ளலாமே. .. .. .! போளி எப்படி உள்ளதென அன்புடன் கருத்துரைகளை தாருங்கள். நன்றி. 🙏. 

அன்புடன் வந்து தெரிந்த சாதாரண பக்குவமானலும், பதிவை படித்து, சுவையான போளிகளை எடுத்துக் கொண்ட அத்தனை சகோதர, சகோதரிகளுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள். 🙏.