Showing posts with label கணினிப் பெண். பெண்ணின பெருமைகள். Show all posts
Showing posts with label கணினிப் பெண். பெண்ணின பெருமைகள். Show all posts

Sunday, March 8, 2020

பெண்மணியின் பெருமைகள்.

நிலா நிலை குலைந்து நின்றது.. !
"இந்நிலமாது என்னொளியை, எங்கணம்
தன்னொளியாய் தக்க வைத்து கொண்டாளென்று!!!!" 

நீள்வீச்சு கதிரவன், தன் நிம்மதியை,
நீண்ட பெருமூச்சொன்றில், தொலைத்தது.
"தன் அந்திச் செம்மை எவ்வாறு
தன் நிலை சிறிதும் மாறாது,
தன்னிடம் எதுவும் கேளாது ,
தன்னை தவிக்க வைத்து விட்டு, இந்த
தளிர் மேனியிடம் அடகாகப் போனதென்று!!!!"

வானம் வியந்து போனது! "தான்
வாரியிறைக்கும் வண்ண நிறங்களை,
வார்த்தைகளில் அடங்காத, தன்
வர்ண ஜாலங்களை, வெகு விரைவில் , இவ்
வஞ்சிக்கொடி  எப்படி தன் வசப்படுத்தி கொண்டாளென்று!!!!"

நட்சத்திரங்கள் சற்றே நாணி கோணியது.! 
"நானறியா பொழுதினிலே, நகருமென்னை
நங்கை இவள் சிறிதும் நலுங்காமல்,
காலங்காலமாய் கண் சிமிட்டி, மானிடரை
கவர்ந்திழுக்கும் தன் ஜொலிப்பை,
கண்ணிமைக்கும் நேரத்தில், சிறிது
கண்ணயர்ந்த வேளையிலே,
கவர்ந்து கொண்டது எப்படியென்று!!!!" 

 பெண்ணே ! "உன்னை 
இப்படி இயற்கையோடு இணைத்து,
இயன்ற வரை உனை இகழாமல், 
இன்னும் அனேக விதமாக
பூக்களுடனும் இணைத்து பாக்களாய்,
புகழ வைத்து, இறுமாப்புற செய்தும்,
புதுமைப்பெண்ணாய், நீ புவனத்தில்,
புதுத்தோ் ஏறி புறப்பட இயலாமல்,
புதுமலராகவே உதிர்ந்து நின்றது." 

            அது அந்தக்காலம்!!!!

" இன்று இமயம் தொட்ட குளிர்ச்சியில்,
இதயம் நிறைத்த மகிழ்ச்சியில்,
திக்கெட்டும் கொடி நாட்டி, வெற்றியுடன்,
திக் விஜயம் செய்து வருவது..." 

           இது இந்தக்காலம்!!!!

" இனி இயற்கை எப்பொழுதும்,
இயற்கையாகயிருக்கட்டும்.. ! 
இயற்கையோடிணைக்கும்
இந்த இனிய மதுவுக்கு,
வசப்படாத வண்டாக வளர்ந்து,
வானில் வட்டமிட்டு வருகிறவள்….. நீ….!" 

" படிப்பிலும், பணியிலும்,
பாரினில், சரிபாதியாக,
பரிமளித்து, பட்டங்கள் பல சுமந்து, புது
பரிதியாக பிரதிபலிப்பவள்……நீ….!"

" கடமையையும், கருணையையும், இரு
கண்களாகக் கருதி வீட்டின்,
கண்மணி இவளென கருதும்,
கணிப்பை உருவாக்கியவள்…..நீ…..!" 

" துன்பங்களை, துச்சமாக்கி,
துயர்களை, துகள்களாக்கி,
தூரத்தள்ளி, வாழ்க்கையின்,
தூணாகி போனவள்……நீ…..!" 

" நாட்டுடன், நன்றாய் வீடும்,
நலங்கெடாது சிறப்பாய் வாழ,
நன்மைகள் பல புரிந்து, பாரதியின்,
நல்லதோர் வீணையானவள்…..நீ…..!" 

" காலத்தோடிணைந்த, கணினியில்,
காலம் நேரம் பார்க்காமல், கவனமான
கருத்துடன் காரியமாற்றி,
கணினிப்பெண்ணாக உலா வருகிறவள்……..நீ….!"

"இனி இவ்வையத்தில்,
வாழ்வாங்கு காலம் 
வாழட்டும்  நின் புகழ்,
வளரட்டும் நின் பணி....!"

#########################################################################

மங்கையராய்  பிறந்து 
மாதவம் இயற்றிடும் 
அனைவருக்கும்  மனங்கனிந்த 
மகளிர் தின நல்வாழ்த்துகள். 

இது இன்றைய மகளிர் தினத்துக்காகவே பதிவிடவும்  காத்திருந்த  பழைய பகிர்வு. ரசித்தமைக்கு அனைவருக்கும் என் நன்றிகள். 🙏.