Showing posts with label பறவை. Show all posts
Showing posts with label பறவை. Show all posts

Friday, November 28, 2025

கவிதைகளின் தொகுப்பு

சித்திரை திருநாள் சிறப்பான திருநாள். 


பள்ளி விடுமுறை 
நாட்களோடு, 
பகலவன் வெருட்டிய 
வெப்பங்களோடு, 
சைக்கிள் வட்டங்களை 
உருட்டியோட்டி கை கால்கள் 
சலித்துப் போனோம்.

அந்த வெப்பமதின் 
தாக்கத்தை தணிக்க, 
ஆண்டவனை தாங்கி நிற்க 
சின்ன மரச்சட்டங்களை 
ஒருங்கிணைந்து
சத்தமில்லாது அழகுத் தேராக்கி,
சடுதியில் இழுத்து வந்து
கோவில் வாசலோடு 
நிலை சேர்த்து, 
இறையருளை வேண்டிடவே, 
அவனருளால் இந்த 
அவனியெங்கும்
அருள் சிறந்து 
நன்மழை பொழிந்து
அமர்த்திடுமே அந்த 
அனலையெல்லாம்.

ஆதலால் சித்திரை மாதத்து 
விழாக்கள் என்றும் 
ஆண்டுகள்தோறும் 
சிறப்பாகிப் போனதிங்கே....! 

சித்திரைத் திருநாளில் 
தேரோடும் வீதியிலே 
விழி மூடும் நேரத்திலே
வாடாமல் வடம் பிடித்து 
இழுத்து வந்து  நிலை சேர்த்த 
அந்நாளைய பெருமைதனை அங்கலாய்த்து தினம்  பேசி
நீங்கள் தளர்ந்திருக்கும் 
இந்நிலை  இன்று  நாங்களறிவோம்..! . 

வயதாகியதில் வரும் 
இயலாமையால், 
இப்போது வாட்டமுடன் 
நீங்கள் அமர்ந்து விட, 
தேரின் பெரும் வடம் பிடித்து 
எங்கள் தேயாத 
இளமைதனை பறைசாற்றி வாலிபராகும் வரங்கள் வேண்டியே நாங்களின்று 
இவ்வடம் பிடித்தோம். 

இளையவர்களின் பலங்கள் இனி புரிந்திடவே, 
இதுவும் ஒரு முயற்சியன்றோ..! 
வயதில் மூத்தோர்  
விட்டு தந்திட்டால், 
வரும் எங்கள் வாழ்வில் 
ஒரு சுழற்சியன்றோ..! 




மகிழ்வின் மூல(தன)ம். 

சின்னஞ்சிறு  வயதெனினும்,
உயரமெனும் சிகரத்தை 
எட்டி விட்ட களிப்பில்,
உன் சிந்தையிலே 
தெரியுது பார் உவகை ...! 

முத்துப்பல் தெரிய நகை புரியும்   
உன் முகத்தினிடை மகிழ்வில்,
உன் மூச்சு காற்றினிலே 
படருது பார் மலர்ச்சி .. ! 

கைத்தூக்கி காட்டிடும்  
வெற்றிச்சின்னம்..! 
கண்களிலே  தெரியுமந்த 
மகிழ்வலைகள்..! 

அத்தனை வடிவத்திற்கும் 
அற்புத காரணம்... !
உன் கள்ளங்கபடமற்ற உள்ளமதினிலே..!
நீ  இட்டு வளர்த்த 
உன்னதமான மூலதனம்..!
உன் சிரிப்பென்ற ஒன்றுதான்...! 

மேற்கண்ட இரு படத்திற்கும் யாரேனும் ஏதேனும் கவிதை எழுதுங்கள் என அவர் பதிவில் அழைத்தவர் நம் சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்கள். இது கடந்த நான்கைந்து வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன். (சரியாக தெரியவில்லை.) இந்த மாதிரி  அழைப்புக்கள் எனக்கு ஒரு வரப்பிரசாதம். உடனே சில நாட்களில் யோசித்து எழுதி விட்டேன். (உடனே கண் இமைக்கும் நேரத்தில் எழுத நான் என்ன ஸ்ரீராம் சகோதரரா..?இல்லையே..! ) ஏனெனில் இது போல் கவிதைகள் புனைய எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். (அதை படிக்கும் எங்களுக்கும் அது (அதுதான் அந்த ஆர்வம்) உண்டாக வேண்டாமா என தயவு செய்து கேட்காதீர்கள்:))   ) ஆனால் அனுப்ப மனம் வரவில்லை. 

நம் கவிதையெல்லாம் ஒரு சிறந்த கவிதையா என்ற யோசனைகள் வளர்ந்து பலமானதில்,என் எழுத்தோடு, அந்தப் படங்களும் டிராப்டில் பல வருடங்களுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டன. அதன்பின் யார் முன்வந்து அவர் தந்த
அப்படங்களுக்கு சிறப்பாக கவிதை எழுதினார்கள் என்பதெல்லாம் நினைவில் இல்லை.(அவர்தான் சொல்ல வேண்டும்.) 

என்னை உங்கள் அப்போதைய பகிர்வான படங்களுக்கு கவிதைகள் எழுத வைத்தமைக்கு நன்றி வெங்கட் நாகராஜ் சகோதரரே. 🙏. 


இன்று எ.பியில் ஒரு மரம், பல பறவைகள் படத்திற்கு ஏற்ற கவிதைகளை நம் எ. பி குடும்ப நட்புகள் அனைவரும் சிறப்பாக புனைய, என் மனமும் உடனே எழுத இயலாத ஆதங்கத்தில் ஒரு புழுவாக நெளிந்தது .எப்படியும் ஒரு நாலுவரியாவது எழுதிட வேண்டுமென அது பிடிவாதம் செய்ததில், பல வேலைகளுக்கு நடுவில் அதற்கும் எப்படியோ  மதியத்தில் யோசித்து ஒரு கவிதை எழுதி  விட்டேன்.

இன்றைய மரம் பறவைகளுக்கான என் கவிதை. 

தன்னம்பிக்கை கொள் மர(ன)மே

பிறந்தவுடனே சில காலத்திய

பிணைப்பென்றாலும்

எங்களைப் போன்ற சிறு 

ஜீவன்களாகிய

பறவைகளுக்குத்தான் புரியும்

பந்தமும் பாசமும்  வெறும்

பகட்டானதா, இல்லை
 
பரிகாசமானதாவென்று..! 


பற்றில்லா இலைகள் 

தன் வழக்கமான

பழக்கத்தில் பற்றறுத்து

பாதை மாறிப் போனதந்த 

வருத்தத்தைப் போக்க உன்

வேர்களுக்கு துணையாக

வேறெந்த உறவையும் நாடாது 

உன் வேதனையில் பங்கெடுக்க 

வேண்டி வந்து அமர்ந்துள்ளோம்


வருந்தாதே அன்பு மரமே.!  

உன் மனவலி(மை) கண்டும் 

இங்கு வந்திறங்கி உள்ளோம்.

இலைகள் இல்லாத போதினிலும்

இவைகளின் அன்புக்கு விலை

ஏதுமில்லையென உன்

உள்மனதுக்குள்

சற்று இறுமாப்புக் கொள்...!


கறுத்த மேகங்கள் மனமிறங்கி

மழையும், குளிருமாய் வந்து

விரட்டிடும் விரைசலில், 

விரைவில் துளிர்த்திடும்

பசுந்தளிர்கள். தங்களின் பரிசாக

உன் மேல் தன் பங்களிப்பாக 

பாசப் போர்வையை 

போர்த்தியதும்

பளபளவென மின்னும் உன்

அற்புத அழகை ஆராதனை 

செய்வதற்கு தினந்தினம் 

அப்போதும் நாங்கள்

தப்பாமல் வருவோம்.


அக்கணம் எங்கள் வாழ்வின்

ஆனந்த குடியிருப்பிற்கு

அங்கலாய்ப்புடன் கூடிய 

ஆட்சேபனைகள் ஏதும் 

கூற மாட்டாய்..! மாறாக

அமைதி கொண்டு வரவேற்பாய் 

என்ற ஆனந்தத்தில் இப்போது 

ஆழ்ந்து லயித்துள்ளோம்

நானோ ஒரு தருமி. இருப்பினும், சிறப்பாக அங்கு  கவிதையை செதுக்கியவர்கள் இதையும் படித்து பாண்டிய மன்னனாய் ஒரு நல்ல கருத்தை முன்வைத்தால் பெருமகிழ்ச்சியடைவேன்.

இப்போது பழையது, புதியது என அனைத்தையும் சேர்த்து தொகுத்து இங்கு என் பதிவிலேயே  வெளியிட்டுள்ளேன். 

அனைவரும் வந்து படித்தால் நலம். படித்த பின் கவிதைகளுக்கு ஒரு நல்ல கருத்துரை தந்தால், அது என் எழுத்துக்கும் ஒரு நல்ல பலம். 🙏. நன்றி சகோதர சகோதரிகளே..! 🙏. 

Wednesday, February 14, 2024

பறவையின் சுதந்திரம்

சுதந்திரம் என்றாலே பொதுவாக பறவைகளைத்தான் மனிதர்களாகிய நாம் ஒப்பிடுவோம். "இந்தப்பறவை மாதிரி சுதந்திரமாக இருக்கனும்.. இந்தப் பறவைகளைப் பார்..! வானத்திலே தன் மனம் போன போக்கில் பறந்து திரிந்து எப்படி  உல்லாசமாக வாழுகிறது. இப்படி நம்மால் வாழ இயலவில்லையே.." என பறவைகளை உவமானபடுத்தி பெருமூச்சு விடுவோம். ஆனால், "ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வைத்தார் இறைவன்." என்பது போல ஆறு அறிவுகளையும் ஒவ்வொரு இனத்திற்கும் இவ்வளவுதான் எனவும், அளந்ததோடு மட்டுமின்றி இப்படித்தான் வாழவேண்டுமென்ற நியதியையும் இறைவன் தந்துள்ளார். 

பறவையை கண்டான் விமானம் படைத்தான்" என மனிதன் அதனிடமிருந்து சுயநலமாக நம் வசதிக்காக கற்றுக் கொண்டதும் அதிகம்."கிளிக்கு ரெக்கை முளைத்து விட்டது. அதனால் கூட்டை விட்டு பறந்து விட்டது.." என தங்கள் பேச்சை கேட்காத பிள்ளைகளை பெற்றோர் அந்தப் பறவைகளை துணைக்கழைத்து வசை பாடுவதும் அதிகம். ஆனால். பல பறவைகள் புத்திசாலிகளாய் சுயநலமிக்க மனிதனின் உணர்வை புரிந்து கொண்டவையாய் மனிதனை விட்டு விலகிப் போவதும் இப்போதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது. 

நம் அன்புக்கு கட்டுப்பட்டு நம்முடனே நம்மைக்கண்டதும் பாசத்துடன் ஓடி வரும் போதும், நம் விரோதத்தை புரிந்ததுவாய் நமக்கு தொந்தரவுகள் தராமல் வேறிடம் பார்த்து குடி பெயரும் போதும் அதனின் நல்ல மனதை வெளிப்படையாக  எடுத்துக் காட்டுகிறது. அறிவுகள் அளவென பெற்ற  அதனிடமிருந்து இந்த ஆறறிவு பெற்ற மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் ஏராளம். 

நம் பறவை நேசர் சகோதரி கோமதி அரசு அவர்களின் சமீபத்திய பறவை பதிவுக்கு நான் கருத்து தெரிவிக்கும் போது, இப்படி எதிர் வீட்டில் முட்களை (பிளாஸ்டிக் மாதிரிதான் தெரிகிறது.) வைத்திருக்கிறார்கள் என்று பதிலாக சொன்னதும் அவர் சட்டென மனம் கலங்கி விட்டார்.

இப்போதுதான் புதிதாக கட்டியிருக்கும் அவர்கள் வீட்டில் இந்த புறாக்கள் வந்தமர்ந்து அசுத்தப்படுத்துகிறது என்றுதான் அவர்கள் இந்த ஏற்பாடு செய்துள்ளார்கள். எனினும் அதனுடைய வாழும் இடமான பல மரங்களை அழித்து நம்முடைய சுயநலத்திற்காக, கூட்டு குடும்பத்திலிருந்து பிரிந்து தனித்தனியாக  வசிக்க வேண்டி இப்படி தனி இருப்பிடமாக அமைத்துக் கொள்ள நாமும் முயற்சித்து விட்டோமே எனவும் தோன்றுகிறது. 

இதையெல்லாம் பார்க்கும் போது மனது நொந்தாலும், உயிர்களை படைத்த இறைவன் அனைத்து உயிர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்தபடிதான் இருப்பான் எனவும் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்...! வேறு என்ன செய்வது? 


இப்படி எங்கும் முட்கள், எதிலும் முட்கள் என்றால் எங்குதான் வந்து அமர்வது?
 

இப்படி நாம் ஆசுவாசமாக வந்தமரக் கூட தடையாக ஏதோ வைத்திருக்கிறார்களே என யோசிக்கிறது போலும்...! நம் வேதனைகளை வாய் விட்டு சொன்னாலும் இவர்கள் புரிந்து கொள்வார்களா எனத் தெரியவில்லையே...!! என மனதில் நினைத்தபடி அமர்ந்துள்ளது. 

மற்றொருவர் வீட்டை படம் எடுப்பது மிகத் தவறு. இந்தப் பறவைகளின் கூடு... அதன் வாழுமிடங்கள்... என அது நம்மோடு இணைந்து வருவதாலும், கோமதி அரசு சகோதரியின் பறவைகள் பதிவை படித்த தாக்கத்தினாலும், இப்படி படங்கள் எடுத்து விட்டேன். (இன்னும் நிறைய கோணத்தில் அது வழக்கப்படி வந்தமர்ந்த இடங்களில் எல்லாம் , இந்த முட்கள் வைத்தப்பின் எப்போதும் போல் வந்து அமர இடமின்றி தவித்த அந்த புறாக்களோடு எடுத்திருந்தேன். அவற்றையெல்லாம் அழித்து விட்டேன்.) ஏனெனில் இதற்கே இறைவன் என்னை மன்னிக்க வேண்டிக் கொள்கிறேன். அதோடு அவர்களும் (அந்த மற்ற வீட்டு உரிமையாளர்களும் மானசீகமாக ) மன்னிக்கட்டும்.


இப்போதும் சற்று ரிலாக்ஸாக அவ்வப்போது இவ்விரண்டும் வந்து முட்கள் இல்லாத இடமாக அமர்ந்து பேசி மகிழ்கிறது. 


"என்ன இடர்கள் வந்தாலும், நாம்  ஒருவருக்கொருவர் துணையாக வாழும் வரை பிரிவென்பதே இல்லாமல் இப்படியே சேர்ந்து இருப்போம்..." எனக் கூறி மகிழ்கிறதோ?


"இப்படி போட்டோக்கள் எடுத்து எங்களுக்கு என்ன நியாயங்கள் கிடைக்கப் போகிறது?" என்பதுதான் எங்கள் கேள்வி. இறைவன் இவ்வுலகில் பிறந்த உயிர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வழி காண்பித்து  துணையாக இருப்பதைப் போல எங்களுக்கும் துணையாக இருப்பார் என நம்புகிறோம். நீங்களும் எங்களுக்காக பிரார்த்தனைகள் செய்து கொள்ளுங்கள். அது போதும்.." என்கிறதோ நம்மைப் பார்த்து. 

இன்றைய தினத்திற்காகவும் இந்தப்பதிவு. பொதுவாக காதல் என்ற சொல் பலருக்கும் தவறாகத் தெரிவதுதான். அந்த சொல்லிற்கு அன்பு, பாசம், பந்தம் போன்றவைகளும், பக்க வாத்தியங்கள் போல் பக்க பலமாக இருந்துதவி செய்கின்றன. இந்தச் சொற்களின் அர்த்தங்களை புரிந்து கொண்டால், காதல் என்பது ஒரு அருமையான இசை. இந்த பாசம் மிகுந்த பறவைகளை பார்க்கும் போது எனக்கு அப்படித்தான் தோன்றியது. வாழ்க இந்த காதல் புறாக்கள். 

இதைப்படிக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

Sunday, March 17, 2019

மயிலாக நான் மாற வேண்டும்.


சென்ற வருடம் திருநெல்வேலிக்கு  போகும் போது அகஸ்தியர் அருவிக்கும் சென்றிருந்தோம். வரும் வழியில், பல இயற்கை காட்சிகள், அருமையாக இருந்தது. ஓரிடத்தில் காரை மெதுவாக ஓட்டி வரும் போது ( ஓட்டி வந்தது அண்ணா பையன்தான்.) நாங்கள் வந்த காருக்கு அருகில் தைரியமாக ஒரு மயில் வந்து நலம் விசாரித்தது.(நாங்களும் காருக்குள் இருந்ததினால் தைரியமாகத்தான் இருந்தோம்.) ஏதாவது சாப்பிட இருக்கிறதா?எனகேட்கும்  பாவத்தில், காரைச் சுற்றி வந்தது. கைவசம் கொண்டு போன நொறுக்குத்தீனிகள் பையை துழாவினோம். நாங்கள் இயற்கையை ரசித்த போதினில், கண்கள் இமை கொட்டாதிருந்த சமயம் பார்த்து, கையும், வாயும் மட்டும் நட்புறவாக பேசி வைத்த மாதிரி பையை காலி செய்திருந்ததை  கண்கள் அப்போதுதான் பார்த்து அதிர்ச்சியடைந்தது. "நல்லவேளை.!" ( அந்த மயிலுக்குத்தான்)  ஒரு அரை டஜன் முறுக்கு பாக்கெட் மட்டும் சற்று முறுக்கிக்கொண்டு  வாய், கைகள் நட்புறவில் சேராமல் "கா"விட்டு  ஓரத்தில்  ஒளிந்திருக்க கண்டு கண்களுடன் சேர்ந்து மனதும் நிம்மதியடைந்தது.

இவர்கள் ஒன்றும் தராமல் நம்மை வேடிக்கை பார்க்கும் ஜீவன்கள் போலிருக்கிறது என்ற எண்ணத்தில் எங்களை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு "ஒருமையில்" வந்த "அம்மயில்" நகரும் முன் நாங்கள் அந்த  முறுக்கை கார் ஜன்னல் கதவை திறந்து வெளியில்  போட சற்று அவநம்பிக்கையுடன் திரும்பிய மயில் அட,.! முறுக்கா...!  இதைக் கொடுக்கத்தான் இவர்களுக்கு இத்தனை முறுக்கா ? என்று இளப்பமாக ஒருதடவை பார்த்து விட்டு சாப்பிட ஆரம்பித்தது.

அப்போது எடுத்த படங்கள்தான் இவை.


நலமா? என விசாரிக்க வந்த மயில்.


உங்களிடம் சாப்பிட ஏதாவது இருக்குமாப்பா ...?


அட.! உங்களைத்தான் கேட்கிறேன்.. உங்கள் இதய கதவை... வேண்டாம்.. கார் ஜன்னல் கதவை திறக்க கூட மனமில்லையா உங்களுக்கு?


அட. .! போங்கப்பா.. நீங்களும் உங்க உபசாரமும்.. ஏதோ தேடு தேடென்று தேடுகிறீர்களே ஒழிய ஒன்றும் கை நீட்டி வெளியில் வர மாட்டேங்குது..


நானும் எவ்வளவு நேரந்தான் பொறுமையாயிருப்பது? சரிப்பா.. வரட்டா..! வேறே ஏதாவது வண்டி வந்தா அவங்ககிட்ட கேட்டுக்கிறேன்.. அடேடே.! கிளம்புற நேரத்திலே கார் ஜன்னல் கதவு லேசாக திறக்குதே.!


ஒரு மட்டும் ஒரு முறுக்கை ரொம்பவும் முறுக்கிக்காமே எப்படியோ போட்டுட்டாங்கப்பா.. சரி.. சாப்பிட்டு பார்க்கலாம்.


இதைக்கடிக்க கூட முடியலயே.! இதை எங்கேயிருந்து வாங்கிட்டு வந்தாங்களோ.! இதையா இந்த மனுசங்க இவ்வளவு நேரம் தின்னுகிட்டு வந்தாங்க... சுத்தமா ரசனையில்லாத மனுசங்கப்பா...


இது முறுக்கு தானா? வேறு ஏதாவது தந்து நம்மை கடத்தி, கிடத்தி காரிலேயே கொண்டு போயிடுவாங்களா.. ?


இந்தப் பக்கம் வேற நிறைய போட்டிருக்காங்களா? இதைப் பாக்கவேயில்லையே.. .!


இதுவாச்சும் நல்லாயிருக்குமா . ? கொஞ்சம் டவுட்டு வருகிறது. அதான் கேட்கிறேன்...


இல்லை.. அந்தப் பக்கம் ஒன்னு இருக்கே.. அதை சாப்பிடலாமா?


அட...! இங்கேயும் அதே வஸ்துதான் போடறீங்களா? இது எப்படியிருக்குமோ?


என்னவோ.. போங்க.! சுத்தி, சுத்தி வந்ததுக்கு ஒரே "கைசுத்தல்" முறுக்கா போட்டுட்டு கிளம்புறீங்க! இது எங்கிட்டே வரும் போது எத்தனை "கைசுத்தி" வந்திருக்கோ .! சரி.. சரி... நிதானமா சாப்பிட்டுகிறேன். போயிட்டு வாங்க.. ஆனா.. அடுத்த தடவை இந்த முறுக்கை மட்டும் கொண்டு வந்துராதீங்க...! என்ன இருந்தாலும் உணவை கொடுத்ததுக்கு நன்றி.. .! உங்களுக்கும் மட்டுமில்லை.. நம்மையெல்லாம் படைத்தவனுக்குந்தான்..!

இத்தனை மயில் படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு போனஸாக இந்த வீடியோ..

எத்தனை அழகாக பறக்கிறது இந்த ண் யில்...



"மயிலாக நான் மாற வேண்டும்.  வள்ளி மணவாளன் என் தோளில் இளைப்பாற வேண்டும்." என அருமையாக பாடியுள்ள சீர்காழியின் கம்பீரமான வெங்கல குரலுடைய பாடல்  நினைவுக்கு வருகிறது.

இதோ.. போனஸுக்கு ஒரு போனஸாக இந்தப் பாடலும்..... இதையும் கேட்டு ரசிக்க வேண்டுகிறேன். 


இந்த வீடியோக்கு மட்டும்... கூகுளுக்கு  நன்றி....

என் பதிவையும், நான் எடுத்த மயிலாரின் படங்களையும். நான் பதித்த வீடியோவையும்,  கூகுளிடமிருந்த பெற்ற சீர்காழியின் பாடல் வீடியோவையும் ரசித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

Saturday, August 15, 2015

எங்களுக்கு எப்போது..?





சுதந்திரங்கள் என்றுமே உங்களுக்கு மட்டுந்தான்.!
சுற்றித் திரியும் சுகங்கள் எமக்கென்றும் இருந்ததில்லை!
எமது இனங்கள், வானிலே பறந்து வட்டமிடுவதையும்,
எட்டிப் பார்க்கும் எழுச்சியும் எமக்கிருந்ததில்லை.!
மனிதரின் பிரச்சனைக்கு தீர்வின் மருந்தாக மட்டும்
மண்ணில் வந்து சிறகின்றி அவதரித்தோமா.?
ஆயிரம் மாற்றங்கள் அனுதினமும் உருவாகியும்,
ஆண்டாண்டு காலமாய், அதற்குதானா இந்தச் சிறை.?
தெய்வங்களை நாங்கள் தினந்தோறும் ஸ்பரிசித்தும்,
தீர்வான பாதைகள் இன்னமும் திறக்வில்லை.!
சிறகுகள் இருந்தும், பறக்கப் பழகவில்லை.! உங்கள்
சிரிப்புக்கு பலியென அதை பரிசாகவே தந்து விட்டோம்.
உங்களின் காலத்தை கணிப்பது எங்கள் பணி, ஆயின்
எங்களின் காலங்ள் என்றும் கண்ணுக்கு தெரிந்ததில்லை.!
வருடங்கள் தினமும் சிறகோடு விரைவாக பறப்பதினால்,
வயோதிகங்கள் வளர்ந்தே எங்கள் வாழ்வும் முடிந்து விடும்
உங்களின் சுதந்திர தாகங்கள் தணிந்ததைப் போன்று,
எங்களின் தாகங்களும் என்றுதான் தணியுமோ?
மனமும் மார்க்கமும் உங்களுடன் அமைந்திருந்தால்,
மனதாற எங்களையும் மகிழ்வோடு மறுப்பின்றி,
சுற்றிப் பறக்க விட்டு சுதந்திரத்தின் காற்றுக்களை,
சுவாசித்து வாழ விட சற்று முயற்சித்து பாருங்களேன்.



வலைத்தள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் 
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.              .                
        படங்கள் : நன்றி ௬குள்                            

Thursday, March 19, 2015

ஒற்றுமை உபதேசம்...

எட்டுப் பறவைகள் நாங்கள். தினமும்,
எட்டும் வரையிலும்  வானில் சிறகடிப்போம்..
எட்டி வைக்கும் உறவில்லை நாங்கள்எங்களில்
எட்டிக்காயாய் எவரையும் வெறுத்ததில்லை.. நாங்கள்,

உண்ணும் உணவுக்கு ஏதும் பஞ்சமில்லை.. மற்ற
உடமைகள் எதுவும் கை விலங்கில்லை எமக்கு....
பட்டினிதான் இன்று என்றந்த நிலைவரும் போதும்.
பகிர்ந்துண்டு வாழும் நல்ல பக்குவ மனமுண்டு எமக்கு.. 

பேதங்கள்  என்றுமில்லா வாழ்விங்கு கண்டு,      
பேரின்பமாய் வாழ்ந்த  தாய் தந்தை  வழி சென்று,
முன்னோர் சுட்டிய  பாதையை மறவாதுமனதினிலே
முகஞ்சுழிப்பும்மற்றும் முணுமுணுப்பும்  ஏதுமின்றி,

மரங்களுடன்மட்டில்லா பசும் காடுகளை, நீங்களெல்லாம் 
மனத்தகத்தில்  கழிவிரக்கம்  சிறிதன்றி, சுயநலப்போர்செய்து
மதியின்றி கசடிதுவே என நினைத்து தினம் களைந்தும் ,
மறுவாழ்வும் எமக்குமுண்டு என ஐயமின்றி வாழுகிறோம்

பிறப்பெய்தும் பல உயிரை படைத்ததும் அவன் செயலே…! இதில்
பிரிவென்ற பல தவறை செய்வதும் நம் வினையே.! இயற்கையும்
பிறவிதான் என்பதை  ஒருபோதும் மறக்காமல், வேதனைகள்
பிறரையும் வருத்தும் என ஒரு நொடியேனும் நினையுங்கள்

ஒற்றுமையின்  வலிமையை  அன்றொரு நாள் மனிதனுக்கு,
ஓங்கிச் சொன்னது எங்கள் இனம்அறிவுகள் ஆறிருந்தும்,
ஒற்றுமையில்லா  பிரிவுகள்பிரச்சனை பிரசவித்த மனபேதங்களும்
ஓங்கிப் பெரிதாக, காடென்றும் மேடென்றும் பாராமல்,

தனியாகிப் போனது உங்கள் இனம்தடையென்றும்,
தவறென்றும்தறிகெட்டு  நாங்கள்  ஒன்றாகி  சூழ்ந்தால்,
வானம் இருண்டு விடும்.. பூமியும் அரண்டு விடும்.. ஆனால்
வார்த்தையிலேனும் அவ்விதமாய் ஏதும் சொல்லோம்.. ஏனெனில்,
  

ஒற்றுமையை தீயதாக்கி வஞ்சம் தீர்க்க எங்கள் மனம்
ஒரு பொழுதும்  நிச்சயமாய் ஒப்பவில்லை.. மாறாக,
ஒற்றுமைக்கு எங்கள் கதைகள், இன்னும் ஏதேனும்
ஒன்றிரண்டு உள்ளதென்றால், உங்கள்  குலம் சிறப்புறவே,
  
தனிமை பெரும் தடங்கலென்று, தத்துவமாக அதைச்சொல்லி,
தனித்துப்போகும் தவறதனை திருத்தி, தாவரம் அழிக்காத பண்பைக்௬றி,
தப்பாமல் எங்களின் நிலையுணர்த்தி, எங்கள் வம்சமும் இனி அழியாது,
தரணியில் நாம் பிறந்த பயனை ஒருமையாக்கி இனி வாழுவோம்..!
  
பறவைகளின் உபதேசம் வீணென்று பரிகாசங்கள் ஏதும்,
பகன்றிடாமல், பகலிரவு என்றும் பார்த்திடாமல், பலமாய்
யோசித்து பலன் பெறுங்கள்…! ஒற்றுமையின் வலிமைகள் மீண்டும்
யோசனைகளுடன் சிறந்திருக்க படைத்தவனை தினம்  நாங்கள் யாசிக்கிறோம்! எங்கள் சிறகுகள் என்ற  மலர் கொண்டு  பூஜிக்கிறோம்...


படங்கள்: நன்றி கூகுள்