Showing posts with label ஸ்ரீ ராம நவமி. Show all posts
Showing posts with label ஸ்ரீ ராம நவமி. Show all posts

Thursday, April 2, 2020

ராம நாமம்.

ஸ்ரீ ராம ஜெயம்.

விக்கினங்களை களைபவனே..
ஸ்ரீ விநாயகப் பெருமானே...! உனை
வாயாற பாடுகின்றேன். தப்பாமல்
வந்தெமக்கு வாரி நின் அருளை
வான்மழை போல் தந்தருள்வாய்..

பிறவிப் பிணிகளை களைந்து, மீண்டும்
பிறவா வரம் மட்டும் தர வேண்டி
பிரியத்துடன் பிரார்த்தித்து நிற்கிறேன்.
பிறிதொன்றை வேண்டிலேன். ஆனால்,

கண்ணுக்கு தெரியாமல் எந்நேரமும்
கதிகலங்க வைக்கும், "கரோனா" அசுரனை
கணங்களுக்கு  அதிபதியே..! உன்
காலடியில் வைத்து கசக்கி எறிந்து விடும்
கருணைக்கு கணநேரமும் ஆகாதுனக்கு..

அந்த உமையவளின் அன்பு மகனே.. ,
அகில உலகமும் நன்மை பெற்றிடவும்,
ஆறுதல் தந்து  ஆங்காங்கு காத்திடவும்
அங்குசம் வீசி, அடிமை கொண்டு விடு
அவ்வசுரனின் அசையாத அஸ்திவாரத்தை..
அதை மட்டும் உன்னிடம் இன்று
அன்புடனே மறுபடி வேண்டுகிறேன்.



ஜெயம் என்ற வார்த்தை நம் மனதை உற்சாக படுத்தும்.  கூடவே ராம நாமமும் சேர்ந்து விட்டால், கேட்கவே வேண்டாம்
பொறுமையின் அவதாரம் ஸ்ரீ ராமபிரான். அவருடன் அவர் மனைவியாக இணைந்த சீதா பிராட்டியும்  பொறுமையின் மறு அவதாரமாகிய பூமாதேவியின் மகளாக ஜனித்து பொறுமைக்கு மறு பெயராக விளங்கியவர்.

பாசத்திற்கு அடையாளமான தந்தை, தாயுடனும், நியாயம், தர்மம், அன்புக்கு இலக்கணமாக பிறந்த உடன் பிறப்புகளுடனும், பொறுமையின் சிகரமான சீதா தேவியுடனும் வாழ்ந்து ஒரு சிறந்த சக்கரவர்த்தியாக ராஜ பரிபாலனம் நடத்தி, மானிட வர்க்கத்திற்கு  ஒரு உதாரண புருஷனாக இருநது வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராமபிரான்.

அவர் வாழ்வில் அனைத்துமே அன்புதான். அன்புக்கு மட்டுந்தான் அங்கே அங்கீகரிப்பபு. அவரின் அன்புக்கு அனைவருமே கட்டுப்பட்டார்கள்.  அவர்களின் அன்பில் இவரும் கட்டுண்டார். வாழ்வின் இடையில் தோழமையாக வந்த
குகன், சுக்ரீவன், ஹனுமான், வீபீஷணன் என அனைவருமே இவரது அன்பெனும் மழையில் நனைவதற்காக பிறவி எடுத்து காத்திருந்தவர்கள். அகல்யை, சபரித்தாய் இருவரும் தாங்கள் எடுத்த பிறவியில். ராமரின் பாததுளிகள் பட்டு தங்களது  பிறவி பெருங்கடலை கடப்பதற்காக காத்திருந்தவர்கள் .

பகவான் விஷ்ணு ஏழாவதாக மனித அவதாரம் எடுத்து மனிதர்களுக்கு புகட்டிய நீதி போதனைகளை நாம் மறக்காமல் இருக்க ஒவ்வொரு வருடமும், ஸ்ரீ ராமரின் பிறந்த நாளான நவமி திதியில் நாடு முழுவதும். அவரவர் இல்லங்களில் அவரை கொண்டாடி கோவில்களுக்கும் சென்று அங்கும் அவரை வணங்கி வந்தோம். இவ்வருடம்  அவ்விதம் கொண்டாடும் சூழ்நிலைக்கு  தடங்கல் வந்துள்ளது.

அசுரர்களை வதம் செய்து மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஸ்ரீ மஹாவிஷ்ணு  மனிதனாகவே எடுத்த அவதாரங்களில் ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் மனிதர்களுக்கு பரிச்சயமானவையாக கருதப்படுகிறது. அவ்விதம் இப்போது  அசுரனாக முளைத்திருக்கும், "கொரோனா" என்ற அசுரனை சம்ஹரித்து  உலக மக்களை தன் அன்பால் வழி நடத்தி, இந்த அசுரனின் பிடியில் சிக்கியவர்களை நல்லவிதமாக பலப்படுத்தி  செல்ல நாம் அனைவரும் அவரது பிறந்த நாளான  இந்த நன்னாளில் ஒன்று கூடி அவர் நாமத்தைச் அன்புடன் சொல்லி பிரார்த்திப்போம். அவர் கண்டிப்பாக நமக்காக வருவார். ஏனென்றால் அவர் அன்புக்கு எந்நாளும் கட்டுப்பட்டவர். 🙏🙏🙏🙏🙏🙏.

ஸ்ரீ ராம. ராம, ராம  ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ராம, ஸ்ரீ ராமச்சந்திர பிரபோ... என தாரக மந்திரமாகிய ராம நாமாவை ஜபிப்போம். நம்மை சுற்றி ஒலிக்கும் இந்த நாமங்கள் நம் நல்வினையை  பலப்படுத்தட்டும். 🙏🙏🙏

அவசரமாக ஏதோ மனதுக்கு பட்டதை எழுதிய பதிவிது.. .இதில்  அட்சர பிழைகள் ஏதும் இருந்தால் பொறுத்தருளுங்கள் . அனைவருக்கும் அன்பான நன்றிகள்.