Showing posts with label விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். எங்கள் வீட்டு பிள்ளையார் கதை.. Show all posts
Showing posts with label விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். எங்கள் வீட்டு பிள்ளையார் கதை.. Show all posts

Wednesday, September 12, 2018

எங்கள் "பிள்ளை"யார் கதை....

வணக்கம்..
அனைத்து வலைத்தள சகோதர. சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.



ஸ்ரீ விநாயகர் கும்பாபிஷேக விழா

அந்த கற்கோவில் புது சுண்ணாம்பு அடித்து கடவுளார்களை பிரதிஷ்டை செய்ய பீடங்களை சிறந்த முறையில்அமைத்து, சுற்றிலும் பிரதட்சணம் செய்வதற்கு வசதியாக நடைபாதைகளை சீரமைத்து  வேலைகள் முழுவதும் பூர்த்தியாகி விட்டது. சின்ன கோவில்தான். ஆனாலும்  அந்த அக்ரஹார  பெரியவர்கள் பேசி ஒன்று கூடி ஒரு முடிவுடன் அம்சமாக அமைத்தது ஸ்ரீ விநாயக பெருமானின் திருவருளால்தான். அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் தாயாதி முறைகள்தாம். அதனால் மனப் பிரிவினையின்றி ஒன்றினைந்து ஆளுக்கொரு வேலையாக முனைப்புடன் செய்து கோவிலை  அழகான முறையில் கட்டியாகி விட்டது

ஒரு வாரத்தில் அதில்  விநாயகர்  சிலை பிரதிஷ்டை செய்து,  மஹா கும்பாபிஷேகத்திற்கு என நாட்கள் தேர்ந்தெடுத்து நல்ல பொழுதும் பார்த்து ஏற்பாடுகள் செய்தாகி விட்டது. மேள தாளம், நாதஸ்வர கலைஞர், தெரு முழுக்க பந்தல், பந்தலில் கட்ட வாழைமரங்கள், தோரணம், பூக்கள், கும்பாபிஷேகம் நடத்தி வைக்க தீட்சிதர்கள்  வேதங்கள் முழங்க  கணபாடிகள்,  அன்றிரவு முழுவதும்  இறைவனின் நாமாவளியை சொல்லும் பஜனைகளுக்காக பஜனை செய்பவர்கள் என அனைவருக்கும்  சொல்லியாகி விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் பக்கத்திலிருக்கும் உறவுகள், வெளியூரில் குடியிருக்கும் உறவுகள், உறவுகளுக்கு அறிந்தவர்கள், அறிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு அறிமுகமானவர்கள் இப்படி நிறைய பேரை எதிர்பார்த்து, விழாக் கோலம் பூண்டு அந்த அக்ரஹாரத் தெரு தயாராகி கொண்டிருந்தது.

நல்ல சமையல்காரர்கள் நியமித்து, அவர்களுடன்  தெருப் பெரியவர்கள் அமர்ந்து, ஹோமத்திற்கு நிவேதனங்கள், காலை  மதியம், இரவு என அறுசுவை உணவுகள் யாவும், இப்படியாக இருக்க வேண்டுமென பேசியாகி விட்டது.

காலை நிவேதனம் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல். பஞ்சாமிர்தம் எனவும். மதிய உணவு (நிவேதனமாக)  சாதம்,  பருப்பு, சித்ரானங்கள் இரண்டு, (தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம்) இரண்டு கறி, (வாழைக்காய் பொடித்துவல்,  சேம்பு இல்லை சேனை காரக் கறி) ஒரு கூட்டு (புடலை இல்லை தடியங்காய் கூட்டு,)  அவியல், ( எல்லா காய்களும் சேர்ந்து அவியல்,) மோர்குழம்பு, சாம்பார், ரசம், இரண்டு பச்சடிகள், (தயிர், மாங்காய்) இரண்டு வடைகள், (உளுந்து வடை, பருப்பு வடை) இனிப்புகளாக இருவகை பாயாசம்,, (பிரதமன், தேங்காய் சேர்த்து பருப்பில்லாமல் ஒரு பாயாசம்) போளி, லட்டு, என இருவகை இனிப்புகள், வாழைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்து வெல்லப்பாகு வைத்து அதில் மனோகரம் மாதிரி போட்டெடுத்த வெல்ல இனிப்பு, (சர்க்கரை வரட்டி, சர்க்கரை உப்பேரி)
இது போக அப்பளம், வடாம், வறுவல் அப்போதே போட்ட மாங்காய் ஊறுகாய், புளிப்பில்லாத தயிர். என சாப்பாட்டு ஐட்டங்கள்.

இரவு புளியோதரை, தேங்காய்,  பருப்பு  கலந்த இனிப்பு பூரண கொழுக்கட்டை , உளுந்து காரக்கொழுக்கட்டை, எள்ளு பூரண கொழுக்கட்டை, கடலைப் பருப்பு சுண்டல், தயிர் சாதமென நிவேத்தியங்கள் வெற்றிலைபாக்கு, நிறைய பழங்கள் என  தாம்பூல உபசாரங்கள். தடபுடலாக அனைத்தும் பேசி முடித்தாகி விட்டது.

மறு நாள் வழக்கம் போல் கோவிலினுள் சென்று பார்வையிடும் போது  பிரதிஷ்டை செய்யவிருக்கும் கணபதிக்கு தீடீரென ஒரு அங்கஹீனம். வலது கை தோள்பட்டை யிலிருந்து கொஞ்சம் கை வரை மாயமாகி போனது போல.. அதைக்கண்ட எல்லோருக்கும் அதிர்ச்சி.... வானமே இடிந்து தலையில் விழுந்தது போல ஒரு வேதனை.. என்ன செய்வதென்று ஒரே கவலை... ஒரு வேலையும் ஓடவில்லை. கடைசியில்  பேசிப்பேசி அன்று இரவுக்குள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

மூலஸ்தானத்திற்கு வலபக்கம் கன்னி விநாயகர் பிரதிஷ்டை செய்வதற்காக அழகாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் இயல்பாகவே மூலவரை விட மிகவும் அழகாக வேறு அமைந்து விட்டார். எனவே அவரை குறிப்பிட்ட நாளில் மூலவராக்கி விட்டு மற்றொரு விநாயகரை செதுக்கி வேறொரு நாள் பார்த்து கன்னி விநாயகராக பிரதிஷ்டை செய்யலாம் என கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

கோலகாலமான  விசேஷ வைபவங்களுக்கு நாள் நெருங்கி விட்டது. ஊர் உறவுகள் என கும்பாபிஷேகத்திற்கு,  பேசியபடி ஆவலுடன் வரும் நாட்கள் நெருங்கி விட்டது. இந்த நேரத்தில் இப்படி யாகி விட்டதே என்ற கவலை அனைவருக்கும்.... ஆனாலும் கவலைப்பட நேரமில்லை. ஏதேனும் ஒரு முடிவெடுத்து சட்டென நிலைமையை  சமாளித்தாக வேண்டும். அதனால்தான் அவசரமாக இந்த முடிவு.

அன்று இரவு ஒருவருக்கும் தூக்கமே வரவில்லை.. தாங்கள் எடுத்த முடிவு தவறானவையா? இல்லை இப்படித்தான் நடக்க வேண்டுமென்பது "அவன்" கட்டளை யா? விருப்பமா? தீடீரென நடந்த சம்பவத்தால் மனச் சலனங்கள்... அதிலும் இதை சொல்லியவருக்கு மனிதினில் ஒரே குழப்பம். தம்மைச் சொல்ல வைத்தவன் "அவன்" தானெனினும் இப்படி முடிவு எடுத்து விட்டோமே. !  தெருவில் இருப்பவர் களுக்குள் தாம் சற்று வயது  மூத்தவர் என்பதால் அனைவரும் கட்டுண்டு அமைதியாய் தம் முடிவை ஆமோதித்து விட்டார்களா? இல்லை தாம் முடிவு எடுக்கும் உரிமையில் அகங்காரம் இயல்பாய் வந்து விட்டதா? குழம்பிய மனதுடன் இரவு பொழுது  கழிய விடியும் தறுவாயில், அதற்கு சற்று  முன் நாலாவது ஜாமத்தில் கண்ணயர்ந்ததார். அரைமணி நேரம் கழித்ததும்,  அவர் வாயிலிருந்து விநாயகப் பெருமானே, என்னப்பனே..விக்னேஷ்வரா... என்னை மன்னித்து விடுப்பா ... மன்னித்து விடு... என்ற கூக்குரலுடன் சத்தம் வரவே வீட்டிலுள்ளவர்களின் அனைவரும் பதறியடித்து எழுந்து, கண்ணைத் திறக்காமல்  அலறும் அவரையும் எழுப்பி அமர வைத்தனர்.

விடிந்ததும், முதல் வேலையாக  அனைவரையும் கூட்டி எப்போதும் போல் தயாராக இருக்கும் பிள்ளையாரையே பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்றும், முதல்நாள் பிள்ளையார் தன் கனவில் வந்து  "உங்கள் பிள்ளைகளுக்கு  இது போல் தீடீரென ஒரு ஊனம் ஏற்பட்டால் அவனை தங்களது அனைத்து பிள்ளைகளுடன் வளர விடாமல் தனியாக பிரித்து எங்கேனும் அனுப்பி விடுவீர்களா? அப்படி செய்ய துணிவீர்களென்றால், என்னையும் ஒதுக்கி விடுங்கள்" எனக்கூறி விட்டு மறைந்தையும்  சொல்லி, என்ன ஆனாலும் சரி..! நாம் தேர்ந்தெடுத்த கணேஷரையே பிரதிஷ்டை செய்ய வேண்டுமென உறுதியுடன் கூறியதும், சிலநாட்களில் வந்த கும்பாபிஷேக விழா அனைவரின் வருகையோடும்  நினைத்ததை விடவும் சிறப்பாக நடந்தேறியது.

அதன் பின் வருடாவருடம் வருஷாபிஷேக விழாவும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  இது எங்கள் வீட்டு வாசலில் கோவில் கொண்டமர்ந்து (என் பிறந்த வீடு) எங்களையெல்லாம்  நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக காத்து  இரட்சிக்கும் எங்கள் பிள்ளையாரின் உண்மைக் கதை. என் பெற்றோர்கள் நாங்கள் வளரும் பருவத்தில் பக்தியுடன் எனக்குச் சொல்லிய  விபரங்களை வைத்து எழுதியுள்ளேன்.


இது இந்த வருட (ஜனவரியில்தான் எப்போதும் வரும்.) ஜனவரியில் வருஷாபிஷேக விழாவில் எடுத்த அவரது அருள் தரும் திருவுருவப் புகைப்படம். 

இன்றளவும் கோவில் வருஷாபிஷேக விழா நடந்து கொண்டுள்ளது. நானும் வருடா வருடம் செல்ல முடியவில்லையென்றாலும், சில பல நேரங்களில் என்னையும் அதில் கலந்து கொள்ள என்னப்பன் விநாயக மூர்த்தி வரவழைத்துள்ளார். அவர் நிழலில் எங்களையெல்லாம் அரவணைத்தபடியாக  அவர் உருவாக்கியிருக்கிறார். அவரின் அன்பான கவனிப்பு எங்கள் தலைமுறைகளை 200 வருடங்களாக காத்து ரட்சித்து வருகிறது. இத்தனை நாட்களாக இதைக் குறித்து எழுத வேண்டுமென்று நான் நினைத்துக் கொண்டிருந்த போதும், இந்த விநாயக சதுர்த்திக்கு இதை எழுத வைத்தது அவர் செயல்தான்.


இது  இப்போதும் மாத சதுர்த்தியில் செய்யப்படும் அலங்காரத்தில் ஒன்று.

ஸ்ரீ விக்னேஷ்வராய நமஃ... 

அண்ணனும் தம்பியுமாக இணைந்து அனைவருக்கும் வற்றாத அருள் புரியட்டும்.