Showing posts with label கடல். Show all posts
Showing posts with label கடல். Show all posts

Sunday, December 29, 2019

இயற்கை சீற்றம்.

2004-ம் வருடத்திற்கு பிறகு எப்போதுமே ஒவ்வொரு வருட கடைசியான டிசம்பர் 26 ம் தேதி மறக்க முடியாத சுனாமி தினம். மக்கள் கண்மூடி அசந்திருந்த அந்த வேளையில், எத்தனை உயிர்களை  கடலரசன் அசுரத்தனமாக பெரும் பசி கொண்டு விழுங்கி ஏப்பம் விட்ட இந்த துக்க நாளை நாமெல்லோரும் அவ்வளவு சுலபத்தில் மறக்கவும் முடியாது.....!விதியை  மன்னிக்கவும் இயலாது.....! 

தற்சமயம் வந்த  கிரஹண செய்திகளை படித்து கேட்டுக் கொண்டிருக்கையில், "இந்த அதி அற்புத கிரஹணத்தால், வெள்ளம். மற்றும் இயற்கை சீற்றங்கள் வரும் என்ற பயம் உண்டாக்கும் வாட்சப் செய்திகளை நம்ப வேண்டாம்..!" என்பதாக ஒருவர் பேசினார். "மக்கள் ஏன் அத்தகைய பதட்டம் தரும் செய்திகளை பரப்ப வேண்டும்? அதனால் அவர்களுக்கு என்ன பயன்? இந்த மாதிரி எச்சரிக்கை செய்திகளை கேள்விப்பட்டதுமே பாதிக்கபட்ட மக்கள் மனதில் ஏற்கனவே பட்ட அவஸ்தைகளும்,வேதனைகளுந்தானே நினைவு வரும். என்றெல்லாம் சிந்தனை வந்தது. 

சுனாமி வந்த பின்பும் நிறைய முறை இதே பயமூட்டும் செய்திகள் உலா வந்தன. ஓரிரு சமயங்களில் "இன்று சுனாமி வந்தாலும் வரலாம்"  என்பதாக சொல்லி அரசு மக்களுக்கு பயனுள்ள வகையில் எச்சரிக்கை கொடுத்து கடலோரத்தில் இருக்கும் அவர்களை அப்புறப்படுத்தி பாதுகாத்தாலும், அந்த சமயத்தில் அனைவருக்கும் ஒரு கலக்கமாகத்தானே இருந்திருக்கும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பழைய நினைவுகள், பிறருக்கு அதை புதிதாக சந்திக்கும் பயம், கவலை, இனம் புரியாத ஒரு எதிர்பார்ப்பு,மேலும்  அதை பார்க்க ஆர்வம் என ஏகப்பட்ட கலவைகளுடன் மக்களின் சூழ்நிலைகள்  இருக்க, சீறிப்பாய்ந்து ஆர்வத்துடன்  வர இருந்த சுனாமி அலைகளும் சற்று அவ்வப்போது எச்சரிக்கையுடன்  பதுங்கிக் கொண்டதும் மிகவும் நல்லதற்கே...! 

அப்போது என் மனஅலைகளுடன் கடல் அலைகளுமாக எழு(திய)ந்தது இது. 


அலைகளின் ஏக்கம்.....



ஆர்ப்பரித்து வந்த கடலலைகள்,
ஆச்சரியத்துடன் வந்து கரையை
ஆராய்ந்து பார்த்து விட்டு
அடித்து புரண்டு மீண்டும் கடலுக்குள்
அடைக்கலமாகி  கொண்டன. 

என்ன இது?

ஏன் இந்த மாற்றம்?

அன்றாடம் தன் அழகை ரசிக்கவரும்
ஆயிரம் பேர்களில் இன்று
ஒருவர் கூட இல்லாமல்,
ஓய்ந்து இருக்கின்ற கடற்கரை,

சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே,
சூனியமான புல்வெளிதரைகள்,
ஆர்ப்பரிக்கும் தன் சத்தத்தையே சிறிது 
அமிழ்த்தி விடும் ஆரவாரக்கூச்சல்கள்,

எதுவுமின்றி ஏகாந்தநிலையில்

ஏன் இந்த மாற்றம் ?


தனக்கு தானே கேள்விகளை தொடுத்தபடி,
தளர்வின்றி மறுபடியும், மறுபடியும்
மண்ணில் முதல் நாள் பதிந்த
மனிதர்களின் காலடிதடத்தை
அழித்து விட்டு சென்றபடி இருந்தன
அந்த கடலலைகள்.

அதற்கு தெரியவில்லை !
அதனுள்ளிருக்கும் அடிமட்டத்திலிருந்து
அதிர்ந்து எழும்பும்
ராட்சத பேரலைகள்
ராப்பகல் என்ற பேதமின்றி
கரையை தொட்டு விட்டு
கடந்து விடும் எண்ணமின்றி
"சுனாமி" என்ற பெயரில் அனைத்தையும்
சுருட்டிக்கொண்டு போய்விடும் 
அந்த அவலச்செயல்களும்,
அதன் கொடூர தாண்டவங்களும்,
அதனின் விளைவால் நிகழ்ந்த
அகோரமான சோகங்களும்,
விடியலில் ஆரம்பித்த விபரீதங்களும்,
விபரீதத்தின் விளைவால் எழுந்த
விரக்திகளின் வலியையும்,
விளையாட்டாய் தினமும் வந்து போகும்
அந்த அலைகள் அறியவில்லை.

இன்றும் அந்த அவல ஓசையையும் அதன்
இறுதி அர்த்தத்தையும் உணர்ந்த
காவலர்களின் கட்டளைக்கு பணிந்து
கண்காணாமல் ஒழிந்திருந்த மக்களின்
கலக்கமும், மனப்பதட்டமும்
கடற்கரையை காலியாக்கி விட்ட
சோகம் புரியாமல் மீண்டும் மீண்டும் வந்து
சோர்வில்லாமல் கரையில் மனிதர்களை, 
தேய்ந்த  நிலவொளி வெளிச்சத்திலும்
தேடிப்போனது அந்த கடலலைகள்....

இதைப் படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.🙏 🌑😎🌙



Sunday, July 24, 2011

அலைகளின் ஏக்கம்



ஆர்ப்பரித்து வந்த கடலலைகள்,
ஆச்சரியத்துடன் கரையை கவனித்துவிட்டு
அடித்து புரண்டு மீண்டும் கடலுக்குள்
அடைக்கலமாயின.
என்ன இது?
ஏன் இந்த மாற்றம்?