Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts

Wednesday, May 10, 2023

வாழையும், சேனையும்.

பொங்கலுடன் எரிசேரி. 

நம் நாட்டில் சிறந்த முக்கனிகளில் இந்த வாழைப்பழமும் ஒன்று. பொதுவாக வாழை மரம்  சம்பந்தபட்ட அனைத்தும்  அதன் பயன்பாடுகளில அனைவருக்கும் உடம்பிற்கு பல நல்லதையும் செய்யும். ஒவ்வாதவர்களுக்கு சில உபாதைகளுக்கான பாதையையும் காட்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாயுதொந்தரவு உள்ளவர்களுக்கும், இனிப்பு தடை செய்யப்பட்டவர்களுக்கும் முறையே வாழைக்காய், பழம் முதலியவை சில தொந்தரவுகளைத் தரும். 

ஒவ்வொரு வீட்டின், அல்லது கோவிலின் அனேக விஷேட தினங்களில் இந்த வாழை மரந்தான் அனைவரையும் வரவேற்கும் நல்ல மனதுடன் வாசலில் கட்டப்பட்டு அதன் சிறப்பை பறைசாற்றிக் கொள்ளும் பெருமையை பெற்றது. 

வாழைப்பழம் கனிகளில் சிறந்தது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பது.  எக்காலத்திலும் தடங்கலின்றி கிடைப்பதால், இறைவனுக்கு படைக்கப்படும் நிவேதனங்களில் இக்கனி முதலிடம் பெறும் பாக்கியத்தை பெற்றது. 

வாழைக்காய் வகையில் கறி, கூட்டு, புளிச்ச கூட்டு, வறுவல் துவையல் பொடிமாஸ் எனப்படும் கறி போன்றவற்றிக்கு உறுதுணையாக இருக்கும். தவிரவும் வாழை இலையில் சாப்பிட்டு பழகியவர்கள் அதை விட சிறந்த தட்டுகளில் பரிமாறினாலும், இவையெல்லாம்  இதற்கிணையாக (வாழை இலைக்கு இணையாக) வருமா என்று கூறுவார்கள். அந்தளவிற்கு இலையில் சாப்பிடும் உணவு பதார்த்தங்கள் கூடுதல் சுவை பெறும். 

வாழைப்பூ அதன் இயல்பான துவர்ப்பு சுகர் அதிகம் உள்ளவர்களுக்கு ஒரு அருமருந்து. தாராளமாக  இதை மதிய  உணவுடன் கறி, கூட்டு, பருப்புசிலி, வடை, அடை என செய்து சாப்பிடலாம். இதுவும் சில சமயங்களில் அதனுடன் சேரும் பொருட்களால் வாயு தொந்தரவை சிலருக்கு ஏற்படுத்தும். (எதுவுமே, அமிர்தமேயானாலும், அளவுக்கு மிஞ்சினால் அது விஷந்தானே...! . 

வாழைத்தண்டிலும் அது போல் சிறந்த பலன்கள் உள்ளது. அதிலேயும் கறி, கூட்டு, உசிலி, அவியல் தோசை என அனேக விதமான உணவு வகைகள் செய்து சாப்பிட உடம்பிற்கு நல்லதைச் செய்யும் தன்மை கொண்டது. இப்படி வாழை மரத்தை நுனி முதல் அடி வரை நமக்கு பயனுள்ளதாக அமையுமாறு இறைவன் அதை தோற்றுவித்துள்ளான்

இன்று வாழைக்காயுடன், காய்கறிகளில் ஒன்றான சேனைக் கிழங்கையும் (அந்த காலத்தில் மன்னர் ஆட்சியில் பலம் கொண்ட ஒரு படை என்பது. சேனை, படைக்கு தலைமை தாங்குபவர் சேனாதிபதி என்ற பெயர்களைப் போலவே இதற்கு யார் முதலில் சேனைக்கிழங்கு என்ற பெயர் வைத்தார்களோ தெரியவில்லை..) சேர்த்து செய்யும் உணவாகிய எரிசேரி. ( இதற்கும் இந்தப் பெயரை யார் வைத்தார்களோ?) இது மலையாள கரையோரம் அன்றிலிருந்து இன்றுவரை உலா வந்த / வரும் சிறப்பு உணவுகளில் ஒன்று. . 

வாழைக்காயைப் போல இந்த சேனைக் கிழங்கிலும் பல நன்மைகள் உண்டு. இந்த இரண்டையும் சேர்த்து சமைக்கும் போது அது ஒரு ருசி. இதிலும் (சேனைக்கிழங்கிலும்) கறி, கூட்டு, சாம்பார், பிட்லை, வறுவல் என விதவிதமாக செய்யலாம். அவியலில் இவை இரண்டும் (வாழை, சேனை காய்கள்) எவ்வித மனவேறுபாடின்றி சேர்ந்து கொள்ளும். 

வாழைக்காய் எளிதில் வெந்து விடும். மாறாக சேனைக்கிழங்கு சில சமயம் அடம் பிடிக்கும். குக்கரில் வைத்தால் கூட அதன் மனது  சிலசமயம் கல் மனதாகவே இருக்கும். சில சமயம் வெறும் கடாயில் அரிந்து போட்டு வேக வைத்தாலும், வெந்து விடும். பொதுவாக கொஞ்சம் சிகப்பு கலர் கலந்து இருக்கும் சேனைகள் இந்த மாதிரி அடம் பிடிக்கும். அதனால் வெள்ளை மனதுடையவையாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். சமயத்தில் அது நன்றாகவே வெந்து எரிசேரியில் சேரும் போது  உருதெரியாமல் கலந்தும் விடும். 

இப்படி குழைந்து வெந்து விடும் சேனைக்கிழங்கு மசியல் செய்வதற்கு உகந்ததாக இருக்கும். இந்த சேனைக்கிழங்கு (இதை மட்டும் வைத்து செய்யும் சேனை மசியல்) மசியல் புளி விட்டும், இல்லை இறுதியில் எலுமிச்சைபழம் சேர்த்தும் பண்ணலாம். சாதத்துடன் கலந்து சாப்பிட அதன் ருசி நன்றாக இருக்கும். ஓரிரு சுட்ட அப்பளங்களை இதன் தொட்டுகையாக இருக்கடடும் என இது முழுமனதுடன் சம்மதித்து விடும். (இப்போது இங்கு சில சாமான் மால்களில் இந்தச் சேனைக் கிழங்கை தோல் நீக்கி  துண்டுகளாக்கி விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.) 


இது வேக வைத்த வாழைக்காய் துண்டங்கள். 


இது வேக வைத்த வாழைக்காய் துண்டங்களுடன் கடுகு மட்டும் தாளித்து கொட்டியுள்ளேன். 


இது குக்கரில் சமர்த்தாய் வெந்து காத்திருக்கும் சேனைக்கிழங்கு துண்டங்கள். 


இது வறுத்து அரைக்க காத்திருக்கும் மசாலா சாமான்கள். 

இது எரிசேரி. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்கள் பண்ணும் போது எடுத்தவை.  ஒன்றுக்கொன்று சம்பந்த மில்லாமல் குழப்புமோ என்னவோ? இது பண்ணும் போது தொடர்ச்சியாக எடுத்த நிறைய புகைப்படங்கள் பழைய கைப்பேசியிலிருந்து மாற்றும் போது காணமல் போய் விட்டது. 

முதலில் சேனைக் கிழங்கின் தன்மையை பொறுத்து அதை கொஞ்சம் பெரிதான துண்டங்களாக்கி குக்கரிலோ தனியாகவோ வேக வைத்துக் கொள்ளவும். பின் வாழைக்காயை அதே அளவு பெரிய துண்டுகளாக்கி தனியே வேக வைத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும். 

ஒரு கடாயில் அவரவர் காரத்திற்கு தகுந்த மாதிரி சிவப்பு மிளகாய், ஒரு ஸ்பூன்  தனியா, உ. ப, க. ப ஒவ்வொரு ஸ்பூன் இவற்றுடன் மிளகு ஒரு ஸ்பூன் என எடுத்து கடாயில் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். தேங்காய் அரை மூடி துருவிக் கொண்டு அதையும் கொஞ்சம் வாசனை வருமளவிற்கு வறுத்துக் கொண்டு நன்கு ஆறியதும், கொஞ்சம் கறிவேப்பிலையையும்  கடாயில் அதனுடன் சேர்த்து  வறுத்து உரலிலோ, மிக்ஸியிலோ போட்டு அரைத்து அந்த விழுதை வேக வைத்திருக்கும் காய்களுடன் சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு கொதிக்க விட்டு, (இதற்கு மேல் தேங்காய் அதிகம் சேர்த்தால் பாதகமில்லை என்பவர்கள் இரண்டு ஸ்பூன் தேங்காய்ப்பூவை நன்கு வறுத்து இறுதியில் அதனுடன்  சேர்த்துக் கொள்ளலாம்.) (அப்போது இந்த எரிசேரி நல்ல மணம் பெறும். ஹா ஹா. ) கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்து இறுதியில் ஒன்று சேர கொதித்து வருகையில், மூன்று பெரிய ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கிவிடலாம். இப்போது இதன் வாசனை கண்டிப்பாக உடனே நம்மை உணவருந்த அழைக்கும். 


இது மஞ்சள் தூள் சேர்த்த பொங்கலுடன் வறுத்த சாமான்களை சேர்த்த படம். 

மதியமோ, இல்லை, பசிக்கும் போதோ வெறும்  சாதம் மட்டும் வைத்தால், மீதமிருக்கும் இந்த எரிசேரி ஒரு கை கொடுக்கும் என்பதால், எப்போதும் எங்கள் வீட்டில் இந்த பொங்கலுக்கு உடன் துணையாக வரும் சட்னிகள், சாம்பார், உ. வடை முதலியவை மறுபேச்சின்றி  சத்தமின்றி ஒதுங்கிக் கொண்டன. (ஆனால், எப்போதும் அதன் துணையாக வருபவை அன்று பற்களை கடித்தபடி பழி வாங்கும் மன நிலையில் உள்ளதென்பதும் எனக்கு புரிந்தது. :))) 

பி. கு. இன்னமும் இவை இரண்டின் நன்மைகள் (அதுதான் காய்கள் இரண்டின் நன்மைகள் ஏ முதலான விட்டமின், உடலிலுள்ள குறைகளை போக்கி நிறைகளை அதிகரிக்கச் செய்வது..) பற்றிய குறிப்பை இதனுடன் இணைக்க சேகரித்தேன். ஆனால், ஆகா.. ஒன்றுமில்லாத இந்தப் பதிவு இவ்வளவு நீ.. ள.. மா.. என்று பதிவின் நீளம் கருதி ஒருவரும் பொறுமையுடன் படிக்க வில்லையென்றால் என்ன செய்வதென்று அது எதையும்  இணைக்கவில்லை

இப்படி எத்தனைதான் நன்மை குறித்த குறிப்புகள் இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும், பயன்படுத்தும் அவரவர் உடல் நிலைக்கேற்றபடிதான் அவைகளும் நம்முடன் ஒத்துழைக்கும் இல்லையா..? 

அறு(சு)வைப் பதிவை படிக்கப் போகும் அனைவருக்கும் அன்பான நன்றிகள். 🙏.

Wednesday, January 14, 2015

பண்டிகைகளும், சந்தோஷங்களும்....

ன்றைய நாளின் சந்தோஷங்கள் வேறு!     
 ன்றைய நாளின் மகிழ்வுகள் வேறு! 
ஒருமாதம் முன்னதாகவே, பண்டிகை நாட்களின் வரவுகளும், அதனை கொண்டாடி மகிழ்ந்த சென்ற வருட நினைவுகளும், நம்மை வந்தடைய, காலில் சக்கரம் இல்லாகுறையாக நாம் பண்டிகையை நோக்கி ஓட ஆரம்பித்து விடுவோம். ஆனால் அப்போது, இப்போதைய காலக் கட்டத்திலிருந்து, நிறைய மாறுதல்கள் இருந்தது. (அடுப்பிலிருந்து, உடுப்பு வரை மாற்றங்கள்தாம்.) அந்த பண்டிகை நாளின் இறுதி நாள் வரை பணத்திற்கும், சில பல வசதியின்மையின் தட்டுப்பாட்டைப் பற்றி வீட்டின் பெரியவர்கள் கவலை கொள்வது, நம் கண்களுக்குத் தெரிந்தாலும், எப்படியாவது சமாளித்து நாளைய பண்டிகையை நிறைவாக கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை மனம் நிறைய இருக்கும். அதே மாதிரி பெரியவர்களும், தம் கவலைகளை சிறு சிறு கோபங்களோடு, நம்மிடையே சற்றே வெளிக் காட்டினாலும், அந்தந்தப் பண்டிகையன்று நம் மனம் கோணாமல், நமக்கு வேண்டியதை கிடைக்கச் செய்து, நம்முடன் சேர்ந்து அவர்களும் ஒரு குறைவுமில்லாது விஷேடங்களை சிறுபிள்ளைகளாக கொண்டாடி மகிழ்வார்கள். வீடு முழுவதும் உற்றமும் உறவும் சேர்ந்து நிறைய மகிழ்ச்சியலைகள் நிரம்பி வழியும். பெரியவர்களின் ஆசிர்வாதங்கள், மரியாதையுடன் அதனை விரும்பி வேண்டி, அவர்களிடம் பெறும் பரிசுகள் என புதுமலராக பூத்துக்குலுங்கும் பண்டிகைகள். “மறு வருடம் இதே தினங்கள் என்று பூக்கும்?” என்ற மலரும் நினைவுகளோடும், “சென்ற வருடத்தை விட இந்த முறைச் சிறப்பாக இருந்தது.’! என்ற சந்தோஷமும் மனதை நிரப்ப, “இன்று நிறைவேறாத சிறுக்குறைகளை வரும் வருடம் அன்றைய தினத்தில் வட்டியும், முதலுமாய், அனுபவித்து விடுவோம்”. என்று மனதில் எதிர்பார்போடும், மறுபடியும் அந்தப் பண்டிகைக்காக காத்திருப்புக்கள்.! இப்படியாக அன்றைய நாட்கள் மகிழ்வோடு கழிந்தன.

ஆனால் இன்று எத்தனையோ வசதிகள் இருந்தும், நினைத்தால், பெரும்பாலும் கடனோ, உடனோ பட்டு எதையும் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையிருந்தும், காத்திருப்புகள்  இல்லை.! எதிர்பார்ப்புகள் இல்லை!  பண்டிகை என்று வந்தால், ஏதோ கடமைக்காக வரவேற்பது மாதிரி தோன்றுகிறது. விஷேடங்களின் சிறப்புக்கள் மனதை பாதிக்காத மாதிரி அனைவருமே அமைதியாக பண்டிகையா? வரட்டுமே!” என்ற வெகு சதாரணமான மனதுடன் அதை எதிர் கொள்வது மாதிரி ஒரு தோற்றம் ஏனோ உண்டாகி விட்டது. பண்டிகைகள் அன்றைய சந்தோஷங்களோடு, விரைந்து வந்து முகம் காட்ட தயக்கம் கொள்கிற பாவனையோடு, எங்கோ ஒளிந்து மறைந்து கொண்டிருக்கிற மாதிரியான தோற்றத்தை, மாறி வரும் காலங்கள்தான் நிர்ணயத்து அமைத்து விட்டனவா? என எண்ணத் தோன்றுகிறது.

நல்ல உடையிலிருந்து, நல்ல விதவிதமான உணவுகள் வரை, அவ்வப்போது போட்டுப் பார்த்து, உண்டு அனுபவிக்கிறோமே! இதை அந்தந்த பண்டிகையில்தான், உடுத்தி, சந்தோஷத்தித்து, சுவைப்பட சுற்றம் ௬டி, உண்டு அனுபவித்து, மகிழ வேண்டுமென்ற கட்டாயம் ஏதும் இல்லையே! என்பதினாலா? இல்லை,! பண்டிகைகளை சிறப்புற கொண்டாடிச் சிறப்பித்ததில் அந்த பண்டிகைகள் நிஜமாகவே போரடித்து விட்டதினாலா? இல்லை.! உற்றார் உறவுகள், காலச்சுழற்சியால், வாழ்வை நிலைப்படுத்தும், சுகப்படுத்தும் சந்தர்பங்களினால், “நீ எனக்கு என்ன முறை வேண்டும்? பார்த்துப் பேசி நாட்களாகி விட்டதல்லவா? யார் என்று சட்டென்று தெரியவில்லை?” என்று எப்போதோ, என்றோ நடக்கும் ஒரு திருமணத்திலோ, வேறு ஏதோ விஷேடங்களிலோ, சந்திக்கும் போது மட்டும் பேசிக்கொண்டு, பின் அது குறித்து அறவே மறந்து விடும் நிலையினாலா? இல்லை! வழிவழியாக அந்தந்தப் பண்டிகையின் தாத்பரியங்களை, அதன் நிகழ்வுகளின் கட்டாயத்தை காரண காரியங்களுடன், சொல்லி வழி நடத்துபவர்களை, நம் பயணங்களுக்கு நடுவிலேயே, அவர்களின் பாதை மாற்றி, அவர்களை நம் பெரும் வாழ்வின் சுமையெனக் கருதி, இல்லங்களின் வாசல்களில், இறக்கி விட்டு விட்டு ஓடும் அவசர வாழ்வினாலா? எதனால் பழைய அனுபவங்கள், மகிழ்வுகள் தவறுகின்றன? 

ஆனாலும், இன்றும், அன்றைய பழைய சந்தோஷ தருணங்களை நினைவு ௬றுவோர்கள், அந்நாளை மறக்க இயலாதவர்கள் என்றும்    இருப்பதால்தான், காலப்போக்கில் வரும் பண்டிகைகள் கால்வீசி தன்போக்கில் நடை பயின்று வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் சந்தோஷங்களை  என் நினைவலைகளில் தக்க  வைத்துக்கொண்டு  இதனூடேயே  நானும்  இன்னமும்  எத்தனை  ஆண்டுகளாயினும்  பழமை மாறாது  பயணிப்பேன்.! என்ற மனப்பான்மையோடு  தன்  சம்பிரதாயங்களை  மாற்றிக் கொள்ளாது  நம்மிடையே   இயந்திரமாக  உலாவி  வருகின்றன. அவற்றுடன் நாமும் இனி வரும் காலங்களில், பழைய மகிழ்ச்சியோடு, அதனை எப்போதும் மனதில் தேக்கி வைத்தவாறு அதனுடன் பயணிப்போமா?

என் மனதில் எழுந்ததை பகிர்ந்து கொண்டேனேயன்றி, அன்றைக்கும், இன்றைக்கும், அவனியில் மாற்றங்கள் பெரிதும் ஏதுமில்லை என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கும், வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும், என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! 
  
 அனைவருக்கும் என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.!!!!