Sunday, March 15, 2015

ஒரு தீயின் ஆரம்பம்.. (சிறுகதையின் பகுதி 2)

விதி எப்போதும், ஒரே மாதிரி பயணிப்பது இல்லையே! வாழ்க்கைப் பயணங்கள் தொடர்ந்து ஓட, இடையே. நாங்கள் மூவரும் ஆண் பிள்ளைகளாக பிறந்து வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை அம்மாவும் அப்பாவும் எங்களை வளர்க்க எவ்வளவு சிரமங்களை அனுபவித்தார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அப்பா நடத்திக்கொண்டிருந்த வியாபாரத்தில் ஓகோவென்றில்லாமல் ஓடிக் கொண்டிருந்த வண்டி திடீரென சண்டி மாடாய் படுத்ததும், குடும்பத்தை இழுத்துப்பிடித்து சாமாளித்து எப்படியோ எங்களை படிக்க வைக்கவும், வளர்க்கவும், இருவரும் சிரமங்களை அனுபவித்திருந்தார்கள். நல்ல நிலைமையில், ௬டியிருந்த உறவுகள், சிரமத்தின் முகம் கண்டு முகம் சுழித்துக் கொண்டதில் எங்களின் மனங்கள் சலித்துப்போயின. கடைசியில் இருக்கும் இந்த வீட்டைத் தவிர்த்து அப்பாவின் பங்கு என்றிருந்த சொத்துக்கள் சொல்லிக்கொண்டே விடைப்பெற்றன. அப்போதும் அம்மாவுக்கு உறவினர் வாஞ்சை விடவில்லை. பழைய நினைவுகளை அசை போட்ட வண்ணமே யிருந்தாள். உறவுகளின் குறை, நிறைகளை வேறுபடுத்தாமல், நிறைகளை மட்டும் குறிப்பிட்டு அந்நிகழ்வுகளில், தன்னை மறந்து ரசித்து வாழ்பவர்களில் அம்மாவுக்கு நிகர் அம்மாதான்.! எனத்தோன்றும் எனக்கு. ஆனால், அது என்னைத்தவிர கேட்பவர் எல்லோருக்கும் புளித்துதான் போயிற்று.

அண்ணன்களுக்கு  நல்ல இடத்தில் வேலைகள் கிடைத்து , குறைந்த இடைவெளியிலேயே, திருமணங்களும் நடந்து முடிந்தது. வந்த மருமகள்கள் எண்ணமோ,  இல்லை அண்ணன்களின் அடிமனது ஆசைகளோ, எதுவோ ஒன்று, அவரவர்கள் வேலையை சாக்கிட்டு தனியாகிப் போயினர். உறவுகள் மாதிரி இவர்களும் சிதறிப் போகிறார்களேயென்று அப்பா, அம்மாவுக்குத்தான் மிகவும் கவலையாய் போயிற்று.! வளர்த்த உறவுகளே வாழ்க்கை நிலையானதும், இவர்களின் உறவின் சுமூகத்தை மறந்த போது, பெற்ற உறவுகளும், அக்காடாவென்று, பிரிந்தது அம்மாவுக்கு சற்று பலத்த அடியாகத்தான் இருந்தது.! அப்பா சுலபத்தில் சமாளித்துக் கொண்டார். அம்மாவுக்குதான் அனைவரையும் அருகமர்த்தி பார்க்க கொடுப்பினை இல்லாமல் போயிற்றே?” என்று அதற்கு வேறு தனியாக விசனபட்டுக் கொண்டாள். அம்மாவின் அன்பை புரிந்து கொள்ளாமலே, அண்ணன்கள் தனியாகினரோ? என்று ஒரோர் சமயம்  எனக்கு ஐயம் எழ, அம்மாவிடம் அது பற்றி விவாதிக்கையில், “நாளைக்கு உனக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்தால் நீயும் அப்படித்தானே போய் விடுவாய் விச்சு !” குரல் உடைந்து சிதறினாலும்  ,அம்மா தான் யதார்த்தமாய் இருப்பதாக காட்டிக்கொள்ளும் பாவனையில், சற்று புன்னகைத்தவாறு பேச்சை மாற்றுவாள். இல்லையம்மா.! அதனால்தான் நான் திருமணமே வேண்டாமென்று இருக்கிறேன்.! நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.!” வார்த்தைகள் அவசரமாக என் வாயிலிருந்து விழுந்த நொடி அம்மா பதறுவாள். போடா! பைத்தியம்.! அப்படியெல்லாம் சொல்லாதே,! நல்ல வாழ்க்கையை அமைச்சுண்டு, ரொம்ப நல்லா வாழனும் நீ.! விச்சு, நீயாவது எப்போதும் எங்களோடையே இருக்கனும்.! என்று தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியபடி, என் தலையில் கை வைத்து ஆசிர்வதிப்பது மாதிரி சொல்லும் போது அவள் கண்களில் மழையென நீர் கொட்டும். அந்த சமயத்தில், அங்கு வார்த்தைகளின் சங்கமிப்பு  ஏதுமின்றி, கனமான சுமை சுழ்ந்த மெளனத்தில், “என் வார்த்தைகளை கோர்த்த நேரம் தவறோவென,” உள் மனம் சாட, அமைதியாய் அவள் கரம் பற்றி ஆசுவாசப்படுத்துவேன்.

டேய்.! விச்சு! சாதம் ஆறி அவலா போறது.! என்ன யோஜனை உனக்கு? சாப்பிட்டு கையலம்பு.! கையெல்லாம் ௬ட காய்ஞ்சு போச்சு பாரு.! அம்மாவின் சத்தத்துக்கு செவிமடுத்து சுய நினைவையடைந்தேன். அம்மா கட்டிலில் இருந்து எழுந்து சொல்லிவிட்டு சற்று இருமியபடி அப்பாடா.! என்று மீண்டும் படுத்துக்கொண்டாள். கடந்த இருதினமாக அவளுக்கு உடல்நிலை சரியில்லையென்றாலும், “ஏதோ இன்னைக்கு ரசமும், ௬ட்டுந்தான் வச்சிருக்கேன் விச்சு.! நாளைக்கு உடம்பு சரியாயிடும். நல்லபடியா சமைக்கிறேன். நாளைக்கு கொஞ்சம் ஜூரம் விட்டுடும்.! அப்பா ௬ட ஊரிலில்லை.! நாளைக்கு வந்துடுவார்.! அதனால்தான் கொஞ்சமா சமைச்சிருக்கேன்.” என்று முணுமுணுத்தபடி, தன் முன்னால் தட்டுவைத்து பரிமாறி சென்றிருந்த சாப்பாட்டை சுவைத்துக்கொண்டிருக்கையில், இதுஎன்ன பகல் கனவு? உள்மனதிலிருந்து இத்தனை எண்ணச்சிதறல்களா? அம்மாவின் பேச்சுக்களை இத்தனை நாள் ரசித்ததில், மனதில் தோன்றிய இந்த கற்பனைகாட்சி, கற்பனையாகவே போகாமல் நிஜமாக உறவுகள் அனைத்தும் அன்போடு ஒருநாள் ஒன்று ௬டி மகிழ்வுடன் இந்த வீடு நிறைத்தால், அம்மாவுக்குத்தான் எப்படி சந்தோஷமாக இருக்கும் என்று நினைத்தவாறு, மடமடவென்று உணவருந்தி, இடம்சுத்தம் செய்து இதைப்பற்றிச்சொல்லி அவள் சந்தோஷப்படுவதை பார்த்து ரசிக்கலாம் என்று அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தேன்.

ஏம்மா.! இத்தனை முடியால் இருக்குறச்சே, ஏன் சமையலெல்லாம் பண்ணினாய்.? நான் வந்தப்பறம், வெளியிலிருந்தாவது ஏதாவது வாங்கி வந்திருப்பேனில்லையா? உடம்பை சிரமபடுந்திண்டு ஏன் இப்படி.?” என் ஆதங்கத்தை புரிந்து கொண்டவளாய், “எனக்கு என்ன இப்போ? சாதாரண ஜூரந்தானே.! மாத்திரை போட்டுண்டாச்சு.! நாளைக்கு எழுந்திருக்க மாட்டேனா? எல்லாம் சரியாயிடும்.! நீ போய் படுத்துக்கோ! போ!” என்றவாறு அன்பாக என் கரத்தைப்  தொட்டவளின் கை நெருப்பாயிருந்தது. பதறி எழுந்தவன் அம்மாவை கட்டாய படுத்தி, கைதாங்கலாய் டாக்டரிடம் அழைத்துச் சென்று காண்பித்து, அவர் தந்த மருந்து மாத்திரைகளை தந்து, அம்மாவை இரவு முழுவதும்  கண் விழித்துக் கவனித்துக் கொண்டேன். என் பதற்றத்தைக்கண்டு அம்மா கேலி செய்தபடி, செல்லமாக கடிந்து கொண்டேயிருந்தவள், பாசமாய் என்னைப் பார்த்தபடியே,  மருந்தின் பலனாய் சற்று நேரத்தில் உறங்கிப் போனாள்.

மறுநாள் அப்பா வந்தும் ௬ட, சேர்ந்தாற்போல், நான்கு தினங்கள் அம்மாவால் எழ முடியவில்லை.! நான்கு நாட்களும் நானும் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு விட்டு,அப்பாவும், நானுமாக அம்மாவை சிரத்தையாய் கவனித்துக் கொண்டோம். அந்த உபசரிப்பில், அம்மா மிகவும் நெகிழ்ந்து விட்டாள். நீ எதுக்குடா இப்படியெல்லாம் ஆபீஸூக்கு போகாமே இப்படி வருத்திக்கிறே.! எனக்கு என்ன இப்போ! சாதாரண  ஜூரந்தானே.! இந்த வாட்டி ௬ட இரண்டு நாள் பாடாபடுத்துது! அதுக்கு இத்தனை ஆர்பாட்டம் பண்ணறியே!” என்று அம்மா ஈனஸ்வரத்தில் முடியாமல் முனகிக் கொண்டேயிருந்தாள். தனக்கு முன்பு இந்த மாதிரி உடம்புக்கு வந்திருந்தபோது, தன் அம்மா, அத்தை, மற்றும் உறவின் வழி யாரெல்லாம் எப்படி தன்னை பார்த்துக் கொண்டார்கள் என்று பட்டியலிட்டு சொன்னாள். அம்மா.! முடியாமல் அதிகம் பேசாதே.! நீயே உடம்புக்கு எது வந்தாலும் பாராட்டாமல் வேலைகளை செய்வாய்.! அது எங்களுக்கும் தெரிந்ததாயிற்றே.! இந்த வாட்டி கொஞ்சம் அதிகமா உனக்கு முடியலே! அதனாலேதான் நான் லீவு போட்டுண்டு உனக்குப்பண்றேன். நான் உனக்குப் பண்ணாமே வேற யாருக்கு செய்யப்போறேன். நீ அமைதியாய் ரெஸ்ட் எடு.! நாளைக்கு சரியாச்சுன்னா, நீ படுத்துக்கோன்னு சொன்னாலும் , ஒருவேலையும் செய்யாமே படுத்துக்கவா போறே.!” அன்புடன் அவள் தலையை கோதியபடி நான் சொன்னதும், அம்மாவின் விழி ஓரங்களில் கண்ணீர் முத்துக்கள் பிரசவமாயின. “எனக்கு யாருமே வேணாண்டா! நீயும் அப்பாவும், நான் கண்ணை மூடற வரைக்கும் , என் பக்கத்திலேயே……என்ற அம்மாவை மேற்க்கொண்டு பேச விடாது அவள் வாயைப் பொத்தினேன். “அம்மா! இப்போ எதுக்கு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறே.! நாம என்னிக்குமே சேர்ந்துதான் இருப்போம்.! நீ மனசை அலட்டிக்காமே தூங்கு.!” என்றதும் அமைதியாகி தூங்கவாரம்பித்த அம்மாவை பார்த்த போது, அவளின் வார்த்தைகள், தந்த வருத்தம் என் குரலினையும் அடைக்கச் செய்து, என் கண்களையும்  கலங்க செய்திருப்பதை உணர்ந்தேன்.
(தொடரும்...)

14 comments:

  1. அப்போ உறவுகள் வந்திருப்பதாய்க் கிடைத்த காட்சிகள் எல்லாம் விச்சுவின் கற்பனையா? என் அம்மா கூட உறவுகளின் பாஸிட்டிவ் சைட் மட்டுமே பேசுவார். சோகமுடிவு தரமாட்டீர்கள் என்று நம்புகிறேன்! :)))))))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே...

      உறவுகளின் நிறைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவர்களை பாராட்டும் தங்கள் அம்மாவின் நல்ல மனதிற்கும் ,அவர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்...நன்றிகள்..

      கதையின் முடிவு பற்றி... எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை...! வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் என்ற பக்கங்கள் சகஜந்தானே..என்ற எண்ணங்கள் தற்சமயம் ஏனோ தலைதூக்கி விட்டது.. எப்படியோ, தங்களைப் போன்ற பதிவர்கள் என் தளம் வந்து கருத்திட்டால், நிறைய எழுத வேண்டும் என நினைக்கும் இந்த சாதாரணமானவளின் எழுத்துக்கள் மென்மேலும் சிறப்படையும் என உறுதியாக நம்புகிறேன்..
      என் கருத்தினில் ஏதேனும் தவறிருந்தால் வருந்துகிறேன்...

      தொடர்ந்து வந்து கருத்திட வேண்டுகிறேன் சகோதரரே..நன்றி..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.


      Delete
  2. தீயின் கனல் கொதித்துக்கொண்டு போகிறது கூட்டுக்குடும்பத்தால் எல்லோருக்கும் நல்லது பலவகைகளில் உதவும் அது ஏனோ இன்றைய இளைய தலைமுறையினருக்கு விளங்கவில்லை. தொடர்கிறேன்...

    -கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே..
      நான் எழுதும் இந்தக்கதையை உடனடியாக படித்து கருத்திடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது..

      தாங்கள் ௬றுவது போல் ௬ட்டுக்குடும்பங்களின் மகத்துவம் இப்போது யாருக்கும் புரிவதில்லை. காரணம் தன் மனம்போனபடி செயலாற்ற ௬ட்டுக்குடும்பங்கள் தடையாய் இருப்பதாக நினைக்கிறார்கள்.மனக் கருத்துகள் எல்லோரிடமும் உடன்பாடோடு ஒத்து வருவதில்லை.. காலம் மாறிவருகிறது.. வேறு வழியில்லை! நாமும் அனைத்தையும் ஜீரணிக்க கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்த மனோபலத்தை இறைவனிடம் வேண்டுவோம்...

      தொடர்ந்து கருத்துக்கள் தந்திட வேண்டுகிறேன்...தங்களின் உடன் கருத்துக்கள் என் எழுத்தின் தரத்தை உயர்த்தும் என முழுமையாக நம்புகிறேன்...நன்றி..

      என்றும் நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. 1 மினிட்டில் நண்பர் ஸ்ரீராம் முந்தி விட்டாரே......

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..!

      \\ 1 மினிட்டில் நண்பர் ஸ்ரீராம் முந்தி விட்டாரே...//

      நான் எழுதிய கதைக்கு விரைந்து வரும் கருத்துக்கள் எனக்கு மன மகிழ்வை தருகிறது சகோதரரே.!

      தங்களைப் போன்ற சிறந்த பதிவர்களின் வருகையால், ஊக்கத்துடன் இனி நானும் நன்கு எழுத ஆரம்பிப்பேன் என்ற நம்பிக்கையும் என்னுள் எழுகிறது சகோதரரே..

      உங்கள் இருவருக்கும் என் பணிவான நன்றிகள்..

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. அவசரப்பட்டு தனிக்குடித்தனம் சென்றவர்கள் பலரும் ஒரு நாள் வேதனைப்படுவது உறுதி... வேதனையும் படுகிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே...

      தங்கள் கருத்து சரிதான்... வெய்யிலின் அருமை நிழலில்தானே தெரியும்.. அதை உணரும் போதுதான் தவறுகளும் புரியும்...

      தாங்கள் தொடர்ந்து வந்து கருத்திட்டால் மகிழ்வடைவேன்.. நன்றி.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்..

      Delete
  5. வணக்கம்

    கதையை படித்த போது மனம் கனத்து போனது... மனிதனாக பிறந்தால் தனது வாழ்வில் இன்பம் துன்பம் என்ற இரண்டு சிலுவையை சுமக்க வேண்டும்... எப்படி இருந்தாலும் தாய் பாசம்
    விட்டுக்கொடுக்க மனம் வராது... வாழ்க்கை என்றா வட்டம் அமைத்து விட்டால் எல்லாத்தையும் சகித்து நடப்பதுதான் மனித இயல்பு... தனி குடித்தனம் சென்றால் இப்படியா நிலை வருவது உறுதி... அருமையாக உள்ளது கதை தொடருங்கள் அடுத்த பகுதியை...


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே...

      தங்கள் கருத்துகள் முற்றிலும் சரி..தாய் பாசத்திற்கு எதையும் ஈடாக்க முடியாது.. விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு அனைவரும் வளர்த்து கொண்டால், குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை சுலபமாக கையாளலாம். ..

      தாங்கள் தொடர்ந்து வந்து கருத்திட்டால் மகிழ்வடைவேன்... நன்றி...

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அன்பும் பாசமும் மனதில் தழும்பி, நல்லதை மட்டும் நினைவில் கொண்டு அனைவருடனும் வாழ நினைக்கும் அம்மா...சற்று தாழ தூரம் விலகும் உறவுகள் நிதர்சனம்...உடல் நிலை..கவலைக்கிடம்...ஓ....

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி.!

    தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், என் பணிவான நன்றிகள் சகோதரி...

    தங்கள் கருத்துக்கள் உண்மையே... தொடர்ந்து வந்து படித்து உடனுக்குடன் கருத்திடுவது மனதிற்கு மகிழ்வை தருகிறது.சகோதரி.. நன்றி!

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. அம்மா.... அந்தப் பாசத்துக்கு இணை ஏது...
    தொடர்கிறேன்... பகுதி மூன்றை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.!

      தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், என் பணிவான நன்றிகள் சகோதரரே...

      தங்கள் கருத்து உண்மைதான்.. அம்மாவின் பாசத்திற்கு விலை ஏது? உலகில் மிகச் சிறந்தது தாய் பாசம் அல்லவா...

      பகுதி 3 ஐயும் தொடர்ந்ததற்கு என் உளம் கனிந்த நன்றிகள்...

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete