Thursday, November 24, 2022

இனிய அனுபவங்கள்.

 ரவா வெல்ல கேசரி புராணம்...


ஸ்ரீ விக்னேஸ்வரனே அனைவருக்கும் துணை

அருள் மிகும்  விநாயகர் இந்த தடவையும் என் பதிவில் இடம் பெற வந்து விட்டார். அதுவும் முன்னாடி பதிவிலேயே (கதைப் பதிவுக்கும், அதற்கடுத்த  முந்தைய பதிவுகளுக்கும்) தங்கள் விருப்பமாக கருத்துக்கள் சொன்ன  என் அன்பான சகோதர சகோதரிகளின் அன்பான வேண்டுகோளிற்கு இணங்கி வந்த அவருக்கு என் பக்தியுடன் கூடிய நமஸ்காரங்கள். 🙏. 

அவரை வரவழைத்த உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

இந்த பாம்பே ரவையை கேசரி செய்து சாப்பிட்டு எல்லோருக்கும், பழக்கந்தான்.. அதிலும் ஒரு ஆண், பெண் வாழ்க்கைப் பயணத்தில் அறிமுகமாகும் ஒரு நன்னாளில், இது இல்லாமல், இதன் அனுமதி இல்லாமல் அந்த காலத்தில் எந்த வித இனிப்பும் தலை காட்ட முடியுமா? போதாகுறைக்கு வாழைக்காய் பஜ்ஜியையும் இது துணைக்கு அழைத்துக் கொள்ளும். அதன் துணை இதற்கு ஒரு வாழ்க்கைத்துணை மாதிரி. பெயர் பொருத்தமும் பஜ்ஜி ஜொஜ்ஜி என இணையாகவும், பொருத்தமாகவும்  வைத்துக் கொண்டபடி அனைவரும் அவரவர் வாழ்க்கைத்துணை களை தேர்ந்தெடுக்கும் சமயங்களில் இதன் உலா அக்காலத்தில்  தொடரத்தான் செய்தது. ஆனால், காலங்கள் மாற மாற வேறு இனிப்புகள், காரங்கள் இதன் இடத்தைப்பிடித்து இவைகளின் அதிருப்தியை சம்பாதித்து கொண்டன. அதன் பின்னும் வந்த காலத்தில், ஒரு காப்பி, டீ, ஏதாவது பழ ஜூஸ், இல்லை வெறும் தண்ணீர் என்ற காலங்கள் மாறி, மேற்படி பையனும், பெண்ணும் உயர்தர உணவகத்தில் விலையுயர்ந்த ஒரு காஃபியை வாங்கி சிறிது சிறிதாக நீண்ட நேரம் அருந்தி, பெரிது பெரிதாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி அலசி ஆராய்ந்து, தங்கள் ஒப்புதல்களை பெரியவர்களுக்கு தரும் நாளை தீர்மானித்து, முடிவில் சேர்ந்தோ, அல்லது விலகியோ போகும் நவநாகரீக காலங்கள் என்று இப்போது வந்த பின் இந்த ரவை கேசரி வெட்கி தலைகுனிந்து இந்த சுபமான வைபவங்களுக்குள் கலந்து கொள்ளாமலே விலகி விட்டதோ என நான் நினைக்கிறேன். (தப்பித்தவறி இதற்கு இருந்த மதிப்பு இன்னமும் அநேக இடங்களில் நிலையாக இருந்தால், இதைப்பற்றி  இப்படி எழுதும் என்னை மன்னித்து விடுமெனவும் ஆணித்தரமாக நம்புகிறேன். :)))) ஏனென்றால் ரவா கேசரி எங்களுடைய பிடித்தமான உணவு. முன்பு நாங்கள் குழந்தைகளுடன் சேர்ந்திருந்த போது, சனி ஞாயறுகளில், மாலை ஏதாவது ஒரு காரமான ஸ்நாக்ஸாக வடை, பஜ்ஜி உ. கி. சேர்த்தோ , இல்லை உளுந்து போண்டா, குணுக்கு போன்றவற்றையோ செய்யும் போது இனிப்பான இது எங்களை மறக்காது அடிக்கடி இதுவும் வந்து உடன் சேர்ந்து கொள்ளும். ) 

எனக்கு தெரிந்து எனக்கும் சரி, என்னை சார்ந்த  என் இனிய சுற்றங்களுக்கும் இந்த ரவை கேசரி படலம் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தின் முதலாவதாக தொடர்ந்தது . சென்னையிலிருந்து  என் கணவர்  என்னை பெண் பார்க்க வரும் போது காலை நேரம். பத்து பதினொன்று என அந்த நேரத்தில் கேசரியும், பஜ்ஜியும் அத்தனை பேருக்கும் முன்னால் அமர்க்களமாக அணிவகுத்து நின்றன. இத்தனைக்கும் காலை சீக்கிரமாகவே எழுந்து காலை டிபனை (வழக்கப்படி இட்லிதான்) முடித்து விட்டு வீட்டிலிருந்த நாங்கள் அனைவரும்  காத்திருந்தோம். அவர்களும்  (அவர்கள் அக்கா வீட்டிலிருந்து) காலை டிபனை முடித்து விட்டு வந்திருந்தார்கள். பெண் பார்க்கும் வைபவங்கள் முடிந்த பின் பெரியவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் முடிந்ததும், உடனே மாலை நிச்சயதார்த்தம் என முடிவானது. ஏனென்றால் அப்போது சென்னையிலிருந்து அடிக்கடி வந்து போவது கொஞ்சம் கடினம். அவர் அலுவலகத்தில் அடிக்கடி விடுமுறையும் எடுக்க இயலாது என்பதினால், பெரியவர்கள் கலந்தாலோசித்து இந்த அவசர முடிவு. 

அன்றைய மாலைக்குள் எங்கள் அம்மா (அப்போதெல்லாம் யாரையும் உடனடியாக சமையலுக்கு அழைக்கும் வசதி கிடையாது) வடை பாயாசத்துடன் இனிப்பு வகைகளையும் செய்து சமையலையும்  (அதுவும் நவீன வசதிகள் ஏதுமற்ற சூழ்நிலைகளில் ) தடபுடலாக முடித்து நிச்சயதார்த்தத்திற்கு மனையிலும் அப்பாவுடன்  வந்தமர்ந்தார். அதற்குள் வாத்தியார் ஏற்பாடு, பிற வேலைகள் என அப்பாவும், அண்ணாவும் மன்னியும் பயங்கர பிஸி. வீட்டிலேயே நடைபெற்ற அந்த அவசர விழாவுக்கு அக்கம் பக்கம் உறவினர்கள், தெரிந்தவரகள் என நிறைய பேர்களை விழாவில் கலந்து கொள்ளவும் , சாப்பிடவும்,  அழைத்திருந்தோம் .மாப்பிள்ளை வீட்டை சார்ந்தவர்கள் பத்து பேர்களுக்கு மேல் வந்திருந்தனர். மனையில் வைக்க சீர்  பட்சணங்களும் (அதை முதல்நாளே நிச்சயதார்த்திற்கென அம்மா, பாட்டி செய்து வைத்து விட்டார்கள். "என்னம்மா இது  இன்னும் முதல்படியிலேயே கால் பதியவில்லை... அதற்குள் இரண்டாவது படி மேல் காலை வைக்க முயற்சி செய்கிறாயே" என நாங்கள் கேட்டும், அம்மாவுக்கு  என்னவொரு அசைக்க முடியாத நம்பிக்கை....!! "சுபமஸ்து எல்லாம் நல்லபடியாக நடந்து விடும்.. அப்படியில்லையென்றால், நமக்கு இதையெல்லாம் சாப்பிட வாய் இல்லையா என்ன?" என்று உறுதியுடன் பதிலளித்து விட்டு மாலாடு, ரவாலாடு, தேன்குழல், திரட்டுப்பால் என எல்லாம் வகையாக செய்து விட்டார்.)  தயார் நிலையில் இருந்தன. 

இத்தனை பேருக்கும் சமையல், வீட்டிலுள்ள எங்களுக்கு காலை டிபன், பின் இடையில் வந்தவர்களுக்கும் இனிப்பு காரத்துடன் டிபனும் (இட்லிகளும்) என பரபரப்புடன் அவர்கள் (எங்கள் அம்மாவும், பாட்டியும். ) விடாமல் செய்ததை என்னால் இன்னமும் மறக்க இயலாது. இப்போது உள்ளவர்களால் இப்படி தனியாக அத்தனையும் செய்யவே இயலாது. நல்லவேளை...! என் முதல் பெண் பார்க்கும் படலத்துடன் அத்தனையும் சுபமாக முடிந்தது. மேலும் நிறைய தடவைகள் இந்த பஜ்ஜி கேசரி சிரமங்களை என் பெற்றோருக்கு நான் தர வைக்கவில்லை அந்த இறைவன். 

திருமணமாகி எங்களுக்கு குழந்தைகள் பிறந்த காலத்திற்கு பின் என் புகுந்த வீட்டின் ஒரு சுற்றத்திற்காக  ஒரு இடத்தில் பெண் பார்க்கும் படலத்திற்கு சென்றிருந்தோம்பெண் வீட்டுக்காரர்கள்  ஏற்கனவே எனக்கு மிகவும்  அறிமுகமானவர்கள். (அக்கம்பக்கமாக ஒரு இடத்தில் முன்பு ஒரு சமயம் நாங்கள் குடியிருந்ததில் ஏற்பட்ட  நெருங்கிய நட்பு) நாங்கள் உறவு என கூட்டமாக அவர்கள் வீட்டுக்கு பெண் பார்க்கப் போனதோ கிட்டத்தட்ட பத்து பதினைந்து பேர். அத்தனை பேருக்கும் அவர்கள் சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜிகள், நெய் சொட்ட கேசரி என அமர வைத்து போதும் போதுமென தடுத்தும் அன்போடு விடாப்பிடியாக பறிமாறினார்கள். பிறகு நல்ல பெரிய டம்ளர்களில் காஃபி. மயங்கி கீழே விழாத குறையாக சாப்பிட்ட (சாப்பிட வைத்தார்கள்) பிறகு பெண் பார்க்கும் படலம் முடிந்தது. 

அந்தப் பெண்ணை நான் ஏற்கனவே பல தடவைகள் பார்த்து பேசியுள்ளேன். ஆனால், மாப்பிள்ளை உறவுகள்  அப்போதுதான் பார்க்கிறார்கள். இறுதியில் வீட்டுக்கு வந்ததும் அந்தப் பெண் வேண்டாமென மாப்பிள்ளை பையன்  சொன்னதும் எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. (அடாடா.. அவர்கள் வீட்டில் அன்று  தின்றதிற்காகவாவது ஒத்துக்கொள்ள கூடாதா? என்று என் மனதிற்குள் அந்தப்பையனிடம் பல முறை கேட்டு கேட்டு அலுத்து விட்டேன்.) என்னசெய்வது? "இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று" என்ற மாதிரி பிறக்கும் போதே இதையெல்லாம் முடிப் போட்டல்லவா இறைவன் அனுப்பி வைக்கிறான். 

பெண் வீட்டுகாரர்களுடன் அநநிகழ்வுக்குப் பின்னும் நான் பேசி பழகினேன். எனக்குத்தான்  சங்கடமாக இருக்கிறதென்று  வருத்தமாக அவர்களிடம்  சொல்லும் போதெல்லாம் அவர்கள்தான்" "இது எல்லாம் உலகில் சகஜந்தான்" என என்னை சமாதானபடுத்துவார்கள். அவர்களின் நல்ல மனதை எண்ணி நானும் அவர்களுடன் எப்போது பேசும் போதும் வியந்திருக்கிறேன். இன்று அந்தப் பையனுக்கும், பெண்ணிற்கும் வெவ்வேறு இடங்களில் திருமணமாகி நலமாக, வளமாகத்தான் இருக்கிறார்கள். இதைதான் "இறைவன் செயல்" என்கிறோம். 

அட......! இன்னமும் இவர் தலைப்புக்கு வரவில்லையே...!  என நீங்கள் எண்ணலாம். நான் இப்போது ஒரு தினம் இதைச் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் போட்டு செய்தேன். கடவுளுக்கும் நேவேத்தியமும் செய்யலாம். சர்க்கரை சேர்க்கக் கூடாத என்னைப் போன்றவர்களும் இது மாதிரி செய்தால் கொஞ்சம் (கொஞ்சந்தான்) சாப்பிடலாம் என்ற நினைப்பில் வெல்லம் சேர்த்து செய்தேன். 

இதைப் பகிர நினைக்கும் போது, இந்த கேசரி  சம்பந்தபட்ட நிறைய புகைப்படங்களை நான் எடுக்கவே இல்லையே என்ற நினைவு வந்தது. அதனால், என் மனதின் எண்ணங்களும் ரவையோடு சேர்ந்த வெல்லமாய் உடன் கலந்து  பதிவாக வந்து விட்டது. ரவையின் அளவுடன் கண்ணளவாக வெல்லம் கரைத்து வடிகட்டி சேர்த்து கிளறும் போது நெய்யும் சேர்த்து நன்றாக வந்த இந்த வெல்ல கேசரியை நீங்களும் கொஞ்சம் எடுத்து சுவைக்கலாமே.. மேலும் மு. ப. , ஏலப்பொடி போட்டவைகளை படங்கள் எடுக்கவேயில்லை.அதறகாக என்னை மன்னிக்கவும். ஆனாலும் சுவையாக வந்த கேசரிக்காக நீங்கள்  அனைவரும் இந்தப் பதிவையும் படிப்பீர்கள் என அன்புடன் நம்புகிறேன். உங்களனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 


   
வெல்ல கேசரியையும், என் சுவையான  அனுபவ எண்ணங்களையும் முறையே பார்த்து படித்து ரசித்தமைக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் அன்பான நன்றி... 🙏.. .

இது இப்போது எங்கள் வீட்டின் சின்னக் குழந்தைகளுக்காக கிளறிக் தந்த ரவா ஜீனி கேசரி. நான் வெல்ல கேசரி பதிவை எழுதி முடித்ததும் அதற்குப்போட்டியாக இதுவும் வந்து விட்டது.



குழந்தைகளுக்கு மு. ப. உடைத்து வறுத்துப் போட்டால் அது அவ்வளவாக அவர்களுக்கு பிடிக்கவில்லை. தனியே எடுத்து வைத்து விடுகின்றனர். அதனால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வறுத்து இறுதியில் ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இதையும் கேசரியுடன் கலக்க  வைத்திருக்கிறேன். 


பதிவை படித்து இரண்டு விதமான கேசரிகளை எடுத்துச் சுவைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. 🙏. . 

Wednesday, November 9, 2022

மனதினுள் கடத்தல்.

 
நம்மையும் மீறி ஒரு சக்தி இயங்கி கொண்டிருப்பதை உலகம் தோன்றியதிலிருந்து நாம் உணர்ந்து கொண்டுதான் வருகிறோம்.அதை  நமக்கு பிடித்தமான கடவுள்கள் பெயர் சொல்லி அழைப்பதோடு மட்டுமில்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை தந்து விட்டால். பதிலுக்கு உனக்கு அதை தருகிறேன்.. இதை தருகிறேன்.. என்று வியாபார நோக்கோடு பேச்சு வார்த்தையும் நடத்திக் கொள்கிறோம்.

 ஆனால், உண்மையில் நம்மிடம் எதையும் எதிர் நோக்காத தாயன்பு கொண்டவன் இறைவன். அவன் நம்மிடத்தில் விருப்படுவனவெல்லாம் ஆழமான பக்தி, அசையாத நம்பிக்கை அவ்வளவுதான்.!
மாதா, பிதா, குரு,.தெய்வம்  என்று நாம் வரிசை படுத்துவதில், எல்லாவற்றிலும் அவனே முதன்மையானவனாக ஆகிறான். 

===============================================================================  "தாயினும் சாலப் பரிந்து" என்றவிடத்தில் அவன் தாயினும் மேலாகிறான். 

"அன்னையாகி. தந்தையாகி," என்று சொல்லும் போது அன்னையுடன், தந்தையும் அவனேயாகி நம்மை காக்கும் அனைத்துப் பொறுப்பையும் சுமக்கிறான். 

"எழுத்தறிவித்தவன் இறைவனாவான்," என்னுமிடத்திலும்  இறைவன் தன்னிருப்பிடத்தை மெய்ப்பிக்கிறான். 
  
"இறுதியில் தெய்வமாக" நின்று  நமக்கு வேண்டியதை நம் பாப புண்ணிய கணக்கோடு நமக்கு பகிர்ந்தளிக்கிறான்
================================================================================ இப்படி நான்கு நிலைகளிலும் நம்முடன் உறவாடுபவனிடம், வியாபார யுக்தியோடு, நாம் செயல்படுவது சரியா? இறைவனை கண் முன் கண்ட பல மஹான்கள் பக்தி மலர் கொண்டு மட்டுமே பூஜித்தார்கள். அந்தந்த பிறவிகளில் அவர்கள் அவ்வாறிருக்க, அதற்கு முந்தைய  பிறவிகளில் எத்தனை நல்ல சத்சங்க பலன்களுடன் தவமியற்றினார்களோ? 

சமய குரவர் நால்வரும், ஆழ்வார்கள் பன்னிருவரும், அறுபத்து மூன்று  நாயன்மார்களும், இன்னமும் அத்தனை மஹான்களும், ஆன்மிகம் கண்ட பல பெரியவர்களும், ஆண்டவனிடம் எதையும் எதிர்பார்க்காமல், பக்தி மட்டும் கொடுத்து பதிலுக்கு  எதையும் வேண்டா நிலையில் அடி பணிந்தார்கள். இவர்களை படித்தாவது இனி வரும் பிறவிகளில் கரை சேரும் எண்ணஙகளை வளர்த்துக் கொள்ளலாம் என்றால்,  அது ஒரு துளியேனும் சாத்தியபடுவதற்கு  ஒரு பொழுதேனும் சம்மதிக்க மறுக்கிறது.  

காரணம்... நம் மனம். 

 நம் மனதில் பரிபூரணமாக குடி கொண்டிருக்கும்  கடவுள் நம் அன்பு கடத்தலில் "உள்கட"ந்து பயணித்து நம்மை பூரணமாக அரவணைத்துக் கொள்வார். . ஆனால்  அவர் கடக்கும் பாதையை செப்பனிடாமல்  சேறும் சகதியுமாக (ஆசா பாசங்கள்) கற்களும், முட்களுமாக (சுயநலம், குரோதங்கள்) வைத்திருக்கிறோமே என எண்ணுகிறேன். இவைகளை சுத்தம் செய்து விட நேரத்தை எதிர் நோக்கும் போது,  மேலும் மேலும், ஆசாபாசங்களை கொண்டு குழைத்தெடுத்த சேறும், சகதியுமாக ஆகிறது மனம்...!! இதையும் இந்தப் பிறவியில்  இறைவன்தானே இவ்வாறு அருளுகிறார் என நினைக்கும் போது, இந்தப் பிறவியிலும்  நல்வழிபடுத்த "அவன்"ஆயுத்தம் ஆகவில்லை என்ற அப்பட்டமான உண்மையும் புலப்படுகிறது. 

மஹான்களில் எனக்கு ஸ்ரீ ராகவேந்திரின் வாழ்க்கை வரலாறு மிகவும் பிடிக்கும். ஸ்ரீ ராகவேந்திரர்  பற்றை தொலைத்து இறைவனிடம அன்பை மட்டுமே கொடுத்து பதிலுக்கு எதையும் எதிர்நோக்காத  உள்ளத்துடன் அவனுடன் ஐக்கியமானார்.  ராக வேந்திரர் திரைப்படத்தில் வரும் "அழைக்கிறான் மாதவன்" என்ற இந்த பாடல், மனம் கசிந்துருகி கண்ணீரோடு அடிக்கடி கேட்பேன். இந்தப் பாடல் இடம் பெற்ற இப்படத்தில் ஸ்ரீ ராகவேந்திரராக நடித்த நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள், அவரால் இயன்ற வரை ஸ்ரீ ராகவேந்திரரை நம் கண் முன் கொண்டு வந்து தந்துள்ளார். பாடகர் திரு. யேசுதாஸ் அவர்களின் குரலினிமை, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும், உள்ளத்தை கரைந்துப் போகும்படி செய்கிறது. 



இந்த பாடலில்  வருவது போல் "அவன் அழைக்கின்றான் "என்பதை உணரும் சந்தர்ப்பம்  உண்டாவது எந்த பிறவியிலோ? 
அழைத்தால் வருகிற இயல்புடையவன் ஆண்டவன்.  ஆனால்  வரவேற்று அணைத்துக்கொள்ளும் பக்குவம் வராத போது, அவன் அழைப்பிற்கான நேரத்தையாவது  எதிர் நோக்கி கொண்டிருக்கும் அந்த சமயம் , வாய்ப்பதாவது எப்போதோ

ராகவேந்திரர் இறையோடு ஐக்கியமாகி அருளுகின்ற "மந்திராலயம்" செல்லும் வாய்ப்பு  ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை எவ்விதமான பிரயாண முன்னேற்பாடுமின்றி தீடீரென எங்களுக்கு கிடைத்தது எங்களது பெரும் பாக்கியமே! அதை என் வாழ்வில்  என்றுமே மறக்கவே இயலாது. 


படங்கள் நன்றி கூகுள். 

"
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காம தேனவே". 🙏. 

பின்வரும் கதையை படிக்க நேர்ந்தது எனக்கு இந்த நினைவுகளை மீட்டு இந்த பதிவை உருவாக்க வைத்தது. எனது பதிவையும், நான் படித்த இந்தக் கதையையும் படிக்கும் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 


கடவுளுக்கு பலி.
"""""""""""""""""""""''""""""""'
குயவன் ஒருவன் பானைகளைச் செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள், குடங்கள், சட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன.

அவன் அருகில் ஓர் ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தன. அவ்வப்போது அது 'மே..மே..' என்று கத்திக் கொண்டிருந்தது.

வயதான மகான்  ஒருவர் மெல்ல நடந்து அங்கே வந்தார். குயவன் பானை செய்வதைப் பார்த்தபடியே தரையில் அமர்ந்தார்.

வந்தவருக்கு ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் அந்தக் குயவன். அதை வாங்கிக் குடித்த குரு, .... "இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?" என்று கேட்டார்.

"இல்லீங்க, சாமி. இது ஏதோ காட்டாடு. இந்தப் பக்கமாக வந்தது. பிடித்துக் கட்டிப் போட்டேன்!" என்றான் குயவன்.

"எதற்காக? என்று கேட்டார் குரு."

"பண்டிகை வரப்போகிறதே!  இறைவனுக்கு  பலி கொடுக்கலாமென்று தான்...." என்று இழுத்தான் குயவன்.

"பலியா?" குரு வியப்புடன் வினவினார்.

"ஆமாம், சாமி. தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்."

இதைக் கேட்ட குரு எழுந்தார். தன் கையிலிருந்த மண் பானையை ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் திகைத்து நின்றான். துறவியை வெறித்துப் பார்த்தான்.

துறவி நிதானமாகத் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

"என்ன இது?" என்றான் குயவன் கோபமாக.

"உனக்குப் பிடிக்குமே, அப்பா?" என்றார் குரு.

" என்ன உளறுகிறீர்கள்?" குயவன் குரலில் உஷ்ணம் தெறித்தது. "என்னுடைய பானையை உடைத்து அடுக்கி என்னிடமே நீட்டுகிறீர்கள். இது எனக்குப் பிடிக்கும் என்று வேறு சொல்கிறீர்கள். கேலியா? கிண்டலா? வம்புக்கு இழுக்கிறீர்களா? அல்லது உங்களுக்குப் பித்தா?" என்று ஆத்திரப்பட்டான்.

"அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன் ". குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

"நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?"

"நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டுச் சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? " குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

இறைவனிடம் என்ன இல்லை? உன்னிடம் என்ன உண்டு?  அவர் எதை கேட்கிறார்? எதை நீ அளிப்பாய்?

அவன் படைத்த 'உலகில், அவன் படைத்த நீ, அவன் படைத்த பொருட்களை அவனுக்கே படைப்பாயா?

இறைவனுக்கு நான் அதைச் செய்தேன். இதைச் செய்வேன் என்பதும், பதிலுக்கு அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான் என்பதும் வெறும் ஆத்ம வஞ்சனையே!

எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணரமுடியும். தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும்.
"அன்பு மலர் எடுத்து அனுதினமும் பூசை செய்வாய்"... இப்படி நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்....

நான் படித்ததில் பிடித்த இக்கதையில் வருவது போல் இறைவன் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. நம்முடைய ஆசைதான் வேண்டுதலாக மாறி, சமயத்தில் பிறரையும், எப்போதும் நம்மையுமே கஸ்டபடுத்துவதாகவே அமைகிறது.

 குருவருள் அனைவருக்கும்  துணையாக  இருக்க இன்றைய வியாழனில் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏. 

Saturday, November 5, 2022

துளசி அம்மன் திருக்கல்யாணம்



இன்று துளசி கல்யாணம். இன்று துளசி தேவியை தொழுது  பணிபவர்களுக்கு என்றும் மங்கலம் தரும் நாள். ஸ்ரீ மன்நாராயணரின் பூஜைக்கு அனேக மலர்களுடன் என்றுமே உகந்தது துளசி தளங்கள்தாம்.  அவரை பூஜிக்கும் போது ஒரு துளசி இலை அந்த பூஜைக்குரிய பொருட்களில்  இல்லையென்றாலும் பெருமாளின் பூஜா கைங்கரியங்கள் நிறைவை அடையாது. 

இன்று ஸ்ரீமன்நாராயணன் அன்னை மஹாலக்ஷ்மியின் தங்கையான அன்னை துளசி தேவியை திருமணம் செய்து கொண்டு அவரை தன்னுடன் இணைத்துக் கொண்ட நாள். துளசி தேவியின் தவம் பூர்த்தியடைந்த நாள்.பெருமாள்  கோவில்களில் மட்டுமின்றி நம் வீடுகளிலும் நாம் அன்னை துளசியுடன், நாராயணரையும் வழிபட்டு பலன்கள் யாவயையும் பெற வேண்டும். 

இது எல்லோரும் விபரமாக அறிந்ததுதான். அனைவரும் ஒவ்வொரு வருடமும் நியமங்களுடன் பூஜித்தும் வருவதுதான். இருப்பினும் என் பதிவிலும் இன்று அன்னையை பணிவுடன் வணங்கி போற்றும் அருளை அந்த நாராயணன் தந்தமைக்கு அவன் தாளிணையில் பல கோடி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். அவன் அருள் என்றும் நம் அனைவருக்கும் கிடைத்திட சதா சர்வகாலமும் அவனை பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். 🙏. 

ஸ்ரீ துளசியம்மா ஸ்தோத்திரம். 

ஸ்ரீமத் துளசி அம்மா திருவே கல்யாணியம்மா

வெள்ளி கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே

செவ்வாய்க்கிழமை தன்னில் செழிக்க வந்த செந்துருவே

தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன் 

பச்சை பசுமையுள்ள துளசி நமஸ்தே

பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே

அற்ப பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே

அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே 

ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே

அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே

வன மாலை என்னும் மருவே நமஸ்தே

வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே 

அன்புடனே நல்ல அரும் துளசி கொண்டு வந்து

மண்ணின் மேல் நட்டு மகிழ்ந்து நல்ல நீரூற்றி

முற்றத்தில் தான் வளர்த்து முத்து போல் கோலமிட்டு

செங்காவி சுற்றும் இட்டு திருவிளக்கும் ஏற்றி வைத்து 

பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து

புஷ்பங்களை சொரிந்து பூஜித்த பேர்களுக்கு

என்ன பலன் என்று ஹ்ருஷிகேஷர் தான் கேட்க

மங்களமான துளசி மகிழ்ந்து தானே உரைப்பாள் 

மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்

தீவினையை போக்கி சிறந்த பலன் நான் அளிப்பேன்

அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்

தரித்திரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன் 

புத்திரர் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் நான் அளிப்பேன்

கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரை கூட்டுவிப்பேன்

க்ரஹஸ்தர் என்னை பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழ வைப்பேன் 

முமுஷுகள் என்னை பூஜை செய்தால் மோக்ஷ பதம் நான் கொடுப்பேன்

கோடிக் காராம் பசுவை கன்றுடனே கொண்டு வந்து

கொம்புக்கு பொன் அமைத்து குளம்புக்கு வெள்ளி கட்டி

கங்கை கரை தனிலே கிரகண புண்ய காலத்தில்

வாலுருவி அந்தணர்க்கு மகா தானம் செய்த பலன்

நாள் அளிப்பேன் சத்தியம் என்று நாயகியும் சொல்லலுமே

அப்படியே ஆகவென்று திருமால் அறிக்கை இட்டார்

இப்படியே அன்புடனே ஏற்றி தொழுதவர்கள்

அற்புதமாய் வாழ்ந்திடுவார் மாதேவி தன் அருளால். 

🙏. ஓம்.. தத். ஸத். பிரம்மார்ப்பிதம்.. 🙏. 

அனைவரும் அன்னையின் அன்பான அருள் பெற்று நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக  வாழ்ந்திட அன்னையை இந்த ஸ்லோகம் பாடி நமஸ்கரித்து கொள்கிறேன். 🙏.