Wednesday, February 13, 2019

மனதினுள் கடத்தல்.

 
நம்மையும் மீறி ஒரு சக்தி இயங்கி கொண்டிருப்பதை உலகம் தோன்றியதிலிருந்து உணர்ந்து கொண்டுதான் வருகிறோம்.அதை  நமக்கு பிடித்தமான கடவுள்கள் பெயர் சொல்லி அழைப்பதோடு மட்டுமில்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை தந்து விட்டால். பதிலுக்கு உனக்கு அதை தருகிறேன்.. இதை தருகிறேன்.. என்று வியாபார நோக்கோடு பேச்சு வார்த்தையும் நடத்திக் கொள்கிறோம்.

 ஆனால், உண்மையில் நம்மிடம் எதையும் எதிர் நோக்காத தாயன்பு கொண்டவன் இறைவன். அவன் நம்மிடத்தில் விருப்படுவனவெல்லாம் ஆழமான பக்தி, அசையாத நம்பிக்கை அவ்வளவுதான்.!
மாதா, பிதா, குரு,.தெய்வம்  என்று நாம் வரிசை படுத்துவதில், எல்லாவற்றிலும் அவனே முதன்மையானவனாக ஆகிறான். 

===============================================================================  "தாயினும் சாலப் பரிந்து" என்றவிடத்தில் அவன் தாயினும் மேலாகிறான். 

"அன்னையாகி. தந்தையாகி," என்று சொல்லும் போது அன்னையுடன், தந்தையும் அவனேயாகி நம்மை காக்கும் அனைத்துப் பொறுப்பையும் சுமக்கிறான். 

"எழுத்தறிவித்தவன் இறைவனாவான்," என்னுமிடத்திலும்  இறைவன் தன்னிருப்பிடத்தை மெய்ப்பிக்கிறான். 
  
"இறுதியில் தெய்வமாக" நின்று  நமக்கு வேண்டியதை நம் பாப புண்ணிய கணக்கோடு நமக்கு பகிர்ந்தளிக்கிறான்
================================================================================ இப்படி நான்கு நிலைகளிலும் நம்முடன் உறவாடுபவனிடம், வியாபார யுக்தியோடு, நாம் செயல்படுவது சரியா? இறைவனை கண் முன் கண்ட பல மஹான்கள் பக்தி மலர் கொண்டு மட்டுமே பூஜித்தார்கள். அந்தந்த பிறவிகளில் அவர்கள் அவ்வாறிருக்க, அதற்கு முந்தைய  பிறவிகளில் எத்தனை நல்ல சத்சங்க பலன்களுடன் தவமியற்றினார்களோ? 

சமய குரவர் நால்வரும், ஆழ்வார்கள் பன்னிருவரும், அறுபத்து மூன்று  நாயன்மார்களும், இன்னமும் அத்தனை மஹான்களும், ஆன்மிகம் கண்ட பல பெரியவர்களும், ஆண்டவனிடம் எதையும் எதிர்பார்க்காமல், பக்தி மட்டும் கொடுத்து பதிலுக்கு  எதையும் வேண்டா நிலையில் அடி பணிந்தார்கள். இவர்களை படித்தாவது இனி வரும் பிறவிகளில் கரை சேரும் எண்ணஙகளை வளர்த்துக் கொள்ளலாம் என்றால்,  அது ஒரு துளியேனும் சாத்தியபடுவதற்கு  ஒரு பொழுதேனும் சம்மதிக்க மறுக்கிறது.  

காரணம்... நம் மனம். 

 நம் மனதில் பரிபூரணமாக குடி கொண்டிருக்கும்  கடவுள் நம் அன்பு கடத்தலில் "உள்கட" ந்து பயணித்து நம்மை பூரணமாக அரவணைத்துக் கொள்வார். . ஆனால்  அவர் கடக்கும் பாதையை செப்பனிடாமல்  சேறும் சகதியுமாக (ஆசா பாசங்கள்) கற்களும், முட்களுமாக (சுயநலம், குரோதங்கள்) வைத்திருக்கிறோமே என எண்ணுகிறேன். இவைகளை சுத்தம் செய்து விட நேரத்தை எதிர் நோக்கும் போது,  மேலும் மேலும், ஆசாபாசங்களை கொண்டு குழைத்தெடுத்த சேறும், சகதியுமாக ஆகிறது மனம்...!! இதையும் இந்தப் பிறவியில்  இறைவன்தானே இவ்வாறு அருளுகிறார் என நினைக்கும் போது, இந்தப் பிறவியிலும்  நல்வழிபடுத்த "அவன்" ஆயத்தம் ஆகவில்லை என்ற அப்பட்டமான உண்மையும் புலப்படுகிறது. 

மஹான்களில் எனக்கு ஸ்ரீ ராகவேந்திரின் வாழ்க்கை வரலாறு மிகவும் பிடிக்கும். ஸ்ரீ ராகவேந்திரர்  பற்றை தொலைத்து இறைவனிடம அன்பை மட்டுமே கொடுத்து பதிலுக்கு எதையும் எதிர்நோக்காத  உள்ளத்துடன் அவனுடன் ஐக்கியமானார்.  ராக வேந்திரர் திரைப்படத்தில் வரும் "அழைக்கிறான் மாதவன்" என்ற இந்த பாடல், மனம் கசிந்துருகி கண்ணீரோடு அடிக்கடி கேட்பேன். இந்தப் பாடல் இடம் பெற்ற இப்படத்தில் ஸ்ரீ ராகவேந்திரராக நடித்த நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள், அவரால் இயன்ற வரை ஸ்ரீ ராகவேந்திரரை நம் கண் முன் கொண்டு வந்து தந்துள்ளார். பாடகர் திரு. யேசுதாஸ் அவர்களின் குரலினிமை, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும், உள்ளத்தை கரைந்துப் போகும்படி செய்கிறது. 



இந்த பாடலில்  வருவது போல் "அவன் அழைக்கின்றான் "என்பதை உணரும் சந்தர்ப்பம்  உண்டாவது எந்த பிறவியிலோ? 
அழைத்தால் வருகிற இயல்புடையவன் ஆண்டவன்.  ஆனால்  வரவேற்று அணைத்துக்கொள்ளும் பக்குவம் வராத போது, அவன் அழைப்பிற்கான நேரத்தையாவது  எதிர் நோக்கி கொண்டிருக்கும் அந்த சமயம் , வாய்ப்பதாவது எப்போதோ

ராகவேந்திரர் இறையோடு ஐக்கியமாகி அருளுகின்ற "மந்திராலயம்" செல்லும் வாய்ப்பு  ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை எவ்விதமான பிரயாண முன்னேற்பாடுமின்றி தீடீரென எங்களுக்கு கிடைத்தது எங்களது பெரும் பாக்கியமே! அதை என் வாழ்வில்  என்றுமே மறக்கவே இயலாது. 


படங்கள் நன்றி கூகுள். 

"
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காம தேனவே". 🙏. 

பின்வரும் கதையை படிக்க நேர்ந்தது எனக்கு இந்த நினைவுகளை மீட்டு இந்த பதிவை உருவாக்க வைத்தது. எனது பதிவையும், நான் படித்த இந்தக் கதையையும் படிக்கும் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 


கடவுளுக்கு பலி.
"""""""""""""""""""""''""""""""'
குயவன் ஒருவன் பானைகளைச் செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள், குடங்கள், சட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன.

அவன் அருகில் ஓர் ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தன. அவ்வப்போது அது 'மே..மே..' என்று கத்திக் கொண்டிருந்தது.

வயதான மகான்  ஒருவர் மெல்ல நடந்து அங்கே வந்தார். குயவன் பானை செய்வதைப் பார்த்தபடியே தரையில் அமர்ந்தார்.

வந்தவருக்கு ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் அந்தக் குயவன். அதை வாங்கிக் குடித்த குரு, .... "இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?" என்று கேட்டார்.

"இல்லீங்க, சாமி. இது ஏதோ காட்டாடு. இந்தப் பக்கமாக வந்தது. பிடித்துக் கட்டிப் போட்டேன்!" என்றான் குயவன்.

"எதற்காக? என்று கேட்டார் குரு."

"பண்டிகை வரப்போகிறதே!  இறைவனுக்கு  பலி கொடுக்கலாமென்று தான்...." என்று இழுத்தான் குயவன்.

"பலியா?" குரு வியப்புடன் வினவினார்.

"ஆமாம், சாமி. தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்."

இதைக் கேட்ட குரு எழுந்தார். தன் கையிலிருந்த மண் பானையை ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் திகைத்து நின்றான். துறவியை வெறித்துப் பார்த்தான்.

துறவி நிதானமாகத் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

"என்ன இது?" என்றான் குயவன் கோபமாக.

"உனக்குப் பிடிக்குமே, அப்பா?" என்றார் குரு.

" என்ன உளறுகிறீர்கள்?" குயவன் குரலில் உஷ்ணம் தெறித்தது. "என்னுடைய பானையை உடைத்து அடுக்கி என்னிடமே நீட்டுகிறீர்கள். இது எனக்குப் பிடிக்கும் என்று வேறு சொல்கிறீர்கள். கேலியா? கிண்டலா? வம்புக்கு இழுக்கிறீர்களா? அல்லது உங்களுக்குப் பித்தா?" என்று ஆத்திரப்பட்டான்.

"அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன் ". குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

"நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?"

"நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டுச் சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? " குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

இறைவனிடம் என்ன இல்லை? உன்னிடம் என்ன உண்டு?  அவர் எதை கேட்கிறார்? எதை நீ அளிப்பாய்?

அவன் படைத்த 'உலகில், அவன் படைத்த நீ, அவன் படைத்த பொருட்களை அவனுக்கே படைப்பாயா?

இறைவனுக்கு நான் அதைச் செய்தேன். இதைச் செய்வேன் என்பதும், பதிலுக்கு அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான் என்பதும் வெறும் ஆத்ம வஞ்சனையே!

எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணரமுடியும். தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும்.
"அன்பு மலர் எடுத்து அனுதினமும் பூசை செய்வாய்"... இப்படி நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்....

இக்கதையில் வருவது போல் இறைவன் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. நம்முடைய ஆசைதான் வேண்டுதலாக மாறி, சமயத்தில் பிறரையும், எப்போதும் நம்மையும் கஸ்டபடுத்துவதாகவே அமைகிறது.

 குருவருள் அனைவருக்கும்  துணையாக  இருக்க ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏.