Friday, June 29, 2018

விளையாட்டுக்காக பிறந்த கதை...


பொதுவாக இன்பமும், துன்பமும் சேர்ந்து வருவதுதான் வாழ்க்கை.  இப்படி சந்தோஷங்களும், வருத்தங்களும் இணைந்து இரு தண்டவாளங்களாக முடிவில்லாத ரயில் பயணங்களாக பயணிக்கும் இவ்வாழ்வில், நமக்கு இன்பம் வரும் போது சந்தோஷிப்பதும், துன்பம் வரும் போது வருந்துவதும் வாடிக்கையாகி போன விஷயம்..  ( இப்ப என்னதான் சொல்லப் போறீங்க? "தலையும்,  வாலும் புரியலை" என நீங்கள் கொஞ்சம்  தலையை தாங்கிப் பிடிப்பதற்குள் நிச்சயம்  சொல்லி விடுகிறேன்.)

கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி என் உறவுகளிடமி ருந்து எனக்கு  வாட்சபில் வாழ்த்துகள் வந்து கொண்டேயிருந்தன. காரணம்  நான் அன்றுதான் (அன்று என்பதற்கு அப்போது என அர்த்தமில்லை. அன்றைய நாள் என்பதாகும்.) பிறந்தேனாம்.  (ஆஹா... சின்ன நூல் கிடைத்து விட்டது. இனி வருடம் என்ற கயிறு கிடைத்து விட்டால், உறவுச் சிக்கலை பிணைத்து  கட்டி விடலாம் என சகோதரி கீதா அவர்கள் சந்தோஸிப்பதும் என் மனக் கண்ணில் தெரிகிறது. ஹா ஹா ஹா ஹா. )  எனக்கும் இப்போதுதான் வாட்சப் வசதிகள் கொண்ட ஃபோன் கிடைத்திருப்பதென்பது குறிப்பிடத்தக்கது . நாங்கள் பொதுவாக பிறந்த மாதத்தில் வரும் ஜென்ம நட்சத்திரத்தன்று  நினைவில் வைத்துக் கொள்வோம். ஆங்கில தேதிகளில் வாழ்த்துக்கள் தெரிவிப்பது என் குழந்தைகள் ( சகோதரி அதிரா அவர்கள் மன்னிக்கவும் .. "குழந்தைகள் எப்படி கல்லூரியில்.... இந்த கமலா சிஸ்டருக்கு எவ்வளவு தடவை சொன்னாலும் புரியலே" என மனசுக்குள் சொல்வது கேட்கிறது. ஹா ஹா ஹா ஹா )  பள்ளி கல்லூரிக்கு சென்ற பிறகுதான் பழக்கமாகி போனது.

ஆனால் எனக்கு அன்றைய தேதியில் இன்றைய அனைவரின் வழக்கப்படி வாழ்த்துக்கள் வந்தது சற்றே விசித்திர மகிழ்வை தந்தது. "நான் எப்போதுமே ஒவ்வொரு வருடமும் கடக்கும் போது நாம் இந்த வருட இளமையை தொலைத்து விட்டு முதுமையை நோக்கித்தான் அடுத்து அடியெடுத்து வைக்கிறோம் என நினைத்துக் கொள்வேன். சில சமயம் அடுத்தப்பிறவியின் வாசல் படியென்றும் நினைத்துக் கொள்வேன்." (எனக்கு போட்டியா இவங்க அப்போதையிலிருந்தே இங்க  ஞானியா?  என சகோதரி அதிரா அவர்கள் ஆனந்தத்தோடு விய(ழு)ந்து விய(ழு)ந்து அதிசயப்பது  புரிகிறது.  ஹா.ஹா ஹா ஹாா..) எப்போதுமே என் பிறந்த நாளுக்கென்று சிறப்பான முறையில் ஏதும் செய்யாத நிலையில், இந்த வருடம் அனைவரின் வாழ்த்துகள் மட்டும் ஏனோ சிறிது ஆனந்தத்தை அளித்ததும் உண்மை.. (காரணம் புது வாட்சப் பாக இருக்கலாம். இல்லை.. நமக்கு அடுத்தபடியாக சிஷ்ய ஞானி உருவாகி விட்ட திருப்தியாகவும் இருக்கலாம். ஹா ஹா ஹா ஹா ஹா )

அதன் பின் அந்த மாதத்தில் பத்தொன்பதாம் தேதி என் நாத்தனார் பெண் அவர்கள் வீட்டில் பத்து வருடத்திற்கும் மேலாக வளர்த்து வந்த செல்லம் ( இங்கு செல்லம் என்று குறிப்பிடுவது சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு மிகவும் திருப்தியையும், சந்தோஷத்தையும் அளிக்கும் என நினைக்கிறேன்.) தீடிரென்று மரணித்து விட்டதாக அதே வாட்சபில் சொன்ன போது, மனசு சங்கடப்பட்டு அன்று முழுவதும் வேதனையாக இருந்தது.  அதற்கு முன் இரு தடவை அவர்கள் வீட்டுக்கு (ஹைதராபாத்) சென்ற போது அந்த செல்லத்தை பார்த்திருக்கிறேன்..  அந்த ஞாபகம் வந்து அதனை நினைத்து அன்று முழுவதும் அவர்களுடன் பேசிக்கொணடிருந்தேன். அவர்களும் அதன் காரணமாக குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து எங்கும் பயணப்பட மாட்டார்கள்.  யாரேனும் ஒருவர் அதற்கு காவலாக... இருப்பார்கள். அக்காலத்தில்  "வீட்டை காக்கும்" எனப் படித்தது ஞாபகம் வருகிறது.

இப்படியாக அந்த ஒரு மாதத்தில் இன்பமும் துன்பமுமாக இரு நிகழ்வுகள்.( முதலில் சொன்ன வரிகள் ஒரளவுக்கு பொருந்தி வந்து விட்டது.) இந்த பிறந்த நாள்என்றதும்  யாருக்கு யார் பெரியவர். சின்னவர் என்பதைக் கண்டதும், ஒரு நினைவு... நமக்கு தெரிந்த பதிவர்கள்  அனைவருமே ஒரிரு, இல்லையேல் நான்கைந்து, அதுவும் இல்லையேல் ஆறேழு, அப்படியும் இல்லையென்றால், ஏழெட்டு வயது வித்தியாசத்தில் இருப்போம்.  ஆனால்  சகோதரர் நெ. த அவர்கள் அரை விநாடி பின் பிறந்து விட்ட காரணத்தாால்,  கீதா ரெங்கனை "அக்கா" என அழைப்பதாக சகோதரி கீதா அவர்கள குறிப்பிடுகிறார்.
ஆனால் அதைப்பார்த்து "சகோ" என வாய் நிறைய அழைத்து வந்த சகோதரி கீதா அவர்கள் நான் எழுதிய  1976க்கு அப்பறம் கமலாக்கா என அழைத்து ஆனந்திக்கிறார். ஹா ஹா ஹா ஹா ஹா.

சரி "நினைவைச் " சொல்லவேயில்லையே... நாங்கள் சென்னையில் குடியிருந்த போது
நான்கு குடித்தனம். அதில் கீழ் வீட்டில் ஒரு அம்மா, இரண்டு மகள்கள் ஒரு மகன்,. தன் பெரிய பெண்ணின் மகளை தன் மகனுக்கு மணமுடித்திருந்தார். (பாட்டியே மாமியார்) அந்த பேத்திக்கு அப்போது என்னை விட ஒரு ஐந்து வயது கம்மியாகயிருக்கலாம். நான் அவர்களை எப்படி பேர் சொல்லி அழைப்பது என்று  பரஸ்பரம் இருவருமே "மாமி" என அழைத்துப் பேசிக் கொள்வோம். தீடீரென ஒருநாள் அந்த மாமியார் (பாட்டி) என்னிடம் "மாமி.. (அவரும் என்னை அப்படியே அழைத்தார் என்பது வேறு விஷயம்.) இனி எங்க பேத்தியை மாமி என்று அழைக்காதீர்கள்.  அவள் உங்களை விட சின்னவர். சீக்கிரமே திருமணம் செய்து விட்டோம். ஆனால் இப்போதுதான் ஒரு குழந்தை பிறந்திருக்கு. அதை வைத்துக்கொண்டு அவளை பெரியவராக நினைத்து விடாதீர்கள்.. இனி பேரைச் சொல்லியே கூப்பிடுங்கள்.. எனச் சொல்லவும் எனக்கு  என்னமோ போலாகி விட்டது. (பேத்தி என்பதால், மருமகளிடம் அவ்வளவு பாசம்..)  அதற்கு முன் பழகும் போதே எனக்கு பத்தொன்பது வயதில் திருமணமானதையும், சீக்கிரமாகவே குழந்தைகள் பிறந்திருப்பதையும் அறிந்து வியந்தவர்தான் அந்த அம்மா. சரி... அதுதான் போகட்டும்...ஒருநாள்,  " நான் உங்கள் அம்மா மாதிரிதான்... ஆனாலும் உங்களை பேர் சொல்லி அழைக்க என்னமோ மாதிரி இருக்கு.. அதனால் மாமி என்றே அழைக்கிறேன்" என்றாறே பார்க்கலாம்.

எனக்கு சிரிப்புதான் வந்தது. "என்னை எப்படி வேண்டுமானலும் அழைத்துக் கொள்ளுங்கள் . பாட்டி, கொள்ளுப்பாட்டி எள்ளுப்பாட்டி என அழைத்தாலும் ஆட்சேபனை இல்லை. கூப்பிட்டு விளிப்பதற்காகத்தான் பெயரிடுவது,  உறவை குறிப்பிடுவது எல்லாம்... எப்படி அழைத்தால் என்ன.... என்றேன். (ஆஹா எவ்வளவு பெருந்தன்மை... என அனைவரும் புகழாரம் பதியலாம் என யோசிப்பது புரிகிறது. ஆனாலும் வேண்டாமே....)
இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவங்கள் மறக்க இயலாதவையாக அமைந்து விடுகிறது.

அதெல்லாம் சரிதான்.. இன்னமும் பதிவில் முதலில் எழுதியது வரவில்லையே.. எண நீங்கள் பொங்குவதற்குள்,  சகோதரி பானுமதி அவர்கள் சகோதரி வல்லி சிம்ஹன் பதிவில், "என்ன  இந்த மாதம் எல்லோரும் புனித பயணமா இருக்கே" என நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டார்.

அதைத்தான் பதிவின் தொடக்கத்தில் ரயிலோடு இணைத்திருந்தேன்..     (இவங்களுக்கு நிஜமாகவே தலைசுத்தல் வந்ததை எந்த இடத்திற்கும் வந்து அடிச்சு சொல்றேன். ஆயுர்வேதமும் பலன் அளிக்கவில்லை போலும் ..) என பொறுமை தாளாமல் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் நினைப்பதும் என்னால் ஊகிக்க முடிகிறது.

அட.. எல்லோரும் கடுப்பாவது தெரிகிறது. இதோ.... விடுவிக்கிறேன்.விடுவித்தே விடுகிறேன். வரும் ஞாயிறன்று  மாலை குலதெய்வ வழிபாட்டிற்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் பிறந்து வளர்ந்த ஊருக்குச்  (திருநெல்வேலி) செல்கிறோம். ஒரு வாரம் அங்கு தங்க வேண்டியதிருக்கும். இந்த மாதம் குலதெய்வ மாதம் போலும். (அதனால்தான் முதலிலேயே பிறந்தது, இன்பம், துன்பம். அனைத்தையும் ரயில் பயணங்களுடன் கோர்த்து விட்டேன்.)
பொதுவாக உப்புமாவை எங்கள் வீட்டில் "இன்று குலதெய்வ வழிபாடு" என்றுதான் குறிப்பிடுவோம் . கிளம்பும் அன்றாவது உப்புமா இடையில் வராமல் இருக்க வேண்டும்.... ஆமாம்.. வளவளன்னு எழுதியதுதான் எழுதியாச்சு. (ஆனால் தலைப்பையாவது மாத்தி கொடுத்திருக்க கூடாதா? .. பேசாமே  கடைசியிலே சொன்னமாதிரியே "விளையாட்டா கோர்த்த பதிவு"ன்னு வச்சிருக்கலாம்..)  என்று சகோதரர் கில்லர்ஜி அவர்கள்  அவரின் நண்பர் இருவருடன் சத்தமாகவே பேசுவது கேட்கிறது.

அது சரி.. ஊருக்கெல்லாம் போயிட்டு நிதானமா வாங்கோ .  அவசரமேயில்லை. Day யை சொன்னீங்களே.. Year யும் சொல்லிட்டு போங்கோ.. கணக்கு போட்டு குழப்பம் தீர்க்கலாமே..  என அனைத்துக் குரல்களும் ஒருசேர  அழகான இசையாய் ஒலிப்பது கேட்கிறது.

போயிட்டு வர்றேன். சொல்லலாமா என்று  கேட்டு விட்டு வந்து  சொல்கிறேன். ( வேறு யாரிடம்? தெய்வத்திடந்தான்.....) 🙏...

அனைவரையும் விளையாட்டாகத்தான் குறிப்பிட்டேன். தவறெனின், 🙏. மன்னிக்கவும்... 
(அட... இங்கு தலைப்பும் வந்து விட்டதே...)


Friday, June 22, 2018

போலி

கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த லதா ஆளுயர நிலை கண்ணாடி முன் நின்று தன் அழகை தானே ரசித்து கொண்டிருந்தாள். லைட் நீல நிறத்தைக் கொண்ட புடவையும், அதே நிறத்தில் பிளவுசும் அவளை அழகு தேவதையாக்கி கொண்டிருந்தன. இந்த நேரத்தில் மோகன் தன் அருகில் இருந்தால் தன்னை எப்படியெல்லாம் வர்ணிப்பான். அந்த நினைப்பு அவள் உள்ளத்தில் எழுந்ததுமே, அவளது அழகிய அதரங்களில் ஒரு புன்னகை நெழிந்தோடியது.

"லதா" என்ற குரலைக் கேட்டதும் இனிய கனவுகளில் உலாவி கொண்டிருந்தவள் "பொத்"தென்று கீழே விழுந்து விட்டதை போன்று உணர்ந்தாள்.

சட்டென்று திரும்பி பார்த்தவள் அங்கு தன் அம்மா அன்னபூரணி கையில் பால் டம்பளருடன் நிற்பதை கண்டதும் " என்ன அம்மா ?" என்றாள் சற்றே சிடுசிடுப்புடன்.

"லதா, உனக்கு பரீட்சை முடிய இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?" என்று கேட்டாள் அன்னபூரணி.

"மூன்று...." மொட்டையாக பதில் வந்தது
லதாவிடம் இருந்து. 

தன் அழகை பூரணமாக ரசித்து திருப்தி அடைவதற்குள் அம்மா குறுக்கிட்டு விட்டாளே என்ற எரிச்சல் அவளுக்கு.

"லதா, உனக்கு பரீட்சை முடிந்து விடுமுறை விட்டவுடன், உன் திருமணத்தை முடித்து விடவேண்டும், என்கிறார் உன் அப்பா. அதற்கேற்றாற்போல், வரன்கள் வேறு வந்து கொண்டிருக்கின்றன. 

நேற்று கூட ஒரு வரன் வந்திருக்கிறது... இதோ, பையனின் போட்டோவை அனுப்பி இருக்கிறார்கள். உனக்கு பிடித்து இருக்கிறதா என்று பார்..."

அன்னபூரணி நீட்டிய போட்டோவை வாங்காமல், ஜன்னல் அருகே போய் நின்றவள், வெளியே தெரியும் நீல நிற வானத்தையே சற்று நேரம் மெளனமாக வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். 

பிறகு, "எனக்கு இப்போது திருமணம் வேண்டாமம்மா... நான் இன்னும் மேலே படிக்க போகிறேன். இதை நீ தான் அப்பாவிடம் சொல்லி அப்பாவின் சம்மதத்தை வாங்கி தரவேண்டும்.." அவள் குரல் கெஞ்சியது.

"இதையெல்லாம், நீயே உன் அப்பாவிடம் சொல்லிக்கொள். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நாங்கள் பார்க்கும் பையனைத்தானே  நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும்.." என்ற அன்னபூரணியின் குரலில் சற்று கண்டிப்பு ஒலித்தது.

ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்த லதா திரும்பி, அன்னபூரணியை உற்று பார்த்தாள். பின் "நீங்களெல்லாம், உங்கள் பெற்றோர் பார்த்த பையனையே திருமணம் செய்து கொண்டு என்ன பயன் கண்டு விட்டீர்கள்?" என்று எகத்தாளமாக கேட்டாள்.

 அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அன்னபூரணி திணறிகொண்டிருந்த போதே, மேஜை மீதிருந்த புத்தகங்களை அள்ளி கொண்டு, "நான் கல்லூரிக்கு சென்று வருகிறேன்.." என்ற சொல்லையும் உதிர்த்து விட்டு சிட்டென பறந்தாள்.

திகைத்துபோய் நின்று கொண்டிருந்த அன்னபூரணிக்கு தன் மகள் கேட்ட கேள்வியும் சரியெனவே பட்டது. 

ஆம், அவள் செல்வநாயகத்தை திருமணம் செய்து கொள்ளும் போது  சற்று பயந்த சுபாவத்தில்தான் இருந்தாள். அதற்கேற்றாற்போல்  அவரும் எப்போதும் பணம் பணம் என்றே தன் பிஸினஸ் ஒன்றே குறியாக இருந்து  செல்வநாயகம் பெயருக்கேற்றாற்போல் செல்வத்தின் நாயகராகவே விளங்கினார். பணம் இருந்தது அவரிடம்.. ஆனால் எப்போதும் தன்மையாக பேசும் குணம் இருந்ததா?

மூர்க்க தனமாக மனைவியிடமும், மகளிடமும் சில வேளைகளில் சத்தம் போடுவார். ஒரே மகள் என்றதால் , அவளுக்கு சில சமயங்களில் , சுதந்திரம் தருவார். சில சமயங்களில், கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல்  பேசிவிடுவார். நிலையற்றது அவரது மனம். அதனால் அவரிடம் மனைவி மகள் வேலைக்காரர்கள் எல்லோருமே எப்படி பேசுவது என்பது தெரியாமல் நடுநடுங்குவார்கள். பாம்பா, பழுதா என அறிய முடியாத ஒரு குணம். 

அவர் அவ்வாறு என்னிடம் நடந்து கொள்வதால் தான் லதா அப்படி கேட்கிறாள். ஆனால் குடும்பத்தின் மீது அவருக்கு இருக்கும் அன்பையும், தன் மீதும், தன் ஒரே மகளான இவள் மீதும் அவருக்கு இருக்கும் பாசத்தையும், இவளுக்கு எப்படி புரிய வைத்து தன் வழிக்கு கொண்டு வருவது என்று நினைத்து கொண்டே அறையை விட்டு வெளியே வந்து மாடிப்படிகளில் இறங்கி சமையல் அறைக்குள் புகுந்தாள் அன்னபூரணி.

கல்லூரியிலிருந்து கலகலவென சிரித்து பேசியபடி வெளியேறி கொண்டிருந்த மாணவிகளின் கும்பலிலிருந்து  வெளிப்பட்ட  லதா தங்கள் வீட்டு கார் வந்திருக்கிறதா என்று சுற்று முற்று பார்த்தாள்.

"அம்மா! கார் அங்கே இருக்கு போவோமுங்களா?" குரல் வந்த திசையில் திரும்பினாள் லதா .

"அடடே!! சண்முகம், நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்? நான் உங்களைத்தான் தேடி  கொண்டிருக்கிறேன். அப்போதே வந்து விட்டீர்களா?" என்றாள் லதா .

"இல்லையம்மா, நான் இப்பொழுது தான் வந்தேன். காரை எடுக்கட்டுமா?" என்றார் டிரைவர் சண்முகம்.

"இல்லை சண்முகம், எனக்கு பிரைவேட் கிளாஸ் இருக்கிறது. அதனால் நீங்கள் காரை விட்டுவிட்டு வீட்டிக்கு போங்கள். கிளாஸ் முடிந்ததும் நானே காரை எடுத்துவருகிறேன்."

"வேண்டாம் அம்மா.. அய்யா சத்தம் போடுவார்.. நீங்க முடிச்சிட்டு வாங்க, நான் அதுவரைக்கும் கார்ல காத்துக்கிட்டு இருக்கேன்."

"வேண்டாம் டிரைவர், நீங்கள் புறபடுங்கள், எனக்கு கிளாஸ் முடிய வெகு நேரம் ஆகும். நீங்கள் அப்பாவின் ஆபீசுக்கு பெரிய காரை எடுத்துக்கொண்டு போக வேண்டாமா."

ஒரு மட்டும் போக மனமில்லாமல் அவ்விடத்தைவிட்டு நகர்ந்த டிரைவரை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்ட லதா , அவர் தலை மறைந்ததும் காரை ஸ்டார்ட் செய்தாள். 

கார் "பீச்"சை நோக்கி விரைந்தது. காரை ஓட்டி சென்ற லதாவின் மனம் மிகவும் சஞ்சலப் பட்டது. காலையில் தான் அவ்வாறு அம்மாவிடம் பேசியிருக்க கூடாதோ! பாவம்.. அம்மாவின் மனம் எவ்வளவு வருத்த பட்டிருக்கும்.

"மோகன் நாளைதானே என்னை சந்திப்பதாக கூறியிருக்கிறார். நாளை சந்திக்கும் போது அவரிடம் தனக்கு பையன் பார்ப்பதை கூறி அவரை சீக்கிரமாக பெண் கேட்க வரச்சொல்ல வேண்டும்." 

கார் கடற்கரையை அடைந்ததும் அதிலிருந்து இறங்கினாள் லதா . 

கடற்கரையில் அவ்வளவாக கூட்டமில்லை. காரை பூட்டி விட்டு கடலை நோக்கி நடந்தாள். கதிரவனின் கிரணங்கள் அவளது பொன்னிற உடலின் மீது பிரகாசித்து அவளது அழகை அதிகபடுத்தியது. 

அவளும் மோகனும், கடற்கரைக்கு வந்தால் ஒரு படகின் மறைவில் தான் அமருவார்கள். அந்த திசையை நோக்கி கண்களை செலுத்தியவள் அங்கு மோகன் இருப்பதை கண்டு ஒரு கணம் மகிழ்ச்சி அடைந்தாள்.

<மோகன்..> என்று அழைக்க நாவெடுத்தவள், அடக்கி கொண்டாள். அவன் அருகில் ஒருபெண் நெருக்கமாக மிக---மிக----நெருக்கமாக அமர்ந்திருப்பதை கண்டு, மெதுவாக அவர்கள் அறியாமல் கவனிக்காமல், அவர்கள் அமர்ந்திருந்த படகின் மறுபக்கத்தில் அமர்ந்துகொண்டு அவர்கள் உரையாடலை உன்னிப்பாக கேட்கத்தொடங்கினாள் லதா .

"நான்சொல்வதை நம்பு.. உண்மையாக நான் அந்த லதாவை நேசிக்கவேயில்லை " என்றான் மோகன்.

"அவளையே சுற்றிகொண்டிருந்து, விட்டு அவளை காதலிக்கவில்லை என்றால் எந்த குருடனும் நம்ப மாட்டான்.." என்றாள் அவள் கோபத்துடன். 

"ஸில்லி, உனக்கு எத்தனை தடவை சொல்வது... எப்படி சொல்வது என்றே எனக்கு புரியவில்லை, நானும் நீயும் வருடகணக்கில் நேசிப்பது அவளுக்கு தெரியாது... நான் அவளைத்தான் உயிருக்குயிராக காதலிப்பதாக, நம்பிக்கொண்டிருக்கிறாள், அந்த பைத்தியகாரப் பெண்... நான் அவளிடம் இருக்கும் பணத்தைத்தான் "லவ்" பண்ணுகிறேன். 

அவளும், நான் கேட்கும் போதெல்லாம், பணமும் நகையுமாக எப்படியாவது கொண்டு வந்து தந்து கொண்டிருக்கிறாள். நாம் இருவரும் இருக்கும் இந்த ஏழ்மை நிலைக்கு, அவள் தரும் பணம் மிகவும் உதவியாக இருக்கிறது. இன்னும் அவளிடம் இருந்து, ஒருபெரிய தொகையாக கறக்க ஒருதிட்டம் வைத்திருக்கிறேன்.. 

அந்தபணத்தை கறந்தவுடன் நாம் இந்த ஊரை விட்டு வேறு எங்காவது சென்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம்.." என்றான் மோகன்.

"உண்மையாகவா!!! அந்த பெண்ணை அப்படி ஏமாற்றுவது தப்பில்லையா??" அந்தபெண்ணின் குரலில் சற்று பயம் தொணித்தது...

"ஏய்! விட்டால், நீயே அவளிடம் சென்று சொல்லி விடுவாய் போலிருக்கிறதே... அவளை நானா ஏமாறச்சொன்னேன்??? அவளுடைய பணத்திமிர் அவளைஏமாறச்சொல்கிறது." அந்த கயவன் தன் காதலியை சமாதானபடுத்த ஏதேதோ சொல்லிக் கொண்டேயிருந்தான்...

லதாவின் தலையில் ஒருபெரிய பாராங்கல்லை தூக்கிப்போட்ட உணர்ச்சியுடன் சிறிதுநேரம் கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். 

கடல்அலைகளை போல அவள் மனமும் கொந்தளித்தது. மீண்டும் அவர்கள் அறியாமல் எப்படியோ காரை வந்தடைந்தாள்.  காரை திறந்து உள்ளே அமர்ந்தவள், இத்தனை நேரம் நெஞ்சில் குமுறி கொண்டிருந்த உணர்ச்சிகளை கண்களின் வழியே கொட்டித்தீர்த்தாள்.

தன்னை உயிருக்குயிராக அவன் காதலிப்பதாக சொன்னதல்லாம் வாயளவே.. <<தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, ஆபீஸில் ஒருவரிடம் கடன், பணமுடையில் என்னசெய்வதென்று தெரியவில்லை>> என்று அவன் உள்ளம் உருக பேசி தவித்த போது அவளும் இரக்கபட்டு, தன் அப்பா அம்மாவுக்கு தெரியாமல் பணமும் நகையுமாக அவன் கையில் தாரை வார்த்தெல்லாம் வீண்.

இந்த லட்சணத்தில் எனக்கு பணத்திமிராம்... வெறுப்புடன் பல்லை கடித்தவள், "நல்லவேளை, இப்பொழுதாவது இவன் குணத்தை பற்றி தெரிந்து கொள்ள கடவுள் ஒருநேரத்தை ஏற்படுத்தி கொடுத்தாரே," என்று நிம்மதி பெருமூச்சு விட்டவளாய் காரை கிளப்பினாள்...

தனிமையாக சிறிது நேரம் இருக்க வந்தவளுக்கு, அந்த தனிமையில் இனிமை  கிடைக்கவில்லை... உள்ளத்தின் வெப்பத்தை போக்க குளிர்காற்றை நாடி வந்தவளுக்கு, அந்த வெப்பம் பன்மடங்கு பெருகியதுதான் மிச்சம்...

காலையில் அம்மாவிடம் இதைப்பற்றி கூறலாமா என ஒரு நிமிடம் யோசித்தவள், "மோகனை நாளை சந்தித்து அவனிடம் அவன் தாய் தந்தையரை விட்டு பெண் கேட்டு வரச் சொன்ன பின் தன் தீர்க்கமான முடிவை சொன்னால், தன் பெற்றோர் வேறு வழியின்றி ஒத்து கொள்வார்கள்" என்ற நம்பிக்கையில் அம்மாவை கடிவது போல் பேசி விட்டு வந்து விட்டாள்.

இப்போது பீரோவில் இருக்கும் பணமும் கொஞ்சம் நகைகளும் காணவில்லையே என்ற பேச்சு வருவதற்குள் "அம்மாவிடம் எப்படியாவது உண்மையை விளக்கி கூறி அப்பாவின் காது வரைக்கும் போகாமல் எப்படி காப்பாறறுவது".. என்ற கவலை மிக தீவிரமாக அவளைப் பற்றிக் கொண்டது. மனசு அலை பாய எப்படியோ காரை ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். 

வீட்டை வந்தடைந்தவள், காரை வாசலில் நிறுத்தி விட்டு மாடிக்கு தன்னறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டவள், இயல்பாக இருப்பதை அம்மாவிடம் காட்டிக் கொள்வதற்காகவும், மனஅமைதிக்காகவும் ரேடியோவை திருப்பினாள்..

<<<ஆல்இண்டியரேடியோ... சென்னை வானொலி நிலையம்... திரைகானம்.. முதலில் பட்டாம்பூச்சி என்ற படத்தில்..
டி.எம் செளந்தரராஜன்... எஸ் ஜானகி...>>> அறிவிப்பாளரின் குரலை தொடர்ந்து பாடல் ஒலிபரப்பானது.

" எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி,
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி,"

பட்டென்று ரேடியோவை மூடினாள் லதா.

அப்போது காப்பி எடுத்து கொண்டு உள்ளே நுழைந்த அன்னபூரணியை கண்டதும் லதா வின் கண்கள் கலங்கின.

காலையில் அம்மாவை எடுத்தெறிந்து பேசியதிற்க்குத்தான் கடவுள் தண்டனை கொடுத்து விட்டாரோ!!! காப்பியை மேஜை மேல் வைத்து விட்டு "கிளாஸ், முடிந்ததா லதா, டிரைவர் வந்து சொன்னார்.." என்று கேட்டவாறே அங்கிருந்து நகரமுற்பட்ட அன்னபூரணியை தடுத்து நிறுத்தியது லதாவின் குரல்.

"அம்மா, என்னை மன்னித்துவிடு, காலையில் உன் மனம் புண்படும்படியாக பேசி விட்டேன் உங்கள் விருப்பப்படியே நேற்று பார்த்த அந்த பையனையே கல்யாணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் அப்பாவிடமும் நீயே சொல்லிவிடு."

அன்னபூரணி மகிழ்ச்சியுடன் மகளை நோக்கினாள்  "உண்மையாகவா சொல்கிறாய், லதா ? "ஆமாம்! அம்மா, உண்மையாகத்தான் சொல்லுகிறேன்."
மகளின் உறுதியான குரலில் தாய் மிகவும் சந்தோஷமடைந்தாள், 

அவளுக்கு தெரியுமா தன் மகள் காதல் என்பது ஒரு போலி வாழ்க்கை, பொழுதுபோக்கு என்பதை புரிந்துகொண்டு விட்டாள் என்று......

<<<பெற்றவர்கள் பார்ப்பதிலே பெருமை என்னவோ....  
அவர் மற்றவையும் பார்ப்பதினால் நன்மை அல்லவோ.......>>>> 

அந்த பாட்டு எங்கேயோ பாடிக் கொண்டிருந்தது..........
================================================================================
இதுவும் 1976- ல் எழுதியதுதான். அந்த காலகட்டத்தின் நடவடிக்கைகள் பாவனைகள் இவைகளை கருத்தில் கொண்டு எழுதியது. மேலும் கதைகள் என்ற ஒன்று எழுத வேண்டுமென ஆர்வத்துடன் மட்டுமே கவனம் செலுத்தி எழுதப்பட்டவை. இதில் குற்றம் குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
படிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். 

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். 

Sunday, June 17, 2018

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..


இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும்  ஒவ்வொரு  நாட்டிலும்,  நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர்.   ஆனால் 
இந்த தினம் நாட்டுக்கு நாடு வேறு படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்சு, ஜப்பான், இந்தியா  ஆகிய நாடுகளில் மட்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறன்று  தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது.  ஒவ்வொரு வீட்டடிலுமுள்ள அங்கத்தினருக்கு (அன்னை, தந்தை  பெற்றோர்கள் குழந்தைகள் சகோதர சகோதரிகள்) , என ஒரு வருடங்களில் வரும் ஒவ்வொரு  மாதங்களிலும், குறிப்பிட்ட தேதியில் ஒவ்வொருவருக்கும் உரிய தினமாக அறிவித்து கொண்டாடபட்டு  வருகிறது. 

அதன்படி இன்று தந்தையர் தினம்

தாய் தந்தை இருவருமே நம் முகத்தின் இரு விழிகள். ஒரு மனித முகத்தில் இரு விழிகளையும் ஒரே நேர்  கோட்டில் ஆண்டவன் படைத்த காரணமே இரு விழிக்குள்ளும் பாரபட்சம் என்ற வேறுபாடு வரக் கூடாது என்ற எண்ணத்தில்தான். ஆனால், பிறந்ததிலிருந்து, ஒவ்வொரு கட்டத்துக்கும் நமக்காக பார்த்து பார்த்து செலவு செய்து நம் நலனுக்காக பாடுபடும் அப்பாவை சில வீடுகளில் இரண்டாவதாகத்தான் கருதுகிறார்கள். தந்தையின் கண்டிப்பு சற்று பிடிக்காத காரணத்தால், என்றுமே அவர் நம் நல்லதுக்காகத்தானே சொல்லுவார் என்ற எண்ணம் சிறிதுமின்றி அவரை, அவர் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், அலட்சியபடுத்துகிறார்கள். 

மாதா, பிதா, குரு, தெய்வம் என நாலு பேரை நம் பிறப்பிலிருந்து ஒரு சிறந்த பார்வையில், வைத்துப் பார்க்கிறோம். 
கடைசியில் இருக்கும் தெய்வம்தான்  மனித இனத்தை தலைமைச்சிற்பியாய் இருந்து செதுக்கி சரியான பரிமாணத்திற்கு கொண்டு வர, (மாதாவை) அன்னையின் மூலம் சிறந்த தகுந்த சிலை செய்வதற்கான கற்களை தேர்ந்தெடுக்கவும்,  (பிதாவை) தந்தையின் மூலம் அக் கற்களை வடிவமைத்து செதுக்க தேவையான பொருளீட்டவும், (குருவை) கல்வி கேள்வி அறிவுகளை கற்பிக்கும் ஆசிரியர் மூலம் உளி கொண்டு கற்களை  பின்னமில்லா அழகிய சிற்பமாக செய்யவும் செய்து, உலகில் உலா வரவும் பயன்படுத்திக் கொள்கிறான். இதில் மாதா, பிதா, குரு மூவருக்கும்  அவன் (தெய்வம்) தலைமைச் சிற்பியாய் இருந்து அவர்களையும் வேலை வாங்கி கடைசியில் நின்று கண்காணித்து பெருமை யடைகிறான். மற்ற  இருவரும் அவன் கட்டளைக்கிணங்கி உளி கொண்டு செதுக்கும் போது ஏற்படும் வலியினை, வெறுத்து நாம் சிற்பமாக மாறத் தயங்கினால், நஷ்டம் சிற்பத்திற்கேயன்றி, உளிக்கல்ல!. அதனால் ஏற்படும் கோப தாபங்களின் காரணமாக,  பெற்றெடுத்த உறவுகளை  மன சஞ்சலபடுத்தாமல், அவர்களின் சிறப்புகளை உணர்ந்து வாழ்வோமாக...இன்று நாம் அந்த பரிபூரண அன்பை  நம்மை பெற்றவர்களுக்கு தந்தால் நாளை நம் குழந்தைகளிடமிருந்து அது நிச்சயமாக  திருப்பி நமக்கு கிடைக்கும்.

எனவே எப்பொழுதும், உறுதியாக நிலைத்திருக்கும்  வாசகங்கள்.... 

தாயிற் சிறந்த கோவிலுமில்லை ..
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. 

தந்தையர் தினப் பதிவுக்காக நான் எழுதியதுடன் நான் படித்து பிடித்த கதை ஒன்றையும் இத்துடன் பகிர்ந்துள்ளேன். அனைவரும் படிப்பதற்கு மிக்க நன்றி. 

வலையுலக சகோதரர்கள் அனைவருக்கும் என்றுமே தந்தையர் தின நல்வாழ்த்துகள். 


படித்ததில் பிடித்த கதை.
========================
ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி... மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பதுதானே அவனுக்குப் பிடிக்கவில்லை.

நேற்று வரை வீட்டில் இருந்ததால்
அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி
இருந்தது .இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.


வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்”என்று எண்ணிக் கொண்டான்.

நேர்காணலுக்கு கிளம்பினான்.
“கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.

நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.
கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை .கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்
கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.
அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.
தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக
குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்
கொண்டிருந்தது.

குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.

வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார் கள். மெதுவாக. மாடிப்படியில் ஏறினான்.

நேற்று இரவில் போடப்பட்ட
விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.

“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.

மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே
திகைப்பு. 

“நமக்கு இங்கு வேலை கிடைக்குமா?”
என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.
பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.

அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின் பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.

”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி
ஓடுகிறது?” என்ற அப்பாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.

இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்.

இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை.
கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்பு போய் நின்றான்.

சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே
“நீங்கள் எப்போது வேலைக்கு
சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை
வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்.

”என்ன  யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார். 

நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின்
மேலாண்மையை தெரிந்து கொள்வது
கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித் தோம்.

இங்கு வந்த எந்த இளைஞனுமே
தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.

அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.

வேலைக்குச் செல்லும் இடத்திற்கு
அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்
அந்த மகன்.



தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.

" ஆனால் தந்தை அப்படி அல்ல "

தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.



அன்னையர் தினம் எழுதும் போது யதேச்சையாக 100வது பதிவாக அமைந்தது. நடுவில் ஒரு வருட காலங்கள் எதுவும் எழுதவில்லை. மறுபடியும் துவங்கும் காலத்தில் தந்தையர் தினம் பற்றி எழுதும் போது, யதேச்சையாக பார்க்கிறேன். இது 150 தாவது பதிவு.  தந்தையின் ஆசிகளை பெற்ற ஒரு மகிழ்வு...ஒரு நெகிழ்வு.. அனைத்தும் கிடைத்திட்ட ஒரு  திருப்தி...... தங்களின் அன்பான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் காத்திருக்கும் உங்கள் சகோதரி... 
மிக்க நன்றி....

   =======🌼==🌼====🙏====🌼==🌼=======


Wednesday, June 13, 2018

நினைவுகள்....


         கூட்டுக் குடும்பங்கள் சிறந்ததெனினும், தற்போதைய சூழ் நிலைகளில் நம்மால் அதை கடைப்பிடிக்க இயலவில்லை. காரணம் ஒவ்வொருவரின்  வேலைகள், கனவுகள்,  கற்பனைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், அவசியங்கள் போன்றவை விரிந்து பரந்து  உலகளவு வியாபித்து விட்டது. நெருங்கிய உறவுகளே எப்போதோ சந்தித்து கை குலுக்கி கொள்கிறோம். அவசியமானதை கைபேசியில் பேசி,  கணினி திரையில் மனசுக்கு தோன்றும் போது பார்த்துப் பேசி உறவுகளை தொடர்பில் வைத்துள்ளோம்.  அதுவும் என்று நம் நினைவிலிருந்து கழன்று கொள்ளுமோ தெரியவில்லை. 

இதை எழுதும் போது என் பெற்றோர் (1973ல் இருக்குமென நினைக்கிறேன்.)  மதுரையில் ஒரு உறவின் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது, திருமணத்தில் சந்தித்த மற்றொரு உறவுகாரர்கள் அவர்கள் வீட்டுக்கு அழைத்ததின் பேரில் அங்கு செல்ல சம்மதித்து அவர்கள் வீட்டுக்கு சென்றார்களாம். 

அது மிகப் பெரியவீடு  வீட்டில் நான்கைந்து அண்ணன், தம்பிகள். அவர்களின் மனைவிகள் ஆளாளுக்கு மூன்று நான்கு குழந்தைகள், மனைவிகளின் சொந்தங்கள். கணவர்களின் உறவுகள் என வீடே ஒரு கல்யாண மண்டபமாய் கலகலத்துப் கொண்டிருந்ததாம்.... அண்ணன் தம்பி குழந்தைகள் ஜாடையில் ஒருவரை ஒருவர் ஒத்துப் போனதில்,  எத்தனை அறிமுகப்படுத்தியும், அவர்களை புரிந்து கொள்ள சற்று  கடினமாக இருந்ததாம். 

அவர்கள் என் அப்பா வழி உறவு என்றாலும், என் பெற்றோருக்கு அனைவரும் அவ்வளவாக  அறிமுகமில்லை. என் அப்பாவுக்கு அவர்களின் பெற்றோர் ஒன்று விட்ட வழி உறவுகள்.. அவர்கள வறுப்புறுத்தி அழைத்ததினால் இரவு தங்கி விட்டு மதியம் திரும்பி விட்டனர். மதிய சாப்பாடு பந்தி போல அனைவரும் அமர்ந்து சாப்பிட்டார்களாம்.  பார்க்கவே மிகவும் ஆனந்தமாக இருந்தது என வந்த பின் அவர்களின் உறவின் பெருமையை சொல்லி, சொல்லி என் அப்பா அதிசயித்து கொண்டே இருந்தார்.

கிட்டதட்ட 30,  35 பேருக்கு தினமும் சமையல் செய்து பறிமாறி, வீடு வாசல் சுத்தம் செய்து,  ஒவ்வொருவரும் அத்தனைப் பொழுதும்  அந்த குடும்பத்துக்காகவே கழித்து, நாட் கிழமை என்று பண்டிகை காலங்களையும் வரவேற்று,  இதில் எந்த  விதமான மனஸ்தாபத்துக்கும் இடம் தராமல் புன்னகைத்து மன மகிழ்வுடன் வாழக் கற்றுக் கொண்டு, "எப்படித்தான் இவர்கள்" என நாங்கள் அந்த உறவின் பெருமையை  நினைத்து வியந்து போனது இன்னமும் என் நெஞ்சில்  பசுமரத்தாணி போல உள்ளது.

இன்று கணவன் மனைவி அவர்களின் குழந்தைகள், அதற்கு மேல் ஒரு உறவு என்றாலே அந்த வீட்டை ஒரு அதிசய பொருளாக பார்க்கிறார்கள்.  காலம் மாறி விட்டது.  நான் முதலில் சொன்ன காரணங்கள் கூட்டுக்குடும்ப வேர்களை தாக்கி  அந்த மரங்களை செல்லரிக்க செய்து  வீழ்த்தி விட்டன.

அந்த பெருங்குடும்பத்தை நானும் பார்க்க வேண்டுமென அம்மாவிடம் எத்தனையோ முறை அவர்களைப்பற்றி பேச்சு வரும் போதெல்லாம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அது நடக்கவில்லை.. வாழ்க்கைப் படகு திசைகள் மாறி பயணித்துதானே போகும். நினைவுகள் மட்டும் வருத்தமான சுமைகள், மகிழ்வான சுமைகள்  என சுமைகளை சுமந்து கொண்டு படகுடனே பயணிக்கும். 

(வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.)

அன்று  நடக்காத ஒன்றை,  தெரியாத முகங்கள் ஏற்படுத்திய  உற்சாக உறவுக் கூட்ட மகிமையை, அப்படி சேர்ந்து பேசி, கூடி மகிழ்ந்திருக்கும்  உறவின் பெருமையை அறிய வைக்க  இன்று "எங்கள் ப்ளாக்" மூலமாக உணரும்படி ஒரு சந்தர்ப்பம்  அமைத்து கொடுத்த இறைவனுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

ஒரு குடும்பமாக தினமும் அவரவர்கள் சந்தோசங்கள், வருத்தங்கள் ஆற்றாமைகள் ஆக்கங்கள் என பகிர்ந்து கொள்ளும்  எ. பி உறவின் கூட்டங்களுக்கு நடுவே நானும் தினமும் பேசி உலாவி வருவது அன்றைய "நினைவுகளை" புரட்டிப்பார்த்துச் சென்றது.  இங்கும் ஒரு சிலரை தவிர அனைவரும் அறியாத தெரியாத முகங்கள்தான். (என்னையும் சேர்த்து)  ஆயினும் உடல் நலம் சரியில்லாத போது அன்புடன் விசாரிப்பதிலிருந்து, அனைவரது உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்கும் ஒரு உறவு குடும்பமிது.

என் வலைத்தளம் ஆரம்பித்து எனக்கு தெரிந்த மாதிரி பதிவுகள் எழுதி அதற்கு கருத்துக்கள் வரும் போது, அதற்கு  பதிலளித்து  எனக்கு புன்னகைக்க ம‌ட்டுமே தெரியும். ஆனால் நான் புன்னகைப்பது யாருக்குத் தெரியும்? ( மோனலிஸாவின் புன்னகை என்றால் "இதுதான்" என்று அனைவரும்  உணர்ந்தது. ஆனால் அது விலை மதிப்பற்றது.. )  இங்கு வந்து குடும்பத்தில் எ. பி குடும்பத்தில் ஒருவர் என்று ஆன பின்தான் புன்னகையிலிருந்து சற்று முன்னேறி வாய் விட்டு  சிரிக்க கற்றுக் கொண்டேன்.   ஹா. ஹா. ஹா.ஹா மிகவும் நன்றி "எங்கள் ப்ளாக்" சகோதர சகோதரிகளே அனைவருக்கும் என் அன்பான நன்றிகளை சமர்பிக்கிறேன். 


அனைவரைப் பற்றியும் வலைத்தள உறவுகள் பற்றியும் என் குடும்பத்திலுள்ளவர்களிடமும்  கூறியுள்ளேன். நல்லவர்களை பற்றி சிறப்பாக கூறுவது இயல்புதானே. என் வலைத்தள எழுத்துகளுக்கு உதவியாய் இருக்கும் என் குழந்தைகளிடமும் கூறியுள்ளேன். ஒருவேளை மரணம் வந்து என் எழுத்துகளையும், என்னையும் பிரித்தால் அதையும் பகிர்ந்து அனைவருக்கும் தெரிவித்து விடும்படியும் சொல்லியிருக்கிறேன்.  எதுவும் அவன் செயல் அல்லவா.. நம் கையில் என்ன உள்ளது....

படிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

Thursday, June 7, 2018

காத்திருப்பு....



குடங்கள் காத்திருந்தன!
குடிநீரை சுமந்து செல்வதற்காக!
தண்ணீர் வண்டியும் வந்த பாடில்லை!
தாகம் தீரவும் வழியில்லை!

பாதையின் தொலை தூரத்தில் 
பார்வையை பதிய வைத்து
அயற்சியை களைந்து தொய்வின்றி
அமர்ந்திருந்தார்கள்  அவர்கள்!

பகலில் பளு சுமந்து 
பழுதின்றி பணியாற்றி
குடிக்கும் குடிநீருக்காக
இரவில் கண்விழித்து
இன்னல் படுபவர்கள்.

ஒரு சாண் வயிற்றுக்காக,
எண் சாணையும் வருத்தி
ஆண் பெண் என்ற பாகுபாடின்றி
அனைத்து வர்க்கமும் பாடுபட்டால்,
அரைவயிறு சோறாவது,
அவ்வப்போது பகிர்ந்துண்ண முடியும் 
ஆதரவற்ற இவர்களால்!

எப்போதோ இணைத்த தெருக் குழாய்களில்
எப்பொழுதுமே குடிநீர் வரவின்றி, அதன்
சுவாசங்கள் முற்றிலும் நின்று போனதில் 
இவ்விடங்கள் தெருநாய்களின் வாசமானது 
இவர்களின் பெரும் துரதிர்ஷ்டம்!

தேர்தல் பல வந்தாலும் அடிப்படை
தேவைகளை பெறவில்லை இவர்கள்!
மாலையும் மங்கிச் சரிந்துவிட்டது...
மயங்கிச் சரிந்தது கண்ணும் மனமும்...

இருள் சூழ்ந்து இனி "நாளை" என பகல்,
இருளிடம் விடை பெற்றுச் சென்றது.
இனி இரவில் சிறிது கண் துயின்றால், 
இயலாமையை சற்று விரட்டி விட்டு
பகலவன் வருவதற்குள் பதறி எழுந்து
பணி செய்ய இயலும் இவர்களால்!

காத்திருப்போரின் பொறுமை 
சிதைந்து, முனங்கல்களும் 
சினங்களும் தடங்கலின்றி
வெளிவந்தன..முடிவில் வந்தது....

குறை தீர்க்கும் குடிநீர் அல்ல!
குமைந்த நெஞ்சங்களின்
வெறுப்பும் வேதனையும் ஏற்படுத்திய
வெதும்பல்களின் விளைவால் வந்தது
வழி பார்த்திருந்த இவர்களின் விழி நீர்!

இவர்களின் விழிநீரை சேகரித்து
வடித்திட்டு வீதிகளின் குழாய்களில்  
வாகாய் ஓட விட்டிருந்தாலும்,
அத்தனை தெருக்குழாயிலும்
அன்புடன் சிறிது நேரம்
ஆதரவாய் கொட்டியிருக்கும்.

இனி நாளை பார்த்துக் கொள்ளலாம் 
என்ற( அவ) நம்பிக்கையுடன்
களைப்புடன், கனத்த மனதுடன்,
கலைந்து போனார்கள் அவர்கள்.

குடங்கள் மட்டும் மறுபடியும் 
குறைவறவே காத்திருந்தன!
நாளை கண்டிப்பாக (வாரா) வரும்
குடிநீரை சுமப்பதற்காக !!!

Friday, June 1, 2018

கன்னி, ஆனால் தாய் - பகுதி 2

தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை தீடிரென்று வீறிட்டு அழுதது. எதற்குமே கலங்காத நிர்மலா நளினாவின் சோகத்தை சுமந்த பாரத்தில் சற்று கண்கள் கலங்க அவசரமாக குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.

அவள் அணைப்பில் ஆறுதல் அடைந்த குழந்தை மறுபடி கண்மூடி உறங்க ஆரம்பித்தது. கைகளில் மெய்மறந்து உறங்கி கொண்டிருந்த ஷீலாவை மெல்ல தொட்டிலில் படுக்க வைத்தாள் நிர்மலா. 


"இந்த குழந்தையை விட்டு செல்லவதற்கு எப்படி நளினாவுக்கு மனது வந்தது.... அவள் வாழ்க்கையை பற்றி சமயம் வரும்போது தெரிந்து கொண்டு அவள் மனதை பக்குவமாய் மாற்றி நல்லதோரு வாழ்வை அவளுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்றுதானே நினைத்து கொண்டிருந்தேன் .பாவிப்பெண்... அதற்குள் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டாளே...." நிர்மலாவின் மனம் பரிதவித்தது...


கடற்கரை .....
"சேகர்! ஏதோ முக்கியமான விஷயம் கூற வேண்டுமென்றீர்களே!" என்று கேட்டவாறு தோளிலிருந்த ஷீலாவை இறக்கி விட்டுவிட்டு அவன் அருகில் அமர்ந்தாள் நிர்மலா.

அவளை ஏறிட்டு பார்த்து விட்டு குழந்தையை பார்த்த சேகர் "குழந்தை" என்று இழுத்தான்.

அவனது தயக்கத்தை புரிந்து கொண்ட நிர்மலா, "கவலைபடாதீர்கள்! நாம் பேசுவது அவளுக்கு ஒன்றும் புரியாது," என்றாள் புன்னகையுடன்.

"நம் காதலைப்பற்றி, இத்தனை நாள் பழக்கத்துடன் நம் காத்திருந்தலைப் பற்றி என் வீட்டில் விளக்கமாக கூறினேன் நிர்மலா. கொஞ்ச நேர தயக்கத்திற்கு பின் சம்மதம் தந்து விட்டார்கள். ஆனால்..."

"ஆனால்"?

"வீட்டுக்கு மருமகள் வரும் போதே தாத்தா, பாட்டியாக அவர்களுக்கு பிடிக்கவில்லை, அதாவது..." எப்படிசொல்வது என்று தயங்கினான் சேகர்.

"புரிகிறது, சேகர்.." அவனை கையமர்த்தினாள் நிர்மலா.

"என்னைப் பற்றி எல்லாவற்றையும் கூறிவிட்டீர்களா சேகர்? அதாவது நான் இவளுக்கு தாயாகவேண்டிய சூழ்நிலையைப்பற்றி...."

" எல்லாவற்றையும் கூறிவிட்டேன் நிர்மலா!"

பேச்சுக்கள் அங்கு தடையாக, அவரவர் சிந்தனைகள் சற்று மேலோங்க, சிறிது நேரம் மௌனம் நிலவியது இருவரிடமும்.

"சரி சேகர்! நான் கிளம்புகிறேன், ஷீலா பாவம் பசியோடிருக்கிறாள்! காத்திருப்பதுதான் நாம் பழகிய ஒன்றாயிற்றே.... அடுத்த முறை  ஒரு முடிவான பதிலை கேட்டு வந்து சொல்லுங்கள்" என்று நிர்மலா அவனிடம் விடை பெற்றுக் கொண்டு நடந்தாள்.

"நளினா வீட்டைவிட்டு போய் இரண்டு வருடங்கள் ஓடி மறைந்து விட்டது. இதுவரை அவளை சந்திக்கும் சந்தர்ப்பம் வரவில்லை. இனி எப்போதோ?

பேதைப்பெண்! என்னோடு இருந்திருந்தால் என்னக்கு பாரமாக இருக்குமென்று போய் விட்டாள். இப்போது மட்டும்... நான்கு வருடமாக நேசித்து வருபவரை திருமணம் செய்து கொள்ள முடியாமல் குறுக்கீடாக நிற்கிறதே அவள் குழந்தை."

சட்டென்று உள்ளத்தில் உதயமான இந்த எண்ணத்தால் வெட்கினாள் நிர்மலா.
"சே! என்னமடத்தனம்: பிஞ்சுபோன்ற முகம், மலரைப் போன்ற மென்மையான இதயம், தன்னையே தாயென்று நினைத்து அன்பு முழுவதையும் தனக்கே வாரி வழங்கும் இந்த குழந்தை, இவளைப் போயா குறுக்கீடு என்று நினைத்தோம்!"

சாட்டையால் அடித்தது போல் வலித்தது இதயம்....... 

கண்களில் நீர் நிரண்டது. தன் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த குழந்தையை இழுத்து அன்புடன் அணைத்துக் கொண்டாள் நிர்மலா.

"யாராலும் என்னை இவளிடமிருந்து பிரிக்க முடியாது என்றுமே.. என் வாழ்நாள் உள்ளளவும் ஏன் நளினாவே  வந்து என் குழந்தை என்று உரிமை கொண்டாடினாலும், நான்தான் இவளுக்கு தாய்.. அதில் எள்ளளவும் மாற்றமில்லை " என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் நிர்மலா. 


அந்தளவிற்கு பாசக்கயிறு தங்கள் இருவரையும் பிணைத்திருப்பதை அவளால் உணர முடிந்தது. 


ரு  வாரகாலம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் கழிந்தது.

வார இறுதியில் மறுபடியும் அதே கடற்கரையில் சேகருக்காக காத்திருந்தாள் நிர்மலா. 
குழந்தை அவள் அருகே மணலில் விளையாடிக்கொண்டிருந்தது.

தூரத்தில் அவளை தேடிக்கொண்டு சேகர் வந்து கொண்டிருப்பதை கண்ட நிர்மலா கையசைத்து தான் இருக்குமிடத்தை அவனுக்கு உணர்த்தினாள்.

அவளை பார்த்த மகிழ்ச்சியில் அவள் அருகில் வந்தமர்ந்தான் சேகர்.

"சேகர், இப்போதாவது உங்கள் பெற்றோர்களின் முடிவான பதிலை கேட்டு விட்டீர்களா? என்ன சொல்கிறார்கள்?" என்று ஆர்வமான குரலில் நேரடியாகவே ஆரம்பித்தாள் நிர்மலா.

"கேட்பதென்ன, கெஞ்சி பார்த்துவிட்டேன் நிர்மலா.. அவர்கள் முடிவிலிருந்து விலக மறுக்கிறார்கள்." தயக்கமான குரலில் சேகர் றினான்.

"சேகர், உங்கள் பதில்?  நீங்களுமா என்னை சந்தேகிக்கிறீர்கள்?" சற்று தழுதழுத்த குரலில் கேட்டாள் நிர்மலா.

"சே! சே! சத்தியமாக இல்லை நிர்மலா, இந்த நான்காண்டு கால பழக்கத்தில் உன்னைப்பற்றி எனக்குதெரியாதா? நளினாவை நான் பார்த்து பேசாவிட்டாலும் நீ அவளைப்பற்றி சொன்னதையெல்லாம் கேட்டு உன்னுடன் நானும் அவளுக்காக இரக்கப் படவில்லையா, அவளுக்கு ஒரு புதுவாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்து விட்டு, அதற்கு பிறகு நம் காதலை அவளிடம் சொல்லி நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீ சொன்னதை ஆமோதித்து, நான் இத்தனை காலம் காத்திருக்கவில்லையா? இருந்தாலும்..... நீ...." தயக்கத்துடன் நிறுத்தினான் சேகர்.

"சொல்லுங்கள் சேகர், எதையோ சொல்ல வந்தீர்களே.." என்ற நிர்மலா அவன் கண்களை உற்றுநோக்கினாள்.

"நீ தவறாக நினைக்காதே, நிர்மலா. என்  பெற்றோர்கள் மட்டுமில்லை, நானும்.... என் மனைவி வீட்டுக்கு வரும் போதே ஒரு குழந்தையோடு வருவதை விரும்பவில்லை...." சற்று  தயங்கியவாறு படபடத்த குரலில் கூறினான் சேகர்.

திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிர்மலா.

"ஒரு அருமையான யோஜனை கூறுகிறேன் நிர்மலா, பேசாமல் ஷீலாவை அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விடு. அதற்கு வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன். நம் திருமணத்திற்கு பிறகும், நீ அவளை அடிக்கடி சென்று பார்த்து விட்டு வரலாம். அதற்கு நான் தடையொன்றும் சொல்ல மாட்டேன். இது உறுதி! என் பெற்றோர்களிடமும் இந்த விபரத்தை விளக்கி கூறி, அவர்கள் சம்மதத்தையும் வாங்கி விடுகிறேன்... என்ன சொல்கிறாய்?" அவனது அவசர பேச்சில் அவளை எப்படியாவது இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற வெறி மட்டுமே இருப்பதை புரிந்து கொண்டாள் நிர்மலா.

சிறிது நேரம் மெளனம் நீடித்தது இருவரிடமும்...

எதுவும் உணராத குழந்தை இருவரையும் பார்த்து தன் மழலை மொழியில் எதையோ கூறி விட்டு, முகம் மலர சிரித்து, நிர்மலாவின் மடியில் ஏறி அமர்ந்து அவள் கழுத்தை இறுககட்டிக்கொண்டது.

நிர்மலாவும் அவளை அன்புடன் அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சட்டென்று உறுதியான முகத்துடன் அவ்விடத்திலிருந்து எழுந்த நிர்மலா, தன் புடவையில் ஒட்டிக்கொண்டிருந்த மணலை தட்டியவாறு மடியிலிருந்து இறக்கி விட்ட குழந்தையை எடுத்து தோளில் சாற்றிக் கொண்டாள்.

"மிஸ்டர் சேகர், சாதாரணமான மனிதர்கள் கணக்கில் இத்தனை சீக்கிரம் நீங்கள் சேர்ந்து விடுவீர்களென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. உங்களை எவ்வளவோ உயர்ந்த மனிதர் என்றுதான் இந்த நான்காண்டு கால பழக்கத்தில் நினைத்திருந்தேன்.

என்னையே நம்பி என்னிடம் ஒப்படைத்து விட்டு போயிருக்கும் நளினாவின் குழந்தையை, என் அன்பு சகோதரி குழந்தையை, ஏன்.... நான் பெறாமல் வளர்த்து வரும் என் வளர்ப்பு மகளை நான் உங்கள் அரிய யோஜனையின்படி நான் கைவிட தயாரில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்றாவது ஒருநாள் அவள் நல்ல நிலமையில் வந்து என்னை சந்திப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு கண்டிப்பாக இருக்கிறது.  அவள் நம்பிக்கையை குலைக்க எனக்கு இஸ்டமில்லை.

நீங்கள் உங்கள் விருப்பபடி உங்கள் பெற்றோர்க்கு பிடித்தமான பெண்ணை மணந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்,  எனக்கு எந்த ஆட்சேபனையும்  இல்லை.... அல்லது, என்னை புரிந்து கொண்டு, என்னையும், என் குழந்தையையும் ஏற்றுக்கொள்ள என்று மனமுவந்து முன்வருகிறீர்களோ, அன்று அந்த நாளில் நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.

அதுவரைக்கும் அது எத்தனை ஆண்டு காலமானலும்சரி... காத்திருப்பேன்..  ஏனென்றால், நான் உங்களை  மனமாற நேசித்திருக்கிறேன். இப்போதும் நீங்கள் குழந்தையை அநாதையாக விட்டு விடுமாறு சொல்லும் யோஜனையை தவிர்த்து, உங்களிடமிருக்கும் பிற நல்ல குணங்களுக்காக, இத்தனை நாள் நாம் பழகிய கண்ணியமான நட்புக்காக உங்களை நேசிக்கிறேன்.

தவிர என்றோ உங்களையே  என் கணவராகவும்  என் மனதில்  வரித்து விட்டேன். மனதில் அமர்ந்திருக்கும் ஒருவரை தூக்கி எறிந்து விட்டு மற்றொருவரை மணந்து கொள்ள எனக்கு தெரியாது.  என்னால் முடியவும் முடியாது,  நான் வருகிறேன்."

சொற்களை சிந்திய வேகத்தில் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலையும் எதிர்பாராமல்  நடந்து சென்றாள் நிர்மலா.

அவளின் நிதானமான பேச்சில், உறுதியுடன் கூறிய முடிவில், மேற்கொண்டு என்ன பேசுவது  என்று தெரியாமல், தடுத்து நிறுத்தவும் தோன்றாது, திரும்பியும் பாராது செல்லும் அவளையே திகைப்புடன் பார்த்தவாறு, அமர்ந்திருந்தான் சேகர்.



முற்றும்.

இதன் முந்தைய பகுதியை காண இங்கே சொடுக்கவும்.

பகுதி: 1