Monday, December 31, 2018

வாழ்த்துகளுடன், படித்ததும் பார்வைக்கு....

இப்போதுதான் 2018 ம் ஆண்டின் துவக்கம் மாதிரி இருந்தது.  அதற்குள் இவ்வருட கடைசி மாதத்தில் இருக்கிறோம். காலம் நம்முடன் போட்டி போட்டு கொண்டு ஓடுகிறதா? இல்லை நாம்தான் காலத்தை ஜெயிக்க விடாது செய்ய வேண்டுமென ஓடி ஓடி கண்மூடி திறப்பதற்குள் இறுதி மாதத்தில் விரைவாக வந்து நிற்கிறோமா? புரியவில்லை.... ஆனால் இன்னமும் ஒரு நாளுக்குள், மறுபடி ஒரு புது வருடத்தை சந்திக்கப் போகிறோம். சென்ற வருடத்தில், எவ்வளவு  சந்தோஷங்கள், எத்தனை மகிழ்வுகள், இல்லை,  எத்தனை பிரச்சனைகள், எவ்வளவு கவலைகள் என அனைத்தையும் சமமாகவோ, அல்லது, முறையே நிறையவோ, குறையவோ சந்தித்திருப்போம். அது போல அல்லாமல் இனி வரப் போகும் புது வருடமாகிய  2019 இனிதே பிறந்து எப்பொழுதும் வருட இறுதி மாதம் வரை அனைவருக்கும் மகிழ்வினை மட்டும் அள்ளி அள்ளி தந்து செல்ல வேண்டுமென மனதாற காலத்திடம் வேண்டிக் கொள்கிறேன். 

முந்தைய காலங்கள் என்பது ஒரு வருடத்திற்கு வருடம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. சென்ற வருடத்தில் இருந்த செளகரியங்கள் "அ" வை தனக்கு முன் சேர்த்து கொண்டோ, அப்படி சேர்ந்து இருந்தவைகள் "அ" வை விடுவித்து விட்டோ, நடை போட்டபடிதான் இருக்கின்றன. இதோ கீழே நான் படிக்க நேர்ந்தவைகளை அனைவரும் உணர்ந்திருக்கலாம். (ஏன் அனைவரும் படித்தேயிருக்கலாம். அப்படி உணராதவர்கள் இனி உணரும் சந்தர்ப்பங்கள் வராது என இவை கூறுகின்றன.)

இந்த விஞ்ஞானமும் வருடத்திற்கு வருடம் முன்னேறிக் கொண்டுதான் உள்ளது. அதன் பயன்பாடும் நமக்கு தேவையாகத்தான் உள்ளது. ( கீழே காணும் இவையும் விஞ்ஞானம் வெற்றி கண்ட வாட்சப் என்ற பயன்பாட்டின் மூலம் வந்து படித்தவைதான்.) ஒன்றுமில்லை.. ஒரு கையடக்க கருவியில் இந்த  மாதிரி விஷயங்களை தொகுத்தோ, இல்லை தனித்தனியாகவோ, வெளியிட்டு பகிர்ந்து மகிழ்கிறோம். இதுவும்  விஞ்ஞான வளர்ச்சியினால்தான் சாத்தியமாகிறது.                                     
                           
                                ஆனால்,

இந்த விஞ்ஞான தரகரின் விபரீத வளர்ச்சியால், சோம்பேறித்"தனம்" என்ற ஒன்று உண்மையான "தனத்தை" விட அதிக செல்வாக்குடன் நம் உடம்பில் வாடகை எதுவும் எதிர்பாராமல் வந்தமர்ந்து குடியேறி விட்டன.  ஆக்கிரமித்து விட்டவைகளை சில சமயம் அகற்ற இயலாமல் தத்தளிக்கிறோம். நம்முடைய பெற்றோரின் சிரமங்களுக்கிடையே வளர்ந்து விட்டு தற்சமயம் சொகுசின் சுகம் புரிந்து விட்ட நாமும் நம்  இளைய தலைமுறையினருக்கு அதே சுகத்தை அது கெடுதல் என புரிந்து கொண்ட பின்னரும்   தக்கவைக்க பாடுபடுகிறோம்.

என்ன இருந்தாலும் உடல் உழைப்பும், அதனால் வரும் இன்பங்களும் இனியதல்லவா.!அந்த உழைப்புகளையும். இன்பங்களையும் முழுதாக நாமும் அனுபவியாமல், நம் சந்ததிகளுக்கும் அது என்னவென்றே தெரியாதபடிக்கு செய்து விட்டோமோ எனத் தோன்றுகிறது.

இந்த மாதிரி வருடங்கள் உருண்டோடி, காலச் சுழற்சியில் மீண்டும் பழைய காலங்கள் ஏற்படலாம்.  அதைக்காண நம்மில் பின்வரும் எந்த தலைமுறை புண்ணியம் செய்திருக்கிறதோ.! அந்த கடவுளுக்கே வெளிச்சம்.. ஆனால் அந்த கடவுளே ஒளி உமிழும் பலவகையான விளக்குகளையும்,  மின்சார மணி எழுப்பும் ஓசைகளையும், தற்சமயம் மெளனமாய் அங்கிகரித்து வருகிறார்.
                   எது எப்படியாயினும் 
அனைவருக்கும் வரும் புத்தாண்டு மகிழ்வான தருணங்களை நிறைய தர வேண்டுமென மனதாற ஆண்டவனிடம்  பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

       வலைத்தள சகோதர, சகோதரிகள்   
  அனைவருக்கும்  இனிதே பிறக்கவிருக்கும்
                           2019 ம் ஆண்டின்
                   புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

படித்ததை பிடித்ததால் பகருகிறேன்.

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

 காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

 வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார்.
குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

 ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

 ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

 பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

 விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

 மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

 உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

 மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

 வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

 அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

 ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

 அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

 ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

 ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

 ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

 உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

 தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

 ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது…

அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் மட்டுமே தற்கொலை செய்துகொண்டனர்…

 பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

 10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

 யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

 நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

 பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

 10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

 போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

 வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

 வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

 ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

 10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

 10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

 பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…

 கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…

அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

 பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

 தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

 12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

 இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

 உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

இது எல்லாமே உண்மைதானே. ! என எண்ணவும் தோன்றுகிறது

Friday, December 28, 2018

சொ(நொ)ந்த கதை


பழமொழிகள் பெரும்பான்மை நம் வாழ்வில் என்றுமே  உண்மையானதாக நடந்தேறி விடும். ஒன்றை அறியாமல் செய்யும்  போது  நாம் அறிந்த அதற்கு பொருத்தமான பழமொழிகளை சுட்டிக் காண்பிப்பதும் நம் வாடிக்கை.

அது மாதிரி "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி." .. "நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்." "ஆசைதான் அழிவுக்கு காரணம்". இதெல்லாம் நம் செய்கைக்கு மாறாக ஏதாவது நடக்கக் கண்டு நமக்குள் எழும் பழமொழிகள். இன்னும் இதைப் போல் நிறைய இருக்கும். அவையெல்லாம் சட்டென நினைவின் அப்பாலுக்கு சென்று விடுகிறது.

25ம் தேதி மாலையன்று கடைக்குச் சென்று வீட்டுக்கு தேவையான (பலசரக்கு) சாமான்களை வாங்கி கொண்டு வரலாமென நாங்கள் அனைவரும் குழந்தைகள் புடைசூழ கிளம்பினோம். இரவு சாப்பாட்டுக்கு அப்படியே கடை அருகில் ஒரு புது உணவகம் உள்ளது. (அது என்னவோ பழைய உணவகந்தான்.! நாங்கள் இன்னமும் அதனுள் நுழையவில்லை. அதனால் அது இன்னமும் புதுசு.) அங்கேயே ஏதாவது இட்லி, தோசை என முடித்து விடலாம் என தீர்மானத்தோடு புறப்பாடு.

நான் பொதுவாக இந்த மாதிரி விடுமுறை நாட்களில், அவர்கள் (இளைய தலைமுறைகள்) வெளி கிளம்ப முடிவெடுத்தால், அவர்களுக்கு ஏதாவது பிடித்த மாதிரி சாப்பிட்டு விட்டு போகட்டும்.! நமக்கு சாதம் போதுமென்று இருந்து விடுவேன். இல்லையெனில், சப்பாத்தி ஏதாவது வாங்கி வரச் சொல்லி அன்றைய தின இரவு கச்சேரியை இனிதாக முடித்து விடுவேன்.

ஆனால் அன்றைய தினம் ஆசை வென்றது. "திங்க" ஆசை... "வாரந்தோறும் எ. பிக்கு சென்று "திங்க"ப்பதிவை ஒழுங்காய் படித்து சுவைத்தால் மட்டும் போதாதா? அப்படியென்ன  "திங்க "ஆசை உனக்கு?" என என் மனசாட்சி ஒரு கிலோ அரிசியை இடி இடியென்று இடித்து மாவாக்கிக் கொண்டிருக்கிறது. ( இப்படி இடித்தால் போதாது.. அரிசியில்லாமலே உன்னை இடித்து வலியை உணரச் செய்ய வேண்டுமென்று இடையிடையே வசவு வேறு.) போகட்டும்..! எத்தனை இடிகள் கொடுத்தாலும், ஆசை நின்று ஜெயிக்கும் என்ற உண்மை அதற்கு தெரியாததா?

விஷயம் என்னவன்றால்,  கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வைத்தோம். அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று திரும்பிய மகன் பில்லை செட்டில் பண்ணி முடிக்க, நான் கடைக்குள் சென்ற கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்து விட்ட என் பேத்தியை தூக்கியபடி வெளியில் படி இறங்கினேன்.  விக்கிரமாதித்தியன்  சிம்மாசனபடிகள் மாதிரி, நான் கால் வைத்த இரண்டாவது படி என்னைப் புறக்கணித்து உதறி விட நானும் மிச்சமுள்ள படியை உதாசீனம் செய்தபடி கடைசி படியில் தஞ்சமடைந்தேன். நல்லவேளை..! குழந்தையை இறுக பிடித்தபடி கீழே  வந்து அமர்ந்து விட்டதால், அவளுடைய தூக்கந்தான் கலைந்ததே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனால் என் வலது காலை இரண்டாவது படி பதம் பார்த்து விட்டதில் கடும் வலி பாதத்தில் தோன்றி விட்டது. கூட்டம் கூடியதால் அவமானம் தாக்க வலியை பொருட்படுத்தாது எழுந்து அமர்ந்தேன். அந்த வேண்டுதல் இல்லா உருளல் கடையில் மேலும் ஒரு சாமனை கூடுதலாக வாங்க வைத்தது.  அதுதாங்க  வலி நிவாரணி..! இப்ப என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த "அயோடக்ஸ்" அதுவும் "ஐ (அ) யோ பாவமே" ன்னு "டக்"நடை போடாமல் "ஸ்" என்று வேகமாக என் கையில் வந்து விழுந்தது. அதனின் அன்றைய விதி கடையிலிருப்பது அதற்கு கடைசி நாளானது.

நான் எப்போதுமே  பாட்டி வைத்தியத்தில் நம்பிக்கை கொள்பவள். எனவே அதிக வலியென்று காட்டிக் கொண்டால், மருத்துவமனையை சந்திக்க நேருமென்ற பயத்தில்., பல்லை கடித்தபடி, காலை இழுத்தபடி கூட வந்த அனைவரிடமும் கண்ணிலும் வலியை காட்டாது, கொஞ்சம் நடந்து சென்று, அந்த புது உணவகத்தில் இரண்டு இட்லிகளை விழுங்கி வைத்து வீடு வந்து சேர்ந்தோம்.  அதான் "திங்க"ஆசை. அவஸ்த்தை படுகிறாய்...! இப்ப ஜென்ம சாபல்யம் ஆயிற்றா?" என மெளனத்தில் விளையாடும் மனசாட்சி நிறையவே குத்தி காண்பிக்க, கால் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேலையை காண்பிக்க தூக்கம் வெகுவாகவே தொலை தூரமானது. அப்போதுதான் வலியை மறக்க அந்த பால் பாக்கெட் கதையை கையில் எடுத்தாளவும் வேண்டியதாகி விட்டது. பதிவை வெளியிட்ட பின்னரும் கால் வலி அன்றைய இரவு தூக்கத்தை தொலைவிலேயே வைத்திருந்தது. மணி மூன்றுக்குப்பின் சற்று கண்ணயர்ந்தேன். (மறுநாள் நான் போட்ட அன்றைய பதிவுக்கு வந்த மறு மொழிகளுக்கு கூட உடனடியாக நன்றி தெரிவித்து என்னால் பதிலளிக்க முடியவில்லை. விரைவில் அளிக்கிறேன்.)

காலை எழுந்தவுடன் மூன்றெழுத்து, முன்னதாக நின்றபடி அழைக்க அப்பமாக இருந்த கால் இப்போது மேலும் இரண்டு நாள் மூன்றெழுத்துடன் பயணித்ததில், கஜேந்திரன் காலாக மாறியுள்ளது. மேற்கொண்டு எப்படியாகுமென விளக்க நான் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டுமோ? இல்லை, இந்த வருடத்திற்குள் உன்னை ஒரு வ(லி)ழியாக செய்கிறேன் என கங்கணம் கட்டிக் கொணடிருக்கிறதோ என்  விதி தெரியவில்லை...! ஒரு இரண்டு நாள் பொறுத்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். இப்போது புரிகிறதா? ஏன் பழமொழிகளின் தாக்கத்தை சுட்டி காட்டினேன் என..! எனவே நடக்க வேண்டியவைகள் நடந்துதான் தீரும். (ஆனால் என்னால்தான் வீட்டுக்குள்ளேயே  வலது கால் ஊன்றி நடக்க இயலவில்லை.) என்னவோ "பகிர்ந்து கொண்டால், மன பாரம் குறையும்" என்ற புதுமொழிப்படி  இந்தப்பதிவும் உருவாகி விட்டது.

பி. கு
"எப்படியெல்லாம் ஒரு பதிவை தேத்துறாங்க "என நீங்கள மனதில் நினைப்பதற்குள், உண்மையிலேயே இந்த வருட முடிவுக்குள், அதுவும் இந்த இறுதி மாதத்தில் ஒரு நாலு பதிவாவது போட வேண்டும் என நான் நினைத்ததுதான் இந்த பதிவுக்கான காரணம். (அப்போ அட ராமா. .! இன்னொரு கண்ராவி வேறே இருக்கா?) முணுமுணுப்பு கேட்கிறது.. பொறுத்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.!
           
                   வலையுலக பதிவர்களுக்கு
                   அழகுக்கு அழகு செய்வது                           
                 பொறுமையெனும் நற்குணமே..!


Wednesday, December 26, 2018

தன்னை உணர்தல்..



இருளில் ஒரு ஒளி.... . 


இப்ப எவ்வளவு மணியிருக்கும்?  ஒரே இருட்டாயிருக்கே...!  இன்று காலையிலே கண் திறந்ததும் கும்பலோடு கும்பலாக, இங்கே இவங்க வீட்டுக்கு வந்தாகி விட்டது. இவங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் அன்புடனே அடைக்கலம்  தருகிற மாதிரி என்னோடு காத்திருந்த மிச்ச என சகாக்களோடு, அவங்க அணைத்தெடுத்து கொண்டு சேர்த்த இடத்திலே அமர்ந்து கொண்டேன். குளுகுளுன்னு அந்த இடம் நல்லாத்தான் இருந்தது. பின்னே இதுதானே எங்களுக்குரிய இடம். இந்த குளுகுளுப்பில் இல்லாவிடில் நாங்கள் வாழ்வது கஸ்டம்.


அதுக்கப்புறம் இந்த வீட்டுலேயிருக்கிற இவங்க நிறைய தடவை நாங்க இருந்த இடத்திற்கு வந்து அவங்களுக்கு வேண்டியதை எடுத்துகிட்டு போகும் போது, எங்களையும் பாசமா பார்கிற மாதிரி எனக்குத் தோணும். சரி நம்மை இங்கிருந்து எப்பத்தான் விடுவிப்பார்கள்.   மைண்ட் வாய்சை உணர்ந்த அருகிலிருந்த சகாக்கள் எல்லாம் "உனக்குத்தான் முன்னுரிமை... நீதான் முதலில் தென்படற மாதிரி இருக்கிறாய்". என்றனர்.


 விழி திறந்து காத்திருந்த போது, மறுபடியும் யாரோ நாங்க இருக்கிற கதவை திறக்கிற மாதிரியிருந்தது. திடிரென விளக்கின் ஒளிபட்டு வெளிச்சம் ஒரு கண்ணை சற்று கூச வைத்தது. "யாரது" என்று பார்த்த போது, அவர்களும் என்னை கூர்ந்து பார்த்து வியப்பது புரிந்தது.


அப்புறமென்ன? ஒளியை கூட்டி என்னை விதவிதமாய், வடிவமைத்து அனேக தடவைகள், அவர்கள் கையிலிருக்கும் ஒரு கருவியைக் கொண்டு  மேலும் என் கண்களை கூசச்செய்தார்கள்.


எனக்கு ஒன்றும் புரியவில்லை, ..! "என்னப்பா செய்றாங்க இவங்க?" என்று அருகிலிருக்கும் சகாக்களிடம் அவர்களுக்கு தெரியாமல் மெல்ல கேட்டேன்.  ஒரு சகா அதில்  விபரமறிந்தவர் போலும்! " நீ எங்களை விட மூக்கும் முழியுமாக பளிச்சென்று இருக்கிறாய் இல்லையா.! அதனால்தான் உன்னை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்கிறார்கள்." என்றார்.


எனக்கு மிகவும் ஆச்சரியத்தோடு சற்று மகிழ்வும் உதயமானது. அவ்வளவு அழகா நான்..! என்ற ஒரு எண்ணம் வந்த அந்த விநாடியில்  கொஞ்சம் கர்வம் கூட அந்த ஒரு கணம் வந்து போனது. அங்கிருந்த என் சகாக்களுக்கு என் மேல் கொஞ்சம் பொறாமை வந்திருக்கும் என்று கூடத் தோன்றியது.


அந்த புகைப்படக் கருவியை அருகில் வைத்து  மேலும் அழகாக ஒரு படமெடுத்தார்கள். "நீ எப்படி இருக்கிறாய் பார்த்தாயா?" என என்னிடம் காட்டிய போது நானே என் கண்ணையும், அழகையும் கண்டு கொஞ்சம் பூரித்துப் போனேன்..! என்பதை சொல்லவும் வேண்டுமோ.!


பின்னர்  மனம் மகிழுமாறு மேலும் இரண்டு கிளிக்குகள்..



நான் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று விட்டேன்.  அடுத்து கதவை மூடி விட்டு படமெடுத்தவர் சென்றதும், சகாக்களிடம் பேசாது அமைதியாக ஒதுங்கியே இருந்தேன்.

 "என்ன சிந்தனை? புகைப்படம் எடுத்து விட்டதால், உன்னை அப்படியே விட்டு விடுவார்களா இந்த மனிதர்கள்.!  நாளை விடிந்ததும் நம்மில் பலர் சென்று விட்ட இடத்திற்கு நாமும் செல்ல வேண்டியதுதான்...! ஒரு நினைவுக்காக உன்னை படம் எடுத்து வைத்துள்ளார்கள். வேறு ஒன்றுமில்லை நன்கு யோசி.!" என்று மறுபடியும் என்னை நோக்கி குரல் வந்தது,.


 உண்மையாகவா? சட்டென்று என் குரல் உடைந்தது.  கண்கள் லேசாக தழும்ப பார்த்தது." இல்லை!  உங்களுக்கு என்மேல் கொஞ்சம் பொறாமை வந்து விட்டதோ".. என எனக்கு தோன்றுகிறது. நான் கிட்டத்தட்ட அழுகைக்கு அருகாமையில் வந்து விட்டேன்.


"என்ன இருந்தாலும் நீ கொஞ்சம் அழகாகத் தான்  இருக்கிறாய்...ஆனாலும் அதில் என்ன பயன்? நாம் அனைவரும் ஒரே இனந்தான்.. நாங்கள் ஏன் உன் மேல் பொறாமை கொள்ளப் போகிறோம்?  நம் அன்னை மடியில் கடைசிவரை வாழ நமக்கு கொடுப்பினை இல்லை.. அதுதான் உண்மை.. நம் அன்னையின் நலனுக்காகவும், அன்னையை காக்கும் இந்த மனிதர்களுக்கு பயனுள்ளதாக வாழ்வதற்காகவும்  மட்டுமே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். புரிந்து கொள்..!



வந்த அழுகை நிறுத்தி நிறைய நேரம் யோசித்த  போது புரிகிற மாதிரி இருந்தது. வேறு வழியில்லை.! மனதை தேற்றிக் கொண்டு எடுத்த படங்களையும், படம் எடுத்தவர்களையும் மறந்து விட வேண்டியதுதான்.! கடவுளால் படைக்கப்பட்டிருந்தாலும், மனிதருக்காக நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையை ஜீரணித்த வண்ணம் மறு நாள் கடமை ஆற்றுவதற்காக காத்திருந்தேன்.



விடியும் தறுவாயில் மற்றைய சகாக்களுக்கு நன்றி கூறி விடியலுக்கு  தவமிருந்த போது,  கண்ணில் வெளிச்சம் வந்து விழுந்தது. சரி. சரி வெளியில் சென்று கடமையின் நிமித்தம் பயணிக்க எனக்கு விடை தாருங்கள்.  🙏  நன்றி.. 

பி. குறிப்பு....
அன்று என் கண்ணில் பட்ட அந்த நந்தினி பால் பாக்கெட் மிக அழகாக கண்ணும் மூக்குமாக அம்சமாக காட்சி அளித்ததால், இந்த பதிவு உருவானது. படங்களையும் பதிவையும்  பொறுமையுடன் ரசித்தவர்களுக்கு என் நன்றிகளும்.... 🙏... 

Sunday, December 16, 2018

நேர்மறை எண்ணங்கள்.

அன்பார்ந்த வலைத்தள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். 

நடப்பவை அனைத்தும் நலமாக அமையட்டும்

நல்லது நடந்தால் எப்போதுமே மளது சந்தோஷம் அடைகிறது. அதுவே துன்பங்கண்டு மனம் மட்டுமல்லாது  உடலும் சோர்வடைகிறது.  எதிர் மறை எண்ணங்களினால், இந்த நிகழ்வுகள் நடந்ததுவோ,  என மனம் ஐயமுற்று சிறிது தடுமாறுவதால், தனக்குத் துணையாக இருக்கட்டுமென உடலையும் பாதிக்க வைத்து பார்த்து சந்தோஷம்டைகிறதோ? இந்த நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை, மனது தீர்மானிக்கிறதா? இல்லை,  நம்  மூளை தன்னைத்தானே சலவை செய்து தூய எண்ணங்களுக்கு  வேர் ஊன்றி வளர்த்து விருட்சமாக பெருகச் செய்து, இடையே தான்தோன்றித்தனமாக வளரும் களையகற்றி, செழிப்பாக வளரும் விருட்சத்திற்கு  துணையாக இருக்கிறதா? என்பது யாரும் அறியாத தேவ ரகசியம். 

நல்லதை நினைத்தால் நல்லதாகத்தான் நடக்கும். அப்படி நல்லதையே நினைக்கும் போது. எப்படி திடீரென எதிர்மறையான நிகழ்வுகள் நடந்தேறி விடுகின்றன.? இது அடிக்கடி வக்கரித்து மாறும் மனதின் நிலையற்ற  ஆணவ குணத்தினால், எழும் விபரீத போக்குகளா?  இல்லை, அவ்வப்போது சலவை செய்யும் மூளை என்ற இயந்திரத்திற்கு ஒவ்வாமையால் எழும்  பழுதுகளா? புரியவில்லை....! ( இதற்கு உலகில் அவரவர் மனதில் ஏற்படும் தாக்கங்கள் காரண காரியங்களோடு, ஊர்ஜிதப்படுத்தப்பட்டு, கருத்துக்கள் வேறுபட்டு போகும்... இல்லை, வேரோடி நிலையாய் நிற்கும். இது வாதிப்பவர்களின், மூளையின் திறனைப் பொறுத்தது.) ஆனால், மூளையின் உத்தரவின் பேரில்தான், மனதும், உடலும் இயங்குகிறது என விஞ்ஞானத்திலிருந்து, மெஞ்ஞானம் வரை உறுதிப்படுத்துகிறது.  மொத்தத்தில் இன்ப துன்பங்களை சமமாக பாவிக்க மனமானது மிகவும் பக்குவமடைய வேண்டும். அதனை ஆசைகளற்று, நிர்மலமாக அமைதியாக இருக்க மூளை பயிற்றுவிக்க வேண்டும். அதனுடைய ஆளுமையை மனது நிராகரிக்காமல், " நம் நலனுக்குத்தான்" என  ஆழமாக புரிந்து கொண்டால், மேற் சொன்னது நடக்க. வாய்ப்பிருக்கிறதோ என்னவோ..!

இதையெல்லாம் மீறி விதியின் பாதை அதன் வழியே நம்மை நடத்திச் செல்லும் ஆற்றல் மிக்கது. அதன் சக்தியின் வலிமைதான் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை ஒருவரின் மனதிலோ, மூளையிலோ தோற்றுவித்து களிப்பிற்கும், களைப்பிற்கும் வழி வகுக்கிறது என்பதை  நம்மையறியாமல் நடக்கும் செயல்கள் நிரூபிக்கின்றன. இதன் விளைவில் நினைவடுக்குகளில் இருந்து எழுந்தவை இந்தக்கதை. 

கதை.. . 

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் விதியை மதியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அதிகம் கொண்டிருந்தான் அவன் அமைச்சரோ, விதிப்படித்தான் அனைத்தும் நடக்கும் அதை மாற்ற யாராலும் இயலாது என்ற எண்ணம் உடையவர். இதனால் இருவருக்குமிடையை நிறைய விவாதங்கள் நிகழும். மதியால் விதியை வெல்ல இயலாது என்பதை ஆதாரத்துடன் நடைமுறையாக நிரூபிக்க தக்க தருணத்தை அமைச்சரும் எதிர்பார்த்து காத்திருந்தார். அதுபோல் அரசனும், தனக்கும் வரும் ஒரு சமயத்திற்காக ஆவலோடு காத்திருந்தான்.

ஒரு நாள் அரண்மனை மேன்மாடத்தில் அமர்ந்தபடி அரசனும், மந்திரியும்  ராஜ்ஜியபரிபாலனைகள் மற்றும், இதர விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, தெருவில் ஒரு ஏழை மூதாட்டி நடமாடிக் கொண்டிருந்தவர்களிடம், தன் ஒரு வேளை உணவுக்கு  யாசகமாக கையேந்திக் கொண்டிருப்பதை கண்டதும், அரசனுக்கு ஒரு எண்ணம் உதயமானது. உடனே அமைச்சரை பார்த்து, " மந்திரி, தெருவில் ஒரு வயதான பெண்மணி வருவோர் போவோரிடம் கையேந்தி யாசகம் கேட்டபடி இருக்கிறார். பாவம்! யாருமில்லாதவர் போலும்.! அவரை அழைத்து வந்து நல்லதொரு ஆடை அணிய தந்து வயிறு நிரம்ப தினமும் மூன்று வேளை உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்." என்றார்.

அமைச்சரும் அரசனின் உத்தரவை சிரமேற் கொண்டு காவலாளியை அழைத்து அரண்மனையிலேயே அப்பெண்மணிக்கு ஒரு அறையை ஒதுக்கித்தந்து அரசனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

சில நாட்கள் கழிந்ததும், அமைச்சரை தனியே சந்தித்த அரசர், அரசின் முக்கிய வேலைகளைப் பற்றி அளவளாவிய பின்னர், "அமைச்சரே, சில தினங்களுக்கு முன் ஒரு மூதாட்டியை அழைத்து வந்து பராமரிக்கத் சொன்னேனே.! அந்த மாது எப்படி உள்ளார்கள்? நலந்தானே.? "என்று வினவினார் அரசர்.

" மன்னா! தங்கள் அரசாட்சியில் நலமில்லாதவர் என்றொருவர் உண்டா? அவ்வாறிருக்கும் போது தாங்களே சிரத்தை எடுத்து, தங்கள் இயல்பான இரக்க குணத்தினால் ,கவனிக்கப்பட்டு, தங்கள் கருணையினால், பராமரிக்கப்பட்டு வரும் அந்த பெண்மணி நலமில்லாமல் இருக்க முடியுமா?" என்று பணிவுடன் கூறவும், அரசனின் முகமெங்கும் மந்தஹாசம் பொங்கி வழிந்தது.

"மந்திரி, நமக்குள் ஒரு அந்தரங்கமாக ஒரு விவாதம் நடைபெற்று வருகிறதே? நினைவுள்ளதா? விதியை மாற்ற இயலாது என தாங்கள் என்னிடம் அடிக்கடி விவாதிப்பீர்களே...! இன்று நான் அதை  மாற்றி விட்டேன். யாசகம் கேட்டு வாழ்ந்து கொண்டிருந்த அந்த மூதாட்டியை இன்று ராஜ போக உணவுடன், அரச மாளிகையில் தங்குபடி மாற்றி விட்டேன் பார்த்தீர்களா? அதனால்தான் விதியை மதியால் வெல்லலாமென ஆணித்தரமாக கூறிக் கொண்டேயிருப்பேன். இப்போதாவது என் சொல் உண்மையாகி விட்டதை ஒத்துக் கொள்ளுங்கள். "அரசர் தம் எண்ணததை தெரிவுபடுத்தியபடி,  பேசி முடித்தார்.

மந்திரியின் முகத்தில் சிறு சலனமும்  இல்லாமலிருப்பதை ஒரு கணம் கண்ட அரசரின் முகத்தில் மந்தஹாசம் சட்டென மங்கத்துவங்கியது. " ஏன் மந்திரி.! இந்த முக வாட்டம்?  நான் கூறியதில் ஏதும் பிழை உள்ளதா? என்று அரசர் மறுபடி சற்று சினத்துடன் வினவினார்.

அரசனின் கோபத்தை உணர்ந்த மத்திரி அவசரமாக தன் மெளனம் கலைத்து, " "மன்னித்து விடுங்கள் அரசே..! தாங்கள் கூறியதை நினைத்தபடி ஏதோ யோஜனையில் ஆழ்ந்து விட்டேன். மன்னித்து விடுங்கள்.. நீங்கள் கூறியபடி அந்த பெண்மணி நலமாகத்தான் உள்ளார். நாம் அவரை ஒரு தரம் சென்று கண்டு வருவோமா? என்று சாந்தமாக கூறவும், அரசரின் சினம் தணிந்து, "சரி என கூறியபடி அமைச்சருடன் புறப்பட எத்தனித்தார்.

இருவரும் மூதாட்டி தங்க வைக்க பட்டிருந்த அறைக்கு வந்ததும், அமைச்சர்,  "அரசே அங்கு பாருங்கள்." என பணிவுடன் சுட்டிக் காண்பித்ததும், அறையுனுள் பார்த்த அரசர் ஒரு கணம் திகைத்து விட்டார்.  அங்கு இருந்த அந்த மூதாட்டி, தனக்கு கொடுக்கப்பட்டிருந்த உணவை, கவள, கவளமாக உருட்டி, சுவர்களில் இருந்த மாடக்குழிகளுள் வைத்து, "அம்மா தாயே,.! பசிக்கிறது ஒரு கவளமேனும் உணவு தாருங்கள்.. என்று கேட்டபடி எடுத்து உணவு உண்டபடியிருந்தாள்.

யோசனையுடன் திகைத்து நின்றிருந்த அரசரை, அமைச்சரின் "அரசே" என்ற பணிவான குரல் இவ்வுலகிற்கு கொண்டு வரச் செய்தது.

" அரசே,! நாம் எத்தனை செல்வச் செழிப்புடன்  உணவு தயாரித்து கொடுத்தாலும், அவள் ஊழ் வினையை மாற்ற முடியவில்லை பார்த்தீர்களா? இப்படி உணவருந்தினால்தான் அவளுக்கு திருப்தியாக இருக்கிறது. இதை காவலர்களும் என்னிடம் அவள் வந்த அன்றிலிருந்து கூறினார்கள். இதைதான் நான் அவள் விதி என்கிறேன். நீங்கள் எத்தனை செல்வம் கொடுத்து அனுப்பினாலும், அவள் அத்தனையையும் பறி கொடுத்து விட்டு இப்படி கையேந்தி தான் தன் வாழ்வை நகர்த்துவாள். எத்தனை காலம் அவள் இப்படித்தான் வாழ வேண்டுமென்று இருக்கிறதோ, அத்தனை காலங்கள் வரை அவளால் ஏதும் செய்ய இயலாது,, .! இதை யாரலும் மாற்றவும் முடியாது,.. ஏனெனில் விதியை எந்த  ஒரு மனிதனாலும் புறக்கணிக்க இயலாது. இதில் நீங்களும், நானும் அடக்கம்... நான் கூறுவதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதை மெய்பிக்கவே தங்களை இங்கே அழைத்து வந்து நேரடியாக காண்பித்தேன்.தவறெனில் என்னை மன்னியுங்கள். " என்றார் சாந்தமாக அமைச்சர்.

"அமைச்சரின் பேச்சை மெளனமாக செவிமடுத்த அரசர்," அமைச்சரே,! தங்கள் கூற்று சரிதான்.. தங்களின் சமயோஜித அறிவும், ஆழ்ந்து சிந்திக்கும் கூரிய எண்ணங்களும் என்னை வியக்க வைக்கிறது. தாங்கள் இந்த நீண்ட நாளைய விவாதத்தில் என்னை வெற்றி கண்டு விட்டீர்கள். விதி வலியது என இன்று கண் கூடாக உணர்ந்து கொண்டேன். பாவம், அந்த மூதாட்டியை விடுவித்து விடுங்கள். அவள் இப்படி கட்டுண்டு வாழ்வதை விட விருப்பபடி விதிப்படி வாழட்டும். வாருங்கள் நாம்  போகலாம்" என்றபடி அரசர் அமைச்சரிடம் தன் தோல்வியை ஒப்பு கொண்டபடி அவ்விடத்தை விட்டு அகன்றார்.

விதி வலியது என்பதை சுட்டிக் காட்டும் கதை இது. இரண்டாவதாக இதேப் போல் மதியால் விதியை மாற்றுவதாக, விக்கிரமாதித்தன், கதைகளில் வருகிறது.  அவனது மந்திரி பட்டி திறம்பட, அரசனின் விதியை பற்றி  கூறும் பட்சிகளின் பாஷைகளை அறிந்ததினால்,  தொடர்ச்சியாக வந்த இடர்களிலிருந்து விக்கிரமாதித்தியனை காப்பாற்றுவான். பட்டி பட்சி, மிருகங்களின் பாஷையை கற்றிருந்ததினால், விக்கிரமாதித்தியனுக்கு வந்த சோதனைகளை, களைந்தெறிய தான் வணங்கும் தெய்வமாகிய காளியிடமே சாமர்த்தியமாக தன் மதியறிவை கொண்டு பேசி , வாக்கு வாதங்களில் வென்று விதியை மாற்றியமைக்கும் வரங்களைப் பெறுவான்.

மூன்றாவதாக இதைப்போல் விதியையும் நோகாமல், மதி வழியும் முயற்சிக்காமல்," நடப்பது நடக்கட்டும். இதற்கும், எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்பது போல, அதன் வலியை ஒரு  சிறிதேனும் பொருட்படுத்தாமல், புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு அமைதியாக காலத்துடன் ஒன்றினார் ஒரு அமைச்சர்.

தன் மகனுக்கு ராஜ போக பதவி கிடைத்தும் சந்தோஷமெய்தவில்லை. அவன் செய்யாத குற்றத்திற்கு மரண தண்டனை கிடைத்தும் கலங்கவில்லை. யார் என்ன செய்தாலும், சொன்னாலும் அவர் வாயில் வருவது ஒரே சொல்தான்." எல்லாம் நன்மைக்கே.!" அதுதான் அவரின் தாரக மந்திரம். அந்தச் சொல்லே அவருக்கு எல்லா நன்மைகளையும், சத்தமின்றி தந்தபடி நகர்ந்து கொண்டிருந்தது.

இந்த கடைசி கதை மாந்தரைப் போல அனைத்தையும், மெளனமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவேண்டும். இதற்காக இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்து அல்லல்பட்டு உழல வேண்டுமோ.!
எனினும் இந்த பிறவியிலேயே கிடைக்க வேண்டுமென நேர்மறையோடு சிந்திக்கிறேன்.

மூன்று வித கதைகளிலும் நேர்மறை எண்ணங்கள் அவரவர் சூழ்நிலைகளுக்கேற்ப  தானாகவே வந்து அவர்களுடன் தங்கி அவர்களுக்கு நல்லதை விளைவித்தது.

எது எப்படியோ நேர்மறை எண்ணங்களை நினைக்கும் போதும், பேசும் போதும், கேட்கும் போதும் நமக்கு எதிராக எந்த செயல் தானாக நடந்தாலும், நடந்திருந்தாலும் அதை சற்று ஒதுக்கி வைத்துப்பார்க்கும் ஒரு மன நிலை, நாமும் இதை கொஞ்சம் விட்டு விலகி சில நாட்களை கழித்துப் பார்க்கலாமே என்ற ஒரு  மனப்பான்மை வருகிறதென்னமோ உண்மைதான். 

அவ்வாறாக தற்சமயம் வலைத்தள நட்புகளின் நேர்மறை ஆறுதல்கள், காயப்பட்ட என் மனதிற்கு  நல்லதொரு மருந்தாக, வலி நிவாரணியாக இருந்தது. ஒரு மாற்றத்திற்காக, என்னைத் தேற்றியபடி நானும், வலையுலகில், மறுபடி வருவதற்கு விருப்பப்பட்டு, "எங்கள் குடும்பம்," மற்றும் அனைத்துப் பதிவுகளையும், படித்து வருகிறேன்.  என் வருகைக்கு முழுவாதரவாக   வந்த பின்னூட்டங்களை பகிர்ந்துள்ளேன். இதுவும் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. அனைவரின் அன்புக்கும் பாசத்திற்கும் சிரம் தாழ்த்தி அடி பணிகிறேன். எனக்கு அன்புடன் ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றிகள். 



  • வாங்க கமலாக்கா உங்கள் வருத்தத்திற்கு இடையிலும் இங்கு வந்து வாசித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி அக்கா. ஆமாம் அக்கா உங்கள் வருத்தம் மிக மிக ஆழமான ஒன்றுதான்...புரிந்து கொள்ள முடிகிறது. என்றாலும் வெளியில் வந்துதானே ஆக வேண்டும்...ஆமாம் வலைக்கு வாருங்கள் கொஞ்சம் கொஞ்சமாக....எல்லோரையும் பாருங்கள் எழுதுங்கள்...கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் அக்கா...வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை...இது ஆறுதல் படுத்தக் கூடிய சிறு விஷயம் இல்லையே...தங்களின் அன்பிற்கும் மிக்க நன்றி




  • சகோதரி கமலா அவர்களின் மனம் ஆறுதல் அடையப் பிரார்த்திக்கிறேன். என்ன சொன்னாலும் தீராத துக்கம இது!


    1. வாங்க கமலா அக்கா... காலை வணக்கம்.

      பாடலை ரசித்ததற்கு நன்றி.

      உங்களை இங்கு காண்பதில் பெருமகிழ்ச்சி.

      தொடர்ந்து வாருங்கள்.
    2. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு..

      அன்பின் வணக்கத்துடன்....
    3. அன்புடன் நல்வரவு கூறிய சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு காலை வணக்கத்துடன மிக்க நன்றி.

      சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு, இனி தொடர்ந்து வலைத்தளம் வர விரும்புகிறேன். நடப்பவை அனைத்தும் நலமாக இருக்கட்டும். என் கருத்து கண்டு உடன் பதிலளித்தது எனக்கும் மகிழ்வாக இருந்தது. நன்றி.

    4. //இனி தொடர்ந்து வலைத்தளம் வர விரும்புகிறேன். நடப்பவை அனைத்தும் நலமாக இருக்கட்டும்//

      மிகவும் மகிழ்வாக இருக்கிறது சகோதரி... வரவேற்கிறோம்.
    5. என் வருகை கண்டு வரவேற்றமைக்கு மிகவும் மகிழ்ச்சி சகோதரி கீதா சாம்பசிவம். நலமாக உள்ளீர்களா?
    6. வருக.... தொடர்ந்து வலைப்பதிவில் சந்திப்போம் கமலா ஹரிஹரன் ஜி
    7. கமலாக்கா வாங்கோ... “நாள் உதவுவதுபோல் நல்லோர் உதவார்” கால ஓட்டத்தில் பல விசயங்கள் கவலைகள் சின்னப் புள்ளியாகுகிடும் அதுவரை ஒதுங்கி இருந்து முடங்கிப் போயிடாமல், இப்படி வெளியே வந்து பேசுங்கோ மனம் இலேசாகும்.
      விதியை நம்மால் என்ன பண்ண முடியும், ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்.

    1. கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு.

      நடப்பவை அனைத்தும் நலமாக இருக்கட்டும்

    2. இன்னமும் என் காயம்பட்ட  மனதிற்கு தெம்பாக நேர்மறை எண்ணங்களுடன், ஆறுதல்கள் அளித்து வரும்அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கத்துடன கூடிய நன்றிகள். 


    Saturday, September 22, 2018

    பிரம்மோற்சவம்


    திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் 
    ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள்

    இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு   நடுவே
    அழகான மாதவன்


    படைப்புக் கடவுள் பிரம்மாவே இந்த பிரம்மோற்சவத்தை பூலோகத்தில் வந்து நடத்துவதாக ஐதீகம் என்பது நாமறிந்ததே.!


    இன்றைய நாளில் மும்மூர்த்திகளும் சேர்ந்து வந்து பக்தர்களை காத்து ரட்சிக்கும் நாளாக அமைந்து விட்டது.














                இன்று மஹா பிரதோஷம். 

    அரியும்,  சிவனும் ஒன்று...! என்ற பழமொழிப்படி ஹரியும், ஹரனும் சந்தோஸமாகவே இன்றைய நாளில் இணைந்து வருகை தந்திருக்கின்றனர். இரு பார்வையின் முன் பார்க்கும் பொருள் ஒன்றே,! பக்தியின் முன் அனைத்து கடவுளும் ஒன்றே,! 


    கடன் நிவர்த்தி சிவன்..

    ஓம் நமோ நாராயணாய நமஃ
    ஓம் நமசிவாய.


    படங்களை கண்டு ரசித்தமைக்கு மிக்க
    ன்றியுடன் 
    கமலா ஹரிஹரன். 

    Sunday, September 16, 2018

    கோவிலும், அதன் சிறப்பும்..

    சென்ற மாதத்தில் ஒரு ஞாயறன்று  இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாமென முடிவெடுத்தோம் . காரணம் அதன் அருகிலேயே பூங்கா ஒன்று இருக்கிறது. குழந்தைகளுக்கு (என் குழந்தைகளின் குழந்தைகள்)  அதுதானே மிகவும் பிடித்தமானது.. ஆததால் சீக்கிரமாகவே, (சீக்கிரம் என்பது மாலை நான்கு மணி.)  அந்த டயத்துக்குள்  அவர்களை கிளப்பிக் கொண்டு  செல்வதற்குள்  போதும் போதுமென ஆகி விட்டது. அப்படியும் ஓலாவில்தான் அந்த இடத்துக்குச் சென்றோம்.

    அந்த ராமாஞ்சநேயா  கோவில் சின்ன கோவில்தான் எனினும் அழகுடன் அம்சமாக இருந்தது.  கோவிலினுள் செல்ஃபோன் தடை... அதனால் கோவில் வாசலில் இருந்தபடியே போட்டோக்கள் எடுத்தேன். பூங்காவில் நேரம் போனது போக கோவிலுக்கு படியேறி செல்வதற்குள் கொஞ்சம் இருட்டு வர ஆரம்பித்து விட்டது. கோவிலில் மேல் ஸ்ரீ ராம பிரானும், ஆஞ்சநேயரும் ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்தபடி  சிலையாக இருக்கும் இத்தோற்றத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானலும் பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றும். அன்பும், பணிவும் ஒன்று கலந்த பாவத்துடன் அவர்கள் இருவரின் கண்களிலும் தோன்றும் ஆனந்த பாஷ்யம் நம்மை மெய்மறக்கச் செய்யும். ராமரின் அன்புக்குரிய  பணிவான  தோழரல்லவா ஆஞ்சநேயர்..... அந்த நட்பின் இறுக்கத்தை அங்கு கண்டு கொள்ளலாம். நாங்கள் முன்பெல்லாம் இந்த கோவிலுக்கு பலமுறை சென்றிருக்கிறோம்.


    மூலஸ்தானத்தில் ஆஞ்சநேயர் இரு கைகள் கூப்பிய தோற்றத்துடன் தரிசனம் தருகிறார். கோவிலின் எதிரில், அரசும், வேம்பும், இணைந்த  பெரிய மரம்.. கீழே நிறைய வரிசையாக நாகர்கள். அந்த இடத்திலிருந்தும்  ராமரும் ஆஞ்சநேயரும் இணைந்திருந்த போட்டோ எடுத்தேன். சுற்றிலும் பூங்கா. அதன் நடுவில் மேலெழுந்தவாரிய இந்த அழகான ஆஞ்சநேயர் கோவில்.  இனி நான் எடுத்த புகைப்படங்களினால் இதன் சிறப்பை பார்ப்போமா.....


    ராமரும், ஆஞ்சநேயரும் ஒருவரையொருவர் அன்பால் பிணைத்துக் கொண்ட காட்சி. 


    சற்று இருள் வர ஆரம்பித்து விட்டது. அந்த பின்னணியிலும். அவர்களின் அன்பு மனதை நிறையச் செய்கிறது. 


    கண்ணையும் மனதையும் கவர வெட்டி விடப்பட்ட செடிகள். பூக்கள், மரங்கள் என ரம்மியமான ஒரு பகுதி.....


    பெரிய பாறைகளும். மரங்களுமாக மற்றொரு பகுதி...


    "இருண்ட கிளைகளுக்கு ஊடே சிறிது ஒளியையும் புகைப்படம் எடுக்கும் உங்களுக்குகாகத்தான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். " என விரைவு படுத்திய பூங்கா.


    மாலை ஐந்தரை மணி வெளிச்சத்தில், கொஞ்சம் பளபளப்பு காட்டும் பூங்கா.


    பூங்காவின் நெடியதாக  வளர்ந்த மரங்களில் கலராக இலைகள்.பூக்கள்.


    மரங்கள் பாறைகள், புல்வெளிகளுக் கிடையே நானும் கொஞ்சம் இருக்கிறேன் என்று நினைவுபடுத்திய வானம்....


    பூங்காவிலிருந்து  கோவிலுக்கு ஏறிச் செல்ல உதவும் படிகள்..

    படிகளில் ஏறும் போது கோவிலின் பக்கவாட்டு தோற்றம்.! முழு முதற் கடவுளும், முப்பெரும் தேவிகளும் சுவரில் இருந்தபடி படி ஏறி வருபவர்களுக்கு ஆசி வழங்கும் காட்சி ...


    கோவிலுக்குச் செல்ல படி ஏறும் முன் ஒரு இயற்கை காட்சி...


    மரங்களும், புல்வெளிகள், பாறைகளுமாக அமைக்கப்பட்ட ஒரு பகுதி...


    பல அடர்ந்த மரங்கள் பாறைகள் சீராக்கப்பட்ட புல்வெளிகளுடன் பூங்காவின் ஒரு தோற்றம்... 


    சற்று இருளானது சூழலாமா.. வேண்டாமா? என யோசிக்கும் தறுவாயில் சட்டென எனது செல் முடிவெடுத்த ஒரு தருணத்தில் மீண்டும் ஒருமுறை கோவிலின் பக்கவாட்டு தோற்றம்...


    கோவிலின் முன் பகுதியில் நின்றபடி நேராக எடுத்தப் புகைப்படம். முன் மண்டபம் ஏறிச் சென்றால் கோவிலினுள் பிரேவேசிக்கலாம். அங்கே கை கூப்பிய நிலையில் அடக்கத்தின் பிரதிபலிப்பாக ஆஜானுபாகுவாக,  கம்பீரமாக, உயரமான  கோலத்துடன் நின்றிருக்கும் ஆஞ்சநேய ஸ்வாமி....


    அரசும் வேம்புமாக கை கோர்த்து இணைந்து  தன் காலடியில் அமர்ந்திருந்த நாகர்களின் துணை தந்த தைரியத்தில், பெரிதாக கிளை பரப்பி வளர்ந்திருக்கும் காட்சி....


    இதுவும் நாங்கள்தான்.. எம்மை தினமும் பக்தியுடன் பிரதட்சணம் செய்தால், ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி நீங்கள் வாழ்வீர்கள். என்கிறாரோ.. இந்த மரங்களுக்கு அரசன்.


    கோவிலின் முகப்பு சேர்ந்து தெரிகிற மாதிரி எடுக்கப்பட்டது. இருள்தான்  வெற்றி யடையப் போகிறது என உணர்ந்த பின்னும் அதை தற்காலிகமாக வெல்ல நினைத்து ஒளி உமிழும் விளக்குகள்...


    அடர்ந்த கிளைகளும் எங்கும் வியாபிக்கத் துடிக்கும் உள்ளம் கொண்ட இலைகளுமாக உன் சிறு செல்லின் இடம் முழுவதையும் ஆக்கிரமித்து விட்டேன் பார்த்தாயா? என்று பரிகாசமாய் என்னைப் பார்த்து வினவும் விருட்ச ராஜா....

    =================================================================================
    இந்த கோவில் பார்த்து தரிசனம் முடித்ததும் அருகில் மற்றொரு சிவன் கோவிலுக்குச் சென்றோம். அங்கும் கோவிலில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இதேப் போல் வாசலிலிருந்து எடுத்தோம். அதை அடுத்தப் பதிவாக எழுதுகிறேன்.
    இதைப் படிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி. 🙏