Showing posts with label 1976-ம் ஆண்டில் எழுதியவை. Show all posts
Showing posts with label 1976-ம் ஆண்டில் எழுதியவை. Show all posts

Friday, October 4, 2019

அன்பு மலரும் போது...

இதுவும் நான் என் பதினேழில், பிதற்றியதுதான். இத்தனை நாளாக வெளியிடவில்லை. இந்தக் கதையின் சம்பவங்களை இப்போதுள்ள காலகட்டத்திற்கு யாராலும் ஏற்றுக் கொள்ள இயலுமா? என வந்த சந்தேகங்களின் காரணங்கள் வெளியிட தாமதித்ததுவா எனத் தெரியவில்லை. ஆனால் தற்சமய காலங்கள் இதன் போக்கை மாற்றி எழுத அனுமதித்தாலும், எனக்கு என்னவோ என் டைரியிலிருந்து சில பக்கங்களை புரட்டி, கிழித்து ஒளித்து திசை மாற்றிப்போட மனது ஒப்பவில்லை. 

இப்பொழுது அந்த எழுத்துக்களை அப்படியே பதிக்கும் போது   எழுதிய "அன்றைய தினங்களில்"  இந்தக் கதைக்கான சிந்தனைகளின் சுவையை சுவாசித்த என் மனம் "இன்று" அந்த மலரும் நினைவுகளையும் சுவைத்து ரசிக்கிறது. அது தவறா? இல்லை சரியா? என்பதை உணர்ந்து படிக்கும் நீங்கள் என் சந்தேகங்களைப் தெளிவாக்குவீர்கள் என சந்தேகமற நம்புகிறேன். கதையை
படிப்பதற்கு என் நன்றிகளும்... 

அன்புடன், 
உங்கள் சகோதரி
கமலா ஹரிஹரன். 



சுமியின் கண்கள் கூடத்து அறையில் இருந்த பெரிய கடிகாரத்தில் தவழ்ந்தன. ஆயிற்று, இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளது உற்ற தோழி நளினியின் கழுத்தில் மாங்கல்யம் என்ற மலர் மலர்ந்து விடும். அந்த மலர் வாடிவிடாமல் என்றும் மணம் வீசிக்கொண்டே இருக்கவேண்டுமென இறைவனிடம் மனமுருகி பிரார்த்தித்து கொண்டாள் சுமி.

ஒரு மணி நேரத்தில் "ஒருவருக்கு" சொந்தமாகிவிடும் நளினி நாளை இந்த நேரத்தில் "அந்த ஒருவரின்" வீட்டில் இருப்பாள். அதன் பின்பு சுமிக்கு இந்த வீட்டில், ஏன், இந்த உலகத்திலேயே "அன்பு" என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. தெரியாமல் போய்விடும்.

இதோ! நளினி வருகிறாள். கழுத்து நிறைய நகைகளும் பட்டு சேலையும் மின்ன அவள் நடந்து வருவது  அழகுக்கே சவால் விடுவது போல் இருந்தது சுமிக்கு.

"சுமி" என்றபடி நளினி ஓடி வந்து சுமியை தழுவிகொண்டாள்.

ஓ! நாளையிலிருந்து இவள் அன்பில் திளைக்க  முடியாது. இன்று மட்டும்தான்! இனி எப்போதோ? சுமியின் கண்கள் மழை மேகங்களாக மாறுகின்றது.

"நளி, என்ன இது? அங்கே உன்னை எல்லோரும் தேட போறா, நீ இங்க வந்து உக்காந்திருக்கியேமா.."

"சுமி, பிறந்ததிலிருந்து என்னோட சந்தோஷத்திலும் துக்கத்திலும் பங்கெடுத்துகிட்ட நீ இப்ப மட்டும் வரமாட்டேங்கிறியே இது நியாயமா?" நளினி குரல் தழுதழுக்க கேட்டாள்.

"நளி இத்தன வருஷமா நீ என்ன புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா? இந்த சமூகத்திலிருந்து, அதாவது ....இந்த ஜனங்களோட உள்ளத்திலிருந்து நான் விலக்கபட்டுடேன் நளி. இனிமே இவங்க மத்தியிலே வந்து என்னால உட்கார முடியாது. என்னோட வாழ்க்கைங்கிற பாலிலே இந்த  "ஊனமிங்கற " உப்பு விழுந்துடுச்சு நளி. அது இனிமே சுத்தமான தயிராகாவும், சுவையான மோராகவும் வெண்ணையாகவும் நெய்யாகவும் மாறமுடியாது. பழைய பாலாகவும் லாயிக்கியில்லை. இப்ப புரியுதாமா நான் ஏன் உன்னுடைய திருமணத்துக்கு வரலைன்னு" என்று கேட்டு விட்டு விரக்தியுடன் சிரித்தாள் சுமி.

நளியின் கண்களில் கண்ணீர் கரைகட்டியது.

"சுமி! ஐ'ம் சாரி! நான் உன்னோட மனசை புண்படுத்திட்டேன். என்ன மன்னிச்சிடு!"

"நோ நளி! நோ.. அப்படியெல்லாம் சொல்லாதே!"

"சுமி! இங்கேயே உங்கிட்டே ஆசீர்வாதம் வாங்கிக்கிறேன்" என்றபடி நளினி சுமி தடுப்பதற்குள் அவள் காலடியில் சரிந்து விட்டாள்.

பதறிபோய் அவளை தூக்கி அமர்த்திய சுமி, "நளி! உனக்கு எந்த ஒரு குறையும் வரக்கூடாது.. நீ நீடூழி வாழனும். அதோட ஒரு வேண்டுகோள் நளி! நீ எங்கே இருந்தாலும், என்னைக்கும், ஐ மீன் ...... ஐ மீன் என் உடலிலிருந்து உயிர் வெளியேறும் வரை நீ என்மீது  செலுத்தும் அன்பு மாறவே கூடாது நளி" கடைசி வார்த்தைகளை தழுதழுத்தபடி கூறினாள்.

"சுமி! இதை நீ சொல்லனுமா?"

" நளினா"! என்ற குரல் சிவபூஜையில் கரடிபோல், அந்த அன்பு சுவரின் நடுவில் விரிசில் கண்டது போல் எழுந்தது.

"நீ இங்கேயா வந்திருக்கிறே! உன்னை எங்கெல்லாம் தேடறது. மணமேடையிலே உட்காரவேண்டியவ இந்த நொண்டிகிட்டே வந்து உட்காந்திருக்கியா?" கோபமாக கேட்டாள் நளியின் தாய்.

"அம்மா" மகள் பார்வையில் தெறித்த உக்கிரத்தில் தாய் மகளை பார்த்து "வா" என்றவாறு மேற்கொண்டு ஏதும் பேசாது அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

"சுமி! எனக்காக அம்மாவை.........."

"நளி! இந்த ஊனம் எனக்கு ஏற்பட்ட நாளிலிருந்து இந்த மாதிரி சொல்றவங்களுக்காக நீ மன்னிப்பு கேட்டுகிட்டு தான் இருக்கே.. ஆனா! என் இதயம் எல்லாத்தையும் தாங்கி தாங்கி பழகிப்போச்சு. நீ போயிட்டு வாம்மா" என்றாள் சுமி.

கண்களை துடைத்தபடி நடந்தாள் நளினி.

"ஏய்! நொண்டிக் கழுதை! சமையலறைக்கு வந்து கொட்டிக்கிட்டு போயேன். பெரிய மகாராணி! கையிலே கொண்டு வந்து தட்டை வைக்கனுமாக்கும்," சித்தியின் குரல் பன்னிரண்டு மணி வெயில் மாதிரி தகித்தது.

"சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் மகாராணி தான். இதோபார் என்னுடைய சிம்மாசனம்." என்று சிரித்தபடி கூறியவாறே தன் சக்கர நாற்காலியை தட்டி காண்பித்தாள் சுமி.

"கால் இல்லைன்னாலும் வாயாவது இருக்கே", முகத்தை நொடித்தவாறு உள்ளே சென்றாள் அலமேலு.

எப்படி இவர்களால் இப்படியெல்லாம் பேசமுடிகிறது. இவர்களுக்கு இதயமே இல்லையா! அந்த இதயத்திலே இருக்கும் அன்பெனும் ஊற்று அடைத்துப் போய் விட்டதா? அதை எப்படி அடைத்தார்கள்!

இதயத்திலிருக்கும் காயத்தை ஆற்ற முயற்சி செய்யாவிட்டாலும் போகிறது. அதை இப்படியா கிளறி விட வேண்டும்.

"அம்மா" என்றபடி வேதனையுடன் நிமிர்ந்தாள் சுமி.

"அம்மா"... அந்த அம்மா மட்டும் இப்போது இருந்திருந்தால் சுமியின் கால்களாகவே மாறியிருப்பாள்.

அந்த பாக்கியந்தான் அவள் செய்யவில்லையே! செய்திருந்தால் ஏழாவது வயதில் பெற்ற தாயைபறிகொடுத்து விட்டு ஒரு மாத விஷக்காய்ச்சலின் விளைவால் இந்த நிலைக்கு வந்து இப்படியெல்லாம் எல்லோரிடமும் பட வேண்டியதிருக்காதே.!!

பக்கத்து வீட்டில் இருக்கும் நளினி மட்டும் சுமியின் உலகத்தில் இருந்திடாவிட்டால் அவள் இந்த உலகைவிட்டு எப்பொழுதோ சென்றிருப்பாள். பிறந்ததிலிருந்து இருவருக்குமிடையில் இறுகிய பாசம் அந்த எமனால் கூட பிரிக்கமுடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது.

சுமியின் தந்தையை சொல்லிக் குற்றமில்லை. மந்திரவாதியின் கையிலிருக்கும் மந்திரகோல் மாதிரி சித்தியின் கையில் அகப்பட்டுக்கொண்டு திணறுகிறார்.

ஏதோ இவளுக்கென்று செய்யும் கடமைகளில் தந்தை சற்று கண்டிப்பு காட்டுவதால், அச்சமயங்களில் சித்தியும் ஏதும் குற்றம் குறை சொல்லாது வாளாதிருக்கிறாள்  அவளுக்கு தனக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் வந்து போய் நாளாகி விட்டதாலும், தன்னிடம் வெறுப்புடன் கூடிய அன்பையும், தந்தையின் கண்டிப்பிற்காக அவ்வப்போது காட்டுகிறாள் என்பது சுமி அறிந்ததுதான்.!!

 இவளின் தேவைகளை சமயத்தில் அறிந்து அவள் செய்வதால், சித்தியின் "சுள்"ளென்ற பேச்சுக்கள் சிலசமயத்தில் வெப்பமாய் தகிப்பதை இவளாகவே சமாதான நீருற்றி அணைத்துக் கொள்வாள்.

தன் வாழ்க்கையில், அறிவு சார்ந்த விஷயங்களுக்கும், அன்புக்கும் நளினி ஒருத்திதான் கடவுள் தனக்காக கொடுத்திரும் வரம் என்பதில், அசைக்க முடியாத நம்பிக்கையில் தைரியமாக  இருந்த சுமிக்கு அவளின் பிரிவு கொஞ்சம் வேதனையை தந்தது.

தனக்கென்று இறைவன் அளவிட்டு கொடுத்திருப்பதை பெற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும். வேண்டாம் என்று மறுத்தாலும், வருவதிலுள்ள அளவீடுகள் கூட்டிக் குறையப் போவதில்லை என்ற தத்துவ எண்ணங்கள்  அவளுக்கு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனதையும்  தாராளமாக தந்திருந்தது.

ஏதோ யோசனையில் இருந்தவள் சித்தியிடமிருந்து மீண்டும் ஒரு சத்தம் வரவே, ஒரு பெருமூச்சுடன் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு போனாள்.

"அலமேலு! சுமித்ராவுக்கும் கல்யாணத்தை எப்போ நடத்த போறே?" வாசலில் எதிர் வீட்டுகாரி சித்தியிடம் அக்கறையுடன் விசாரிப்பது துல்லியமாக சுமியின் காதில் விழுந்தது.

"ஆமாம்! அது ஒன்னுதான் அவளுக்கு கொறைச்சல்! எவன் வந்து இந்த நொண்டியை கட்டிக்கப் போறான்?"

ஊசியால் குத்துவது போன்ற உணர்ச்சி ஏற்ப்பட்டது சுமிக்கு.

மறுநிமிடம் சற்று வாய்விட்டு சிரித்துகொண்டாள் சுமி. நொண்டி,.. நொண்டி, நொண்டி.. ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் இந்த வார்த்தையையும் உபயோகிக்க தவறுவதில்லை சித்தி. சொல்லிவிட்டு போகட்டுமே! இல்லாததையா சொல்லுகிறாள்? உண்மையை தானே சொல்லுகிறாள் உண்மைக்கு ஏன் வருத்தப்படவேண்டும்.

காலமும், இளமையும் போட்டி போட்டுகொண்டு பறந்தது. காலம் சுமியின் தலையில் ஆங்காங்கே சில வெள்ளிக் கம்பிகளை உண்டாக்கி இருந்தது. இளமை அவளது அழகிய முகத்தில் சற்று முதிர்ச்சியை அளித்திருந்தது. ஆனால் அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. கடந்த நான்கைந்து மாதங்களாக நளினியிடமிருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவள் திருமணமாகி சென்றதிலிருந்து சுமிக்கு வாரம் இருமுறை கடிதம் எழுதிக்கொண்டு இருந்தாள். நாளாக நாளாக அவளது கடிதம் வருவதும் அரிதாகிவிட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்றதடவை அவளிடமிருந்து வந்த கடிதத்தில் அவள் தாயாகும் விபரம் குறித்து எழுதி இருந்தது சுமிக்கு மிகவும் சந்தோஷத்தை தந்தது. திருமணத்திற்கு பின் நீண்ட வருடங்கள் கழித்து அவள் தாயாகும் பேறு பெற்றிருப்பதால் அவளின் நலம் குறித்து சுமியும் அடிக்கடி விசாரித்து வந்தாள். ஆனால் தற்சமயம் அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததாலும், அவளைப்பற்றி விசாரித்துக்கொள்ள இயலாமல் அருகிலிருந்த அவளது பெற்றோர்களும் அவளுக்கு திருமணமான ஓரு வருடத்திலேயே, வேறு ஊருக்கு குடி பெயர்ந்து விட்டதாலும்,  வேறு எவரிடமும் எதுவும் கேட்கமுடியாமல் தோழியின் நினைவை மௌனத்திலேயே கரைத்து வந்தாள் சுமி.

வாசல் கதவை தட்டும் ஓசை கேட்டது.

"வெளியில் சென்றிருந்த சித்திதான் வந்துவிட்டாளோ?"

சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு போய் கதவை திறந்தாள் சுமி.

உள்ளே நுழைந்த நளினியின் கணவன் மகேந்திரனை பார்த்து அடையாளம் கண்டு கொண்டதும், திகைத்துப் போனாள்  சுமி.

"வாருங்கள், எதிர்பார்க்கவே இல்லை.. நலந்தானே? அமருங்கள்.. வார்த்தைகள் சமந்தமில்லாமல் குளறி குளறி வெளிவந்தன சுமிக்கு.

"என் நளி சௌக்கியந்தானே?"

அவன் அவளை மெளனமாக ஏறிட்டு நோக்கிய விதம் அவளை என்னமோ செய்தது.

"நளினி நம்மையெல்லாம் மோசம் பண்ணிவிட்டு நிம்மதியாக போய் சேர்ந்து விட்டாள் சுமித்ரா!"

என்ன? அதிர்ச்சியில் கண்கள் நிலைகுத்த முன்னால் சாய்ந்தவளை தாங்கி பிடித்துக் கொண்டான் மகேந்திரன்.

"சற்று அமைதிபடுத்திக் கொள் சுமி!"

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் சுமி.

"சுமி" அதேகனிவு! "அவள் மட்டுமே அழைக்கும் சொல்!" கண்ணீர் அணை உடைந்து சிதறியது.

"நீங்கள் ஏன் எனக்கு தெரியபடுத்தவேயில்லை?" விம்மலுக்கிடையிலும் கோபத்துடன் எழுந்தது சுமியின் குரல்.

"என்னை மன்னித்துவிடு சுமித்ரா! மூன்று மாததிற்கு முன்பு ஒரு புதிய ஜீவனை இந்த உலகத்திற்கு தந்துவிட்டு அவள் இந்த உலகைவிட்டு மறைந்துவிட்டாள். இறப்பதற்கு இரண்டு நாள்முன்பு இந்த கடிதத்தை என்னிடம் கொடுத்து, "என்றைக்கு உன்னிடம் இதை நான் சேர்பிக்கிறேனோ, அன்றுதான் தான் இறந்ததைப் பற்றியும் கூற வேண்டுமென்று நிபந்தனை போட்டாள்". என்ன செய்வது? அவள் கட்டளைப்படிதான் என்னால் நடக்க முடிந்தது." என்றபடி கடிதத்தை சுமியிடம் கொடுத்தான் மகேந்திரன்.

சுமியின் கைகள் கடிதத்தை பிரித்தன; கண்கள் படித்தன.

"என் ஆருயிர் தோழி சுமிக்கு,

இதுவே நான் எழுதும் கடைசி கடிதமாக இருக்கலாம். ஏனோ, இந்த தடவை நான் பிழைக்கமாட்டேனென்று என் உள்ளத்தில் ஏதோ ஒன்று உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. என் அன்பு சுமி.... என் திருமண நாளன்று நீ சொன்னது நினைவு இருக்கிறதா? என் வாழ்க்கைங்கிற பாலிலே ஊனமிங்கிற உப்புகல் விழுந்து திரிந்து போய்விட்டது. அதை இனி சாக்கடையில் தான் கொட்ட வேண்டுமென்று சொன்னாய்.!! ஆனால் அது என் சுமியின் வாழ்க்கை.! அந்த வாழ்க்கைப் பால் திரிந்தே போயிருந்தாலும் சரி, அதை நான் உபயோகபடுத்தி கொள்வேனே தவிர சாக்கடையில் கொட்டவிடமாட்டேன். புரியவில்லையா சுமி?

என் குழந்தைக்கு என் ஸ்தானத்தில் நீ வர வேண்டும். நீண்ட நேர விவாதத்திற்கு பின், அவரிடம் சம்மதம் வாங்கி விட்டேன். நீயும் சம்மதிப்பாய் என்று எனக்குத் தெரியும். என் தோழியை எனக்கு தெரியாதா? இதை நீ செய்தால்தான் என் ஆத்மா சாந்தியடையும்."

இப்படிக்கு
உங்களை என் மாறா அன்புடன் வாழ்த்திக் கொண்டிருக்கும்,
உன் "நளி".   


கடிதத்தை படித்துவிட்டு கதறியழுதாள் சுமி...

"சுமி! இந்த மனிதர்கள் இதயத்தில்தான் அன்புங்கிற மலர் மலருகிறது. அந்த மலர் சில சமயங்களில் தியாக கனியாக கனிந்துவிடுகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருத்தி நளி. ஆனால் ஒவ்வொருவர் மனதிலே அந்த மலர் மலராமல் வெறும் மரமாகவே மாறிடறாங்க," குரலடைக்க கூறினான் மகேந்திரன்.

"உண்மைதான்! அன்னிக்கு ஒருநாள் நா அவக்கிட்ட ஒருவேண்டுகோள் விடுத்தேன். இப்போ அவ ஒரு பெரிய தியாகத்தை செஞ்சிட்டு என்கிட்டேயே......". முடிக்க முடியாது விம்மினாள் சுமி.

"சுமி! அவளே போனபிறகு எனக்கு இன்னொரு கல்யாணம் அவசியமே யில்லை. ஆனாலும் அவளோட ஆத்ம திருப்திக்காகத்தான் சம்மதிச்சேன். அவ கட்டளைக்காகத்தான் தலை வணங்குகிறேன். நா கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதே சுமி! என்னை மணக்க உனக்கு சம்மதந்தானே!" உணர்ச்சியற்ற குரலில் கேட்டு கொண்டே அவள் எதிரே தன் கரத்தை நீட்டினான் மகேந்திரன்.

அவன் கண்களில் தெரிந்த வெறுமை அவளை அவன் சொன்னது உண்மை என நம்ப வைத்தது....

"என் நளினியின் திருபதிக்காக நான் என் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கேன்" என்ற சுமி தன் சம்மதத்தை தெரிவிக்கும் பாவனையில் அவன் கைகளில் தன் கையை பதித்தாள்.

அங்கே அன்பு மலர் மலர்வது கண்டு மேலேயிருந்து அந்த தியாகக்கனி நிறைவுடன் சிரித்தது.

நிறைந்தது. 

Thursday, September 6, 2018

இழந்த கண்கள்


இதுவும்  ஆயிரத்து, தொழாயிரத்து  எழுபத்து ஆறாம் ஆண்டில், எனக்காக படைத்ததுதான். (எனக்காக என்றால் என்னுடைய தீவிரமான  எழுத்தார்வத்திற்காக .. இது இப்போது என் பதிவில் வெளி வந்திருப்பது இப்போது என் எழுத்தையும் விரும்பி ரசிக்கும் உங்களுக்காக.....)

இந்தக் கதைகள் ( எழுதியது இன்னமும் நிறைய உள்ளது.) படைக்கும் போது  எனக்கு எழுத்தாற்றல் சுத்தமாக இல்லையெனத்தான் கூறுவேன். (ஏனெனில் அப்போது என் பிறப்பு படிக்கல்லில் எண் பதினேழில் கால் பதித்திருந்தேன். அந்த பொழுதில் என் கற்பனைச் சிறகுகள் சிறிதளவுதான் முளைத்திருந்தன... (அதுவும் நான் அனுமானித்ததுதான்.) அனுபவங்கள் என்ற வாழ்க்கை பாடங்களில் ஒரு சின்ன பரிசோ, இல்லை பட்டமோ கூட வாங்கத் தெரியாத காலங்களது.)  ஆனாலும் கதைகள்  எழுதும் ஆர்வம் மிகுதியாக இருந்தது. 

அதனால் அந்த  ஆர்வ கோளாறுகள் ஒரு உருவாகி வடிவமடைந்து "கதைகள்" என்ற பெயரையும் பெற்று நிலைத்து எழுந்து விட்டன அதன் பின் அமைந்த குடும்பச் சூழல் கற்பனை சிறகுகளை மேலும் வளர்க்கத் தெரியாமல் நிறுத்தி விட்ட.து. போகட்டும் !.. இப்பவும் சிறகுகள் முழுமையடையாத கற்பனை பறவையாகத்தான் இருக்கிறேன். 

எனினும்,
  
இதை இப்போது இந்தக் கதைகளை படிக்கும், படித்து கருத்திடும் உங்களனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்

இழந்த கண்கள். 
======  ========

என்ன இது விநோதா? தங்கை தன் முன் வைத்தப் பணத்தைப்பார்த்து திகைப்புடன் கேட்டான் ரகுநாதன்...

  ''நம் தங்கை மாலினியின் திருமண  செலவிற்கு என்னால் இயன்ற உதவி அண்ணா..'' விநோதா நிதானமாக கூறினாள்.

   ''நீ செய்றது கொஞ்சம் கூட நன்னாயில்லை விநோதா'' நான் ஒருத்தன் மரமாட்டம் இருக்கிற போது நீ உதவி செய்யத்தான் வேண்டுமா?'' கோபத்துடன் கேட்டான் அவன்.

    '' இருந்தாலும் அந்தமரத்தோட நிழலிலேயே வாழ்நாள் முழுவதையும் கழிச்சிடலாம்'ன்னு, நாங்க நினைக்கிறது முட்டாள்தனம் அண்ணா ''

 '' அது அந்த மரத்தோட கடமை, விநோதா.."

எது அண்ணா ?'' தன்னாட நிழல்லே இருக்கறவங்கதானே, என்ன வேணுமானாலும் பேசலாங்கற அலட்சியத்திலே, தூக்கி எறிஞ்சிடறதா ?''

                  '' விநோதா.... ''

 '' ஸாரிஅண்ணா, '' உணர்ச்சிவசபட்டு ஏதேதோ பேசிட்டேன். மனசுலே வச்சுக்காதே... நீ, உன் தங்கைக்கு என்னவெல்லாம்  செய்யனும்'ன்னு, ஆசைபடறியோ, அதேமாதிரி ஆசைப்பட எனக்கும் உரிமையுன்டு. ஏன்னா, அவ எனக்கும் தங்கை. நீ அவ கல்யாணத்துக்கு'ன்னு, வச்சிருக்கிற  பணத்திலே, இது கால்வாசிகூட பெறாது.. ஆனா என்ன செய்றது, என்னோட மூணுவருஷ உழைப்பின் ஊதியம் இவ்வளவுதான். இதையாவது செய்ய முடிஞ்சதேங்கிற திருப்தி என் உள்ளத்தை நிறைய செய்யறது அண்ணா!!. இதை தயவு செய்து வேணாம்'ன்னு, ஒதுக்காமே ஏத்துக்கோ... இது அந்த ராமருக்கு அணில் செஞ்ச உதவி மாதிரி.. நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடு... எனக்கு ஆபீஸீக்கு லேட்டாயித்து... நான் வர்றேன் '' படபடவென பொரிந்து விட்டு வெளியேறினாள் அவள்.

  தானும் காரியாலயத்திற்கு போக வேண்டுமென்பதை மறந்து விட்டவனாய், ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தான் ரகுநாதன்...

இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவி மைதலிக்கு பரிந்து தங்கை மீது சுள்ளென்று விழுந்ததை, அவள் எவ்வளவு நாசூக்காய் சுட்டி காண்பித்துவிட்டு போய் விட்டாள், திகைப்பிலிருந்து விடுபட நீண்ட நேரமாயிற்று, அவனுக்கு.... 

          '' மாலினி ...''

   '' என்ன அக்கா ?'' கண்களை துடைத்தவாறு நிமிர்ந்தாள் மாலினி..

          '' ஏன்  அழறே ?''

       ''  சாம்பாரில் சொஞ்சம்  காரம் துாக்கலாய் இருக்கு'ன்னு.. மன்னி.." மேற்கொண்டு முடிக்க முடியாது விம்மினாள் அவள்.

  '' பைத்தியம்!! இதுக்கு போய் அழறியா?  மன்னிதானே சொல்றாள்'ன்னு பேசாமே இருக்கனும், இல்லாட்டா முகத்திலே அறைஞ்சாப்லே.. ஏதாவது பேசிட்டு வரனும் .. உனக்கு சமைக்க தெரியலைன்னா, பக்குவமா எடுத்து சொல்லனும்..  இல்லாட்டா அவளே தன் கைபாகத்தை காட்ட வேண்டியதுதானே... சற்று உஷ்ணத்துடன  கேட்டாள் விநோதா.

  '' உஷ்  அக்கா '' மன்னி வந்துட போறா.. '' என்னமோ அடுக்கிண்டே போறியே.. எனக்கு உன் மாதிரி பொறுமையா, நிதானமா, பேச வராது. பயத்துலே சட்டுன்னு அழுகைதான் வருது.''

 ''  முதல்லே பயத்தை விடு மாலினி மனுஷாளுக்கு மனுஷா ஏன்பயப்படனும்,,, நீ என்ன அவளுக்கு கொறைஞ்சி போயிட்டியா???

 ''  இன்னும் உன்னை போல வேலைக்கு போய் சம்பாதிச்சாளோ, என்னைக்கும் நிறைஞ்சே இருப்பா...  நா, இப்ப என்ன சொல்லிட்டேன்  நாளைக்கு ஒர் ஆத்துக்கு போப்போற பொண்ணு சமைக்க நல்லா கத்துக்கோன்னேன் அது தப்பா 'அங்கு வந்த அவர்களின் மன்னி மைதிலி பரபரவென்று பொரிந்தாள்.

   ''மன்னி..'' என்று தடுமாறியபடி எழுந்தாள் மாலினி.

  '' எதுக்கு நிறுத்திட்டே, உன் தங்கைக்கு இன்னும் நல்லா புத்தி சொல்லி கொடு.. உன்னை மாதிரி ஒருத்தனை மனசிலே நினைச்சிண்டு அழவும், வேலை பாக்கிறேன், வேலைபாக்கிறேன்னுட்டு, ஆபீஸிலே எல்லாரோடையும்.... ''

மன்னி,, போதும் நிறுத்து... இதை விட ஆயிரம் ஊசிகொண்டு நீ என்னை குத்தியிருக்கலாம். ஆனா அதைவிட கூர்மையா இருக்கு உன் பேச்சு " என்றாள் விநோதா.

  '' ஆஹா!!! யார்கிட்டே உன் பசப்பெல்லாம்??? எனக்கு தெரியாதாக்கும் உன் கதையெல்லாம்.....'''

    ''  மன்னி.... ''மனசின் வலி ஏற்படுத்திய  கோபத்தில் குரல்  உசத்தினாள் விநோதா.

      '' என்ன அங்கே கலாட்டா? ''

அப்போதுதான் வெளியிலிருந்து வந்த ரகுநாதன் அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தான்...

   ஒரு நிமிடத்தில்  தன் முகபாவத்தை மாற்றிக்கொண்ட விநோதா '' நத்திங் ''என்றபடி சிரித்தாள்.

   " எங்களுக்குள் ஆயிரம் இருக்கும். அதப்பத்தி உனக்கென்ன அண்ணா ? நீ உன் வேலையை பாத்துண்டு போ..." என்ற விநோதா அவன் தோளில் கைவைத்து விளையாட்டாய் அறைக்கு வெளியே தள்ளிக்கொண்டு போனாள்.

                       அத்தை....''

 அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய விநோதா வாசலில் விளையாடி கொண்டிருந்த தன் அண்ணனின் ஒரே மகன் ரவி ஆவலுடன் ஓடி வந்து அவள் காலை கட்டிகொள்ளவும் அவனை பாசத்துடன் தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டாள்.

    "அத்தை.. எனக்கு என்ன வாங்கி வந்திருக்கே?" ரவி ஆவலுடன் கேட்கவும், ''ம்.. ரவிகுட்டிக்கு இன்னைக்கு என்ன தெரியுமா நீ ரொம்ப நாளா கேட்டுகிட்டிருந்த இந்த பொம்மையை அத்தை இன்னிக்கு கஷ்டபட்டு தேடி வாங்கி வந்திருக்கேனாக்கும்..." என்று விநோதா நீட்டி முழக்கி சொல்லவும் ரவி அவசரமாய் அவள் பிடியிலிருந்து இறங்கியபடி "கொடு அத்தை.. சீக்கிரம்" என்று அவசரப் படுத்தினான்.

    விநோதா சிரித்து கொண்டே அவள் பையிலிருந்து எடுத்துகொடுக்கவும் ரவி அதை பார்த்த மகிழ்ச்சியில் "ரொம்ப நல்ல அத்தை" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

 விநோதா அவனை தூக்கி அணைத்தவாறு  "போக்கிரி பயலே.. வாங்கி வந்தால் நல்ல அத்தையாக்கும், இல்லாட்டி.." என்றவாறு சிரித்துக் கொண்டு கேட்டு விட்டு, அவனை இறக்கி விட்டவள். ''சரி, நீ சமர்த்தா விளையாடிண்டிரு அத்தை உள்ளே போய் டிரஸ் மாத்திண்டு உன் கூட விளையாட வா்றேன் சரியா?'' என்று கொஞ்சிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.

    ''ஏன்னா... உங்க சின்ன தங்கைக்கு ஒருவழியா கல்யாணத்தை முடிச்சாச்சு, அடுத்து  பெரியவளுக்கும் ஏதாச்சும் ஓரு இடத்துலே பாத்து ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேணாமா? ''

 தன் அறைக்குள் நுழைய போன விநோதா தன்னை பற்றி அண்ணாவும் மன்னியும் பேசுவதை கேட்டு சட்டென்று நின்றாள். ஹாலில் அமர்ந்து அவர்கள் பேசுவதால், அதை கடந்து செல்லும் தன் அறைக்கு எப்படிச் செல்வது என்ற எண்ணமும் அவள் கால்களை சற்றே கட்டிப் போட்டது.

   "ஏன்னா.. உங்களைத்தான் கேட்கிறேன்,"  மன்னி விடாமல் திரும்பவும் ஆரம்பித்தாள்.

 "என்னை என்னதான் செய்ய சொல்றே மைதிலி?" அண்ணா நொந்த குரலில் அலுத்துக்கொள்வது விநோதாவிற்கு புரிந்தது.

 "உங்க தங்கைக்கு ஒரு கல்யாணத்தை பண்ணச்சொல்றேன்.. ஏதோ நடந்தது நடந்து போச்சு.. எத்தனை நாளைக்குத்தான் இப்படியே  இருக்க முடியும்..."

            '' அவ சம்மதிச்சாதானே...''

 "அவளை சம்மதிக்க வைக்கனும்... ஏதோ எனக்கு பட்டதை சொன்னேன்.. அப்புறம் உங்கபாடு.. உங்க தங்கைபாடு.. எனக்கென்ன வந்தது.. ஊரே சிரிக்கிறது நம்ப மானம் போகமே இருக்னும்னா காலாகாலத்திலே பண்றதை பண்ணுங்கோ அவ்வளவுதான் சொல்வேன்.  கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் பண்ணி பிரோயஜனமில்லை."

     ''என்ன சொன்னே? என் தங்கையை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவளை மாதிரி எல்லோரும் இருந்தா போறும்,'' என்றான் ரகுநாதன் உஷ்ணம் ஏறிய குரலில்...

  "உங்களுக்கு தெரிஞ்சா போதுமா? ஊர்லே எல்லோரும் என்ன பேசிக்கிறான்''னு கொஞ்சம் கவனிக்கனும்.. கண்டவனோடையும் பழகிட்டு...

    "போதும் நிறுத்து.. உன் தங்கையை நினைச்சிண்டு பேசறியா? வீட்டைவிட்டு மனம்போனபடி ஒடினவதானே அவ.. உங்காத்திலேயே  இப்படி நடந்திருக்கும் போது நீ இந்த ஆத்தைபத்தி பேச உனக்கு தகுதியில்லை, அதுவும் என் தங்கையை பத்தி தப்பா பேசினேன்னா.. உன்னை என்ன பண்ணுவேன்''னு'' எனக்கே தெரியாது..." என்று கோபத்தின் மிகுதியில் கத்தினான் ரகுநாதன்.

   "நீங்களும் கொஞ்சம் நாக்கை அடக்கி பேசுங்கோ... உங்க குடும்பத்தை பத்தி தெரியாதாக்கும்.. உங்கப்பா போன பிறகு நாலாத்துலே  சமையல் வேலை மட்டும் செஞ்சு உங்களையெல்லாம் இப்படி படிக்க வசசி காப்பாத்தியிருக்க முடியுமா உங்கம்மாவாலே?  எங்கம்மா ஏற்கனவே உங்க குடும்பத்தை பத்தி எங்கி்ட்டே சொல்லியிருக்கா.. ஏதோ நீங்கள்லாம் நல்லவா''னு''தான் எங்காத்துலே என்னை உங்களுக்கு கட்டிவச்சா.. தாயை போல பிள்ளைம்பா, அதுக்கு ஏத்தாற்போல் உங்க தங்கையும்.... கொஞ்சமாவா ஆடினா.. என்னமோ என்கிட்டே பாயறேளே?"

 "என்னடி சொன்னே? நானும் போகுதுன்''னு'' இவ்வளவுநேரம் பொறுமையாயிருந்தேன்.. " என்ற ரகுநாதன் '' பளார்'' என்று அவள் கன்னத்தில் அறைந்தான்.

   "என்னை அடியுங்கோ.. கொல்லுங்கோ.. என்னை சொல்லனும் உங்களை போய் கட்டிண்டேன் பாருங்கோ.." என்று கத்திவிட்டு மைதிலி அழுவது விநோதாவிற்கு கேட்டது.

   "சே, என்னதான் இருந்தாலும் ஒரு பெண்பிள்ளையை இப்படி அறைந்திருக்க௬டாது. பொறுமைக்கு மறுபெயராக விளங்கும் அண்ணாவா இப்படி செய்தான்" என்று விநோதா திகைத்து போயிருந்தபோது.. முகம் சிவக்க கோபத்துடன் வெளிவந்த ரகுநாதனும் அவளைகண்டு திடுக்கிட்டு நின்றான்.

 ''எல்லாவற்றையும் கேட்டிருப்பாளோ...''

     "ஸாரி விநோத், உன் மன்னி தெரியாமே உன்னைபத்தி என்னவெல்லாமோ பேசிட்டா.. அவளுக்கு நான் ரொம்ப இடம் கொடுத்திட்டேன்னு எனக்கு இப்பத்தான் புரியறது."

  "நான் அதைபத்தி கவலைபடலேண்ணா.. என் மனசு சுத்தமா, திடமா, இருக்கற வரைக்கும் யார் என்ன சொன்னாலும் பொறுத்துப்பேன். அவ என்னதான் சொன்னாலும் நீ மன்னியை அடிச்சது தப்பு. நான் உன்கிட்டே இதை எதிர்பார்க்கலே.. " நிதானமாக ௯றினாள் விநோதா.

     "அது உன்னாலேதான்..." என்றபடி சிவந்து போயிருந்த கன்னத்தை கைகளால் தடவியபடி அழுதுகொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள் மைதிலி.

   '' எது மன்னி?''சற்றும் பதட்டமில்லாது விநோதா வினவினாள.

  "எதுவா? பழசையெல்லாம் கனவா மறந்துட்டு ஒரு கல்யாணத்தை பண்ணிக்காமே என் குடும்பத்திலே குட்டையை குழப்புறே பாரு, அதுதான். உன்னைப்போய் உன்அண்ணாவும் தலையிலே தூக்கி வச்சிண்டு கொண்டாடுறார்."

                     '' மைதிலி...''

 "அண்ணா, போதும். உங்க சண்டை சச்சரவெல்லாம்..." என்ற விநோதா மைதிலியின் அருகில் வந்தாள்.

  "மன்னி நீ என்னாலே அண்ணாகிட்டே அடிவாங்கினதுக்கு என்னை மன்னிச்சிடு.. அப்புறம், உனக்கே தெரியும், காலேஜ் லைப்பிலிருந்து நானும் ராஜசேகரும் பழக ஆரம்பிச்சோம்.. அந்த நட்பு நாளடைவில் வலுப்பட்டு திருமணத்தில் வந்து நின்னப்போ.. நான் உன்கிட்டேயும் அண்ணாகிட்டேயும் சம்மதத்திற்காக எவ்வளவு கெஞ்சினேன். அது வரைக்கும் என் விருப்பத்திக்கெல்லாம் வளைந்து கொடுத்த அண்ணாவும் இந்த ஒரு விசயத்துக்கு மட்டும் கொஞ்சம் பிகு செய்தான். அதன் விளைவு முடிவு கொஞ்சநாள் கழித்துதான் தெரிந்தது. அந்த முடிவு  எனக்கு சாதகமாக இருக்கவே, அதை ஆவலோடும், சந்தோஷத்தோடும் அவரிடம் சொல்ல விரைந்த போது என்னை அதே மகிழ்ச்சியுடன் சந்திக்க வந்து கொண்டிருந்த அவருக்கு, அந்த விபத்து ஏற்பட்டது. "இந்த பாவியை மணப்பதை விட சாவை சந்திப்பது மேல்" என்று கடவுள்  நினைத்தானோ என்னவோ? அவரை தன்னிடமே அழைத்துக்கொண்டுவிட்டான்.  நான் ஒரு முடிவாடு வந்திருப்பதை அறியாமல் அவர்  முடிவின் எல்லைக்கே சென்று என் வாழ்க்கையையும் முடித்து விட்டார். ஒவ்வொருத்தரை போல இதயத்தில் ஒருவரை சுமந்து கொண்டு  வெளி உலகத்திற்காக ஒருவரின் ''மனைவி" என்ற பட்டத்தில் வாழ எனக்கு தெரியாது, என்னால் முடியவும் முடியாது. இந்த ஜென்மத்தில்  அவர்தான் எனக்கு கணவர். அவரை நினைத்துக்கொண்டே அவருடன் மனதால் வாழ்ந்து கொண்டே, நான் இருக்கிற வரை என் காலத்தை  கழித்து விடுவேன். இந்த ஊர் உலகத்துக்கு முன்னாடி நான் திருமணமாகமல் கெட்டு போய் கொண்டிருக்கிற ஒரு கன்னிப்பெண், ஆனால்  என்னை பொறுத்தமட்டில் நான் பூவோடும் பொட்டோடும் என் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு "நித்திய சுமங்கலி". என்னைப்பார்த்து, என் செய்கையை பார்த்து இந்த ஊர் சிரிக்கட்டும், உலகம் சிரிக்கட்டும், நான் அதை பத்தி கவலைப் படலே... ஆனா நீயும் என்னை புரிஞ்சுக்காமே, என்னென்னவோ பேசறே பாரு, அதை நினைச்சுதான் நான் ரொம்ப வருத்தப் படறேன் மன்னி..." மிகவும் உணர்ச்சிவசப்பட்டு  பேசிய விநோதா சற்று நிறுத்தினாள்.

 "கண் கலங்க அவளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் ரகுநாதன்.

"பழசையெல்லாம் இப்ப ஏன் கிளறுறே? முடிவா இப்ப சொல்லு?  எங்க திருப்திக்காக, கெளரவத்திற்காக, கல்யாணம் பண்ணிப்பியா,  இல்லை,  இன்னும் ஊர் வாய்க்கு அவலாகத்தான் இருக்க போறியா?"  என்று மைதிலி கேட்ட விதம் அவள் இன்னும் இளகவில்லை  என்பதை விநோதாவிற்கு எடுத்துக் காட்டியது.

   '' மன்னி.. நீ, இன்னமும் என்னை புரிஞ்சுக்கலே.. அதை பத்தி நா கவலைபடலே, இன்னொருத்தர் திருப்திகாகவெல்லாம், எம்மனசை மாத்திக்க நான் தயாராயில்லை.. அப்படி உங்க திருப்திதான்  பெருசுன்னா, என் உயிரை தர்றேன். என்னை இன்னொருத்தனுக்கு தரமாட்டேன்,  இதுதான் என்பதில்.''  உறுதியான குரலில் ௬றிவிட்டு தன் அறைக்கு திரும்பிய விநோதா  சட்டென்று நின்றாள்.

   "மன்னி, நான் கேக்கறது தப்புன்னா என்னை மன்னிச்சிடு.  என் நிலைமை உனக்கு வந்திச்சுன்னா..  ஐ...மீன், அண்ணாவுக்கே ஏதாச்சும்  ஒண்ணு ஆயிடிச்சின்னா, நீ இன்னொரு கல்யாணம்  பண்ணிப்பியா? அந்த நிலமையிலே என்னை வச்சி யோசிச்சு பாரு.. நான் இப்படி  ஒரு கேள்வி கேட்டதுக்கு நீதான் காரணம். இருந்தாலும் ஐ.யாம்.. ஸாரி..."

விநோதா அறைக்குள் போய் விட்டாள்.

  திகைப்பிலிருந்து நீங்கிய மைதிலி பதறிய குரலில் பகைமையை மறந்தவளாய், ''கேட்டேளா, உங்க தங்கை பேச்சை, தேகத்திலே, எவ்வளவு கொழுப்பு இருந்திச்சின்னா, சொந்த மன்னின்னு பாக்காமே, இப்படி பேசிட்டு போவா.." என்றாள் படபடப்புடன்.

   "அவ கேட்டது ரொம்ப கரெக்ட்" என்றபடி சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டே அங்கிருந்து அகன்றான் ரகுநாதன்.


            "என்ன விஷயம் அண்ணா? என்னமோ தனியா பேசனும்ன்னு ௬ட்டிண்டு வந்துட்டு இப்போ எதுவுமே பேசாமே எங்கேயோ வெறிச்சிண்டு உட்காரந்திருக்கியே?" விநோதாதான் பேச்சை ஆரம்பித்தாள்.

  "ஸாரி விநோத், அந்த காலத்துக்கே போயிட்டேன். நம்ப அம்மா எவ்வளவு நல்லவ..  நம்ப அப்பா போன பிறகு அம்மா நம்பளையெல்லாம் எவ்வளவு கஷ்டபட்டு  காப்பாத்தினா? கல்மிஷ மில்லாத அந்த உத்தமியை போய் இந்த பாவி என்னவெல்லாம் பேசிட்டா.." குமுறிய குரலில் வருத்தம் தொண்டையடைக்க பேசினான் ரகுநாதன்.

  "நீ இன்னும் அதையெல்லாம் நினைச்சிண்டிருக்கியா அண்ணா? நான் அப்பவே மறந்திட்டேன். மன்னி பேசினதை மட்டுமில்லை,  யார் என்ன பேசினாலும் சரி "டேக் இட் ஈசி" ன்னு எடுத்துக்கனும் அப்பத்தான் இந்த உலகத்திலே நிம்மதியாய் வாழ முடியும்."

 "எல்லாத்தையும் அப்படி எடுத்துக்கலாம் விநோதா, ஆனா நம்மை பெத்த அம்மாவை நம்மகிட்டயே தூஷனையா பேசறபோது என்ன செய்ரோம்ங்கிற நினைவு இல்லாமே போயிடறது.."

  மன்னியை கை நீட்டி அடித்ததற்காகவும் அண்ணா வருத்தப் படுகிறான். என்பதை உணர்ந்து கொண்ட விநோதா அவனை சமாதானபடுத்தும்  குரலில் "விடு அண்ணா... மன்னி ஏதோ தெரியாமல் பேசி விட்டாள்.அவ சமயத்திலே இப்படித்தான்  பேச தெரியாமே பேசிடுவா... நீ அதை நினைச்சி கவலை பட்டுண்டே இருக்காதே" என்றாள் .

  "இல்லை விநோதா, எனக்கு இன்னமும் மனசு தாங்கலே.. உனக்கு ஒன்னு தெரியுமா? நம்ப அம்மா இந்த உலகை விட்டு போறதுக்கு  முன்னாடி ஒருநாள் என்னை தனியா கூப்பிட்டு பேச தடுமாறிய அந்த முடியாத நிலையில், '' ரகுநாதா, உன்னை எப்பிடியோ கஷ்டபட்டு படிக்க வச்சுட்டேன். இனிமே ஒரு நல்ல  வேலையை சம்பாதிச்சிண்டு நீ நல்ல நிலைக்கு வர்னும்முனு நா அந்த பகவானை வேண்டிக்கிறேன். உனக்கு நா  அந்த சிரமத்தை மட்டும்  கொடுத்துட்டு போகமே, இன்னும் இரண்டு பிரச்சனை வேறேயும் வச்சிட்டு போறேன். உன் இரண்டு தங்கைகளைதான் சொல்றேன். இனிமே அதுகளை உன் இரண்டு கண்களா நினைச்சிக்கோ, அந்த இரண்டு கண்களையும் என்னைக்கும் இழந்துடாமே வச்சு காப்பாத்துறது  உன்னோட பொறுப்பு எனக்காக நீ இதை செய்வேன்'னு'' நம்பறேன்.'' அப்படின்னு சொல்லிட்டு போனா, அதை எப்ப நினைச்சிண்டாலும்  அம்மாவுக்கு  கொடுத்த வாக்கை நா சரியா நிறைவேத்தலையோன்னு எனக்கு தோணறது விநோத்'' கண்களில் நீர் மல்க ௬றினான் ரகு.

    "நீ சுத்தி வளைச்சு எங்கே வர்னேன்னு எனக்கு புரியறதண்ணா... அம்மா சொன்னபடி பாத்தாலும், நீ ஒரு கண்ணை தானமா கொடுத்துட்டு  நிக்கிறே, அம்மா என்னைக்கும் இழந்துடாமே வச்சுக்க சொன்னதை மறந்துட்டே.." விநோதா புன்னகையுடன் உண்மையை எடுத்து ௬றினாள்.

 "நீ சொல்றது தப்பு விநோதா... அந்த கண்ணோட நன்மைக்காகத்தான் அந்த கண்ணை தானமா கொடுத்தேன். தெய்வமா வாழ்ந்திண்டிருக்கும் நம்ப அம்மாவுக்கு அது நன்னா புரியும்.." சற்று அழுத்தமாக ௬றினான் ரகுநாதன்.

  "அண்ணா, இனிமே இந்த மாதிரி யெல்லாம் பேசாதே, கூடப் பிறந்து இத்தனை வருஷமா என்னோட பழகிட்டும். என்னை நீயும் சரியா, புரிஞ்சிகில்லையே , இந்த கண்ணுக்கு இனிமே எந்த நன்மையும் வேண்டாம் அண்ணா, இந்த கண் எப்பவும் உன்னோட இருக்கதான்  பிரியபடறது. அதை புரிஞ்சுக்காமே பேசாதே, இப்போ நம்ப அம்மா உயிரோட இருந்தாகூட என்னோட முடிவு சரிதான்னு, சொல்லுவா.. அப்படி பிடிவாதமா அந்த கண்ணை நீ இழக்கத்தான் போறேன்னா, அதை ஒரேடியா அழிச்சிடு அண்ணா, தானமா மட்டும் கொடுத்துடாதே,  உணர்ச்சிகளின் பாதிப்பில் பேச முடியாது" திணறினாள் விநோதா.

     "விநோத் ஸாரிம்மா, உன்னை இனிமே எப்பவும் நிர்பந்திக்க மாட்டேன். என்னை மன்னிச்சுடும்மா.."

            சிறிது நேரம் இருவருக்குமிடையே ஒரு வருத்தமான மெளனம் நிலவியது. நாம் பேசியது தவறோவென்ற சிந்தனை இருவரையும் வாய் மூடிய மெளனியாக்கியது.

  "விநோத், நம்ப இரண்டு பேர்களோட வாழ்க்கையிலும் இப்போ கொஞ்ச நாளா ஒரு முள் நெருடிண்டே இருக்கு அந்த முள்ளை ஒரேடியா எடுத்தெறிய போறேன் அதை சொல்லத்தான் நா உன்னை இங்கே அழைச்சிண்டு வந்தேன் அதை மறந்திட்டு  ஏதேதோ பேசி உன்னை புண்படுத்திட் டேன்."

       "நீ எண்ணன்னா சொல்றே? புரியாமல் கேட்டாள் விநோதா.

 "மாலினியை கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு... .அவளைப்  பத்தி இனி எனக்கு எந்த கவலையும் இல்லை ஏன்னா, அவாத்திலே அவளை நன்னா  பாத்துக்கிறா... மாப்பிள்ளையும் தங்கம்! இப்போ என்னோட கவலையெல்லாம் உன்னை பத்தி மட்டுந்தான் விநோத்மா, நான் இருக்கிற வரை  உனக்கு ஒரு வருத்தம் வராமல் நீ சந்தோஷமா இருக்கனும் அது மட்டுந்தான் என் வாழ்க்கையின் லட்சியம். உனக்காக என் வாழ்க்கையில் நான் எதை வேணும்னாலும் இழக்க தயாரா இருக்கேன்.  உன் மன்னி வேறே எப்பவும் உன்னை ஏதாவது சொல்லி புண்படுத்திண்டே இருக்கா, உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி என்னையும் நச்சரிச்சிண்டே இருக்கா, இவளாளே நம்ம நிம்மதி தினமும் பறி போறது அதனாலே யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். அவளை அவ பிறந்தாத்ததுக்கு அனுப்பிட்டு நாம ரெண்டு பேரும் நம்ப படிப்புக்கு ஏத்த உத்யோகத்தை தேடிண்டு எங்கேயாவது கண்காணாத ஊருக்கு போய் விடலாம் சாகற வரைக்கும் உனக்கு நான் துணை எனக்கு நீ துணை, முடிஞ்சா உன் மன்னிக்கு விவாக ரத்து கூட தந்துடறேன். அவ வழியிலே அவ வாழ்க்கையை அமைச்சிப்பா, எனக்கு  நீ தான் முக்கியம் விநோத்" கண்களில் கண்ணீர் ததும்ப லேசாக விசும்பினான் ரகு.

   ''அண்ணா...'' எதிலும் நிதானமாக இருப்பவள் பொது இடம் என்று கூட பாராமல் சற்று வாய் விட்டு கத்தி விட்டாள் விநோதா.

  கண்கள் சற்று நேரம் இமைக்க மறந்து அதிர்ச்சியில் சமைந்தன.

  "உனக்கென்ன பைத்தியமா அண்ணா? இன்னைக்கென்னவோ எல்லாமே விசித்திரமா பேசறே?" திகைப்பிலிருந்து விடுபட்டு அவள் இந்த  கேள்வியை கேட்க சில வினாடிகள் ஆயின.

 "நோ விநோத்.. நான் தெளிவாதான் இருக்கேன். அவ அனாவசியமா உன் விருப்பபடி நீ வாழறதுக்கு தடையாவும், என் வாழ்க்கையிலேயும் என்  நிம்மதிக்கு குறுக்கீடாகவும், என்னோட பொறுமைக்கே சோதனையா இருக்கா, அதனாலேதான் இந்த முடிவு" பதட்டமில்லாமல் சொன்னான் ரகுநாதன்.

 "அண்ணா... இதுலே என்னோட பிரச்சனையும் கொஞ்சம் கலந்திருக்கு, ஐ மீன்.. நீ மன்னியை அப்படி விடறதுக்கு நானும் ஒரு காரணமா  இருக்கேன். அதனாலே என்னோட யோசனையையும், நான் சொல்வேன் நீ அதை தட்டாமே ஏத்துக்கனும்."

   "தாராளமாய் விநோத், உன் கருத்தை நான் என்னிக்குமே மறுப்பேனா?அதற்குதானே உன்னைஇங்கே தனியா கூட்டிண்டு வந்து ஆலோசனை கேட்கிறேன்."

  "தேங்க் யூ அண்ணா... நான் இன்னும் ஒரு வாரத்திலே யோசிச்சு ஒரு முடிவை சொல்றேன். அது வரைக்கும் இது விஷயமாய் நீ மன்னி கிட்டே கண்டிப்பா நடக்காமே எப்போதும் போலவே பழகணும் சரியா.... நாம இப்போ பேசினதையெல்லாம் தப்பி தவறி ஒரு வார்த்தை கூட மன்னி கிட்டே சொல்லிடாதே.. மேற்கொண்டு இந்த விஷயத்துலே ஆழமா காலை விடக்௬டாது தெரிஞ்சுதா.. குறிப்பா நான் என்னோட முடிவை  சொல்றவரைக்கும் இதைப் பத்தி மறந்துடனும் சரியா?" கண்டிப்பான குரலில் ௬றினாள் விநோதா.

        "சரி விநோத்.. புறப்படலாமா?" உன் யோசனைப்படியே ஆகட்டும். ." என்றபடி எழுந்தான் ரகுநாதன்.

   "எனக்காக..... என் மனம் வருத்தப்படக்   கூடாது என்பதற்காக...... தனிமரமாக நிற்கும்  என் ஒருத்திக்காக. ...ஒரு குடும்பத்தையே......ஒருகூட்டையே...... கலைக்க தயாராயிருக்கியே அண்ணா, என் மீது உனக்கு அவ்வளவு பாசமா? அதுக்கு ஒரு எல்லையே இல்லையா.. எனக்காக உன் வாழ்வையே தியாகம் செய்ய துணிஞ்சிட்டியே அண்ணா. .. நீ ரொம்ப... ரொம்ப..... இமயமலை மாதிரி உயர்ந்திட்டே என் சிறிய மனசாலே  உன்னை அண்ணாந்து பாக்க முடியலேண்ணா , உன்னை புரிஞ்சிககாமே எத்தனையோ நாள் தாழ்வா நினைச்சதுக்கு விஷ்வரூபம் எடுத்தது மாதிரி  உயரே.... உயரே .... போயிட்டேயேண்ணா, சில சமயம் உன்னை பத்தி தவறா நினைச்சி மனசுகுள்ளே சில நிமிஷங்கள் வெறுத்தற்கு எனக்கு பெரிய  தண்டனையா கொடுத்துட்டேயேண்ணா, என்னை மன்னிச்சுடு அண்ணா.. .மன்னிச்சுடு.! இந்த பிறவியில் உன் தங்கையாய் பிறந்த பாக்கியத்தை அடைந்த  நான், இனி  எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கு தங்கையாகவே பிறக்கணும்னு அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேண்ணா.." அவனை மனதுக்குள்  நினைத்து  ஜபித்துக் கொண்டே புலம்பியபடி கண்களில் நீர்மலக அவனைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள் விநோதா.

தன் கையிலிருந்த சூட்கேசை கீழே வைத்து விட்டு தன்னையும் தன்மனைவியையும் ஒருங்கே நிற்க வைத்து  காலில் விழுந்து நமஸ்கரித்த விநோதாவை பார்த்து திகைத்தான் ரகுநாதன்.

   "என்ன விநோதா இதெல்லாம்??"

  "என்னை ஆசிர்வதித்து விடை கொடு அண்ணா..."

  "விநோதா..." என்று அலறியபடி காலில் விழுந்தவளை தூக்கி நிறுத்தியவன், அவளை உற்று பார்த்தவாறு "விநோத்ம்மா உனக்கு என்ன ஆச்சு?" என்றான் பதறிய குரலில்.

  "எனக்கு ஒன்றுமில்லையண்ணா, நீ என் மேலே வச்சிருக்கிற பாசத்தை தியாகமா மாத்துறத்துக்கு முன்னாடி நான் உன் கிட்டேயிருந்து விலகிட தீர்மானிச்சிட்டேன் அண்ணா அதுக்காக என்னை மன்னிச்சுடு,  என் ஆபீஸீலே என்னை டெல்லிக்கு மாத்தியிருக்காங்க அண்ணா.. . இன்னும் ஒருவாரத்திலே வேலையிலே ஐாயின் பண்ணனும். அதுக்கு நான் இன்னைக்கு கிளம்பினாதான் சரியாயிருக்கும்.."

  "விநோதா என்கிட்டே நீ இதுவரைக்கும் சொல்லவேயில்லையே...? சற்று கோபத்துடன் கேட்டான் ரகுநாதன்.

  "அன்னைக்கு உங்கிட்டே அதை சொல்லனுந்தான் நினைச்சிட்டிருந்தேன்  ஆனா நீ வேற ''விஷயத்துக்கு'' போயிட்டதாலே சொல்ல வாய்ப்பு இல்லாமே போயிடுத்து... நானும் அதை மனசுலே வச்சுகிட்டுத்தான்  இன்னும் ஒரு வாரத்திலே  என் முடிவை சொல்றதா  சொன்னேன் அண்ணா,  நான் இந்தாத்திலே இருந்து போயிடறதுனாலே, நீ கற்பனை பண்ணின  அந்த ''விஷயத்துக்கு'' ஒரு காரணமும் போயிடுத்துன்னு வச்சிக்கோ.... இனிமே நீ அந்த ''விஷயத்தை'' கனவிலே கூட நினைக்க மாட்டேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணி கெடுக்கும்... அதுதான் எனக்கு நீ பண்ற உதவியாகவும் இருக்கும்... நம்ப அம்மாவின் ஆத்மாவும் நல்லபடியா சாந்தி அடையும்..." நிதானமாக  கூறி நிறுத்தினாள் விநோதா.

  '' விநோதா...''  வார்த்தைகள் வராமல் நின்றான் ரகுநாதன்.

     புரியாத புதிர் ஒன்றை கண்டு விட்டவள் போல் இருவரையும் மாறி, மாறி வெறித்து கொண்டு நின்றாள் மைதிலி.

       "மன்னி , ஒரு தாய்க்கும் மேலா என்னை இது வரைக்கும் கவனிச்சிண்டே,... அதுக்கு நான் உனக்கு ரொம்ப கடமைபட்டிருக்கேன். நான் டெல்லியிலிருந்தாலும் சரி, வேறே எங்கேயிருந்தாலும் சரி,  உன்னை மறக்கவே மாட்டேன் மறக்கவும் முடியாது. அண்ணா,  ஒரு அசட்டு காரியம் பண்ண இருந்தான் அதுக்கு மூலகாரணம் நான்தான்.... நல்லவேளை.. !
நான் அதிலிருந்து தப்பிச்சிட்டேன். ஆனா நான் அதுக்காகத்தான் பயந்துண்டு ஓடறதா நினைச்சிக்காதே. ! அண்ணா நினைச்ச காரியம் தெய்வத்துக்கு கூட பொறுக்கலே, அதான் " சந்தர்பங்கிற" பெயரிலே வந்து மூலக் காரணமாயிருந்த என்னை தள்ளிண்டு போறது..... அதுக்காக நான் அந்த தெய்வத்துக்கு நன்றி சொலறேன்.   அங்கேயிருக்கிற என்மேலே நீ சந்தேகப்படாதே!. நான் என் அண்ணாவுக்கு தங்கை. .. அவன் மேலே உனக்கு நம்பிக்கையிருந்தா என்னையும் நம்பு. அவ்வளவுதான் சொல்வேன்..  நீ எத்தனையோ தடவை என்னை என்னென்வோ சொல்லியிருந்தாலும், எனக்கு உன் மேலேயிருக்கிற அன்பும் மதிப்பும் குறையவே குறையாது. நான் போயிட்டு வர்றேன்  அங்கே போன பிறகு நான் தங்கியிருக்கும் விலாசம் தெரியபடுத்துறேன் அடிக்கடி கடிதம் எழுது, உன் உடம்பை பாத்துக்கோ..." என்ற விநோதா மீண்டும் ஒருமுறை அவள் காலில் விழுந்து  நமஸ்கரித்தாள்..

         "அண்ணா,  நான் உன்னோடேயே எப்பவும் இருக்கனும்னு ஆசைபட்டேன். நான் உன்னை விட்டு போறதுக்கு நீதான் காரணம்.  ஆமாம், அண்ணா  நீ மட்டும் அன்னைக்கு அந்த ''விஷயத்தை'' ஆரம்பிக்கலேன்னா, என்னை எங்காபீஸிலே டெல்லிக்கு மாத்தியிருக்கிறதை  உன்கிட்டே சொல்லிட்டு, மறு நாளே என்அண்ணாவை விட்டு என்னாலே பிரிந்திருக்கமுடியாது, அதனாலே, இந்த வேலையை விடறேன்னு சொல்லிடவான்னு உங்கிட்டே கேக்கலாம்னு நினைச்சேன். ஆனா உன்கிட்டே பேசின பிறகு.....என் எண்ணத்தை மாத்திண்டேன்."

   "விநோதா, என்னை மன்னிச்சிடும்மா தயவு செய்து உன் பிரயாணத்தை நிறுத்து. நான் இனிமே எந்த வித பிரச்சனையும் உனக்கு கொடுக்க  மாட்டேன்மா, பிராமிஸா.. , என்னுடைய அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைச்சிடுறேன். என்னை நம்பும்மா, நீ என்னை விட்டுட்டு  எங்கேயும் போயிடாதே,..." குரல் உடைய உருக்கமாக கூறினான் ரகுநாதன்.

  "நோ அண்ணா.. அது இனிமே முடியாத காரியம்  நான் வேலையை ஒத்துண்டாச்சு, இரண்டாவது நான் இங்கேயிருந்தா உன் மனசுலே அந்த மாதிரி எண்ணங்கள் தலைதூக்கிண்டேதான் இருக்கும்  இந்த தனிப்பறவைக்காக, நீ ஒருகூட்டிலிருந்து பிரிஞ்சு வர முயற்சிக்காதே  அண்ணா, இது ஒரு சிறகொடிஞ்ச  கட்டுபாட்டுக்குள்ளே அடங்கிய, ஓருசுதந்திர பறவை. ஆனா நீ.......... நீ.......... அப்படியில்லை..." மேற்கொண்டு  பேசமுடியாமல் தடுமாறிய விநோதா,  சற்று நிறுத்தி  சுதாரித்துக் கொணடு ரகுநாதனின் அருகில் சென்று அவன் கைகளை  பற்றியபடி  "அண்ணா, எனக்கு ரயிலுக்கு நேரமாயிடுத்து. நான் போயிட்டு வர்றேன். நான்அடுத்த தடவை சந்திக்கும்போது உன் மனசுலே உதயமான  அந்த விஷ மரம் வேரோடு சாய்ஞ்சு நீ பழைய அண்ணாவா, அந்த ராமர் மாதிரி... பழைய ரகுநாதனா, காட்சி தரணும்.." என்ற விநோதா பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு பறப்பட்டாள்.

      ''விநோதா..''  அவளை பிரிய மனமில்லாமல் தவித்தான் ரகுநாதன்.

  "அண்ணா, மன்னி... ரவி எழுந்தா என்னை தேடுவான். அதான் அவன் தூங்கறச்சேயே கிளம்புறேன். அவனை பத்திரமா பாத்துக்கோங்க. 'கூடிய சீக்கிரம் அத்தை வந்துடுவாள்னு சொல்லுங்கோ'" என்று ரவியின் பிரிவை நினைத்து சற்று கண் கலங்கியவள்... கண்களை துடைத்தபடி அண்ணா, மன்னி, "நான் இதுவரை ஏதாவது தப்பா நடந்திண்டிருந்தாலும், உங்கள் மனம் புண்படும்படி தப்பா பேசியிருந்தாலும் ரவிக்கு மூத்த குழந்தையா  நினைச்சி என்னை மன்னிச்சிடுங்கோ, நான் போயிட்டு வர்றேன்.."

விநோதா கண்களிலிருந்து மறைந்து விட்டாள்.

      பாதி புரிந்தும், பாதி புரியாத பாவத்திலும், பேச சக்தியற்று மலைத்துப் போய் நின்றிருந்தாள் மைதிலி.

   "அம்மா, உன்னோட  சொல்லை நான் காப்பாத்தலேம்மா, நான் உனக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றலேம்மா, நீ எனக்கு கொடுத்த, என்னை பத்திரமா பாத்துக்கச்சொல்லி கொடுத்த.. இரண்டு கண்களிலே ஒண்ணை தானமா கொடுத்துட்டேன் இன்னொன்னு தானவே போயிடுச்சுமா, ஆகக்கூடி  நான் இப்போ இரண்டு கண்களையும இழந்த குருடனாய் தவிக்கிறேனம்மா.." தனக்குள் முணுமுணுத்தபடி  கண்களில் நீர் வடிய நாற்காலியில் சாய்ந்தான் ரகுநாதன். 

Friday, June 22, 2018

போலி

கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த லதா ஆளுயர நிலை கண்ணாடி முன் நின்று தன் அழகை தானே ரசித்து கொண்டிருந்தாள். லைட் நீல நிறத்தைக் கொண்ட புடவையும், அதே நிறத்தில் பிளவுசும் அவளை அழகு தேவதையாக்கி கொண்டிருந்தன. இந்த நேரத்தில் மோகன் தன் அருகில் இருந்தால் தன்னை எப்படியெல்லாம் வர்ணிப்பான். அந்த நினைப்பு அவள் உள்ளத்தில் எழுந்ததுமே, அவளது அழகிய அதரங்களில் ஒரு புன்னகை நெழிந்தோடியது.

"லதா" என்ற குரலைக் கேட்டதும் இனிய கனவுகளில் உலாவி கொண்டிருந்தவள் "பொத்"தென்று கீழே விழுந்து விட்டதை போன்று உணர்ந்தாள்.

சட்டென்று திரும்பி பார்த்தவள் அங்கு தன் அம்மா அன்னபூரணி கையில் பால் டம்பளருடன் நிற்பதை கண்டதும் " என்ன அம்மா ?" என்றாள் சற்றே சிடுசிடுப்புடன்.

"லதா, உனக்கு பரீட்சை முடிய இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?" என்று கேட்டாள் அன்னபூரணி.

"மூன்று...." மொட்டையாக பதில் வந்தது
லதாவிடம் இருந்து. 

தன் அழகை பூரணமாக ரசித்து திருப்தி அடைவதற்குள் அம்மா குறுக்கிட்டு விட்டாளே என்ற எரிச்சல் அவளுக்கு.

"லதா, உனக்கு பரீட்சை முடிந்து விடுமுறை விட்டவுடன், உன் திருமணத்தை முடித்து விடவேண்டும், என்கிறார் உன் அப்பா. அதற்கேற்றாற்போல், வரன்கள் வேறு வந்து கொண்டிருக்கின்றன. 

நேற்று கூட ஒரு வரன் வந்திருக்கிறது... இதோ, பையனின் போட்டோவை அனுப்பி இருக்கிறார்கள். உனக்கு பிடித்து இருக்கிறதா என்று பார்..."

அன்னபூரணி நீட்டிய போட்டோவை வாங்காமல், ஜன்னல் அருகே போய் நின்றவள், வெளியே தெரியும் நீல நிற வானத்தையே சற்று நேரம் மெளனமாக வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். 

பிறகு, "எனக்கு இப்போது திருமணம் வேண்டாமம்மா... நான் இன்னும் மேலே படிக்க போகிறேன். இதை நீ தான் அப்பாவிடம் சொல்லி அப்பாவின் சம்மதத்தை வாங்கி தரவேண்டும்.." அவள் குரல் கெஞ்சியது.

"இதையெல்லாம், நீயே உன் அப்பாவிடம் சொல்லிக்கொள். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நாங்கள் பார்க்கும் பையனைத்தானே  நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும்.." என்ற அன்னபூரணியின் குரலில் சற்று கண்டிப்பு ஒலித்தது.

ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்த லதா திரும்பி, அன்னபூரணியை உற்று பார்த்தாள். பின் "நீங்களெல்லாம், உங்கள் பெற்றோர் பார்த்த பையனையே திருமணம் செய்து கொண்டு என்ன பயன் கண்டு விட்டீர்கள்?" என்று எகத்தாளமாக கேட்டாள்.

 அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அன்னபூரணி திணறிகொண்டிருந்த போதே, மேஜை மீதிருந்த புத்தகங்களை அள்ளி கொண்டு, "நான் கல்லூரிக்கு சென்று வருகிறேன்.." என்ற சொல்லையும் உதிர்த்து விட்டு சிட்டென பறந்தாள்.

திகைத்துபோய் நின்று கொண்டிருந்த அன்னபூரணிக்கு தன் மகள் கேட்ட கேள்வியும் சரியெனவே பட்டது. 

ஆம், அவள் செல்வநாயகத்தை திருமணம் செய்து கொள்ளும் போது  சற்று பயந்த சுபாவத்தில்தான் இருந்தாள். அதற்கேற்றாற்போல்  அவரும் எப்போதும் பணம் பணம் என்றே தன் பிஸினஸ் ஒன்றே குறியாக இருந்து  செல்வநாயகம் பெயருக்கேற்றாற்போல் செல்வத்தின் நாயகராகவே விளங்கினார். பணம் இருந்தது அவரிடம்.. ஆனால் எப்போதும் தன்மையாக பேசும் குணம் இருந்ததா?

மூர்க்க தனமாக மனைவியிடமும், மகளிடமும் சில வேளைகளில் சத்தம் போடுவார். ஒரே மகள் என்றதால் , அவளுக்கு சில சமயங்களில் , சுதந்திரம் தருவார். சில சமயங்களில், கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல்  பேசிவிடுவார். நிலையற்றது அவரது மனம். அதனால் அவரிடம் மனைவி மகள் வேலைக்காரர்கள் எல்லோருமே எப்படி பேசுவது என்பது தெரியாமல் நடுநடுங்குவார்கள். பாம்பா, பழுதா என அறிய முடியாத ஒரு குணம். 

அவர் அவ்வாறு என்னிடம் நடந்து கொள்வதால் தான் லதா அப்படி கேட்கிறாள். ஆனால் குடும்பத்தின் மீது அவருக்கு இருக்கும் அன்பையும், தன் மீதும், தன் ஒரே மகளான இவள் மீதும் அவருக்கு இருக்கும் பாசத்தையும், இவளுக்கு எப்படி புரிய வைத்து தன் வழிக்கு கொண்டு வருவது என்று நினைத்து கொண்டே அறையை விட்டு வெளியே வந்து மாடிப்படிகளில் இறங்கி சமையல் அறைக்குள் புகுந்தாள் அன்னபூரணி.

கல்லூரியிலிருந்து கலகலவென சிரித்து பேசியபடி வெளியேறி கொண்டிருந்த மாணவிகளின் கும்பலிலிருந்து  வெளிப்பட்ட  லதா தங்கள் வீட்டு கார் வந்திருக்கிறதா என்று சுற்று முற்று பார்த்தாள்.

"அம்மா! கார் அங்கே இருக்கு போவோமுங்களா?" குரல் வந்த திசையில் திரும்பினாள் லதா .

"அடடே!! சண்முகம், நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்? நான் உங்களைத்தான் தேடி  கொண்டிருக்கிறேன். அப்போதே வந்து விட்டீர்களா?" என்றாள் லதா .

"இல்லையம்மா, நான் இப்பொழுது தான் வந்தேன். காரை எடுக்கட்டுமா?" என்றார் டிரைவர் சண்முகம்.

"இல்லை சண்முகம், எனக்கு பிரைவேட் கிளாஸ் இருக்கிறது. அதனால் நீங்கள் காரை விட்டுவிட்டு வீட்டிக்கு போங்கள். கிளாஸ் முடிந்ததும் நானே காரை எடுத்துவருகிறேன்."

"வேண்டாம் அம்மா.. அய்யா சத்தம் போடுவார்.. நீங்க முடிச்சிட்டு வாங்க, நான் அதுவரைக்கும் கார்ல காத்துக்கிட்டு இருக்கேன்."

"வேண்டாம் டிரைவர், நீங்கள் புறபடுங்கள், எனக்கு கிளாஸ் முடிய வெகு நேரம் ஆகும். நீங்கள் அப்பாவின் ஆபீசுக்கு பெரிய காரை எடுத்துக்கொண்டு போக வேண்டாமா."

ஒரு மட்டும் போக மனமில்லாமல் அவ்விடத்தைவிட்டு நகர்ந்த டிரைவரை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்ட லதா , அவர் தலை மறைந்ததும் காரை ஸ்டார்ட் செய்தாள். 

கார் "பீச்"சை நோக்கி விரைந்தது. காரை ஓட்டி சென்ற லதாவின் மனம் மிகவும் சஞ்சலப் பட்டது. காலையில் தான் அவ்வாறு அம்மாவிடம் பேசியிருக்க கூடாதோ! பாவம்.. அம்மாவின் மனம் எவ்வளவு வருத்த பட்டிருக்கும்.

"மோகன் நாளைதானே என்னை சந்திப்பதாக கூறியிருக்கிறார். நாளை சந்திக்கும் போது அவரிடம் தனக்கு பையன் பார்ப்பதை கூறி அவரை சீக்கிரமாக பெண் கேட்க வரச்சொல்ல வேண்டும்." 

கார் கடற்கரையை அடைந்ததும் அதிலிருந்து இறங்கினாள் லதா . 

கடற்கரையில் அவ்வளவாக கூட்டமில்லை. காரை பூட்டி விட்டு கடலை நோக்கி நடந்தாள். கதிரவனின் கிரணங்கள் அவளது பொன்னிற உடலின் மீது பிரகாசித்து அவளது அழகை அதிகபடுத்தியது. 

அவளும் மோகனும், கடற்கரைக்கு வந்தால் ஒரு படகின் மறைவில் தான் அமருவார்கள். அந்த திசையை நோக்கி கண்களை செலுத்தியவள் அங்கு மோகன் இருப்பதை கண்டு ஒரு கணம் மகிழ்ச்சி அடைந்தாள்.

<மோகன்..> என்று அழைக்க நாவெடுத்தவள், அடக்கி கொண்டாள். அவன் அருகில் ஒருபெண் நெருக்கமாக மிக---மிக----நெருக்கமாக அமர்ந்திருப்பதை கண்டு, மெதுவாக அவர்கள் அறியாமல் கவனிக்காமல், அவர்கள் அமர்ந்திருந்த படகின் மறுபக்கத்தில் அமர்ந்துகொண்டு அவர்கள் உரையாடலை உன்னிப்பாக கேட்கத்தொடங்கினாள் லதா .

"நான்சொல்வதை நம்பு.. உண்மையாக நான் அந்த லதாவை நேசிக்கவேயில்லை " என்றான் மோகன்.

"அவளையே சுற்றிகொண்டிருந்து, விட்டு அவளை காதலிக்கவில்லை என்றால் எந்த குருடனும் நம்ப மாட்டான்.." என்றாள் அவள் கோபத்துடன். 

"ஸில்லி, உனக்கு எத்தனை தடவை சொல்வது... எப்படி சொல்வது என்றே எனக்கு புரியவில்லை, நானும் நீயும் வருடகணக்கில் நேசிப்பது அவளுக்கு தெரியாது... நான் அவளைத்தான் உயிருக்குயிராக காதலிப்பதாக, நம்பிக்கொண்டிருக்கிறாள், அந்த பைத்தியகாரப் பெண்... நான் அவளிடம் இருக்கும் பணத்தைத்தான் "லவ்" பண்ணுகிறேன். 

அவளும், நான் கேட்கும் போதெல்லாம், பணமும் நகையுமாக எப்படியாவது கொண்டு வந்து தந்து கொண்டிருக்கிறாள். நாம் இருவரும் இருக்கும் இந்த ஏழ்மை நிலைக்கு, அவள் தரும் பணம் மிகவும் உதவியாக இருக்கிறது. இன்னும் அவளிடம் இருந்து, ஒருபெரிய தொகையாக கறக்க ஒருதிட்டம் வைத்திருக்கிறேன்.. 

அந்தபணத்தை கறந்தவுடன் நாம் இந்த ஊரை விட்டு வேறு எங்காவது சென்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம்.." என்றான் மோகன்.

"உண்மையாகவா!!! அந்த பெண்ணை அப்படி ஏமாற்றுவது தப்பில்லையா??" அந்தபெண்ணின் குரலில் சற்று பயம் தொணித்தது...

"ஏய்! விட்டால், நீயே அவளிடம் சென்று சொல்லி விடுவாய் போலிருக்கிறதே... அவளை நானா ஏமாறச்சொன்னேன்??? அவளுடைய பணத்திமிர் அவளைஏமாறச்சொல்கிறது." அந்த கயவன் தன் காதலியை சமாதானபடுத்த ஏதேதோ சொல்லிக் கொண்டேயிருந்தான்...

லதாவின் தலையில் ஒருபெரிய பாராங்கல்லை தூக்கிப்போட்ட உணர்ச்சியுடன் சிறிதுநேரம் கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். 

கடல்அலைகளை போல அவள் மனமும் கொந்தளித்தது. மீண்டும் அவர்கள் அறியாமல் எப்படியோ காரை வந்தடைந்தாள்.  காரை திறந்து உள்ளே அமர்ந்தவள், இத்தனை நேரம் நெஞ்சில் குமுறி கொண்டிருந்த உணர்ச்சிகளை கண்களின் வழியே கொட்டித்தீர்த்தாள்.

தன்னை உயிருக்குயிராக அவன் காதலிப்பதாக சொன்னதல்லாம் வாயளவே.. <<தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, ஆபீஸில் ஒருவரிடம் கடன், பணமுடையில் என்னசெய்வதென்று தெரியவில்லை>> என்று அவன் உள்ளம் உருக பேசி தவித்த போது அவளும் இரக்கபட்டு, தன் அப்பா அம்மாவுக்கு தெரியாமல் பணமும் நகையுமாக அவன் கையில் தாரை வார்த்தெல்லாம் வீண்.

இந்த லட்சணத்தில் எனக்கு பணத்திமிராம்... வெறுப்புடன் பல்லை கடித்தவள், "நல்லவேளை, இப்பொழுதாவது இவன் குணத்தை பற்றி தெரிந்து கொள்ள கடவுள் ஒருநேரத்தை ஏற்படுத்தி கொடுத்தாரே," என்று நிம்மதி பெருமூச்சு விட்டவளாய் காரை கிளப்பினாள்...

தனிமையாக சிறிது நேரம் இருக்க வந்தவளுக்கு, அந்த தனிமையில் இனிமை  கிடைக்கவில்லை... உள்ளத்தின் வெப்பத்தை போக்க குளிர்காற்றை நாடி வந்தவளுக்கு, அந்த வெப்பம் பன்மடங்கு பெருகியதுதான் மிச்சம்...

காலையில் அம்மாவிடம் இதைப்பற்றி கூறலாமா என ஒரு நிமிடம் யோசித்தவள், "மோகனை நாளை சந்தித்து அவனிடம் அவன் தாய் தந்தையரை விட்டு பெண் கேட்டு வரச் சொன்ன பின் தன் தீர்க்கமான முடிவை சொன்னால், தன் பெற்றோர் வேறு வழியின்றி ஒத்து கொள்வார்கள்" என்ற நம்பிக்கையில் அம்மாவை கடிவது போல் பேசி விட்டு வந்து விட்டாள்.

இப்போது பீரோவில் இருக்கும் பணமும் கொஞ்சம் நகைகளும் காணவில்லையே என்ற பேச்சு வருவதற்குள் "அம்மாவிடம் எப்படியாவது உண்மையை விளக்கி கூறி அப்பாவின் காது வரைக்கும் போகாமல் எப்படி காப்பாறறுவது".. என்ற கவலை மிக தீவிரமாக அவளைப் பற்றிக் கொண்டது. மனசு அலை பாய எப்படியோ காரை ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். 

வீட்டை வந்தடைந்தவள், காரை வாசலில் நிறுத்தி விட்டு மாடிக்கு தன்னறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டவள், இயல்பாக இருப்பதை அம்மாவிடம் காட்டிக் கொள்வதற்காகவும், மனஅமைதிக்காகவும் ரேடியோவை திருப்பினாள்..

<<<ஆல்இண்டியரேடியோ... சென்னை வானொலி நிலையம்... திரைகானம்.. முதலில் பட்டாம்பூச்சி என்ற படத்தில்..
டி.எம் செளந்தரராஜன்... எஸ் ஜானகி...>>> அறிவிப்பாளரின் குரலை தொடர்ந்து பாடல் ஒலிபரப்பானது.

" எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி,
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி,"

பட்டென்று ரேடியோவை மூடினாள் லதா.

அப்போது காப்பி எடுத்து கொண்டு உள்ளே நுழைந்த அன்னபூரணியை கண்டதும் லதா வின் கண்கள் கலங்கின.

காலையில் அம்மாவை எடுத்தெறிந்து பேசியதிற்க்குத்தான் கடவுள் தண்டனை கொடுத்து விட்டாரோ!!! காப்பியை மேஜை மேல் வைத்து விட்டு "கிளாஸ், முடிந்ததா லதா, டிரைவர் வந்து சொன்னார்.." என்று கேட்டவாறே அங்கிருந்து நகரமுற்பட்ட அன்னபூரணியை தடுத்து நிறுத்தியது லதாவின் குரல்.

"அம்மா, என்னை மன்னித்துவிடு, காலையில் உன் மனம் புண்படும்படியாக பேசி விட்டேன் உங்கள் விருப்பப்படியே நேற்று பார்த்த அந்த பையனையே கல்யாணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் அப்பாவிடமும் நீயே சொல்லிவிடு."

அன்னபூரணி மகிழ்ச்சியுடன் மகளை நோக்கினாள்  "உண்மையாகவா சொல்கிறாய், லதா ? "ஆமாம்! அம்மா, உண்மையாகத்தான் சொல்லுகிறேன்."
மகளின் உறுதியான குரலில் தாய் மிகவும் சந்தோஷமடைந்தாள், 

அவளுக்கு தெரியுமா தன் மகள் காதல் என்பது ஒரு போலி வாழ்க்கை, பொழுதுபோக்கு என்பதை புரிந்துகொண்டு விட்டாள் என்று......

<<<பெற்றவர்கள் பார்ப்பதிலே பெருமை என்னவோ....  
அவர் மற்றவையும் பார்ப்பதினால் நன்மை அல்லவோ.......>>>> 

அந்த பாட்டு எங்கேயோ பாடிக் கொண்டிருந்தது..........
================================================================================
இதுவும் 1976- ல் எழுதியதுதான். அந்த காலகட்டத்தின் நடவடிக்கைகள் பாவனைகள் இவைகளை கருத்தில் கொண்டு எழுதியது. மேலும் கதைகள் என்ற ஒன்று எழுத வேண்டுமென ஆர்வத்துடன் மட்டுமே கவனம் செலுத்தி எழுதப்பட்டவை. இதில் குற்றம் குறை இருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
படிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். 

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். 

Friday, June 1, 2018

கன்னி, ஆனால் தாய் - பகுதி 2

தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை தீடிரென்று வீறிட்டு அழுதது. எதற்குமே கலங்காத நிர்மலா நளினாவின் சோகத்தை சுமந்த பாரத்தில் சற்று கண்கள் கலங்க அவசரமாக குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.

அவள் அணைப்பில் ஆறுதல் அடைந்த குழந்தை மறுபடி கண்மூடி உறங்க ஆரம்பித்தது. கைகளில் மெய்மறந்து உறங்கி கொண்டிருந்த ஷீலாவை மெல்ல தொட்டிலில் படுக்க வைத்தாள் நிர்மலா. 


"இந்த குழந்தையை விட்டு செல்லவதற்கு எப்படி நளினாவுக்கு மனது வந்தது.... அவள் வாழ்க்கையை பற்றி சமயம் வரும்போது தெரிந்து கொண்டு அவள் மனதை பக்குவமாய் மாற்றி நல்லதோரு வாழ்வை அவளுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்றுதானே நினைத்து கொண்டிருந்தேன் .பாவிப்பெண்... அதற்குள் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டாளே...." நிர்மலாவின் மனம் பரிதவித்தது...


கடற்கரை .....
"சேகர்! ஏதோ முக்கியமான விஷயம் கூற வேண்டுமென்றீர்களே!" என்று கேட்டவாறு தோளிலிருந்த ஷீலாவை இறக்கி விட்டுவிட்டு அவன் அருகில் அமர்ந்தாள் நிர்மலா.

அவளை ஏறிட்டு பார்த்து விட்டு குழந்தையை பார்த்த சேகர் "குழந்தை" என்று இழுத்தான்.

அவனது தயக்கத்தை புரிந்து கொண்ட நிர்மலா, "கவலைபடாதீர்கள்! நாம் பேசுவது அவளுக்கு ஒன்றும் புரியாது," என்றாள் புன்னகையுடன்.

"நம் காதலைப்பற்றி, இத்தனை நாள் பழக்கத்துடன் நம் காத்திருந்தலைப் பற்றி என் வீட்டில் விளக்கமாக கூறினேன் நிர்மலா. கொஞ்ச நேர தயக்கத்திற்கு பின் சம்மதம் தந்து விட்டார்கள். ஆனால்..."

"ஆனால்"?

"வீட்டுக்கு மருமகள் வரும் போதே தாத்தா, பாட்டியாக அவர்களுக்கு பிடிக்கவில்லை, அதாவது..." எப்படிசொல்வது என்று தயங்கினான் சேகர்.

"புரிகிறது, சேகர்.." அவனை கையமர்த்தினாள் நிர்மலா.

"என்னைப் பற்றி எல்லாவற்றையும் கூறிவிட்டீர்களா சேகர்? அதாவது நான் இவளுக்கு தாயாகவேண்டிய சூழ்நிலையைப்பற்றி...."

" எல்லாவற்றையும் கூறிவிட்டேன் நிர்மலா!"

பேச்சுக்கள் அங்கு தடையாக, அவரவர் சிந்தனைகள் சற்று மேலோங்க, சிறிது நேரம் மௌனம் நிலவியது இருவரிடமும்.

"சரி சேகர்! நான் கிளம்புகிறேன், ஷீலா பாவம் பசியோடிருக்கிறாள்! காத்திருப்பதுதான் நாம் பழகிய ஒன்றாயிற்றே.... அடுத்த முறை  ஒரு முடிவான பதிலை கேட்டு வந்து சொல்லுங்கள்" என்று நிர்மலா அவனிடம் விடை பெற்றுக் கொண்டு நடந்தாள்.

"நளினா வீட்டைவிட்டு போய் இரண்டு வருடங்கள் ஓடி மறைந்து விட்டது. இதுவரை அவளை சந்திக்கும் சந்தர்ப்பம் வரவில்லை. இனி எப்போதோ?

பேதைப்பெண்! என்னோடு இருந்திருந்தால் என்னக்கு பாரமாக இருக்குமென்று போய் விட்டாள். இப்போது மட்டும்... நான்கு வருடமாக நேசித்து வருபவரை திருமணம் செய்து கொள்ள முடியாமல் குறுக்கீடாக நிற்கிறதே அவள் குழந்தை."

சட்டென்று உள்ளத்தில் உதயமான இந்த எண்ணத்தால் வெட்கினாள் நிர்மலா.
"சே! என்னமடத்தனம்: பிஞ்சுபோன்ற முகம், மலரைப் போன்ற மென்மையான இதயம், தன்னையே தாயென்று நினைத்து அன்பு முழுவதையும் தனக்கே வாரி வழங்கும் இந்த குழந்தை, இவளைப் போயா குறுக்கீடு என்று நினைத்தோம்!"

சாட்டையால் அடித்தது போல் வலித்தது இதயம்....... 

கண்களில் நீர் நிரண்டது. தன் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த குழந்தையை இழுத்து அன்புடன் அணைத்துக் கொண்டாள் நிர்மலா.

"யாராலும் என்னை இவளிடமிருந்து பிரிக்க முடியாது என்றுமே.. என் வாழ்நாள் உள்ளளவும் ஏன் நளினாவே  வந்து என் குழந்தை என்று உரிமை கொண்டாடினாலும், நான்தான் இவளுக்கு தாய்.. அதில் எள்ளளவும் மாற்றமில்லை " என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் நிர்மலா. 


அந்தளவிற்கு பாசக்கயிறு தங்கள் இருவரையும் பிணைத்திருப்பதை அவளால் உணர முடிந்தது. 


ரு  வாரகாலம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் கழிந்தது.

வார இறுதியில் மறுபடியும் அதே கடற்கரையில் சேகருக்காக காத்திருந்தாள் நிர்மலா. 
குழந்தை அவள் அருகே மணலில் விளையாடிக்கொண்டிருந்தது.

தூரத்தில் அவளை தேடிக்கொண்டு சேகர் வந்து கொண்டிருப்பதை கண்ட நிர்மலா கையசைத்து தான் இருக்குமிடத்தை அவனுக்கு உணர்த்தினாள்.

அவளை பார்த்த மகிழ்ச்சியில் அவள் அருகில் வந்தமர்ந்தான் சேகர்.

"சேகர், இப்போதாவது உங்கள் பெற்றோர்களின் முடிவான பதிலை கேட்டு விட்டீர்களா? என்ன சொல்கிறார்கள்?" என்று ஆர்வமான குரலில் நேரடியாகவே ஆரம்பித்தாள் நிர்மலா.

"கேட்பதென்ன, கெஞ்சி பார்த்துவிட்டேன் நிர்மலா.. அவர்கள் முடிவிலிருந்து விலக மறுக்கிறார்கள்." தயக்கமான குரலில் சேகர் றினான்.

"சேகர், உங்கள் பதில்?  நீங்களுமா என்னை சந்தேகிக்கிறீர்கள்?" சற்று தழுதழுத்த குரலில் கேட்டாள் நிர்மலா.

"சே! சே! சத்தியமாக இல்லை நிர்மலா, இந்த நான்காண்டு கால பழக்கத்தில் உன்னைப்பற்றி எனக்குதெரியாதா? நளினாவை நான் பார்த்து பேசாவிட்டாலும் நீ அவளைப்பற்றி சொன்னதையெல்லாம் கேட்டு உன்னுடன் நானும் அவளுக்காக இரக்கப் படவில்லையா, அவளுக்கு ஒரு புதுவாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்து விட்டு, அதற்கு பிறகு நம் காதலை அவளிடம் சொல்லி நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீ சொன்னதை ஆமோதித்து, நான் இத்தனை காலம் காத்திருக்கவில்லையா? இருந்தாலும்..... நீ...." தயக்கத்துடன் நிறுத்தினான் சேகர்.

"சொல்லுங்கள் சேகர், எதையோ சொல்ல வந்தீர்களே.." என்ற நிர்மலா அவன் கண்களை உற்றுநோக்கினாள்.

"நீ தவறாக நினைக்காதே, நிர்மலா. என்  பெற்றோர்கள் மட்டுமில்லை, நானும்.... என் மனைவி வீட்டுக்கு வரும் போதே ஒரு குழந்தையோடு வருவதை விரும்பவில்லை...." சற்று  தயங்கியவாறு படபடத்த குரலில் கூறினான் சேகர்.

திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிர்மலா.

"ஒரு அருமையான யோஜனை கூறுகிறேன் நிர்மலா, பேசாமல் ஷீலாவை அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விடு. அதற்கு வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன். நம் திருமணத்திற்கு பிறகும், நீ அவளை அடிக்கடி சென்று பார்த்து விட்டு வரலாம். அதற்கு நான் தடையொன்றும் சொல்ல மாட்டேன். இது உறுதி! என் பெற்றோர்களிடமும் இந்த விபரத்தை விளக்கி கூறி, அவர்கள் சம்மதத்தையும் வாங்கி விடுகிறேன்... என்ன சொல்கிறாய்?" அவனது அவசர பேச்சில் அவளை எப்படியாவது இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற வெறி மட்டுமே இருப்பதை புரிந்து கொண்டாள் நிர்மலா.

சிறிது நேரம் மெளனம் நீடித்தது இருவரிடமும்...

எதுவும் உணராத குழந்தை இருவரையும் பார்த்து தன் மழலை மொழியில் எதையோ கூறி விட்டு, முகம் மலர சிரித்து, நிர்மலாவின் மடியில் ஏறி அமர்ந்து அவள் கழுத்தை இறுககட்டிக்கொண்டது.

நிர்மலாவும் அவளை அன்புடன் அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சட்டென்று உறுதியான முகத்துடன் அவ்விடத்திலிருந்து எழுந்த நிர்மலா, தன் புடவையில் ஒட்டிக்கொண்டிருந்த மணலை தட்டியவாறு மடியிலிருந்து இறக்கி விட்ட குழந்தையை எடுத்து தோளில் சாற்றிக் கொண்டாள்.

"மிஸ்டர் சேகர், சாதாரணமான மனிதர்கள் கணக்கில் இத்தனை சீக்கிரம் நீங்கள் சேர்ந்து விடுவீர்களென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. உங்களை எவ்வளவோ உயர்ந்த மனிதர் என்றுதான் இந்த நான்காண்டு கால பழக்கத்தில் நினைத்திருந்தேன்.

என்னையே நம்பி என்னிடம் ஒப்படைத்து விட்டு போயிருக்கும் நளினாவின் குழந்தையை, என் அன்பு சகோதரி குழந்தையை, ஏன்.... நான் பெறாமல் வளர்த்து வரும் என் வளர்ப்பு மகளை நான் உங்கள் அரிய யோஜனையின்படி நான் கைவிட தயாரில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்றாவது ஒருநாள் அவள் நல்ல நிலமையில் வந்து என்னை சந்திப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு கண்டிப்பாக இருக்கிறது.  அவள் நம்பிக்கையை குலைக்க எனக்கு இஸ்டமில்லை.

நீங்கள் உங்கள் விருப்பபடி உங்கள் பெற்றோர்க்கு பிடித்தமான பெண்ணை மணந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்,  எனக்கு எந்த ஆட்சேபனையும்  இல்லை.... அல்லது, என்னை புரிந்து கொண்டு, என்னையும், என் குழந்தையையும் ஏற்றுக்கொள்ள என்று மனமுவந்து முன்வருகிறீர்களோ, அன்று அந்த நாளில் நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.

அதுவரைக்கும் அது எத்தனை ஆண்டு காலமானலும்சரி... காத்திருப்பேன்..  ஏனென்றால், நான் உங்களை  மனமாற நேசித்திருக்கிறேன். இப்போதும் நீங்கள் குழந்தையை அநாதையாக விட்டு விடுமாறு சொல்லும் யோஜனையை தவிர்த்து, உங்களிடமிருக்கும் பிற நல்ல குணங்களுக்காக, இத்தனை நாள் நாம் பழகிய கண்ணியமான நட்புக்காக உங்களை நேசிக்கிறேன்.

தவிர என்றோ உங்களையே  என் கணவராகவும்  என் மனதில்  வரித்து விட்டேன். மனதில் அமர்ந்திருக்கும் ஒருவரை தூக்கி எறிந்து விட்டு மற்றொருவரை மணந்து கொள்ள எனக்கு தெரியாது.  என்னால் முடியவும் முடியாது,  நான் வருகிறேன்."

சொற்களை சிந்திய வேகத்தில் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலையும் எதிர்பாராமல்  நடந்து சென்றாள் நிர்மலா.

அவளின் நிதானமான பேச்சில், உறுதியுடன் கூறிய முடிவில், மேற்கொண்டு என்ன பேசுவது  என்று தெரியாமல், தடுத்து நிறுத்தவும் தோன்றாது, திரும்பியும் பாராது செல்லும் அவளையே திகைப்புடன் பார்த்தவாறு, அமர்ந்திருந்தான் சேகர்.



முற்றும்.

இதன் முந்தைய பகுதியை காண இங்கே சொடுக்கவும்.

பகுதி: 1

Tuesday, May 29, 2018

கன்னி, ஆனால் தாய்.

அனைவருக்கும் என்அன்பான வணக்கம்...

இதுவும் நான் 1976 - ல் எழுதியதுதான். அப்போது எனக்கு கதைகள் எழுதுவதில் நிறைய ஈடுபாடு இருந்தது. நிறைய கதைகள் வெறும் தாளில் எழுதி வைத்திருந்தேன். .என் திருமணத்திற்கு பின் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக எழுத்தில் கருத்து செலுத்த இயலவில்லை. பத்திரிக்கைகளில் வெளியிட விரும்பவும் இல்லை. அப்படியே வெளியிட அனுப்பி வைத்தாலும்  நான் எழுதியவை ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயப்பாடுதான் காரணம்.

குழந்தைகள் உதவியுடன் கணினி செயல் பாட்டை கற்றுக் கொண்டு வலைத் தளத்திற்கு வந்த பின்னும் எப்போதேனும் கதைகள் எழுதுகிறேன். ஆனால் அதையே இங்கு பதிவிட்டவுடன் அனைவரும் வந்து படித்து பாராட்டும் போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. ஆகையினால் 1976-ல் எழுதியவைகளையும் அவ்வப்போது இங்கு பதிவிட்டு அதற்கு வரும் உங்களின் அன்பான கருத்துரைகளை கண்டு மிகுந்த  சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்ற நினைப்பில் பதிவிடுகிறேன். இது அப்போதைய கருக்கள் ஆனபடியால் அந்த கால சூழலுக்கு தக்கபடிதான் கதையின் போக்கும், எழுத்தும் இருக்குமென்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகளுடன்..
உங்கள் சகோதரி ..


கன்னி, ஆனால் தாய்.

"ன்னை ஏன் காப்பாற்றினீர்கள்?" அவள் விம்மினாள்.


"என் நிலையில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள். தவிர,இன்னும் சில மாதங்களில் இந்த உலகைக்காண ஆவலோடு இருக்கும் ஒரு ஜீவனைக்கொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது", அமைதியாக கேட்டாள் நிர்மலா.

"அவமான சின்னத்தை சுமந்து கொண்டிருக்கும் என்னால் உங்களுக்கு ஏன் அவப் பெயர் வரவேண்டும், அதனால்தான் கேட்கிறேன், இந்த அநாதையை என்னை ஏன் காப்பாற்றினீர்கள் என்று?", அவள் கலங்கிய குரலில் கேட்டாள்.

"உன் பெயர் என்ன?"என்று நிதானமான குரலில் கேட்டாள் நிர்மலா. 

"நளினா", முணுமுணுப்பாக பதில் வந்தது அவளிடமிருந்து.



"இதோ பார் நளினா!, அநாதைகளுக்கு அநாதைதான் இடம் தரவேண்டும், இதோ பார் நானும் ஒரு அநாதைதான்.... முப்பது வருடங்களை மலை போல் முழுங்கி விட்டு ஒரு தைரியமான பெண்ணாய் நிற்கவில்லையா! இந்த உலகில் தனியே வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கு தைரியந்தான் தேவை.. அதுசரி, நீ இந்த நிலைமைக்கு வர காரணம் என்னம்மா?" பரிவுடன் அவள் தலையை தடவி விட்டவாறு கேட்டாள் நிர்மலா.



"தயவு செய்து அதை மட்டும் இப்போது கேட்காதீர்கள், உங்கள் பரிவான பேச்சினால் என் மனதிலுள்ள காயம் சற்று ஆறிப்போயிருக்கிறது. அதை மீண்டும் கிளறி விடாதீர்கள்", என்று விம்மினாள் நளினா.



"ஸாரி நளினா,  இனிமேல் நீ என் உடன் பிறவா சகோதரி உனக்கு எப்போது உன் கதையை சொல்ல தோணுகிறதோ அப்போது கூறலாம், நான் உன்னை வறுப்புறுத்த மாட்டேன். நீ இங்கு என்னுடன் தைரியமாக தங்கலாம், இது இனி உன்னுடைய வீடு மாதிரி நினைத்து கொள். நான் உன்னை என் காலம் உள்ள வரை காப்பாற்றுவேன், கவலைபடாதே!" என்று உருக்கமான குரலில் கூறிய நிர்மலா அவளை அன்போடு கட்டியணைத்துக் கொண்டாள்.



"நளினா, உன் கனவில் கூட இனி தற்கொலை எண்ணம் வரக்கூடாது, தெரிகிறதா?" அன்புடன் கூறியபடி லேசாக அவள் கண்ணத்தை தட்டினாள் நிர்மலா.

சரி, என்கிற மாதிரி இருந்தது நளினாவின் தலையசைப்பு.....

"குட் கேர்ள்" பாராட்டி விட்டு அவ்வறையை விட்டு அகன்றாள் நிர்மலா..

சோம்பல் ஒன்றை விடுத்தபடி படுக்கை யிலிருந்து எழுந்தாள் நிர்மலா. தினமும் கண்விழித்தவுடன் காப்பியுடன் நிற்கும் நளினாவை  காணவில்லை. நளினா அவளுடன் தங்கியிருக்க சம்மதித்தது நிர்மலாவுக்கு சந்தோஷத்தை தந்தது அவள் கூறியபடி உடன்பிறந்த தங்கையை விட ஒரு படி மேலாகவே நளினாவை கவனித்துக் கொண்டாள்.

ஐந்தாறு மாதங்களில் ஒரு பெண் குழந்தைக்கு தாயான நளினா, நி்ர்மலாவின் அன்பான அரவணைப்பில் நலம் பெற்று, தன்வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படுத்திய நிர்மலாவிடம் அளவு கடந்த அன்பை பொழிந்து அவளை தன் தெய்வமாகவே கருதி வாழ்ந்து வந்தாள். நிர்மலா எவ்வளவோ தடுத்தும் வீட்டு வேலைகளை அவளே பொறுப்பெடுத்து ஏற்றுக்கொண்டு நிர்மலாவையும், குழந்தையையும், நன்றாக கவனித்து வந்தாள்.

வழக்கப்படி இன்று கண் விழித்ததும் நளினாவை காணாததால்,  "பாவம்! வேலை மிகுதியில் இன்று கண் அசந்து உறங்குகிறாள் போலிருக்கிறது, இன்று நாம் காப்பியுடன் அவளை எழுப்பலாம்" என்று எண்ணியபடி எழுந்து பல் துலக்கி சமையலறைக்குள் நுழைந்தாள்.
பாலைக்காய்ச்சி காப்பியை கலந்து தனக்கும் நளினாவுக்குமாக கோப்பையில் ஊற்றியவள் தன்னுடைய கோப்பையை எடுத்து காப்பியை குடிக்க  ஆரம்பித்தாள்.

சில மாதங்களாக  தினமும் நளினா தயாரித்த காப்பியை குடித்த நாக்கு, இன்று சற்று வேறுபட்ட சுவைக்கு குறைகூற, மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

"என்ன இது! எவ்வளவு அயர்ந்து உறங்கினாலும் சிறிய சப்தத்திற்கு எழுந்து விடும் நளினா இன்னமும் எழுந்து வரவில்லையே? ஒருவேளை உடம்பு சரியில்லையோ?" இந்த எண்ணம் வந்ததும் மடமடவென்று நளினாவின் அறைக்கு ஒடினாள் நிர்மலா.

கட்டிலில் நளினாவை காணவில்லை, அருகிலிருந்த மரத்தொட்டிலில் ஐந்து மாதகுழந்தை ஷீலா புன்னகையுடன் உறங்கி கொண்டிருந்தாள். "ஒருவேளை வீட்டின் பின்பக்கம் போயிருக்கிறாளோ?" பதட்டத்துடன் வீடு முழுவதும் தேடினாள் நிர்மலா.

நளினாவை எங்கும் காணவில்லை. திகில் மின்னலென பாய்ந்தது நிர்மலாவின் உள்ளத்தில்... மறுபடியும் நளினாவின் அறைக்கு ஒடினாள் சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டியபோது  தொட்டில் அருகில் இருந்த டேபிளில் கடிதம் ஒன்று மேலே பாரத்தை சுமந்து கொண்டு அமர்ந்திருந்தது.

பரபரப்புடன் அதை எடுத்து படித்தாள் நிர்மலா.

"ன்பும், பாசமும், மிகுந்த என் உயிரினும் மேலான அக்காவுக்கு, எத்தனையோ நாட்களாக என்னைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்திருக் கிறேன், ஏதோ ஒன்று என்னை சொல்ல விடாமல் தடுத்துக் கொண்டேயிருந்தது. ஆனால் அக்கா இன்றுதான் அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

நான் கல்லூரியில் கால் பதித்த நாட்கள். தோழிகளுடன் படிப்பும் நட்புமாக  நன்றாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தது வாழ்க்கை. என் போதாத நேரம், நெருங்கிய தோழிகளுடன், ஒரு தோழி வீட்டில் தங்கி வரும் தேர்வுகளுக்கு  தயார் செய்து கொண்டிருந்தோம்.

அப்போது அந்த தோழி வீட்டின் எதிர் வீட்டின்  மாடியில் குடியிருந்த வாலிபன் ஒருவனிடம் சாதரணமாக தொடங்கிய நட்பு என் வாழ்க்கையை பாழாக்கியது. தேர்வுகள் முடிந்தவுடன் என் வீட்டில் எங்கள்  உறவுக்கார பையன் ஒருவனுடன் என் திருமணம் பற்றி பேச்சு வந்ததும் நான் அதிர்ந்து போனேன். என் திருமணத்தை நிறுத்த நான் செய்த முயற்சிகள்  வீணாயின.

என் நிலைமை பற்றி அவனிடம் விவாதித்த போது நாங்கள் இருவரும்  ஒருவரையொருவர் நேசிப்பதை உணர்ந்தோம். "நான்  உன்னை ராணி மாதிரி வைத்து  காப்பாற்றுகிறேன்" என்று அவன் செய்து கொடுத்த சத்தியத்தை நம்பி, பத்து மாதம் சுமந்து பெற்று அத்தனை தூரத்துக்கு ஆளாக்கிய பெற்றோர்களை உதாசீனபடுத்தி விட்டு, அவனுடன் புறப்பட்டு விட்டேன்.

இரண்டு மாதங்கள் மனம் போனபடி சுற்றி விட்டு, இங்கு வந்தபின் அவன் நண்பன் அறையில் ஒண்டி கொண்டு வாழ்க்கை பயணத்தை துவக்கிய போது திருமணத்தின் அவசியத்தை அவனிடம் அடிக்கடி உணர்த்தி கொண்டே இருந்தேன். அவனும் இன்று, நாளை,.. என நாட்களை தள்ளியதில்  மாதங்கள் ஒடியது.

ஒரு நாள் என் வயிற்றில் அவன் குழந்தையை நான் சுமப்பதை தெரிவித்ததும் திகைத்து போய், "திருமண ஏற்பாட்டை விரைவில் செய்து விட்டு வருகிறேன்" என்று போனவன், நாட்கள் பல ஓடியும் திரும்பவில்லை. கண்ணீருடன் இன்னும் சில வாரங்களை தள்ளிய போதும் அவன் வந்த பாடில்லை. முதலில் ஆறதல் கூறி என்னை தேற்றி வந்த அவன் நண்பனின் போக்கும் வரவர மாறியது.

"இவளை என் தலையில் கட்டி விட்டு அவன் தப்பித்து விட்டான், என்ன செய்வதென்று தெரியவில்லை" என்று தன்னுடைய மற்றொரு  நண்பனிடம் புலம்புவதையும், அதற்கு அந்த மற்றொருவன் கொடுத்த மோசமான யோஜனைகளையும், நான் கேட்க நேர்ந்ததால் என்னை அவர்கள் இல்லாத நேரம்  பார்த்து அங்கிருந்து தப்பிக்க வைத்தது.

பெற்றவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொண்டதற்காக ஆண்டவன் சரியான தண்டனை கொடுத்து விட்டான் என்று எண்ணிய வருத்தத்தில் மனம் பாறையாய் கனக்க, வாழ பிடிக்காமல் சாகத்துணிந்தேன்.

அப்போதுதான் நீங்கள் வந்து காப்பாற்றினீர்கள். தாய் தந்தையை இழந்த நிலையிலும் நீங்கள் தவறான வாழ்க்கையை தேர்ந்தெடுக்காமல், நேர்மையான முறையில் வாழ்ந்து வரும் உங்களிடம் என் அவல வாழ்க்கையை சொல்ல மனம் வராமல் இதுநாள் வரை சொல்லாமல் இருந்தமைக்கு என்னை மன்னித்து விடுங்கள்.

உண்மையிலேயே, உங்களை மாதிரி நல்ல மனது உள்ளவர்களை நான் இதுவரை சந்தித்ததே இல்லையக்கா... நம் முதல் சந்திப்பில் நீங்கள் என்னைப் பற்றி விசாரித்த போது, "அதை இப்போது கேட்காதீர்கள்", என்று நான் கேட்டுகொண்டதற்காக நீங்கள் இதுநாள் வரை என்னை பற்றி ஒரு வார்த்தை கேட்காமல், என்னை உங்கள் உடன்பிறந்த தங்கையாகவே நினைத்து என்னையும்,  என் குழந்தையையும், எப்படியெல்லாம் பார்த்து, பார்த்து கவனித்து கொண்டீர்கள்.

அதற்கு நான் இந்த பிறவியில்  மட்டுமல்லாது இனி எடுக்கும் எத்தனை பிறவிகளில் நன்றிக்கடன் படபோகிறேன்று எனக்கு  தெரியாது. ஆனால் இனி வரும் ஒவ்வொரு பிறவிகளிலும் உங்களுடன் இணைந்திருக்கும் உறவு வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

இனி நான் போகும் பாதையில் உங்களை மாதிரி நல்லவர்களை சந்திக்க வேண்டுமென்றும், பிரார்த்தித்து கொண்டும் போகிறேன்.

போகிறேன் என்றதும் முன்பு மாதிரி முட்டாள்தனமான முடிவை நான் எடுத்து விடுவேனோ.... என்று நீங்கள் கலங்க வேண்டாம். உங்களிடம் பழகிய நாட்களில் உங்களது தைரியத்தை பார்த்து வியந்திருக்கிறேன்... அந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், மூலதனமாக வைத்துக்கொண்டு, நான் படித்த கல்வியறிவின் மூலம் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து உங்களை மாதிரி தைரியமான திறமையான பெண்ணாக உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் இங்கிருந்து போகிறேன்.

என் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு பாரமாக இருக்க விருப்பமில்லாததால் இந்த முடிவை உங்களை கேட்காமல் எடுத்திருக்கிறேன்.. என் முடிவு உங்களுக்கு தவறாக பட்டால் தயை கூர்ந்து என்னை மன்னிக்கவும்.

என் வயிற்றிலிருந்த பாரத்தை இறக்கி உங்கள் மேல் ஏற்றிவிட்டு செல்வதற்காக என்னை மன்னித்து விடுங்கள். குழந்தையுடன் செல்லும் என் பயணம் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற சிறிய பயத்தில் உங்களை சிரமத்தில் ஆழ்த்திவிட்டுச்செல்கிறேன். என்னை விட நீங்கள் அக்கறையுடன் குழந்தையை பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

நான் நினைத்த மாதிரி ஒரு நல்ல நிலைமையில் உங்களையும், என் குழந்தையையும், சந்திக்கும் போது,  கன்னியாய் இருக்கும்போதே, ஒரு தாயாயிருந்து ஒரு குழந்தையை வளர்த்த சிரமத்திற்க்காக உங்கள் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்பேன்.. அந்த நாளை விரைவில் தர வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்".

இப்படிக்கு
உங்களை எந்த நிமிடமும் மறவா,
உங்கள் அன்புத்தங்கை,
நளினா.

இனியும் ஒரு நாள் தொடரும்.....


Monday, May 7, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 4

                       //''டொக்'' , ''டொக்''//
      கதவை யாரோ தட்டும் ஒசை கேட்டு கதவை திறந்தான் பிரகாஷ்...
      //// வாசலில் ரேணுகா /////

             அடேடே!!!!  ''வா ரேணுகா''  மகிழ்ச்சியுடன்  வரவேற்றான் அவன்..

        அவள் புன்னகையுடன் உள்ளே வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.

       ''என்ன விஷயம்?? அதிசயமாய் வீடு தேடி வரும் அளவுக்கு'' அவன் சற்று படபடப்புடன் கேட்டான்.

       ''ஏன் வரக்௬டாதா?'' பொய் கோபத்துடன் சிணுங்கினாள் அவள்..

   ''அதற்காக சொல்லவில்லை, நாம் எப்போதும் வெளியில்தானே சந்திப்பது வழக்கம்... அதனால்தான் கேட்டேன்.." அவன் அவசரமாக மன்னிப்பு கோறும் பாவனையில் கூறினான்....

     ''வீடு தேடி வரவேண்டிய அவசியம் வந்திருக்கிறது. வந்தேன்..." அவள் அமர்த்தலாக சொல்லிவிட்டு சிரித்தாள்...

     ''தாராளமாக... இந்த வீட்டின் வாசல் கதவு மட்டுமின்றி என் இதயகதவும் உனக்காக.. உன் வரவுக்காக எப்போதும் திறந்தே இருக்கிறது... என் வீட்டில் நம்மை பற்றி கூறி அவர்கள் சம்மதத்துடனும், உன் பெற்றோர்களின் ஆசியுடனும், உன்னை இந்த வீட்டின் ராணியாக்கும் என் விருப்பத்தை உன்னிடம் எத்தனையோ முறை சொல்ல நினைத்தும், உன்னளவு எனக்கு தைரியம் இல்லாததால், சொல்ல முடியாமல் தவித்திருக்கிறேன்...

என் தாய் என்னிடம் மனம் விட்டு பேசி என்னை தட்டிக் கொடுப்பது போல் நீயும் என்னிடம் சில சமயங்களில் அன்பாக பேசி, என் மனதில் உதிக்கும் எண்ணங்களை வரவேற்றிருக்கிறாய்... அதனால் அந்த தாயன்பு  உன்னிடம் கிடைக்குமென்று ஆசையில்,  என் தாயைப் போல் நீயும் என்னை நேசித்து அன்பு காட்டுவாய் என்ற நம்பிக்கையுடனும்,  எத்தனையோ நாள் "என்னை உனக்கு பிடித்துள்ளதா?  என்னை உன் துணையாக ஏற்றுக் கொள்வாயா?" "
என்றெல்லாம் வாய் விட்டு சொல்ல நினைத்தான் பிரகாஷ். ஆனால் இதையெல்லாம் இப்போதும் சொல்ல நினைத்தும்  வார்த்தைகள் மேலெழும்பால் எப்போதும் போல் அவன் தொண்டையிலேயே வழுக்கி விழுந்தன...

      "பிரகாஷ்! என்ன எப்போதும் ஏதோ சிந்தனை செய்த வண்ணமே இருக்கிறீர்கள்?" என்ற வண்ணம் அவன் தோளை தொட்டு உலுப்பியவள், தன் கைப்பையை திறந்து ஒரு அழைப்பிதழை எடுத்து அவனிடம் ''இந்தாருங்கள்'' என்ற வண்ணம் நீட்டினாள்...

       பிரகாஷ் தன்நினைவு பெற்றவனாய் ஏதோ ஒரு பதற்றத்துடன் அதை வாங்கி பிரித்து படித்தான்...

      திருமண அழைப்பிதழ் அது... ரேணுகாவிற்கும், முன்பின் அறிமுகமில்லாத யாரோவிற்கும்..

படிப்பும் அந்தஸ்த்தும் அந்த பையனுக்கு தன்னை விட இருமடங்குகள் உயர்வாக இருப்பதை வண்ண எழுத்துக்கள் கட்டத்திற்குள் காண்பித்தன ...

      அவன் விழிகள் குத்திட்டு நின்றன அழைப்பிதழிலில்......

      தொண்டையில்  ஏதோ  ''கப்'' பென்று அடைத்துகொண்டது போன்ற உணர்வில் தடுமாறினான்....

    ''என்ன இது?'' வார்த்தைகள் தட்டு தடுமாறி வந்தன அவன் வாயிலிருந்து.....

      ''படித்து பார்த்துமா தெரியவில்லை? என் திருமண அழைப்பிதழ்..'' அவள் கேலியுடன் அலட்சியமாக மொழிந்தாள்.

       இரவின் ஆரம்பத்தில் ''ஏ.சி.'' தியேட்டர்களிலும்,  கடற்கரை மணலிலும், அவனுடன் நெருக்கமாக அமர்ந்தபடி தோளுடன் தோள் உராய அவன் செவிகளில் ''மை டியர் பிரகாஷ்.. ஐ லைக் யூ.. உங்களை கணவராக அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்...'' என்று அவள் எத்தனையோ தடவைகள் முணுமுணுத்திருக்கிறாள்... அவளை போல் வெளிப்படையாக அவன் சொல்ல முடியாமல் அந்த முணுமுணுப்பை உண்மையென்று நம்பி எத்தனை இரவுகள் உறக்கத்திலும், விழிப்பிலுமாக, கற்பனையில் ஆகாய கோட்டைகள் எழுப்பியிருக்கிறான்.  அவையெல்லாம் கற்பனையாகவே போய்விட்டதே...

      அவன் தலையில் வானம் இடிந்து விழுந்து அவனை பூமியின் அடியில்...... அதளபாதாளத்தில் அழுத்திக்கொண்டு போவது போன்ற பிரமை ஏற்பட்டது...

       "ரேணுகா, நீ என்னை காதலித்து விட்டு வேறு ஒருவருக்கு கழுத்தை நீட்டுவதா? இது அநியாயம்... இதற்கு நீ எப்படி சம்மதித்தாய்???" பிரகாஷ் படபடப்புடன் கேட்டான்..

    "என்ன? நான்  காதலித்தேனா??  அதவும் உங்களையா?" ரேணுகா கலகலவென்று சிரித்தாள்...

    "சந்தேகமா? எத்தனையோ நாட்கள் கூறியிருக்கிறாயே??'' குரல் கணக்க கூறினான்...

  அவள் விருட்டென்று இருக்கையை விட்டு எழுந்து நின்றாள்....

     ''மிஸ்டர் பிரகாஷ்! ஒரு நல்ல நண்பர் என்று இத்தனை நாள் உங்களுடன் நான் களங்கமில்லாமல் பழகியதற்கு எனக்கு சரியான தண்டனை கொடுத்து விட்டீர்கள்.. நான் உங்களை காதலிக்கவும் இல்லை... கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் கூறவும் இல்லை... அவசரபட்டு நீங்களே முடிவு செய்து கொண்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.. படித்தவர் பண்புள்ளவர் என்று நினைத்து  நான் நாகரீகமாக பழகியதற்கு எனக்கு இந்த வாழ்நாள் முழுவதும் வருந்தும் அளவிற்கு செய்து விட்டீர்கள்.. இத்துடன் நமது நட்பு  முறிந்து விட்டது. இனிமேல் நாம் சந்திப்பது அநாவசியம்... என் திருமணத்திற்கு கூட உங்களை நான் எதிர்பார்க்க மாட்டேன். நான் வருகிறேன்'' என்று பொரிந்தவள், அவன் கையில் இருந்த திருமண  அழைப்பிதழை உருவிக்கொண்டு புயல் வேகத்தில் வெளியேறினாள்...

         அவன் மூச்சு விடக்௯ட சக்தியின்றி அமர்ந்திருந்தான்...

  கணவனை தவிர வேறு எவரையும் மனதால் கூட தொட்டறியாத அந்த காலத்து பெண்களுக்கு பிறக்கும் இவர்கள், இன்று கண்டவனுடன் 'காதல்' என்ற பெயரில் களியாட்டம் போட்டுவிட்டு ''அந்த'' வார்த்தையின் புனிதத்தையே கெடுக்கிறார்கள்...

   "இதற்கு பெயர் நாகரீகமாம்!!!"

     நாகரீக போர்வையில் புகுந்து கொண்டு அன்று அவன் வேலையில்லாமல் இருந்தற்காக அப்பாவும் உடன் பிறந்தவர்களும் வீண்வாதம் பேசி அவன் மனதின் வேதனையை அதிகப் படுத்தினார்கள். .

இன்று அதை போர்வையை  போர்த்திக் கொண்டு இவள் இவனிடம் காதல் வார்த்தைகளை மொழிந்துவிட்டு.. அந்த காதல் புளித்து போன நிலையில், "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'' என்ற பழமொழி தவறாதபடி நடந்து கொள்ள நினைக்கிறாள்....

      கன்னிப்பெண் ஒருத்தி மிக சாதரணமாக ஒருவனிடம்,  கை கோர்த்து சிரித்துப்பேசி பெற்றோருக்கு தெரியாமல், அவனுடன் தன் மனதிற்கு பிடித்த இடமெல்லாம் சுற்றிவிட்டு பழகிவிட்டு "நாகரீகம்'' என்ற பெயரில் ஒதுங்குகிறாள்.. ஒதுக்கி விடுகிறாள்..

              '''' சே.. என்ன  நாகரீகம் ''''

         ''''நாகரீகம் என்ற இந்த வெற்று சொல்லுக்கு அர்த்தமேயில்லை....''''  அவன் மனதில் மல்லிகை மொட்டுகளாய் சிதறிய இந்த எண்ணங்களின் விளைவு கையை ஓங்கி மேஜை மேல் குத்த வைத்தது....

          மனதின் வலியோடு கைவலியும் சேர்ந்ததுதான் மிச்சம்....

 அன்று அம்மா எத்தனை உறுதியோடு துல்லியமாய் நிறுத்திப்பார்த்தது போல், பளிச்சென்று மனதில் பட்டதை சொன்னாள்...

  அவன் மனதின் கொதிக்கும் வெப்பத்தை போக்குவது போல் வாசலில் ஜில்லென்ற காற்று வீச அவன் வீட்டின் படிகட்டில் வந்தமர்ந்து கொண்டான்..

         சுருள் சுருளாக மேககற்றைகள் வானில் வந்து குவிந்து கொண்டிருந்தன...  மழை வரும் போலிருந்தது....

 அவன் எங்கோ வெறித்து நோக்கியவாறு அமர்ந்திருந்தான்.

முற்றும்.

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 123

Sunday, May 6, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 3

       "என்ன மிஸ்டர்... கண் மண் கூட தெரியாமல் என்ன ஞாபகம்??? அந்தப் பெண் தன் நெற்றியை அழுத்தமாக தேய்த்து கொண்டபடி கோபமாக கத்தினாள்....
      
        "ஐயோ" வெரி சாரி..." பதறியபடி கூறினான் பிரகாஷ்....

        "இப்படியெல்லாம், சாரி..  சொல்லிட்டா இடிச்சது சரியாயிடுமா???" அவள் கோபம் தணியாமல் ஆத்திரத்துடன்  சத்தமாக வினவினாள்.

         "மன்னித்து விடுங்கள்... ஏதோ நினைவுடன் நடந்து வந்து கொண்டிருந்தேன். தெரியாமல் மோதி விட்டேன்.. சாரி..." அவன் தடுமாறினான்...

        "இனி ரோட்டில் நடந்து செல்லும் போதெல்லாம் இப்படி 'ஏதோ', நினைவுடன் செல்லாதீர்கள்.. அது ஆபத்து.. " அவள் கிண்டலாக கூறியதும் அவளுடன் வந்திருந்த அவள் தோழிகள், 'கிளுக்', என்று சிரித்தார்கள்...

    அவன் அவமானத்தால் சிவந்த தன் முகத்தை கைகுட்டையால் துடைத்து கொண்டு சுதாரித்து கொண்டு நிமிர்ந்து பார்பதற்குள் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாரகள்.  அவர்கள், நாகரீகம்.. என்ற பெயரில் செய்து கொண்டிருந்த அலங்கோலம் அவன் மனதை கொதிப்படைய செய்தது...

    கடற்கரை காற்று ஜில்லென்று வீசி வேலை செய்த களைப்பையெல்லாம் போக்க, மாலை நேரத்து இனிமையை ரசித்தபடி மணலில் அமர்ந்திருந்தான்.

கடலலை குழந்தைகள் சோம்பலில்லாமல்  வந்து வந்து கரையிலிருக்கும் மனிதர்களின் நாகரீகத்தை விமர்சித்து பின்னாலேயே ஓடி வரும் தன் சகாக்களிடம் சொல்லி கிண்டலடித்தபடி  குதூகலிப்பும் கும்மாளமுமாக சத்தமிட்டபடி மறுபடியும் தன் அன்னையின் மடி தேடி ஓடின.

இந்த இயற்கை, அதன் வனப்புகள்,  அதன் இயல்பான தன்மைகள், இவற்றை ரசிக்கும் மனப்பான்மை, அதிர்ந்து யேசாமல் அமைதி காக்கும்  சுபாவங்கள்,  தனக்கு ஏற்படும் சஞ்சலங்கள் எதையும் வெளிக்காட்டாமல், யாருடனும் அதிகம் பேசி யார் மனதையும் புண்படுத்தாத பாங்கு,  போன்ற குணங்கள் தன் தாயிடமிருந்துதான் தனக்கும் வந்திருப்பதாக  அவனுக்கு தோன்றியது...

இவனின் ஒதுங்கி இருக்கும் சுபாவத்தை, தானுண்டு தன் வேலையுண்டு என நினைத்து பழகும் மனப்பாங்கை ஏளனம் செய்து, இவன் நாகரீகமற்றவன், உலகம் தெரியாதவன் என்பது போல் இவனை எத்தனை நாட்கள் தந்தையும், கூடப் பிறந்தவர்களும், ஒதுக்கி வைத்து கேலி பேசி  உறவாடியிருக்கிறார்கள். படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்காத சந்தர்ப்பங்கள் வேறு இவனை இன்னமும் அந்நியன் ஆக்கி இருக்கின்றன....

உள்ளத்தில் ஒன்றை நினைத்துக் கொண்டு உதட்டளவில் மற்றொன்றை பேசுவதுதான் நாகரீகமா? இல்லை..  நாளொன்றுக்கு பகட்டும், ஜொலிப்புமாக உடையணிந்து, கை குலுக்கி,  நுனி நாவில் ஆங்கிலம் பேசி மனதுக்குள் ஆயிரம் வன்மங்களுடன் அனைவரிடம் பழகுவதுதான் நாகரீகமா? தன் எதிர்பார்ப்புகளை மற்றவரிடம திணித்து, "இப்படி இல்லையேல் இந்த சமூகத்தில் உனக்கு மதிப்பில்லை... ஏன் நானே உன்னை  ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்" என மற்றவரை நிர்பந்தித்து அறிவுரை என்ற பெயரில் அசிங்கப் படுத்துவதுதான் நாகரீகமா? இதில் எது தன்னிடம் இல்லையென  இவர்கள் தன்னை அலட்சியபடுத்தினர். புரியவில்லை.. அவனுக்கு..

அந்த சமயங்களில் அம்மாவின் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் துணையாக வரவில்லையென்றால், இவன் இன்று ஒரு முழுமனிதனாக உருவாகியே இருக்க இயலாது. கடலலை குழந்தைகள் கடலன்னை தேடி ஓடிய விதம் கண்டு இவனுக்கும் அம்மாவின் நினைவு வந்தது...

         "அண்ணனுக்கும் நம் உறவில் பார்த்து வைத்திருக்கும் பெண்ணைை மணம் முடித்ததும், உனக்கும் ஒரு நல்ல இடத்துலே பார்த்து மணமுடித்து விட்டால், எனக்கு கவலையில்லாமல் இருக்கும்.. எத்தனை நாட்கள் இப்படி வெளியில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்வாய்? சுதா படிப்பு முடிந்துதான் திருமண பேச்சை எடுக்க வேண்டும் என பிடிவாதம் செய்கிறாள். பார்க்கலாம்... எது நடக்கிறதென்று... என்று அவனுடன் இருந்த ஒரு வாரத்தின் ஒரு நாளில் சொல்லி வருந்திய அன்புத் தாயின் சொற்கள் நினைவுக்கு வந்தது. அம்மாதான் எத்தனை பாசமுடன் மூவரின் வாழ்வையும் பற்றி ஒரே மாதிரி  யோசிக்கிறாள் ...

ஒரிரு நாளாவது விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்று வரவேண்டும். அம்மா கையால் சாப்பிட்டு அவளின் அன்பான பேச்சுகளை கேட்டு வர வேண்டும்... என்ற சிந்தனையில் மனம் மகிழ்ந்து கொண்டிருந்தவனின் காலை, மணலில் நடந்து சென்ற யாரோ... சரக்கென்று மிதிக்கவும், காலை சடாரென்று இழுத்தபடி... "யார்??" என்றபடி தலை உயர்த்தி பார்த்தவன் திகைத்துப் போனான்!!!

         "ஐயோ!!! தெரியாமல் மிதித்து விட்டேன் சாரி.." என்று பதறியது, அன்று அவனுடன் வாதடிய அந்த பெண்....

         "இனிமையான உங்கள் சிந்தனையை கலைத்து விட்டேன் போலிருக்கிறது.." அவள், மறுபடியும் ஆரம்பிக்க அவன் அன்று பட்ட அவமானத்தின் வலி நினைவுக்கு வர, "சிந்தனை கலைத்தது மட்டுமில்லை.... காலையும் நன்றாக மிதித்து விட்டீர்கள்" என்றான் சற்று எரிச்சலாக...

         "சாரி, சாரி... கவனிக்காமல்..." என்று அவள் இழுத்தாள்...."

         "இப்படியெல்லாம் சாரி, சொல்லிட்டா, மிதிச்ச வலி சரியாயிடுமா?? " என்று அவன் குத்தலாக திருப்பி கேட்டதும், அவள் வாய் விட்டு கலகலவெனறு சிரித்தாள்...

         "நன்றாக  பேசுகிறீர்களே.. உங்களை பார்த்தவுடன் அன்று பேசியது நினைவுக்கு வர உங்கள் தனிமையை பேசிப்போக்கலாம் என்று வந்தேன் கால் தடுமாறி உங்கள் கோபத்திற்கு ஆளாகிவிட்டேன்.. வந்தது தப்பென்றால் வந்த வழியே திரும்பி போய் விடுகிறேன்.." அவள் பொய்யாக கோபப்பட்டாள்....

        "அதெல்லாம் ஒன்றுமில்லை; சும்மா விளையாட்டாக சொன்னேன்..." பிரகாஷ் தன் இயல்பின்படி அவசரமாக தடுத்ததும், அவள் சிரித்துக்கொண்டே அவனருகில் அமர்ந்துகொண்டாள்..

            "உங்கள் பெயர்?''

        "ரேணுகா.. பி.ஏ. பைனல் இயர் படிக்கிறேன்...."

        "அழகான பெயர்! நான் பிரகாஷ்.. நானும் பி.ஏ.தான்.. ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன்..."

        "அப்படியா! உங்கள் பெயரும் அழகாகத்தான் இருக்கிறது... ஏன் நீங்களுந்தான்..." அவள் ஒயிலுடன் சிரித்தாள்....

        ''அன்று நடந்ததையெல்லாம் மறந்து விடுங்கள்.. இன்றிலிருந்து நாம் நண்பர்கள்.." என்றபடி அவள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவன் கைகளை பிடித்து குலுக்கினாள்....

          அவன் திகைத்துப் போனான்.. ''இதுதான் இக்கால நாகரீகமோ!"

 அவன் சாமளித்துக்கொண்டு... "உங்கள் வீடு எங்கேயிருக்கிறது? உங்களுடன் உங்கள் பெற்றோர்.." என்று தயக்கத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தபடி இழுத்தான்..

        "ம்.. எங்கள் வீடு மாமபலத்தில் இருக்கிறது.. நான்வீட்டிற்கு ஒரே பெண். அதுவும் என்அப்பா அம்மாவுக்கு செல்ல பெண். என் விருப்பத்திற்கு மாறாக எதுவுமே சொல்ல மாட்டார்கள். சுருங்க கூறினால் எங்கள் வீட்டில் நான்தான் ராணி. நான் வைத்ததுதான் சட்டம்.." மடமடவென்ற அவள் பேச்சில் கொஞ்சம் ஆணவம் மிகையாக இருப்பதாக அவனுக்கு தோன்றியது...

         "அப்படியா! நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களை பார்த்தால் எனக்கு கொஞ்சம் பொறாமையாக ௬ட இருக்கிறது.." என்றான் பிரகாஷ்.

        "இனி நீங்கள் என்னை 'நீ' என்றே அழைக்கலாம். கூடவே 'கள்' போட வேண்டிய அவசியமில்ல, எனக்கு நோ அப்ஜக்ஸன்" சிரித்த அவள் தோளை குலுக்கியபடி கூறிவிட்டு, "நான் வரட்டுமா, நாம் மறுபடியும் இனி இந்த இடத்திலேயே சந்திக்கலாம்" என்றபடி எழுந்தாள்.

         "அவனும் ஒப்புக்கு சிரித்தபடி எழுந்து அவளுக்கு விடை தந்தான். அவர்கள் நட்பு கூடிய விரைவில் நாளொரு இடமும், பொழுதொரு பேச்சுமாக, நாட்கள், வாரங்கள் மாதங்களை, துணைக்கழைத்து கொண்டு வளர்ந்தது....

ஒவ்வொரு சந்திப்பின் போதும் அவளது பேச்சில் மிடுக்கும், ஆணவமும்  மிகையாக தெரிந்தாலும்,  அவனின் சிந்தனைகளை செவிமடுத்து, அடிக்கடி தட்டிககொடுப்பது போல் பாராட்டவும், அவள் கொஞ்சமேனும் சளைக்கவில்லை.
தொடரும்...

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 12