Sunday, July 25, 2021

இனிப்பு போளி....

 பாதாம், க. பருப்பு, தேங்காய் வெல்ல போளி..

ஒரு வித்தியாசத்திற்காக இந்த சமையல் பதிவு. முன்பெல்லாம் எங்கள் வீட்டில் வருடபிறப்பில் ஆரம்பித்து, ஆவணி அவிட்டம், சரஸ்வதி பூஜை, தீபாவளி, போகி பண்டிகை என விஷேட தினங்களில் கண்டிப்பாக இந்த போளி  வடை, பாயாசத்தோடு இணைந்து  மதிய உணவோடு ஐக்கியமாகும். இப்போது அப்படியெல்லாம் பண்ணவும் இயலவில்லை. வடை, பாயாசமே சாப்பிட முடியாத அதிகப்படியான  உணவாக போய் விடுகிறது. மற்றும்  அன்றைய தினத்தில் செய்வதற்கு நேரமும் இருப்பதில்லை. இதைப் போல்  இடைப்பட்ட நாளில் ஆசைக்காக என்றைக்காவது இதை செய்து சாப்பிட வேண்டியுள்ளது. அப்படி ஒருநாள் தீடிரென தனித்து உதயமான போளி இது. 


முதலில் கடலைப் பருப்பை அரை டம்ளர் எடுத்து கொண்டு வெறும் கடாயில் சற்று  சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

 

வறுத்ததை ஒரு தடவை அலம்பிய பின் கொஞ்சம்  அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு ஊற விடவும். 


ஒரு 25 (நல்ல வேளை.. இந்த தடவை  கணக்கில் கோட்டை விடவில்லை. எண்ணி வைத்தது சரியாக உள்ளது.:) ) பாதாமை எடுத்துக் கொண்டு அதையும் அலம்பி அந்த கடலைப் பருப்புடன் சேர்ந்து ஊற விிடவும்


க. பருப்புடன் சேர்ந்து சமர்த்தாக "நாங்கள் ஊறிக் கொண்டிருக்கிறோம்". ..என எவ்வித பிணக்கும்  காட்டாது ஒத்துழைத்த பாதாம் பருப்புகள். 


ஒரு அரைமணிநேரம் ஊறிய பின் அதே தண்ணீருடன் இரண்டையும் ஒரு கனமான பாத்திரத்தில் போட்டு ஒரளவு வாசனை வரும் வரை  வேக வைத்துக் கொள்ளவும்..


இது போளி மாவு. "மைதா உடம்பிற்கு கெடுதலாயிற்றே... .பேசாமல், கோதுமை மாவை சிபாரிசு செய்து விடலாமா....?" என்ற நம் யோசனையை புரிந்து கொண்ட மாதிரி  சற்று சோகமாக இருந்தது. "ஒரு நாள்தான் என்னை சேர்த்துக் கொள்ளுங்களேன்.... நான் என்ன அவ்வளவு பொல்லாததுவா. ...?முன்பெல்லாம் என்னை வைத்து, தோசை, பரோட்டா என்றெல்லாம் செய்து என்னை மகிழ்விக்கவில்லையா...? என கெஞ்சும் குரலில்  நியாயமாக கேட்டதும் மைதா மாவு கொண்டு கலந்து வைக்கப்பட்ட போளி மாவு

    

மைதாவுடன் மஞ்சள்தூள்  உப்பு, ந.எண்ணெய் கலந்து  தேவையான தண்ணீர்விட்டு நல்ல தளர்வாக கலந்து வைத்ததும், மைதாவுக்கு உண்டான சந்தோஷத்தை சொல்லி மாளவில்லை. "எண்ணெய் மினுமினுப்புடன் நான்  எவ்வளவு அழகு பார்த்தாயாா?" என கலக்கும் போதே ஆயிரம் முறை கேட்டு விட்டது. 


"ஆன்லைன் வர்த்தகத்தில் தேங்காய்கள் வாங்குவதால், சின்னதான இந்த தேங்காய்தான்  எனக்கு அன்றைய தினம்  கிடைத்தது.....பெரிய தேங்காயாக வந்திருந்தால் தேங்காய்ப்பூ கணிசமாக கிடைக்கும். சமயத்தில் அதுவும் இளசாக வழுக்கையாகவும் அமைந்து விடும். எதுவுமே நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து தான் அமையும்.. . ஆனால்,...." மேற்கொண்டு என்னை விமர்சிக்க விடாமல்  தடை செய்தது ஒரு குரல்." சரி..  சரி.... ரொம்ப அலட்டிக்காதே...! இந்தளவிற்கு நான் கிடைத்ததே உன்னுடைய அதிர்ஷ்டம்தான்.  . என்னைத்தான் தேர்ந்தெடுத்து என் உடல் மனம் வலிக்கும் வரை உடைத்து விட்டாயே...! பின் என்ன  அங்கலாய்பபு...? " மூடியிருந்தாலும்  தேங்காய், அதன்  ப(சி)ல்லுகள்  இருந்த  தைரியத்தில் வாய்க்குள் முணுமுணுத்தன.) 


பின் என்ன.. .? தேங்காய் சொன்னது போல், மேற்கொண்டு அங்கலாய்காமல்,  உடைத்த தேங்காயிலிருந்து அதன் ப(சி)ல்லுகளை அகற்றி எடுத்தேன்.  (எப்போதும் நான்  தேங்காயை பொடிதாக துருவி விடுவேன். அன்று கொஞ்சம் பிற வேலைகள் அதிகம். அதனால் மிக்ஸியில் போட்டு விடலாம் என ப(சி) ல்லுகளாக எடுத்துக் கொண்டேன்.) " போதுமே உன் பெருமை....! எப்படியோ என்னிடமிருந்த சொத்துக்களை  அகற்றி என்னை வெறும் ஓடாக்கி விட்டாய்... என தேங்காய்  மறுபடியும் என்னை கோபத்துடன் முறைக்க,   நல்லவேளை. ..! அதிலிருந்து வெளிவந்த தேங்காய் ப(சி)ல்லுகள்  அந்த  முழு தேங்காயைப் போல், "என்னை அதிகம் பேசாதே.... ... அங்கலாய்காதே... ..." என்று கடுப்புடன் சொல்லாமல் என் சொல்லை  ஆமோதிக்கிற மாதிரி மெளனமாகவே பல்லிளித்து   கொண்டிருந்தன....." 


இந்த அளவு தேங்காய்க்கு இந்த அளவு வெல்லம் எடுத்துக் கொள்ளலாம்... . கூடவே க. ப. பருப்புகள் வேறு இருக்கிறதே..! வெல்லம் அதன் இனிப்பான குணத்தைப்போல மெளனத்துடன் எல்லாவற்றையும் கேட்டபடி அமர்ந்திருக்கிறது. 


முதலில் மிக்ஸி ஜாடியில், தேங்காய் சில்லுகளை பொடிதாக்கி துருவி எடுத்துக் கொண்ட பின் அதற்குள் ஊறி வெந்த  க. பருப்பு. பாதாம் பருப்புகளை, அதனுள் போட்டு அதையும் நைசாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொள்ளவும். 


ஒரு கடாயில், துருவிய தேங்காயையும், வெல்லத்தையும் போட்டு கொஞ்சமாக.... தண்ணீர் கலந்து..... (அந்த தேங்காய் உடைக்கும் போது கிடைத்த தேங்காய் தண்ணீரே போதும். .) வெல்லப் பூரணத்தை நன்றாக வதங்க  விடவும். 


வெல்லப் பூரணம் நன்றாக வெல்லம் சேர்ந்து வதங்கும் சமயத்தில் பொடித்து வைத்திருக்கும் பருப்பு  கலவைகளை அதனுடன் சேர்த்து கிளறிக் கொண்டேயிருக்கவும்.
 
 

தேங்காய், வெல்லம், பருப்புக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாங்கள் பூரணத்துவம்  பெற்று விட்டோம் என மகிழ்கிறது. தேங்காயும் தன் கோபம் தவிர்த்து மற்றவைகளுடன் சினேகமாக இணைந்து கொண்டது. 


இறுதியில் தன்னுடன் சேர்ந்த ஏலக்காய் பொடியின் வாசனையில்  அந்த வெல்லப்  பூரணம் மிகுந்த மகிழ்வையடைந்தது. 


"இந்த சந்தோஷத்துடனேயே  சற்று நேரம் பேசிக் கொண்டிருங்கள். நீங்கள் என் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், உங்களை  கலந்து  வைத்திருக்கும் மாவுடன்் சேர்த்து  "போளி" என்ற பெயரை உங்களுக்கு சூட்டி விடுகிறேன். .." என்றதும், ஒன்றுடன் ஒன்று கைகுலுக்கிபடி "காத்திருக்கிறோம்" என்றது  வெல்லப் பூரணம். 


கொஞ்ச நேரத்தில் என சொல் கேட்டு உருண்டைகளாக மாவும், பூரணமும் தட்டில் அமர்ந்தபடி " பிறந்த சொந்த கதை, இங்கு வந்த கதை" என அளவாளாவி .கொண்டிருக்கிறது. 



போளி தட்டிச் சுட  வாழை இலை மிகவும் நன்றாக இருக்கும். சுடும் போது தோசைக்கல்லில் எடுத்துப் போட அமைப்பாகவும் வரும். அந்த இலை வாசனையே ஒரு தனிச்சுவை. ஆனால் நினைத்தவுடன் வாழை இலைக்கு எங்கே போவது? .  அதனால்் நெய் வந்த அலுமினிய கவரை தேர்ந்தெடுத்து கொண்டேன். மைதா மாவு உருண்டையை ந. எண்ணொயை கைகளில் தொட்டுக் கொண்டு மாவை பரத்தி, 


அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடிக் கொண்டு சுற்றிலும் உள்ள மாவை , நல்ல வட்டமாக மூடிக்கொண்டு மாவோடு சேர்த்து வட்டமாக தட்டி, 


எடுத்து எண்ணெய் தடவிய தோசைக் கல்லில் போட்டு சிவக்க வெந்ததும், 


மறுபுறம் திருப்பி, போட்டு, சுற்றிலும் கொஞ்சம் நல்லெண்ணெய்  விட்டு மறு புறமும் வெந்ததும் எடுத்து, .


இப்படி தட்டில் அடுக்க வேண்டியதுதான். சூடாக சாப்பிடும் போதே போளியில் நெய் விட்டு சாப்பிடலாம். நான் தோசைக் கல்லில் எண்ணெய்க்கு பதிலாக நெய் விடுவதில்லை. சூடு ஆறியதும் உறைந்து விடும். அதனால் சுட்டெடுத்து பின் சூடாக சாப்பிடும் போது அவரவர் விருப்பப்படி நெய் விிட்டுக் கொள்ளலாம்.. என்பது என் கருத்து. 


"இப்போது எப்படி.... நான் அழகாக இருக்கிறேனா?" எனக் கேட்கும் போளிகள். 


நீங்களும் வேண்டியதை எடுத்துக் கொள்ளலாமே. .. .. .! போளி எப்படி உள்ளதென அன்புடன் கருத்துரைகளை தாருங்கள். நன்றி. 🙏. 

அன்புடன் வந்து தெரிந்த சாதாரண பக்குவமானலும், பதிவை படித்து, சுவையான போளிகளை எடுத்துக் கொண்ட அத்தனை சகோதர, சகோதரிகளுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள். 🙏. 

Saturday, July 10, 2021

அனுபவ பதிவு.

வணக்கம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்.

அதென்னவோ  நான் எழுதினால், எப்போதுமே எனக்கு நீ.. ண்... ட.. பதிவுகள், கதைகள், படங்கள் பல விதங்களுடன் எடுத்த சமையல் குறிப்பு பதிவுகள் என வந்து விடும். என்றேனும் ஒருநாள் நானும் சுருக்கி எழுதலாம் என நினைத்து எழுதியதை,  வெளியிடலாம் என ப்ரிவியூவில் போய் பார்க்கும் போது அதை பார்த்ததுமே  மனசு "அட.. சே.. ! என்ன கஞ்சத்தனம் உனக்கு.. இவ்வளவு சின்னதாகவா எழுதுவது.? " என இடிக்க ஆரம்பிக்கும். சரியென்று... மறுபடி வெளி வந்து ஒன்றிரண்டு வாக்கியங்களை உருவாக்கி, இல்லை, பதிவு சம்பந்தபட்ட வேறு ஏதேனும் சேர்த்து நிறைய உருவாக்கி விட்டோமோ எனஅச்சத்துடன் மறுபடி ப்ரிவியூவில் சென்று பார்க்கும் போது "இப்பத்தான் சூப்பர் ."..  என அந்த மனசு குதூகலிக்கும். ஆனால் படிக்கும் போது உங்கள் அனைவருக்கும் "என்ன... இந்த சகோதரி எல்லா பதிவுமே மிதி வண்டி மாதிரி எழுதாமல், தொடர் வண்டி மாதிரி நீ.. ள.. மா..க எழுதுகிறார்களே.." எனத் தோன்றும் என்பதை என் உள் மனசு உணர வேண்டாமோ....... ?  சரி.. அதுதான் போகட்டும்.... எல்லோரும் எழுதும் பதிவுகளிலும் என் கருத்துரை மட்டும் வித்தியாசமாக  பெரியதாக  இருப்பதையாவது இந்த மனசு  புரிந்து கொண்டதா என்றால் அதுவுமில்லை. எனக்கு மட்டுந்தான் கருத்திட்டு விட்டு படிக்கும் போது நீளமாக இருப்பது தெரியும். அந்த  நீ... ள.. மே.... என்னை அங்கிருந்து விரட்டி வெளிகொண்டு வந்து துரத்தி விடும். 

சரி. ... இந்த தொடர்கதை என்ற பதிவை (நானும். அவரும்)  பாகமாக பிரித்து போடலாம் என நான் நினைத்தவுடன், ஏதேதோ சம்பவங்கள் நடந்து பதிவை போட விடவில்லை. சரி.. ஒருவழியாக அதற்கான நேரம் என்ற ஒன்று வந்ததும், சற்றே நெடுங்கதையாக  எழுதியதை, பிரித்து  (இதிலாவது ஒவ்வொன்றும் சிறிதாக காணக் கிடைக்குமே என அற்ப சந்தோஷம்... எனக்கு மட்டுமில்லை...  படிப்பவர்களுக்கும்  வருமே என்ற ஒரு சந்தோஷம்.. வந்தது. ) தினமும் ஒரு பதிவாக ஆறு நாட்கள் தொடர்ந்து போட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலும் எழுதி, ஆங்காங்கே சென்று பிறரின் பதிவுகளை படித்து, அதற்கும் கருத்துக்கள் தந்து இதெல்லாம் இந்த கைப்பேசிக்குள் என்னால் முடியுமா...?" என  நான் எப்போதும் போல் தயங்க, மனசு "உன்னால் முடியும் "என்ற தன்னம்பிக்கை ஊட்டி  வெளியிட வைத்தது. 

ஆனால், நாலாவது பதிவிலே ஆட்டம் ஆரம்பித்து விட்டது. வழக்கமாக வரும்  தலை, பல் வலிதானே என சமாளித்து வரும் போது, ஜுரமும் என் வலிகளுடன் தன் தலையை பிடிவாதமாக காட்ட,  ஐந்தாவதில் கொஞ்சம் திண்டாட்டந்தான். தொடர் கதையையும் உடனுக்குடன் தந்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். நாள் விட்டுப் போனால் படிப்பவர்களுக்கு நினைவிருக்க வேண்டாமா? என்பது என் எண்ணம் வேறு.....! அதனால் எப்படியோ ஆறாவதையும்  அன்றே வெளியிட்டு விட்டேன். 

அன்று இரவு முழுவதும் எனக்கு  நல்ல ஜுரம். கொஞ்சம் கூட தூங்கவேயில்லை. அன்று இரவிலிருந்து மறுநாள் காலை, மதியம் என ஆயுரவேத மருந்து சாப்பிட்டதில், மறுநாள் மாலைக்கு மேல் கொஞ்சம் கடுப்பாகி அது என்னை விட்டு விலகியது. உடம்பு அதன் வலியில் கண்மூடி  படுக்க மட்டுந்தான் அனுமதி கேட்ட வண்ணம் இருந்தது / இப்பவும் இருக்கிறது. அதனால் அன்று என்னால் அனைவருக்கும் உடன் பதிலளிக்க இயலவில்லை. அனைவரும் என்னை மன்னிக்கவும். அதனால்தான் பதில் கருத்து தர  தாமதமாகும் என்பதை மட்டும் பதிவில் குறிப்பிட்டேன். 

இப்போதெல்லாம், மனசாட்சிக்கு பயப்படுகிறோமோ இல்லையோ, லேசான ஜுரம் வந்தாலே பயப்படுகிறோம்...அது வேறு.. ஜுரத்தை விட உடம்பை பலகீனமாக்குகிறது. (எங்களை இந்த மாதிரி  சாதாரண  ஜுரத்திற்கு பிறந்த வீட்டிலிருக்கும் போது சிறுவயதிலிருந்தே ஆங்கில டாக்டரிடம் அழைத்துச் சென்றது கிடையாது. காலை வெறும் வயிற்றில் இஞ்சி சாறு எடுத்து,அதில் லிங்க செந்தூரத்தை அளவோடு கலந்து கொடுப்பார்கள். (எங்கள் மாமாதாத்தா நல்ல நாட்டு வைத்தியர். ,அவர் தயாரித்து தரும் நாட்டு மருந்துகள், தலைக்கு தேய்த்து குளிக்கும் மூலிகை எண்ணெய்கள் என எங்கள் வீட்டில் நிரந்தரமாக இருக்கும். 

எந்த ஒரு உபாதைகளும் எங்களில் யாரையாவது கிட்ட வந்து பயமுறுத்தினால், கடிதம் எழுதி துவரங்குறிச்சியில் இருந்த  (அந்தக் காலத்தில் கடிதந்தானே.  . .) அவரை எங்கள் வீட்டுக்கு வரவழைத்து விடுவோம்...அவரும் வந்து உடனிருந்து நாட்டு மருந்துகள் வாங்கி தயாரித்து தந்து எங்களை நலமாக்கி விட்டுத்தான் பிறகு செல்வார்..) மதியம், இரவு உணவு  புழுங்கல் அரிசி கஞ்சிதான். (அப்போதுதான் விதவிதமாக சாப்பிட வேண்டுமென நாக்கு பரபரக்கும். எப்போதும் சாப்பிடச்  சொல்லி, நாம் வேண்டாமென மறுத்த பிடிக்காத உணவை கூடவாவது தர மாட்டார்களா என மனசு ஏங்கும். ) இரவு அவர் ஆலோசனைபடி மிளகு, சுக்கு, திப்பிலி, நறுக்குமூலம், நிலவேம்பு, அக்கரா,  சித்தரத்தை என்ற மருத்துகளை உரலில் இடித்து  பொடி செய்த பின் அதைக் கொண்டு தயாரிக்கும் கஷாயம் என  ஜுரம் இரண்டு நாட்களில் சொல்லாமல் வந்தது போல், சொல்லாமல் ஓடியும் விடும். மழை நாட்களில்  கபத்துடன் கூடிய ஜுரம் வந்தால் ஆடாதொடை இலை, துளசி இலைகளும் அந்த   கஷாயத்தில் ஐக்கியமாகும்.. . (எப்போதாவது சில சமயங்களில் எங்களுக்கே போக்கு காட்டும் சில   விடாத ஜுரத்திற்கு ஆங்கில மருந்துகளை நாடி  குணப்படுத்தி கொண்டுள்ளோம்.. ) ஒரு நாள் அடிக்கும் ஜுரமே ஆறுமாத பலத்தை அபகரித்து கொண்டு விடும் என எங்கள் பாட்டி சொல்வார்கள். 

திருமணமான பிறகு வாழ்ந்த காலத்தில்  நடுவிலெல்லாம் இந்தமாதிரி நீடிக்கும்படியான காய்ச்சல் எங்களுக்கும் சரி.. எங்கள் குழந்தைகளுக்கும் சரி வந்தால், சமயத்தில்  ஆங்கில மருத்துவரிடம் சென்றிருக்கிறோம். பின் அவர்கள் தரும்  மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடுவோம். சரியாகி விடும். குழந்தைகளுக்கு பொதுவாக ஊசியெல்லாம் போட மாட்டார்கள். பெரியவர்களுக்கு காய்ச்சலின் தீவிரத்தை பொறுத்து ஊசி உண்டு. ஊசிக்கும் அடங்காவிடில் டெஸ்ட் உண்டு. மறுபடியும் டெஸ்டுக்கு ஏற்ற மருந்து, ஊசி என உண்டு இல்லையென ஆக்கிய பின் விடாக்கண்டனான ஜுரம் வேறு வழியின்றி ஓடி விடும். இப்போதுதான் இந்த பயங்கள் வந்திருக்கின்றது. 

அப்புறம் அந்த காலத்தில் வெறும் காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவரிடம் செல்லும் போது நிறைய பேர் என்ன சாப்பிட வேண்டுமென எப்போதும் விடாப்பிடியாக ஜுரததில் சாப்பிடும் உணவை பற்றிய கருத்தை கேட்பார்கள். அவரும், காஃபி, கஞ்சி, ரொட்டி, இட்லி, வெந்நீர் என்று சொல்லி சலித்துப் போவார்.  (இவர்கள் கொடுக்கும் வைத்திய  தட்சணையான ஐந்து ரூபாய்க்கு அவர் ( மருத்துவர்) ஜுர அளவை கணக்கிட்டு, மருந்துகள் எழுதி கொடுத்து, "பயப்பட வேண்டாம் .. இரண்டு நாளில் சரியாகி விடும்.. . .." என்ற தைரியமளிக்கும பேச்சுக்களைத் தவிரஅவரை நிறைய பேச வைக்கும் எண்ணம் இவர்களுக்கும் இருக்குமோ என்னவோ?) குடும்ப மருத்துவராக ஆகி விட்டால், அவரே இவரிடம் தொடர்ந்து வரும் இவர்களைப் பற்றிய குடும்ப விஷயங்களை பற்றி கேட்டு தெரிந்து அளவளாவிய பின்தான் நிம்மதியாவாரோ என்னவோ அதுவும் தெரியவில்லை. எப்படியோ நோயாளிகளுக்கும், அவர்கள் அடிக்கடிச் செல்லும் மருத்துவருக்குமிடையில்  மனிதநேய பண்(உடன்) பாடு இருந்தால் சரிதான்....! 

மருத்துவர் கடைசியாக தான் பரிந்துரைத்த மாத்திரைகளுடன் அந்த மிக்ஸரை கலந்து தரும்படி  தன்னுடைய உதவியாளரை( கம்பெளண்டர் )  சொல்லும் போது இவர்கள் (நோயாளிகள்) லாலாகடை மிக்ஸரை கற்பனையில் நினைத்துக் கொண்டு,, அத்தனை ஜுரத்திலும், நாக்கின் சுவையை கூட்ட உதவிய மருத்துவரை வாழ்த்துவார்கள். இது குறித்து அந்த கால திரைப்படங்களிலும் சரி,, பத்திரிக்கைகளிலும் நகைச்சுவை பகுதிகளாக வந்திருக்கிறது. இப்போதெல்லாம் அந்த மாதிரி மருந்தெல்லாம் இருக்கிறதா என்று கூட தெரியாது. 

 இந்த தடவை அனுபவத்தில் மனதிலுள்ளதை ஒரு  பதிவாக எழுத உதவிய அந்த ஜுரத்திற்கும் அவசியம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். (கொஞ்சமாவது சின்ன பதிவாக வந்திருக்கின்றதா ?) படிக்கும் அன்புள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

பி. கு. இப்போது பூரண நலமாகி விட்டேன். உடல்நலம் பாதித்த மறுநாளே எழுதி வைத்த பதிவு இது. தொடர்கதை இறுதிக்கு  என்னிடமிருந்து பதில் கருத்துகள் வரவில்லயே என  நீங்கள் எதிர்பார்த்திருக்கும் போது வந்திருக்க வேண்டியது. "வழக்கப்படி நீ.. ள. ம்.... மற்றும் தாமதம் என்றேன் நான். நீ.. ள. மா? இன்னும் எனக்குள்ளும் நிறைய விஷயங்கள் இதைப்பற்றி உள்ளது. அதை உனக்கு நினைவுபடுத்தி எழுத வைக்கலாம் என நினைத்தேன். சரி... போ.... எப்படியோ உருப்படியா எழுதியது வெளியாகிறதே என்றது மனசு." 😁😁😁😀... நன்றி. 🙏. 

Sunday, July 4, 2021

தொடர் கதை... நானும், அவரும்.

கதையின் 6 ஆவது (நிறைவு) பகுதி... 

வந்தும், வராது ஏமாற்றிக் கொண்டிருந்த மழை அன்று காற்றையும் துணைக்கழைத்துக்கொண்டு இரவின் நடு ஜாமம் வரை தன் மனம் போனபடி கடுமையாக பெய்த சந்தோஷத்துடன் சற்று ஓய்ந்தது. மழை விட்டும், தூறல் விடாத, புலர்ந்தும், புலராத அந்த அதிகாலை பொழுதில், என்னைச் சுற்றி, ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது... "நல்லவேளை,.. . அவர் வீட்டின் மேல் விழுந்து அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல், சாலையில் வந்து விழுந்ததே.... .! எத்தனையோ முறை இதை வெட்டுமாறு நாம் அவருக்கு எடுத்துச் சொல்லியும் அவர் இதன் மேல் வைத்திருந்த அன்பு காரணமாக மறுத்து வந்ததற்கு பிரதிபலனாக, இது அவரை காப்பாற்றி விட்டது.. "என்று என்னை புகழ்ந்தும், எனக்கு பாராட்டுரைகள் கூறி கொண்டும் இருந்தார்கள்.

இரவில் அடித்த காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் என் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, எல்லோரும் கூறியுள்ளபடி, அவர் வீட்டின் மேல் சாய்ந்து விழாமலிருக்க, ஒவ்வொரு நொடியும், இறைவனை வேண்டிக் கொண்டு, மரண அவஸ்தையுடன் ...... மரமாகிய நான்..... பட்ட வேதனை, காலையில் கண் விழித்ததும், சாலையின் குறுக்கே, நான், விழுந்து கிடந்ததை கண்டு களிக்கும், இவர்களுக்கெங்கே புரிய போகிறது. எப்படியோ.... எனக்கு உயிரை தந்து வளர்த்தவருக்கு, கெடுதல் விளைவிக்காமல் இம்மண்ணுலகை விட்டு மறைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வேரோடு நான் விழுந்து விட்டாலும், எனது ஆணிவேரும் மண்ணும் சற்று உறவாடி கொண்டிருந்ததால், எனது உணர்வுகள் முழுவதும், அற்று போகாத அந்த நிலையில் என் உள்ளம் அவரைத் தேடியது. "எங்கே அவர்.  .? அவருக்கு உடம்பு பூரண குணமாகி நலமுடன் இருக்கிறாரா. . .? என்னைச் சுற்றி இத்தனை பேர்கள் இருந்தும் அவரைக் காணவில்லையே...? என்னவாயிற்று அவருக்கு... சத்தம் கேட்டு இதற்குள் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்திருப்பாரே. .. . இன்னமுமா உறங்கி கொண்டிருக்கிறார்??? என் உணர்வுகள் முழுவதும் செத்துப்போவதற்குள் அவரை கடைசியாக ஒருமுறை பார்த்து விடலாமே....  ... "என்று நான் அங்கலாய்த்தபடி மனம் தவித்த போது, அவர் வீட்டு வாசலில் நின்றிருந்த சுசீலாவின், ஓ.... வென்ற அலறலில், என்னை சுற்றியிருந்த அத்தனைக்்  கூட்டமும் அவர் வீட்டுக்கு ஒடியது. "ஐயோ!!! என்னவாயிற்று அவருக்கு.... தெரியவில்லையே..?" என்று உள்ளம் கீழே விழுந்து கிடந்த அந்த நிலையில் கூட பதறியது.

சாலையின் குறுக்கே நிகழ்ந்த என் சாவு வாகனங்களின் பாதைக்கு இடைஞ்சலாக இருப்பதால், மதியம் வேருடன் உறவாடியபடி மடிந்தும், மடியாமலும், கிடக்கும் என் உடலை வெட்டி அப்புறப்படுத்த கையில் கோடாரியுடனும், இதர ஆயதங்களுடனும் நான்கைந்து பேர்கள் என்னிடம் நெருங்கினார்கள். அவர்கள் பேசிய விஷயங்கள், அவரகள் கையிலிருந்த கோடாரியை விட பலமாக என்னுள் இறங்கின........

இரவு பெய்த பேய் மழையிலும், அவரை சந்தித்து அவர் உடல் நலத்தை பற்றி விசாரித்து அவருக்கு உணவு கொடுத்துச் சென்ற குமாரிடம்,,,, "தனக்கு இப்போது பரவாயில்லை. .. மிகவும் களைப்பாக மட்டும் இருக்கிறது. நன்கு உறங்கி எழுந்தால் நாளை காலை சரியாகிவிடும்....." என்று ௬றி அனுப்பியிருக்கிறார் சதாசிவம். இந்நிலையில் காலையில் வீட்டின் முன் இத்தனை அமர்களமாயிருந்தும் அவர் எழுந்து வராத நிலை கண்டு அவரை எழுப்பி விஷயத்தை சொல்லாமென்று, சுசீலா அவர் வீட்டு கதவை நீண்ட நேரம் தட்டியும் அவர் திறக்காமல் போகவே, அவர் படுத்திருந்த அறை ஜன்னல் வழியே அவரை பார்த்து விட்டு, அவரது நிலை கண்டு சந்தேகித்து.... ஓ... வென்று கத்தியிருக்கிறாள்.

வீட்டின் உட்பக்கம் பூட்டியிருந்ததால், கதவு உடைத்துக்கொண்டு அனைவரும் சென்று பார்த்ததில், அவர் உயிர் இரவு உறக்கத்திலேயே பிரிந்திருந்தது... நேற்று வரை நல்லாயிருந்த மனிதர் இப்படி திடீரென்று போய் விட்டாரே...! எத்தனை நல்ல மனிதர்.....ஒருவரிடமும் கோபபடாமல், அனைவரிடமும் அன்பாக பழகி, அனைவருக்கும் தன்னால் முடிந்தளவு உதவி செய்து வாழ்ந்தவர்....

"இந்த மாதிரி மனிதர்களை பார்ப்பதே கஸ்டந்தான்... !!!! நல்லவர்களுக்குத்தான் இந்த மாதிரி நல்ல சாவு கிடைக்கிறது.. ஆனால் நமக்குத்தான் மனசு தாங்கவில்லை.... ரொம்ப கஸ்டமாயிருக்கு...! அவர் பையனுக்கும் உறவுகாரங்களுக்கும் தகவல் தந்திருக்கிருக்கிறார்கள்.  இன்று இரவுக்குள் அவர்கள் வந்து விட்டால், நாளை காலை அவர் கிளம்பி விடுவார். அதற்குள் இந்த மரத்தை வெட்டி அப்புறபடுத்தி விட்டால் நல்லது...."

பெருமூச்சு விட்டவாறு கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்..

அவர்கள் பேசப்பேச என் இதயம் சுக்கு நூறாக வெடிப்பதை நான் உணர்ந்தேன்...." ஐயோ!!! இரவெல்லாம் மழை, காற்றுடன் நடந்த பெரும் யுத்தத்தில் நான் ஜெயித்து விட்டேன் என்று இறுமாந்து போயிருந்தேனே....! ஆனால் என்னுடன் போட்டியிட்டு கொண்டு அந்த எமனும் ஜெயித்து விட்டானே..... .! அவரை உயிருடன் கடைசியாக அருகில் நேற்று பார்த்தது நினைவுக்கு வந்தது.. அவர் மனதின் வேதனைகளை மனதோடு கேட்கும் ஒரு அனுபவம் கிடைத்தது...... அதுவே போதுமென்று அவரையும் என்னையும் ஒருசேர பிரித்து வி்ட்டாயா இறைவா!!! ஏன் இப்படி செய்து விட்டாய்???" என் உடம்பில் பட்ட வேதனையையும், படும் வேதனையையும், பொருட்படுத்தாமல் மனம் பரிதவித்தது. "கடவுளே!!! இனி எனக்கும் ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால் அவருடன் சேர்ந்து வாழ மீண்டும் ஒரு மரமாகவே பிறந்து அவருடன் இணை பிரியாமல் இருக்கும்படி செய்வாயா??? என்று வேண்டிக் கொண்டிருந்த போது என் உணரவுகளும் கொஞ்சகொஞ்சமாக மங்க தொடங்கின...

மறுநாள்.... நானும், அவரும்.... இந்த பிறவியில் வெவ்வேறு ஊர்திகளாயினும் ஒரு சேர பயணமாவோம் என்று நினைத்த போது அத்தனை வருத்தத்திலும், இனம்புரியாத ஒரு துளி ஆனந்தம் உதயமானது.

"நானும், அவரும்" என்ற இக்கதை நிறைவுற்றது.

நடிகர் திரு. விவேக் அவர்களின் தீடீர் மறைவு கொஞ்சம் அனைவரையுமே உலுக்கி விட்டது. நல்ல நடிகர். அந்தந்த நகைச்சுவை பேச்சுக்களுக்கு தன் முக பாவங்களில், நடிப்பை தந்து பேசி சிரிப்பை வரவழைத்தது மட்டுமின்றி, பகுத்தறிவு விஷயங்களில் சிந்திக்கவும் வைத்தவர். அவருடன் நடித்த நகைச்சுவை நடிகர்களை தன்னால் இயன்றவரை மிளிர வைத்தவர். அவர் பசுமை திட்டமான மரம் வளர்ப்பில் மரங்களை நேசித்ததும், அவர் நம் மனதில் நிலையாக நின்றிருக்க ஒரு காரணம். 

நடிகர் திரு விவேக் அவர்களின் மறைவு செய்தி ஏனோ முன்பு எழுதிய இக்கதையை   எனக்கு நினைவுபடுத்தி மீண்டும் பதியச் செய்தது. நல்லதொரு கலைஞர்... மரங்களின் நேசர்...இயற்கையின் அபிமானம் பெற்றவர்.. என்றெல்லாம் எண்ணியதாலோ  என்னவோ.... 🙏.

அன்றே கதையை பகுதியாக பிரித்து வெளியிட நினைத்தேன். இயலவில்லை. நாம் நினைப்பது ஒன்றாயினும், இறைவன் தான் நினைப்பதைதானே இறுதியில். நடத்தி வைக்கிறான். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.... 🙏... 

இக்கதையை அப்போது ரசித்துப் படித்து நல்லதொரு விமர்சனம தந்து எனக்கு மென் மேலும் எழுத ஊக்கமும் உற்சாகமும் தந்தோடு மட்டுமின்றி, உடன் வந்த அவரது வலைச்சர ஆசிரியர் அறிமுகத்தில் என்னையும் என் எழுத்தையும் சிலாகித்து எழுதி, அங்கும் இந்தக் கதையை பிரகடனப்படுத்தி என்னை கெளரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி அவர்கள்தான். நன்றி. நன்றி கில்லர்ஜி சகோதரரே. . 🙏..

இந்தக் கதையை இப்போது படித்து கருத்துக்கள் தந்த சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 

தொடர் கதை....

கதையின் 5 ஆவது பகுதி

ஒரு மனிதன் பிறக்கும் போதே சுயநலத்துடன்தான் பிறக்கிறான்... அவன் தேவைகள், அவன் ஆசைகள் இது மட்டுமே நிறைவேறினால் போதும் என்ற மனதுடன்தான் வளர்கிறான்... வாழ்கிறான்...  பிறந்த குழந்தை  தன் அன்னையின் அரவணைப்பிலிருந்து இறங்கி நடக்க கற்றுக் கொள்வது கூட, தான் விரும்பும் இடத்திற்கெல்லாம் தவழும் சுயநலத்திற்காகத்தான், இருக்குமோ....? 

இப்படி தன் ஆசைக்காக, தன் தேவைக்காக, தான் விரும்பியபடி வாழ  ஆரம்பிக்கும் மனிதன் சுயநலத்தின் பிடியில் படிப்படியாக முழுவதுமாக சிக்குகிறான். தன்னை பெற்றவர்களுடனும், மற்றவர்களுடனும், குடும்பத்துடனும், இதர சொந்த பந்தங்களுடனும், தன் குழந்தைகளுடனும், தான் வாழும்போது இதே சிந்தனைதான் அவன் மனதில் மேலோங்கி நிற்கிறது.  இறுதியில் வாழ்நாளின் கடைசியிலும் தன் வாரிசுகளை சார்ந்தே இருக்க வேண்டுமென நினைக்கிறான். மடிந்த பின்பும் தன் சந்ததியினர் தன் நினைவு நாளை நினைவாக நினைவு கூர்ந்து கொண்டாட வேண்டுமென எண்ணுகிறான். அந்த அளவுக்கு அவன் சுயநலத்துடன் ஒன்றி போகிறான்.... ..    

இப்படி பிறப்பிலிருந்து, இறப்பு வரை தனக்காக மட்டுமே வாழ ஆசைப்படும் மனிதர்கள் வாழும் போது தன்னுடன் வாழும் மற்றவர்களின் உணர்வுகளை மட்டும் ஏன் புரிந்து கொள்ளாமல் போகிறார்கள்.? சரி....... அப்படி அதை உணர்ந்து அந்த குணத்தை சிறிது  கஸ்டப்பட்டேனும் மாற்றியமைத்தானேயானால் அவன் உலகில் வாழத் தெரியாதவனாகிறான்..  . "திறமையற்றவன்....  ஒன்றுக்கும் உதவாதவன். .. உபயோகமில்லாதவன்...." இன்ன பிற பட்டங்களை பிறர் சுலபமாக தர அதையும் சுமக்கிறான்.... அப்படி சுயநலமாக வாழும் போதும்  மனிதனே மனிதனுக்கு பெரும் பகையுமாகிறான்...... ஆதி பிறப்பிலிருந்து தோன்றிய இந்த மனித வர்க்கங்களின் சுபாவங்கள்தாம் எத்தனை விசித்திரமானது...!!! 

மனதில் தோன்றிய இந்த சிந்தனைகள் சதாசிவத்தின் உள்ளத்தை முள்ளாக குத்தி வருத்தியது... "யோசித்து பார்த்தால், நானும் ஒரு வகையில் அப்படிப்பட்ட சுயநலவாதிதானே...!" என்று உண்மையை நினைத்த மாத்திரத்தில் மனசின் மைய பகுதியில் சுரீரென்று வலித்தது.... "நான் வளர்த்த பையன், என் வளர்ப்பு மகனானலும், அவன் என்னையே தஞ்சமென அண்டி இருக்க வேண்டும். வயதான என்னை நான் கண் மூடும் கடைசி காலம் வரை என் சொந்த வீட்டிலேயே சேர்ந்திருந்து அன்புடன் அனுசரித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தில்தான், அவனுக்கு வேண்டியதெல்லாம் நான் பார்த்து, பார்த்து செய்தேனோ...? " என நினைத்த போது இதயம் வெடித்து விடும் போலிருந்தது... 

கண்கள் கலங்க அருகிலிருந்த மரத்தை தழுவி கொண்டார்.... . கைகளால் அதன் சொரசொரப்பை வாஞ்சையுடன் தடவியபோது உள்ளம் சற்று லேசாகியது. அண்ணாந்து சற்றே வீட்டின் பக்கமாக வளைந்திருந்த மரத்தை அதன் உச்சி வரை பார்த்தார். இந்த மரங்கள்தான் எத்தனை மேன்மையானவை.....   "பொதுவாக  உயரமான மனிதரை... மரம் மாதிரி வளர்ந்திருக்கிறாரே தவிர அறிவு வளரவில்லை..." என்பார்கள். ஆனால் மரத்தின் சிறப்பாம்சங்கள் மனிதனிடம் முழுமையாக இருந்துவிட்டால் அவன் உண்மையிலேயே உயர்ந்தவன்தான்..... 

தன்னை நாடி வருபவர்களுக்கு நிழல் தந்து, பறவைகளுக்கு புகலிடமாக இருந்து, சுயநலமில்லாமல், தனக்காக எப்போதும் வாழாமல், தான் வாழும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பூ, காய், கனி, என மரங்கள் பிறருக்கு உதவியாக இருப்பதுடன், தன் மடிவை சந்தித்தும் மரங்கள் மனிதனுக்கும், பிற உயிர்களுக்கும், எவ்வளவு உதவியாக இருந்து வாழ்ந்து காட்டுகிறது. மரங்களுடன் வேறு எதையும் ஒப்பிட முடியாது. அதனால்தான் மரத்தின் பெருமை விளங்குமாறு, அதனை அத்தனை உயரமாக படைத்திருக்கிறான் இறைவன்......! " எனக்கு அடுத்த பிறவி என்ற ஒன்றிருந்தால் உன் மாதிரி மனிதனை உனக்கே உரித்தான நேயத்துடன் கவனித்து கொள்ளும் உன்னைப்போல்  ஒரு மரமாக உன்னருகிலேயே பிறக்கவேண்டும்..... " என்று முணுமுணுத்தவாறு கண்களில் நீர் மல்க மீண்டும் அன்புடன் மரத்தை லேசாக அணைத்துக் கொண்டார் சதாசிவம்.

அவர் சொன்னதை ஆமோதித்து அவரை அமைதிபடுத்துவது போல் மரத்திலிருந்து சில இலைகள் அவர் மீது விழுந்து பின் தரையை தொட்டன.. . .மனஉளைச்சல் தந்த அலுப்பின் காரணமாக கட்டிலின் விளிம்பில்  சாய்ந்து படுத்து கண்களை மூடிக்கொண்டார் சதாசிவம். 

"உன்னையும், அவனையும் ஒரே மாதிரியான பாசத்துடன்தானே வளர்த்தேன்... அவன் மனதில் மட்டும் இத்தனை வேறுபாடுகள் இருப்பதாக ஏன் அனைவரும் குறைச் சொல்கிறார்கள்.? அவன் தன்னிடமிருக்கும் பாசமெனும் கிளைகளை ஏன் அவ்வப்போது யாரும் பார்க்காமலேயே வெட்டிக் கொள்கிறான். 

தாய் தந்தையை சிறுவயதிலேயே இழந்து  சில உறவுகளின் பாராமுகத்திலும், சில உறவுகளின் பராமரிப்பிலும் எப்படியோ வளர்ந்து, நான் காலூன்றிய போது, நல்ல உண்மையான அன்புக்கு ஏங்கிய போது, அந்த உண்மையான பாசத்தை என் மனைவியின் வடிவில் இறைவன்  கைப்பிடித்து  கொடுத்தாள். அதன் பின் எங்களுக்காக உங்கள் இருவரையும் அதே பாசத்தின் பிணைப்பில் கட்டுண்டு வளர்த்த போது, அவன் மட்டும் ஏன் இப்படி மனதளவில் வேறானான்.....?

எத்தனையோ சிரமங்கள், மனைவி பிரிந்ததும் ஏற்பட்ட சோகமான எத்தனையோ நினைவுகளை அவனோடு கூட அதிகம் பகிராத வேதனைகளை, மனதோடு உன்னிடம்  சொல்லி, பகிர்ந்த போதெல்லாம்.,.... எங்கள் அன்பை புரிந்து கொள்ளும் உன் இயல்பான ஆற்றலோடு, உனக்கு மட்டும் பேசும் சக்தியையும் இறைவன் தந்திருந்தால், நீ எத்தனை ஆறுதலாக என்னோடு வாய் விட்டு பேசி இருந்திருப்பாய்.... !"  கண் மூடி தான் வளர்த்த  மரத்தோடு பேசிய  அவரை, அவர் பேச்சை, அவர் மனதை புரிந்து கொண்ட மனோபாவத்துடன் மரத்தின் கிளைகள் மேலும் அசைந்து, பல இலைகளை அவர் மீது உதிர்த்து தானும் அமைதி பெற்று கொண்டு, அவரையும் ஆசுவாசபடுத்தியது......  !!" 

இது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கை சுவடுகள் மனக்கண் முன் வந்து போயின.. .. இன்றும்,.... அதிகம் பேசாது பிறர் மனம் கோணது, தனக்கென வாழாது, தமக்கென்று வாழ்ந்து மறைந்த மனைவியின் நினைவில், அவள்  அன்பின் பிரிவில், மனது அழுததால் அவர் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது. 

நண்பர் பாலு எச்சரித்து சொன்ன விஷயங்கள் வேறு மனதை லேசாக சலனப்படுத்தியது..... .! பட்ட பகலில் எல்லோரும் பார்க்கக் கூடிய பொது இடத்தில் இப்படி சிறு குழந்தையாக உணர்ச்சிவசபடுகிறோமே என்ற வெட்கத்தில் கண்களை அவசரமாக துடைத்தபடி திறந்த போது கண்கள் திறக்க முடியாமல் எரிந்தன. காலையில் சற்று குறைந்திருந்த காய்ச்சல் இப்போது மறுபடி அதிகமாயிருந்தது. 

சுசீலா கஞ்சியுடன் கொடுத்துச் சென்றிருந்த , சாப்பிட மறந்து விட்டிருந்த  அந்த  மாத்திரைகளை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டுமென்று நினைத்த போதில், "எதற்காக மாத்திரை சாப்பிட்டு அப்படி இந்த உடம்பை பாதுகாக்க வேண்டுமென்ற" வெறுப்பு ஒரு கணம் தோன்றியது.... "யாருக்கும் சிரமம் கொடுக்காமல், என்னையும் சிரமபடுத்தாமல், என்னை அழைத்துக் கொண்டு போய்விடு..." என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டே இருக்கையில், காற்று சில்லென்று அடிக்க, ஓரிரு மழைத் துளிகள் முகத்தில் வந்து விழுந்தது.

கண்களை சிரமப்பட்டு திறந்து பார்த்தார். மதியம் அடித்த வெயிலுக்கு பலத்த மழை வரும் போலிருந்தது. வானம் ஓர் மூலையில் ஒரு கறுத்த பெரிய யானையை போன்ற தோற்றத்துடன் கருமையாக காட்சியளித்தது.. ..கருமை அதிகம் படர்ந்த சூல் கொண்ட மேகங்கள் துரிதமாக ஆங்காங்கே பரவி விரிந்து அழகான நீலவானத்தை தன் மழை மேகங்களினால் மேலும் கறுப்பாக்கி விடும் லட்சியத்தை மிக விருப்பமான மனதுடன்  நிறைவேற்றும் பணியில் செயல்பட ஆரம்பித்திருந்தன... 

காய்ச்சல் வேகத்தில் எழுந்து நிற்கவே முடியாத  சிரமத்துடன் எழுந்து நின்ற சதாசிவம் குடித்து முடித்திருந்த கஞ்சி பாத்திரங்களையும், மாத்திரை கவர்களையும் ஒரு கையில் எடுத்தபடி, மற்றொரு கையால் கயிற்று கட்டிலை மடித்து அருகிலிருக்கும் வீட்டு சுவற்றில் சாய்த்து விட்டு தள்ளாடியபடி நடந்து வீட்டினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்..

தொடர்ந்து வரும்.. . 

Saturday, July 3, 2021

தொடர் கதை.....

கதையின் 4 ம் பகுதி. 

 "அடாடா...சே... என்ன... இவன் இப்படியெல்லாம் பிரித்து பேச ஆரம்பித்து விட்டான்...? தெரிந்தவர்கள் குறை சொல்லும் போதெல்லாம் அவனுக்காக அவர்களிடம் பரிந்து பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது. அப்படி யாருக்கு எடுத்து  கொடுத்து விட்டேன்...?  முகம் தெரியாத வேண்டாதவர்களுக்கா...? அவன் கூடப்  பிறந்த தங்கைக்கு, அவள் வாழ்க்கை  ஆரம்பிக்கும் முன்பே பிரச்சனை வந்து விடாமலிருக்கவும், அவனை பத்து மாதம் சுமந்து பெற்ற அவன் அம்மாவின் சிரமத்தையும் குறைக்கத்தானே கொடுத்தேன்... சொல்லபோனால் அவன் எப்பாடுபட்டாவது செய்ய வேண்டிய கடமையைதானே நான் செய்தேன்.... நான் ஏதோ குற்றம் செய்து விட்ட மாதிரி பேசுகிறானே....? " நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. மொத்தத்தில் அன்று இரவு தூக்கம் முழுமையாக பறி போனது அவருக்கு.

அதன் பின் திருமணத்திற்கு தன்னுடன் வரச்சொல்லி மகன் அழைத்தபோது ௬ட, "நான் எதுக்குப்பா...? நீயும், உன் மனைவியும், போய் வாருங்கள். நான் வரவில்லை... ." என்று ஏதோ சாக்கு போக்கு சொல்லி தப்பித்து விட்டார். அங்கு சென்ற பிறகு இவன் தன்னை வைத்துக் கொண்டு ஏதாவது பேச போக பிரச்சனை பெரிதாகி அது  அந்தக் கல்யாணத்தை பாதித்து விட்டால்... பாவம்.. . .!  அந்த பெண்....! என்ற கழிவிரக்கத்தில் அவர் மனம் திருமணத்திற்கு செல்ல ஒப்பவில்லை. இந்த விஷயமெல்லாம் நண்பர் பாலுவுக்கு தெரியாது. இவரும் எதைப் பற்றியும் சொல்லாமல், வழக்கப்படி தன் மனதில் போட்டு புதைத்து விட்டார். ஏற்கனவே தன் மகனை பற்றி அடிக்கடி குற்றம் சொல்லி கொண்டிருக்கும் பாலுவுக்கு இது தெரிந்தால் தன் மகனை நிற்க வைத்து கேள்வி கேட்டு பிரிவை பெரிதாக்கி விடுவார் என்ற பயம் தந்த தயக்கத்தில் சதாசிவம் பாலுவிடம் எதுவும் கூறவில்லை.

இருவரின் யோஜனைகளிலும் சிறிது நேரம் மெளனமாகவே நகர்ந்தது. அப்போது சுசீலா கஞ்சியும் மாத்திரையும் கொண்டு கொடுத்து விட்டு, "கஞ்சி குடித்து விட்டு மாத்திரை போட்டுக் கொள்ளுங்கள் மாமா" என்று ௬றி விட்டுச் சென்றாள்.

சற்று நேரம் பொறுத்து மெளனம் கலைந்த பாலு, "சரி, சதா.... நா கிளம்புறேன். உன் மகனை பத்தி குத்தம் சொல்ல எனக்கு மட்டுமென்ன ஆசையா..? உன்னோட நிலையை பாக்க பொறுக்காமேதான் மனசுலே படறதை சொல்றேன். நீ தப்பா எடுத்துகிட்டாலும் சரி,... நான் இன்னொன்றும் உன் நல்லதுக்காக மறுபடியும் சொல்றேன், இந்த வீட்டை விக்கறதுக்கு மட்டும் நீ மறுபேச்சில்லாமல் சம்மதிக்காதே.... அவ்வளவுதான்..! என்னாலே சொல்ல முடியும். சரி...சரி.. நீ கஞ்சியை குடிச்சிட்டு, மாத்திரை போட்டுகிட்டு நல்லா ஓய்வு எடுத்துக்கோ... நா மறுபடியும் சாயங்காலம் வந்து பாக்கறேன்... " என்றபடி எழுந்தார்.

" சரி, போய்வா.. . "என்று நண்பருக்கு விடை கொடுத்த சதாசிவம் கஞ்சியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.

அன்றொரு நாள் தன்னை சந்திக்க வெளியூரிலிருந்து வந்திருந்த நண்பனை என் அருகாமையில் நின்றபடி விடை கொடுத்து அனுப்பும் போது, இவர் மகன் அவனிடம் ௬றிக் கொண்டிருந்ததை, நானுந்தான் கேட்டேன்...  "ஆமாப்பா... இது ஒரு நல்ல சான்ஸ்.. இதை நா கோட்டை விட்டுட்டா அப்புறம் இதைப் போல கிடைக்கவே கிடைக்காது. எப்படியாவது இந்த  பதவி உயர்வை  பயன்படுத்திகிட்டு சென்னைக்கு போயிட்டா, அப்புறம் ஒரு ஆறு மாசத்திலே வெளிநாடு போற வாய்ப்பு கம்பெனி மூலமா வருது..... அது கிடைச்சா  என் வாழ்க்கையே பிரமாதமாயிருக்கும். அதுக்காகவே நான் சென்னைக்கு போக ஒத்துக்கனும், அப்பாவையும் ஒத்துக்க வைக்கனும். வேற வழியில்லை,.. ..! இந்த வீட்டை வித்துட்டு சென்னையிலே  கொஞ்ச மாதங்களாவது ஏதேனும் வாடகை வீடு பார்த்து செட்டிலாக வேண்டியதுதான்..... அங்கிருக்கும் என்  நண்பனிடம் சொல்லி அப்படி ஒரு நல்ல வீடு பார்க்க ஏற்பாடு  செய்ய சொல்லியிருக்கிறேன். " அவன் குரலில் பதவி உயர்வின் ஆசையும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறியும் தெரிந்தது...

"சரி.... நீ சென்னைக்கு போய் சில மாதங்களாவது  செட்டிலான பிறகு உனக்கு வெளிநாடு வாய்ப்பு வந்ததும் உன் குடும்பத்தை மட்டும் விட்டு விட்டு செல்ல முடியுமா,? அப்போது இந்த வீடு இருந்தால், அவர்கள் இங்கு வந்து வசிக்க வசதியாக இருக்குமே... " என்ற அவன் நண்பனின் கேள்விக்கு, " இல்லை, இல்லை. .. வெளிநாட்டில் எப்படியும் சில வருடங்களுக்கு மேலாக இருக்க வேண்டி வரும். அதனால் மனைவி, குழந்தையை விட்டுட்டு போக முடியாது. அப்பாதான் பிரச்சனை..  அவரை கூடவே அழைத்து செல்லவும் முடியாது. அவர் உடம்புக்கும் அந்த ஊர் ஒத்துக்காது.  முடிந்தால் அவர் அங்கேயே தனியாக இருக்கட்டும் இல்லையென்றால் ஏதாவதொரு முதியோர் இல்லத்தில் அவரை சேர்த்து விட்டுட்டு போக வேண்டியதுதான்.... " என்ற அவனின் அலட்சியமான பதிலில் நான் ஆடி போய் விட்டேன் இதை அவரிடம் நான் எப்படி சொல்வதென்று தெரியாமல் தவித்துக் கொணடிருந்த போதுதான் அவர் நண்பர் பாலு அது பற்றி அவரிடம் விவாதித்தது  எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தனக்காக தன் உழைப்பையும், வாழ்க்கையையும், தியாகம் செய்தவரை, வயதான காலத்தில் அவரை கவனித்து கொள்ள வேண்டியது தன் கடமை என்று உணராமல், சுயநலமாக மட்டும் திட்டமிடும் மகனுக்காக, இன்னும் வாதிடும் அவரை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாகவும், கவலையாகவும் இருந்தது.

தொடர்ந்து வரும்... 

Thursday, July 1, 2021

தொடர் கதை....

கதையின் 3 ம் பகுதி.... 

மகன் பேரில் சதாசிவம் வைத்திருந்த அளவு கடந்த பாசத்தை முழுமையாக உணர்ந்தவர் பாலு. அவன் படிப்பிற்காக, அவன் விரும்பும் அவனின் பிற  தேவைகளுக்காக, தன் சம்பள பணம் போறாத நிலையிலும் தன் மனைவியின் சில  நகைகளை விற்றும், தன் அலுவலகத்தில் ஓவர் டைம்மில் வேலை செய்து சம்பாதித்து கொடுத்தும் அவன் மனம் கோணதபடி வளர்த்து ஆளாக்கியவர். அவனும் இவருடைய அன்பை புரிந்து இவரிடம் மிகவும் பாசமாக இருந்ததென்னவோ உண்மைதான். நாளடைவில் தனக்கென்று ஒரு எண்ணங்கள், வாழ்க்கை கனவுகள்  என வந்தவுடன் அவனுடைய சுபாவத்தில் சில மாறுதல்கள் வந்ததை பாலு சதாசிவத்திடம் உணர்த்திய போது அவர் அதை மறுத்து மகனுக்காக வாதிடுவார். இது அவ்வப்போது இருவருக்கிடேயே நடக்கும் ஒரு விஷயந்தான்....! ஆனால், இந்த தடவை  சொந்தமாக  சிரமப்பட்டு, தான் கட்டி வாழ்ந்து வந்த வீட்டை விற்று விட்டு மகன் வேற்றுருக்கு அழைத்து செல்ல போவதையும், சதாசிவம் சாதாரணமாக எடுத்துக் கொண்டது பாலுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

மகனின் நடவடிக்கைகளின் மாற்றங்கள் சதாசிவமும் உணராமலில்லை. ஆனால் அவரின் இயல்பான பொறுமையும் மற்றவர்களிடம் தன் வருத்தத்தை பகிர்ந்து கொள்ள கூடாது என்ற வைராக்கிய மனப்பான்மையும், அதற்கும் மேலாக தன் மகனிடம் வைத்திருந்த கள்ளமில்லா அன்பும், மகனை பற்றி யார் குறை கூறினாலும், அவரை எதிர்த்து மகனுக்காக பேச வைத்தது. 

இருபது  நாட்களுக்கு முன்பு அவனுடைய உடன்பிறந்த தங்கையின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைத்து நேரில் அழைத்து செல்ல வந்திருந்த அவனுடைய அம்மாவிடம், அதுவும் அவனை வயிற்றில்  சுமந்து பெற்ற அம்மாவிடம், "என்னிடம் ஏது அவ்வளவு பணம்...? என்னை நம்பியா அவ்வளவு பெரிய இடத்தில் சம்பந்தம் வைத்துக் கொண்டாய்.. ? என்னதான் நான் உன் மகன் என்றாலும் நீதான் பணத்துக்காக அன்றே என்னை விற்று விட்டாயே...  ஏன் அந்த பணம் போதவில்லையா?" என்று அவன் தாயின் விசும்பலுக்கிடையே   கத்திக்கொண்டிருந்த மகனை சதாசிவம் சமாதானபடுத்தி, தன் தங்கையை தனியே அழைத்து சென்று விபரத்தை கேட்ட போது, "தேவைபடும் அந்த பணம் கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட நாளில் நிச்சயத்திருக்கும் தன் மகளின் திருமணமே நின்று விடும்.. அதனால்தான் அவன் என் வயிற்றில் பிறந்தவன் என்ற உரிமையில் அவனிடம் கேட்டு விட்டேன். மற்றபடி அவனையும் உங்களையும் சங்கடபடுத்தும் எந்த நோக்கமும் எனக்கில்லை அண்ணா.."என்று அவள் மனம் விட்டு பேசி  அழுதவுடன் மனம் கேட்காமல், கொஞ்சமும் யோசிக்காமல் தன் மனைவியின் மிச்சமிருந்த கொஞ்ச நகைகளையும் தன் கைவசம் இருந்த கொஞ்ச பணத்தையும், முதலில் வாங்க மறுத்த, அவளிடம் எடுத்து கொடுத்து "கடனாகவாவது வாங்கிக்கம்மா.. உனக்கு எப்ப முடிகிறதோ, அப்ப திருப்பி கொடு.... நான் கொடுத்தால் என்ன....? உன் மகன் கொடுத்தால் என்ன.....? பெண்ணின்  திருமணம் தடைபடாமல் நடக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொள். இப்போதைக்கு என்னிடம் சும்மா இருக்கும் இந்த பணம் கல்யாண செலவுக்காவது உதவட்டுமே... வாங்கிக்கோ.." என்று அவளை சமாதானபடுத்தி கொஞ்சம் வறுப்புறுத்திி கொடுத்ததும், அவள் அதை வாங்கிகொண்டு அவர் காலில் விழுந்து வணங்கி "என் உயிர் உள்ளவரை நீங்கள் செய்த இந்த உதவியை மறக்க மாட்டேன் அண்ணா..எப்படியும் எங்காவது வேலை செய்து இதை கடனாக நினைத்து கொடுத்து விடுவேன்..  " என்று மனம் உருகி கூறி விட்டுச் சென்றாள்.

இரண்டு நாட்கள் கழித்து தூக்கம் வராத ஒரு இரவில் தன் அறையிலிருந்து வெளிவந்து ஹாலில் சோபாவில் வந்து அமர்ந்தபடி, மனதின் விளிம்புகளில் முட்டி மோதியபடி வந்த நினைவுகளை ஒதுக்கி  அவற்றையும் அமைதியுற செய்து தன் தூக்கத்தையும்  வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருக்கையில் மகன் கொஞ்சம்  சத்தமாக தன் மனைவியிடம் அவன் அறையில் பேசியதை யதேச்சையாக கேட்க நேர்ந்ததும் அவர் உண்மையில் அதிர்ந்துதான் போய் விட்டார்.

 "அன்று பார்த்தாயா? என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் அம்மாவின் நகையையும், தன்னிடமிருக்கும் பணத்தையும் எடுத்து என்னைப் பெற்ற  அம்மாவிடம் தாரை வார்க்கிறார். என்னதான் அவரின் ஒன்று விட்ட தங்கை என்ற உறவானாலும், அவர் சொந்த பையனாக நான் இருந்திருந்தால், இப்படி கொடுக்க முடியுமா... , இல்லை கொடுப்பாரா? வளர்த்தவன்தானே..! இவனிடம் என்ன கேட்பது என்ற எண்ணம்.... . இவர் சொத்தில் எனக்கு என்ன உரிமை என்ற அகம்பாவம்.... அதனாலே, நான் சொல்றதுதான் சரி..  ! நாம் சென்னைக்கு போறதுக்கு முந்தி இந்த வீட்டை வித்துட்டு அவரையும் கூட்டிகிட்டு போறதுதான் நல்லது.. ... இவரை இங்கே விட்டுட்டு போனால் இந்த வீட்டையும் யாருக்காவது எழுதி கொடுத்திடுவாரு....! இருக்கும் இந்த ஒரு சொத்தும் போய் விடும்.... " அவன் பேச பேச அவர் மனது உடைய ஆரம்பித்தது.

தொடர்ந்து வரும்.... 

தொடர் கதை...

 கதையின்  2.ம் பகுதி.... 

"சதா, நேற்று உனக்கு உடம்பு சரியில்லையாமே, இப்பத்தான் குமார் சொன்னான். உடனே ஓடி வர்றேன் இப்ப எப்படி இருக்கு....?" என்று கவலையுடன் கேட்டபடி பக்கத்து வீட்டை பார்த்தார். 

அப்போது சதாசிவத்தின் வீட்டிலிருந்து வெளிவந்த சுசீலாவை பார்த்ததும், "அடேடே, சுசீலா, நீ இங்கேதான் இருக்கியா? இப்பத்தான் குமார், சதா மாமாக்கு நேற்று நல்ல ஜீரம், அவரை கட்டாயபடுத்தி டாக்டரிடம் அழைச்சிகிட்டு போய் மருந்து மாத்திரை வாங்கி கொடுத்தேன். சுசீலாவையும் அவரை அடிக்கடி பாத்துக்கோன்னு சொல்லியிருக்கேன்னு , சொல்லிட்டு போறான்...." உடனே பதறி அடிச்சிகிட்டு ஓடி வர்றேன்... .நீதாம்மா இவனை பாத்துக்கணும், இந்த வயசில் இவனை தனியே விட்டுட்டு இவன் பையன் ஊருக்கு போகலாமா. . .? நீயே நியாயமா பதில் சொல்லு.... இவன் உறவை விடவா அந்த உறவு அவனுக்கு பெரிதாகி விட்டது... ?" என்று கோபத்துடன் வெடித்தார்.

"அவனை குத்தம் சொல்லாட்டா உனக்கு உறக்கமே வராதே, சரி விடு... எனக்கு நாளைக்கே சரியாகிடும் .. சாதாரண ஜீரந்தானே.... அவனும் இன்னும் இரண்டு நாளில் கல்யாணம் முடிந்ததும் வந்து விடுவான்.." மெல்லிய குரலில் மகனுக்கு ஆதரவாக பேசினார் சதாசிவம்.

"உன் மகனை ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டியே.... ஆனால், அவன் முந்தி மாதிரி இல்லை தெரியுமா....? உனக்கு தெரிஞ்சாலும் நீயும்  வெளியிலே காட்டிக்க மாட்டே. ... உன் சுபாவம் அப்படி...! மனசுகுள்ளேயே உன் கவலைகளை வச்சு பூட்டி மத்தவங்களோட மகிழ்ச்சியை மட்டும் பார்த்து சந்தோஷபடறவன் நீ..... உன் பையன் இப்ப ரொம்ப மாறிட்டான்... வளர்த்த கடா நெஞ்சிலேதான் முட்டுமுனு.. உனக்கு தெரியாததா?ஆனால், வளர்த்த பாசம் உன் கண்ணை மறைக்கிறது .. நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீ கொஞ்சமேனும் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறே..." என்று அங்கலாயத்தபடி புலம்பி தள்ளினார் பாலு.

இவர்களது உரையாடலை சற்று தர்ம சங்டத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சுசீலா, "மாமா, ஒரு அரைமணி நேரம் கழித்து கஞ்சி போட்டு கொண்டு வரவா?" என்று வினவியபடி நகர யத்தனித்தாள்.

"சரியம்மா... .என்று அவளை அனுப்பிய சதாசிவம், நண்பரை பார்த்து, அட...! என்னப்பா...நீ... அந்த பொண்ணு முன்னாடி சொன்னதையே திருப்பி, திருப்பி சொல்லிகிட்டிருக்கே.... , அவ எம் பையனை பத்தி தப்பா நினைக்க மாட்டாளா..? " என்று முடியாமல் ௬றியவர் அலுப்புடன் கண்களை மூடிக் கொண்டார்.. 

நண்பரின் இயலாமையை கண்டு மனம் கசிந்த பாலு அவர் அருகில் அமர்ந்து அவர் கையை பற்றிக்கொண்டார்.

"சரி... சரி.. , ஏதோ.... உன்னை இந்த நிலைமையிலே பாத்தது மனசு தாங்கலே, என்னாலே முடியலே சதா.. அதான் சொல்லிட்டேன்.. இது  இந்த சுசீலாவுக்கும், ஏன் அவ புருஷன் குமாருக்கும் தெரியும். போன வாரம் குமார் கூட உன் பையனோட குணத்தை பத்தி என்கிட்டே சொல்லி எவ்வளவு வருத்தப்பட்டு பேசினான் தெரியுமா? இன்னொரு விஷயம், இந்த வீட்டை வித்துட்டு சென்னைக்கே உன்னையும் ௬ட்டிக்கிட்டு போக போறானாம்.... . உன்கிட்டே அது பத்தி சொல்லி இந்த வீட்டை விக்கிறதக்கு உன் சம்மதத்தை எப்படியாவது வாங்கனுன்னு குமார்கிட்டே உன் பையன் சொல்லியிருக்கான் தெரியுமா... ? நீ வாழ்ந்த இந்த வீட்டை விட்டு, இந்த ஊரை விட்டு, ஏன், பாசத்துடன் பார்த்து பார்த்து வளர்த்தியே.. இந்த மரத்தை விட்டு, எங்களையெல்லாம் விட்டு எப்படி போவே சொல்லு.... நாங்களும் உன்னை விட்டுட்டு எப்படி இருப்போம்? இத்தனை வருஷ பழக்கத்தில் உன்னைப் பார்க்காமல், சந்தர்ப்ப சூழ்நிலையில், வாரக்கணக்கில், ஏன், மாதக்கணக்கில் கூட இருந்திருக்கிறேன்.. . ஆனால், ,உன்னை விட்டு நிரந்தரமாக....... எப்படி சதா?" மேற்கொண்டு பேச முடியாமல் குரல் தளுதளுக்க கண்கள் கசிய நண்பரின் கையை இறுக பற்றிக் கொண்டார் பாலு.

நண்பரின் பாசம் சதாசிவத்தின் உள்ளத்திலும் இடம் பெயர்ந்தது. ஆறுதலாக பாலுவின் தோளில் தட்டியவர் தன் கண்ணில் வழிந்த நீரை துடைத்தவாறு, "வருத்தபடாதே பாலு...... நான் உங்களையெல்லாம் அப்படி விட்டுட்டு போயிடுவேனா.... , ஆனாலும் என் மகனின் பேச்சிலும் நியாயம் இருக்கு.... அவனுக்கு வேலை உயர்வில் சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். அவன் எனக்காக அதை வேண்டாமென்று மறுத்து என்னுடன் தங்கி விட்டால், நானே அவன் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பேனில்லியா... அவன் என்னிடமும் விபரங்கள் சொல்லி வருத்தபட்டு, என்னையும் விடமுடியாமல்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறான். மற்றபடி அவனிடம் எந்த தவறுமில்லை,... இனியாவது அவனை புரிந்து கொள் ... " என்று மகனுக்காக எப்போதும் போல் பரிந்து பேசினார்

தொடர்ந்து வரும்.....