Tuesday, October 19, 2021

ரெசிபி படங்களின் அலப்பறைகள்.

 பூரிக்கும் பூரியுடன் கோஸ் கூட்டு.



அன்பான வணக்கம் சகோதர சகோதரிகளே. 

அனைவரும் நலமா? அனைவருடனும் நலம் விசாரித்து உரையாடித்தான் வருகிறேன். ஆனாலும், நான் இங்கு வந்து ரொம்ப நாட்களாகி விட்டது. அதனால், இந்த தளத்திற்கு வருகை தந்து படிக்கும் உங்கள அனைவரையும் நலம் விசாரிப்பது முறையல்லவா?  கடந்த  வாரங்களில் ஒரு திங்களில் திங்கப் பதிவாக எ. பியில் சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களின் அருமையான செய்முறையில் அமைந்த கோஸ் புலாவ்வை ரசித்து படித்ததும் மனதுக்குள் , யதேச்சையாக என் டிராப்டில் நான் சும்மா எடுத்து சேகரித்து வைத்திருந்த கோஸ ரெசிபி படங்களைப் பற்றிய நினைவுகள் வந்தது. அப்போதே சென்று  பார்த்தும் பார்க்காத மாதிரி அமைதியாக அவைகளை பார்வையிட்டு விட்டு வந்து விடலாமென்று படங்களை பார்வையிட ஆரம்பித்தேன். உடனே, அவைகள் தாங்க முடியாத சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டன. 

"என்ன ஒரே சந்தோஷம்..?" என நான் புரியாமல் மீண்டும் அமைதியாக கேட்டவுடன், "நீண்ட நாட்கள் கழித்து எங்களை பார்க்க மறுபடி வந்திருக்கிறாய்.... இன்று எங்களை  வெளியே கை கோர்த்தபடி  உலாவ விடுவாய் அல்லவா?" அந்த நம்பிக்கையில் பிறந்ததுதான் இந்த மகிழ்ச்சி... . "என்றது கோரஸாக. 

" அட... .! நான் ஏதோ ஒரு ஆர்வத்தில் உங்களை என் கைப்பேசியில் வளைத்து சிறை பிடித்து, இந்த சிறையிலும் அடைத்து விட்டேன். இந்த உங்களின் பயன்பாடுகள் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் அனைவருமே அறிந்ததுதான்...! இதையெல்லாம் போய் பிரகடனப்படுத்தி எழுதி உங்களை சிறப்பித்து வெளியே நடமாட விடுவேன் என கனவில் கூட நினைக்காதீர்கள்... . " சட்டென பதில் தந்த என் பேச்சு சற்று காட்டமாக இருந்தது போலும்..

" ஆமாம். ..காற்றில்லாத இந்த அறையில் ஏகப்பட்ட எங்கள் உறவுகளுடன் கிடந்து தவிக்கிறோம்...எப்போதடா வெளியேறுவோம் என வெளியே செல்லும் ஆவலுடன் காத்திருக்கும்  நாங்கள் ஒவ்வொரு நாளும் தூக்கமில்லாது விழித்தபடிதான் உள்ளோம். இதில் எங்களுக்கு கனவு வேறேயா.. .  ?" என் கோபமான பேச்சில் அவைகள் முணுமுணுப்பாக பேசிக் கொண்டன. 

" என்ன.. முணுமுணுப்பு..? வித்தியாசமாக நான் ஏதாவது உங்களை வைத்து புதுப்புது ரெசிபிகளை செய்திருந்தால் எப்போதோ,, என்  சொந்த காணி நிலத்திலும், வரவேற்கும் எ. பியின் வளாகத்திலும் உங்களை சுதந்திரமாக நடமாட விட்டிருப்பேனே..!  எடுத்தது எல்லாம் அத்தர் பழசுதான். இதைப்போய்  எப்படி உங்களுக்கு பொருத்தமாக வார்த்தைகளை ஜோடித்து உங்களை அலங்காரமாக்கி வெளியில் விடுவதாம்......? பேசாமல் இங்கேயே இருங்கள்...அவ்வப்போது நான் மட்டும் வந்து பார்த்துக் கொள்கிறேன். "என் அசுவாரஸ்யமான பேச்சில் அவைகள் சிறிது நேரம் மெளனமாயின. 

தீடிரென சலசலப்பு அதிகமாயின. அதில் பூரி படங்கள் கொஞ்சம் ஆணவத்தில் தோய்தெடுத்த மாதிரி, "என்ன. .. இப்போது நாம் அழகாக இல்லையா? அதுவும் நான்...!! ஏதோ  இவர்கள் இதுவரை எழுதி கிழிக்கும் அழகிற்கு நம் உதவியால்தான் மற்றவர்களுடன் அதை பகிர்ந்து திருப்தி அடைய முடிந்திருக்கிறது... அதையெல்லாம் மறந்த மாதிரி என்ன ஒரு அகங்கார பேச்சு பார்த்தாயா? இதற்குத்தான் நாம் இவர் நம்மை படங்கள் எடுக்கும் போது ஒத்துழைக்காமல் இருக்க வேண்டுமென்றேன். கேட்டீர்களா.. ?"  என்றபடி தன் சகாக்களுடன் என் காதில் படும்படி இரகசியமாக பேசின. 

" ஆமாம்... உங்களால்தான், உங்கள் புண்ணியத்தால்தான் ஏதோ கிறுக்கி தள்ளுகிறேன்.. அதற்கென்ன இப்போது...? அதற்காக.... "

" இல்லையில்லை... இந்த மாதிரி எங்களை சிறை வைத்துக் கொண்டு இருப்பதை விட நாங்கள் உருவாகிய விதத்தை வெளிக்காட்டினால், உங்களுக்கும் கொஞ்சம் பேரும்...புக.... ." மற்ற சகாக்கள் பூரிக்கு பரிந்து முன் வரும் முன் இடைமறித்தேன்.. 

" பேரும் புகழுமா. .? இருக்கிற கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுக்காலாம்'னு பார்க்கறீங்களா. . ? என நான் கேலியாக கேட்டவுடன், 

"புகழ்ச்சிகளா? அந்த ஆசைகள் வேறு இருக்கிறதா என்ன? இந்த மாதிரியான டயலாக்கெல்லாம் நாங்கள் எவ்வளவு கேட்டு பார்த்தாச்சு தெரியுமா? ஏதோ... எங்கள் சாக்கு வைத்து உங்களுக்கும் அது கிடைக்குமா என யோசிக்கிறோம். அது போகட்டும்.... இப்போ எங்களுக்கு வேண்டும் சுதந்திர காற்று... இல்லாவிட்டால் எங்கள் சங்கத்தில் முடிவெடுத்து இனி நீங்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கு சிக்காத வகையில் என்ன செய்யலாம் என ஆலோசிப்போம்..." அவைகள் பேச்சில்  இப்போது பாரதியின் கனத்த  காட்டம் அதிகமாக தெரிந்தது. 

" சங்கமா? அப்படி வேறு வந்தாச்சா? சரி.. சரி.. நாம் பகை மறந்து சமாதானமாகி போவோம்...! என் மன/உடல் உபாதைகளில் என்னால் இதுவரை உங்களை கண்டுக்காமல் இருந்து விட்டேன்... அது என்னவென்றால், என நான் பச்சைக் கொடி காட்டி "பாக்யராஜ் பாணியில் என் சோக கதையை கேளு தாய்க்குலமே... ."  என நான் ஆரம்பிப்பதற்குள்," அடாடா.. நிறுத்து...!! யாருக்கு வேண்டும் உன் சோகக் கதைகள்...? அந்த நேரத்தில் சீக்கிரம் எங்களை அலங்கரிக்கும் வேலையை ஆரம்பி..ம்ம்ம்." என மிரட்டலான குரலில் கட்டளையிட்டபடி வரிசையில் வந்தன படங்கள். 

வேறு வழி...? நான் மாட்டிக் கொண்டதைப் போன்று நீங்களும் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான்.. என உள் மனசு சிந்திப்பதற்குள் கை தட்டச்சில் வார்த்தைகளை பதிய ஆரம்பித்து விட்டன. என்றேனும் மனசு சொல்வதை  நாம் கேட்டால்தானே ... :) ஆனாலும், ஒரு சந்தோஷம். ( இது நமக்கு மட்டுந்தான்.. ஹா.ஹா.ஹா ) இரண்டுமே அனைவருக்குமே தெரிந்த ரெசிபிதானே என்று படங்களின் விவரணைகளை வார்த்தைகளை கொண்டு அலங்கரிக்கவில்லை. படங்களை மட்டும் கோர்வையாக்கி  தந்திருக்கிறேன். (அந்தக்கால படம் பார்த்து புரிந்து கொள்வது போல..புரிந்து கொள்ள வேண்டும்  .. 😇😇.. ) என்ன....! இதில் இந்தப் படங்களுக்குதான் இன்னமும் கோபங்கள் அதிகரித்திருக்கும்.... அதையும் (நாம்தான்) நீங்களும் என்னுடன் சேர்ந்து அதற்கு  ஆதரவான கருத்துக்களை 👏👏 தந்து  சமாதானமாக்க வேண்டும்.  எனக்காக செய்வீர்களா.. ?. 🙏. 





பி. கு  .  இந்த பதிவை எப்போதோ எ. பியில் வல்லி சகோதரி பதிவை ரசித்ததும் எழுதி விட்டேன். ஆனால் என் பேத்திக்கு தீடிரென உடல் நிலை சரியில்லாமல் போனதினால், வெளியிட முடியவில்லை. இப்போது அவள் உங்களைனவரின்  அக்கறைபான ஆசிர்வாதங்களில் நலமாகி வருகிறாள். நன்றி. இதைப் படிக்கும் அன்பான உங்களனைவருக்கும் என் நன்றிகள் எப்போதும். 🙏. 

நன்றியுடன் 
உங்கள் சகோதரி 
கமலா ஹரிஹரன். 

Monday, October 11, 2021

நடப்பதெல்லாம் நலமாக வேண்டும்.

 வணக்கம் சகோதர சகோதரிகளே..

அனைவருக்கும் நவராத்திரி  நல்வாழ்த்துக்கள். அனைவரும் இந்நன்நாட்களில் அம்பிகையை வழிபட்டு, நலமாக வாழவும், உலகம் நன்மைகள் பெறவும்,  அந்த மகிஷாசுரமர்த்தினியை, மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். 

தொடர்ந்து ஒரு வார காலமாக என்னால் வலையுலகிற்கு வர இயலாமல் போய் விட்டது.  சென்ற ஞாயறன்று இரவு மணி ஏழு அளவில் என் பேத்தி( மகள் வயிற்றுப்பேத்தி)  மகன் வயிற்று பேரன் பேத்தியுடன் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக  கட்டிலிலிருந்து வாட்ரோப் பக்கமாக கீழே விழுந்து விட்டாள். விழுந்ததில் வாயெல்லாம் ரத்தமாக இருந்ததை கண்ட நாங்கள் எங்கு அடி எனத் தெரியாமல் அனைவரும் பதறி விட்டோம். உடன் மகளும், மகனும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அன்று ஞாயறாகையால்  உடனடியாக சரியான மருத்துவர்களை சந்திக்க இயலவில்லை. காயத்தை சுத்தப்படுத்தி வெறும் பிளாஸ்டர் போட்டு மறுநாள் காலை வரச்சொல்லி அனுப்பி விட்டார்கள். அன்று இரவு 12மணி வரை இங்கு பேய் மழை வேறு. . சென்றவர்கள் திரும்பி வர இயலாமல் ரொம்பவே படுத்தி எடுத்து விட்டது. மறுநாள் காலை அவர்கள் வரச் சொன்ன நேரத்தில் குறிப்பிட்ட டாக்டரை சென்று சந்தித்ததில், வாயின் மோவாய்கட்டைக்கு கீழ் உதட்டின் உட்பகுதியில், நல்ல அடி (பற்கள் குத்தி) என கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக மூன்று தையல் போட்டு மருந்து கொடுத்து  கொடுக்கச் சொல்லி அனுப்பினார்கள். நான்கு பற்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. அது இனி விழுந்து முளைக்கும் பற்கள் என்பதால் அவ்வளவாக பெரிய பாதிப்பு ஏற்படாது என்றார்கள். மோவாய்கட்டை கீழ் உதட்டின் வெளிப்பக்கமும் காயம்.. அதை இரண்டுடொரு நாள் கழித்து பார்த்து பிறகு  வேண்டுமானால் தையல் போடலாம் என்று சொல்லியும் அனுப்பினார்கள். 

எனக்கு ஒரு வார காலமாக ஒரே டென்ஷன். , சிறு வயதில் நானும், சரி... எங்கள் குழந்தைகளும் சரி, கீழே விழுந்து எழுந்து காயங்களை சந்தித்து வளர்ந்தவர்கள்தான். ஆனால், இப்போது என்னால் இதையெல்லாம் சந்திக்க உடம்பிலும், மனதிலும் கொஞ்சமேனும் திராணி இல்லை. கண்குத்தி பாம்பாக குழந்தைகளை கவனித்து வரும் போதே இப்படி விதி அந்த சமயத்தில் கண்களை கட்டி விட்டு வேடிக்கை பார்த்து விட்டதே  என ஒரே கவலை.. வருத்தம். 

6 வயது குழந்தை அந்த தையல்வலிகள், பல் வலிகள் என பல வலிகளை  எப்படி தாங்கினாளோ என நினைத்து நினைத்து மனம் துவண்டு விட்டது. நான்கு நாட்கள் அவள் அன்ன ஆகாரம் எதுவும் சாப்பிட முடியாமல் அவஸ்தைபட்டு விட்டாள். சாதாரண நாட்களே அவள் உணவை அவ்வளவாக  விரும்பி சாப்பிட மாட்டாள். மிகவும் ஒல்லியாகத்தான் இருப்பாள். 

அதன் பின் சென்ற வியாழன்று அவர்கள் கூறியபடி மருத்துவரிடம் சென்ற போது வெளிப்புற காயம் ஆறிவருகிறது எனவும், தானாகவே மூடிக்கொண்டு விடும் எனவும் சொன்னதில், ஒரு ஆறுதல் வந்தது. தையல் ஏதும் தேவையில்லை என்றதும், ஒரு பதற்றமும் நீங்கியது. இப்போது இரண்டு நாட்களாக குழந்தை நலமாகி வருகிறாள். ஏதோ சாப்பிடுகிறாள்." தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று" என்பதை போல குழந்தை நல்லபடியாக உடல்நலம் தேறி வருவது கண்டு இப்போது நிம்மதி வருகிறது. 

அதனால்தான் என்னால் வலைத்தளத்திற்கு வர முடியவில்லை. நான் வராத காரணத்தை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில், இதை என் தளத்தில் எழுதி இருக்கிறேன். கடவுளின் அன்பான அக்கறையினாலும், உங்கள் அனைவரின் நல்ல நட்புறவுகளின் அன்பினாலும், அவள் இனிவரும் காலங்களில் ஆயுள், ஆரோக்கியத்தோடு, நோய் நொடி  ஏதுமின்றி திடகாத்திரமாக வளர்ந்து நல்ல வாழ்க்கையை வாழ வேண்டுமென இந்த நவராத்திரியில் அம்பிகையை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். விரைவில் அனைவரின் பதிவுகளுக்கும் இயல்பாக வருகிறேன். அனைவருக்கும் என்  அன்பான  நன்றிகள். 🙏.

 நன்றியுடன், 

உங்கள் சகோதரி

கமலா ஹரிஹரன்.