Monday, December 11, 2023

விழுவதும், எழுவதும் ஒரு வரமேதான்.

அனைவரும் நலமாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். 

அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான வணக்கங்கள். 

நான் எழுதுவது பதிவும் அல்ல.. ஒரு கடிதம்...அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல... என் உள்ளம்.... (சிவாஜியின் பழைய பாட்டு நினைவுக்கு வருகிறதா? :)))))) ) 

அனைவரும் நலமாக உள்ளீர்களா? ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகள் இரு(வ)ந்து கொண்டேதான் இருக்கிறதல்லவா? வானிலை மாற்றங்கள் வேறு புயல், வெள்ளமென மிகுந்த சிரமங்களை தந்து விட்டன. உங்கள் அனைவரின் பதிவுகளையும் அவ்வப்போது படித்துக் கொள்கிறேன். உடன் வந்து பதில்கள் தர இயலவில்லை. மன்னிக்கவும் .🙏. 

என் சென்ற பதிவுக்கு உடனடியாக வந்து ஆறுதலாக கருத்துரைகள் தந்த அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். அதற்கு பாதிக்கு மேல் விரைவாக பதில் கருத்துக்கள் தர இயலவில்லை. அதற்கும் உங்களனைவரின் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். 🙏. நேரம் கிடைக்கும் சமயம் கண்டிப்பாக தருகிறேன். 

அப்போது வேலைகள்....வேலைகள் என நாட் முழுவதும் ஆக்கிரமித்து கொண்டதில் நேரங்கள் பறந்து விட்டன. மகன் குடும்பம் வருகையால், வேலைகள் சரியாக இருந்தன. ஒரே குடும்பமானாலும், அவரவர் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டுமல்லவா? அந்த எண்ணங்களின் அடிமைத்தனதிற்கு உடன்பட்டு வீட்டின் பல மாறுதல் வேலைகள் கைகளை கட்டிப் போட்டு சிறைப் பிடித்து விட்டன. பின் வந்த நாட்களில் தீபாவளி சிறப்புகள் என நாட்கள் பறக்க இடையில் எபியில் தீபாவளியன்று அனைவருக்கும் ஒரு வாழ்த்துக்களை பகிர்ந்தேன். (சகோதரர் நெல்லைத் தமிழரின் பதிவு அன்று.)  .மறுநாளிலிருந்து அவ்வப்போது அனைவரின் பதிவுகளை படித்து அனைவருக்கும் கருத்துக்கள் தர வேண்டுமெனவும் அப்போது நிஜமாகவே  நினைத்தேன். 

தீபாவளி நல்லவிதமாக கழிந்த அன்று மாலை அனைவரும் குடும்பத்துடன் வெளியே செல்லலாம் என சென்றோம்.(ஆசைப் பேய் என்னையும் உடன் அழைத்துச் சென்றது.) மல்லேஷ்வரம் பகுதியில் சாலையோர கடைகளையும், மக்கள் வெள்ளத்தையும் கண்டு களித்தபடி செல்லும், போது. ஒரு மேடான பகுதியில், (ஸ்பீடு பிரேக்கர்) கால் இடறி நான் கீழே விழுந்ததில் இடது காலில் நல்ல அடி. இத்தனைக்கும் நான் ஒன்றும் அத்தனை ஸ்பீடாக நடக்கவில்லை.:)))) (இப்படி எத்தனை தடவைதான் விழுந்து  புதையல் எடுக்க வைப்பானோ இறைவன். தெரியவில்லை.) சாலையில் விழுந்த அவமானத்துடன் எழுந்து கால் உதறி அருகிலிருந்த ஒரு கடையின் படிகளில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்கிருந்து மெள்ள நடந்து எப்படியோ வலி பொறுத்தபடி, சற்று தொலைவில் நிறுத்தியிருந்த காரில் ஏறி வீடு வந்து விட்டேன். இரவு முழுவதும் இடது கால் வலி பின்னியெடுக்க தூங்கவேயில்லை .( தீபாவளி சிவராத்திரியாக மாறி விட்டது. :))))) மறுநாளிலிருந்து  குழந்தைகள் அனைவரிடமும் காட்டிக் கொள்ள இயலாமல், நான் தவித்த தவிப்பை அந்த இறைவன் ஒருவனே அறிவான்.  (அதற்குரிய மாத்திரை மருந்து என் இயல்பான உடல்நலத்திறகு வேறு பக்கவிளைவுகளை தரும் என்பதால் நானோ எப்போதுமே மருத்துவரிடம் செல்ல அஞ்சுகிறவள்.) குழந்தைகள் ஒரு வருட இடைவெளியில் சந்தோஷமாக ஊருக்கு வந்திருக்கும் போது இப்படியாகி விட்டதே என்ற வேதனை மனதை வாட்ட அதன் பின் வந்த நாட்கள் அதே வலியுடனே பறந்தன. அப்படியும் என்னவோ நொண்டியபடி வீட்டு வேலைகள் நடந்தேறின. அதில் அவர்களுடன் இறைவன் ஆணைப்படி நாங்களும் செல்ல வேண்டிய இறைவழிப்பாட்டிற்கான ஊர்களுக்கு (எங்கள் குலதெய்வம் கோவில் உட்பட) செல்ல முடியாததால் அவர்கள் மட்டும் கிளம்பிச் சென்றனர். நான் எப்போதும் போல், வலி நிவாரண தைலங்கள்,வெந்நீர் ஒத்தடமென தந்தபடியும், காலை வலியினால் நொண்டியபடியும் வீட்டில் நடமாட்டமாக கழி(ளி)த்துக் கொண்டிருக்கிறேன். இதில் உங்களனைவரின் பதிவுகளை அதன் பின் தொடர்ச்சியாக படிக்கவும் இயலவில்லை. (வலிகள் மிகுந்த மனது தான் காரணம்.) மன்னிக்கவும். 🙏. 

இப்போது டிசம்பர் 12 வந்தால் ஒரு மாத காலமாகும் அந்த இடது கணுக்கால் வலி வீக்கம் குறைந்து சற்று மட்டுப் பெற்று வருகிறதென்றாலும், இன்னமும் "நான் உள்ளேன் அம்மா" என தினமும் ஆஜர் கூறியபடி உள்ளது. 

இவ்வாறு என்னையும் உடன்  அழைத்துச் செல்ல முடியாததால் மன வருத்தமடைந்திருந்த மகன் மருமகள் இருவரும் அவர்களின் இறை சுற்றுலா திட்டத்தில் இப்போது வேறு ஒரு மாறுதல் பிளான் செய்து இன்னமும் அவர்கள் செல்லாத ஊர்களுக்கு திருச்சியிலிருந்தபடி அழைப்பு விடுத்திருக்கின்றனர்." அப்போது வேண்டாமென தடுத்த இறைவன் இப்போது அவர்கள் வாயிலாக இன்னமும்  விடாமல் அழைக்கிறான். " என்ற எண்ணத்தில் நாங்களும் இங்கு  பிராயணத்திற்கு யத்தனம் செய்கிறோம். இனி அனைத்தும் நல்லவையாக நடந்திட இறைவன் அருள வேண்டும். எப்படி இந்த  பிராயணங்களை சந்தித்து இறைவனை காணப்போகிறேன் என மனது சிறிது  சஞ்சலபட்டாலும், "இறைவன் என்னை அவன் ஆணைப்படி நடத்துவான்" என்ற நம்பிக்கையும்  உள்ளது. 🙏. 

இப்படியாக இந்த வருட ஆரம்பத்தில், வலது காலில் பட்ட  அடியுடன் ஆரம்பித்து, இறுதியிலும் இடது கால் அடியுடன் இந்த ஒரு வருட காலம் நகர்கிறது. கொஞ்ச வருடங்களாக இப்படி கால்களில் அடிபடுவது ஒரு தொடர் கதையாகவம் உள்ளது. வரும் புத்தாண்டிலிருந்தாவது இந்த தொந்தரவுகள் நீங்கிட இறைவன் அருள்வான் என நினைக்கிறேன். நம்புகிறேன். 

இதுவும் உங்கள் அனைவருடனும் பகிரும் ஆசையால் எழுந்த பதிவுதான். மனதிற்கு பிடித்த நட்புகளிடம் மனம் விட்டு பேசினால் ஒரு மனபலம் வருமல்லவா...? 

அனைவருக்குமே. 

தேக பலம் தா.. 

பாத பலம் தா.. 

என்று இறைவனை வேண்டியபடி உள்ளேன். 

"நமோ, நமோ நாராயணா" பாடல் தினமும் மனதில் ஒலித்தபடி உள்ளது. 

அதில் வரும், "நலம், துயர் என்பதெல்லாம் லீலையே ஹரிநாராயணா" என்ற வரிகள் எத்தனை சாஸ்வதமானவை. எனக்குப் பிடித்த பாடல் இது. 

வரும் 24 ம் புத்தாண்டு நல்லபடியாக பிறந்து அனைவரையும் மகிழ்விக்க பிரார்த்தனைகள் செய்கிறேன். 

பி. கு. இதை படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். இந்தப் பதிவிற்கும், தங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் உடனுக்குடன் பதில் தர சற்று தாமதமாகும் எனவும் சொல்லிக் கொள்கிறேன்.(அப்படியே தந்து விட்டால் நல்லது. அனைத்தும் "அவன்" லீலையே..) அதற்கும் சேர்த்து தங்கள் அனைவரின் மன்னிப்பை கோறுகிறேன்🙏. . 

என்னை மறவாத அன்புள்ளம் கொண்ட உங்கள் அனைவருக்கும் எப்போதும் என் பணிவான நன்றிகள்.