Sunday, October 30, 2022

குருவே சரணம். குகனே சரணம்.

கந்தா சரணம். 

கதிர்வேலா சரணம். 

கடம்பா சரணம். 

கார்த்திகை மைந்தா சரணம்.

இன்று கந்த சஷ்டி பெருவிழா கண்டு கொண்டிருக்கும்  அனைவருக்கும் வணக்கம். 

கந்தனருள் எங்கும் பரிபூரண ஒளி வீசி, மனங்குளிர மணம் பரப்பி அகிலமெல்லாம் தழைத்தோங்க மனமாற அவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். 

அவ்வாறு மனங்குளிரும் பொழுதான இன்று  மனம் நிறையும்படியான எனக்கு மிகவும் பிடித்த சில முருகன் பக்திப் பாடல்களை அவனருளால் பகிர்ந்துள்ளேன். இந்தப் பாடல்கள் திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான குரலில் கேட்கும போது, அருள் சுரக்கும் முகத்தோடு நமக்கு அத்தனை அருளையும் வாரி வழங்கும் கந்தனை, அருகிலிருந்தே கண்டு அவனை நம் மனதோடு  ஒருமுகப்படுத்தி மெய்யுருக நாமும் பாடுவது போன்ற ஒரு மன நிறைவைத் தரும். ஏனென்றால் நம்  "உள்ளமெனும் கோவிலில் உறைபவன் அவன்தானே.." என்னுடனே இதை அவ்வாறே கேட்டு ரசிப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  


நம் வினைகள் யாவையுமே தன் கை வேல் கொண்டு களைபவன் முருகன். அதனால்தான் "வேலிருக்க வினையுமில்லை. மயிலிருக்க பயமுமில்லை." என்று அவனைப்பாடித் தொழுகிறோம். எந்த நாளும் அவனை பணிந்து தொழும்  பணிவொன்றையே அவன் நமக்கு தந்தருள வேண்டும். "உனைப் பாடும் பணிவொன்று போதும்."என்ற  இந்தப்பாடலில் அவனை எந்நாளும் பணிவதையே  வேண்டுகிறோம்.🙏. 


இந்தப்பாடலில் "எங்கெல்லாம் தேடுவதோ"எனும் போது மனமுருகிப் போகும். நிலையற்ற இந்த வாழ்வில் மாறி மாறி வரும் நிரந்தரமான ஆசைகளுடன் வாழும் முறை தெரிந்த நாம் இறைவனை தேடிக் கொண்டேதானிருக்கிறோம். நம்முடைய தேடுதலின் தவிப்பறிந்து அதற்கான ஒரு நேரத்தை வகுத்துக் கொடு இறைவா..! என வேண்டிக் கொண்டேயிருக்க வேண்டும்.அந்த வேண்டும் மனப்பான்மையை இந்தப்பிறவியிலேயே தந்து விடு என்பதுதான் நம் ஆசை கலந்த வேண்டுதலாக இருக்க வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். 🙏. 


இன்று நாங்கள் இங்கு அடிக்கடி சென்று வந்த சண்முகா கோவில் புகைப்படங்களை போட்டு இன்றைய நன்னாளில் பதிவாக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால், "அவன்" நினைப்பு இன்று அவனைத் தொழும் அழகான பாடலாக இருக்க வேண்டுமென்பதுதான்..! என்றும் நம்மை ஆட்டுவிப்பவன் "அவன்தானே".. "அவன்" நினைப்புதான் என்றும் சந்தேகமற வெற்றிக் கொள்ளும். அதனால் இந்த அழகான பாடல்கள் கொண்ட அவசர பதிவு. 

இந்தப்பாடல் "மயிலாக நான் மாறவேண்டும். உன்னைத் தொழ உன் அடியார்கள் ஏறி வருகின்ற படிகளாக நான் மாற வேண்டும்." என்று வருகிறது. நம் விருப்பங்களை உளம் உருக நம்பிக்கையுடன் கேட்டால் அவன் நிச்சயம் தந்து விடுவான். 🙏. 




இதோ பாடல். முருகனின் அருகிலேயே  நாம் என்னவெல்லாமாக பிறந்து இருக்க வேண்டும் என்ற ஆசை கலந்த வேண்டுதலைக் கொண்ட பாடல். 🙏. 


வீடியோ பாடல்கள் நன்றி கூகுள். 

அழகான பாடல்களை கேட்டு ரசித்து அவனருள் பெற்ற அனைவருக்கும் மனம் நிறைவான நன்றிகள். 🙏.

Tuesday, October 25, 2022

சிவகாமியின் பந்தம் 4 ம் இறுதிப்பகுதி.

 இந்தக் கதையின்  3 ம் பகுதியின் சுட்டி. அதற்கு முந்தைய பகுதிகளான பகுதிகளான 2ஆம், 1ஆம் பகுதிகளின் சுட்டி. 

அக்கா.. நான் இப்போ நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். நீ உடன் பிறந்த எங்களுக்காக உன் வாழ்க்கையே விட்டுத் தந்திருக்கிறாய்..! அப்பாவின் முடிவையும், அதனால் நீ பட்ட கஷ்டங்களையும் எனக்கு ஒரளவு விபரம் தெரிந்த பிறகு அம்மா இருக்கும் போது என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறாள்.....! முதலில் நீ, நான் என் விருப்பத்தை சொன்னவுடன்  இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் இருந்ததற்கு என்ன காரணம் என எனக்குத் தெரியாது. ஆனால், அதன் பின் நான் ஊரிலில்லாத போது இவள் வீட்டுக்கு சென்று பேசி, நீ கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டதற்கு காரணம் மட்டும் இவளாலேயே  தெரிய வந்தது. அதனால் நீ விரும்பிய நடராஜன் மாமாவின்  சொந்த  மகளல்ல இவள்....! ஒரு விபத்தில் உயிரிழந்த தன் அக்காவின் மகளான இவளை  உன்னைப் போலவே  அவரும் தன் சொந்த  மகளாக  நினைத்துக் கொண்டு திருமணமே செய்து கொள்ளாமல் வளர்த்து வருகிறார் என்ற உண்மை தெரிந்ததும், நீ உன் முடிவை மாற்றிக் கொண்டாய். .! அப்படித்தானே..... அக்கா.. !  கணேசன் பேச பேச சிவகாமி  அதிர்ந்தாள். .

சற்று சுதாரித்தபடி, "சரி..!! சரி..!! எப்படியோ எல்லாவற்றையும் தெரிந்து  வைத்திருக்கிறாயே. ஆமாம்.. எல்லாமே உண்மைதான். . .!!! நான் முதலில் மறுத்ததற்கு அதுதான் காரணம்...! உன் மனைவி தன் தந்தையெனக் கூறி நடராஜனின் போட்டோவை உன்னுடன் வந்த அன்று காண்பித்ததும், என் மனதே சரியில்லை.. . ...! என் பழைய கால வாழ்வின் நினைவுகளோடு சம்பந்தப்பட்டவரின் மகள் என்பதால், மீண்டும் அவரை எப்படி சந்திப்பது, எப்படி பேசுவது என்றுதான் முதலில்  உன் திருமணத்திற்கு தடை சொன்னேன். ஆனால்,.. ..!! என்றவளை அவசரமாக இடைமறித்தான் கணேஷ். 

 "அதுதான் இப்போ உண்மைகள் எல்லாம்  தெரிய வந்துடுச்சே அக்கா....!!  நடராஜ மாமா இவளின் சொந்த அப்பா இல்லை. .! அவரின் அக்கா பெண்தான் இவள் என்ற உண்மை உனக்கு மட்டுமில்லாமல், எங்களுக்கும் தெரிய வந்துடுச்சே.. .!! நீ இத்தனை காலம் எங்களுக்காக உன் திருமணத்தை ஒதுக்கிய மாதிரி, அவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்தை காப்பதே கடமையென வாழ்ந்து வந்துள்ளார் என்பதை அறிந்த பின், நீங்கள் இருவரும் இனியாவது  திருமணம் செய்து கொண்டு  எங்களுக்காக சேர்ந்து வாழலாம் இல்லையா? அதைத்தான் நான் தரும் பரிசென்று உனக்கு கூறி, உன்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கலாம் என நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தை உன்னிடம் இன்று கூறி சம்மதம் பெறவும்  நினைத்தோம். ..!" என்றபடி தன் மனைவியை பார்த்தான் கணேசன்.

கணநேரம் மௌளனமாக இருந்த சிவகாமி," தம்பி உனக்கு இன்று திருமணம் உன் விருப்பப்படி நடந்தற்கே நம் அம்மாதான் காரணம் தெரியுமா?  நான் இல்லை.. " என்றவள் அன்று அம்மாவின் கடிதத்தை படித்த விபரங்களையும், நடராஜனின் கடிதத்தை சேர்த்து வைத்து படித்து புரிந்து கொண்டதையும், அதன் பின்னும்  ஆயிரம் தயக்கங்களுடன், நடராஜனை சந்தித்துப் பேசி," நம் தயக்கங்களுக்காக நம் குழந்தைகளின் வாழ்க்கையை பலியிட வேண்டாமென கலந்தாலோசித்து தீர்மானித்து அவர்களின் திருமணத்திற்கு நாள் குறித்ததையும்" விளக்கமாக கூறக்கூற கணேசன் ஆச்சரியமாக கேட்டபடியிருந்தான்.

"அக்கா.  .. எவ்வளவு நடந்திருக்கு.!!!!.நீ ஒன்றுமே கூறவில்லையே. .?  சரி.. . அப்பவும்  நீ சொன்ன பிரகாரம் அவர் சிவகாமி இல்லாத நடராஜனாகத்தானே உன்னை  மறுபடி சந்தித்திருக்கிறார். அப்போதும் உன் மனம் சஞ்சலத்திலிருந்து விடுபடவில்லையா? எங்களுக்காகவாவது நீயும், அவரும் உங்கள் வயதின் காரணத்தை ஒரு பொருட்டாக கூறாது அவரை திருமணம் செய்து கொண்டு நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருக்கலாம் இல்லையா? "கணேசன் குரலில் ஆர்வம் மேலிட கேட்டான். 

தம்பி.. இது என்றுமே சாத்தியமில்லையடா... மேலும்,," என்று பேச ஆரம்பித்த அக்காவை பேச விடாமல்  தடைசெய்தபடி "அக்கா.. நீ கொஞ்சம் உன்னை, உன் மனதை அமைதிப்படுத்திக்கொண்டு எனக்காக யோசனை செய். உன் வாழ்வில் உன் விருப்பத்தை நம் அப்பா வேண்டாமென மறுத்த அந்த நிகழ்வுக்குப் பின் உனக்காக எதுவும் விருப்பப்படாமல், எங்களுக்காகவே வாழ்ந்து வந்திருக்கிறாய்..!! உன் வாழ்க்கையே இதுவரை ஒரு தவமாக கழிந்திருக்கிறது . இப்போது அந்த தவத்தின் பலன் கைமேல் கிடைக்கும் போது ஏன் வேண்டாமென மறுக்கிறே...!" என்றபடி  அவள் கைகளைப்பற்றி கெஞ்சாத குறையாக கூறினான் கணேசன். 

" தம்பி.  .. நீ இன்னமும் என்னைப் புரிந்து கொள்ளவில்லையோ என எனக்கு இப்போது தோன்றுகிறது. தவமாக வாழ்வை கழித்து விட்டேன் என்று கூறுகிறாய்...! அப்படி பார்த்தால் அந்த தவத்திற்கு பலனை எதிர்பார்த்தா அந்த தவத்தை மேற்கொண்டேன்.. . இல்லையே...! ஒருவர் தான் செய்யும் தவத்திற்கு பிரதிபலனாக எந்தவொரு பலனையும் எதிர்பாராது தவத்தை மேற்கொள்வதுதான் அந்த தவத்திற்கே ஒரு சிறப்பு தெரியுமா? 

அன்று அவரை அவர் கடிதத்தில் எழுதியிருந்தபடி சந்திக்கும் போது உண்மையிலேயே எனக்கும் ரொம்ப பெருமையாகத்தான்  இருந்தது. அவருக்கும் அது மனதுக்குள் சந்தோஷத்தை அளித்திருக்கும் என்பது அவரின் முக பாவத்திலும், பேச்சிலும் உணர்ந்து கொண்டேன். ஆனால், நாங்கள் மணம் செய்து கொள்ளாமல் ஒருவரின் நினைவுகளுடனே வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டோம். இறைவன் எங்களுக்காக  அளித்த செல்வங்களாக உங்கள் இருவரையும் ஏற்று வளர்த்து ஆளாக்கி விட்டோம் என்ற சந்தோஷத்தை தவிர்த்து, அவரிடமோ, என்னிடமோ வேறு எந்த உணர்ச்சிகளும் அன்று இடம் பெறவில்லை. அதனால் இத்தனை நாள் நாங்கள் மனதால் வாழ்ந்த வாழ்க்கைக்கு திருமணம் என்ற முடிச்சிட்டு கொச்சைப்படுத்த நாங்கள் இருவருமே விரும்பவில்லை..! இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு....!!!! இனி எங்கள் சந்தோஷம் உங்களிருவரின் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை மட்டுந்தான்..!! 

நீங்கள் சந்தோஷமாக வாழ்ந்து அனுபவிக்கும் வாழ்வை கண்குளிர கண்டு நாங்களும் சந்தோஷம் அடைவது மட்டுந்தான் மிகுதி இருக்கும் எங்கள் வாழ்வின் சந்தோஷமும். எங்கள் பந்தமும் உங்கள் இருவருடன் மட்டுந்தான்...! !! இதை அன்றே நாங்கள் தெளிவாக பேசி முடித்து விட்டோம். இனி இதைப்பற்றி வேறு எதுவும் பேசி என்னை துன்புறுத்தாதே. .!!! "  சற்று உணர்ச்சிவசப்பட்டவளாக சிவகாமி கூறி நிறுத்தினாள். 

அவளின் அழுத்தமான பேச்சின் முடிவு அவர்கள் இருவரையும் சற்றே திகைக்க வைத்தது. வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும், கவனமான அக்கறையுடனும், அழுத்தமான பொறுப்புணர்வுடனும் முடிவு எடுக்கும் தன் அக்கா ஒரு தெய்வப் பிறவியாக கணேசனின் கலங்கிய கண்களுக்கு தெரிந்தாள். அவர்களிடையே நிலவிய சிறிய மெளனம் அவளின் மன உறுதியை அங்கு ஆழமாக உழுத பெருமையில் சந்தோஷிப்பது போல் தோன்றியது. 

" அக்கா. ..! உன் மனதை புரிந்து கொள்ளாது என்னென்னவோ பேசி விட்டேன். என்னை மன்னித்து விடு..! நீங்கள் இருவரும் மனமொத்து எடுத்த முடிவு என்னை ஆச்சரியபடுத்துகிறது  இனி வரும் உன் வாழ்வில் உனக்கு  துணையாக நாங்கள் இருவரும் எப்போதுமே  உன்னுடன் இணைந்திருப்போம். இது சத்தியம் அக்கா... " என்று விழி கலங்கியபடி கூறிய கணேசனை  தானும் கலங்கிய விழிகளுடன் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள் சிவகாமி. 

அவர்களின் அன்பான பந்தம் புரிந்த மன நிறைவில், சிவகாமியின் தோளோடு தானும் அணைத்தாற் போல நின்றபடி கண்ணீர் உகுத்தாள் கணேசனின் மனைவி. 

அங்கே அவர்களின் இடையே உள்ள வாழ்வின் பந்தங்கள் புரிந்த நிம்மதியில் புகைப்படத்திலிருக்கும் தங்கள் அம்மா தான் பெற்ற செல்வங்களின் நல்ல மனதினை கண்டு நீடூழி வாழ ஆசிர்வதிப்பதை உணர்ந்தாள் சிவகாமி.

கதை நிறைவுற்றது.

இக்கதையை என்னுடன் தொடர்ந்து வந்து 4 பகுதிகள்தோறும் வாசித்து என் எழுத்துகளுக்கு பக்கபலமாக நல்ல கருத்துக்களை தந்த என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 

Saturday, October 22, 2022

சிவகாமியின் பந்தம் 3 ம் பகுதி.

இது இந்தக்கதையின் கடந்த முதல், இரண்டாம் பகுதியின் சுட்டிகள். 

1. ஆம் பகுதி சுட்டி

2. ஆம் பகுதி சுட்டி

ஆயிற்று... கணேசன் ஊரிலிருந்து அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பிய  மூன்றாம் நாள் மாலை அவன் இரவு சாப்பாட்டை முடித்தவுடன், "தம்பி உன்கிட்டே ஒன்னு சொல்லனுன்னு  நீ  ஆபீஸ் முடிஞ்சு வந்தவுடனே சொன்னேனே...  மறந்துட்டியா?" என்றபடி சிவகாமி ஹாலில் சோபாவில் அவனருகே வந்தமரவும். "ஆமாக்கா.... நினைவிருக்கு.  என்ன விஷயம்னு சொல்லு..! " என்றபடி  சோபாவில் சாய்வாக  அமர்ந்திருந்த கணேசன் சற்று நிமிர்ந்து எழுந்து அமர்ந்தான் ஆர்வமாக. 

"தம்பி.. உனக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்துட்டேன்.. என்று மகிழ்ச்சியான சிரிப்புடன் சொன்ன  சிவகாமி அவன் முகம் நொடியில் மாறுவதை கவனித்தவளாய், " என்ன பெண் யார் என இப்பவே சொல்லவா? இல்லை நாளைக் காலையிலேயே நிதானமா தெரிஞ்சுகிறயா?" என்று மறுபடியும் முகம் மலர சிரித்தபடி கேட்டாள். 

ஒரு நொடியில் தன் முக பாவத்தை சட்டென மாற்றிக் கொண்டவனாய், "இல்லையில்லை இப்பவே சொல்லேன்க்கா..." என்றான். ஆனால்  குரலில் அவ்வளவு சுரத்தில்லாதவனாக..! 

" சரி.. இப்போதே சொல்லவா? என்று புன்னகையுடன் சற்று இடைவெளி விட்ட பின் "வேறு யார்? எல்லாம் நீ பார்த்து வைத்திருக்கும் பெண்தான்....!! இப்ப உனக்கு சந்தோஷந்தானே.. .! " சிவகாமி இப்படி அவனையே ஒரு கேள்வி கேட்டதும், அவனுக்கு கால்களுக்கு அடியில் தரை நழுவுவது போல் ஒரு கணம் அதிர்ச்சி உண்டாக்கியது. 

"அக்கா. . என்னக்கா சொல்கிறாய்? என்னால் இதை நம்பவே முடியவில்லையே...!! எப்படி இந்த அதிசயம் இந்த ஒரு வாரத்தில், நடந்தது. .? அவன் வார்த்தைகள் தடுமாறியபடி சில விநாடிகள் கழிந்த பின்பாக திகைப்புடன் கேட்டவாறு விரைவாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் . அவன் முகம் அளவு கடந்த சந்தோஷத்தில் விகசிப்பதை கண்டதும் சிவகாமியின் உள்ளமும் பூரித்தது. 

தம்பி.. உன் விருப்பத்தை நான் என்றாவது மீறி சொல்லியிருக்கிறேனா ? நீயுந்தான் என் பேச்சை எப்போதாவது மீறி நடந்திருக்கிறாயா? என்னவோ எனக்கு அன்று அப்படி தோன்றியது. பின் நீ இப்போது ஊருக்கு சென்றிருந்த போது யோசித்து பார்க்கையில், உன் மனநிலையை உணராது, வேறு பெண்ணை உனக்கு மணமுடித்தால், நீ வாழ்நாள் முழுக்க எவ்வளவு மன வேதனையடையோ எனத் தோன்றியது. அதனால்தான் உடனே அவளை நீ விருப்பப்பட்ட பெண்ணை உன் அலுவலகம் சென்று சந்தித்து, என் சம்மதத்தை கூறி. உடனேயே அவள் தந்தையையும், குடும்பத்தாரையும் வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசி அவர்களின் முடிவையும் சந்தோஷத்துடன் வாங்கி வந்து விட்டேன். நீ ஊரிலிருந்து உன் வேலைகள் முடிந்து திரும்பியதும் கூறலாமென உனக்கு கைப்பேசியில் கூடச் சொல்லவில்லை. என் வருங்கால மருமகளிடமும் "நானே இதைப்பற்றி அவனிடம் முதலில் கூறுகிறேன்.நீ அப்புறமாகச் சொல்லு.. " என கேட்டு சம்மதம் வாங்கி வந்திருந்தேன்.  போதுமா? விளக்கம்.....!!"என்று ஒரே மூச்சுடன் முடித்த அக்காவின் கைகளை அப்படியே இறுக பற்றியவாறு சந்தோஷம் தாங்க முடியாமல் அவள் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான் கணேசன். 

"அக்கா..! உனக்குத்தான் என் மீது எவ்வளவு பாசம். இனி எத்தனைப் பிறவி எடுத்தாலும் உன் மகனாகவோ, மகளாவோ மட்டுமே பிறக்க வேண்டும்..!" என அவன் மனம் மானசீகமாக இறைவனை வேண்டும் போது அவன் கண்களில் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து ஓடியது. 

தம்பியின் தலையை தடவியவாறு அவன் மனதுடன்  பூத்திருந்த சந்தோஷத்தை புரிந்து கொண்ட சிவகாமியின் மனதும் ஏதும் பேச முடியாத உணர்ச்சி வெள்ளத்தில் நிறைந்திருந்தது. 

திருமணமண்டபம்  கலகலப்பாக இருந்தது. தன் தம்பியை திருமணக் கோலத்தில் பார்த்து சந்தோஷமடைந்திருந்த சிவகாமி சின்னப் பெண்ணாக மாறி அங்குமிங்கும் சென்று திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களை வரவேற்றபடியும்  வந்தவர்களை நலம் விசாரித்தபடியும் ஓடிக் கொண்டிருந்தாள். 

"அக்கா. . நான் எப்படியிருக்கேன். .? இந்த உடையில் நன்றாக இருக்கிறேனா? " என்று முகம் மலர்ந்த புன்சிரிப்புடன் கண்ணால் கேட்டுக் கொண்டிருந்த தம்பி உற்றார் உறவினர் ஆசிர்வாதங்களுடன் திருமணம் முடிந்தவுடன் மணமக்களாக  தங்கள் வீட்டுக்குத் திரும்பியதும், அம்மாவின் படத்திற்கு முன்பாக வணங்கி அவளிடம் ஆசிர்வாதம் பெற்ற பின், தன் மனைவியுடன் தன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற போது சிவகாமிக்கு உடலெல்லாம்  புல்லரித்தது. தன் உழைப்பால், தன் வாஞ்சைக்கு கட்டுப்பட்டு வளர்த்த தன் வளர்ப்பு மகனை தூக்கி நிறுத்தி கைகளால் அவன் முகம் வருடி திருஷ்டி கழித்து அணைத்துக் கொண்டாள். எதுவும் பேசாத நிலையில், பேச முடியாத தவிப்பில் அங்கு வார்த்தைகளுக்கு மௌனம் ஒரு திரை போட்டது. ஒரு நிமிடம் விழி நீரை கட்டுப்படுத்தி, அவன் மனைவியையும் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். 

"தம்பி. . .நீ நூறு வயது  உன் மனைவியுடன் நன்றாக சந்தோஷமாக இருக்க வேண்டுமடா... . !" என மனதாற வாழ்த்தியவள்,  "அம்மா இருந்திருந்தால் இப்போ எவ்வளவு சந்தோஷபட்டிருப்பாள்...! அவளுக்கு பார்க்க கொடுப்பினை இல்லாமல் போய் விட்டதே...! ஆனால்,அவள் கனவுகளை நான் எப்படியோ நிறைவேற்றி விட்டேன்..! என்றவள் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கினாள். 

"அக்கா.... அதுதான் அம்மாவுக்கு அம்மாவாக  அன்பாக இருந்து என்னை இந்தளவுக்கு நல்ல நிலைக்கு வளர்த்திருக்கிறாயே..! !மேலும் என் விருப்பமாக நான் மனதாற விரும்பியவளையும் எனக்கு வாழ்க்கைத் துணையாக்கி ரசித்துக் கொண்டிருக்கிறாய்...! இதற்கெல்லாம் இதை விட உன் அன்புக்கு பிரதியுபகாரமாக  நான் உனக்கு  என்னச் செய்யப் போகிறேன் எனத் தெரியவிலலை . ஆனாலும் இப்படி என்னை பார்த்துப்பார்த்து  வளர்த்திருக்கும் உனக்கு நான் இப்போது ஒரு சின்ன பரிசு தரப்போகிறேன். ஆனால், நீ அதை  மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்காக ஏற்றுக் கொள்வாயா? " அன்புடன பேசிய கணேசன் முகத்தில் ஒரு கெஞ்சுதல் பாவம் ஒலிப்பதை கண்டவள் "அப்படி என்னடா உன் அன்பு பரிசு.? என்றாள் வியப்பாக சிவகாமி.

தொடர்ந்து வரும். 

Friday, October 21, 2022

சிவகாமியின் பந்தம். 2 ம் பகுதி.

இது சென்ற முதல்  பகுதியின் சுட்டி

அக்கா.. எப்படி இருக்கிறாய்? இன்று கிளம்ப வேண்டியவன் கொஞ்சம் வேலைகளினால் தாமதமாகிறது. என் அலுவலக வேலைகள் முடிந்ததும், உடனே கிளம்பி வந்து விடுகிறேன். .இன்னமும் ஒரு நாளைககு மேலேயே ஆகும் போலிருக்கிறது. கொஞ்சம் பொறுத்துக்கோக்கா. " தம்பியின் குரல் வருத்தத்தில் மன்னிப்பு கேட்கும் விதத்தில் மறுநாள் பகலில் கைபேசியில் வந்தது. 

" அப்படியா? சரிடா.. இருந்து பார்த்து முடித்து விட்டு வா.! ! வேளைக்கு சாப்பிடு. வேலை இருக்குனு வயித்தை காயப்போடாதே...! எனக்கு ஒன்றும் சங்கடமில்லை. நீ நிம்மதியா வேலைகளை முடிச்சிட்டு வா...! என்றவள் அவன் தன்னிடம் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி கண் கலங்கினாள்..

"சின்ன வயதிலிருந்தே அவன் விருப்பபட்டதை வாங்கித் தந்து அவனை கண் கலங்கி முகம் சுளிக்காமல், பார்த்துக் கொண்ட நான் இப்போது ஒரேடியாக அவன் விருப்பத்தை மறுக்கிறோனோ. .... " மனசு தேவையில்லாமல் அலைபாய்ந்தது. 

மதியம் ஒரு மன மாற்றத்திற்காக அம்மாவின் பீரோவை சரி செய்யும் வேலையில் இறங்கினாள். அதை அவ்வப்போது சுத்தம் செய்து அவர்கள் உபயோகப்படுத்திய கொண்டாலும், தாயின் மறைவுக்குப் பின் அம்மா உபயோகப்படுத்திய துணிகள் அடங்கிய சில பெட்டிகளை நினைவாக இருக்கட்டுமென அதை எடுக்கவேயில்லை. இன்று அதை உதறி மடித்து வைத்தால் அம்மாவின் நினைவில் நேரத்தை கடத்தி விடலாம் என ஆரம்பித்தவள் ஒரு புடவையை எடுத்து உதறிய போது உள்ளிருந்து பழைய டைரி ஒன்று விழுந்ததை கண்டு அதை எடுத்துப் பிரித்தாள். 

"அம்மாவுக்கு எழுதும் பழக்கம் இருந்து பார்த்ததில்லையே" என்ற வினாவுடன் எடுத்துப் பிரித்தவளுக்கு ஒரு பக்கத்தில் ஒரு கடிதம் பல விதத்தில் கிழிந்து காணப்பட்ட நிலையில் ஒரு கவருக்குள் சுருண்டு மடங்கியிருந்ததை கண்டாள். டைரியில் அந்தப் பக்கத்தில், அம்மாவின் சற்றே கோணாலான எழுத்துக்கள். 

அன்புள்ள சிவகாமி... 

இதை நீ எப்போ பார்ப்பேனு எனக்குத் தெரியாது. நீ பார்த்த பையன் உன் அப்பாவை பார்த்து தன் விருப்பத்தை சொல்லி சம்மதம் கேட்க வந்த போது உன் அப்பா அவரை அசிங்கமாக பேசி அவமானபடுத்தி அனுப்பி விட்டார். அதைக்கூட உன்னிடம் சொன்னேன். உடனே அப்பாவின் தீடிரென்ற பிரிவின் மனக்கஷ்டத்திலே இன்னொன்றை நான் கூறவில்லை. அதுக்காக இந்த அம்மாவை மன்னிச்சுடு. 

அன்னைக்கு வந்துட்டு போன ஒரு வாரத்திலேயே அவர் மீண்டும் ஒருநாள் வந்து அப்பாகிட்டே ரொம்ப நேரம் பேசினாரு. அப்பாவும் பழைய கோபத்தோடுதான் அவர்கிட்டே பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர் போகும் போது உன் கிட்டே ஒரு கடிதாசியை மட்டும் கொடுக்கச் சொல்லி கொடுத்திட்டு போனார். அவர் தலை மறைஞ்சவுடனே அப்பா அந்த லெட்டரை கிழித்து குப்பைக் கூடையில் போட்டு விட்டு கோபமா வெளியே போயிட்டார். நான் அதை எடுத்து பத்திரப்படுத்தி உன்கிட்டே சமயம் பார்த்து கொடுக்க வச்சிருந்தேன். அதுக்குள்ளே உங்க அப்பா மரணமும், அடுக்கடுக்கா என்னென்வோ நடந்து போச்சு.. இப்ப இந்த புடவையை பிரிச்சதும் இந்த லெட்டரும் அந்த சம்பவமும் நினைவுக்கு வந்தது. உன்கிட்டே நேரடியா இதை தர இப்பவும் எனக்கு தைரியமில்லை. . இதை நீயா ஒரு நாள் பிரிச்சு பாத்துக்கோன்னு இந்த லெட்டரோடு என் கடிதாசியையும் எழுதி வைக்கிறேன். நீ. இதை பார்க்கும் போது என்னை மன்னிசுடும்மா.... 

சிவகாமிக்கு அம்மாவின் கடிதம் கண்களில் மளமளவென்று நீரை வரவழைத்தது. அப்பாவிடம் பேசிய நடராஜன் என்ன கடிதமென்றாலும் அதை என்னிடம் தந்திருக்கலாமில்லையா? அப்பாவிடம் அவன் பேசினதைப் பற்றி கூட தன்னிடம் எதுவும் சொல்லவில்லை. அம்மா சொல்லித்தான் அறிந்து கொண்டாள். போகட்டும்....!!!! அப்பாவிடம் தைரியமாக பேசி அவர் மனக்குறைகள் போக்கி சம்மதம் வாங்கி விடலாம் என்றிருந்தவளுக்கு அப்பாவின் மரணம் சவுக்கடியைத்தான் தந்தது. அதன் பின் நடராஜனை பற்றிய திருமண நினைவுகளையும், ஒரு பள்ளி மாணவியாய், தான் அறியாமல் எழுதியதை ரப்பரால் அழிப்பதை போன்று அழித்து மனதோடு உதறி விட்டாள். 

"என்னை மணம் செய்து கொள்ள உங்களுக்கு சம்மதமா? என கண்ணியமாக கேட்ட நடராஜனின் உருவம் மட்டும் தன் மனதிலிருந்து அழியாததால், அப்பாவின் மறைவுக்குப் பின், தங்கைகளின் திருமணத்திற்குப் பின் தன் அம்மா எத்தனையோ நாட்கள் தன்னிடம் தன் திருமணத்தைப்பற்றி வலியுறுத்தும் போதும் அவள் அதை நிராகரித்து இருக்கிறாள். 

அம்மா.. எனக்கு இனி திருமண பந்தமே வேண்டாம். தம்பிதான் நான் பெறாத பிள்ளை. அவன் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து அவனுக்கு திருமணம் நடத்தி, அவன் வாரிசுகளை கொஞ்சி மகிழ்வதுதான் எனக்கு சந்தோஷம் தரும். அதை பார்க்கும் நாட்களுக்காக நீயும் என்னுடன் காத்திரு..!! இப்போதைக்கு நீயும், தம்பியுந்தான் நான் பாதுகாக்க வேண்டிய என் இரு கண்கள்....! இப்போதைக்கு அதை தவிர வேறு ஏதும் பேசாதே.. .! என கண்டிப்பான உறுதியுடன் சொல்லும் போது அம்மாவின் கண்களில் கண்ணீர் அருவியாக பெருக்கெடுத்து ஓடும். 

நினைவுகளின் சுமையில் ஆழமான மூச்சு வெளிப்பட்டது சிவகாமிக்கு. மெல்ல அந்த கடித துணுக்களை சேர்த்தெடுத்து வேறு ஒரு காகிதத்தில் பரப்பி சேர்த்து வைத்து படிக்கும் ஆவல் வந்தது. இதற்காகவே இன்று தம்பியை தன்னிடமிருந்து இறைவன் பிரித்து வைத்து வேடிக்கை செய்கிறானோ எனவும் தோன்றியது. 

தன் திட்டப்படி வேறு காகிதத்தில் நிறைய நேரங்களுக்குப்பின் கிழிந்த காகித துணுக்குகளை ஒன்று சேர்த்து வைத்து உருவாக்கிய கடிதத்தை ஒரு வழியாக படிக்க ஆரம்பித்தாள். 

அன்புள்ள சிவகாமிக்கு 

நான் எவ்வளவோ முயன்றும் உங்கள் தந்தை நம் திருமணத்திற்கு மறுத்து விட்டார். மற்றவர்கள் போல் அவர் உத்தரவு இல்லாமல் நாம் திருமணம் செய்து கொள்வது அந்த பந்தத்திற்கே இழுக்கு. ஆகவே காத்திருப்போம். உங்களால் உங்கள் குடும்ப சூழலால் அது முடியவில்லையென்றாலும், மற்றபடி இதற்கு முடிவேதும் கிடைக்கவில்லையென்றாலும், நான் இப்படியேதான் இருப்பேன். . உங்களைப் போல் என் குடும்பம் என்ற பந்தங்களும் என்னுடன் பிணைந்து சுற்றுவதால், என் காத்திருப்பு வேதனைகளும் எனக்கு பெரிதாக தெரியாது. உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் வேலையை விட்டு அகலுகிறேன். நம் சந்திப்புகள் தொடர்ந்து இருந்தால், உங்கள் மனம் வேதனையுறும். அதன் விளைவுகள் உங்கள் குடும்பத்தில் எதிரொலிக்கும் என்பதால், வேறு ஊரில் வேலை தேடி போகிறேன். என்றாவது ஒரு நாள் உங்களை சந்திக்கும் போதும் இந்த நடராஜன் சிவகாமி இல்லாத பழைய நடராஜனாகத்தான் இருப்பான். அது நிச்சயம். ...! ஏன். சத்தியமும் கூட... 

இப்படிக்கு

உங்கள் நடராஜன். 

தடுமாறியபடி கடிதத்தை படித்து முடித்ததும், அப்படியே சிலையாக அமர்ந்திருந்தாள் சிவகாமி. தன் வாழ்வின் திசை திரும்பல்கள் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்பதை நினைத்து வேதனைபடுவதா. .. வியப்படைவதா... எனத் தெரியாமல் அப்படியே மணிக்கணக்கில் அமர்ந்திருந்தாள். 

தொடர்ந்து வரும்.

Sunday, October 16, 2022

விதி எனப் பட்டதே ...



படங்கள் நன்றி. கூகுள். 

இறைவனே மனித அவதாரங்கள் எடுத்து மனிதர்களுக்காக மனிதனாக வாழ்ந்து காட்டிய நேரங்களில் எத்தனையோ இடர்களை சந்திக்க வேண்டியிருந்ததை இதிகாசங்களில் படிக்கும் போது இறைவனால் படைக்கப்பட்ட மனித குலமாகிய நாம்  அவரவரக்களுகான விதிகளை மாற்றி வாழ்ந்து விட முடியுமா? 

"தங்களுக்கு வினையை தேவாள் தாங்களே வருத்திக் கொண்டாள்" என்ற வரிகள் லலிதாம்பாள் சோபனத்தில் வரும். 

அப்படி தேவர்கள் தங்களுக்கே அவ்வப்போது வினையை வருத்தி பெற்று கொண்டனர். தேவர்களுக்கு தெய்வாம்சமான சக்திகள் இருந்தும் ஆசைகள் அதிகமானதால்தான் அவர்களும் அவர்களின் எதிரியாகிய அரக்கர் குலத்தவர்களால் ஏகப்பட்ட இன்னல்களை அனுபவித்தார்கள் என புராணங்கள் வாயிலாக அறிகிறோம். ஆக இந்த விதி, வேளை என்பதெல்லாம் நிஜமானதுதான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை அல்லவா? 

விதியை மதியால் வென்றவர்களை (அக்காலத்து விக்கிரமாதித்தன் போன்ற  மன்னர்கள்) பற்றி படிக்கும் போது சிறிது இது குறித்து சலனம் வரலாம். ஆனால் அதுவும் அவர்களுடைய நல் விதியின்பாற்  சம்மந்தபட்டதுதான் அவ்வாறு யோசிக்கவும், அவர்களை வெற்றி பெறவும் வைத்துள்ளது. ஆக நல்லது, கெட்டவை அனைத்துக்கும் இந்த விதிதான் காரணமானது. 

ஆஹா....! இந்த விதி புலம்பலை இப்போது நாம் கேட்பது எங்கள் விதியோ என நீங்கள் யோசிக்கும் முன், விஷயத்திற்கு வருகிறேன். 

சிவகாமியின் பந்தம் என்ற கதைப் பகிர்வு முதல் பகுதி எழுதி வெளியிட்டு விட்டு, அதன் மறுநாளே இரண்டாவதையும் வெளியிட்டு விட வேண்டுமென  நினைத்தேன்.எனக்கும் ரொம்ப நாட்கள் கதைக்கு நடுவே இடைவெளி விட பிடிக்காது. (அது வழக்கம் போல் நீளமாக அமைந்து விட்டதால், இப்படி இரண்டு பாகமாக பிரிக்க எனக்குள் ஒரு முடிவு. "தெரியுமே...! நீங்களாவது சுருக்கமாக எழுதுகிறதாவது" என்று அவசரப்பட்டு கூறி  விடாதீர்கள். அது என்னவோ எழுத எழுத கதை நீள்வது எனக்கென்று அமைந்த விதி. அதை பொறுமையாக படிப்பது உங்கள் விதி. இடையில் நான் என்ன செய்வது.? அப்பாடா.. ஒரு வழியாக இந்த விதியை இப்போதைக்கு துணையாக அழைத்துக் கொண்டு விட்டேன். :.)))) ) ஆனால், என் முடிவை அந்த விதி முழு மனதோடு ஒப்புக் கொள்ள வேணடுமே.... 

நேற்று காலை அவசரமாக குடும்பத்தடன் வெளியில் செல்ல ஒரு முடிவு. அதற்கு நான் போக வேண்டுமென்று இல்லை. ஆனால்,"அந்த தேவர்கள் தங்களை வருத்திக் கொண்ட மாதிரியான ஒரு கால கட்டத்தில்" நானும் சென்றேன். (அதுதான் ஆசை.) ஆசைக்குப் பலன் உடனடியாக கிடைத்தது.  வீட்டிலிருந்து இறங்கி ரோடை கிராஸ் செய்த போது நடுவில் கோடு போட்டாற் போல் இருக்கும் தடுப்பில் கால் இடறி விழுந்து வலது கால் முட்டி அந்த தடுப்பு கல்லில் பட்டு நல்ல பலத்த அடி.  நல்லவேளை...!! அந்த தடுப்பை தாண்டி, அந்தப் பக்கமோ, இந்தப் பக்கமோ விழுந்திருந்தால் ஏதாவது ஒரு வாகனத்தால் எனக்கு அடிபட்டிருக்கும். (வாகனத்திற்குந்தான்) (இன்னும் என் விதியின் பலாபலன்கள் என்னவெல்லாம் காண இருக்கிறதோ.. !! அதனால் வாகனங்கள் வந்து மோத அந்த விதி இடம் தரவில்லை.)  எப்படியோ சமாளித்து, கீழே விழுந்து எழுந்த  அவமானத்துடன் எழுந்து அவர்களுடன் சென்று வந்து விட்டேன். நேரமாக நேரமாக வலி பொறுக்க (எனக்குத்தான் எதையும் தாங்கும் பொறுமைசாலி என்ற பட்டத்தை நானே தந்து பெருமையுடன் கர்வத்தின் எல்லைக்கே வந்து நின்று கொண்டிருக்கிறேனே.. ..! அதனுடைய விளைவால் எவருக்கும் வலியை காண்பிக்கவில்லை. ) இயலாமல் வீடு வந்ததும் முட்டி வீக்கம், காலை அசைக்க முடியாத நிலையில் நேற்றெல்லாம் கழிந்தது. வந்தவுடன் அயோடக்ஸ் வைத்தியம் செய்தும் பயங்கர வலிதான். 

சுவாமி ஐயப்பனை தன் பொய்யான தலைவலிக்காக புலிப்பால் கொண்டு வரச் செய்தாள் பந்தள தேசத்து மகாராணி. அதுவும் அவரது தெய்வீக ரூபத்தை மக்களுக்கு காட்டி உணர்த்திட நேரம் பார்த்து காத்திருந்த அவரின் நல் விதியால்தான் நிகழ்ந்தது. இல்லையென்றால் அந்த தெய்வ குழந்தையை வளர்க்கும் பேறு பந்தளநாட்டு மஹாராஜனுக்கு கிடைத்திருக்குமா? அதுவும் அவரது நல்விதி. 

இப்படியாகப்பட்ட நல்லவர்களின் நல் விதியை நினைத்தவாறும், நானும்,என் வலியின் கொடுமையால், எனக்கென்று அமைந்த என் விதியை நொந்தவாறும் தன் அம்மாவின் விருப்பப்படி புலிகளுடனே நாட்டுக்குள் நுழைந்த அந்த ஹரிஹரசுதனை மனதுக்குள் வணங்கியவாறு, இந்த மெய்யான வலி விரைவில் போக வேண்டுமென வேண்டியபடி, "புளிக்கரைசலை" கரைத்து கொதிக்க வைத்து இரு தடவைகள் பற்று போட்டுக் கொண்டேன். 

இன்று கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் வலி, வீக்கம் உள்ளது. அத்துடன் வீட்டு வேலைகளுக்காக எழுந்து ந(க)டந்து கொண்டிருக்கிறேன். மகளுக்கும் உடல் நிலை சரியில்லை. ஜுரம். (அதுவும் ஒரு விதிதான்.) இல்லையென்றால் அவளின் அன்பான உபகாரங்கள் கிடைத்திருக்கும். 

ஆக" நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் (விதி) ஒன்று நினைக்கும்" என்பது போல் உடனடியாக கதையை பகிர இயலவில்லை. முதல் பகுதிக்கு வந்த உங்களனைவரது கருத்துக்களுக்கும் உடனடியாக பதில் கருத்து தர இயலவில்லை. மன்னிக்கவும். 

இன்றைய தெய்வங்கள் சார்ந்த பதிவுகளுக்கு சென்று கருத்தளித்து விட்டு வணங்கி வந்தேன். நாளை நல்லபடியாக வலி கொஞ்சம் குறைந்தால் நல்லது. இப்போது சொல்லுங்கள். கதைப்பகிர்வுக்கு பதிலாக இந்தப்பதிவை இன்று என்னை எழுத வைத்திருப்பதும் என்னுடைய விதிதானே...! "ஆஹா.. இப்போது எங்களை இதை படிக்க வைத்திருப்பதும் எங்கள் விதிதான்... என நீங்கள் நினைப்பதும் எனக்குப் புரிகிறது.))) . 

எனினும் உங்களுடன் பகிர்ந்து கொண்டால், என் துன்பங்களின் சுமைகளும் குறைந்து சற்று இலகுவாக மாறுவதாக உணர்கிறேன். அதனால் பகிர்ந்து விட்டேன். அதறகும் மன்னிக்கவும். 

உங்களனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.

நாளைய பாடு இதற்கும் வரும் கருத்துகளுக்கு பதில் தர முடியாத சூழ்நிலையை உருவாக்கினால் அதற்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. 🙏. 

Wednesday, October 12, 2022

சிவகாமியின் பந்தம்.

 சிவகாமி அமைதியாய் இருந்தாள்.

"என்ன காரணம் அக்கா..? முதல்லே நான் சொல்றதை மறுக்காமே ஒப்புக் கொண்ட நீ... . இப்போ அவளை பார்த்து விட்டு வந்த பிறகு இப்படி இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றியே....!!! " கணேசன் அவளை ஆயிரம் தடவை விழிகளாலும், பத்துக்கு மேற்பட்ட முறை வாயினாலும் கேட்டு விட்டான்.

சிவகாமி பதிலேதும் கூறவில்லை." இது சரிவரும்"னு எனக்கு தோணலைடா.. தம்பி.. உனக்கு"னு பிறந்தவளை கண்டிப்பா உனக்கு முன்னாடி அந்த ஆண்டவன் கொண்டு நிறுத்துவார். நான் உன் விருப்பங்களை என்றாவது தடை பண்ணியிருக்கேனா ? தயவு செய்து இப்ப ... இந்த விஷயத்திலே என்னை புரிஞ்சுக்கோ...!!! " இது அவனுடன் அவன் விரும்பிய பெண்ணை மறுப்பேதும் சொல்லாமல் சென்று பார்த்து விட்டு வந்த நாளில் அவள் கூறியது. இன்றைய வரைக்கும் அந்த பதில்தான் அவள் அழுத்தந்திருத்தமாக கூறிக் கொண்டிருக்கிறாள். அவள் கண்களிலும் இதேதான் அழியாமல் எழுதி ஒட்டியிருந்தது . 

இரு தினங்களில் அவன் அலுவலக வேலையாக வெளியூருக்கு கிளம்பும் போது" "தம்பி.. என்னை தப்பா புரிஞ்சுக்காதே. ..! தவறான பாதைகள் உன் வாழ்வில் வந்துட கூடாது. நான் நமக்கு தெரிஞ்ச உறவுகளில் சொல்லி சீக்கிரமா வேறு ஒரு பெண்ணைப் பார்க்கிறேன். உன்னை கல்யாண கோலத்திலே பார்க்க இந்த தாய் ரொம்ப நாளா காத்துகிட்டு இருக்கேன்டா ....! அதை மறந்துடாதே..! அக்காவின் கண்களில் நீர் கசிவை கண்டதும் கணேசன் மனம் பதறியது.... 

"அக்கா. .. உன்னைப்பத்தி தெரியாதா? எனனை அம்மாவுக்கும் மேலாக இருந்து வளர்த்திருக்கே....!!! உன் பேச்சில் என்னைக்குமே ஒரு அர்த்தம் இருக்கும்.. நான் உன்னைப் போல் எப்போதுமே திருமணமொன்றை செய்து கொள்ளாமல் கூட இருப்பேனே ஒழிய, அவளையே நினைத்துக் கொண்டு தப்பான முடிவுக்கெல்லாம் போக மாட்டேன். அதுவும் உன்னை நிர்க்கதியாக விட்டு விட்டு.. ..!! நீயிருக்கிற வரை நானும் உனக்காக இருப்பேன்... என்னை நம்பு..!!" என்றவனை உணர்ச்சி மிகுதியில் கண்ணில் கசிந்து தேங்கிய நீர் வடிய அவன் தோள் தொட்டு அணைத்துக் கொண்டாள் சிவகாமி. 

அவன் சென்ற மறுதினம் தனிமை உறுத்தவே சிவகாமிக்கு மனதின் இத்தனை நாள் பாரங்களின் சுமைகள் பெரிதாக தெரிந்தன அன்றிரவு உறக்கம் வராததால், தன் வாழ்வில் நடந்த பழைய சம்பவங்கள் வேறு நினைவுகளில் வந்து சிறிதளவு வந்த உறக்கத்தையும் விழுங்க முயற்சிக்க நிம்மதியான நித்திரையை இழந்து அவதியுற்றாள்..

குடும்பத்தின் பெரிய மகளாக பிறந்த சிவகாமி அத்தனை பொறுப்புகளையும் உணர்ந்தவளாக வளர்ந்திருந்தாள். தனக்குப்பின் இடைவெளிகள் மிகவும் உடைய இரு தங்கைகள், இறுதியில் ஒரு கடைக்குட்டியாக ஒரு தம்பி......!!!! தம்பி அம்மாவுக்கு பிறக்கும் போது அம்மா பிரசவத்திற்கு அம்மாவுக்கு கூடமாட உதவியாய் இருந்தவளே சிவகாமிதான். அவளின் பொறுப்புள்ள குணத்தை கண்டு பாராட்டாத உறவுகளே இல்லை. 

படித்து முடித்து நல்லதோர் பள்ளி ஆசிரியையாக அவள் பணியில் அமர்ந்ததை பார்த்ததும் அவள் அம்மாவுக்கு பெருமை பிடிபடவில்லை. சட்டென தன் மகளுக்கு ஒரு திருமணம் செய்வித்து அவள் வாழ்க்கையில் வரும் வசந்தங்களை பார்க்க எல்லா தாயைப் போன்று அவளும் ஆசைப் பட்டாள். 

தன் கணவனுக்கு அந்த எண்ணம் சிறிதும் இல்லையென தெரிந்து கொண்ட போது அவளின் கவலைகள் ஆரம்பமாகியது. உறவுகளிலும் அவளை மணம் முடிக்க வந்தவர்களையும் ஏதேதோ பேசி தடுத்தார் அவள் கணவர்.

அதன் காரணம் தெரியாமலும், அவரை எதிர்த்து பேச தெரியாமலும் திண்டாடிய அந்த தாய்க்கு. சிவகாமி தன்னுடன் பள்ளியில் வேலை பார்க்கும் நல்ல பண்பான குணமுள்ள நடராஜனை தான்்விரும்புவதாகவும், அப்பாவிடம் பேசி தங்கள் திருமணத்திற்கு அம்மா எப்படியாவது சம்மதம் வாங்கித்தர வேண்டுமென ஒருநாள் தனிமையிலிருக்கும் போது தன்னிடம் கூறியது வயிற்றில் பால் வார்த்தது போன்று இருந்தது. 

"ரொம்ப சந்தோஷமாக இருக்கு சிவகாமி.... நானே இதுபற்றி உன்கிட்டே பேசனும்'னு இருந்தேன். சாதரணமா ஒரு பொண்ணு தன் அம்மாகிட்ட இதுபோல தன் விருப்பத்தைப் பத்தி சொன்னா, உடனே கோபந்தான் படுவா...!!! ஆனா நான் சந்தோஷ படறேன்...!! ஏன்னா, உன் அப்பா ஏனோ உன்னை சீக்கிரம் திருமணம் செஞ்சு வைக்க விருப்பமே இல்லாதவர் மாதிரி நடந்துக்கிறார். என் பேச்சையும் ஏதேதோ சொல்லி தட்டிக் கழிக்கிறார். தம்பியும் இப்பதான் பள்ளியில் படிச்சுகிட்டிருக்கான். அவன் வளர்ந்து இவர் சுமையை எப்போதான் வாங்கிப்பான் என்பதை போன்று பேசுறார். நீயும் எதையும் கண்டுக்காமல் தினமும் வேலைக்கு செல்வதே கடமையென இருக்கே... உனக்கு அப்பறம் இரு தங்கைகளுக்கும், பண்ண வேண்டுமே ..!! எப்படியென என யோசிக்கிறாரோ என்னவோ தெரியல்ல...!! இல்லை உன் சம்பாத்தியத்தை அவர் இழக்க விரும்பல்லையோ என என் மனசு கிடந்து தவிக்குது...! நீ இன்னைக்கு சொன்ன விஷயத்தை அவர்கிட்டேயே எப்படியாவது நாளைக்கே வலியுறுத்தி சொல்லி சம்மதம் வாங்கி கல்யாணம் செஞ்சிடலாம். எல்லா பொண்களை போலவும், நீயும் நல்லா வாழ வேண்டும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லையம்மா. .." அம்மா தன் இயல்பு நிலை மாறி மனக் கலக்கங்களை இறக்கி வைத்த சோர்வில் அழ ஆரம்பித்தாள். 

" அம்மா... அப்பாவை பத்தியும், அவரோட பயங்களை பத்தியும் எனக்கு தெரியுமம்மா.. நான் இந்த குடும்பத்துக்கு மூத்த மகனா இருந்து எல்லா பொறுப்பையும் சுமப்பேன். ஏன்னா எனக்கும் அந்த ஆசை இருக்கு....என் கடமையிலிருந்து நான் தவறவே மாட்டேன். நான் சொன்ன அவரும் இதுக்கெல்லாம் தடை ஏதும் சொல்லாதவரம்மா... அவருக்கு அவர் அப்பா இவருடைய சின்ன வயசிலே தவறிப்போயிட்டதாலே அக்கா, தங்கைன்னு குடும்ப பொறுப்புக்கள் இருக்கு... அதனாலே நீ தைரியமா அப்பாகிட்டே பேசு... என் திருமணத்துக்கு பின்னும் நான் இதே மாதிரி நம்ம குடும்பத்தை காப்பாத்துவேன். தம்பியை படிக்க வச்சி, அவனை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன். என் பெரிய பையன் மாதிரி அவனை பாத்துக்குவேன். தங்கைகளுக்கும் படிப்பு முடிஞ்சதும், அவங்களுக்கு தகுந்த வாழ்க்கை வரும் போது நான் நிச்சயம் உங்க கூட இருப்பேன்ம்மா. அதைப்பற்றியும் அப்பாகிட்டே கூறி அவரை தைரியப்படுத்து.....!!! " சிவகாமி பேச. பேச அவள் தாய் இன்னமும் கண்ணீர் சிந்தினாள். 

எந்த நேரத்தில் அவள் அப்படிச் சொன்னாளோ, அவள் தந்தை அடுத்து வந்த சில மாதங்களில்,," நீயே குடும்பத்தை பார்த்துக்க....!!!!" என்பது போல், இவ்வுலக பந்தங்களை விட்டு விலகினார். அதற்குள் ஒருநாள் தன் மனைவி மூலமாக இவள் காதலிப்பதை தெரிந்து கொண்ட தந்தை உக்கிரமாக மறுத்ததோடு இல்லாமல், அதன் விபரம் தெரிந்து வீடு தேடி வந்து சுமூகமாக பேச வந்த நடராஜனை மிகவும் அவமானபடுத்தியும் அனுப்பினார். நடராஜனும் அவளிடம் ஏதும் கூறாமல் பள்ளி வேலையை விட்டு விலகியதை தந்தை மறைவு தந்த அதிர்ச்சியில் அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கண்ணெதிரே தன் உயிரை விட பெரிதான நான்கு ஜீவன்களின் நிராதரவான நிலை ஒன்றே அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. 

தந்தையின் மறைவுக்குப் பின் இவளின் பொறுப்புக்கள் கூடியதில், மனதின் நிம்மதிக்காக காதலை தியாகம் செய்து விட்டு,பள்ளியையும் மாற்றிக் கொண்டு இங்கு வந்து விட்டாள். தங்கைகளின் படிப்பு, உத்தியோகம், திருமணங்கள்,, தம்பியின் படிப்பு, என்ற வாழ்வின் சுழற்சியில்,, நடராஜனின் நினைவுகள் புதைந்து கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து போயின. . மிகுந்த மனவருத்தத்தில் இருந்த தாயும், தம்பியின் கைகளை பிடித்து இவளிடம் ஒப்படைத்து இவளின் நிலை குறித்து வருத்தபட்டவளாய் ஒருநாள் அவளும் இவளுக்கு இன்னமும் சிரமம் கொடுக்க வேண்டாமென மறைந்தாள். 

அம்மாவும் ஒரு நாள் தீடிரென மறைந்தப் பின் தம்பி மேல் வைத்திருந்த பாசம் இன்னமும் இறுகியது. அவன் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதிப்பதை கண்டதும் தன் உழைப்புக்கு பலன் தெரிந்தது. இதைக்காண இப்போது தாயும், தந்தையும் இல்லையே என்ற வருத்தம் தோன்றியதின் இடையே, "இதைக்காண முடியாதோ?" என்ற அச்சம் அப்பாவுக்கு ஏனோ எழுந்ததை குறித்து அம்மா உயிருடன் இருக்கும் போது அடிக்கடி அதைச் சொல்லி வருத்தப்பட்டதும், நினைவுக்கு வந்தது. இப்போது தம்பி தான் அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை விரும்புவதாக கூறியதும் தடையேதும் சொல்லாமல், அவனுடன் வந்து அந்தப் பெண்ணை சந்திக்க ஒத்துக் கொண்டாள். அந்த உணவகத்தில் காஃபி அருந்தி கொண்டே. அவளுடன் பேசிய போது, "இவள் தன் தம்பிற்கேற்ற நல்ல மனைவிதான்.." எனத் தோன்றியது. அவளிடம் மனம் விட்டு அதை சொல்லி விடலாம் என்று நினைத்த போது, அவள் தன் குடும்ப  புகைப்படத்தை தன் கை பேசியில் யதேச்சையாக காட்டியதும் மனம் மாறி போனாள். அங்கிருந்து கிளம்பும் இறுதி வரை சற்று இறுக்கமான மன நிலையில் இருந்தவள், வீடு வந்ததும் சொன்ன முதல் வார்த்தை "தம்பி... உனக்கு அந்தப் பெண் வேண்டாம்டா..... " என்பதுதான். 

நினைவுகள் தந்த  இறுக்கம் குறைந்து அவள் நித்திரையை தொட்ட போது மணி நான்கை தாண்டியிருந்தது. 

தொடர்ந்து வரும்.

கதைக்கு ஆதரவு தரும் நல்லுள்ளங்களுக்கு எப்போதும் என் நன்றி. 🙏. 

Tuesday, October 4, 2022

இனிய பாடல்

 வணக்கம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா..

அனைவருக்கும், இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். ஸ்ரீ சரஸ்வதி தேவியின் அருள் அனைவருக்கும் கிடைத்திட அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். இந்த இனிய பாடல்கள் நம் வேண்டுதலுக்கு துணையாக இருக்கட்டும். நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அளவிற்கு தன் இனிய குரலால் உருக்கும் பி. சுசீலா அவர்களின் இனிய கானம் கேட்க கேட்க திகட்டாத தேன். அள்ள அள்ள குறையாத ஸ்ரீ சரஸ்வதி தேவியின் அருளுடன், எனக்குப் பிடித்தமான இந்த பாடல்களையும் கேட்டு மகிழ்வோம். 




          பாடல்கள் பகிர்வு கூகுள். நன்றி. 

இனிய இப்பாடல்களை கேட்டு
மகிழ்ந்தற்கு மிக்க நன்றிகள். 🙏.