Saturday, May 12, 2018

மனசு



 அந்த வீட்டின் முற்றத்தில் முருங்கை மரத்தில் அமர்ந்திருந்த அந்த காகம் கரைந்தது. 

உள்ளேயிருந்து முற்றத்திற்கு வந்த முதியவர் ஒருவர் கரைந்து கொண்டிருந்த அந்த காகத்தை அண்ணாந்து பார்த்தார். 

 "ஏன் இப்படி காலையிருந்து கத்தி கொண்டேயிருக்கிறாய்?" யாராவது வரப்போகிறார்களா என்ன? என்று கேட்டபடி கீழேயிருந்து கல் எடுத்து எறியும் பாவனையில் ஓரு முறை கீழே குனிந்து நிமிர்ந்து கையை ஆட்டியபடி "சூ" "சூ" என்றபடி அதை விரட்டினார். 

அந்த காக்கையும் அவருக்கு பயந்தது போல் அமர்ந்திருந்த அந்த கிளையிலிருந்து பறந்து மறுபடி வேறொரு கிளையில் போய் அமர்ந்து கொண்டது. 

"அப்படி யராவது வந்தாலும் பரவாயில்லை நாலு சுவத்தை பாத்துட்டு பொழுது போகமே தவிக்கிறதுக்கு நாலு நாள் பொழுதாவது நல்லாபோகும்" என்று முணுமுணுத்த அந்த முதியவர் தன்னுடைய மிரட்டலுக்கு காகம் கட்டுபட்டு விட்டது என்ற திருப்தியுடன் உள்ளே சென்றார்.

சிறிது நேர அமைதிக்குப்பின் மறுபடியும் அந்த காகம் கரைய ஆரம்பித்தது. 

அதன் ஓயாத கரைதலுக்கு செவிமடுத்து வீட்டின் உள்ளிருந்து ஒரு மூதாட்டி வெளிவந்து கண்ணை இடுக்கியபடி மரத்திலிருந்த அந்த காக்கையை உற்று நோக்கினாள். 

"ஏன் இப்படி காலையிலிருந்து கத்திகிட்டேயிருக்கு? காக்கா ஒயாம கத்தினா யாராவது வருவாங்கனு சொல்வாங்க, அப்படி யார் வரப்போறாங்க? 
பக்கத்து ஊரிலிருக்கும் என் தங்கையை பார்த்தே ரொம்ப நாளாகி விட்டது. 

என்னாலேயும் முந்தி மாதிரி துணையில்லாமே தனியா எங்கேயும் போக முடியலே.... அவளாவது வந்தா நல்லாயிருக்கும்!" என்று புலம்பியவாறு கீழே கிடந்த ஒரு சின்ன குச்சி போன்ற கம்பை எடுத்து உயா்த்தி பிடித்து  "சூ" கத்தாதே! என்று சத்தமிட்டபடி கம்பை மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கையை பார்த்து எறிந்தாள். 

காக்கையும் கம்புக்கு பயந்து வேறு கிளை மாறி அமர்ந்து கொண்டது. அது கத்துவதை நிறுத்திவிட்ட சந்தோஷத்தில் அவளும் உள்ளேசென்றாள்.

சிறிய நிசப்ததிற்குப்பின் மறுபடியும் அந்த காகம் கரைய ஆரம்பித்தது. 

முற்றத்தில் ஏதோ காயவைப்பதற்காக துணியும் பாத்திரமுமாக உள்ளேயிருந்து வெளிப்பட்ட அந்த நடுத்தரவயது மாது கையிலிருப்பதை கீழேவைத்து விட்டு மரத்திலிருந்த காக்கையை அண்ணாந்து பார்த்தாள். 

"சனியன்! காலையிலிருந்து கத்திட்டேயிருக்கு, யார் வரப்போகிறார்களோ? உள்ள செலவு பத்தாதென்று..... ஏற்கனவே இந்தமாதம் ஊரிலிருக்கும் இரண்டாவது மகன் பணம் அனுப்பவில்லை.... 

ஒரே மகள் பிரசவத்திற்காக வேறு வந்திருக்கிறாள்.. வயதான மாமனார் மாமியாரையும் கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயம்.. எல்லா செலவுகளையும் கணவரின் குறைந்த சம்பளத்திலும், பெரியவன் கொடுக்கும் பணத்திலேயும் சமாளித்துக் கொள்ளவேண்டும்.


'இந்த லட்சணத்தில் விருந்தாளி ஒருகேடா", என்று முணுமுணுத்தவள் காக்கையை கோபத்துடன் முறைத்தாள். 

"ஒருவேளை ஊரிலிருக்கும் மகன் பணத்தை அனுப்பியதற்கு அறிகுறியாக இந்த காக்கை இப்படி விடாது கரைகிறதோ?" என்று நினைத்த மாத்திரத்தில் கோபம் சற்றுகுறைந்து சிறிது நிம்மதி எட்டிப்பார்த்தது. 

இருப்பினும், கையுடன் கொண்டு வந்திருக்கும் அரிசியை மரக்கிளையில் அமா்ந்துகொண்டு கத்திக் கொண்டேயிருக்கும் இந்த காக்கையை நம்பி எப்படி காயவைத்து விட்டுச்செல்வது? என்று யோசித்து கொண்டிருந்தவள் அந்த பக்கமாகவந்த தன்மகளை பார்த்ததும் சற்றுபூரிப்புடன் ... 

"வா, சுசீ.. இதை உலரவைத்து விட்டுசெல்கிறேன் காக்கா வந்து கொத்தாமல் பார்த்து கொள்கிறாயா?" என்ற வண்ணம் அரிசியை துணியை விரித்து காயவைத்து விட்டு உள்ளேசென்றாள்.

காகம் கிளை மாறிமாறி அமா்ந்து சத்தத்துடன் கரைந்தது.

 சுசீலா மேலே பார்த்துவிட்டு கிழே ஒருகிடந்த கம்பை கையிலெடுத்து கொண்டு காக்கையை விரட்டும் பாவனையில் கம்பைஆட்டிக்கொண்டே துவைக்கும் கல்லில்போய் அமா்ந்துகொண்டாள்.

 "இந்த காக்கா இன்று ஏன் இப்படி கத்திகொண்டேயிருக்கு? ஒருவேளை இந்தமாதம் வரமாட்டேன் என்று சொல்லிச்சென்ற தன் கணவன் திடும் மென்று சா்ப்பிரைசாக இருக்கட்டும் என்று வரப்போகிறரோ?" என்று நினைத்துக் இகொண்டவள் அந்த மகிழ்ச்சியில் மூழ்கி போனாள்.

அந்த காகம் விட்டு விட்டு கரைந்து கொண்டேயிருந்தது. 

உள்ளேயிருந்து ஓடிவந்த குழந்தையின் பின்னால் சத்தமிட்டபடி அந்த வீட்டின் மருமகள் அந்த குழந்தைக்கு சாதம் ஊட்டுவதற்காக கையில் சாத தட்டுடன் வெளிப்பட்டாள். 

கண்மூடி அமா்ந்திருந்த சுசீலாவின் நிலை கண்டதும் குறும்புடன் அவள் கண்ணத்தை நிமிண்டியவள் "ஏய்! என்ன கனவு காண்கிறாயா? கனவில் யார்?" என்று கேலியாக கேட்கவும் சுசீலாவின் முகம் சிவந்தது.

"ஒன்றுமில்லை அண்ணி.. இந்தஅரிசி கொஞ்ச நேரம் காயறவரைக்கும் அம்மா பாத்துக்க சொன்னாங்க" என்று இழுத்தாள்..

"சரி சரி.. குழந்தைக்கு சாதம் கொடுத்திட்டு நான் அதை எடுத்துகிட்டு வரேன் நீ உள்ளே போ வெயிலில் இருக்காதே" என்று அன்போடு கூறி அவளை அனுப்பியவள் குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க ஆரம்பித்தாள்.

 சிறிது நேரம் ஒழுங்காக சாப்பிட்ட அந்த குழந்தை சாப்பிட அடம்பிடிக்க ஆரம்பித்தது. 

"சாப்புடுகண்ணு நீ சாப்பிடாட்டி அந்த காக்கா வந்து உன் சாதத்தையெல்லாம் சாப்புட்டு போயிடும். அப்பறம், இந்த அனுக்குட்டிக்கு ஒண்ணும்கிடையாது ஒருவாய் வாங்கிக்கோடா செல்லம்". தாயின் கொஞ்சலிலும் கெஞ்சலிலும் சிறிது சாப்பாடு உள்ளே சென்றது. 

"அம்மா! காக்காவுக்கும் பசியா?" குழந்தை மரத்திலிருந்த காக்காவை பார்த்தபடி மழலையில் கேட்டது. "ஆமாம், நீ சீக்கரம் சாப்பிடு! இல்லைனா காக்காவுக்கே அத்தனையும் போடப்போறேன்." மிரட்டலில் இரண்டுவாய் சாப்பாடு இறங்கியது. 

குழந்தை வீட்டிலிருந்த திண்பண்டங்களை நினைவு கூர்ந்து அது வேண்டுமென்று அடம்பிடித்தது. "சாப்பிட்டவுடன் தருகிறேன்" என்ற தாயின் உறுதிமொழியுடன் ஒரு வழியாக சாப்பாட்டுகடை முடிந்து குழந்தையுடனும் காயவைத்த அரிசியுடனும் அவள் உள்ளே சென்றாள்.

அந்த காகம் கிளைமாறி அமா்ந்து தன் அலகால் இறக்கைகளை நீவி விட்டுக்கொண்டு உடலை சிலுப்பியபடி மறுபடி கரைய யத்தனித்தது.

 "என்ன இது! நானும் காலையிலிருந்து கத்திக்கொண்டே இருக்கிறேன்.. ஒவ்வொருவராக வந்து நான் கரைவதற்கு அவரவர் மனதிற்கு பிடித்த காரணங்களை கற்பித்துக்கொண்டு சென்று விட்டார்களே யன்றி, எனக்கும் பசி தாகம் என்று ஒன்று இருக்கிறது, அதற்கு நான் இவர்களை நம்பிதான் இருக்கிறேன், என்பதை மறந்து விட்டார்களே! 

ஒருவராவது அதைப்பற்றி சிந்திக்கவில்லையே.. மனிதநேயம் மறைந்துவருகிறதே.." என்ற ரீதியில் சென்ற காக்கையின் சிந்தனையால் அது கரைவதை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி அமா்ந்திருந்தது.

மறுபடி வீட்டின் உள்ளேயிருந்து  அந்தக்குழந்தை திண்பண்டகள் நிரம்பிய தட்டுடன் ஒடிவந்து முற்றத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தது.

 குழந்தையின் மனதில் காகத்தின் நினைவுவர அது மேலே நிமிர்ந்து பார்த்தது. அங்கு கரையாமல் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த அந்த காக்கையை பார்த்ததும், "காக்கா.. உனக்கும் பசிக்கா? இந்தா நீயும் கொஞ்சம் சமத்தா சாப்பிடு என்ன.." என்று தன் மழலை சொற்களில் மிழற்றியபடி தட்டிலிருந்த திண்பண்டகளை தன் சின்ன கைகளால் கீழே எடுத்து போட்டது. 

பின்பு மரத்திலிருந்த காக்கையை பார்த்து தன் சின்ன கையை ஆட்டி, "வா, வா" என்றது. 

காகம் சிறிது நேரம் கீழிறங்கி போகலாமா, வேண்டாமா என்று யோசித்த போது  உள்ளிருந்து அழைத்த அவள் அம்மாவின் குரலுக்கு பணிந்து "தோ வரேம்மா.." என்றபடி ஒடியது. 

"இந்த குழந்தைக்காவது என் பசி புரிந்ததே" என்ற சந்தோசத்தில் காகம் 'விர்"ரென்று பறந்து வந்து, ஆவலுடன் அந்த பண்டங்களின் அருகில் அமர்ந்தது. 

"குழந்தைகளிடம் இன்னும் மனிதநேயம் மங்கிவிடவில்லை.." என்று நினைத்தபடி சுற்றும் முற்றும் ஒரு தடவை பார்த்துவிடடு எச்சிலூறும் தன் அலகால் அந்த திண்பண்டத்தை கொத்தியது.

 அப்போது உள்ளிருந்து அந்த குழந்தையின் வீறிட்ட அழுகையும், அவள் அம்மாவின் சத்தமான கத்தலும், காக்கையை மறுபடி மரத்திற்க்கே பறக்க வைத்தது.

காக்கை வாயில் உணவுடன் கீழே பார்த்தது. முற்றத்திற்கு அந்த குழந்தை சகிதம் வந்த பெண் கீழே கொட்டிகிடந்த பலகாரங்களை பார்த்ததும், "இங்கே எல்லாத்தையும் கொட்டிட்டு உள்ளை வந்து அழறியா? உன்னை உள்ளேயே வைத்து சாப்பிடசொன்னேனில்லியா? வெளியே வந்து சாப்பிட்டா காக்கா வந்து கொத்திகிட்டு போயிடுமுனு அம்மா சொன்னேனே கேட்டியா?" என்று கடிந்து கொண்டாள். 

குழந்தை கீழே  சிதறியிருந்த பண்டங்களை பார்த்ததும் காக்கையையின் நினைவு வந்து மேலே மரத்தை பார்த்தது. 

தட்டிலிருந்தை கீழே கொட்டிவிட்டதற்கு அம்மா கடிந்து கொண்டதினால் வந்த அழுகையை மறந்தவளாய், மேலே கையை காட்டி "அம்மா! அந்த காக்காக்கு பசிம்மா..  நாந்தான் சாப்பாடு போட்டேன்.." என்று சந்தோசமாக  மழலையில் சொன்னபடி கைத்தட்டி சிரித்தது. 

தாயின் கவனம் மரத்திலிருந்த காக்கையிடம் சென்றது.

 காக்கையின் அலகினிடயே இருந்த பண்டத்தை பார்த்ததும் "பாத்தியா? நீதானா! அன்னிக்கு பாட்டிகிட்டேயிருந்து வடை திருடுன கதை மாதிரி என் குழந்தைகிட்டேயிருந்து திண்பண்டங்களை திருடிகிட்டு அவளை அழ வச்சியா?" என்றுகேட்டவாறு கையை ஆட்டி காக்கையை விரட்டினாள். 

கதை என்றதும் எல்லாவற்றையும் மறந்து விட்டு குழந்தை "அம்மா! "காக்கா கதை" சொல்லும்மா" என்று நச்சரிக்க ஆரம்பித்தது. "நீ உள்ளே வா அப்பறம் சொல்லேறன்" என்றபடி அவள் குழந்தையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

காக்கை மிரட்சியுடன் விழிகளை உருட்டி பார்த்தது. 

என்றோ ஒருநாள் தன் மூதாதையர் எவரோ ஒருவர் செய்த தவறை ( அது கற்பனையாக கூட இருக்கலாம் ) இன்றும் தன் குழந்தைகளுக்கு கதையாக சொல்லி மகிழ வைக்கும் மனிதர்களுடன் வாழ்ந்தாக வேண்டிய தன் நிலையை நினைத்து வருந்திய அந்த காகம்,  அக்குழந்தை மனமுவந்து தந்த உணவாயினும் "திருடன்" என்று அவச்சொல் கூறி நிந்தித்த அந்த வீட்டின் உணவை உண்ண விரும்பாமல், தன் பசியை மறந்து தன் அலகிலிருந்த அந்த பண்டத்தை உமிழ்ந்துவிட்டு, மனம் நொந்தபடி பசித்த வயிறோடு, அங்கிருந்து கரைந்தபடி பறந்து சென்றது.

17 comments:

  1. அருமையான கதை. தாத்தாவும், பாட்டியும் வந்த உடனேயே காக்கா உணவுக்குதான் கரைகிறது என்று புரிந்தது. ஒருநிலையில் குழந்தை வைத்திருந்த மருமகள் உணர்ந்தோ, குழந்தைக்கு விளையாட்டுக்கு காட்டவோ, காக்கைக்கு கொஞ்சம் உணவிடுவாளோ என்று பார்த்தேன். ஊ..........ஹூம்! உணவுதான் இடவில்லை என்றல் இப்படியா வந்து திட்டிவிட்டுப் போவது? மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஒருநிலையில் குழந்தை வைத்திருந்த மருமகள் உணர்ந்தோ, குழந்தைக்கு விளையாட்டுக்கு காட்டவோ, காக்கைக்கு கொஞ்சம் உணவிடுவாளோ என்று பார்த்தேன். /

      அவளுக்கும் குடும்ப வேலைகள், குழந்தை சரியாக சாப்பிட வேண்டுமென்ற கவலை இது மட்டுந்தான் மிகையாக தெரிந்ததேயன்றி, காகத்தின் கரைதல் புரியவில்லை. கடைசியில் கதையின் முடித்து வைக்கவும் அவள்தான் எனக்கு உதவி செய்து விட்டுச் சென்றாள். ஹா. ஹா. ஹா. ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அருமையான கதை.
    ஒவ்வொருவரின் நினைப்பும் அருமை.
    கடைசியில் குழந்தை காக்காவிற்கு பலகாரம் கொடுத்த்தே என்று நினைத்தால் கடைசியில் இப்படி ஆகி விட்ட்தே!
    காக்காவை எத்தி திரியும், பாடி வைத்து விட்டதை சொல்லி உணவு கொடுக்கவில்லையே!
    காக்கையின் பசி மனதை கஷ்டபடுத்திவிட்டது.
    நல்ல கற்பனை.

    இங்கு சாதம் வைக்கும் வீட்டில் வந்து கத்தி கூப்பிடும் தட்டு காலி ஆகி விட்டால் மறுபடியும் ஏதாவது போட்டால் மகிழ்ச்சியோடு சாப்பிட்டு மறுபடியும் கா கா என்று கூறி போகும்.

    முன்பு எல்லாம் காகம் கரைந்தால் உறவினர் வருகை, கடிதம் வரவு எல்லாம் சொல்லபடும். அதன் எச்சத்தை வைத்து வேறு பலன் சொல்வார்கள்.

    வெள்ளையாக எச்சம் போட்டால் நல்ல செய்தி வரும் என்பார்கள்.

    உங்களுக்கு நல்ல கற்பனை வளம்.

    ReplyDelete
    Replies
    1. // அதன் எச்சத்தை வைத்து வேறு பலன் சொல்வார்கள். வெள்ளையாக எச்சம் போட்டால் நல்ல செய்தி வரும் என்பார்கள். //

      அப்படியா கோமதி அக்கா...? இதுவரை இதை நான் கேள்விப்பட்டதில்லை.

      Delete
    2. ஆமாம் ஸ்ரீராம், எங்கள் வீட்டில் அம்மா சொல்வார்கள் காக்கா வெள்ளை எச்சம் போட்டு இருக்கு கடிதம் வரும் என்பார்கள், கடிதத்தில் நல்ல செய்தி வரும் என்பார்கள். அது போல் நடந்து இருக்கிறது.

      Delete
    3. வணக்கம் சகோதரி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எப்போதுமே காக்கைக்கு உணவிடாமல் ஒரு நாள் கூட உண்டதில்லை. ஊர் ஊராக மாறிய போதும் எந்த விடத்திலுருந்தாலும், அப்பழக்கம் இருந்து வந்தது. இப்போது வசிக்கும் இடத்தில் ஒரு காக்கைகளும் என் கண்ணில் படுவதே இல்லை எல்லாம் கழுகுகளும், புறாக்களுந்தான். தற்சமயம் புறாக்களுக்கு உணவிடுகிறேன்.

      /இங்கு சாதம் வைக்கும் வீட்டில் வந்து கத்தி கூப்பிடும் தட்டு காலி ஆகி விட்டால் மறுபடியும் ஏதாவது போட்டால் மகிழ்ச்சியோடு சாப்பிட்டு மறுபடியும் கா கா என்று கூறி போகும்./

      நீங்கள் கூறியதை கேட்கவே மனதுக்கு மகிழ்வாக இருக்கிறது.

      ஆமாம்.. காகம் வெள்ளை எச்சமிட்டால், கடிதம் வரும். அதுவும் சுபச்செய்திகள் வரும் என்றும் அம்மா வீட்டில் இருக்கும் போது பேசிக்கொள்வோம். அம்மா, பாட்டி அனைவரும் கூறியிருக்கிறார்கள். அது உண்மையாகவும் இருந்திருக்கிறது. கதையை ரசித்து படித்தமைக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. காகத்துக்கும் பசியுண்டு என்பதை மனிதர் நினைவாவது கொள்ளணும்.

    நீதிக்கதை போல் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும், பாராட்டினிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /காகத்துக்கும் பசியுண்டு என்பதை மனிதர் நினைவாவது கொள்ளணும்./

      கண்டிப்பாக.. பசி என்பதுதான் எல்லா ஜீவனுக்கும் உள்ள உரிமையான சொத்தாயிற்றே..

      நீதிக்கதை போல் இருந்தது.

      ஆம்.. காக்கை யின் நீதி. மதியாதார் வாசல் மதிக்காத என்ற நீதி..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      சென்ற பதிவுக்கு வரவில்லையே என, இந்த பதிவுக்கு எதிர்பார்த்தேன். வருகை தந்தமைக்கு மிக மிக நன்றி.

      மிக்க நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. பாத்திரப்படைப்புகளின் நோக்கில் அலசிய விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அவரவர் மனதின் எண்ணங்களை சொல்வது போல் இருந்தது என்று ரசித்து பார்த்தமைக்கு மிக்க நன்றிகள்

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. வாவ்! அட்டகாசமான கதை! செம செம செம! ரொம்ப ரசித்தேன் கதையை. ரொம்ப அழகாக அருமையாக எழுதியிருக்கீங்க கமலா சகோ!! ஹையோ...என்ன கற்பனை அசாத்தியமான கற்பனை.

    நமக்கு விலங்குகளை ஏதோ நம் கற்பனைக்கேற்ப உருவகப்படுத்தி அவற்றின் மீது நாம் அந்த உருவத்தின் கேரக்டரையும் திணித்துவிஉவது உண்டு. நரி என்றால் குள்ளநரித்தனம், தந்திரம்.. குரங்கு என்றால் ஏமாற்றும், இப்படி பல அது போலத்தான் காகமும் அது வடையைத் திருடியது என்ரு சொல்லி...

    உங்கள் கருத்தை மிகவும் ரசித்தேன். காகம் பாவம் அது கரைவது என்றால் சாப்பாட்டிற்குத்தான் கரையும். நாம் தான் ஏதேதோ கற்பனை பண்ணிக் கொண்டு...

    இறுதியில் அந்தக் குழந்தை அழகாகப் போட்டும் பயனற்று போயிற்று ஆனால் உங்கள் கருத்தை மிகவும் ரசித்தேன்...திருடன் என்று சொன்னதால் உமிழ்ந்து சென்றது என்று சொல்லியிருப்பது. அப்புறம் அந்த அம்மா ஊட்டும் போது காக்கைக்கும் கொடுப்பார் என்று பார்த்தால் கொடுகக்வே இல்லை ஹும்...என்ன அம்மாவோ...குழந்தைக்கு பாரு அந்தக் காகம் எப்படி அழகாகச் சாப்பிடுகிறது உன் தோழி பாரு என்று சொல்லி ஊட்டாமல்....

    நான் என் மகனுக்குச் சிறு வயதில் சாபபடு ஊட்டிய நினைவு. அவனுக்குக் கொடுத்ததை விட காகம், நாலுகால் செல்லங்கள் என்று அவற்றிற்குத்தான் நிறைய..

    அருமையான கதை...ரொம்ப ரொம்ப உங்கள் கற்பனையை ரசித்தேன் மெச்சினேன். எனக்கு இப்படிக் கற்பனையில் தோன்றலியே எழுதவரலியே என்றும் நினைத்துக் கொண்டேன்..ஹா ஹா ஹா..பாராட்டுகள்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் மனம் நிறைந்து பாராட்டியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


      /நான் என் மகனுக்குச் சிறு வயதில் சாபபடு ஊட்டிய நினைவு. அவனுக்குக் கொடுத்ததை விட காகம், நாலுகால் செல்லங்கள் என்று அவற்றிற்குத்தான் நிறைய../

      ஹா.ஹா ஹா ஹா. தங்கள் அன்பான நினைவுகளை கிளறி விட்டு விட்டேனா? நீங்கள் உங்கள் மகனுடன் கூட அந்த அளவிற்கு காகம், நாலுகால் செல்லங்கள் என மிகவும் அவைகளை நேசித்திருக்கிறீர்கள் என புரிந்து கொன்டேன். உங்களின் பாசமான நேசிக்கும் குணத்திற்கு பாராட்டுக்கள்.

      தங்களை விடவா நான்.. தங்களின் எழுத்து திறமை கற்பனை வளத்திற்கு முன்னால் நானெல்லாம் சிறு தூசி.
      எனினும், தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள்.

      தொடர்ந்து வந்து நீங்கள் அனைவரும் கருத்திட்டு விமர்சிப்பது எனக்கு பெரு மகிழ்ச்சியை தருகிறது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. நல்ல கற்பனை வளம். நாம் சாதரணமாக எண்ணாத வகையில் வித்தியாசமான படைப்பு. காகம் பற்றிய சிந்தனையும் வித்தியாசமான கோணம். மிக மிக அருமையான கதை. கதை உங்கள் மனம், சிந்தனைகள் எல்லாவற்றையும் சொல்கிறது.

    இக்கதையும் சரி இதற்கு முன் எழுதிய இக்கால நாகரீகம் பற்றியய் கதையை வாசித்தேன் தாமதமாகத்தான். அதிலும் கூட உங்கள் மென்மையான மனதும் தெரிகிறது அது போல உங்கள் பின்னூட்டக் கருத்துகளிலும்...

    வாழ்த்துகள் சகோதரி

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /இக்கதையும் சரி இதற்கு முன் எழுதிய இக்கால நாகரீகம் பற்றியய் கதையை வாசித்தேன் தாமதமாகத்தான்/

      தாமதமொன்றுமில்லை சகோதரரே. தங்களுக்கு எப்போது முடிகிறதோ அப்போது வந்து படியுங்கள்.

      நான்தான் அப்போதே பதிவுலகில் வந்தும், இது நாள் வரை என் சங்கோஜ சுபாவத்தால், உங்கள் இருவரையும் ரொம்பவே மிஸ் பண்ணி விட்டேன்'னு
      வருத்தப்படுகிறேன். இப்பவும் தங்கள் இருவரின் நட்புகள் தப்பாது என்றும் தொடர பிரார்த்திக்கிறேன்.

      வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அன்னையர் தின வாழ்த்துக்கள். என் கதைக்கு உடன் வருகை தந்து பாராட்டிய நல்லுல்லங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    சற்று உடல்நல குறைவாக உள்ளது. (ஜுரம்) அதனால் அனைவருக்கும் தனியாக உடன் பதிலளிக்க முடியவில்லை. நாளை விரிவாக அனைவருக்கும் பதில் தருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete