Thursday, May 10, 2018

கைபேசி.. ...

நினைவுகளின் சுவாரஸ்யங்களை பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
இதுவும் நினைவுகள் சார்ந்த பதிவின் ரகந்தான்.

அந்த காலத்தில் பொதுவாக  நட்பு மற்றும் உறவுகளுக்குள் தொடர்பென்பது கடிதங்கள் வாயிலாகத்தான். கார்டு, இன்லேன்ட் கவர்கள் இதற்கு பயன் பட்டது. கொஞ்சம் அதிகப்படியாக கதை அடிக்கும் பழக்க முள்ளவர்கள் வெள்ளைத் தாளில் எழுதி (இது அவரவர் விருப்பம். எத்தனை தாள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கவர் ஒட்டி அதற்கு தகுந்த ஸ்டாம்ப் ஓட்டுவதற்கு  வசதி படைத்தவர்கள் எவ்வளவு தாள் வேண்டுமானாலும் கதைகள் எழுதலாம்.) அனுப்புவார்கள். இப்படி போய் சேரும் கடிதங்கள் இரண்டொரு நாளில் தகவலை கொண்டு சேர்த்து விடும். ஒரு திருமணம், நல்லசெய்திகள் விழாக்கள் இவற்றை பகிர்ந்து கொள்ள பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே,  உறவுகள் வெகு தூரமாயின் ஒரு மாதத்திற்கு முன்பே தகவல் தெரிவித்து விருந்தோம்பும் பழக்கங்கள் இருந்தது. மற்றபடி உறவுகள் சந்தித்து கொண்டு அளவளாவி மகிழ்வது இந்த குறிப்பிட்ட சந்தர்பங்களில்தான். அங்கே சந்தோஷம்  அள்ள அள்ள குறையாத நதியாக பிரவாகம் எடுத்தபடி இருக்கும்.

இந்த கார்டு, கவர் போக விரைவில் தகவல் சென்று சேர வேண்டுமென்பதற்காக தந்தி முறையும் இருந்தது. ஆனால் இதை முக்கால்வாசி ஒருவர் தவறி விட்டாலோ, அல்லது, உடல் நலகுறைபாடு காரணமாக மிகவும் மோசமுற்ற நிலையில் ஒருவர் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் போதோ,  என்ற அவசரத்திற்கு மட்டுமே இதை பயன் படுத்தினர்.  நல்ல விஷயங்களை  பெரும்பாலும் இது தாங்கி வருவது அரிதுதான்.

இதை கூறியதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நாங்கள் வசித்தது சிறுஊர்தான். (பிறந்த வீடு ) கிராமமும் இல்லா, நகரமும் இல்லா ஒரு நடுத்தரம்.  ஒரு சமயம்  உறவின் இல்லத் திருமணத்திற்கு எங்கள் அப்பா சென்று விட்டு வந்து ஒருமாதம் சென்றிருக்கும்.  ஒருநாள் நடுநிசியில் தந்திச்செய்தி வந்து அக்கம் பக்கம் அனைவரும் நித்திரையில் எழுந்து வந்து என்னவோ ஏதோ வென்று விசாரிக்க வந்து விட்டனர். அந்தளவுக்கு தந்தி என்றால் அப்போது பயம். விஷயம் ஒன்றுமில்லை... திருமணத்திற்கு வந்திருந்த ஒரு உறவு எங்கள் வீட்டிலும் பெண் இருப்பதை தெரிந்து விசாரித்த பின்,  'எனக்கு தெரிந்த விடத்தில் ஒரு நல்ல பையன் வீட்டார் இருக்கிறார்கள். அவர்களை இந்த முகவரியில் அனுகவும்' என்ற சுபச் செய்தி தாங்கி வந்திருந்த செய்தி .. பகலில் மூடிய தாளில் செய்தி வந்தால் ஒரளவு பயத்தை வெளிக்காட்டாது படித்தபின் சந்தோஷமோ, சஞ்சலமோ  எந்த உணர்வுக்கும் தயாராகலாம். அது இரவில், அதுவும் நடுநிசியில்  பேயும், நாயும் பாய் போட்டு படுத்துறங்கும் வேளையில் வந்தால், நாங்கள் பதறாமல் என்ன செய்ய முடியும்? அந்த விஷயத்தை தலை போகிற அவசரத்தோடு, அர்த்த ராத்திரி வந்து சேரும்படியாகவா  அனுப்ப வேண்டும்  அந்த சம்பவம் அருகிலிருந்தவர்கள் வாய்க்கு அவலாக பத்து நாட்களுக்கு மென்று கொண்டிருந்தனர்.  அதன் பின் அந்த உறவின் பெயரை சொன்னாலே, ஓ.. அர்த்த ராத்திரியில் அலற அடித்தவரா? என்ற பட்டப் பெயர்தான் அவருக்கு.

ஆனால், இப்போதெல்லாம் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் காலம் மாறி விட்டதில், கடிதங்களின் தந்திகளின் தொடர்புகள் அறவே நின்று விட்டதோ என எண்ண வைக்கிறது. நல்லது, கெட்டது அனைத்திற்கும் தொலை பேசிதான். அதுவும் இந்த கைபேசியும், கையும் பிரிக்க முடியாத ஒட்டுதல் நட்பு ஆகி விட்டது. அது அழைத்து வரவழைத்த எங்கு சென்றலும்,((நல்லது, கெட்டது போன்ற விடங்களுக்கு தான்..) சம்பந்த பட்டவர்களுடன் அந்தந்த விஷயங்கள் குறித்து இரண்டொரு வார்த்தைகள் பேசுவது சரி,... அதன் பின் கையும், பேசியும் இணைபிரியாத நண்பர்களாகி, வேறு வேறு உறவுகளுடனோ, நட்புடனோ விவாதத்திற்கு ரெடியாகி விடுவார்கள்.

விஷேசங்களுக்காக வந்திருக்கும் குறிப்பிட்ட உறவுகளுடன் வேறு ஒரு உறவின் இல்ல விஷேடங்களுக்கு செல்லும் போது பேசிக் கொள்ளலாம் என்ற தைரியத்தையும் இந்த கைப்பேசி கற்றுக்கொடுக்கும். உயிர் இல்லாமல் கூட எப்படியோ வாழ்ந்து விடலாம் (அது எப்படி என்று கேள்வியெல்லாம் கேட்க கூடாது. உடல் தானம் என்றெல்லாம் இருக்கிறதே..)  உயிர் இல்லாவிடினும் உடல் இயங்கும்.
கைபேசி இல்லாவிடில் கைகள் இயங்காது
உயிர் போனா திருப்பி வாங்க முடியாது... கை பேசி போனா மறுபடி உடனே வாங்க லைன்னா  உயிரே போய் விடும். இதெல்லாம் கைபேசியின் புகழ் மாலைகள்... அஷ்டடோத்திரங்கள்.

இத்தனை புகழ் இதற்கு தேவையா எனக் கேட்போருக்கு, 'ஆமாம்' என்பதே என் கருத்து. ஏனெனில் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல்..'  .கணினியில் எலி பிடித்து  அதன் வாலாட்டி, கீ போர்ட் அடித்து, நம் நினைவு சிதறும் போது காலாட்டி, கண்மூடி யோசித்து பதிவெழுதி பதிலெழுதி அதை தேய்க்கடித்து  அதனை விட்டு டேப்லெட் தாவி, அதுவும் டேப்லெட் போட முயற்சிக்கும் போது கைபேசியுடன் இணைந்து, பதிவுகள் பல எழுதி பல மணி நேரங்கள் தினமும் பேசியுடன், பேசாமல் பயணிக்கிறேன். அதனை வைத்து கொண்டு அதன் மூலம் பிறருடன் பேசியோ,  அதனை கீழே வைத்து விட்டு அனைவருடன் பேசவோ இயலாத ஒரு நிலையில், கைபேசி எனது கை கணினியாகிப் போனது. பின் என் புகழ் மாலைகள் கைபேசிக்கு எப்படி தேவையில்லாமல் போகும்.... கைப்பேசி என் தொல்லை பொறுக்காது கையறு நிலைக்கு வரும் முன், முதலில் கை கொடுத்த கணினி சரியாக வேண்டும். பிரார்த்திக்கிறேன். ....




15 comments:

  1. ஓ... கணினி ரிப்பேரா? ஆனாலும் கைபேசியில் இவற்றை எல்லாம் செய்வது சற்றே கடினமும் கூட. பல இடங்களில் ரசிக்கும்படி இருந்தன வார்த்தைகள். கணினி சீக்கிரம் சரியாகட்டும். தந்தி சிரிக்க வைத்தது. எங்கள் வீட்டிலும் அதுபோன்ற சம்பவம் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து கருத்துக்கள் தெரிவித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      கணினி சரியாகட்டும் என்ற தங்களது பிரார்த்தனைகளுக்கும் நன்றிகள்.

      தந்தி என்றாலே கொஞ்சம் பயந்தான். ஓ தங்கள் வீட்டிலும் தந்தியால் மறக்க முடியாத சம்பவங்களா? சுவாரஸ்ந்தான்.

      பதிவை ரசித்ததற்கும், பாராட்டுக்கும் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. கடிதம் எழுதுவதில் எங்கள் உறவுகள் ஸ்பெஷலிஸ்ட்கள். வாரத்தட்டில் இரண்டு மூண்டு கடிதப் பரிமாற்றங்கள் இருக்கும். பதிலுக்கு பதில் என்பதும் இன்றைய பின்னூட்டங்கள் போல...

    ReplyDelete
    Replies
    1. //வாரத்தட்டில் //

      * வாரத்தில்

      Delete
    2. வணக்கம் சகோதரரே


      கடிதம் எழுதுவதில் எங்கள் உறவுகள் ஸ்பெஷலிஸ்ட்கள். வாரத்தில் இரண்டு மூன்று கடிதப் பரிமாற்றங்கள் இருக்கும். பதிலுக்கு பதில் என்பதும் இன்றைய பின்னூட்டங்கள் போல.../

      ஆமாமாம். அந்த காலத்தில் இப்படித்தான் கடித பரிமாற்றல் காரணமாய் தபால்நிலையத்தில் கார்டுகள் கவர்களும் இண்லெண்ட் லெட்டரும் நல்ல விற்பனை ஆயின. எங்கள் அப்பாவும் மாதந்திர மளிகை சாமான் வாங்குவது போல் காடுகளும் கவர்களும் வாங்கி கொண்டேயிருப்பார். வீட்டில் எப்போதும் தடங்கலில்லாமல் இவைகள் இருந்து கொண்டேயிருக்கும்.

      இன்றைய பின்னூட்டங்கள் போல... ஹா ஹா ஹா ஹா ஹா அன்றைய கடிதங்கள் அந்த இடத்தை பிடித்தது.. உண்மைதான்.

      கைபேசியில் பதில் அடிக்கும் போது, ஒவ்வொரு வார்த்தைக்கு பதிலாக, வேறு வேறு வார்த்தைகள் புதிதுபுதிதாக ஒவ்வொரு அர்த்தத்தை சுமந்தபடி வருகிறது.

      பதிலளிக்க நேரம் என்னவோ நிறைய எடுத்துக்கொண்டாலும், நான் நிறைய தமிழ் வார்த்தைகளை இதனால் கற்றுககொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. என் அப்பா தொடங்கி வைக்க, நாங்களும் தொடர்ந்த ஒரு வழக்கம்.. இன்லெண்ட் லெட்டரில் உள்ளே துளியூண்டு இடம் கூட விடாமல் எழுதிய பிறகு, (மடித்து வைக்கும் ப்ளிப்பில் கூட) வெளியில் அனுப்புனர் முகவரி எழுதும் இடங்களிலும் விஷயங்கள் எழுதி இருப்போம். தபால்காரர் சிரிப்பர்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      எழுதுவது என்பது நல்ல வழக்கம். கடிதங்கள் எழுதுவது எழுததாற்றலை வளர்த்தது.

      /என் அப்பா தொடங்கி வைக்க, நாங்களும் தொடர்ந்த ஒரு வழக்கம்.. இன்லெண்ட் லெட்டரில் உள்ளே துளியூண்டு இடம் கூட விடாமல் எழுதிய பிறகு, (மடித்து வைக்கும் ப்ளிப்பில் கூட) வெளியில் அனுப்புனர் முகவரி எழுதும் இடங்களிலும் விஷயங்கள் எழுதி இருப்போம். தபால்காரர் சிரிப்பர்!/

      உண்மை ஹா ஹா ஹா ஹா
      இருபத்தைந்து பைசாவுக்கு அந்த இடத்தை ஏன விட வேண்டும் என்று தோனும். அதை விட மறந்து விட்ட முக்கியமான விஷயங்கள் அப்பத்தான் சட்டென்று நினைவுக்கு வரும். அந்த இடத்தில் நுனுக்கி எழுத வைக்கும். சே.. இன்னும் கொஞ்சம் இடமில்லாமல் போயிற்றே என்ற மெலிதான கோபம் கூட வரும்.
      இனிமையான நினைவுகள். இது நம் சந்ததிகளுக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தமும் வருகிறது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. கடிதம் எழுதும்போது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது உண்மையே..

    இன்று அலுவலகத்தில் எழுதுபவர்களைத் தவிர மற்றவர்களுக்கு எழுத்து அவசியமற்றதாகி விட்டது.

    கைப்பேசியில் பதிவு எழுதுவது பொறுமையான விடயமே... நான் கருத்துரை எழுதவே கஷ்டப்படுகிறேன்.

    ரசிக்க வைத்த நினைவுகளே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கடிதங்கள் எழுத்ம் போது பதிலை எதிர் நோக்குவது அதனால் அடுத்து எழுதும் சுவாரஸ்யம் அனைத்தும் இருந்தது.

      ஆம் இன்று எழுதும் பணிகள் குறைந்து விட்டது. அதனால் தழமிழார்வமே குறைந்து போகிறதோ என்னவோ..


      /கைப்பேசியில் பதிவு எழுதுவது பொறுமையான விடயமே... நான் கருத்துரை எழுதவே கஷ்டப்படுகிறேன்./

      டேப்லெட்லில் கூட மடமடவென எழுதினேன். கைபேசி கடினமான உள்ளது.. நாம் ஒன்று அடித்தால் அது ஒன்று வருகிறது. அதுதான் பதில் எழுத லேட்டாகிறது.
      பழகி வருகிறேன்.

      ரசித்ததற்கும் பாராட்டுக்கள் தந்ததற்கும் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. //இன்லெண்ட் லெட்டரில் உள்ளே துளியூண்டு இடம் கூட விடாமல் எழுதிய பிறகு, (மடித்து வைக்கும் ப்ளிப்பில் கூட) //

    ஸ்ரீராம் சொல்வது போல் இப்படிதான் நாங்களும் எழுதுவோம்.

    கடிதம் எழுதி பதில் எதிர்பார்த்து இருந்த காலம் மிக இனிமையான காலங்கள்.

    பதிவு அருமை.

    கணினி சரியாக வேண்டும். பிரார்த்திக்கிறேன். ....//

    நானும் உங்களுடன் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ

      /கைப்பேசியில் பதிவு எழுதுவது பொறுமையான விடயமே... நான் கருத்துரை எழுதவே கஷ்டப்படுகிறேன்./

      ஆம்.. உண்மைதான்.. என் நினைவுகளையும் தங்கள் கருத்துக்கள் மலர செய்தது. அந்த இடத்தில் கூட விடாமல் நம் எழுத்துத்திறமைகளை புகுத்தி விடுவோம். ஹா ஹா ஹா ஹா

      கடிதம் எழுதி உறவுகளுடன் தொடர்பு வைத்திருந்த காலங்கள் மிக இனிமையானவை.. இப்போது உடனுக்குடன் பேசி அதை உடனே மறந்தும் விடுகிறோம்.

      கணினி சரியாக வேண்டும் என்று என்னுடன் தாங்களும் பிரார்த்தனை செய்ததற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. கடிதப் போக்குவரத்து அந்தக் காலத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம். கடிதம் வந்தால் அதைப்பற்றி பேசிப்பேசி மகிழ்வார்கள். தந்தி வயிற்றில் புளியைக் கரைக்கும். இன்று கார்டு இன்லாண்ட் லெட்டர் கவர் தந்தி மணியார்டர் எல்லாம் பழங்கதைகளாகிவிட்டன. நவீன எலக்ட்ரானிக் யுகம் இவற்றை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டது. பழைய நினைவுகளைக் கிளரிவிட்ட நல்ல பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      /கடிதம் வந்தால் அதைப்பற்றி பேசிப்பேசி மகிழ்வார்கள். தந்தி வயிற்றில் புளியைக் கரைக்கும். இன்று கார்டு இன்லாண்ட் லெட்டர் கவர் தந்தி மணியார்டர் எல்லாம் பழங்கதைகளாகி விட்டன./

      கடிதங்கள் ஸ்வாரஸ்யமானவை. அடுத்து என்ன மாதிரி எழுதுவார்கள். அதற்கு பதில் நாம் எப்படி எழுத வேண்டுமென்ற வார்த்தை தயாரிப்புகள் இனிமையானவை . தந்தி என்ற சொல்லே தாங்கள் கூறுவது போல் வயிற்றில் புளி கரைக்கும் விஷயந்தான்

      நல்ல பதிவு என்றதற்கு, பாராட்டுகளுக்கும் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. வாழ்த்து தந்திகள் அந்த காலத்தில் உண்டு என்றாலும் தந்தி என்றால் பயம் தான். என் அப்பா இறந்ததை தந்தி தான் வந்தது நம்பவில்லை. திடீர் என்று இறந்து விட்டதால் நம்ப முடியவில்லை 51 வயதுதான் அப்பாவிற்கு.
    இப்போது தந்தி என்று பேசினாலே என் அப்பாவின் நினைவுகள் வந்து விடும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      /வாழ்த்து தந்திகள் அந்த காலத்தில் உண்டு என்றாலும் தந்தி என்றால் பயம் தான். என் அப்பா இறந்ததை தந்தி தான் வந்தது நம்பவில்லை/

      தாங்கள் மீள் வருகை தந்து சொல்லிய செய்திக்கு வருத்தமடைகிறேன். தங்கள் வருத்தமான பழைய நினைவுகளை உண்டாக்கியதற்கு வருந்துகிறேன்.

      எனக்கும் தந்தி என்ற பழைய நினைவுகளை பகிரும் போது என் அப்பாவின் நினைவுகள் வந்தது. ஏனெனில் அவரும் தீடீரென எங்களை விட்டு சென்று விட்டார் என்ற செய்தியை தாங்கிய தந்தி ஒரு நடு இரவில்தான் வந்தது. அதனால்தான் தந்தி என்ற வார்த்தைக்கு அந்த காலத்தில் அவ்வளவு பயம்.

      ஆனால் ஒன்று.. நாம் இருக்கும் வரை அவர்கள் மறைந்து விட்டாலும், நம்மை பெற்ற உறவுகளின் நினைவை என்றும் மறக்க இயலாது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete