Thursday, September 6, 2018

இழந்த கண்கள்


இதுவும்  ஆயிரத்து, தொழாயிரத்து  எழுபத்து ஆறாம் ஆண்டில், எனக்காக படைத்ததுதான். (எனக்காக என்றால் என்னுடைய தீவிரமான  எழுத்தார்வத்திற்காக .. இது இப்போது என் பதிவில் வெளி வந்திருப்பது இப்போது என் எழுத்தையும் விரும்பி ரசிக்கும் உங்களுக்காக.....)

இந்தக் கதைகள் ( எழுதியது இன்னமும் நிறைய உள்ளது.) படைக்கும் போது  எனக்கு எழுத்தாற்றல் சுத்தமாக இல்லையெனத்தான் கூறுவேன். (ஏனெனில் அப்போது என் பிறப்பு படிக்கல்லில் எண் பதினேழில் கால் பதித்திருந்தேன். அந்த பொழுதில் என் கற்பனைச் சிறகுகள் சிறிதளவுதான் முளைத்திருந்தன... (அதுவும் நான் அனுமானித்ததுதான்.) அனுபவங்கள் என்ற வாழ்க்கை பாடங்களில் ஒரு சின்ன பரிசோ, இல்லை பட்டமோ கூட வாங்கத் தெரியாத காலங்களது.)  ஆனாலும் கதைகள்  எழுதும் ஆர்வம் மிகுதியாக இருந்தது. 

அதனால் அந்த  ஆர்வ கோளாறுகள் ஒரு உருவாகி வடிவமடைந்து "கதைகள்" என்ற பெயரையும் பெற்று நிலைத்து எழுந்து விட்டன அதன் பின் அமைந்த குடும்பச் சூழல் கற்பனை சிறகுகளை மேலும் வளர்க்கத் தெரியாமல் நிறுத்தி விட்ட.து. போகட்டும் !.. இப்பவும் சிறகுகள் முழுமையடையாத கற்பனை பறவையாகத்தான் இருக்கிறேன். 

எனினும்,
  
இதை இப்போது இந்தக் கதைகளை படிக்கும், படித்து கருத்திடும் உங்களனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்

இழந்த கண்கள். 
======  ========

என்ன இது விநோதா? தங்கை தன் முன் வைத்தப் பணத்தைப்பார்த்து திகைப்புடன் கேட்டான் ரகுநாதன்...

  ''நம் தங்கை மாலினியின் திருமண  செலவிற்கு என்னால் இயன்ற உதவி அண்ணா..'' விநோதா நிதானமாக கூறினாள்.

   ''நீ செய்றது கொஞ்சம் கூட நன்னாயில்லை விநோதா'' நான் ஒருத்தன் மரமாட்டம் இருக்கிற போது நீ உதவி செய்யத்தான் வேண்டுமா?'' கோபத்துடன் கேட்டான் அவன்.

    '' இருந்தாலும் அந்தமரத்தோட நிழலிலேயே வாழ்நாள் முழுவதையும் கழிச்சிடலாம்'ன்னு, நாங்க நினைக்கிறது முட்டாள்தனம் அண்ணா ''

 '' அது அந்த மரத்தோட கடமை, விநோதா.."

எது அண்ணா ?'' தன்னாட நிழல்லே இருக்கறவங்கதானே, என்ன வேணுமானாலும் பேசலாங்கற அலட்சியத்திலே, தூக்கி எறிஞ்சிடறதா ?''

                  '' விநோதா.... ''

 '' ஸாரிஅண்ணா, '' உணர்ச்சிவசபட்டு ஏதேதோ பேசிட்டேன். மனசுலே வச்சுக்காதே... நீ, உன் தங்கைக்கு என்னவெல்லாம்  செய்யனும்'ன்னு, ஆசைபடறியோ, அதேமாதிரி ஆசைப்பட எனக்கும் உரிமையுன்டு. ஏன்னா, அவ எனக்கும் தங்கை. நீ அவ கல்யாணத்துக்கு'ன்னு, வச்சிருக்கிற  பணத்திலே, இது கால்வாசிகூட பெறாது.. ஆனா என்ன செய்றது, என்னோட மூணுவருஷ உழைப்பின் ஊதியம் இவ்வளவுதான். இதையாவது செய்ய முடிஞ்சதேங்கிற திருப்தி என் உள்ளத்தை நிறைய செய்யறது அண்ணா!!. இதை தயவு செய்து வேணாம்'ன்னு, ஒதுக்காமே ஏத்துக்கோ... இது அந்த ராமருக்கு அணில் செஞ்ச உதவி மாதிரி.. நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடு... எனக்கு ஆபீஸீக்கு லேட்டாயித்து... நான் வர்றேன் '' படபடவென பொரிந்து விட்டு வெளியேறினாள் அவள்.

  தானும் காரியாலயத்திற்கு போக வேண்டுமென்பதை மறந்து விட்டவனாய், ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தான் ரகுநாதன்...

இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவி மைதலிக்கு பரிந்து தங்கை மீது சுள்ளென்று விழுந்ததை, அவள் எவ்வளவு நாசூக்காய் சுட்டி காண்பித்துவிட்டு போய் விட்டாள், திகைப்பிலிருந்து விடுபட நீண்ட நேரமாயிற்று, அவனுக்கு.... 

          '' மாலினி ...''

   '' என்ன அக்கா ?'' கண்களை துடைத்தவாறு நிமிர்ந்தாள் மாலினி..

          '' ஏன்  அழறே ?''

       ''  சாம்பாரில் சொஞ்சம்  காரம் துாக்கலாய் இருக்கு'ன்னு.. மன்னி.." மேற்கொண்டு முடிக்க முடியாது விம்மினாள் அவள்.

  '' பைத்தியம்!! இதுக்கு போய் அழறியா?  மன்னிதானே சொல்றாள்'ன்னு பேசாமே இருக்கனும், இல்லாட்டா முகத்திலே அறைஞ்சாப்லே.. ஏதாவது பேசிட்டு வரனும் .. உனக்கு சமைக்க தெரியலைன்னா, பக்குவமா எடுத்து சொல்லனும்..  இல்லாட்டா அவளே தன் கைபாகத்தை காட்ட வேண்டியதுதானே... சற்று உஷ்ணத்துடன  கேட்டாள் விநோதா.

  '' உஷ்  அக்கா '' மன்னி வந்துட போறா.. '' என்னமோ அடுக்கிண்டே போறியே.. எனக்கு உன் மாதிரி பொறுமையா, நிதானமா, பேச வராது. பயத்துலே சட்டுன்னு அழுகைதான் வருது.''

 ''  முதல்லே பயத்தை விடு மாலினி மனுஷாளுக்கு மனுஷா ஏன்பயப்படனும்,,, நீ என்ன அவளுக்கு கொறைஞ்சி போயிட்டியா???

 ''  இன்னும் உன்னை போல வேலைக்கு போய் சம்பாதிச்சாளோ, என்னைக்கும் நிறைஞ்சே இருப்பா...  நா, இப்ப என்ன சொல்லிட்டேன்  நாளைக்கு ஒர் ஆத்துக்கு போப்போற பொண்ணு சமைக்க நல்லா கத்துக்கோன்னேன் அது தப்பா 'அங்கு வந்த அவர்களின் மன்னி மைதிலி பரபரவென்று பொரிந்தாள்.

   ''மன்னி..'' என்று தடுமாறியபடி எழுந்தாள் மாலினி.

  '' எதுக்கு நிறுத்திட்டே, உன் தங்கைக்கு இன்னும் நல்லா புத்தி சொல்லி கொடு.. உன்னை மாதிரி ஒருத்தனை மனசிலே நினைச்சிண்டு அழவும், வேலை பாக்கிறேன், வேலைபாக்கிறேன்னுட்டு, ஆபீஸிலே எல்லாரோடையும்.... ''

மன்னி,, போதும் நிறுத்து... இதை விட ஆயிரம் ஊசிகொண்டு நீ என்னை குத்தியிருக்கலாம். ஆனா அதைவிட கூர்மையா இருக்கு உன் பேச்சு " என்றாள் விநோதா.

  '' ஆஹா!!! யார்கிட்டே உன் பசப்பெல்லாம்??? எனக்கு தெரியாதாக்கும் உன் கதையெல்லாம்.....'''

    ''  மன்னி.... ''மனசின் வலி ஏற்படுத்திய  கோபத்தில் குரல்  உசத்தினாள் விநோதா.

      '' என்ன அங்கே கலாட்டா? ''

அப்போதுதான் வெளியிலிருந்து வந்த ரகுநாதன் அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தான்...

   ஒரு நிமிடத்தில்  தன் முகபாவத்தை மாற்றிக்கொண்ட விநோதா '' நத்திங் ''என்றபடி சிரித்தாள்.

   " எங்களுக்குள் ஆயிரம் இருக்கும். அதப்பத்தி உனக்கென்ன அண்ணா ? நீ உன் வேலையை பாத்துண்டு போ..." என்ற விநோதா அவன் தோளில் கைவைத்து விளையாட்டாய் அறைக்கு வெளியே தள்ளிக்கொண்டு போனாள்.

                       அத்தை....''

 அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய விநோதா வாசலில் விளையாடி கொண்டிருந்த தன் அண்ணனின் ஒரே மகன் ரவி ஆவலுடன் ஓடி வந்து அவள் காலை கட்டிகொள்ளவும் அவனை பாசத்துடன் தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டாள்.

    "அத்தை.. எனக்கு என்ன வாங்கி வந்திருக்கே?" ரவி ஆவலுடன் கேட்கவும், ''ம்.. ரவிகுட்டிக்கு இன்னைக்கு என்ன தெரியுமா நீ ரொம்ப நாளா கேட்டுகிட்டிருந்த இந்த பொம்மையை அத்தை இன்னிக்கு கஷ்டபட்டு தேடி வாங்கி வந்திருக்கேனாக்கும்..." என்று விநோதா நீட்டி முழக்கி சொல்லவும் ரவி அவசரமாய் அவள் பிடியிலிருந்து இறங்கியபடி "கொடு அத்தை.. சீக்கிரம்" என்று அவசரப் படுத்தினான்.

    விநோதா சிரித்து கொண்டே அவள் பையிலிருந்து எடுத்துகொடுக்கவும் ரவி அதை பார்த்த மகிழ்ச்சியில் "ரொம்ப நல்ல அத்தை" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

 விநோதா அவனை தூக்கி அணைத்தவாறு  "போக்கிரி பயலே.. வாங்கி வந்தால் நல்ல அத்தையாக்கும், இல்லாட்டி.." என்றவாறு சிரித்துக் கொண்டு கேட்டு விட்டு, அவனை இறக்கி விட்டவள். ''சரி, நீ சமர்த்தா விளையாடிண்டிரு அத்தை உள்ளே போய் டிரஸ் மாத்திண்டு உன் கூட விளையாட வா்றேன் சரியா?'' என்று கொஞ்சிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.

    ''ஏன்னா... உங்க சின்ன தங்கைக்கு ஒருவழியா கல்யாணத்தை முடிச்சாச்சு, அடுத்து  பெரியவளுக்கும் ஏதாச்சும் ஓரு இடத்துலே பாத்து ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேணாமா? ''

 தன் அறைக்குள் நுழைய போன விநோதா தன்னை பற்றி அண்ணாவும் மன்னியும் பேசுவதை கேட்டு சட்டென்று நின்றாள். ஹாலில் அமர்ந்து அவர்கள் பேசுவதால், அதை கடந்து செல்லும் தன் அறைக்கு எப்படிச் செல்வது என்ற எண்ணமும் அவள் கால்களை சற்றே கட்டிப் போட்டது.

   "ஏன்னா.. உங்களைத்தான் கேட்கிறேன்,"  மன்னி விடாமல் திரும்பவும் ஆரம்பித்தாள்.

 "என்னை என்னதான் செய்ய சொல்றே மைதிலி?" அண்ணா நொந்த குரலில் அலுத்துக்கொள்வது விநோதாவிற்கு புரிந்தது.

 "உங்க தங்கைக்கு ஒரு கல்யாணத்தை பண்ணச்சொல்றேன்.. ஏதோ நடந்தது நடந்து போச்சு.. எத்தனை நாளைக்குத்தான் இப்படியே  இருக்க முடியும்..."

            '' அவ சம்மதிச்சாதானே...''

 "அவளை சம்மதிக்க வைக்கனும்... ஏதோ எனக்கு பட்டதை சொன்னேன்.. அப்புறம் உங்கபாடு.. உங்க தங்கைபாடு.. எனக்கென்ன வந்தது.. ஊரே சிரிக்கிறது நம்ப மானம் போகமே இருக்னும்னா காலாகாலத்திலே பண்றதை பண்ணுங்கோ அவ்வளவுதான் சொல்வேன்.  கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் பண்ணி பிரோயஜனமில்லை."

     ''என்ன சொன்னே? என் தங்கையை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவளை மாதிரி எல்லோரும் இருந்தா போறும்,'' என்றான் ரகுநாதன் உஷ்ணம் ஏறிய குரலில்...

  "உங்களுக்கு தெரிஞ்சா போதுமா? ஊர்லே எல்லோரும் என்ன பேசிக்கிறான்''னு கொஞ்சம் கவனிக்கனும்.. கண்டவனோடையும் பழகிட்டு...

    "போதும் நிறுத்து.. உன் தங்கையை நினைச்சிண்டு பேசறியா? வீட்டைவிட்டு மனம்போனபடி ஒடினவதானே அவ.. உங்காத்திலேயே  இப்படி நடந்திருக்கும் போது நீ இந்த ஆத்தைபத்தி பேச உனக்கு தகுதியில்லை, அதுவும் என் தங்கையை பத்தி தப்பா பேசினேன்னா.. உன்னை என்ன பண்ணுவேன்''னு'' எனக்கே தெரியாது..." என்று கோபத்தின் மிகுதியில் கத்தினான் ரகுநாதன்.

   "நீங்களும் கொஞ்சம் நாக்கை அடக்கி பேசுங்கோ... உங்க குடும்பத்தை பத்தி தெரியாதாக்கும்.. உங்கப்பா போன பிறகு நாலாத்துலே  சமையல் வேலை மட்டும் செஞ்சு உங்களையெல்லாம் இப்படி படிக்க வசசி காப்பாத்தியிருக்க முடியுமா உங்கம்மாவாலே?  எங்கம்மா ஏற்கனவே உங்க குடும்பத்தை பத்தி எங்கி்ட்டே சொல்லியிருக்கா.. ஏதோ நீங்கள்லாம் நல்லவா''னு''தான் எங்காத்துலே என்னை உங்களுக்கு கட்டிவச்சா.. தாயை போல பிள்ளைம்பா, அதுக்கு ஏத்தாற்போல் உங்க தங்கையும்.... கொஞ்சமாவா ஆடினா.. என்னமோ என்கிட்டே பாயறேளே?"

 "என்னடி சொன்னே? நானும் போகுதுன்''னு'' இவ்வளவுநேரம் பொறுமையாயிருந்தேன்.. " என்ற ரகுநாதன் '' பளார்'' என்று அவள் கன்னத்தில் அறைந்தான்.

   "என்னை அடியுங்கோ.. கொல்லுங்கோ.. என்னை சொல்லனும் உங்களை போய் கட்டிண்டேன் பாருங்கோ.." என்று கத்திவிட்டு மைதிலி அழுவது விநோதாவிற்கு கேட்டது.

   "சே, என்னதான் இருந்தாலும் ஒரு பெண்பிள்ளையை இப்படி அறைந்திருக்க௬டாது. பொறுமைக்கு மறுபெயராக விளங்கும் அண்ணாவா இப்படி செய்தான்" என்று விநோதா திகைத்து போயிருந்தபோது.. முகம் சிவக்க கோபத்துடன் வெளிவந்த ரகுநாதனும் அவளைகண்டு திடுக்கிட்டு நின்றான்.

 ''எல்லாவற்றையும் கேட்டிருப்பாளோ...''

     "ஸாரி விநோத், உன் மன்னி தெரியாமே உன்னைபத்தி என்னவெல்லாமோ பேசிட்டா.. அவளுக்கு நான் ரொம்ப இடம் கொடுத்திட்டேன்னு எனக்கு இப்பத்தான் புரியறது."

  "நான் அதைபத்தி கவலைபடலேண்ணா.. என் மனசு சுத்தமா, திடமா, இருக்கற வரைக்கும் யார் என்ன சொன்னாலும் பொறுத்துப்பேன். அவ என்னதான் சொன்னாலும் நீ மன்னியை அடிச்சது தப்பு. நான் உன்கிட்டே இதை எதிர்பார்க்கலே.. " நிதானமாக ௯றினாள் விநோதா.

     "அது உன்னாலேதான்..." என்றபடி சிவந்து போயிருந்த கன்னத்தை கைகளால் தடவியபடி அழுதுகொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள் மைதிலி.

   '' எது மன்னி?''சற்றும் பதட்டமில்லாது விநோதா வினவினாள.

  "எதுவா? பழசையெல்லாம் கனவா மறந்துட்டு ஒரு கல்யாணத்தை பண்ணிக்காமே என் குடும்பத்திலே குட்டையை குழப்புறே பாரு, அதுதான். உன்னைப்போய் உன்அண்ணாவும் தலையிலே தூக்கி வச்சிண்டு கொண்டாடுறார்."

                     '' மைதிலி...''

 "அண்ணா, போதும். உங்க சண்டை சச்சரவெல்லாம்..." என்ற விநோதா மைதிலியின் அருகில் வந்தாள்.

  "மன்னி நீ என்னாலே அண்ணாகிட்டே அடிவாங்கினதுக்கு என்னை மன்னிச்சிடு.. அப்புறம், உனக்கே தெரியும், காலேஜ் லைப்பிலிருந்து நானும் ராஜசேகரும் பழக ஆரம்பிச்சோம்.. அந்த நட்பு நாளடைவில் வலுப்பட்டு திருமணத்தில் வந்து நின்னப்போ.. நான் உன்கிட்டேயும் அண்ணாகிட்டேயும் சம்மதத்திற்காக எவ்வளவு கெஞ்சினேன். அது வரைக்கும் என் விருப்பத்திக்கெல்லாம் வளைந்து கொடுத்த அண்ணாவும் இந்த ஒரு விசயத்துக்கு மட்டும் கொஞ்சம் பிகு செய்தான். அதன் விளைவு முடிவு கொஞ்சநாள் கழித்துதான் தெரிந்தது. அந்த முடிவு  எனக்கு சாதகமாக இருக்கவே, அதை ஆவலோடும், சந்தோஷத்தோடும் அவரிடம் சொல்ல விரைந்த போது என்னை அதே மகிழ்ச்சியுடன் சந்திக்க வந்து கொண்டிருந்த அவருக்கு, அந்த விபத்து ஏற்பட்டது. "இந்த பாவியை மணப்பதை விட சாவை சந்திப்பது மேல்" என்று கடவுள்  நினைத்தானோ என்னவோ? அவரை தன்னிடமே அழைத்துக்கொண்டுவிட்டான்.  நான் ஒரு முடிவாடு வந்திருப்பதை அறியாமல் அவர்  முடிவின் எல்லைக்கே சென்று என் வாழ்க்கையையும் முடித்து விட்டார். ஒவ்வொருத்தரை போல இதயத்தில் ஒருவரை சுமந்து கொண்டு  வெளி உலகத்திற்காக ஒருவரின் ''மனைவி" என்ற பட்டத்தில் வாழ எனக்கு தெரியாது, என்னால் முடியவும் முடியாது. இந்த ஜென்மத்தில்  அவர்தான் எனக்கு கணவர். அவரை நினைத்துக்கொண்டே அவருடன் மனதால் வாழ்ந்து கொண்டே, நான் இருக்கிற வரை என் காலத்தை  கழித்து விடுவேன். இந்த ஊர் உலகத்துக்கு முன்னாடி நான் திருமணமாகமல் கெட்டு போய் கொண்டிருக்கிற ஒரு கன்னிப்பெண், ஆனால்  என்னை பொறுத்தமட்டில் நான் பூவோடும் பொட்டோடும் என் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு "நித்திய சுமங்கலி". என்னைப்பார்த்து, என் செய்கையை பார்த்து இந்த ஊர் சிரிக்கட்டும், உலகம் சிரிக்கட்டும், நான் அதை பத்தி கவலைப் படலே... ஆனா நீயும் என்னை புரிஞ்சுக்காமே, என்னென்னவோ பேசறே பாரு, அதை நினைச்சுதான் நான் ரொம்ப வருத்தப் படறேன் மன்னி..." மிகவும் உணர்ச்சிவசப்பட்டு  பேசிய விநோதா சற்று நிறுத்தினாள்.

 "கண் கலங்க அவளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் ரகுநாதன்.

"பழசையெல்லாம் இப்ப ஏன் கிளறுறே? முடிவா இப்ப சொல்லு?  எங்க திருப்திக்காக, கெளரவத்திற்காக, கல்யாணம் பண்ணிப்பியா,  இல்லை,  இன்னும் ஊர் வாய்க்கு அவலாகத்தான் இருக்க போறியா?"  என்று மைதிலி கேட்ட விதம் அவள் இன்னும் இளகவில்லை  என்பதை விநோதாவிற்கு எடுத்துக் காட்டியது.

   '' மன்னி.. நீ, இன்னமும் என்னை புரிஞ்சுக்கலே.. அதை பத்தி நா கவலைபடலே, இன்னொருத்தர் திருப்திகாகவெல்லாம், எம்மனசை மாத்திக்க நான் தயாராயில்லை.. அப்படி உங்க திருப்திதான்  பெருசுன்னா, என் உயிரை தர்றேன். என்னை இன்னொருத்தனுக்கு தரமாட்டேன்,  இதுதான் என்பதில்.''  உறுதியான குரலில் ௬றிவிட்டு தன் அறைக்கு திரும்பிய விநோதா  சட்டென்று நின்றாள்.

   "மன்னி, நான் கேக்கறது தப்புன்னா என்னை மன்னிச்சிடு.  என் நிலைமை உனக்கு வந்திச்சுன்னா..  ஐ...மீன், அண்ணாவுக்கே ஏதாச்சும்  ஒண்ணு ஆயிடிச்சின்னா, நீ இன்னொரு கல்யாணம்  பண்ணிப்பியா? அந்த நிலமையிலே என்னை வச்சி யோசிச்சு பாரு.. நான் இப்படி  ஒரு கேள்வி கேட்டதுக்கு நீதான் காரணம். இருந்தாலும் ஐ.யாம்.. ஸாரி..."

விநோதா அறைக்குள் போய் விட்டாள்.

  திகைப்பிலிருந்து நீங்கிய மைதிலி பதறிய குரலில் பகைமையை மறந்தவளாய், ''கேட்டேளா, உங்க தங்கை பேச்சை, தேகத்திலே, எவ்வளவு கொழுப்பு இருந்திச்சின்னா, சொந்த மன்னின்னு பாக்காமே, இப்படி பேசிட்டு போவா.." என்றாள் படபடப்புடன்.

   "அவ கேட்டது ரொம்ப கரெக்ட்" என்றபடி சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டே அங்கிருந்து அகன்றான் ரகுநாதன்.


            "என்ன விஷயம் அண்ணா? என்னமோ தனியா பேசனும்ன்னு ௬ட்டிண்டு வந்துட்டு இப்போ எதுவுமே பேசாமே எங்கேயோ வெறிச்சிண்டு உட்காரந்திருக்கியே?" விநோதாதான் பேச்சை ஆரம்பித்தாள்.

  "ஸாரி விநோத், அந்த காலத்துக்கே போயிட்டேன். நம்ப அம்மா எவ்வளவு நல்லவ..  நம்ப அப்பா போன பிறகு அம்மா நம்பளையெல்லாம் எவ்வளவு கஷ்டபட்டு  காப்பாத்தினா? கல்மிஷ மில்லாத அந்த உத்தமியை போய் இந்த பாவி என்னவெல்லாம் பேசிட்டா.." குமுறிய குரலில் வருத்தம் தொண்டையடைக்க பேசினான் ரகுநாதன்.

  "நீ இன்னும் அதையெல்லாம் நினைச்சிண்டிருக்கியா அண்ணா? நான் அப்பவே மறந்திட்டேன். மன்னி பேசினதை மட்டுமில்லை,  யார் என்ன பேசினாலும் சரி "டேக் இட் ஈசி" ன்னு எடுத்துக்கனும் அப்பத்தான் இந்த உலகத்திலே நிம்மதியாய் வாழ முடியும்."

 "எல்லாத்தையும் அப்படி எடுத்துக்கலாம் விநோதா, ஆனா நம்மை பெத்த அம்மாவை நம்மகிட்டயே தூஷனையா பேசறபோது என்ன செய்ரோம்ங்கிற நினைவு இல்லாமே போயிடறது.."

  மன்னியை கை நீட்டி அடித்ததற்காகவும் அண்ணா வருத்தப் படுகிறான். என்பதை உணர்ந்து கொண்ட விநோதா அவனை சமாதானபடுத்தும்  குரலில் "விடு அண்ணா... மன்னி ஏதோ தெரியாமல் பேசி விட்டாள்.அவ சமயத்திலே இப்படித்தான்  பேச தெரியாமே பேசிடுவா... நீ அதை நினைச்சி கவலை பட்டுண்டே இருக்காதே" என்றாள் .

  "இல்லை விநோதா, எனக்கு இன்னமும் மனசு தாங்கலே.. உனக்கு ஒன்னு தெரியுமா? நம்ப அம்மா இந்த உலகை விட்டு போறதுக்கு  முன்னாடி ஒருநாள் என்னை தனியா கூப்பிட்டு பேச தடுமாறிய அந்த முடியாத நிலையில், '' ரகுநாதா, உன்னை எப்பிடியோ கஷ்டபட்டு படிக்க வச்சுட்டேன். இனிமே ஒரு நல்ல  வேலையை சம்பாதிச்சிண்டு நீ நல்ல நிலைக்கு வர்னும்முனு நா அந்த பகவானை வேண்டிக்கிறேன். உனக்கு நா  அந்த சிரமத்தை மட்டும்  கொடுத்துட்டு போகமே, இன்னும் இரண்டு பிரச்சனை வேறேயும் வச்சிட்டு போறேன். உன் இரண்டு தங்கைகளைதான் சொல்றேன். இனிமே அதுகளை உன் இரண்டு கண்களா நினைச்சிக்கோ, அந்த இரண்டு கண்களையும் என்னைக்கும் இழந்துடாமே வச்சு காப்பாத்துறது  உன்னோட பொறுப்பு எனக்காக நீ இதை செய்வேன்'னு'' நம்பறேன்.'' அப்படின்னு சொல்லிட்டு போனா, அதை எப்ப நினைச்சிண்டாலும்  அம்மாவுக்கு  கொடுத்த வாக்கை நா சரியா நிறைவேத்தலையோன்னு எனக்கு தோணறது விநோத்'' கண்களில் நீர் மல்க ௬றினான் ரகு.

    "நீ சுத்தி வளைச்சு எங்கே வர்னேன்னு எனக்கு புரியறதண்ணா... அம்மா சொன்னபடி பாத்தாலும், நீ ஒரு கண்ணை தானமா கொடுத்துட்டு  நிக்கிறே, அம்மா என்னைக்கும் இழந்துடாமே வச்சுக்க சொன்னதை மறந்துட்டே.." விநோதா புன்னகையுடன் உண்மையை எடுத்து ௬றினாள்.

 "நீ சொல்றது தப்பு விநோதா... அந்த கண்ணோட நன்மைக்காகத்தான் அந்த கண்ணை தானமா கொடுத்தேன். தெய்வமா வாழ்ந்திண்டிருக்கும் நம்ப அம்மாவுக்கு அது நன்னா புரியும்.." சற்று அழுத்தமாக ௬றினான் ரகுநாதன்.

  "அண்ணா, இனிமே இந்த மாதிரி யெல்லாம் பேசாதே, கூடப் பிறந்து இத்தனை வருஷமா என்னோட பழகிட்டும். என்னை நீயும் சரியா, புரிஞ்சிகில்லையே , இந்த கண்ணுக்கு இனிமே எந்த நன்மையும் வேண்டாம் அண்ணா, இந்த கண் எப்பவும் உன்னோட இருக்கதான்  பிரியபடறது. அதை புரிஞ்சுக்காமே பேசாதே, இப்போ நம்ப அம்மா உயிரோட இருந்தாகூட என்னோட முடிவு சரிதான்னு, சொல்லுவா.. அப்படி பிடிவாதமா அந்த கண்ணை நீ இழக்கத்தான் போறேன்னா, அதை ஒரேடியா அழிச்சிடு அண்ணா, தானமா மட்டும் கொடுத்துடாதே,  உணர்ச்சிகளின் பாதிப்பில் பேச முடியாது" திணறினாள் விநோதா.

     "விநோத் ஸாரிம்மா, உன்னை இனிமே எப்பவும் நிர்பந்திக்க மாட்டேன். என்னை மன்னிச்சுடும்மா.."

            சிறிது நேரம் இருவருக்குமிடையே ஒரு வருத்தமான மெளனம் நிலவியது. நாம் பேசியது தவறோவென்ற சிந்தனை இருவரையும் வாய் மூடிய மெளனியாக்கியது.

  "விநோத், நம்ப இரண்டு பேர்களோட வாழ்க்கையிலும் இப்போ கொஞ்ச நாளா ஒரு முள் நெருடிண்டே இருக்கு அந்த முள்ளை ஒரேடியா எடுத்தெறிய போறேன் அதை சொல்லத்தான் நா உன்னை இங்கே அழைச்சிண்டு வந்தேன் அதை மறந்திட்டு  ஏதேதோ பேசி உன்னை புண்படுத்திட் டேன்."

       "நீ எண்ணன்னா சொல்றே? புரியாமல் கேட்டாள் விநோதா.

 "மாலினியை கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு... .அவளைப்  பத்தி இனி எனக்கு எந்த கவலையும் இல்லை ஏன்னா, அவாத்திலே அவளை நன்னா  பாத்துக்கிறா... மாப்பிள்ளையும் தங்கம்! இப்போ என்னோட கவலையெல்லாம் உன்னை பத்தி மட்டுந்தான் விநோத்மா, நான் இருக்கிற வரை  உனக்கு ஒரு வருத்தம் வராமல் நீ சந்தோஷமா இருக்கனும் அது மட்டுந்தான் என் வாழ்க்கையின் லட்சியம். உனக்காக என் வாழ்க்கையில் நான் எதை வேணும்னாலும் இழக்க தயாரா இருக்கேன்.  உன் மன்னி வேறே எப்பவும் உன்னை ஏதாவது சொல்லி புண்படுத்திண்டே இருக்கா, உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி என்னையும் நச்சரிச்சிண்டே இருக்கா, இவளாளே நம்ம நிம்மதி தினமும் பறி போறது அதனாலே யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். அவளை அவ பிறந்தாத்ததுக்கு அனுப்பிட்டு நாம ரெண்டு பேரும் நம்ப படிப்புக்கு ஏத்த உத்யோகத்தை தேடிண்டு எங்கேயாவது கண்காணாத ஊருக்கு போய் விடலாம் சாகற வரைக்கும் உனக்கு நான் துணை எனக்கு நீ துணை, முடிஞ்சா உன் மன்னிக்கு விவாக ரத்து கூட தந்துடறேன். அவ வழியிலே அவ வாழ்க்கையை அமைச்சிப்பா, எனக்கு  நீ தான் முக்கியம் விநோத்" கண்களில் கண்ணீர் ததும்ப லேசாக விசும்பினான் ரகு.

   ''அண்ணா...'' எதிலும் நிதானமாக இருப்பவள் பொது இடம் என்று கூட பாராமல் சற்று வாய் விட்டு கத்தி விட்டாள் விநோதா.

  கண்கள் சற்று நேரம் இமைக்க மறந்து அதிர்ச்சியில் சமைந்தன.

  "உனக்கென்ன பைத்தியமா அண்ணா? இன்னைக்கென்னவோ எல்லாமே விசித்திரமா பேசறே?" திகைப்பிலிருந்து விடுபட்டு அவள் இந்த  கேள்வியை கேட்க சில வினாடிகள் ஆயின.

 "நோ விநோத்.. நான் தெளிவாதான் இருக்கேன். அவ அனாவசியமா உன் விருப்பபடி நீ வாழறதுக்கு தடையாவும், என் வாழ்க்கையிலேயும் என்  நிம்மதிக்கு குறுக்கீடாகவும், என்னோட பொறுமைக்கே சோதனையா இருக்கா, அதனாலேதான் இந்த முடிவு" பதட்டமில்லாமல் சொன்னான் ரகுநாதன்.

 "அண்ணா... இதுலே என்னோட பிரச்சனையும் கொஞ்சம் கலந்திருக்கு, ஐ மீன்.. நீ மன்னியை அப்படி விடறதுக்கு நானும் ஒரு காரணமா  இருக்கேன். அதனாலே என்னோட யோசனையையும், நான் சொல்வேன் நீ அதை தட்டாமே ஏத்துக்கனும்."

   "தாராளமாய் விநோத், உன் கருத்தை நான் என்னிக்குமே மறுப்பேனா?அதற்குதானே உன்னைஇங்கே தனியா கூட்டிண்டு வந்து ஆலோசனை கேட்கிறேன்."

  "தேங்க் யூ அண்ணா... நான் இன்னும் ஒரு வாரத்திலே யோசிச்சு ஒரு முடிவை சொல்றேன். அது வரைக்கும் இது விஷயமாய் நீ மன்னி கிட்டே கண்டிப்பா நடக்காமே எப்போதும் போலவே பழகணும் சரியா.... நாம இப்போ பேசினதையெல்லாம் தப்பி தவறி ஒரு வார்த்தை கூட மன்னி கிட்டே சொல்லிடாதே.. மேற்கொண்டு இந்த விஷயத்துலே ஆழமா காலை விடக்௬டாது தெரிஞ்சுதா.. குறிப்பா நான் என்னோட முடிவை  சொல்றவரைக்கும் இதைப் பத்தி மறந்துடனும் சரியா?" கண்டிப்பான குரலில் ௬றினாள் விநோதா.

        "சரி விநோத்.. புறப்படலாமா?" உன் யோசனைப்படியே ஆகட்டும். ." என்றபடி எழுந்தான் ரகுநாதன்.

   "எனக்காக..... என் மனம் வருத்தப்படக்   கூடாது என்பதற்காக...... தனிமரமாக நிற்கும்  என் ஒருத்திக்காக. ...ஒரு குடும்பத்தையே......ஒருகூட்டையே...... கலைக்க தயாராயிருக்கியே அண்ணா, என் மீது உனக்கு அவ்வளவு பாசமா? அதுக்கு ஒரு எல்லையே இல்லையா.. எனக்காக உன் வாழ்வையே தியாகம் செய்ய துணிஞ்சிட்டியே அண்ணா. .. நீ ரொம்ப... ரொம்ப..... இமயமலை மாதிரி உயர்ந்திட்டே என் சிறிய மனசாலே  உன்னை அண்ணாந்து பாக்க முடியலேண்ணா , உன்னை புரிஞ்சிககாமே எத்தனையோ நாள் தாழ்வா நினைச்சதுக்கு விஷ்வரூபம் எடுத்தது மாதிரி  உயரே.... உயரே .... போயிட்டேயேண்ணா, சில சமயம் உன்னை பத்தி தவறா நினைச்சி மனசுகுள்ளே சில நிமிஷங்கள் வெறுத்தற்கு எனக்கு பெரிய  தண்டனையா கொடுத்துட்டேயேண்ணா, என்னை மன்னிச்சுடு அண்ணா.. .மன்னிச்சுடு.! இந்த பிறவியில் உன் தங்கையாய் பிறந்த பாக்கியத்தை அடைந்த  நான், இனி  எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கு தங்கையாகவே பிறக்கணும்னு அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேண்ணா.." அவனை மனதுக்குள்  நினைத்து  ஜபித்துக் கொண்டே புலம்பியபடி கண்களில் நீர்மலக அவனைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள் விநோதா.

தன் கையிலிருந்த சூட்கேசை கீழே வைத்து விட்டு தன்னையும் தன்மனைவியையும் ஒருங்கே நிற்க வைத்து  காலில் விழுந்து நமஸ்கரித்த விநோதாவை பார்த்து திகைத்தான் ரகுநாதன்.

   "என்ன விநோதா இதெல்லாம்??"

  "என்னை ஆசிர்வதித்து விடை கொடு அண்ணா..."

  "விநோதா..." என்று அலறியபடி காலில் விழுந்தவளை தூக்கி நிறுத்தியவன், அவளை உற்று பார்த்தவாறு "விநோத்ம்மா உனக்கு என்ன ஆச்சு?" என்றான் பதறிய குரலில்.

  "எனக்கு ஒன்றுமில்லையண்ணா, நீ என் மேலே வச்சிருக்கிற பாசத்தை தியாகமா மாத்துறத்துக்கு முன்னாடி நான் உன் கிட்டேயிருந்து விலகிட தீர்மானிச்சிட்டேன் அண்ணா அதுக்காக என்னை மன்னிச்சுடு,  என் ஆபீஸீலே என்னை டெல்லிக்கு மாத்தியிருக்காங்க அண்ணா.. . இன்னும் ஒருவாரத்திலே வேலையிலே ஐாயின் பண்ணனும். அதுக்கு நான் இன்னைக்கு கிளம்பினாதான் சரியாயிருக்கும்.."

  "விநோதா என்கிட்டே நீ இதுவரைக்கும் சொல்லவேயில்லையே...? சற்று கோபத்துடன் கேட்டான் ரகுநாதன்.

  "அன்னைக்கு உங்கிட்டே அதை சொல்லனுந்தான் நினைச்சிட்டிருந்தேன்  ஆனா நீ வேற ''விஷயத்துக்கு'' போயிட்டதாலே சொல்ல வாய்ப்பு இல்லாமே போயிடுத்து... நானும் அதை மனசுலே வச்சுகிட்டுத்தான்  இன்னும் ஒரு வாரத்திலே  என் முடிவை சொல்றதா  சொன்னேன் அண்ணா,  நான் இந்தாத்திலே இருந்து போயிடறதுனாலே, நீ கற்பனை பண்ணின  அந்த ''விஷயத்துக்கு'' ஒரு காரணமும் போயிடுத்துன்னு வச்சிக்கோ.... இனிமே நீ அந்த ''விஷயத்தை'' கனவிலே கூட நினைக்க மாட்டேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணி கெடுக்கும்... அதுதான் எனக்கு நீ பண்ற உதவியாகவும் இருக்கும்... நம்ப அம்மாவின் ஆத்மாவும் நல்லபடியா சாந்தி அடையும்..." நிதானமாக  கூறி நிறுத்தினாள் விநோதா.

  '' விநோதா...''  வார்த்தைகள் வராமல் நின்றான் ரகுநாதன்.

     புரியாத புதிர் ஒன்றை கண்டு விட்டவள் போல் இருவரையும் மாறி, மாறி வெறித்து கொண்டு நின்றாள் மைதிலி.

       "மன்னி , ஒரு தாய்க்கும் மேலா என்னை இது வரைக்கும் கவனிச்சிண்டே,... அதுக்கு நான் உனக்கு ரொம்ப கடமைபட்டிருக்கேன். நான் டெல்லியிலிருந்தாலும் சரி, வேறே எங்கேயிருந்தாலும் சரி,  உன்னை மறக்கவே மாட்டேன் மறக்கவும் முடியாது. அண்ணா,  ஒரு அசட்டு காரியம் பண்ண இருந்தான் அதுக்கு மூலகாரணம் நான்தான்.... நல்லவேளை.. !
நான் அதிலிருந்து தப்பிச்சிட்டேன். ஆனா நான் அதுக்காகத்தான் பயந்துண்டு ஓடறதா நினைச்சிக்காதே. ! அண்ணா நினைச்ச காரியம் தெய்வத்துக்கு கூட பொறுக்கலே, அதான் " சந்தர்பங்கிற" பெயரிலே வந்து மூலக் காரணமாயிருந்த என்னை தள்ளிண்டு போறது..... அதுக்காக நான் அந்த தெய்வத்துக்கு நன்றி சொலறேன்.   அங்கேயிருக்கிற என்மேலே நீ சந்தேகப்படாதே!. நான் என் அண்ணாவுக்கு தங்கை. .. அவன் மேலே உனக்கு நம்பிக்கையிருந்தா என்னையும் நம்பு. அவ்வளவுதான் சொல்வேன்..  நீ எத்தனையோ தடவை என்னை என்னென்வோ சொல்லியிருந்தாலும், எனக்கு உன் மேலேயிருக்கிற அன்பும் மதிப்பும் குறையவே குறையாது. நான் போயிட்டு வர்றேன்  அங்கே போன பிறகு நான் தங்கியிருக்கும் விலாசம் தெரியபடுத்துறேன் அடிக்கடி கடிதம் எழுது, உன் உடம்பை பாத்துக்கோ..." என்ற விநோதா மீண்டும் ஒருமுறை அவள் காலில் விழுந்து  நமஸ்கரித்தாள்..

         "அண்ணா,  நான் உன்னோடேயே எப்பவும் இருக்கனும்னு ஆசைபட்டேன். நான் உன்னை விட்டு போறதுக்கு நீதான் காரணம்.  ஆமாம், அண்ணா  நீ மட்டும் அன்னைக்கு அந்த ''விஷயத்தை'' ஆரம்பிக்கலேன்னா, என்னை எங்காபீஸிலே டெல்லிக்கு மாத்தியிருக்கிறதை  உன்கிட்டே சொல்லிட்டு, மறு நாளே என்அண்ணாவை விட்டு என்னாலே பிரிந்திருக்கமுடியாது, அதனாலே, இந்த வேலையை விடறேன்னு சொல்லிடவான்னு உங்கிட்டே கேக்கலாம்னு நினைச்சேன். ஆனா உன்கிட்டே பேசின பிறகு.....என் எண்ணத்தை மாத்திண்டேன்."

   "விநோதா, என்னை மன்னிச்சிடும்மா தயவு செய்து உன் பிரயாணத்தை நிறுத்து. நான் இனிமே எந்த வித பிரச்சனையும் உனக்கு கொடுக்க  மாட்டேன்மா, பிராமிஸா.. , என்னுடைய அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைச்சிடுறேன். என்னை நம்பும்மா, நீ என்னை விட்டுட்டு  எங்கேயும் போயிடாதே,..." குரல் உடைய உருக்கமாக கூறினான் ரகுநாதன்.

  "நோ அண்ணா.. அது இனிமே முடியாத காரியம்  நான் வேலையை ஒத்துண்டாச்சு, இரண்டாவது நான் இங்கேயிருந்தா உன் மனசுலே அந்த மாதிரி எண்ணங்கள் தலைதூக்கிண்டேதான் இருக்கும்  இந்த தனிப்பறவைக்காக, நீ ஒருகூட்டிலிருந்து பிரிஞ்சு வர முயற்சிக்காதே  அண்ணா, இது ஒரு சிறகொடிஞ்ச  கட்டுபாட்டுக்குள்ளே அடங்கிய, ஓருசுதந்திர பறவை. ஆனா நீ.......... நீ.......... அப்படியில்லை..." மேற்கொண்டு  பேசமுடியாமல் தடுமாறிய விநோதா,  சற்று நிறுத்தி  சுதாரித்துக் கொணடு ரகுநாதனின் அருகில் சென்று அவன் கைகளை  பற்றியபடி  "அண்ணா, எனக்கு ரயிலுக்கு நேரமாயிடுத்து. நான் போயிட்டு வர்றேன். நான்அடுத்த தடவை சந்திக்கும்போது உன் மனசுலே உதயமான  அந்த விஷ மரம் வேரோடு சாய்ஞ்சு நீ பழைய அண்ணாவா, அந்த ராமர் மாதிரி... பழைய ரகுநாதனா, காட்சி தரணும்.." என்ற விநோதா பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு பறப்பட்டாள்.

      ''விநோதா..''  அவளை பிரிய மனமில்லாமல் தவித்தான் ரகுநாதன்.

  "அண்ணா, மன்னி... ரவி எழுந்தா என்னை தேடுவான். அதான் அவன் தூங்கறச்சேயே கிளம்புறேன். அவனை பத்திரமா பாத்துக்கோங்க. 'கூடிய சீக்கிரம் அத்தை வந்துடுவாள்னு சொல்லுங்கோ'" என்று ரவியின் பிரிவை நினைத்து சற்று கண் கலங்கியவள்... கண்களை துடைத்தபடி அண்ணா, மன்னி, "நான் இதுவரை ஏதாவது தப்பா நடந்திண்டிருந்தாலும், உங்கள் மனம் புண்படும்படி தப்பா பேசியிருந்தாலும் ரவிக்கு மூத்த குழந்தையா  நினைச்சி என்னை மன்னிச்சிடுங்கோ, நான் போயிட்டு வர்றேன்.."

விநோதா கண்களிலிருந்து மறைந்து விட்டாள்.

      பாதி புரிந்தும், பாதி புரியாத பாவத்திலும், பேச சக்தியற்று மலைத்துப் போய் நின்றிருந்தாள் மைதிலி.

   "அம்மா, உன்னோட  சொல்லை நான் காப்பாத்தலேம்மா, நான் உனக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றலேம்மா, நீ எனக்கு கொடுத்த, என்னை பத்திரமா பாத்துக்கச்சொல்லி கொடுத்த.. இரண்டு கண்களிலே ஒண்ணை தானமா கொடுத்துட்டேன் இன்னொன்னு தானவே போயிடுச்சுமா, ஆகக்கூடி  நான் இப்போ இரண்டு கண்களையும இழந்த குருடனாய் தவிக்கிறேனம்மா.." தனக்குள் முணுமுணுத்தபடி  கண்களில் நீர் வடிய நாற்காலியில் சாய்ந்தான் ரகுநாதன். 

22 comments:

  1. விநோதா விநோதமானவளாக இருக்கிறாள்.

    பாசத்தின் போராட்டம் படிப்பவரையும் கண் கலங்க வைத்து விட்டது.

    வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      பாசத்தின் போராட்டாமென கதையை ரசித்துப் படித்து வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். தங்களின் ஊக்கமிக்க கருத்துரைகள் நான் இன்னமும் கதைகள் எழுதிட உறுதுணையாக இருக்குமென நினைக்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ஆம். வினோதா பொருத்தமான / காரணப் பெயர்தான்!

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      கதையின் திருப்பத்திற்கு ஏற்றபடி அவள் பெயரும் அமைந்து விட்டது. நான் எழுதும் போதும் யோசிக்காமலே அந்த பெயரும் வந்து அமர்ந்து விட்டது. நீங்கள் கூறிய பிறகுதான் ஒற்றுமையை நானும் யோசிக்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. கண்கலங்க வைக்கும் கதை. மைதிலி மாறியிருக்க வேண்டுமே என்று மனம் ஆசைப்பட்டது. ஆனாலும் மைதிலி தான் செய்ததை நல்ல வார்ததைகளில் சொல்லியிருந்தால் அதன் பொருளும் அக்கறையும் வேறு... அருமை.

    இந்தக் கதை எங்கள் ப்ளாக்கில் வந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. பேராசை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ

      காலை வேளையிலும் நான் எழுதிய கதையை பொறுமையாக படித்து நல்லதொரு கருத்து சொன்னதற்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      மைதலியின் சுபாவம் அப்படித்தான் என்கு மாதிரி கதை... இனிமேல் சூழ்நிலைகளினால் கொஞ்சம் மாறலாம்.

      /இந்தக் கதை எங்கள் ப்ளாக்கில் வந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. பேராசை!/

      இது கொஞ்சம் பெரிதாக அமைந்து விட்டது. இரண்டாவதாக அந்த கால சூழலை வைத்து அந்த காலத்தில் எழுதியது. அதனால்தான் எ.பிக்கு அனுப்ப தயங்கினேன். வேறு ஒன்றுமில்லை. மனம் விட்டு சொன்னதற்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. மைதிலி தனது மாமியார் பற்றி பேசியது தவறு...

    தலைப்பு மட்டும் வேறு ஏதாவது வைத்திருக்கலாமோ....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      மைதிலி தன் மாமியாரை.அப்படி பேசியது மிகப் பெரிய தவறு. நாவடக்கம் இல்லாதவள். அதனால்தான் ரகுநாதனை அப்படி ஒரு முடிவு எடுக்க வைத்தது.

      /தலைப்பு மட்டும் வேறு ஏதாவது வைத்திருக்கலாமோ.../

      ரகுநாதனின் அம்மா தான் இறக்கும் முன் கூறியதைக் கொண்டு அந்த தலைப்பை அப்போது தேர்ந்தெடுத்தேன். உங்களுக்கு வேறு ஏதாவது பொருத்தமாக தோன்றினால் கூறுங்களேன். மாற்றி விடலாம்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மிகவும் நெகிழ்வான கதை... அருமை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ

      தங்களுடைய பாராட்டுகள் என்னை மகிழ்வடையச் செய்கிறது. தங்களுடைய ஊக்கமிகு கருத்துரைகள் என்னை மென்மேலும் எழுத வைக்குமென நம்புகிறேன். பாராட்டுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. நெகிழ்ச்சி.

    மனதைத் தொட்ட கதை. பாராட்டுகள்.

    சரியான முடிவைத் தான் எடுத்திருக்கிறார் கதை நாயகி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ

      கதையை படித்து மனதை தொட்ட கதை என்று பாராட்டி கூறியதற்கும், முடிவும் நன்றாக உள்ளதென சொன்னதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      தங்கள் ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுத்தை வளமாக்குமென என நம்புகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அம்மாவின் வேண்டுதல்படி தன் இரு தங்கைகளை நன்றாக பார்த்துக் கொண்டான் ரகுராமன்.
    இருதங்கைகளையும் கன்னிகாதானம் செய்து கொடுத்து இருக்கவேண்டியவர் தானே!
    அதற்காக குருடன் என்று சொல்வதா?
    பாசம் கண்ணை மறைக்குது என்பது இதுதானோ?

    பாசப்பறவைகளின் கதை மனதை நெகிழ வைத்து விட்டது.

    விநோதா எடுத்த முடிவு நல்ல முடிவுதான். விநோதாவால் ரகுராமன் மைதிலி இடையே சண்டை வராமல் இருக்கும்.

    கதை நன்றாக சொல்ல வருகிறது உங்களுக்கு.

    மைதிலி, மாமியார்மேலும், விநோதா மேலும் தப்பு சொல்லாமல்
    இருந்து இருக்கலாம்.

    கணவரின் தங்கைக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் ஊர் பேசும் என்று கணவரின் தங்கையிடம் சொல்லி இருக்கலாம்.




    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      /விநோதா எடுத்த முடிவு நல்ல முடிவுதான். விநோதாவால் ரகுராமன் மைதிலி இடையே சண்டை வராமல் இருக்கும்./

      விநோதா எடுத்த முடிவு சரியானது என நீங்களும் ஆமோதித்தது கூறியது எனக்கு மகிழ்வை தந்தது.

      மைதிலி அப்படி பேசியது ஒரு வகையில் தவறுதான். ஆனால் அந்தப் பேச்சின் அழுத்தம்தான் ரகுநாதனை சினங்கொண்டு ஒரு முடிவுக்கு வரச் செய்தது. நம் கதைக்கும் ஒரு முடிவை காண வைத்தது. சிலர் இப்படித்தான்.!கோபம், ஆவேசம் தலைக்கேறும் போது வார்த்தைகள் தறிக்கெட்டுப் போகும். மைதலியும் எப்படி பேச வேண்டுமென்ற விபரமில்லாதவள்.

      தாங்கள் கதையே ரசித்துப் படித்து கருத்துக் கூறி பாராட்டியிருப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
      தங்களது ஊக்கம் நிறைந்த கருத்துக்கள் என் கதை எழுதும் ஆர்வத்தை தக்க வைத்து சிறப்படைய செய்யுமென நம்புகிறேன். மிகவும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. அண்ணனின் தாய் பாசம் , தங்கையின் பாசம் எல்லாம் அழகாய் எழுத்தில் கொண்டு வந்து இருக்கிறீர்கள்.
    பாசப் போராட்டம் என்று தலைப்பு வைத்து இருக்கலாம்.
    ஒருத்தருக்கு ஒருத்தம் பாசம் காட்டுவதில் உயர்ந்து நிற்கிறார்கள்.
    அண்ணன் மகனை பிரியும் சோகம் அவன் தூங்கும் போதே போக துடிக்கும் விநோதா.
    அத்தைமேல் பிரியம் வைத்த மருமகன் எல்லாம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      கதையை ரசித்து. மிகவும் அருமையென பாராட்டியமைக்கு நன்றிகள்.
      ஆமாம்.. தாங்கள் கூறியபடியும் தலைப்பு வைத்திருக்கலாம். மிகவும் நன்றி.
      நான் எழுதியதில் இந்த கதை ஒரளவு எனக்கும் பிடித்திருந்தது. ஆனால் என் எழுத்தின் வளர்ச்சி இன்னமும் முழுமையாக என்னிடம் பிடிமானமடையவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நீங்க அனைவரும் என்னை ஊக்கப்படுத்துவதற்காக பாராட்டி கருத்து தெரிவித்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. உங்களுக்கெல்லாம் "நன்றி" என்ற வார்த்தையைதான் பதிலுக்கு பணிவுடன் தந்து கொண்டே இருக்கிறேன்.

      நேற்று உடன் உங்கள் கருத்துக்கு பதிலளிக்க இயலவில்லை. ஒன்றுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கும் போதே, இங்கு உறவின் வீட்டில் ஒரு இழப்பினால் ஏற்பட்ட சோகச் செய்தி அறிந்ததும். அங்கு சென்று விட்டு பின் இரவு வீடு திரும்பி குளித்து வேலைகள் சரியாக இருந்தது. அதனால் தாமதமாக இன்று அனைவருக்கும் பதிலளிக்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. திருமதி .லட்சுமி அவர்களின் கதையை படிப்பது போல் இருந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      /திருமதி .லட்சுமி அவர்களின் கதையை படிப்பது போல் இருந்தது/

      சகோதரி.. எழுத்துலகில் சிம்மாசனம் போட்டமர்ந்த அவர் எங்கே! எழுத்துப்படிகளில் ஏற முடியாமல் ஏறிக்கொண்டிருக்கும் நான் எங்கே....
      அவர் மலை என்றால் நான் மடு..

      இருந்தாலும் அவர் எழுத்துக்கள் மாதிரி இருக்கிறது என்றது என்னை மகிழ்ச்சிக் கொள்ளச் செய்தது.
      எங்கள அம்மா குமுதம், ஆ. வி போன்ற இதழ்களில் வந்த திருமதி லட்சுமி அவர்களின் கதைகள் அனைத்தையும் பைண்டிங் செய்து வைத்து படித்துக் கொண்டே யிருப்பார்கள்.பள்ளி முழு ஆண்டு விடுமுறை நாட்களில் எங்களுக்கும் பொறுமையாக படித்து காட்டுவார்கள்.
      பெண்மனம் நாவல் நான் வளர்ந்து நானே படிக்கும் தறுவாயில் அடிக்கடி படித்துள்ளேன். அதன் தாக்கமோ என்னவோ கதைகள் எழுதும் ஆர்வம் சிறு வயதிலேயே என்னையும் தொற்றிக்கொண்டது. தங்கள் வாழ்த்துக்களுக்கு என்மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. நல்லதொரு குடும்பக் கதை! அண்ணன், தங்கை பாசத்தை நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். தான் கொண்ட கொள்கையில் பிடிவாதமாக இருக்கும் நாயகிக்கு "விநோதா" என்னும் பெயர் மிகப் பொருத்தம். கதையின் முடிவும் நன்றாக அமைந்து விட்டது! சிறுகதைகள் இப்படி எதிர்பாராத்திருப்பங்களோடு முடிவதே நன்றாக இருக்கும். பின்னால் மைதிலியும் மனம் வருந்தித் திருந்தினாளா இல்லையா என்பதை எல்லாம் யூகத்தில் தான் விட வேண்டும். இன்னும் கொஞ்சம் சம்பாஷணைகளைச் சேர்த்துக் கொஞ்சம் நகாசு வேலைகள் செய்தால் இன்னமும் நன்றாக இருக்கும். ஆனால் உங்களிடம் சொல்றேனே தவிர எனக்கும் அதெல்லாம் தெரியாது! வராது! :) நல்ல கதை சொல்லியான உங்களுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

      கதையை படித்து ரசித்து பாசம் மிகுந்த அண்ணன் தங்கை கதை என விமர்சித்து கருத்துரை இட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி.இன்னும் கொஞ்சம் சம்பாஷணைகள் சேர்த்து... மிகவும் பெரிதான சிறுகதையாக ஆகி விடக்கூடாதேயென்ற சஞ்சலங்கள்தான்... படிப்பவர்கள் பொறுமை பறி போய் விட்டால் என்ன செய்வது என்ற பயங்கள்தான்...இந்த மாதிரி காரணங்கள்தான் கதையை சுருக்கமாக முடித்து வைத்தது. அது சரி.. நகாசு வேலைகள் என்றால்? தெரியவில்லை.

      /நகாசு வேலைகள் செய்தால் இன்னமும் நன்றாக இருக்கும். ஆனால் உங்களிடம் சொல்றேனே தவிர எனக்கும் அதெல்லாம் தெரியாது! வராது! :)/

      நானே உங்களைப்போன்ற ஜாம்பவான் களிடமிருந்துதான் எழுத்துக்களை, எழுத்துக் கோர்வைகளை கற்று வருகிறேன். உங்களுக்கு ஒன்றும் தெரியாத மாதிரி காட்டிக்கொள்கிறீர்க ளே.. தங்கள் தன்னடக்கத்தை கண்டு உண்மையிலேயே வியக்கிறேன்.

      தங்களின் ஊக்கமிகு பாராட்டுகள் என்னை மகிழ்வடையச் செய்தது. பாராட்டிற்கும், வாழ்த்துக்கும் என் மனமுவந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கமலாக்கா மனதை நெகிழ வைத்த கதை. வினோதா!! உண்மையிலேயே வினோதமானவள்தான். வினோதாவை மிகவும் பிடித்தது ...அதனால் வினோதாவின் முடிவு ஓரளவுக்குத் தெரிந்தது அதாவது ஹாஸ்டல் போவாள் என்று நினைத்தேன். ட்ரான்ஸ்ஃபர்...நல்ல முடிவு. அருமையான உணர்வுபூர்வமான கதை

    மைதிலி ம்ம்ம் என்ன சொல்ல? வார்த்தைகள் விஷமாய்...அண்ணன் தங்கை பாசம் அருமை...

    மிகவும் ரசித்தேன் கமலாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

      தாங்கள் வந்ததும் என் தளம் வந்து கதையினைப் படித்து கருத்துச் சொல்லியிருப்பதற்கு நான் மிகுந்த மன மகிழ்ச்சியடைந்தேன்.

      விநோதாவை தங்களுக்கும் பிடித்திருப்பதற்கும், அவள் எடுத்த முடிவு பிடித்திருந்ததற்கும் மிக்க மகிழ்ச்சி.
      கதையை ரசித்துப் படித்து கருத்துச் சொல்லி பாராட்டி, வாழ்த்துக்கள் தந்ததற்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி

      தொடர்ந்து வந்து எனக்கு ஊக்க மிகு கருத்துக்கள் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete