Monday, June 2, 2025

நிலையுணர்ந்த நிதர்சனம்.

 பறவைகளின் பரந்த மனது. 

"ஏன் மெளனமாக இருக்கிறாய்? வந்ததிலிருந்து ஏதும் பேசவேயில்லையே..? களைப்பாக இருக்கிறதா?" 

"களைப்பு ஒருபக்கமிருக்கட்டும்.. எனக்கு ஒரே கவலையாக உள்ளது. மனதில் நிம்மதியே இல்லை." 

"ஏன்? உடல்நிலை ஏதும் சரியில்லையா? 

" பச்.. உடல் நிலை சரியில்லை யென்றாலும், யார்தான் நம்மை கவனிக்கப் போகிறார்கள்.? அந்த இயற்கையே நம்மை குணப்படுத்தி விடும். நாமும் எப்போதும் போல் அதுவரை பொறுமை காத்து விடுவோம்." 

"பின் வேறுதான்  என்ன?" 

"உனக்கு நம்மைச் சுற்றிலும் நடப்பது புரியவில்லையா? இல்லை, தெரிந்தும் தெரியாத மாதிரி கேட்கிறாயா.? 

"தெரிகிறது. அப்படியே தெரிந்தும் புரிந்தும் என்ன செய்ய முடியுமென்கிறாய்? இது முழுக்க நம்மை இங்கிருந்து விரட்டுபவர்களின் சுயநலன்கள்.! இதில் நம் நலனைப்பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?" 

"அதோ அந்த மரத்தில் கட்டிய நம் வீடு இவர்கள் வந்து, இதுவரை இங்கு சுற்றிலும் செழித்து வளர்ந்திருந்த பச்சை பசும் நிலத்தை அவர்களின் வீடுகளை உருவாக்க வேண்டி, கொத்திச்சிதைத்து சமன் செய்த அமர்க்களத்தில், அதைக் கண்ட நம் பயத்தில், என்ன கதியாகி விட்டதென்று தெரியவில்லை அவர்களின் அந்த விரட்டலுக்குப் பயந்து, இப்போதைக்கு இந்தச் சின்ன செடியில் வந்து அடைக்கலமாகி உள்ளோம். விரைவில் இந்தச் செடியையும் களைந்து விடுவார்கள். பின் வேறு எங்கு போவது? "

" வேறு ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டியதுதான். அங்கும் இப்படித்தான் வந்து துரத்துவார்கள். அவர்களின் வீட்டில் இப்படியான துரத்தல்களுக்கு அவர்கள் வீட்டவர்களே பலியாகும் போது நம்மைப்பற்றி அவர்களுக்கு என்ன கவலை..!" 

" என்ன சொல்கிறாய்? " யார் யாரை அவர்கள் வீட்டிலிருந்து துரத்தினார்கள்?"

நமக்காவது இப்படி சேர்ந்து இருந்து பின் நம் வாரிசுகளை பெற்று அரவணைத்து ஊட்டி வளர்த்து அவர்கள் ஒரளவு வளர்ந்ததும் அவரவர்கள் செல்லும் பாதையில் போக விடை தருவது அந்த  கடவுள் தந்த நியதியாக உள்ளது. மேலும் இது நாம் இந்த உலகுக்கு வரும் போதே பெற்று வந்த வரம். ஆனால், இந்த மனிதர்களுக்கு, பெற்ற உறவுகள், பிற உறவுகள் என அன்புடன்  அரவணைத்துச் செல்லும் பண்பை இறைவன் ஊட்டி அவர்களை இங்கு வாழ படைத்திருந்தும், அவர்கள் அதைப்பின் பற்றி வாழ்வதையோ, வாழ வேண்டுமென்பதையோ நினைத்து கவலையுறாமல், அவர்களும், வளர்ந்தபின் நமக்கு இறைவன் வகுத்துத் தந்த பாதையிலேயே பயணிக்கிறார்கள். அதற்காகத்தான், அவர்களின் அந்த சுதந்திர  வசதிகளுக்காக ஏற்படுத்திக் கொள்ளும் தனித்தனி வீடுகளுக்காக, நம்மை, நம் இனத்தை, நம் சுதந்திரத்திற்கு இடையூறாக வந்து குறி வைத்து விரட்டுகிறார்கள். ஆனால், இதன் பலனை இறைவன் தரும் போது மட்டும் நொந்து கொள்வார்கள். என்ன செய்வது? எல்லாம் விதிப்பயன்.. .! 

அதோ பார்..! நம்மைப் போன்ற  ஓரினம் துணையை இழந்தோ, பிரிந்தோ தனிமையில் வாடுகிறது.மின்சார கம்பியில் மின்சாரம் நம் மீது பாயாத வேளை வரை இது மகிழ்ச்சிதான். ஆனால், அன்றொரு நாள் வேறு ஒரு நம்மினம் ...! அதுவும் அது மின்சார கம்பியில் வந்தமர்ந்த சட்டென்ற அந்த நேரம் என் கண்ணெதிரிலேயே...! அதன் முடிவும்..! அதைக்கண்டது முதல் இன்னமும் என் மனம் சரியில்லை. நமக்கென்று இந்த சோதனையை இறைவன் வகுத்தனா? இல்லை, இவையும் உலகில் அனைவருக்குமான விதியின் முடிவா? ஒன்றும் புரியவில்லை போ..! 

"பாவம் பரிதாபந்தான்..! அதைக் கண்டவுடன் உடனே சென்று காப்பாற்ற எந்த உபாயமும் நாம் கற்கவில்லயே.! . நீ சொல்வது போல இந்த  மனிதர்களின் கணக்கையும் ஆராய நாம் யார்? இறைவனின் மனக்கணக்கு அவர்களுக்கும் புரியாது. அப்படியே புரியும் போது, அவர்களின் வேதனை அவர்களுக்குத்தான். அதை மாற்ற அந்த இறைவனாலும் முடியாது. 

சரி... சரி.. வா..! கொஞ்சம் சற்று ஒய்வு எடுத்திருக்கிறோம். இப்போது நாம் பேசியதில், கொஞ்சம் மனதின் கவலையும், உடலின் களைப்பும் குறைந்துள்ளது. இனி வேற்றிடம் செல்ல நமக்கு மனதில் பலமும், உடலில் இறக்கைகள் என்ற ஆயுதத்தையும், நமக்கெனவே ஆதாயமாக தந்திருக்கிறார் அந்த இறைவன். அதைப் பயன்படுத்தி இப்போதைக்கு நல்ல மாற்றிடத்தை தேடிச் செல்வோம் வா..! "

கீழே பார்..! நம்மை அழிக்க காத்திருக்கும் இந்த மனிதர்களின் ஆயுதங்கள். அவை நாம் அமர்ந்திருக்கும் செடியை களைந்து அகற்ற வரும் முன், நம் கவலைகளை களைந்து  இறைவனிடத்தில் தந்து விட்டு இறைவன் நமக்காக  நமக்களிததிருக்கும் புது வாழ்வை ஏற்றுக் கொள்வோம். வா..! 


இப்படித்தான் அவைகள் பேசி இவ்வுலகில் வாழ்வதற்குரிய ஒரு விதமான மனமகிழ்வையும், தன்னம்பிக்கையையும் உருவாக்கி கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையின் பார்வைகளோடு, இப்புகைப்படங்களை எடுத்த நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.? பதிவை ரசித்த அனைவருக்கும் எனதன்பான நன்றிகள்.

38 comments:

  1. உங்கள் சிந்தனை, எங்கள் வளாகத்தில் எங்கள் டவரைக்கைப் பின்னால் இருந்த மைதானத்தையும், அதில் இருந்த தண்ணீர் தேங்கும் சிறு பகுதியில் காக்கைகள் கூட்டமாக வந்து குளித்ததும், அவ்வப்போது மயில்கள் வந்ததும், இப்போது அந்தச் சுவடே இல்லாமல் அங்கு ஒரு டவர் வந்து குடியிருப்புப் பகுதியாக மாறிவிட்டதையும் நினைவுபடுத்துகிறது. ஒரு நாள் பகிரணும்.

    மின்சாரக் கம்பியில் அமர்ந்து பறவைகள் இறக்காது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      பதிவுக்கு உடனடியாக வந்த தங்களின் முதல் வருகைக்கும், தந்திருக்கும் நல்ல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தங்கள் வளாகத்தின் அருகிலும் பறவைகளின் நடமாட்டம் குறைந்து விட்டதா? அடாடா. வருத்தந்தான்..! ஆம். இப்போது எல்லா இடத்திலும், குடியிருப்புகாக வீடுகள் பெருகி விட்டன. மக்களின் இந்த வீடு வாசல் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாமும் இத்தகைய அப்பார்ட்மெண்டில் குடி இருப்பதால், ஒன்றும் சொல்ல முடியவில்லை. மரங்களையும், அதில் குடியிருக்கும் பறவைகளையும், மக்கள் கண்ணெதிரே அகற்றுவதைப் பார்க்க மனது கஸ்டமாக உள்ளது.என்னசெய்வது? நாமும் ஒரு குற்றவாளியாக இருக்கும் போது, இப்படி அவைகளின் சிரமங்களைச் சொல்லி மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

      பொதுவாக மின்சார கம்பியில் அமரும் பறவைகளுக்கு மின்சாரம் தாக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அன்றொரு நாள் இதே கம்பியில் வந்தமர்ந்த புறா ஒன்று உயரயழுத்த மின்சாரத்தால் அடிப்பட்டு துடிதுடித்த வண்ணம் கீழே விழுந்ததைப் பார்த்தேன். அதன் பிறகு அதனிடம் சிறிதும் அசைவில்லை. அன்றெல்லாம் எனக்கு மனதே சரியில்லை. என் மனதின் காயத்தைதான் இன்று பதிவில் வெளிப்படுத்தினேன். தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. மயில், செம்போத்து இரண்டையும் காணவில்லை. மற்றபடி பல பறவைகள், குயில் உட்பட இருக்கின்றன.

      Delete
    3. நாங்கள் இருக்கும் ஏரியாவில் மயில் நடமாட்டம் இல்லை. செம்போத்துவை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். குயில், காகம், மைனாக்கள், அதிகமாக புறாக்கள், கழுகுகள் எப்போதும் உண்டு

      Delete
  2. வளாகத்தின் சிறு மரங்களில் (அழகுக்காக அமைக்கப்பட்டவை) காக்கை கூடு கட்டுவதும், அதில் குயில் முட்டை இடுவதும், மாநகராட்சியின் கண்காணிப்பால், வெட்டமுடியாத பெரிய மரங்களில் கழுகு கூடு கட்டுவதும், சிறு புதர்களில் சிறிய பறவைகள் வாழ்வதும் இப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /வெட்டமுடியாத பெரிய மரங்களில் கழுகு கூடு கட்டுவதும், சிறு புதர்களில் சிறிய பறவைகள் வாழ்வதும் இப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது/

      ஆம்.. ஆனால் ஒரு பெரிய மரத்தை வெட்டும் போது அதில் அலறிய கழுகின் ஒலி இன்னமும் என் காதில் கேட்டுக் கொண்டேயுள்ளது. சின்ன புதர்களில் கூடு கட்டி வாழ்பவைகள் தீடிரென இப்படி அழிவை சந்திக்கும் போது அதன் மனது எப்படி படபடக்கும். கொடுமைதான். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. எங்கள் அபார்ட்மெண்ட் வாசலில் ஒரு மரம்.  அது செழித்து வளர்ந்திருந்த காலத்தில் ஒரு காக்கை அதில் கூடு கட்டி இருந்தது.  வாசலைத் தாண்டிச் செல்லும்போது கா கா என்று கத்தியயபடி நம் தலைக்குமேல் இங்குமங்கும் பறந்து, சமயங்களில் மண்டையை உரசிச் சென்று பயமுறுத்துவதும், அல்லது லேசாக தாமரைக்கனி போல தட்டுவதும் உண்டு.  

    அது மின்கம்பத்தை தொந்தரவு செய்வதால் அதை வெட்டி கிளைகளை அப்புறப்படுத்தி விட்டார்கள்.  நல்லவேளை அப்போது குஞ்சுகள் இல்லை.  இப்போது பெரிய காக்கை வந்து அந்த இடத்தில் அமர்ந்திருக்கும் போது அவை தங்கள் வீட்டை தேடியது போலவே எனக்குத் தோன்றும்.  படமெடுத்து பகிரவேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /ஒரு காக்கை அதில் கூடு கட்டி இருந்தது. வாசலைத் தாண்டிச் செல்லும்போது கா கா என்று கத்தியயபடி நம் தலைக்குமேல் இங்குமங்கும் பறந்து, சமயங்களில் மண்டையை உரசிச் சென்று பயமுறுத்துவதும், அல்லது லேசாக தாமரைக்கனி போல தட்டுவதும் உண்டு./

      காகம் தலையில் தட்டக்கூடாது என்பார்களே..! சனி பகவானின் வாகனமான அது நம் தலையை தட்டினால் கெடுதல் வரும் என பயமுறுத்துவார்கள். ஆனால், அது நம் தலையை சில சமயம் முரட்டுத்தனமாக தட்டி விட்டு செல்லும் இயல்புடையது. நானும் பல அடிகள் அதன் மூலம் வாங்கியிருக்கிறேன். இங்கு காக்கைகளை விட கழுகுகள்தான் தாழ்ந்து பறந்து பயமுறுத்துகிறது.

      /இப்போது பெரிய காக்கை வந்து அந்த இடத்தில் அமர்ந்திருக்கும் போது அவை தங்கள் வீட்டை தேடியது போலவே எனக்குத் தோன்றும். /

      அந்த பெரிய காக்கை ஏற்கனவே அங்கு தன் குஞ்சுகள் பொரித்து வளரத்து வாழ்ந்திருக்கிறதோ என்னவோ? அதன் நினைவலைகளும் பழையதை மறக்காது நம்மைப் போல செயல்படுமா? ஆண்காகம் தன் துணையை பிரிந்து விட்டால், தானும் மரத்திலிருந்து தலைகுப்புற கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் எனப்படித்திருக்கிறேன். என்ன ஒரு அன்பு அதற்கும்.!!

      நீங்களும் உங்கள் வீட்டருகில் உள்ள மரத்தில் குடி கொண்டிருக்கும் அந்த காக்கையைப்பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ஸ்ரீராம் சென்னையில் வீட்டின் முன் எதிர்வீட்டில் இருந்த மரத்தில் காக்கை கூடு கட்டி அடை காத்ததை, நம்ம வீட்டு பால்கனியில் இருந்து படமும் வீடியோவும் எடுத்துப் போட்டிருந்தேன் காக்கா முட்டை என்று.

      கீதா

      Delete
  4. உங்கள் பதிவின் சாரத்திலேயே நான் ஒரு கவிதை முன்பு எழுதி பகிர்ந்திருந்தேன். உடனே கிடைத்தால் இந்த வியாழனே பகிர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆகா. அப்படியா..! தங்களின் அத்தனை கவிதைகளுந்தான் அர்த்தமுள்ளவையாயிற்றே..! உடனே கிடைத்தால் இந்த வியாழன் கதம்பத்திலேயே பகிருங்கள். ரசிக்க காத்திருக்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. மரங்களை வெட்டுவதைப் பார்த்ததும் எனக்கு என்ன தோன்றுமோ, அதுவே உங்கள் மனத்திலும் தோன்றி இருக்கிறது.  அதை பதிவாக்கி விட்டீர்கள்.  கூடுதலாக அந்த மரங்கள் பூமிக்கு பசுமை மற்றும் மழையும், மனிதனுக்கு நிழலும் தருபவை என்பதும் தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். எனக்கும் மரங்களை வெட்டுவது பிடிக்காது. அது தானாகவே மழை, காற்று என வீழ்ந்தால் ஒன்றும் ணெயவதற்கில்லை. பார்த்து பரிதாபபடத்தான் முடியும். எங்கள் பிறந்த வீட்டில் கொல்லைப்புறத்தில் (அங்கெல்லாம் பின் வாசலை அப்படித்தான் சொல்வோம்.) இரண்டு பெரிதான வாதமடக்கி மரங்கள்இரு புறமும் இருந்தன. ஒரு பெரிய மழை காற்றில், (எனக்கு அப்போது ஆறு, எழு வயதுதான் இருக்கும்.) இரண்டும் சொல்லி வைத்தாற்போல வீட்டின் கூரையில் விழாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக சாய்ந்து விட்டது. அப்போது பின்பக்க பகுதி வீட்டின் மேற்கூரை ஓடுகளால் வேய்ந்தது. (அதுதான் சமையல் கூடமும்.) எங்களுக்கு கடுமையான மழையினால், சத்தமே கேட்கவில்லை. பிறகு மாலை வாக்கில் மழை கொஞ்சம் நின்றவுடன் கதவை திறந்தால் இருபக்கமும் மரங்கள் சாய்ந்து கிடந்ததை பார்த்தோம். அந்த காட்சி இன்றும் என் மனதில் புகைப்படமாக உள்ளது. அப்போது நாங்கள் அடைந்த வருத்தத்தை சொல்லி மாளாது. இது இன்று நினைவு வந்து சொல்ல வேண்டும் போல இருந்தது சொல்லி விட்டேன்.

      மழை தருவதும் கண்களுக்கு பசுமையாக இருக்கும் மரங்களை வெட்டுவதும் இயற்கைக்கு நாம் செய்யும் எவ்வளவு பெரிய துரோகமான செயல் என தோன்றும். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. மனிதன் தன் சுயநலத்துக்காக மற்ற உயிரினங்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கிறான்.  அது தங்கள் வாழ்வுக்கே ஆபத்து என்பதையும் உணராதிருக்கிறான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /மனிதன் தன் சுயநலத்துக்காக மற்ற உயிரினங்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கிறான். /

      ஆம். உண்மை. மனிதன் தன்னோடொத்த மற்ற மனிதருக்கே நன்மைகள் செய்ய தயங்கும் போது, பறவைகளை குறித்து எவ்விதம் கவலைப்படுவான். தங்கள் கூற்று உண்மையானது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. ​செவ்வாய் சிறுகதையாக அனுப்பி இருக்கலாம், கொஞ்சம் கூடுதல் ட்விஸ்ட் வைத்து.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆம். பறவைகளைப் பற்றிய நம் எண்ணங்களை இன்னமும் வேறு கோணத்தில் சற்று விரிவாக்கினால், இது ஒரு கதையாக மாறிவரும். தங்களின் சொன்ன ஊக்கம் நிறைந்த சொல்படி இனி அப்படி முயற்சிக்கிறேன். தங்களின் ஊக்கம் தரும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. நல்ல பதிவு! எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தால் ஒரு பெரிய மைதானம் தெரியும். அங்கு நிறைய மரங்களும், பாம்பு புற்றுகளும் இருந்தன. இப்பொது அங்கு ஒரு மிகப்பெரிய வளாகம் வரப்போகிறது. அதற்காக அங்கிருந்த மரங்களை வெட்டி, பாம்பு புற்றுகளையும் இடித்து விட்டார்கள். அந்த சமயத்தில் அங்கிருந்து நிறைய பாம்புகள் எங்கள் குடியிருப்புக்கு வந்து,அடித்து கொல்லப்பட்டன. அவைகளின் இருப்பிடத்தை நாம் ஆக்கிரமித்துக் கொண்டால் அவை எங்கே போகும்? ஆனால் வளர்ச்சியில் இவைகளை தவிர்க்க முடியாதோ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தால் ஒரு பெரிய மைதானம் தெரியும். அங்கு நிறைய மரங்களும், பாம்பு புற்றுகளும் இருந்தன. /

      அதேதான் இங்கும். ஆனால், பசுமையான அடர்ந்த புதர்கள், சிறுசிறு மரங்கள் இருந்ததினால் பாம்புகள் இருந்தன அவை புற்றுகளை தேடி குடி போகவில்லை.
      அதனால் புற்றுகளை அகற்றும் வேலை இங்கு அவர்களுக்கு மிச்சம். பசுமை அகற்றப்பட்டது மனதிற்கு வேதனையாக இருந்தது. அவற்றிலும் சிறு, சிறு ஜீவன்கள் வாழ்ந்து கொண்டிருந்திருக்குமே..!

      /அவைகளின் இருப்பிடத்தை நாம் ஆக்கிரமித்துக் கொண்டால் அவை எங்கே போகும்? ஆனால் வளர்ச்சியில் இவைகளை தவிர்க்க முடியாதோ?/

      உண்மையான கருத்து. வளர்ச்சியை பற்றி யோசிக்கவும் வைக்கிறது. நம்மோடு இருந்து கஸ்டப்பட வேண்டுமென்ற தலையெழுத்தை யார்தான் மாற்றுவது? உண்மையில், யாருக்கு முக்கியத்துவம் அளிப்பது என படைத்தவனே யோசித்துக் கொண்டுதானிருப்பான். தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. JKC Sir சொன்னது சரிதான், சிறுகதை வடிவத்தில்தான் இருக்கிறது. செவ்வாய் கிழமைக்கு அனுப்பியிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உங்கள் எண்ணமும், சகோதரர் எண்ணம்ம் ஒருமித்து இருப்பது கண்டு மகிழ்வடைந்தேன். எபியின் செவ்வாய் பகுதிக்கு கதை எழுத வேண்டுமென நானும் நினைத்துக் கொண்டேயிருக்கிறேன். உங்களைப் போல சட்டென எழுத இயலவில்லை. பாருங்கள்....! அனைவருக்கும் விட்டுப் போன கருத்துரைகளை தாமதமாகத்தான் தருகிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. அன்புளங்களுக்கு... உங்களனைவரின் பிற கருத்துப் பகிர்வுகளுக்கு பிறகு பதில் தருகிறேன். கொஞ்சம் வேலைகள் வந்து விட்டன. மன்னிக்கவும். பல கருத்துக்களை தந்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  11. கமலாக்கா, இப்பதான் உங்க பதிவு பார்த்தேன், நாளை வாசித்து கருத்து போடுகிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      பதிவை பார்த்தவுடனே வந்து நீங்கள் பல கருத்துக்களை தந்திருப்பதற்கும், தங்களது அன்பான வருகைக்கும் மிக்க நன்றி சகோதரி. உங்களது ஊக்கம் தரும் கருத்துரைகள் என்னை எழுத வைக்கிறது நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. கதையாகவே பறவைகளின் உரையாடல்கள். நான் அடிக்கடி நினைப்பது. வருத்தப்படுவது....நாம் இருக்கும் இடம் உட்பட எல்லாமே மரங்கள் வெட்டப்பட்டுத்தானே குடியிருக்கிறோம். நாம் குடிவந்த பிறகு பின்னால் வெட்டப்படுபவற்றைப் பார்த்துக் குறைப்பட்டுக் கொள்கிறோம்.

    என் ஆதங்கமும் இதுவே நீங்க சொல்லியிருப்பதுவே.

    நாங்கள் இப்போதிருக்கும் ஏரியா பச்சை பச்சைதான்! பூங்கா ஏரியா. படம் எடுத்திருக்கிறேன் போட வேன்ட்உம்.

    உங்க படத்துல அழகான மீன் கொத்தி!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /நான் அடிக்கடி நினைப்பது. வருத்தப்படுவது....நாம் இருக்கும் இடம் உட்பட எல்லாமே மரங்கள் வெட்டப்பட்டுத்தானே குடியிருக்கிறோம். நாம் குடிவந்த பிறகு பின்னால் வெட்டப்படுபவற்றைப் பார்த்துக் குறைப்பட்டுக் கொள்கிறோம்./

      ஆம். நாம் இந்த கட்டிடத்திற்குள் குடி வருவதற்கு முன் எவ்வளவு மரங்கள் நமக்காக அழிக்கப்பட்டிருக்கும் எனவும் நான் யோசிப்பேன்.தற்போது கண்ணெதிரே பார்க்கும் போது அந்த குற்றவுணர்ச்சி அதிகரிக்கிறது.

      அதுபோல் பறவைகள் (இங்கு புறாக்கள்தான் அதிகம்) அதன் இருப்பிடத்தை நாம் அபகரித்துக் கொண்டு, அது நாம் கட்டிய வீட்டிற்குள் வராது இருப்பதற்காக வலைகள், தடுப்புக் கண்ணாடிகள் என அமைப்பதும் எவ்வளவு பெரிய பாவமான செயல் என்ற எண்ணமும் எனக்குள் ஓடும். ஆனால், மனிதர்கள் சுகவாசியாக (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.) இருக்க மட்டுமே பழக்கப்பட்டு விட்டோம். வீட்டுக்குள், பால்கனி க்குள் அது வந்து விட்டால், அதன் கழிவுகளை தினம் அகற்றவும், பிடிக்காமல் போவதால்தான் இந்த வலைகள் என தற்காப்பு ஏற்பாடுகளை சுயநலவாதிகளாக செய்து கொள்கிறோம்.அதுவும் வேறு வழியின்றி காலை முதல் எங்கெங்கோ பறந்து திரிந்து விட்டு மாலையானதும் பால்கனி ஓரத்தில் கழிவு நீர் பைப்புகளில் தொத்திக் கொண்டு சரணடைகிறது. அவைகளின் வாழ்வே சிரமமான ஒன்றுதான். ஆயினும் அதையும் நம்மோடு வந்து வாழும்படியிருக்க இறைவன் வகுத்து விட்டானே..! என்ன செய்வது? நான் மேலே கூறியபடி அதைப்பார்த்து ஆதங்கப்பட்டு இப்படி புலம்பி மனசமாதானம் படவேண்டியதுதான். இதுவும் ஒரு இயற்கை போலும்.

      நீங்களும் உங்கள் ஏரியாவின் பசுமை நிறைந்த புகைப்படங்களை பகிருங்கள். பசுமை கண்களுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை தருபவை.

      ஓ.. அது மீன்கொத்தியா? எனக்கு அவ்வளவாக உங்களைப்போல பறவைகளின் பெயர்கள் தெரியாது. இது என் பேத்தி என் கைப்பேசியில் எடுததபடம். நான் முதல் படத்தை எடுத்ததைத் பார்த்து அவளும் சற்று நேரத்தில் இதை எடுத்திருக்கிறாள். நான் இரண்டிற்கும் ஒரு முடிச்சு போட்டு என் கற்பனைக் கதையை எழுதினேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. பறவைகளின் வாழ்வியல் "ஒரு காலத்துல" என்று கதையாகிக் கொண்டுதான் வருகிறது.

    பல பறவைகள் அரிதாகி வருகின்றன அதை நான் எங்கள் ஏரிகளில் பார்க்கிறேன். கூடவே இடமும் மாறுகின்றன அங்கு அழியும் போது வேறு இடம் கிடைக்க வேண்டுமே....ஏரிகள் அழியும் போது நீர்ப்பறவைகள் என்ன செய்யும்

    இப்படி விலங்குகள் காட்டு விலங்குகள் எல்லாம் பேசிக் கொள்வது போல எங்கள் தளத்தில் நான் எழுதியிருந்த நினைவு.

    இப்படிப் பறவைகள் பற்றி ஸ்ரீராம் ஒரு கவிதைஎ ழுதியிருந்த நினைவு. அதன் வீடு கலைவது பற்றியும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /பல பறவைகள் அரிதாகி வருகின்றன அதை நான் எங்கள் ஏரிகளில் பார்க்கிறேன். கூடவே இடமும் மாறுகின்றன அங்கு அழியும் போது வேறு இடம் கிடைக்க வேண்டுமே....ஏரிகள் அழியும் போது நீர்ப்பறவைகள் என்ன செய்யும்/

      உண்மை.. அதன் நிலைமைகள் கஸ்டந்தான்.

      /இப்படி விலங்குகள் காட்டு விலங்குகள் எல்லாம் பேசிக் கொள்வது போல எங்கள் தளத்தில் நான் எழுதியிருந்த நினைவு./

      அப்படியா..! மீண்டும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பகிருங்கள்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. பொதுவாகப் பறவைகள் மின்சாரக் கம்பிகளில் உட்காரும் போது ஷாக் அடிபடுவதில்லை. ஒரே வோல்டேஜ் என்பதால் அவற்றின் கால்களுக்கும் வயருக்கும்

    ஆனால் வேறு வோல்டேஜ் உடன் பட நேர்ந்தால் ஷாட் அடிக்கும் அதற்கும். நேரடி மின்சாரம் தாக்கினாலும்...

    மற்றப்படி வயரில் அமர்வதால் ஒன்றும் ஆவதில்லை அக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /பொதுவாகப் பறவைகள் மின்சாரக் கம்பிகளில் உட்காரும் போது ஷாக் அடிபடுவதில்லை. ஒரே வோல்டேஜ் என்பதால் அவற்றின் கால்களுக்கும் வயருக்கும்/

      ஆம் அன்றென்னவோ அதே கம்பியில் வந்து அமர்ந்தவுடன் சட்டென கீழே விழுந்து விட்டது. பார்க்கவே மனசுக்கு கஸ்டமாக இருந்தது. அது நடந்து பல வருடங்கள் ஆகின்றன. ஆனால் இந்த பதிவு எழுதும் போது அது நினைவுக்கு வரவே இதில் பகிர்ந்தேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. முதல் படத்தில் இரட்டைவால் குருவிகள் இரண்டு!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் பலகருத்துப் பரிமாற்றலுக்கும் என் அன்பான நன்றி சகோதரி.

      ஆம். இது இரட்டைவால் குருவி. கருங்குருவி (அது வேறோ?) எனவும் நினைத்துக் கொண்டேன். இதைத்தான் நன் முதலில் எடுத்தேன். எனக்கு அதிகமான பறவைகளின் பெயரும் உங்களைப்போல தெரியாது. நீங்களும், சகோதரி கோமதி அரசு அவர்களும் நிறைய பறவைகளை குறிப்பிடுவீர்கள். சென்னையில் வாழ்ந்த காலத்தில் இவ்வளவு பறவைகளை நான் கண்டதில்லை. தி. லி யில் அம்மா வீட்டில், இருந்த போது அங்குள்ள பசுமை, சுற்றிலும் உள்ள மரங்களின் அடர்த்திகள் காரணமாக , பல பறவைகள், அணில்கள் என அதிகம் கண்டு ரசித்திருக்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி. நானும் உங்கள் கருத்துக்களை இப்போதுதான் பார்தேன். மற்றவைக்கு நாளை பதில் தருகிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. இரண்டும் ஒன்றுதான் கமலாக்கா....கருங்குருவி...

      கீதா

      Delete
    3. தகவலுக்கு நன்றி சகோதரி.

      Delete
  16. பறவைகளின் உரையாடல் மூலம் அவை படும் துன்பத்தை சொல்லி விட்டீர்கள்.
    படங்கள் அவற்றின் சோகத்தை காட்டுகிறது.

    இங்கும் எங்கள் குடியிருப்பு பக்கம் சோலைவனமாக இருந்த இடங்களில் கட்டிடங்கள் வர அழித்து விட்டார்கள்.
    பற்வைகள் வரத்து குறைந்து விட்டது, காகம், புறா, குயில்கள் மட்டும் எங்கள் வளாகத்து மரங்களில் இருக்கிறது. புறா மரத்தில் இருக்காது அதற்கு வீட்டு பால்கனிகள் தான். பால்கனி எல்லாம் வலை தடுப்பு போட்டு விட்டதால் அவைகளும் தவிக்கிறது.
    உங்கள் படத்தில் இரட்டைவால் குருவி, மூன் கொத்தி எல்லாம் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /இங்கும் எங்கள் குடியிருப்பு பக்கம் சோலைவனமாக இருந்த இடங்களில் கட்டிடங்கள் வர அழித்து விட்டார்கள்./

      ஆம் இப்போது எங்குமே குடியிருப்பு காரணங்களினால், பசுமை குறைத்து தான் வருகிறது. இங்கு நாங்கள் வரும் போது இருந்த பருவநிலை மாறி நிறைய வித்தியாசங்களை பார்க்கிறோம்.

      புறாக்கள் நம்மை அண்டிதான் வாழும் என்பதை படித்திருக்கிறேன் ஆனால், மரங்களை சார்ந்திருக்கும் மற்ற பறவைகளின் பாடுதான் திண்டாட்டமாக போய் விட்டது.

      தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி. வீட்டின் முக்கியமான சிறிது வேலைகள் காரணமாக, வெளியில் அலைச்சலுமாக இருந்ததினால் உங்கள் கருத்துகளுக்கு உடனடியாக பதில் தர இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும் சகோதரி.

      அங்கு உங்கள் மகள் வந்திருப்பதால் உங்களுக்கும் நேரம் சரியாக இருக்கும். அதற்கும் நடுவில் தாங்கள் வந்து பதிவை ரசித்திருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி. தங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. மீன் கொத்தி தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. நல்லது. உங்களுக்கும், சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கும் இந்தப் பறவைகளின் பெயர்கள் அத்துபடி. பார்த்தவுடனே என்னென்ன பறவைகள் எனச் சொல்லி விடுவீர்கள். நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete