Monday, September 2, 2024

தேங்காய் வறுத்த பொடி.

உலக தேங்காய் தினம். 

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். இப்போதெல்லாம் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொன்றின் தினமாக அடையாளம் காட்டப்படுகிறது. 

இன்று உலக தேங்காய் தினமாம்.அதாவது 2.9.24 ஆகிய இன்று  தேங்காய்களின் சிறப்பை உணரும் தினமாக சிறப்பித்து குறிப்பிட்டுள்ளனர்.. 

மங்கலகரமான இந்த  தேங்காய்கள்  ஒரு வீட்டிற்கு அன்றாடம் எப்போதும் எப்படி இன்றியமையாதது போலவோ, அது போல், அது தரும் பயன்களும் நமக்கு எண்ணிலடங்காதது அல்லவா. ? வீட்டில் தேங்காய் இல்லாத சமையல் என்றுமே ருசிக்காது என்பதையும் நாமறிவோம். 

வீட்டின் எந்த ஒரு சுபமான  விஷேடங்களுக்கும் வெற்றிலை, பாக்கு பழங்களுடன் சபையில் வந்து முன்னிற்பது இந்த காய்கள்தானே..! இறைவனுக்கு நாம் தவறாது பல பழங்களுடன் தேங்காய்களை சமர்ப்பிப்பது என்பது காலங்காலமாய் நம்மிடையே இருந்து வரும் ஒரு சம்பிரதாய பழக்கந்தானே ..! . தவிரவும் நம் துயரங்கள் நீங்க இறைவனிடம் வேண்டிக் கொண்டு நம் துன்பங்கள் அனைத்தும் சிதறிப் போகும் வகையாக சிதறுகாயாக உடைக்கப் பயன்படுவதும் இதுதான் என்பதையும் அனைவரும் அறிவோம். . 

நம் சந்ததிகளை (பிள்ளைகளை) அன்புடன் கவனித்து வளர்த்து போற்றுவது போல இந்த தென்னை மரத்தையும் ஒரு பிள்ளையாக்கி "தென்னம்பிள்ளை" என அவைகளை செல்லத்துடன் அடைமொழியாக விளித்து நாம் ஒவ்வொரு வீட்டிலும் அன்புடன் வளர்க்கிறோம்

சில பெற்றோர்கள் சமயங்களில் தங்கள்  பிள்ளைகளின் மேல்  வரும்,கை,கோப,தாப உணர்ச்சியில், "இந்தப் பிள்ளையை பெற்று வளர்த்ததை விட ஒரு தென்னம் பிள்ளையை வளர்ந்திருந்தாலும் அது எனக்கு கடைசி வரை உபகாரமாக இருந்திருக்கும்" என மனம் வெறுத்து தென்னை மரத்தை  தம் பிள்ளைகளுக்கும் மேலாக உயர்த்திக் சொல்வார்கள். 

இங்கு (பெங்களூரில்) ஒரு திருமணம், கிருஹபிரவேசம் போன்ற சுப காரியங்களுக்கு பச்சை தென்னை ஓலையில் அழகாக பந்தல் பின்னி வாசலில் கட்டி கொண்டாடுகின்றனர். (இது மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபடுகிறது என்பது வேறு விஷயம்.) எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தாலும் இப்போது பழகி விட்டது. 

 இத்தனை சிறப்பு மிக்க தேங்காய் தினத்தை பார்த்ததும், தேங்காயை வைத்துச் செய்யப்படும் இந்த உணவு நினைவு வந்தது. இது ஏற்கனவே நான் திங்கள் பதிவாக எ. பியில் பகிர்ந்துள்ளேன். இருப்பினும் என் பதிவிலும் ஒரு அடையாளமாக இருக்கட்டுமென இடம் பெறுகிறது (நிறைய  பதிவுகள் நேரமின்மையால், பாதி எழுதியும், முடிக்காது பாதியுமாக இருக்கின்றன. அதனால் பழசையே (ஆனால், இங்கு இது புதியதுதான்.) மறுபடி திரும்பி பார்க்கிறேன். (இரண்டாவதாக பதிவுகளின் எண்ணிக்கையும் கூடுமென்ற சுயநல ஆசையும் ஒரு காரணம்.) இதை ஏற்கனவே அனைவரும் படித்திருந்தும், செய்முறைகளை அறிந்திருந்தும் இங்கு வந்த ஊக்கத்துடன் உற்சாகமும் அமையுமாறு கருத்துரை தரும் என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

இனி எ. பியில் பகிர்ந்த பதிவு. இதை அன்று என் செய்முறையாக எழுதி அனுப்பியதை, அன்புடன் எ. பியில் பகிர்ந்து எனக்கு ஊக்கமளித்த எ. பிக்கும், அதன் நிர்வாக ஆசிரிய பெருமக்களுக்கும் என் பணிவான நன்றிகள் எப்போதும்


இது ஊற வைத்து உலர்த்திய பச்சரிசி


அதை நல்ல நைசான மாவாக மிக்ஸியில் பொடித்து சலித்துக் கொள்ளுங்கள்


நான் ஒரு டம்ளருக்கு ஒரு மூடி தேங்காய் என்ற கணக்கில் எடுத்துக் கொண்டேன். கால்படிக்கு அரிசிக்கு ஒரு நல்ல திண்ணமான பெரிய தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தேங்காய் துருவல் கணிசமாக இருக்கும்


பொடியாக துருவிய தேங்காய் துருவல்


சலித்து வைத்த மாவையும் தேங்காய் துருவலையும் நன்கு கலந்து கொள்ளவும். 


ஒரு கடாயில் இந்த மாவைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து இரு பாகங்களாக வறுக்கவும். 


நன்றாக கை விடாமல் யார் மேலும் கோபம் இல்லாமல் (கோபம் வைத்தால் கவனம் சிதறி மாவு சரியான பக்குவத்திற்கு வறுபடாமல் போய் விடும்.) மனதில் பொறுமையுடன் வறுக்கவும்.
 

இறுதியில் இந்த கலருடன் மாவு மொறுமொறுவென தயாராகி விடும். 


  இதை நாங்கள் தேங்காய் வறுத்த மாவு என்போம் . முன்பு நான் பிறந்த வீடு (தி. லி) சென்று சென்னை திரும்பும் போதெல்லாம் தாய் வீட்டு சீதனமாக சாம்பார் பொடி, மற்ற இத்யாதி  பொடிகளுடன்  ஏனைய பட்சணங்களுடனும் இந்தப் பொடியும் கண்டிப்பாக இடம் பெறும். இது மாதக்கணக்கில் கெட்டுப் போகாது. 

சாயங்காலம் விடுமுறை நாட்களில் மாலை சிற்றுண்டியாக வெல்லத் தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து வெல்ல வாசனை போனதும் , வடிகட்டிய ஆறிய  வெல்ல நீருடன் இந்த மாவை கலந்து சாப்பிடுவோம். கூடவே காரமாக ஏதாவது ஸ்நாக்ஸ். இல்லை வீட்டில் போடும் பஜ்ஜி போண்டா.... வகைகள். 

அதுபோல் காலை பசிக்கும் போதும் டிபன் ஏதும் சரியாக அமையாத போதும்.. வழக்கமான  இட்லி, தோசை அல்லாத புளி அரிசி மாவு உப்புமாவோடும் இது ஜோடி சேர பிணக்கு கொள்வதேயில்லை. ஏதாவது பூஜை விரத நாட்களிலும், உப்பு மோருடன் கொஞ்சம்  மாவை கலந்து சாப்பிடுவோம். பூஜையெல்லாம் முடிந்து சாப்பிடும் வரை பசியை அடக்கி தாக்குப் பிடிக்கும். இல்லையெனில் பொழுது போகாமல் இருக்கும் போது, கொஞ்சம் மாவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வீட்டில் எல்லோரும் ஏதாவது அரட்டை அடித்தபடி, இல்லையென்றால் ஒரு ஸ்வாரஸ்யமான நாவலை படித்தபடி  கொஞ்ச கொஞ்சமாக ஸ்பூனினால் அள்ளி அப்படியே சாப்பிடுவோம். இப்போது இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கனவாகி விட்டது. ஸ்வீீட் எல்லாவற்றிகும் தடா... (நாவல் படிக்கலாம். ஆனால் எதையும் சாப்பிடாமல்...! இரண்டாவதாக அது உடனே பற்களில் மாட்டிக் கொண்டு நாவலின் சுவாரஸ்யமான கவனத்தை திசை திருப்பி விடுகிறது.) 

 2 மாதம் இங்கு  வந்திருந்த என் மகனின் மலரும் நினைவுகளுக்காக இதை கொஞ்சம் செய்தேன். இதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் இதை, இதன் செய்முறையை அறிந்திருக்கலாம் . இதைதான் திணை மாவு என்பார்களோ. ? அதையும் அறியேன்.  இதன் பெயர் உங்கள் அளவில் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.இது ப. ப. (பழைய பஞ்சாங்கம்) ஆனாலும், படங்களை ரசிப்பதற்கும், பகிர்வை படித்து ரசிப்பதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.🙏. 

25 comments:

  1. திணை மாவு என்பார்களோ. ? அதையும் அறியேன்.
    திணை அரிசியில் செய்வது திணை மாவு.
    முருகனுக்கு புட்டமுது என்று நீங்கள் செய்த பக்குவத்தில் செய்து, தேன் விட்டு முருகனுக்கு படைப்பார்கள்.
    அதில் மாவு விளக்கும் செய்வார்கள், நம் அதிரா திணை மாவில் அதிரசம், மாவிளக்கு செய்து சஷ்டிக்கு படைப்பார்.

    ReplyDelete
    Replies
    1. திருச்செந்தூர் முருகன் கோவில் பிரசாதம் திணை புட்டமுது. கோவில் கடைகளில் திணை மாவு கிடைக்கும். பிரசாதமாக வாங்கி வருவோம். திருச்செந்தூர் போனால்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்களின் அன்பான முதல் வருகைகும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      எனக்குத்தான் இன்று சில வேலைகளின் காரணமாக பதில் தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

      ஆமாம். திணை அரிசியில் செய்வது திணை மாவு. எனக்கு அந்த அரிசியின் பெயர் மறந்து விட்டது. நாம் செய்யும் இந்த வறுத்துப் பொடியும் ஏகதேசம் அந்த திணை மாவுடன் ஒத்து வரும் என நினைக்கிறேன். தங்களால் இப்போது சந்தேகமற அறிந்து கொண்டேன். மிக்க நன்றி சகோதரி.

      சகோதரி அதிர்வின் பதிவிலும், படித்த நினைவு வருகிறது. சகோதரி அதிராவைப் பற்றி தாங்கள் கூறியதும் அவர்களின் நினைவு எனக்கு மேலோங்குகிறது. அவர் சிறந்த முருக பக்தை அல்லவா? முருகனருளால் அவர் பதிவுலகத்திற்கு மீண்டும் வந்து, அனைவரின் பதிவுகளுக்கும் வந்து, தன் கலகலப்பான கருத்துரைகளை தந்து, அவர் பதிவுகளிலும் பல விஷயங்களையும், அவரின் சமையல் முறைகளையும் தர வேண்டும்.

      நீங்கள் திருசெந்தூர் செல்லும் போது, பிரசாதமாக திணை புட்டமது வாங்கி வருவது பற்றி தெரிந்து கொண்டேன். பதிவுக்கு வந்து பல விபரங்களை கூறியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. பொறுமையாக வறுத்து பொறுமையாக படங்கள் எடுத்துப்போட்டு மிக அருமையாக பக்குவம் சொல்லி இருக்கிறீர்கள். அம்மா செய்து தருவார்கள். ஊரிலிருந்து வரும் போது நானும் சிறு வயதில் கொண்டு வந்து இருக்கிறேன். பிறகு நானே செய்வேன்.
    கேரளத்தில் சிவப்பு அரிசியிலும் செய்வார்கள்.
    அம்மாவுக்கு திருவனந்தபுரம் தாத்தாவீட்டிலும் தென்னைமரங்கள் நிறைய உண்டு அதனால் நிறைய தேங்காய் போட்டு செய்து கொடுத்து விடுவார்கள்.

    மகனுக்கு செய்து கொடுத்து விட்டீர்களா?

    தென்னைபிள்ளை வரலாறு மிக அருமை.
    தேங்காய் மாலை போடுகிறார்கள் கோவில்களில் பிள்ளையாருக்கு, பிள்ளையார் சதுர்த்தி வரும் போது நல்ல பிரசாதம் ஒன்று சொல்லி இருக்கிறீர்கள்.

    தேங்காய் தினம் வாழ்க!

    //சுப காரியங்களுக்கு பச்சை தென்னை ஓலையில் அழகாக பந்தல் பின்னி வாசலில் கட்டி கொண்டாடுகின்றனர். //

    கோவையில் நிறைய கல்யாண வீடுகளில் நானும் பார்த்து இருக்கிறேன். சில குடும்பங்களில் பெண் பெரியவள் ஆனால் மாமா பச்சை ஓலை குடில் தயார் செய்து தருவார். சினிமாக்களில் பார்த்து இருக்கிறேன்.

    பதிவு அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      நீங்களும் உங்கள் அம்மா வீட்டுக்குப் போய் வரும் போததெல்லாம், உங்கள் அம்மா இவ்விதம் தேங்காய் வறுத்த மாவு செய்து கொண்டு வருவீர்கள் என்பதையறிந்து மன மகிழ்வடைந்தேன். , நம் அம்மாக்கள் கையால் எந்த உணவு செய்து தந்தாலும் அது நமக்கு அமிர்தத்திற்கு ஒப்பானவை இல்லையா? பிறகு நாம் அதை முறைப்படி கற்றுக் கொண்டு நம் குழந்தைகளுக்கு செய்து தருவோம்.

      எங்கள் அம்மா வீட்டிலும் முன்பு வாசல், கொல்லைப்புறத்தில் பல தென்னை மரங்கள் இருந்தன. எங்கள் தாத்தா வைத்தவை என அப்பா கூறுவார். எனவே அப்போது தேங்காய்களுக்கு வீட்டில் குறைவே இருக்காத நான் சென்னைக்கு திரும்பும் போது கூட பல காய்களும், எங்கள் லக்கேஜில் இடம் பெற்று விடும். . இப்போது ஒரு தேங்காய் 30,35, என விலை தந்து வாங்குகிறோம்.

      ஆமாம் விநாயகருக்கு தேங்காய் மாலைகளை சார்த்த வழிபடுவதை பார்த்திருக்கிறேன். என் இஷ்ட தெய்வமான அந்த விநாயகர்தான் இந்த தேங்காய் தினத்தை என்னைப் பார்க்கச் செய்து இந்தப் பதிவு எழுத வைத்திருக்கிறார். அதை நினைவாகவ, நீங்களும் சொல்லியுள்ளீர்கள்.நன்றி சகோதரி.

      இது சென்ற தடவை என் மகன் வந்திருக்கும் போது செய்து, அதை எபியில் பகிர்ந்த பதிவு. இந்த தடவை அவர்கள் இன்னமும் ஊருக்குச் செல்லவில்லை. அவர்களின் பல வேலைகள் காரணமாக கிளம்ப இன்னமும் சில மாதங்கள் ஆகும். மருமகளின் உற்றார் உறவினர்கள் வந்திருப்பதாக கூறினேனே ..!

      தாங்கள் பதிவை ரசித்துப் பாராட்டியிருப்பதற்கு மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து எழுத எனக்கும் மிகவும் ஆசைதான். பல பதிவுகள் பாதி முடிக்காமல் இருக்கின்றன.பதிவு எழுதி நீண்ட நாளாகி விட்டதேயென,எழுதிய பழையதை சேர்த்து ஒரு பதிவாக தந்தேன். அதற்கு என்னப்பன் விநாயருக்கும், அன்பான உங்களனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. தென்னையை பெயரிலேயே கொண்டிருக்கும் நாடான கேரளத்தில் தேங்காய் தினம் என்பதை கொண்டாடுவதில்லை. இன்றைய தினம் தேங்காய் தினம் என்ற செய்தி எனக்கு புதிது. தேங்காய் தின வாழ்த்துக்கள்.

    தேங்காய் வறுத்த பொடி என்பதை எ பி யில் பார்த்ததாக நினைவில்லை, இதுவும் நான் தற்போதுதான் இப்படியும் செய்யலாம் என்று அறிகிறேன். வீட்டில் தேங்காய் சம்மந்தி பொடி இருக்கும். அவசரங்களுக்கு உதவும். இட்லிக்கு, சோற்றில் பிசைந்து சாப்பிட என்று உபயோகிப்போம்.
    இந்த தேங்காய் வறுத்த மாவில் வெல்ல பாகு உருண்டை பிடித்தால் பொரிவிளங்காய் உருண்டையாய் ஆகிவிடுமா?
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. பொரி அரிசி மாவு போல தான் இதுவும். அதில் பாசிப்பருப்பு வறுத்து பொடி செய்து போட்டு பொட்டுகடலை , தேங்காய் போட்டு(தேங்காயை பல் பல்லாக கீறி போட்டு) வெல்லப்பாகு போட்டு பிடித்து கொடுப்போம்.

      கமலா சொல்லி இருக்கும் பக்குவத்தில் மாலை சூடான பால் விட்டு சீனி போட்டும் சாப்பிடலாம், வெல்லப்பொடி போட்டும் சாப்பிடலாம்.

      இந்த பொடி கெட்டு போகாமல் வெகு நாட்கள் இருக்கும். தேங்காய் காரல் எடுக்கும் முன் காலி செய்தால் போதும்.

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      எனக்கும் இப்படி ஒரு தினம் உள்ளதென தெரியாது. நேற்று யதேச்சையாக இப்படி பார்த்துக் கொண்டிருந்த பொது இந்த தேங்காய் தினம் ஆச்சரியப்படுத்தியது. அதற்கு சட்டென தேங்காயை வைத்து ஒரு சமையல் பதிவு எழுத முடியவில்லை என்பதினால், பழைய பதிவும் நினைவுக்கு வரவே அதையை இங்கு பகிர்ந்தேன். தேங்காய் தின வாழ்த்துக்கு மிக்க நன்றி.

      சகோதரி கோமதி அரசு அவர்கள் சொல்வது போல் விநாயகர் சதுர்த்தி வரும் சமயம் இந்த தினம் என் கண்களில் பட்டதும் அந்த கணேசனின் அருள்தான்.

      இது எப்போது எபியில் வந்தது என பார்க்க வேண்டும். நீங்கள் இங்கு வந்து படித்து நல்லதொரு கருத்தை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே. மேலும் நீங்கள் குறிப்பிட்ட தேங்காய் மிளகாய் பொடி( காரம்) செய்முறையும் எபியில் ஒரு சமயம் பகிர்ந்திருக்கிறேன். இன்று பகிர்ந்ததில் இனிப்புச் சேர்த்து (கொதிக்க வைத்த வெல்லமோ , ஜீனியோ) சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இதை உருண்டை செய்தால் கூட சுலபமாக உதிர்த்து சாப்பிடலாம். கொதிக்க வைத்து வெல்ல வாசனை போன சுடு நீரில் இந்த மாவை கலப்பதால் உருண்டை அவ்வளவாக இறுகாமல், மிருதுவாக இருக்கும். பொரிவிளங்காய் உருண்டை பாசிப்பருப்பு, அரிசி இரண்டையும் வறுத்தும் இந்த மாதிரி பொடி செய்து, வெல்லப்பாகு வைத்து (உருண்டை பாகு) செய்வோம். அதற்கு தேங்காய் பல்லாக அரிந்து வறுத்து சேர்க்கலாம். அது கொஞ்சம் கெட்டியாக இருக்கும். தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      தாங்கள் தந்ததும் நல்லதொரு குறிப்பு. பொதுவாக வறுத்த மாவு களில் வெல்லம் ஜீனி கலந்து தந்த ல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

      /இந்த பொடி கெட்டு போகாமல் வெகு நாட்கள் இருக்கும். தேங்காய் காரல் எடுக்கும் முன் காலி செய்தால் போதும்/

      ஆம். முன்பு கு. சா பெ. இல்லாத அந்த காலத்திலேயே பல மாதங்கள் வரை வைத்து சாப்பிடுவோம். நன்றாக தேங்காயும் அரிசி மாவுடன் வறுபடுவதால் சீக்கிரம் கெட்டுப் போக வாய்ப்பில்லை. மீண்டும் வந்து தந்த தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. இன்று தேங்காய் தினமா?  ஒருவேளை தேங்காய் சீனிவாசன் தினமோ?!!  நானும் இப்படி ஒரு தினம் கேள்விப்பட்டதில்லை.  தேங்காயை இவ்வளவு படுத்தாமல் துருவியவுடன் நார் நீக்கி அதில் அப்படியேயும், அல்லது சிறிது சர்க்கரை சேர்த்தும் கூட சாப்பிடலாம்.  சுகம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      /ஒருவேளை தேங்காய் சீனிவாசன் தினமோ?!!/

      ஹா ஹா ஹா. அவருக்கு எதனால் தேங்காயோடு சேர்த்து அப்படி ஒரு பெயர் வந்ததென சினிமா விபரங்கள் பற்றி கரைத்து குடித்ததோடு மட்டுமின்றி, அதை எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் உங்களுக்குத்தான் தெரியும். எனக்கு கூட எங்கோ இதைப்பற்றி படித்ததாக ஏதோ நினைவில் உள்ளது. ஆனால், இப்போது சொல்லத் தெரியவில்லை. அவர் பேத்தி குக் வித் கோமாளி சமையல் பகுதியில் வந்தார் சமீபத்தில் நடந்த அதுதான் நினைவில் உள்ளது.

      /தேங்காயை இவ்வளவு படுத்தாமல் துருவியவுடன் நார் நீக்கி அதில் அப்படியேயும், அல்லது சிறிது சர்க்கரை சேர்த்தும் கூட சாப்பிடலாம். சுகம்!/

      ஹா ஹா ஹா. ஆமாம். புதிதாக துருவிய தேங்காயை அதன் ஈரப்பதம் வற்றாது இருக்கும் போது, வெல்லத்தைப் பொடி செய்து அதனுடன் கலந்து உண்பது சுவையானதுதான்.

      நாங்கள் சித்ரகுப்த நயினார் நோன்பிற்கு உப்பு சேர்க்காமல் உணவு உட் கொள்ளும் போது, வடித்த சாதத்தில் சிறிது நெய் விட்டுக் கொண்டு இந்த தேங்காய் வெல்ல கலவையை சேர்த்து உண்போம். அது ஒரு சுவையான சுவை. கிட்டத்தட்ட தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை பதம் நினைவுக்கு வரும். ((இப்படி யெல்லாம் சுவையாக சாப்பிட்டு என்ன விரதம் என்கிறீர்களா? சித்ரகுப்த்தரும் அப்படித்தான் நினைப்பார். இதெல்லாம் அவர் தனி கணக்கிலும் வேறு வைத்திருப்பார். ஹா ஹா)

      தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. இந்த குறிப்பு எப்போது எங்கள் பிளாக்கில் வந்தது என்று எனக்கும் நினைவில்லை.  தேடிப்பார்க்க வேண்டும்!  தேங்காய்ப்பொடி நாங்களும் செய்வோம்.  அது தேங்காயை மட்டும் வறுத்து பொடிசெய்து தேங்காய் சாதம் செய்வதற்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இந்தப்பதிவு எபியில் என்று வெளியானது எனத்தேடிப் பார்க்க வேண்டும். தேங்காய் தினத்திற்கு பொருத்தமாக இருந்ததால் உடனே வெளியிட்டேன்.

      /தேங்காய்ப்பொடி நாங்களும் செய்வோம். அது தேங்காயை மட்டும் வறுத்து பொடிசெய்து தேங்காய் சாதம் செய்வதற்கு./

      ஹா ஹா ஹா. தேங்காயை பொடியாக துருவி வறுத்து சாதத்துடன் கலந்தால் போதாதா? வறுத்த தேங்காயை மறுபடி பொடி செய்து சாதத்துடன் கலக்க வேண்டுமா? நாளை மதிய உணவுக்கு (பிழைத்துக்கிடந்தால்) இந்த தேங்காய் சாதம் செய்ய வேண்டுமென இங்கு வீட்டில் பிளான் செய்திருக்கின்றனர். பார்க்கலாம். செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு பொறை ஏற்படும்.:))

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ஹா..  ஹா..  ஹா...  

      என்ன செய்ய!  'வறுத்து' என்கிற வார்த்தை வந்ததும் அதனுடன் 'பொடிசெய்து' என்கிற வார்த்தையும் ஒட்டிக் கொண்டு விடுகிறது!

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      தங்களது மீள் வருகைக்கும், கருத்தின் காரணத்தை கூறியமைக்கும் மிக்க நன்றி.

      நான் வேண்டுமென அவ்விதம் கேட்கவில்லை. ஒரு வேளை அப்படிச் செய்தால் தேங்காய் சாதம் சுவையாக இருக்குமாவென அறிந்து கொள்ள வேண்டி கேட்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சமையல் தினுசுகளை தங்கள் பக்குவபிரகாரம் செய்வது இயல்புதானே..! அதில் ஒவ்வொன்றின் விதங்கள் மற்றையது விட சுவை கூட்டுவதும் நாம் அறிந்த ஒன்றுதானே.!! அதனால்தான் விபரம் கேட்டேன்.

      இன்று எங்கள் வீட்டில் மதிய உணவாக தேங்காய் கலந்த சாதம் இடம் பெற்று விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் செய்து முடித்ததும் இப்போதுதான் மகன் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். உடன் உங்கள் கருத்தையும் கவனித்தேன். நான் நினைத்தது போல அதே நேரம் வந்து தங்கள் கருத்தை சொன்னதற்கு மகிழ்ச்சி. மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. தேங்காய் பற்றிய குறிப்புகள் சுவாரஸ்யம்.

    'தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி'  எனும் பாட்டு கேட்டிருக்கிறீர்களா? 

    இன்னொரு அருமையான தென்னங்கீற்று பாடல் ஜெயகாந்தன் எழுதிய பாடல்.  பி பி ஸ்ரீனிவாஸ் - ஜானகி குரலில்...'தென்னங்கீற்று ஊஞ்சலிலே '

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே

      தேங்காய் பற்றிய குறிப்புகளை படித்து ரசித்தமைக்கு நன்றி. அவசரமாக ஏதோ எழுதியதால், இன்னமும் யோசித்து நிறைய எழுத முடியவில்லை.

      தாங்கள் நினைவூட்டிய பாடல்களை தேடிச்சென்று கேட்டேன். முதல் பாடல் முன்பு அடிக்கடி இல்லையென்றாலும் கேட்டிருக்கிறேன். இரண்டாவது முன்பு அடிக்கடி கேட்டு ரசித்தப்பாடல். அது ஜெயக்காந்தன் அவர்கள் எழுதியது என நீங்கள் சொல்லித்தான் அறிந்து கொண்டேன். இரண்டுமே இனிமையான பாடல்கள்.

      எனக்கும் ஒரு வார்த்தையை எங்காவது படித்ததும் யாராவது பேசும் போது கேட்டதும் அது அந்த வார்த்தை சம்பந்தபட்ட பாடல்களின் வரிகள் நினைவு வந்து உடனே பாடி விடுவேன். ஆனால், உங்களைப்போல யார் பாடியது, பாடலையார் எழுதியது யாருடைய இசை என சட்டென சொல்லத் தெரியாது. ஆனால், இருவருக்கும் ஒரே மாதிரி எண்ணங்கள் ஒத்து வருகின்றன.

      பதிவுக்கு வந்து தந்த அன்பான பல கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. இந்த தேங்காய்அரிசி மாவைச் சாப்பிட்ட நினைவே இல்லை.

    வெல்லக் கரைசல் ஊற்றிப் பிடித்த மாவு ருசியாக இருக்கும்தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      /வெல்லக் கரைசல் ஊற்றிப் பிடித்த மாவு ருசியாக இருக்கும்தான்./

      ஆமாம். இனிப்பாக சாப்பிட ஏதாவது வேண்டும் போலிருந்தால், இந்த மாவு கைவசம் செய்து வைத்துக் கொண்டால் சௌகரியமாக இருக்கும். ஒரு விரத தினங்களில் பகல் உணவுக்கு தாமதமாகும் பொழுது இதை கலந்து சாப்பிட பசியும் அதிகமாக ஏற்படாமல் இருக்கும்.

      தேங்காய்கள் விலை குறைவாக விற்கும் சமயங்களில் இப்படி செய்து வைத்துக் கொள்ளலாம். உபயோகமாக இருக்கும். செய்து பாருங்கள்.

      தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. நான் இட்லி மி பொடிக்குப் பதில் தேங்காய் மிளகாய்கொடி என்று பண்ணுவார்கள். அதைத்தான் எழுதியிருக்கிறீர்களோ என நினைத்தேன்.

    பண்டிகைகளில் கடைசியில் தாம்பூலத்தோடு தேங்காய் கொடுப்பது, இங்கு தேங்காய், கிளம்பலாம் என்பதற்கு என எப்போவோ படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      தேங்காய் மிளகாய் பொடியும் ஒரு சமயம் எபியில் பகிர்ந்திருக்கிறேன். அந்தப் பதிவையே இங்கும் பகிர வேண்டும். எனவும் நினைத்துள்ளேன். (பதிவுகளின் எண்ணிக்கைக்காக.. அப்படி நிறைய எழுதி, எழுதி என்ன காணப்போகிறோம் என்ற நினைப்பும் வருகிறது. ஆனாலும் என் மனதில் உதித்து வரும் எழுத்துக்கள் இப்படி வெளியாகி, நீங்கள் அனைவரும் அதை படித்து ரசிக்கும் போதும், அது குறித்து நம் மனதில் வரும் கருத்துக்களை பரிமாற்றங்கள் செய்து கொள்ளும் போதும் என் மனதுக்குள் ஒரு நிறைவு குடியேறுகிறது.)

      /பண்டிகைகளில் கடைசியில் தாம்பூலத்தோடு தேங்காய் கொடுப்பது, இங்கு தேங்காய், கிளம்பலாம் என்பதற்கு என எப்போவோ படித்திருக்கிறேன்./

      ஓ.. சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உள்ளது போலும். இங்கு "தேங்காய்" என்பதற்குத்தான் எத்தனை பொருள் கொள்ளல்... அர்த்தங்கள்... புரிந்து கொண்டேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. தேங்காய் தினம் - இப்படி இருப்பது இன்றைக்கு தான் தெரிகிறது. செய்முறை சிறப்பு. தேங்காய் பொடி என்று வீட்டில் முன்னர் செய்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      தேங்காய் தினத்தை நானும் இன்றுதான் அறிந்து கொண்டேன். உடனை இங்கும் தெரியப்படுத்தினேன். தாங்களும் உடனே பதிவுக்கு வந்து படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      செய்முறை சிறப்பு என பாராட்டியதற்கும் நன்றி. ஆம். இது முன்பு நம் வீட்டு பெரியவர்களிடம் கற்றுக் கொண்ட பக்குவங்கள் தானே! உங்கள் வீட்டிலும் இது போன்று செய்து சாப்பிட்டிருப்பதற்கு மகிழ்ச்சி.

      தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. கமலாக்கா, உங்களின் இந்தப் பதிவு எபியில் வந்தது நினைவு இருக்கு

    இது எங்க ஊர்ப்பக்கம் அவலோஸ் பொடின்னு சொல்லுவோம். மாலை நேரம் நேந்திரன் பழம் வேக வைத்து அதோடு இந்தப் பொடியும் சேர்த்துச் சாப்பிடுவதுண்டு. ரொம்பப் பிடிக்கும். கூடவே பப்படமும்....அல்லது இந்தப் பொடியோடு வெல்லம் அல்லது சர்க்கரை கலந்தும் சாப்பிடுவதுண்டு. இதற்கும் கூடவே பப்படமும்!

    தேங்காய் தினம்னு ஒன்று இருப்பது இப்ப உங்க பதிவு மூலம்தான் தெரிகிறது கமலாக்கா.

    சூப்பர் பொடி!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களுடன் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      நான் அழைத்தவுடன் வந்து தந்த கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி. ஆனால், தங்களின் வேலை பளுவில் உங்களை நான் அதிகம் துன்புறுத்தி விட்டேனோ? மன்னிக்கவும் சகோதரி.

      நீங்கள் இந்தப் பதிவை எபியில் படித்திருக்கிறீர்கள் என்று நினைவாகச் சொன்னமைக்கு நன்றி.

      /இது எங்க ஊர்ப்பக்கம் அவலோஸ் பொடின்னு சொல்லுவோம். மாலை நேரம் நேந்திரன் பழம் வேக வைத்து அதோடு இந்தப் பொடியும் சேர்த்துச் சாப்பிடுவதுண்டு. ரொம்பப் பிடிக்கும். கூடவே பப்படமும்....அல்லது இந்தப் பொடியோடு வெல்லம் அல்லது சர்க்கரை கலந்தும் சாப்பிடுவதுண்டு. இதற்கும் கூடவே பப்படமும்!/

      ந இந்த உணவை பற்றிய சுவையான நல்ல தகவல்களுக்கு நன்றி சகோதரி. தேங்காய் தினத்தை ப்பற்றி நானும் படித்ததும் ஆச்சரியத்துடனதான் இந்தப்பதிவை இங்கு பகிர்ந்தேன். பதிவை ரசித்து நல்லதொரு கருத்தை தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete