அகோ வாரும் பிள்ளாய்..! அதாகப்பட்டது இந்த விதி ரொம்பவே பலமானது...!வலியது..! வலிமையானது..! உண்மைதானே..!
அந்தக்காலத்தில் தேவர்கள், இறைவனார்கள், முதற்கொண்டு, செல்வ செழிப்புடன் சிறப்பாக கொடி கட்டி வாழ்ந்த அரசர்கள், பக்குவப்பட்ட மாந்தர்கள், மகான்கள் என அனைவரையுமே "விதி" என்பது தலைகீழாக புரட்டி எடுத்து விட்டு சந்தோஷமடைந்திருப்பதை எத்தனை புராணங்களில், பழங்கால கதைகளில் பார்த்துள்ளோம். "விதி வலியது. அதை வெல்ல இயலாது என்று கூறும் போது சமயங்களில், நம் மதியில்னால்தான் ஒரு செயல் நடந்தது/நடக்கிறது/ நடக்கப் போகிறது என சிலர் பெருமை கொள்கிறார்கள். ..! இது அசட்டுத்தனமல்லவா..! என எனக்கு எப்போதும் தோன்றும்." விதியை, மதியால் வெல்வதற்கு, அந்த விதியும் சற்று வளைந்து தந்தால்தான் அது (அதாவது நாம் நினைத்த மாதிரி ஒரு செயல் நடப்பதென்பது...! ) நிறைவேறும். இது காலங்காலமாய் செயல்பட்டு வருவதல்லவா..?
சரி இப்போது இந்த "விதி" புராணம் எதற்கென்றால், தினமும் ஒரு செயல் அது பாட்டுக்கு தேமேன்னு நடந்து கொண்டிருக்கும் போது, அது மாறுபட்டால், அதன் பெயர் "விதி"யின் செயல்தானே...!
சென்ற புதனன்று காலை உணவு முடிந்ததும், மதிய சாப்பாட்டிற்கு சுத்தம் செய்து பாலக் கீரையை அரிந்து கொண்டிருந்த போது, இயற்கை அழைப்பிற்கு கட்டுப்பட்டு குளியலறைக்கு சென்றவள், கால் அலம்பி வெளியேறும் போது, அந்த ஈர கால்களோடு, என் (விதியின்) செயல்பாடும் உடன்பிறப்பாக வந்து சேர்ந்து கொள்ளுவோமென்று சற்றாவது அந்த "விதி" எச்சரித்திருக்க கூடாதா? (அதற்குதான் பேச தெரியாதே..! செயல்பாட்டில் மட்டும் தன் வேகத்தை காட்டி விட்டு சந்தோஷபட்டுக் கொள்ளும்.) விளைவு, படி தாண்டி கால் வைத்து, ஈரக்கால் வழுக்கியதில், கீழே கோணலும் மாணலுமாக விழுந்ததில் பல இடங்களில் நல்ல அடி எனக்கு மட்டுந்தான். (அப்போது குளியலறை வாசலில் இருக்கும் மிதியடியில் கால் வைத்து நான் கால்களின் ஈரம் ஆற்றக்கூடாதா என உங்களுக்குத் தோன்றும். ஆனால், அந்த மிதியடியும் அப்போது விதியின் பக்கம் பலமாக சாய்ந்து அப்புறப்படுத்தபட்டிருந்தது...) எனக்கு காதில் விழாது என்ற சந்தோஷத்தோடு, அந்த "விதி" கைகொட்டி சிரித்திருக்கும்
அத்தோடு "அப்போது வீட்டில் யாருமில்லை.. அனைவரும் அவரவர் வேலையாக வெளியில் சென்றுள்ளனர் என்ற தைரியமும் அதன் (விதியின்) கூடுதல் சந்தோஷம்." ஆங்காங்கே பட்ட அடிகள்... அடிகளுக்கு கிடைத்த வேதனை என்ற பரிசுகளோடு நான் எழவே சிறிது நேரம் பிடித்தது. மெள்ள தைரியத்தை வரவழைத்துக் கொண்டு (உனக்கு மட்டும்தான் தைரியமா? எனக்கும் சிறிதளவு இருக்கக் கூடாதா..? என்று கண்ணுக்கு மறைவாக இருக்கும் விதியுடன் பேசியபடி சிரமத்துடன் எழுந்தேன்.) அப்படியே சிறிது நேரம் சமையலை புறக்கணித்து அவர்களுடனே வெளியில் சென்றிருந்தாலும், விதி வெளியிலேயே ரோடில் வழக்கப்படி விழவைத்து, வேறென்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்குமோ. .? என அத்தனை வலியிலும் நினைத்துக் கொண்டேன்.
ஹாலுக்கு வந்தவுடன், உடனே கைவசம் இருக்கும் அயோடக்ஸ், நீலகிரி தைலம் என மருந்துகளை தேடி எடுத்து எனக்கு கிடைத்த வெகுமதிக்கு கூலியாக்கினேன். கால் மணி நேரம் வலிகளை,எங்கெங்கு என நிர்மாணித்து / தீர்மானித்து உபயோகிக்கும் போது, "நல்லவேளை..! ரத்த காயங்களை தராமல், பிசகு, குளியலறை படியில் இடுப்பு, மூட்டு என அடிபட்ட கடுமையான வலியை மட்டும் தந்தமைக்கு, இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டேன்."
மேலும், ஒரு கால் மணி நேரம் அமர்ந்திருத்து விட்டு பின், கைகளை சுத்தம் செய்து கொண்டு பாக்கி நறுக்காமல் இருந்த "பாலக்கை" பொடிதாக அரிந்து கடாயில் கொதிக்க வைத்து, ஏற்கனவே வெந்திருந்த பாசிப்பருப்புடன் கூட்டு செய்ய ஒரு தேங்காயையும் உடைத்து துருவி மிக்ஸியில் அரைத்து சேர்த்து கூட்டாக்கி விட்டு. குக்கரில் சாதத்தையும் வைத்து விட்டு நிமிர்ந்தால், நிமிரவோ, குனியவோ முடியாமல், பின் இடுப்பு வலி (முதுகு தண்டின் அடிபாக எலும்பு.) அதிகமாக தெரிந்தது. கூடவே, வலது கால் மூட்டு, வலது கால் பெருவிரலோடு சேர்ந்து கால் பாதம் என அனைத்து இடங்களும், சுளுக்கு வீக்கம், வலி என போட்டிப் போட்டுக் கொண்டு "விதி"தன் வெற்றியை கொண்டாட ஆரம்பித்தது.
ஆகா..! வெளியில் சென்றிருந்தவர்கள் வந்தால், "கவனமாக இருக்க வேண்டாமா." என்ற திட்டு வேறு கிடைக்குமே என்ற படபடப்பில், நேரங்கள் நகர்ந்து அவர்கள் வரவும் ஆயிற்று.
வெளியிலிருந்து வந்தவர்களிடம், விதியின் விளையாட்டை விவரித்தப்பின், வலிகளின் கோர முகங்களும் மூன்று நாட்களுக்கும் மேலாகவே கடுமையுடன் தொடர்ந்தன. நீ.கி,தைலம், அயோடக்ஸ் போன்ற தொடர்ந்த மருந்தோடு, வெந்நீர், ஐஸ்பாக்ஸ் ஒத்தடங்களோடு எனக்கு தினமும் பெரும்பாலும் மன ஆறுதலை தந்தது உங்கள் அனைவரின் பதிவுகள்தாம்...! அனைவரின் பதிவையும், படித்து கருத்திட்டு என் வலிகளை தாங்கினேன் என்றால் அது மிகையல்ல..! நிஜமான உண்மை.
எப்போதும் போல் ஐந்தாறு நாட்கள் நொண்டியடி நடந்து என் கடமைகளை செய்து கொண்டேதான் இருக்கிறேன். பழைய வலி இல்லாத நாட்களை மீண்டும் எதிர்பார்த்தபடி...!
வந்து விடும் அந்த வலியில்லாத நாட்கள்.. ஏனெனில், நம் உடலை, நம் உடலே சரி செய்து கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இறைவன் தந்த ஒரு வரம். அந்த வரம் என் வாழ்வின் இறுதி வரை தொடர வேண்டுமெனவும் இறைவனை அன்போடு பிரார்த்திக்கிறேன்.
பதிவின் முதல் வரிகள் எத்தனை உண்மையானதென இப்போது கூறுங்கள்.
இப்போது சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவை படித்துப் பார்த்ததும், அவர்களுக்கு ஏற்பட்ட விதியின் உபத்திரவங்களை எண்ணி மனம் மிகவும் வருத்தப்பட்டது. தீடிரென எதிர்பாராமல் விளைந்த அவரின் கால் வலியும், வேதனையும் விரைவில் சரியாக வேண்டுமென இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்து கொண்டேன்.
ஒருவரின் பிரார்த்தனைகள் கண்டிப்பாக அவரின், மற்றும், மற்றையவர்களின் உடல், மன நலன்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கை (இன்று எ. பியிலும் கேள்வி பதிலில் இது இடம் பெற்றுள்ளதை படித்தேன்.) எனக்கு நிச்சயம் உண்டு.
இன்றோடு எட்டு நாட்களும் கடந்து கொண்டிருக்கிறது. ஏனோ உங்களிடமும் இதை சொல்ல வேண்டுமென தோன்றியதால், இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதியதை இப்போது நிறைவு செய்து இங்கு பகிர்கிறேன்.
படிக்கும் நட்புறவுகள் அனைவருக்கும் அன்பான நன்றிகள் .🙏