Thursday, March 8, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 5)

இல்லம் களைக்கட்டி இருந்தது.  இல்லத்தில் படித்துக்கொண்டருந்த மாணவ மாணவியர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள தங்களை தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள்.குளிக்காமல் அடம் பிடித்துக்கொண்டிருந்த சின்னக் குழந்தைகளை சமாதானபடுத்தி குளிக்க வைத்து ஆடைகளை  அணியச் செய்து  விழாவுக்கு ரெடியாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் பார்வதியும் மற்றொருவரும். கைகள் சரிவர கடமையை செய்து கொண்டிருக்க மனம் தியாகுவையும், ராஜுவையும் சுற்றி வந்தது.

அன்று பார்வதி அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதும் கோகிலாவும் சற்று நெகிழ்ந்து போனாள்."இவ்வளவு பாசத்தை மனசுலே வச்சிகிட்டு , சொல்லாமே ஏன் இப்படி தவிச்சிருக்கே! நெஞ்சு நிறைய பாரத்தை வச்சிகிட்டு உன் ஒருத்தியாலேதான் சகஜமா இருக்கிற மாதிரி காமிச்சிட்டிருக்க முடியும் அத்தை " என்றவளாய் அவள் அருகில் வந்து தோள்களை அணைத்துக் கொண்டதும், பார்வதி இன்னமும் நொறுங்கி போனாளன்றே சொல்லவேண்டும். மனதின் பாரத்திற்கு கண்கள்தான் வடிகால் என்றே சொல்ல வேண்டும்..  அன்று அவளிடம் சொல்லி வருத்தப்பட்டதும்,  மனசு லேசானதை உணர்ந்தாள்.வயது காரணமாக தற்சமயம் ஏற்பட்டிருக்கும் தள்ளாமையை தவிர்த்து மனசளவில் எதற்கும் தைரியமாயிருக்கும் தான், தியாகுவை பார்த்ததிலிருந்து சற்றே நொறுங்கி தளர்ந்திருப்பதை ஒத்துக்கொண்டாள்.

விழா ஆரம்பிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாலும், விழாவுக்கு கோகிலாவும் வருவதாய் சொன்னதை நினைவு கூர்ந்ததாலும், மனதுக்குள் எழுந்த யோசனைகளை அகற்றிவிட்டு, தனக்களிப்பட்டிருக்கும் அடுத்தடுத்த வேலைகளைமும்மரமாக கவனிக்க ஆரம்பித்தாள் பார்வதி.

குழந்தைகளின்  கலை நிகழ்ச்சிிகள் முடிந்து ,  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை ஊக்குவித்து,. அனைத்து குழந்தைகளும் இனிப்பு வழங்கி, இல்லத்தை தொடங்குவதற்கு ஆதரவாக இருந்திருந்தவர்கள் ஒரிரு வார்த்தைகள் பேசியபின் , இல்லத்தை ஏற்று நடத்தும் கோகிலாவின்  குடும்ப நண்பருமான இல்லத்தின் நிர்வாகி, வந்திருந்தவர்களை வரவேற்று பேசி இல்லம் தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடந்த முன்னேற்றங்களை கூறி இல்லத்தற்காக சேவை செய்யும் அனைவருக்கும் நன்றி கூறி அதில் பணி புரியும் ஆசிரிய பெருமக்களையும், சிப்பந்திகளையும் பாராட்டி பேசினார். .பார்வதியின் சேவைகளை உயர்த்திப் பேசியவர்," என் குடும்ப நண்பரின் மனைவி கோகிலா, "என் அத்தை இவர், இவருக்காக இவ்வில்லத்தில் ஒரு வேலை கொடுங்கள்! " என்றதையும், அவர் வேலையில் சேர்ந்த நாள் முதற்க்கொண்டு இத்தனை வயதிலும் அவரது அயராத உழைப்பைக்கண்டு தான் வியந்து போனதையும் கூறி, அது மட்டுமல்ல! அவருக்கு மாத ஊதியமாக கொடுக்கும் பணத்தில் அவர் செலவுக்கு போக மிகுதியை சேர்த்து வைத்து இல்லத்திற்கே தானமாக கொடுக்கும் அவர் பண்பையும் குறிப்பிட்டு பேசியதும், கரவொலி எழுந்தது. விழாவுக்கு குடும்பத்துடன் வந்திருந்த கோகிலாவும் பெருமிதத்துடன், எழுந்து வந்து, பாராட்டுகளினால் சற்று சங்கோஜத்துடன் நின்றிருந்த பார்வதியை அணைத்துக்கொண்டாள்.

"பிறகு ஒரு விஷயம்!"  என அவர் மறுபடியும் ஆரம்பித்ததும், அனைவரும் அமைதியாகி அவரை நோக்கவும், "ஒருவாரம் முன்பு ஒருவர் நம் இல்லத்துக்கு வந்து கணிசமாக உதவித்தொகையை தந்ததோடு, நம் இல்லத்திலே ஒரு வேலையும் தரும்படி கேட்டுக்கொண்டுள்ளார். தாராள மனது கொண்ட அவர் செய்த உதவியை சொல்லி பிரகடனபடுத்தக் கூடாதென்றுதான்  சொன்னார். ஆனால் என் மனதில் கூற வேண்டுமென்று நினைத்ததால், சொல்லி விட்டேன்.. இவரை பிள்ளையாய் பெற்றெடுத்த அவரின் பெற்றோர்கள் என்ன தவம் செய்தார்களோ? இத்தனை சின்ன வயதில் அவருடைய சேவை உள்ளம் பாராட்டப்பட வேண்டிய  ஒன்று என நான் நினைக்கிறேன்.! அவரும் நம் பார்வதி அம்மா மாதிரி கோகிலாவுக்கு  உறவு என்று சொல்லி,, அவர்தான் அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தினார். இவ்விடம் அவரை அழைத்து அனைவருக்கும் அறிமுகப்படுத்த விழைகிறேன். தயவு செய்து அவர் மேடைக்கு வரவும்." என்றதும் கரவொலிக்கிடையே அமர்ந்திருந்த இடத்திலிருந்து மேடைக்கு வந்து வணங்கியவரை கண்டு பார்வதியின் முகத்தில் சிறு சலனம் தென்பட்டது

நீ  செஞ்சது  உனக்கே சரின்னு படறதா? உன் கடமையை செய்யாமல், எனக்காக இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தாய் ? என சற்று கோபமாக கேட்ட பார்வதி "இதற்கு நீயும் அவனுக்கு துணையாக இருந்திருக்கிறாய்? அன்று வந்த போது   என்கிட்டே  ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அத்தனையும் மறைக்கனும்னு எப்படி தோணுச்சு உனக்கு? என்று  கோகிலாவை பார்த்தும், சற்று வருத்தமும் கோபமும் கலந்த குரலில் கேட்டாள் பார்வதி.

"இந்த கேள்வியையே  எத்தனை நேரம் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள் பாட்டி? " என்றபடி அவள் அருகில் வந்தமர்ந்தான் தியாகு.

இல்லத்தில் அவனை மேடையில் பார்த்ததும் அதிர்ச்சிக்குள்ளாகிய பார்வதி விழா முடிந்து தன் இதர வேலைகளும்  நிறைவுற்றதும் கோகிலாவுடன் கூட சரிவர பேசாமல் வீடு வந்தடைந்தாள். பேரனை பார்த்ததும் ஒரு நிமிடம் தன்னையறியாமல் தன்னுள் மகிழ்ச்சி எழுந்த போதும்,  இன்னமும் தன்னை வறுப்புறுத்தும் நோக்கத்தில், அவன் எப்படியோ கோகியை சந்தித்து, அவள் ஆதரவையும் சம்பாதித்துக்கொண்டு அதே இல்லத்தில்  நற்பெயரும் பெற்றபடி...... இருக்கட்டும்!  இந்த கோகியும் தன்னிடம் ஒருவார்த்தை கூடச் சொல்லாமல் மறைத்திருக்கிறாளே!  என்றெல்லாம் எண்ணியபடி  இருந்தாள்.

மறு நாள் காலையிலேயே தன்னை சந்திக்க வந்திருந்த இருவரிடம்  வருத்தமும் கோபமுமாக கேள்விகளை கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

கோகிலாவும் வந்து அவளருகில் அமர்ந்தபடி , "அத்தை! உன்னை தேடி வந்த தியாகு நீ உன் உறுதியான முடிவை சொன்னதும் , என்னசெய்வதென்று தெரியாமல்  என் வீட்டுக்கு வந்து என்கிட்டே எல்லா விபரமும் கூறினான். அவனுடைய அன்பான பேச்சும்,  உன்மேலே வச்சிருக்கிற மரியாதையையும் பார்த்ததும்,  என் அண்ணா உனக்கு செஞ்ச துரோகத்தைக்கூட நான் கொஞ்ச நேரம் மறந்துட்டேன். இரண்டாவதா, அவனுக்கு கிடைச்சிருக்கிற தண்டனையை கேட்டதும் , "தான் ஆடாட்டாலும் , தன் சதை ஆடும்னு" சொல்வாங்காளே! அந்த மாதிரி எனக்குள்ளும் ஒரு பச்சாதாபம் உருவாயிடிச்சு! அதுக்கப்புறமா, தியாகு இல்லத்தில் என்னையும் அறிமுகப்படுத்தி விடுங்கள்! என்று சொன்னதும் என்னாலே தட்ட முடியலே! அதைப்பத்தி பேசலாம்னு அன்னைக்கு நான் வந்தப்போ, நீயும் அதை சொல்லி வருத்தப்பட்டதுனாலே தியாகு கூடவே ஒருநாள் இங்கு வந்து பேசாலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே இவன்......என்றவளை இடைமறித்தபடி தியாகு ," பாட்டி! இங்கிருப்பது உங்களுக்கு பிடிக்கல்லைன்னா, நான் போயிடுறேன். "என்றான் சற்று உடைந்த குரலில்.

மூவரும் சற்று நேரம் ஒன்றும் பேசாமல் அங்கு ஒரு கனத்த மெளனம் நிலவியது. ஒவவொருவருக்கும் தான்  செய்தது  தவறோவென மனதுக்குள் சுய பரிசோதனை செய்து கொள்வது போல் அமைதியாயிருந்தனர்.
சிறிது நேரத்திற்கு பின் தியாகுதான் மெளனத்தை உடைத்து பேச ஆரம்பித்தான்.

" பாட்டி! நான் உங்களை பார்த்ததில்லை!ஆனால் அப்பா உங்களைப்பற்றிச் சொல்லும் போது நானகவே என் மனசுக்குள் உங்களை ஒரு உருவத்தை கற்பனை செஞ்சு வளர்ந்து வந்தேன். உங்களை பாக்கனும், உங்களோடு பேசி உங்க அன்பு  நிழல்லே வாழனுன்னு,  மனசுலே ஆசையை வளர்த்துகிட்டேன். அதனாலே உங்களை எப்படியாவது என்னோடே அழைச்சிகிட்டு போகனுன்னு முடிவோட புறப்பட்டு வந்தேன். இங்க வந்து பாத்த போது நான் நினைச்ச மாதிரிதான் நீங்களும் இருந்தீங்க!  ஆனா, என்னோட முடிவுபடி உங்களை கூட்டிண்டு போற விசயத்துலே மட்டும் நான் தோத்துட்டேன். அதனாலதான் உங்களை பிரிய மனசில்லாமே, நீங்க வேலை பாக்கிற இல்லத்திலேயே உங்க பார்வையிலே படற மாதிரி இருக்கலாம்னு தோணிச்சு!  கோகிலா அத்தையும் இங்கே இருக்குறாங்கன்னு நா உங்களைபத்தி விசாரிக்கும் போதே தெரிஞ்சுகிட்டதாலே, அவங்களை போய் சந்தித்து பேசினேன்." அவங்க உதவியோடுதான் இல்ல நிர்வாகிகிட்டே வேலையில் சேரவும் சம்மதம் வாங்கினேன். என்கூட நீங்க வரதற்கு பிரியப்படாத போது, நான் உங்க கூட இருக்க நினைக்கிறது தப்பா பாட்டி?. நெகிழ்ச்சியுடன் அவன் கேட்டதும், பார்வதியின் கண்களும் குளமாயின.

"இல்லைப்பா! ஆனால் உங்கப்பா அங்கே எப்படி உன்னை விட்டுட்டு தனியா சிரமபடுவான். நீ அவனுக்கு ஆதரவா இருந்து பாத்துண்டாதானே நல்லாயிருக்கும்.". மகனின் மேல் உள்ள பாசம் பார்வதியை சுமூகமாக பேச வைத்தது.

"பாட்டி! அங்கே அப்பாவை கவனிச்சிக்க அம்மா இருக்காங்க!  அம்மாவின் சொந்தங்கள் அருகருகே இருக்காங்க! ஆனா இங்கே உங்களுக்குன்னு கோகி அத்தையை தவிர யார் இருக்காங்க? இப்போதிலிருந்து உங்களுக்காக  நானும் இருக்கேன். அப்போ அப்பா உன்னை விட்டுட்டு ஏதோ சுயநல புத்தியிலே போனதுனாலே நீங்க எவ்வளவு சிரமங்களை அனுபவிச்சு இருக்கீங்கன்னு கோகி அத்தை சொன்னாங்க! அந்த பாவத்துக்கு பிராயசித்தமா  நான் அப்பாவை விட்டு இருக்கிற வேதனையை கொஞ்ச நாள் அப்பாவும் அனுபவிக்கட்டுமே! அப்படி சோர்வா நின்ன நேரத்திலே கூட நீங்க மனசை தளர விடாமே இல்லத்துலே உங்க வயசுக்கும் மீறிய வேலை செஞ்சு.. உங்க உழைப்பையே  தானமாக்கி தந்து  அந்த புண்ணியந்தான் அப்பா உயிரை காப்பாத்தியிருக்குன்னு நான்நினைக்கிறேன்! .அன்னைக்கு இல்லத்தோட நிர்வாகி பெருமையா உங்களை பத்தி பேசுனப்போ, நான் சேர்த்து வச்ச பணத்தை கொடுத்து அவர்கிட்டே பெருமைபட்டம் வாங்கினது  கூட சின்ன செயலா ஆயிடுத்து.!  தனியொரு மனுஸியா நின்னு வாழ்ந்து காட்டின உங்களுக்கு இந்த வயசான காலத்துலே ஆறுதலுக்கு பிடிசிக்கறதுக்கு ஒரு கரம் வேண்டாமா? அந்த கரமா நான் உங்களோடு எப்பவும்  இருக்கேன். உங்க மனசு மாறி நீங்க எப்போ அப்பாவை பார்க்கப்போகலாம்னு சொல்றீங்களோ அது வரைக்கும் நான் அந்த பேச்சை எடுக்க மாட்டேன். சத்தியமா உங்களை விட்டுட்டு போகவும் மாட்டேன். உங்க கனவையெல்லாம் அப்பாவிற்கு பதிலா  நான் நிறைவேத்தி வைக்கிறேன்." தியாகு பேச பேச பார்வதியின் மனம் இளகியது. கண்களில் கண்ணீருடன் மெளனமாயிருந்தாள்.

கோகிலா,"என்ன அத்தை! தியாகு இவ்வளவு கெஞ்சுறான்! நீ பதிலேதும் சொல்லாமே அமைதியா இருக்கே! என்றதும்,  கண்களை துடைத்தபடி எழுந்து கொண்ட பார்வதி,"கோகி!  என்னோட மன உறுதி என் பேரனுக்கும் இருக்கு! ஆனா அவன் உறுதிக்கு முன்னாடி நான் தோத்துப்போயிட்டேன்.! எனக்கு இந்த வயசான காலத்துலே பக்க பலமா என் பேரனை துணைக்கு கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லி வரலாம்! வா! தியாகு! நீயும் வா ! கோவிலுக்குச் சென்று வரலாம் என்றபடி பாசத்துடன் அவன் கையைப் பற்றிக்கொண்டாள். இனி  தன் வாழ்வு சற்று ஆனந்தமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் உடல் வலு கொஞ்சம் கூடியதை உணர்ந்தாள் பார்வதி. மூவரும் நிறைந்த மனதுடன் ஆண்டவனை தரிசிக்க கிளம்பினார்கள்.
முற்றும். 

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதிகள்:1234

10 comments:

  1. மிகவும் அருமை. செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாய்ச் சென்ற இடங்கள் உண்டு. சில சமயம் நம் குணம் நாமே அறிய மாட்டோம். பிறர் சொல்லித்தான் தெரியும். அதுபோல பார்வதியின் குணம் பற்றி மற்றவர்கள் சொல்வது இருக்கிறது - உணர்ச்சிகளையும், சோகங்களையும் தன்னுள் மறைத்தபடி இயல்பாய் இருப்பதுபோல வளைய வருவது.

    மொத்தத்தில் அருமை. நல்ல முடிவு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் உடனடியாக முதல் வருகை தந்து விளக்கமான கருத்துரை இட்டு நான் எழுதிய கதையின் முடிவை பாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள். கதைகள் எழுத எனக்கு நிறைய ஆசை.ஆனா்ல் சுருக்கமாக எழுதாமல் வழ வழவென்று எழுதுகிறேன். தங்களைப் போன்றோரின் ஊக்கமிகு கருத்துரையினால்,சிறப்பாக எழுத வேண்டுமென்ற எண்ணம் வருகிறது. பொறுமையாக வாசித்து தந்த கருத்துரைக்கும, பாராட்டிற்கும் மீண்டும் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நெஞ்சு நிறைய பாரத்தை வச்சிகிட்டு பலர் இவ்வாறாக வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.....கனவையெல்லாம் அப்பாவிற்கு பதிலா நான் நிறைவேத்தி வைக்கிறேன் என்று இவன் கூறிவிட்டான்....ஆனால் பலருக்கு இவ்வாறு அமைவதில்லை. கதையின் ஓட்டத்தை முழுமையாக ரசித்தேன். ஏதோ நம் வீட்டில் நடப்பதுபோன்ற உணர்வினை இறுதிவரை தக்கவைத்த உங்களின் பாணி அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும்,மனம் நிறைந்த பாராட்டிற்கும் என் மகிழ்ச்சி கலந்த இதய பூர்வமான நன்றிகள்.

      /நெஞ்சு நிறைய பாரத்தை வச்சிகிட்டு பலர் இவ்வாறாக வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.../ நூறு சதவிகிதம் உண்மையான வார்த்தைகள். நான் முதல் பகுதியில் குறிப்பிட்ட சொந்தங்களில் ஒருவரின் வாழ்வி்ல் இதே நிகழ்வுகள் வர அவர்கள் தாங்கள் குறிப்பிட்டபடிதான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டுள்ளார்கள். கதையில்தான் என்னால் மாறுதல்களை புகுத்த முடிந்தது.

      தாங்கள் பொறுமையாக வாசித்து தந்த ஊக்கமிகு கருத்துரைகளுக்கும், பாராட்டுதலுக்கும் என் மனம் கனிந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. மகளீர் தின வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம்நிறைந்த நன்றிகள் சகோதரி.

      தங்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

      Delete
  4. அன்பு அது தரும் தெம்பு என்று சொல்வது உண்மை .
    கதை அதை உணர்த்தி விட்டது.
    ஒருநாள் தன் வளர்ப்பு மகனை காணசெல்வாள் அத்தை.
    நம்பிக்கைதான் வாழ்க்கை.
    தாய்மை வாழ்க!
    அருமையான கதை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கதை முழுவதையும் படித்து ரசித்து தந்த கருத்துரைகளுக்கும் என நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

      /அன்பு அது தரும் தெம்பு என்று சொல்வது உண்மை .
      கதை அதை உணர்த்தி விட்டது.
      ஒருநாள் தன் வளர்ப்பு மகனை காணசெல்வாள் அத்தை.
      நம்பிக்கைதான் வாழ்க்கை.
      தாய்மை வாழ்க!/

      அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்....என்பது போல் அன்புக்கு மறைக்கும் சக்தி கிடையாது. அன்பும், நம்பிக்கையும் ஒருசேரப் பெற்ற பார்வதி கண்டிப்பாக வளர்ப்பு மகனை காணுவாள்.நாமும் நம்பலாம்.

      தங்களது ஊக்கமிகு கருத்துரைகள் என் எழுத்துக்களுக்கு என்றும் பக்கபலமாக இருக்குமென்று நானும் நம்புகிறேன். தங்கள் வாழ்த்துகளுக்கும் வருகைகளுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அன்புக்கு இணை ஏதுமில்லை நிறைவுப்பகுதி மனநிறைவைத் தந்தது.

    மகளிர் தின வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      /அன்புக்கு இணை ஏதுமில்லை நிறைவுப்பகுதி மனநிறைவைத் தந்தது./

      மிகுந்த மகிழ்ச்சி சகோதரரே. தங்கள் அனைவரின் ஊக்கமிகு கருத்துரைகள் என் கதைகள் எழுதும் ஆவலை மிகுந்த நம்பிக்கையுடன் தக்க வைக்கிறது. நன்றிகள்.

      மகளிர் தின வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      Delete