Friday, July 4, 2014

புதியது கேட்கின்….


கந்தன் கருணை படத்தில் ஔவையிடம் கேள்விகள் கேட்டு பாட்டாலேயே பதிலளிக்க ௬றும் முருகப்பெருமான் என்னிடமும் வந்து (அவரும், நானும் சத்தியமாக ஒன்றாகி விட முடியாது.) புதியது கேட்கின், (தலைப்புகேற்றவாறு ஏதோ சுற்றுகிறேன்.)

          புதியது கேட்கின்! பன்னிரு விழியழகா!
          என் பயணமும் புதிது! உந்தன்
      பார்வையின் விளைவால், எந்தன் பாதையும் புதிது!
          உன் புது அருளாலே! உனை
        புனைந்ததும் புதிது! இனி புனைவதும் புதிது!

என்று ராகம் போட்டு பாடுவதற்குள் விட்டால் போதுமென்று, மாயமாய் மறைந்திருப்பான். ஆனால் உங்களை தப்பிக்க விட மாட்டேன். “புதியது கேட்கின்” உரைநடையாய் வருகிறது. சற்று படித்துதான் பாருங்களேன்.

              சிறுவயதில் நிறைய பயணங்கள் எனக்கு அவ்வளவாக கிடைத்ததில்லை! நாங்கள் வசித்தவிடத்தில் அப்போது 1960,70, பதுகளில், ஆங்காங்கே, பேருந்துகளும், புகை வண்டிகளுமாக நிறைய ஆக்கிரமிக்கவில்லை! அரைமணி நேரத்திற்கு, சற்று ௬டுதலாக நடைபயணம் சென்றால்தான் பேருந்து நிலையத்தை அடைய முடியும். இல்லையென்றால், மாட்டு வண்டியோ, குதிரை வண்டியோ, அமர்த்திக்கொண்டு செல்ல வேண்டும். நான்கு பேர்கள் சிரமத்துடன்தான் அதில் அமர்ந்து பயணிக்க முடியும். வண்டி சாயும் போதும், அல்லது, வண்டிக்காரரின் மிரட்டலுக்கு பயந்து மாடு வேகமாக ஓடும் போதும் வண்டியில் தலை இடித்துக்கொள்ளும் அடிகள் இன்னமும் பசுமையாக மனதில் இருக்கிறது. (ஆனால், அந்த வண்டியை பிடித்துக்கொண்டே, வண்டியின் பின்னாலேயே, ஓடி குறிப்பிட்ட இடம் வரைச்செல்ல எங்களுக்கெல்லாம் (எனக்கும், என் அண்ணாவுக்கும்.) அப்போது ஆசையாக இருக்கும். ஆனால், அம்மாவின் பாசமான கண்டிப்பு அந்த ஆசையை தடை செய்து விடும். ஏனைய உறவின் சிறுவர் சிறுமியர் “இந்த செயலைக்௬ட உங்களால் செய்ய முடியவில்லையே!!” என்ற பாவனையில் மட்டம் தட்டி கேலி செய்யும் போது சுருக்கென்ற கோபம் தீயாய் தகிக்கும். அம்மாவிடம் ௬ட சற்று கோபம் வரும். ஆனால், அம்மாவின் பாசம் மிகுந்த சமாதானத்தில் மனம் கரைய, “எங்கள் அம்மாவை போல் உங்கள் அம்மா உங்களிடத்தில் உயிராக இல்லை! அதனால்தான் நீங்கள் கால் வலிக்க ஓடி வர சம்மதித்திருக்கிறார்கள்!” எனறு பதிலடி கொடுத்து சமாளித்திருக்கிறேன். சிறு பிராயம் மாறி, வந்த காலங்களில், “மொத்தத்தில் இந்த ஊரின் சிறந்த ஓட்ட பந்தய வீரர்கள் இவர்கள்! என்று சொல்லும் வாய்ப்பை பெற இந்த ஊர் கொடுத்து வைக்கவில்லை! என்று நம் மனதை தேற்றிக்கொள்ளலாம்”!!! என்று நான் என் அண்ணாவிடம் சொல்லுவேன்.) பயணங்கள் சுலபமாக இல்லாவிடினும், அந்த சந்தோசமான காலங்கள் இனி வராது. காலங்கள் ஓடி ஓடி நிறையவே முன்னேறி விட்டது. (இப்போதெல்லாம் பிறந்த குழந்தைகள் ௬ட, பெற்றோருடன் இரண்டு சக்கர, மூன்று, நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர்.)

                    இப்படியான நாட்கள் முன்னேறி (சென்னையில் வாழ்க்கைப்பட்ட பின்,) இன்று வரை என் வாழ்க்கையில் பேருந்துகளிலும், புகைவண்டிகளிலுமாக, நிறைய தடவைகள் பயணத்தை ஏற்படுத்தி கொடுத்து விட்டன. ஆனாலும், விமானத்தில் எங்கும் ஒரு தடவை ௬ட செல்லவில்லையை!! என்ற என் சிறு குறையையும், சென்ற வாரம் என் மூத்த மகன் அகற்றி விட்டான். “ஏர் ஏசியா” வின் புதிய வருகையை ஒட்டி பெங்களுரிலிருந்து  சென்னை, மீண்டும் சென்னையிலிருந்து, பெங்களுர். என இருதடவை அந்த பயணமும் அமைந்து விட்டது. இதுவரை செல்லாத புதிதான பயணமாகையால், சற்று பயமாகத்தான் இருந்தது. (மாட்டு வண்டியின் பின்னால் ஓடியே செல்ல வேண்டுமென ஆசைப்பட்ட அந்த வயதிற்கும், நிறைய வயதாகி விட்டதால், ஆசைக்கு ஒரு படி முன்னதாவே, பயம் காலூன்றி நிற்கிறது போலும்! என்று நினைத்துக் கொண்டேன்.)

              நீல வானத்தினிடையே, நீந்துவது போன்ற உணர்வுடன் பறந்ததும், தலைக்கு மேல் அண்ணாந்து பார்த்து ரசித்த கருமையும் வெண்மையுமான மேகங்கள், நம் காலுக்கடியில் விரைவாக ஓடி கண்களுக்கு விருந்தளித்த காட்சிகளும், மனதை விட்டு அகலாதிருந்தாலும், “இந்த இரு வாரங்கள் (போன வாரமும் ரயிலிலும், பேருந்திலுமாக தமிழ் நாட்டு பயணம்!) எதுவுமே எழுதவில்லேயே! அறிந்த, தெரிந்த, எழுத்துக்களையும், ரசித்து படிக்க முடியவில்லையே!” என்ற எண்ணங்கள் வேறு மிகப் பெரிய குறையாக மனதில் வந்து பயணத்தின் ரசிப்பை குறைத்துச் சென்றன. பேருந்திலோ, ரயிலிலோ பெங்களுரிலிருந்து சென்னை செல்ல குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகும் பயணம், விமானத்தில் அரை மணி நேரம் ௬ட ஆகாதது ஆச்சரிய அனுபவத்தை ஏற்படுத்தியது. எப்படியோ! புதிதாய் (எனக்கு) ஒரு வாகனத்தில், முதல் முறையாக (கடைசி??) பயணப்பட்டு வந்தாகி விட்டது. மனிதர்களையும், (மிதி வண்டி) விலங்குகளையும் நீண்ட பயணத்திற்கு நம்பியிருந்த காலங்கள் மாறி, நிமிடங்களின் இடைவெளியில் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வரும் அரிய வாய்ப்பை ஏற்படுத்திய, இக்கால அறிவியல் மாற்றங்கள் பெருமைபடக்௬டிய வியக்கத்தகு அருமையான மாற்றங்கள்தாம்.

       இது முக்கால்வாசி அனைவருக்குமே பழகி போன விஷயமாக இருக்கலாம். இப்போது அனைவருமே கடல் கடந்து சென்று வேலை பார்த்து வருவதால், இது மிகவும் சாதரணமாக தோன்றலாம். (என் மகனும் தான் வேலை பார்க்கும் அலுவலகத்தின், வேலை நிமித்தம் சில மாதங்கள் வெளி நாட்டில் இருந்து வந்தவன்தான்.) ஆனால் என்னை போலவும் சிலர் இருப்பார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில் இந்த பயணம் குறித்த எண்ணங்களை பகிர்ந்து விட்டேன். (ஆனாலும் இன்னமும் என் மாதிரி சிறுவயதில் மாட்டு வண்டிக்கு பின்னாலேயே ஓடி வர வேண்டுமென்ற ஆசை கொண்ட சிறுவர், சிறுமியர் எங்காவது ஒரு மூலையில் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது அப்போது இருக்கும் அறிவியல் மாற்றங்கள் அவர்களையும் வியக்க வைக்கலாம்.)

            பொறுமை(யின்றி)யுடன் படித்தமைக்கு நன்றி.

6 comments:

  1. மூத்த மகனுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      தாங்கள் முதலில் வந்து என் பயண விபரம் குறித்து நான் எழுதியதை படித்தமைக்கும், என் மகனை வாழ்த்தியமைக்கும் மன மகிழ்ச்சியடைகிறேன்.
      நன்றிகள் பல!
      நட்புடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. பதிவு சுவாரஸ்யம்
    ரசித்துப்படித்தேன்
    (நிச்சயம் கடைசி வரியை நீக்கிவிடலாம் )
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      தங்கள் வருகைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கும் நன்றிகள்!
      படிப்பவர்களின் பொறுமையை சோதித்து விடுவோமோ,என்ற எண்ணத்தில் அவ்வரிகள் விழுந்து விட்டன! இனி தங்களின் ஆலோசனைபடி அவ்வரிகள் வராமல் தவிர்க்கிறேன்.
      நட்புடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. வலைசரத்தில் தங்களை பற்றி ...

    விவரத்திற்கு :

    பதிவர்களும் சமூகமும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      என் வலைதளத்தை பார்வையிட்டு வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு என் பணிவான நன்றிகள் சகோதரரே…!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete